திருமணத்திற்கு சாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்! தொல்காப்பியர் சொல்லும்

திருமணத்திற்கு சாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்! தொல்காப்பியர் சொல்லும் பொருத்தங்கள் போதும்!

நக்கீரன்

கடந்த சனிக்கிழமை (யூன் 24, 2023) எனது நண்பர்கள் எனது சமூகத் தொண்டைப் பாராட்டி ஒரு விழா எடுத்தனர். விழா நடந்த இடம் தமிழிசை கலா மன்ற மண்டபம். பத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் பாராட்டுரை வழங்கினார்கள்.

ஏற்புரை ஆற்றிய நான் தமிழ்மக்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை சிக்கனமாக நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தேன். அது மட்டுமல்ல சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தங்களை புறந்தள்ளிவிட்டு 2,500 ஆண்டுகளுக்கு  முன்னர் பகுத்தறிவுக்கு ஒப்ப தொல்காப்பியர் சொல்லிய பத்துப்  பொருத்தங்கள் இருந்தால்  தாராளமாக  உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். திருமணம் செய்ய இருக்கும் ஆண் – பெண் சாதகங்ககளைப் பார்த்து பொருத்தம் இருக்கிறது என்று சொல்லிச்  செய்யப்பட்ட திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. 

நானே 61 ஆண்டுகளுக்கு முன்னர் சாதகப் பொருத்தம் பார்க்காது, அக்னி வலம் வராது, அம்மி மிதிக்காது, அருந்ததி பார்க்காது  ஒரு சொற்பொழிவு, இரண்டு மாலை, பத்துத் திருக்குறள்களை ஓதி திருமணம் செய்து கொண்டேன்.  என் வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. ஆறு பிள்ளைகள் ( 5 ஆண், 1 பெண்) 12 பேரப்பிள்ளைகள்  என மாலோகமாக வாழ்க்கை அமைந்துள்ளது.

திருமணம் வெற்றியடைவதற்கு அல்லது தோல்வியடைவதற்கு அண்ட வெளியில் வலம்வரும் கோள்கள், நட்சத்திரங்கள் காரணிகள் அல்ல. ஆண் – பெண் இருவரது மனப் பொருத்தம்தான் முக்கிய காரணி.

திருமணப் பொருத்தங்கள் பற்றி 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். தொல்காப்பியர் கூறும் பத்து பொருத்தங்களாவன:

1.       குடும்பத்தின் பரம்பரை வரலாறு. (இருவருடைய குடும்பங்களும் குற்றமில்லாத குடிப்பிறப்பைக் கொண்டனவா என்று பார்த்தல்)
2.       இருவரின் ஒழுக்கம். (தனி நபருக்குரிய ஒழுக்கனெறியில் இருவரும் சிறந்தவர்களா என்று பார்த்தல்)
3.       ஆளுமை. (ஆணாகின், ஆண்மைக்குரிய ஆளுமையும், பெண்ணாகின், பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலியன கொண்ட ஆளுமையும் உள்ளனவா என்று பார்த்தல்)
4.       வயது. (இருவரும் ஒத்த வயதினரா என்று பார்த்தல்)
5.       வடிவம். (இருவருக்கும் உருவ ஒற்றுமை உள்ளதா என்று பார்த்தல்)
6.       காம உறுப்பு. (இருவருக்கும் காம உறுப்புப் பொருத்தம் உள்ளதா என்று பார்த்தல். தோற்றத்திலிருந்தும் பழக்க வழக்கங்களிலிருந்தும் இதனை அறிய வேண்டும். வெளிப்படையாகக் கூறாமல் ‘ஒத்த காம உணர்ச்சி உடையனரா என்று பார்த்தல்’ என்று உரையாசிரியர்கள் மழுப்புவர்)
7.       மனவுறுதி.
8.       அருளுடைமை.(பெண், ஆணின் பாலும், ஆண், பெண்ணின் பாலும், திருமணத்திற்குப்பின் குறை கண்டவிடத்து, புரிந்துணர்வோடு ஒன்றாதல்)
9.       உணர்வு. (ஒத்த சிந்தனை உடையவர்களா என்று பார்த்தல். எடுத்துக்காட்டாக, இருவருமே முன் கோபம் உடையவர்களாகவோ அல்லது இருவருமே முன்யோசனை யில்லாதவர்களாகவோ இருந்துவிடலாகாது)
10.   பொருளாதாரம். (இருவரும் ஒத்த பொருளாதார அந்தஸ்து உடையவரா என்று பார்த்தல்).

 வடக்கே தோன்றிய கவிஞனுக்கும் தெற்கே தோன்றிய கவிஞனுக்கும் ‘பத்து பொருத்தங்கள்’ என்ற ஒரே கருத்து எப்படித் தோன்றியிருக்க முடியும் என்று ஆச்சரியமாக இல்லை?
****
இப்படியெல்லாம் பத்து பொருத்தங்கள் முழுமையாக அமைந்த திருமணங்களும் தோற்பதுண்டு. எதையும் பார்க்காமல் நடக்கின்ற திருமணங்களும் வெற்றிபெறுவதுண்டு. அதைத் தான் ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்கிறாரோ இளங்கோ அடிகள் ?

தொல்காப்பியத்தின் (1219வது) பாடல்வரிகள் இவை:

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம வாயில், 
நிறையே, அருளே, உணர்வொடு, திரு -என 
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. 

சாதகம் பார்ப்பதால் தொல்காப்பியர் சொன்ன பொருத்தங்கள் இருந்தும்  சோதிடர் சொல்லும் பொருத்தங்கள் இல்லாததால் பல திருமணப் பேச்சுக்கள் இடைவழியில் நின்று விடுகின்றன. முக்கியமாக  ஆண் – பெண் சாதகத்தில் செவ்வாய் தோசம் இருந்தால் போதும்  திருமணப் பேச்சுவார்த்தை முறிந்துவிடுகிறது. ஆணுக்கு செவ்வாய் தோசம் இருந்தால் செவ்வாய் தோசம் உள்ள பெண்ணைத்  திருமணம் செய்யலாம் என சோதிடர்கள் சொல்கிறார்கள். செவ்வாய் தோசம் உள்ள மாப்பிள்ளை – பெண்பிள்ளை இருவரையும்  தேடுவதில்  அவர்களது பெற்றோர்கள் செருப்புத் தேய நடையாய் நடக்கிறார்கள்.  சோதிடம் ஒரு போலி  அறிவியல் (pseudo-science) அதற்கு அறிவியல் அடிப்படை  அறவே கிடையாது.

உண்மை என்னவென்றால் எதிர்காலம் பற்றிய மக்களின் பாதுகாப்பின்மையைச் சோதிடர்கள் தங்களது சுரண்டலுக்குப் பயன்படுத்தி வருகின்றார்கள். இதனால் தலைமுறை தலைமுறையாகச் சோதிடப் புரட்டுக்குத் தமிழ்ச் சமூகம் இரையாகி வருக்கிறது. சோதிடம் என்ற மூடநம்பிக்கையால் தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளன.

சோதிடம் குறிப்பிட்ட தோச நட்சத்திரங்களில் பிறந்த பெண் சாதககாரர்களுக்குக் கீழ்க்கண்ட தோசங்களில் ஏதாவது ஒன்று காட்டும் என்பது விதி ஆகும் என்கிறது.

1) மகப் பேறு இல்லாமை.

2) கணவர் முதலில் இறப்பார்.

3) கர்ப்பமாய் உள்ள வேளையில் கணவருக்கு மாரகம் (இறப்பு) காட்டும்.

4) கணவன் – மனைவி பிரிவு உண்டாகும்.

(ஜோதிட அமுதம் – பக்கம் 52)

சோதிடம் விடுக்கும் இந்தப் பயமுறுத்தல் கொடியவர்கள் விடுக்கும் கொலைப் பயமுறுத்தலைவிட அச்சம் தரக் கூடியது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகாகவி பாரதியார் நாட்டு விடுதலைக்காகப் பாட்டுக் கட்டிய ஒரு தேசியக் கவி மட்டுமல்ல தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்திட வேணும் என்று முரசு கொட்டி முழக்கிய மக்கள் கவிஞன் ஆவான்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் -புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் -நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்

என்று பெண் விடுதலைக்கு ஓங்கிக் குரல் கொடுத்த பெண்ணியவாதி,

தனியொருவனுக்கு உணவில்லை என்றால்
ஜெகத்தினை அழித்திடுவோம்

என முழங்கிய பொதுடமைவாதி,

சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

என்று தமிழினத்தின் தீராத நோயான சாதியைச் சாடிய சமூக சமன்மைவாதி,

சூத்திரனுக்கு ஒரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் – அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்!

என ஒரு சாதிக்கு ஒரு நீதி சொல்லும் மனு ஸ்மிருதியை, கீதையைக் கடுமையாகக் கண்டித்த புரட்சிவாதி. மேலும்-

சோதிடம் தனை இகழ்

வானநூல் பயிற்சி கொள்

மௌட்டியந்தனைக் கொல்

எனப் புதிய ஆத்திசூடி இயற்றிப் பொறுக்கி எடுத்த சுடு சொற்களால் மூடநம்பிக்கைகளைச் சாடினார். வானநூல் படிக்கச் சொன்னார்.

சோதிடம் தனை இகழ் என்ற சொல்லாட்சியில், இகழ் என்ற சொல்லுக்குக் கொடுத்துள்ள அழுத்தமும் கொல் என்னும் சொல்லுக்குக்குக் கொடுத்துள்ள கடுமையும் ஊன்றிக் கவனிக்கத்தக்கன.

மௌட்டியம் என்றால் அறியாமை என்று பொருள். ‘நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை’ எனப் பாரதியார் அறியாமைக்கு வரைவிலக்கணம் கூறுவார். அறியாமையில் மூழ்கி இருப்போர் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மெய்யறிவு இல்லாதவர்களுக்கு வாழ்க்கையில் குழப்பங்கள், அய்யங்கள் ஏராளம் தோன்றும். அறியாமையோடு வாழ்வது பள்ளமும் மேடும், கல்லும் முள்ளும், தூசும் தும்பும், கரடும் முரடும் நிறைந்த பாதையில் கண்ணைக்கட்டிக் கொண்டு நடப்பதைப் போன்றது.

எதைச் சொல்லி என்ன? பாரதி என்ற உலக மகா கவிஞன் சொன்ன அறிவுரையை யார் கேட்கின்றார்கள்? பாரதியாருக்கு விழா எடுப்பவர்களே கேட்பதில்லை என்றால் மற்றவர்கள் எப்படிக் கேட்பார்கள்?

இட்டமுடன் என் தலையில்
இன்னபடி யென்றெழுதி
விட்ட சிவனும் செத்து
விட்டானோ….

என அவ்வை பாடியிருக்கிறாராம்.

இன்னொரு புலவர் ‘அழுதாற் பயனென்ன….. பங்கயத்தோள் எழுதாப்படி வருமோ….’ என்கின்றார். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே, தூங்கையிலே வாங்குகிற மூச்சு – அது சுழி மாறிப் போனால் போச்சு, அவனன்றி ஓர் அணுவும் அசையாது, அன்றெழுதியை அழித்தெழுத வல்லார் யார், எல்லாம் இறைவன் விட்ட வழி, எல்லாம் விதிப் பயன், எல்லாம் கிரக பலன், நட்சத்திர தோசம் என மதங்கள் மனிதர்களின் மூளையைச் சலவை செய்து வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் குலைத்து விடுகின்றன.

அருச்சனை, அபிசேகம், தேரோட்டம், திருவிழா, காவடி, இருமுடி, செபம், தோத்திரம், தாயக்கட்டு, நூற்கட்டு, காப்புக்கட்டு, துளசிமாலை, தோசபரிகாரம், எள்ளெண்ணெய்ச் சட்டி எரித்தல் போன்ற குறுக்கு வழிகளை மதங்கள் பாமர மக்களுக்குக் காட்டுகின்றன. பக்தி மார்க்கம் என்பதே பாமர மக்களுக்காக வகுக்கப்பட்ட வழிபாடாகும்.

அறியாமையை ஒழிக்க வேண்டும் என்றால் மக்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு மெய்ப்பொருள் காண வேண்டும்.

படித்தல், பார்த்தல், கேட்டல், சிந்தித்தல், உரைத்துப் பார்த்தல், ஆராய்தல் மூலம் அறியாமை என்னும் பெரு நோயைப் போக்கலாம். கல்வி அறியாமையை அகற்றும். ஆனால் அது ‘முதலுதவி’ (குசைளவ-யனை ) போன்றது. அதற்கும் அப்பாலே மக்கள் தங்கள் பகுத்தறிவை, தங்கள் தன் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

சோதிட சாத்திரம் மூலம் மாமனாருக்கு ஆகாது, ஆயிலியம் மாமியாருக்கு ஆகாது, கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது, விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லுமேயானால் பகுத்தறிவைப் பயன்படுத்தி அதன் உண்மை பொய்மையை மக்கள் ஆய்ந்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொருவருடைய நன்மை தின்மை, சுகம் துக்கம், சாதகப்படியே தீர்மானிக்கப்படுகிறது என்பது உண்மையானால் பின் இன்னொருவரது சாதகத்தில் உள்ள நட்சத்திரங்கள் எப்படி மாமனாருக்கு, மாமியாருக்கு, மூத்த மைத்துனருக்கு மற்றும் இளைய மைத்துனருக்கு ஆகாது போகும்? நட்சத்திரங்களுக்கு மூத்த மைத்துனர், இளைய மைத்துனர் என வேறுபடுத்திப் பார்க்கத் தெரியுமா? அவை என்ன உயிருள்ள பொருளா? இல்லை உயிரற்ற பருப்பொருளா?

எமது ஞாயிறு குடும்பம், எமது பால் வழி மண்டலத்தின் (Milky Way Galaxy) ஒரு கோடியில் (edge) உள்ளது என்பதை முன்னர் பார்த்தோம்.

இந்தப் பால் வழி மண்டலத்தின் நடுப் பகுதி ஓர் இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு (100,000 light years) அப்பால் உள்ளது. ஓர் ஆண்டு என்பது ஒளி ஒரு விநாடிக்கு 300,000 கிமீ தொலை வேகத்தில் ஓராண்டு செல்ல எடுத்துக் கொள்ளும் தொலைவு ஆகும். அதாவது ஓர் ஒளி ஆண்டு என்பது 9.46 திரில்லியன் (1000 பில்லியன் ஒரு திரில்லியன்) கிமீ தொலைவாகும்!

பால் வீதி மண்டலத்தின் இருபுறத்தின் (sideto side) தொலை 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும். இதன் நடுப் பகுதி விட்டத்தின் அளவு 30,000 ஒளி ஆண்டு ஆகும். இந்தப் பால் வீதி மண்டலத் தட்டின் பருமன் (புவி இருக்கும் இடத்தில்) 700 ஒளி ஆண்டு ஆகும்.
 

                  பால்மண்டலம் (Galaxy)

பால் மண்டலத்தின் வயது 13-15 பில்லியன் ஆண்டுகள், ஞாயிறு மண்டலத்தின் வயது 4.49 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டுள்ளது.

எமது ஞாயிறைப் போல எமது பால் வெளியில் 100-200 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) விண்மீன்கள் காணப்படுகின்றன.

எமது பால் வீதியைப் போல் எமக்குத் தெரிந்த இயலுலகில் (Known Universe) 360 பில்லியன் பால் வீதிகள் உண்டு! எமது ஞாயிறுக்கு அருகிலுள்ள அடுத்த விண்மீன் Alpha Centauri ஆகும். இது 4.3 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. அதாவது 9.46 திரில்லியன் கிமி தொலைவில் உள்ளது.

இன்றைய நவீன விண்கலம் ஒன்றில் இந்த விண்மீனுக்குச் செலவு மேற்கொண்டால் அதனைச் சென்றடைய 30,000 ஆண்டு எடுக்கும். ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகத்தில் போவதென்றாலும் 430 ஆண்டு எடுக்கும்!

எமது பால் வீதி மண்டலத்துக்கு அண்மித்து உள்ள Andromoed Galaxy 2.2 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது! ஆகக் கூடிய தொலைவில் உள்ள பால் வெளி 10 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. அது கபிள் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் ஒரு மங்கலான நீள் உருண்டையாகத் (முட்டை வடிவு) தெரிகிறது!

இவ்வாறு இந்த இயலுலகில் (அண்டம்) கோடி கோடி விண்மீன்கள் இருக்கும் பொழுது குழந்தைகள் கடற்கரையில் அல்லது ஆற்றங்கரையில் மணல் வீடு கட்டி விளையாடுவது போலச் சோதிடர்கள் ஒன்பது கோள்களையும் பன்னிரண்டு வீடுகளையும் பன்னிரண்டு இராசி மண்டலங்களையும் 27 நட்சத்திரங்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு சாதகம் கணித்துப் பலன் சொல்கின்றார்கள்! மக்களது வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள்!

பன்னிரண்டு இராசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஏறத்தாழ 600 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். எனவே அதில் பன்னிரண்டில் ஒருபங்கினர் (50 கோடி) ஒரே ஜென்ம இராசியில் பிறந்திருப்பார்கள். அவர்களது சாதக பலன் பேரளவு ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும்! நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால் 27 இல் ஒரு பங்கினர் (22.22 கோடி) ஒரே ஜென்ம நட்சத்திரந்தில் பிறந்திருப்பாhர்கள்! அவர்களது சாதக பலனும் பேரளவு ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும்! அப்படி இருக்கிறதா?

சோதிடம் ஒரு புரட்டு, சோதிடர்கள் புரட்டர்கள் என்று எண்பிப்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் ஏதாவது வேண்டுமா?

இனி இந்தத் திருமணப் பொருத்தங்கள் பற்றிச் சோதிட சாத்திரமும் சோதிடர்களும் சொல்வதைப் படியுங்கள். வழக்கம் போல பொருத்தத்தின் அடிப்படை, அவற்றின் எண்ணிக்கை, அவற்றின் முக்கியத்துவம் பற்றி யானை பார்த்த குருடர்கள் போல் ஆளுக்கு ஆள் மாறுபடக் கூறுகின்றார்கள்.

பொருத்தங்கள் பெரும்பாலும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் கிரகப் பொருத்தத்தையும் சேர்த்துள்ளது.

இப்போது திருமணப் பொருத்தமாகப் பார்க்கப்படும் பொருத்தங்கள் எவையெவை என சோதிட சாத்திரம் கூறுவதைப் பார்க்கலாம்.

கிரகப் பொருத்தம் கிரகங்கள் சாதகமாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவது.

தினப் பொருத்தம் என்பது கணவன்-மனைவி இருவரும் நோய்கள் எதுவும் இல்லாமல் உடல்நலத்தோடு மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் குறிப்பது.

கணப்பொருத்தம் என்பது மணமக்கள் இடையிலான உடலுறவு சுகத்தைக் (அதாவது சயன சுகபோகத்தை அனுபவித்தல்) குறிக்கும்.

மகேந்திரப் பொருத்தம் குடும்ப சந்ததியைக் குறிப்பிடுகிறது.

பெண் தீர்க்கப் பொருத்தம் என்பது செல்வ வளத்தைத் தீர்மானிக்கக்கூடியது.

யோனிப் பொருத்தம் என்பது கணவன்-மனவியிடையிலான நெருக்கமான உறவை, உள்ளார்ந்த உறவைக் கூறுவது.

இராசிப் பொருத்தம் என்பது குடும்பத்தின் மகிழ்ச்சிகளையும் முழுமையையும் குறிப்பிடுவது.

இராசி அதிபதிப் பொருத்தம் என்பது குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகள் எதுவுமில்லாமல் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதைச் சொல்வது.

வசியப் பொருத்தம், கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் வசியப்பட்ட நிலையில் நல்ல இணையர்களாக வாழ்வதைக் காட்டுவது.

இரச்சுப் பொருத்தம் என்பது மாங்கல்யத்தின் பலத்தை உறுதியாக்கி நீண்டகால மணவாழ்க்கையைத் தருவது.

நாடிப் பொருத்தம் நோய்கள் எவுமின்றியும் தங்கள் வாரிசுகள் குறையில்லாமல் பிறப்பததையும் குறிப்பிடுவது.

வேதைப் பொருத்தம் சுகபோகங்களில் கணவனும், மனைவியும் தங்களுக்குள் குறைகள் இருந்தாலும், அவற்றை அனுசரித்து வாழ்க்கையை நடத்தத் தீர்மானிப்பதாகும்.

இலக்கினப் பொருத்தம் மற்றும் இலக்கின அதிபதிப் பொருத்தம் என்பது இணையர்களுக்குள் ஏற்படும் சிக்கலான விடயங்களில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ உதவுவது.

நட்சத்திரத்தை அடிப்படயாகக் கொண்ட பதின்மூன்று பொருத்தங்களில், எட்டுப் பொருத்தங்கள் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இரச்சுப் பொருத்தம், நாடிப் பொருத்தம், இலக்கினப் பொருத்தம் இலக்கின அதிபதிப் பொருத்தம் ஆகியன முக்கியமானவை ஆகும்.

திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக பார்க்கின்ற பொருத்தங்களின் மூலம் ஒவ்வொருவரும் தங்களுடய வாழ்க்கையின் முக்கிய கட்டத்தை தீர்மானிக்க முடிகிறது. பொதுவாக திருமண வாழ்க்கையை பதினொரு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்.

நீண்ட மணவாழ்க்கை, ஆயுள் பலம், உடல்நலம், குழந்தைப் பேறு, பொருளாதார வசதி, சமூக படிமானம், கணவன் மனவிக்குள் உள்ள பழக்க வழக்கங்கள், உறவினர்களுடன் உள்ள பழக்க வழக்கங்கள், ஒருவருக்கொருவர் புரிந்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்தல், சொத்து மற்றும் நிம்மதியான ஓய்வுகால வாழ்க்கை. இந்த ஒவ்வொரு விடயத்திற்கும் சாதகரீதியான அம்சங்கள் உள்ளன. இவற்ற மிகுந்த கவனத்துடன் சரிபார்த்துப் பொருத்தம் ஏற்படுவதால், ஒரு நல்ல திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

திருமண வாழ்க்கை மிக இனிதாக அமையக் கிரகப் பொருத்தம்தான் மிக அவசியம். இருந்தாலும், நட்சத்திரப் பொருத்தம் பற்றிய விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது.

பொதுவாக பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிற அனைத்து இந்து திருமணங்களும் மணமகன்-மணமகள் சாதகப் பொருத்தத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. திருமணப்பேச்சு வார்த்தையின் முதல் அம்சமே சாதகப் பரிமாற்றமும் அது தொடர்பான சாதகப் பொருத்தம் பார்ப்பதுந்தான்.

இக்கால கட்டத்தில் பட்டறிவு வாய்ந்த வீட்டுப் பெரியவர்கள் ஆண் -பெண் சாதகத்தை மேலோட்டமாகப் பார்த்து இராசிப் பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து விடுகின்றனர்.

ஆனாலும் கூட அவர்களும் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்கிற நினைப்பில் நல்லதொரு சோதிடரிடம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் பட்டறிவு வாயிலாக பொருத்தம் இருக்கிறதா என்று எப்படிப் பார்க்கின்றார்கள் எனில் இராசிப் பொருத்தத்தின் அடிப்படையில்தான். ஆக, திருமண நிச்சயத்திற்கு இராசிப் பொருத்தம், தினப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், கணப்பொருத்தம், இராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம் பார்த்து அதன் அடிப்படையில் தான் நிச்சயிப்பார்கள். எல்லாப் பொருத்தமும் இசைந்து வராவிட்டாலும்கூட பெரும்பாலான பொருத்தங்கள் இசைந்து வந்தால்தான் திருப்தியுடன் திருமணத்தை உறுதி செய்ய முன்வருவார்கள. இப்படிப் பார்க்கிற பொருத்தங்களில் முதல் அம்சமாக திகழ்வது இராசிப் பொருத்தமே.

இந்த இராசிப் பொருத்தம் தான் எல்லாப் பொருத்தங்களையும் விட மிக மிக முக்கியமானது. அதே சமயம் அவசியமான பொருத்தமும் ஆகும்.

குறிப்பிட்டுச் சொல்லப்போனால் சாதகப் பொருத்தம் பார்க்கின்ற பொழுது ஒரு சோதிடர் மணமகன் – மணமகள் சாதகத்தை வைத்து முதல் அம்சமாக இராசிப் பொருத்தத்தைப் பார்ப்பதற்குக் காரணமே மற்றப் பொருத்தங்களான தினப் பொருத்தம், கணப் பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், இரட்சிப் பொருத்தம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம் போன்றவைகள் தோன்றின என்பதனால்தான். அதற்காக இராசிப் பொருத்தம் மட்டும் இருந்தால் போதும் ஏனைய பொருத்தங்களெல்லாம் தேவையில்லை என்று அர்த்தமில்லை.

இப்போது சோதிடம் சொல்லும் பொருத்தங்களைப் பார்ப்போம்.

(1) கிரகப் பொருத்தம்

கிரகங்கள்சூரியன், சனி, ராகு, கேதுசெவ்வாய்
இடம்1,7, 82, 4, 121,7, 82 ,4, 12
நட்பு ஆட்சி உச்சம் பகை, நீசம்4 8 12 16 1 2 3 4   8 16 24 32   2 4 6 8

இங்ஙனம் கணக்கிட்டுக் கூட்டி வந்த தொகையைப் பதினாறால் பிரித்த பேறு கிரகபாப சங்கியையாம். இருவருக்கும் கிரகபாவம் இல்லையாயினும் இருவர் பாபசங்கியைகளும் சமமாயின் உத்தமம். ஒருவர் பாபத்திலும் மற்றவர் பாவம் ஒன்று வரையிற்குறையின் மத்திமம். ஓன்றிற்கு மேல் குறையின் பொருந்தாது. செவ்வாயினால் ஏற்படும் பாபம் மற்றைய கிரகங்களின் பாவங்களாற் சாந்தியாகாது. இருவர் சாதகத்திலும் செவ்வாய் தோசம் ஏறக்குறைய சமமாயிருப்பின் நன்று.

(2) தினப் பொருத்தம் (நட்சத்திரப் பொருத்தம்)

பெண் ஆண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாயின் அது உரோகிணி, திருவாதிரை, மகம், அத்தம், விசாகம், திருவோணம், உத்தரட்டாதி, இரேவதி என்பவற்றுள் ஒன்றானால் உத்தமம். அசுவினி, கார்த்திகை, மிருகசீரிடம், புநர்பூசம், பூசம், பூரம், உத்தரம், சித்திரை, அனுட்டம், பூராடம், உத்தராடம் என்பவற்றுள் ஒன்றாயினும் மத்திமம்.

ஏக நடட்சத்திரம் இரண்டு இராசிக்கும் பங்குபட்டதாயின் முதல் இராசிப் பாதம் ஆணுக்காயின் நன்று. பெண்ணுக்காயின் நீக்கப்படும்.

வேறு நட்சத்திரமானால் பெண் நட்சத்திரம் முதல் புருடநட்சத்திரம் வரை எண்ணிக் கண்ட தொகை 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 20, 22, 24, 26 என்பனவற்றுள் ஒன்றாயினும், 27 ஆம் நாள் ஏகராசியாயினும் உத்தமம்.

12 ஆம் நாளின் 2,3,4 ஆம் கால்களும்
14 ஆம் நாளின் 1,2,3 ஆம் கால்களும்
16 ஆம் நாளின் 1,2,4 ஆம் கால்களும்
21, 23, 26 ஆம் நாட்களும் ஆகிய இவற்றுள் ஒன்றாயின் மத்திமம்.

பெண் நட்சத்திர பாதத்தினின்றும் 88 ஆம் பாதம் 22 ஆம் நாளிலாவது 23 ஆம் நாளிலாவது அமையின் அது வைநாசிகம் என்று நீக்கப்படும். இதில் சொல்லப்படாத நாள்களாயின் பொருந்தாது.

(3) கணப் பொருத்தம்

கணங்கள் மொத்தம் மூன்று. அவையாவன:

(அ) தேவ கணம்
(ஆ) மனித கணம்
(இ) இராட்சத கணம்

அசுவினி, மிருகசிரீடம், புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுட்டம், திருவோணம், இரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தேவ கணங்கள்.

பரணி, உரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மனித கணங்கள்.

கார்த்திகை, ஆயிலியம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் இராட்சத கணங்கள்.

இவற்றில் மணப்பெண் நட்சத்திரமும் மணமகன் நட்சத்திரமும் ஒரே கணத்தைச் சேர்ந்ததாயின் உத்தமம் – மணம் செய்யலாம்.

தேவ கணம் மனித கணமாக இருந்தால் மத்திமம். பொருத்தம் உண்டு.

மணமகன் இராட்சத கணமாக இருந்து மணப்பெண்ணும் இராட்சத கணமாக இருந்தால் மணமகளின் நட்சத்திரத்திலிருந்து 14 ஆவது நட்சத்திரத்திற்கு மேல் மணமகன் நட்சத்திரம் இருந்தாலும் மணம் செய்விக்கலாம்.

மணமகள் இராட்சத கணமாகவும் மணமகன் தேவகணம் அல்லது மனித கணமகாவோ இருந்தால் பொருத்தம் இல்லை.

அதே நேரத்தில் மணமகன் மனித கணமாகவும், மணமகள் இராட்சத கணமாகவும் இருந்தாலும் பொருத்தம் உண்டு.

ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் (பக்கம் 25) தேவகணமும் – இராட்சத கணமும் மனிதகணமும் – இராட்சத கணமும் பொருந்தாது என்கிறது!

(4) மகேந்திரப் பொருத்தம்

மணப்பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக் கொண்டு வந்து மணமகன் நட்சத்திரத்தில் முடியும் போது அந்த எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,24 என்று ஏதாவது ஒன்றாக இருந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

(5) யோனிப் பொருத்தம்

நட்சத்திரங்களை மிருக அம்சமாகக் கொண்டு, எந்த எந்த நட்சத்திரத்துடன் எந்த எந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்று தெரிந்து கொள்ளலாம்.

அசுவினி, சதயம்                                                                    –     குதிரை
பரணி, இரேவதி                                                                    –     யானை
கார்த்திகை, பூசம்                                                                   –     ஆடு
உரோகிணி, மிருகசீரிடம்                                                      –     பாம்பு
திருவாதிரை, மூலம்                                                                –     நாய்
புனர்பூசம், ஆயிலியம்                                                            –     பூனை
மகம், பூரம்                                                                              –     எலி
உத்திரம், உத்திரட்டாதி                                                          –     பசு
அத்தம்                                                                                     –     எருமை
சித்திரை, விசாகம்                                                                    –     புலி
அனுசம், கேட்டை                                                                    –     மான்
பூராடம், திருவோணம்                                                             –     குரங்கு
உத்திராடம்                                                                               –     கீரி
அவிட்டம், பூரட்டாதி                                                               –     சிங்கம்

இவற்றில் ஒன்றுக்கொன்று பகையான யோனிகள் பின்வருமாறு,

குதிரை                                         –     எருமை
யானை                                       –     சிங்கம்
குரங்கு                                        –     ஆடு
பாம்பு                                           –     கீரி
ஏலி                                               –     பூனை
மான்                                            –     நாய்
மாடு                                             –     புலி

இந்தப் பட்டியலில் இல்லாதவாறு விலங்குகள் அமைந்தால் இல்லற வாழ்க்கை சுகமாக அமையும். அதாவது இருவருக்கும் ஒரு யோனியாயினும் பகையில்லாத யோனிகளில் ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும் அல்லது இருவருக்கும் பெண்யோனியாயினும் உத்தமம்.

இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம்.

ஆணுக்குப் பெண்யோனியும் பெண்ணுக்கு ஆண்யோனியாயினும் பொருந்தாது.

இந்தப் பொருத்தம் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல் வானியல்பற்றிக் கொஞ்சமேனும் அறிவில்லாத முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் தான்தோன்றித்தனமாக மனம் போன போக்கில் எழுதி வைத்தவை ஆகும்.

யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்றால் மணம் செய்ய விரும்பும் ஆணையும் பெண்ணையும் மகப்பேறு மகளிர் மருத்துவரிடம் அனுப்புவதே அறிவார்ந்த செயலாகும்!

(6) பெண் தீர்க்கப் பொருத்தம்

பெண் தீர்க்கப் பொருத்தம் என்பது செல்வ வளத்தை தீர்மானிக்கக்கூடிய பொருத்தமாகும். மணப் பெண்ணின் நட்சத்திரத்தில் தொடங்கி மணமகனின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் கூட்டுத் தொகை 13 க்கு மேற்படின் பொருத்தம் உண்டு. 9 க்கு மேல் 13 வரைரயில் மத்திமம், 9 வரை பொருந்தாது.

(7) இராசிப் பொருத்தம்

இராசி என்பது சந்திர இலக்கினத்தைக் குறிக்கும்.

ஒரு மணமகளுக்கு இராசிப்பொருத்தம் பார்க்கின்றபோது, மொத்தமுள்ள பன்னிரெண்டு இராசிகளில் மணமகளுடைய ஜென்ம இராசிக்கு 3 அல்லது 7 அல்லது 11 ஆவதாக வரும் இராசிகளில் பிறந்த மணமகனுடைய சாதகம் மிகப் பொருத்தமாக அமையும் என்றும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் வளமான வாழ்க்கை அமையும் என்பது சோதிட சாத்திர நம்பிக்கை ஆகும்.

ஆனால், எல்லா மணமகளுக்கும் அல்லது எல்லா மணமகனுக்கும் மேலே சொல்லப்பட்டது மாதிரி இராசிப் பொருத்தம் அமைந்துவிடுவது இல்லை. இவ்வாறு அமையாத சாதகருக்கு இராசிப்பொருத்த அடிப்படையில் எப்படித் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது?

இடபம் முதல் மீனம் வரை பிறந்த ஆணிற்கு 4 ஆவது, 8 ஆவது, 12 ஆவதாக அமையப் பெற்ற பெண் இராசி பொருந்தி வரும்.

மேடம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய இராசியில் பிறந்த ஒரு பெண்ணிற்கு 4 ஆவது, 8 ஆவது 12 ஆவது இராசிகள் பொருந்திவராது. ஆனால், இந்த இராசிக்காரர்களுக்கு 2 ஆவது, 6 ஆவது, 10 ஆவது இராசிகள் மிக மிகப்பொருத்தமாக இயைந்து வரும். இவ்விரு சாதகத்தையும் இணைக்கலாம்.

இடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற இராசியில் பிறந்த பெண்ணிற்கு 2 ஆவது, 6 ஆவது, 10 ஆவது இராசி அமைப்புகள் துளிகூடப் பொருந்தி வராது. இவர்கள் இணைந்தால் நோய், சயரோகம், விபத்து, பொருளாதாரத் தடைகள், புத்திர பாக்கியமின்மை, தாய்க்கு சுகக்கேடு, இல்வாழ்க் கையில் இன்பமின்மை போன்றவை ஏற்படலாம்.

எனவே இடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுடன் கண்டிப்பாக 2 ஆவது, 6 ஆவது, 10 ஆவது இராசிகளை இணைப்பது அவ்வளவு உசிதமல்ல. அதற்கு மாறாக இந்த இராசிகளில் பிறந்தவர்களுக்கு 4 ஆவது, 8 ஆவது, 12 ஆவது இராசியில் அமையப் பெற்ற சாதகம் மிகவும் பொருந்தும்.

மேடம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆக ஏதேனும் ஒன்று மணப்பெண்ணுக்குரிய இராசியாக இருந்தால் ‘சஷ்டாங்க’ தோசம் இல்லை என்பது சிலர் கருத்து ஆகும்.

அதேபோல் இடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆக ஏதேனும் ஒன்று மணப்பெண்ணுக்குரிய இராசியாக இருந்தால் 2 ஆம் இடம் 12 ஆம் இடம் தோசமில்லை என்பது சிலர் கருத்து ஆகும்.

வாக்கிய பஞ்சாங்கம் ஆணும் பெண்ணும் ஒரே இராசி எனினும், பெண் இராசிக்கு ஆண் இராசி 6 க்கு மேற்படினும் உத்தமம் என்கிறது. பெண் இராசிக்கு ஆண் இராசி 2 ஆயின் மிருத்து. 3 ஆயின் துக்கம். 4 ஆயின் தரித்திரம். 5 ஆயின் வைதவ்வியம். 6 ஆயின் புத்திரநாசம் எனப் பயமுறுத்துகிறது.

இடபம் முதலான இரட்டை இராசிகளில் பிறந்த பெண்ணக்கு 2 ஆம் இராசி ஆண் இராசியாக வரினும் மேடம் முதலான ஒற்றை இராசியில் பிறந்த பெண்ணுக்கு 6 ஆம் இராசி ஆண் இராசியாக வரினும் மத்திமம். பெண்ணும் ஆணும் ஒரு இராசியாகும் போது பெண் நட்சத்திரத்துக்கு ஆண் நட்சத்திரம் பிந்தியதாகில் பொருந்தாதாம்.

(8) இராசி அதிபதிப் பொருத்தம்

ஒவ்வொருவருக்கும் அவரவர் இராசி அதிபதி யார் என்பதைக் கொண்டு இராசிப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

இராசி அதிபதி மணப்பெண், மணமகன் இருவருக்கும் ஒருவராகவே இருந்தால் உத்தமம்.

இராசி அதிபதிகள்

மேடம்                     –     செவ்வாய்
இடபம்                     –     சுக்கிரன்
மிதுனம்                   –      புதன்
கடகம்                     –     சந்திரன்
சிம்மம்                    –     சூரியன்
கன்னி                     –     புதன்
துலாம்                     –     சுக்கிரன்
விருச்சிகம்                 –     செவ்வாய்
தனுசு                        –     குரு
மகரம், கும்பம்                                –     சனி
மீனம்                                                  –     குரு

 

கிரகம் மித்துருக்கள்
சூரியன்
 
        குரு
 
சந்திரன்
 
      புதன், குரு
 
செவ்வாய்
 
      புதன், சுக்கிரன்
 
புதன்
 
    சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி
 
குரு
 
    சூரியன், சந்திரன், புதன், சுக்கரன், சனி
 
சுக்கிரன்
 
    செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்
 
சனி   புதன், குர, சுக்கரன்
 

மித்திரு (நட்பு) அல்லாதன சத்துருக்கள் (பகை) ஆகும்.

(9) இரச்சுப் பொருத்தம்


சிரோரச்சு – மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.
கண்டரச்சு – ரோகிணி, திருவாதிரை, அத்தம், சுவாதி, திருவேணம், சதயம்.
நாபிரச்சு – கார்த்திகை, புனர்பூசம், உத்தரம், விசாகம், உத்தராடம், பூரட்டாதி.
ஊருரச்சு – பரணி, பூசம், புரம், அனுசம், பூராடம், உத்தராட்டாதி.
பாதரச்சு – அசுவினி, ஆயிலியம், மகம், கேட்டை, மூலம், இரேவதி.

இந்தப் பட்டியலில் மணப்பெண், மணமகன் இருவரது நட்சத்திரங்களும் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது. அவை சிரோரச்சில் இருந்தால் ஆண் மரணம். கண்டரச்சுவில் இருந்தால் பெண் மரணம். நாபிரச்சுவில் இருந்தால் புத்திர நாசம். ஊருரச்சுவில் இருந்தால் தன நாசம். பாதரச்சுவில் இருந்தால் தூரதேச வாசம்.

மேலும் ஆரோகத்திலாவது, அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால் இரச்சுப் பொருத்தம் இல்லை! ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் இருந்தாலும் ஒரே இரச்சுவாக இருந்தாலும் இரச்சுப் பொருத்தம் உண்டு.

(10) நாடிப் பொருத்தம்


அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அத்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பார்கவ நாடியைச் சேர்ந்தவை.

பரணி, மிருகசிரீடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திய நாடியைச் சேர்ந்தவை.

கார்த்திகை, உரோகிணி, ஆயிலியம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வர்ம பார்கவ நாடியைச் சேர்ந்தவை. மணமகள், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப் பொருத்தம் உண்டு.



சோதிடப் புரட்டு

(13)

சோதிடர்களே! சில எண்கள் செய்த பாவம்தான் என்ன?

திருமணப் பொருத்தங்கள் எனச் சோதிடம் சொல்லும் பொருத்தங்களில் இதுவரை கிரகப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம, யோனிப் பொருத்தம், பெண் தீர்க்கப் பொருத்தம், இரச்சுப் பொருத்தம் இராசிப் பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், நாடிப் பொருத்தம் என பத்துப் பொருதங்களைப் பார்த்தோம். தொடர்ந்து எஞ்சிய திருமணப் பொருத்தங்களையும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

(11) வேதைப் பொருத்தம்

வேதைப் பொருத்தம் என்பது ஏற்கனவே கூறியவாறு சுகானுபாகங்களில் கணவனும் மனவிவியும் தங்களுக்குள் குறைகள் இருந்தாலும் அவற்றை அனுசரித்து வாழ்க்கை நடத்துவதைத் தீர்மானிப்பது.

அசுவினி           – கேட்டை
பரணி             – அனுடம்
கார்த்திகை         – விசாகம்
உரோகிணி         – சுவாதி
திருவாதிரை        – திருவோணம்
புனர்பூசம்           – உத்தராடம்
பூசம்              – பூராடம்
ஆயிலியம்         – மூலம்
மகம்              – இரேவதி
பூரம்              – உத்தரட்டாதி
உத்தரம்           – பூரட்டாதி
அத்தம்            – சதயம்
மிருகசீரிடம்       – சித்திரை, அவிட்டம்

ஆண், பெண் இருவருடைய நட்சத்திரங்கள் மேற்குறித்தவாறு ஒன்றினுக்கொன்று வேதையாயிருப்பிற் பொருந்தாது. மாறிவரின் பொருத்தம்.

(12) வசியப் பொருத்தம்

இராசிகளில் எதற்கு எதனோடு உடன்பாடு என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் வசியப் பொருத்தத்தை கண்டறியலாம்.

மேடத்துக்கு வசியம் சிம்மம், விருச்சிகம்
இடபத்துக்கு வசியம் கடகம், துலாம்
மிதுனத்துக்கு வசியம் கன்னி
கடகத்துக்கு வசியம் விருச்சிகம், தனு
சிம்மத்துக்கு வசியம் துலாம்
கன்னிக்கு வசியம் மிதுனம், மீனம்
துலாமுக்கு வசியம் கன்னி, மகரம்
விருச்சிகம் வசியம் கடகம், கன்னி
தனுசுக்க வசியம் மீனம்
மகரத்துக்கு வசியம் மேடம், கும்பம்
கும்பத்துக்கு வசியம் மேடம்
மீனத்துக்கு வசியம் மகரம்

என்று வசியப் பொருத்தம் கூறப்பட்டிருக்கிறது. மணப்பெண் இராசிக்கு, மணமகன் மேற்கூறப்பட்டுள்ளபடி பொருந்துமானால் அதுவே சரியான வசியப் பொருத்தம்.

பெண் இராசியும் ஆண் இராசியும் ஒன்றாயினும் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமாயிருப்பதுடன் ஆணின் இராசிக்கு பெண்ணின் இராசி வசியமாயினும் பெண் இராசிக்கு மணமகன் இராசி வசியமாக ஆணுக்குப் பெண் இராசி வசியமில்லாது இருப்பினும் உத்தமம். ஆண் இராசிக்கு பெண் இராசி வசியமாகப் பெண் இராசி வசியம் இல்லாதிருப்பின் மத்திமம்.

இருவர் இராசிகளும் ஒன்றினுக்கொன்று வசியமில்லாதிருப்பின் பொருந்தாது.

(13) ஆயுள் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரையும் எண்ணின் தொகையும் ஆணின் நட்சத்திரம் முதல் பெண் நட்சத்திரம் வரையும் எண்ணின் தொகையும் தனித் தனி 7ஆல் பெருக்கி 27 ஆல் பிரித்து வந்த மிச்சங்களில் இருதொகைகளும் சமமாயினும் பெண்ணினுடைய தொகை 7 வரை குறையினும் உத்தமம், ஆணின் தொகை 7 வரை குறையின் மத்திமம். ஒரு தொகையிலும் பார்க்க மற்றது 7க்கு மேற் குறையின் பொருந்தாது.

(14) பிள்ளைப் பொருத்தம்

குழந்தைகள் பிறப்பதற்கு ஒவ்வொருவருடைய சாதகங்களிலும் அய்ந்தாம் இடம், ஒன்பதாம் இடம், ஏழாம் இடம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த மூன்று ஸ்தானங்களில் ஏதாவது ஒன்று வலிமை இல்லாமல் இருந்தாலும், குரு பலமில்லாமல் இருந்தாலும் அந்தச் சாதகருக்கு குழந்தைப் பாக்கியத்தில் தடைகள் ஏற்படுகின்றன. அய்ந்தாம் இடத்துக்கு அதிபதி குரு, இது பாவ வர்க்கமடைந்து பாபர் சேர்தல் நோக்குதல் பெற்றிருப்பினும் 6, 8, 12 ஆம் அதிபர்களுடன் கூடியிருப்பினும்  5 க்கு அதிபனும் குருவும் பெலவீனராய் 6,8, 12 ஆம் இடங்களிலிருப்பினும் புத்திர தோசம் உண்டாம். சுபர் சேர்தல், நோக்குதல் உண்டாயின் மேற்கண்ட தோசங்கள் சாந்தியாகும். பெண்ணுக்கும் ஆணுக்கும் புத்திர தோசமின்றாயின் உத்தமம். பெண்ணுக்கு மாத்திரம் புத்திர தோசமின்றாயின் மத்திமம். பெண்ணுக்குப் புத்திர தோசம் அதிகமிருப்பினும் இருவருக்கும் புத்திர தோசமிருப்பினும் பொருந்தாது.

செவ்வாய் தோசம்

சோசங்களில் மிகவும் கெட்ட தோசமாக செவ்வாய் தோசம் சோதிட சாத்திரத்தில் கூறப்படுகின்றது. செவ்வாய்க்கு எப்படி தோசம் ஏற்படுகிறது?

செவ்வாய் நன்கு பலம் பெற்றிருந்தால் அதாவது ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் தோசம் இல்லை. செவ்வாய் பலவீனப்பட்டு இருந்தால்தான் தோசம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒருவருக்குச் செவ்வாய் பலவீனப்பட்டு இருக்கும்போது ஏற்படுகிற தோசம் செவ்வாய் தோசம் எனப்படும்.

சாதகப் பொருத்தத்தில் செவ்வாய் தோசம் பெரும் குறையாகக் கருதப்படுகின்றது. சாதகத்தில் செவ்வாய், லக்கினம், சந்திரன், சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இருக்கிறது என்று பொருள். இலக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்க்கு தோசம் ஏற்படுகிறது. மணப்பெண், மணமகன் இருவர் சாதகத்திலும் இந்த இடம் அமையாவிட்டால் நல்லது. இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தாலும் நல்லதுதான்.

மிதுனம், கன்னி ஆகிய வீடுகளில் 7 அல்லது 8 ஆம் இடமாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் கடும் தோசம் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு நடப்பு திசை செவ்வாயாக இருந்தால் மிகவும் பாதிக்கப்படுவர்.

மேடம், கடகம், விருச்சிகம், மகரங்களில் செவ்வாய் குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோசம் இல்லை.

செவ்வாய் தோசம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதைப் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டால் அந்த திசை புத்தி நேரங்களில் கணவரையோ அல்லது மனைவியையோ இழக்க நேரலாம். அல்லது பிரிய நேரலாம். திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இந்தச் செவ்வாய் திசை முடிந்துவிட்டால் சிக்கல் இல்லை.

மேற்கூறிய 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் கீழ்க்கண்ட வீடுகளாக இருந்தால் தோசம் இல்லை. அவைகளாவன:

1) மேடம், விருச்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இந்த இரு வீடுகளும் செவ்வாய்க்கு ஆட்சி வீடு என்பதால் தோசமில்லை.

2) மகரம், கடகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இதில் மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடு என்பதாலும் கடகம் நீச வீடு என்பதாலும் தோசமில்லை.

3) தனுசு, மீனம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இது நட்பு வீடாக இருப்பதால் தோசமில்லை.

4) கும்பம், சிம்மம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை இதில் கும்பம் சனி வீடாகவும், சிம்மம் சூரியனின் வீடாகவும் இருப்பதால் செவ்வாய் தோசம் அடிபடுகிறது.

5) சந்திரனுடன் செவ்வாய் இணைந்திருந்தால் சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இதனால் செவ்வாய்க்கு தோசம் இல்லை.

விவாகப் பொருத்தம் பற்றிச் சொல்லும் வசாக்கிய பஞ்சாங்கம் பிராமணருக்கு அதிபதியும், சத்திரியருக்குக் கணமும், வைசியருக்கு பெண் தீர்க்கமும் சூத்திரர்க்கு யோனியும் பிரதானமாகப் பொருந்த வேண்டும் என்கிறது.

விவாகப் பொருத்தத்தில் கூட வேதங்களின் ஓர் அங்கமான சோதிடம் நால்வருணத்தைப் புகுத்தி இருக்கிறது. கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஒருவன் பிராமணன், ஒருவன் சத்திரியன், ஒருவன் வைசிகன், ஒருவன் சூத்திரன் என்ற வேறுபாடு தெரியுமா?

சாத்திரமானாலும் சடங்கானாலும் எங்கும் வருணவேறுபாடு சோதிட சாத்திரம் எழுதியவர்களால் திட்டமிட்டுப் புகுத்தப் பட்டுள்ளது. கோள்களை வருண அடிப்படையில் வகுத்திருக்கின்றார்கள்.

    வருணம்        கிரகம்                     இராசி

பிராமணன் – குரு, சுக்கிரன்              கடகம், விருச்சிகம, மீனம் (4, 8, 12)

சத்திரியன் – சூரியன், செவ்வாய்     மேடம், சிம்மம், தனுசு (1, 5, 9)

வைசிகன் – சந்திரன், புதன்            இடபம், கன்னி, மகரம் (2, 6, 10)

சூத்திரன் – சனி                              மிதுனம், துலாம், கும்பம் (3, 7, 11)

சோதிடத்தில் சனி கெட்ட கோளாகவும் கறுப்பு நிறம் உடையதாகவும் கற்பிக்கப்பட்டதாலேயே அது சூத்திரருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழர்கள் சோதிட சாத்திரம் தங்களை சூத்திரர் என்று இழிவு படுத்தினாலும் அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், கவலைப்படாதது மட்டுமில்லாமல் அதனைப் பெருமையாக எடுத்துக் கொண்டு மற்ற வருணத்தாரைவிட சோதிடத்தை
கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த பிரபாவதி படத்தில் ஒரு காட்சி. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.

படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.

‘ஏண்டா என்னை மிதிச்சே?’ கோபத்தோடு கேட்பான் அசுரன்.

‘இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்’ என்பார் கலைவாணர்.

‘பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி’ என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.

ஒரு சோதிடர் இருவரது சாதகத்திலும் 12 பொருத்தங்களில் 11 சரி வந்தாலும் திருமணம் முறிந்து விடும் என்கின்றார்.

‘சாதகத்தில் பொருத்தம் பார்க்கும் பொழுது, 12 பொருத்தத்தில் 5 க்கு மேற்பட்ட பொருத்தங்கள் அமைந்தாலே திருமணம் செய்துவிடுகின்றனர். ஆனால் சாதகத்தில் முழுமையாகப் பொருத்தம் உள்ளதா? என்பதைப் பார்க்கத் தவறி விடுகின்றனர்.

எட்டாமிடம் ஆண்களின் சாதகத்தில் ஆயுள் ஸ்தானமாகவும் பெண்களின் சாதகத்தில் மாங்கல்ய பலத்தைக் குறிப்பதாகவும் அமைகிறது

மேற்சொன்ன ஸ்தானங்களில் அசுப கிரங்கள் என்று அழைக்கப்படும் ராகு, கேது, சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும் அல்லது அவர்கள் பார்வை ஏற்பட்டாலும், 10 க்கு மேற்பட்ட பொருத்தங்கள் அமையப் பெற்றாலும் இத்தகைய அமைப்பு வரன் சாதகத்தில் அமையப் பெறவில்லையாயின், அப்படி நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவடைகின்றன.

நண்பர் பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். அவருக்கு 2-9-1997 அன்று திருமணம் நடைபெற்றது. நண்பரின் நட்சத்திரம் இரேவதி மற்றும் பெண்ணின் நட்சத்திரம் உத்திரம் ஆகும்.

பொருத்தம் பார்த்த பொழுது மொத்தம் 12 பொருத்தங்களில் 11 பொருத்தம் உள்ளதால், திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆயினும் திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் இருவருக்கும் ஒத்துப் போகாததால், மணப்பெண் தாய் வீட்டிற்குச் சென்றுவிட நேரிட்டது. பலமுறை நேரில் சென்று சமாதானப் படுத்தியும் அவர் மனம் மாறாததால், நண்பர் மணமுறிவு வழக்கொன்றை மார்சு 98 இல் தொடர்ந்தார்

நண்பரின் முன்னாள் மனைவியின் சாதகத்தில் செவ்வாய் சனியோடு இணைந்து களத்திரஸ்தானமான 7 ஆம் இடத்தில் அமையப்பெற்றது கடுமையான செவ்வாய் தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர் சாதகத்தில் செவ்வாய் தோசம் அமையப்பெறவில்லை. மேலும் அவருடைய சாதகத்தில் 7 ஆம் இடத்தில் களத்திரகாரகரான சுக்கிரன் அமையப்பெற்றது காரகோ பாவ நாஸ்தி என்ற விதியின்படி திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தியது.

கடக லக்கினத்திற்குச் சுக்கிரன் பாதகாதிபதியாகின்றார். அவர் களத்திர ஸ்தானமான 7 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் இல்வாழ்வு சிறப்பதில்லை.

மேலும் விரையஸ்தானாதிபதியான புதன் 7 ஆம் இடத்தில் அமையப் பெற்றதால் இல்வாழ்வில் சிக்கல், பிரிவினை போன்று பாதகமான பலன்களை ஏற்படுத்தியது. மேலும் இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகின்ற பொழுது, நண்பருக்கு ஏழரைச்சனியும், அவருடைய மனைவிக்கு அட்டமா சனியும் நடைபெற்று வந்ததும் திருமணம் தோல்வியைத் தழுவியதற்கு ஒரு காரணம் ஆகும். (ஆர்.வி.சேகர், ஏ.பி 860, எச் பிளாக், 2வது தெரு, அண்ணா நகர், சென்னை-40, தினகரன்)

சாதகத்தில் 12 பொருத்தத்தில் 11 பொருத்தம் அமைந்தும் திருமணம் முறிந்துவிட்டது என்றால் சாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வதால் என்ன பயன்?

சாதகம் பார்த்துச் செய்த இணையர்களுக்கு இடையில் மணமுறிவு மட்டுமல்ல அவர்களுக்குக் குழந்தைகள் கூடப் பிறக்காமல் போகிறதே? அது ஏன்?

மேலே கூறிய திருமணப் பொருத்தங்கள் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல், வானியல்பற்றிக் கொஞ்சமேனும் அறிவு இல்லாத அறிவிலிகளால் விதிக்கட்டுப்பாடின்றித் தான்தோன்றித்தனமாக விதிக்கப்பட்டவை ஆகும்.

ஒரு சோதிட நூல் திருமணப் பொருத்தத்தில் கிரகப் பொருத்தந்தான் முக்கியம் என்கிறது. இன்னொன்று இராசிப் பொருத்தந்தான் முக்கியம் என்கிறது. பிறிதொன்று தினப் பொருத்ந்தான் முக்கியம் என்கிறது. இதில் எது சரி? எது பிழை? எல்லாமே சரியாக இருக்க முடியாது!

ஆண்-பெண் இரு பாலாரையும் தேவ கணம் மனித கணம் இராட்சத கணம் என்று பிரிப்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இந்த 27 நட்சத்திர மண்டலங்களது உருவமைப்பை (pattern) வரைந்து அவற்றுக்குப் பெயர் வைத்ததே மனிதன்தான். பின்னர் இந்த நட்சத்திரங்களைத் தேவ கணம், மனித கணம், இராட்சத கணம் என்று பிரிப்பதும் அவை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாது என்று கூறுவதும் முட்டாள்த்தனத்தின் உச்சக் கட்டமாகும். அதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமே இல்லை.

வசியப் பொருத்தம் என்பது ஆண், பெண் ஆகிய இருவருடைய உள்ளங்களிலும் பாசத்தையும் உண்மையான அன்பையும் வளர்ப்பதற்கும் ஒருவரிடத்தில் மற்றொருவர் அன்பு கொண்டு வாழச் செய்வதற்கும் மணப் பொருத்தம் இல்லாத ஒருவரை மற்றொருவர் வசியம் செய்வதற்கும் மிக அவசியமாம். இராசிப் பொருத்தம் மூலம் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் வசியப்பட்டு எந்தக் கணத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காது பரிபூரண அன்புடன் வாழ்க்கை நடத்துவர் எனச் சோதிட சாத்திரம் சொல்கிறது.

பிறவியில் மேட இராசியாக இருக்கும் பெண் சிம்மராசி அல்லது விருச்சிக இராசி ஆணிடத்தில்தான் வசியமாவாள். அத்தகைய பெண்ணை வேறு இராசியுடைய ஆணுக்குத் திருமணம் செய்து வைத்தால் அத்தகைய பெண் இயற்கையிலேயே இயற்கையின் தூண்டு தலிலேயே சிம்மராசியுடைய அல்லது விருச்சிக இராசியுடைய ஆணிடத்தில்தான் மன நாட்டங்கள் கொண்டுவிடுவாள். இதனால் அவளது கற்பொழுக்கத்திற்கும்கூட களங்கம் ஏற்பட்டு விடக்கூடுமாம். இவ்வாறு சோதிடர் ஒருவர் பெண்களைப்பற்றி மிகவும் இழிவாக எழுதியுள்ளார்.

ஒரு இராசிக்கு இன்னொரு இராசி வசியம், வசியம் இல்லை என்பதைச் சோதிட சாத்திரம் எழுதிய முனிவர்கள் எப்படிக் கண்டு பிடித்தார்கள்? அதற்கான சான்று என்ன?

மனிதர்களை அவர்களது குருதியின் அடிப்படையில் ஏ, பி, ஏபி. ஒ பிரிவு என்று மருத்துவர்கள் பிரித்து வைத்திருக்கின்றார்கள். அதற்கு அறிவியல் அடிப்படை இருக்கிறது. குருதி தேவைப்படும் ஒரு நோயாளிக்கு இன்னொருவருடைய குருதியை ஏற்றும் முறை 1900 இலேயே நடைமுறைக்கு வந்தது. நோயாளியின் குருதி எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்பதைச் சோதனை செய்து அதே பிரிவைச் சேர்ந்த குருதியையே ஏற்றுகின்றார்கள்.

சோதிடம் சில எண்களைப் பொருத்தம் என்று ஏற்றுக் கொள்வதும் சில எண்களைப் பொருத்தமில்லை என்று தள்ளுவதும் மூடநம்பிக்கையே யொழிய அதற்குச் அறிவியல் அடிப்படை எதுவம் இல்லை. மணப்பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக் கொண்டு வந்து மணமகன் நட்சத்திரத்தில் முடியும் போது அந்த எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று ஏதாவது ஒன்றாக இருந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு என்று சோதிடம் சொல்கிறது.

மிகுதி எண்களான 1,2,3,5,6,8,9,11,12,14,15,17,18,20,21,23, பொருத்தம் இல்லை என்று அதே சோதிடம் சொல்கிறது. கேள்வி என்னவென்றால் இந்த எண்கள் செய்த பாவம்தான் என்ன? ஏன் அவற்றைக் கெட்ட எண்கள் என்று தள்ள வேண்டும்? அடிப்படை என்ன?

இருபத்தேழு நட்சத்திரங்களை மிருக அம்சத்தோடு சோடி சேர்த்து அதன் அடிப்படையில் யோனிப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது சொல்லாமலே உங்களுக்கு விளங்கும்.

உரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்களோடு பாம்பைச் சேர்க்கச் சொன்னது யார்? உத்திராடம் நட்சத்திரத்தோடு கீரியை முடிச்சுப் போடுமாறு யார் சொன்னது? அதற்கான ஏது அல்லது ஏதுக்கள் என்ன?

கீரிக்கும் பாம்புக்கும் இடையில் இயற்கையாக இருக்கும் பகைமையை மனதில் கொண்டு உரோகிணி, மிருகசீரிடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இடையில் யோனிப் பொருத்தம் இல்லை என்று சொல்வது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை ஆகும்.

தமிழர்களைப் பொறுத்தளவில் குறிப்புப் பார்க்காமல் திருமணம் நடைபெறுவதில்லை. அறிவியல் பட்டதாரிகள் கூட இதற்குப் புறநடை இல்லை. இது காரணமாகவே திருமணப் பொருத்தம் பார்ப்பது ஒரு புரட்டு என்பதை மெய்ப்பிக்க அது பற்றி விரிவாக எழுத வேண்டி நேரிட்டது.

சோதிடப் பேய் பிடித்துப் பலர் அலைவது போதாதென்று இப்போது எண் சாத்திரக்காரர்களும் கடை விரிக்கின்றார்கள்.

யாருக்காவது உங்கள் பிறந்த நாளைத் தற்செயலாகச் சொல்லிப் பாருங்கள். உடனே ‘அதுதானே பார்த்தேன். நீங்கள் ஒண்ணாம் இலக்கக்காரர். அதாவது பிறந்த நாளும் ஒன்று பிறந்த திகதியின் கூட்டுத்தொகையும் ஒன்று. ஒண்ணாம் இலக்ககாரர்கள் பிடிச்சிராவிகள், இறங்கி வரமாட்டார்கள்’ என்று பலன் சொல்வார்கள்.

சோதிடம்போல் எண் சாத்திரத்தில் கூட்டல், பிரித்தல், கணித்தல் (computation) வரிசை ஒழுங்கு மாற்றல் (pநசஅரவயவழைn) போன்ற சிக்கல்கள் இல்லை. ஒன்றில் இருந்து ஐம்பது வரை எண்ணத் தெரிந்திருந்தால் போதும் சுப்பனும் குப்பனும் தங்களை எண்சாத்திரிகள் என்று சொல்லிக் கொண்டு பலன் சொல்லக் கிளம்பலாம்!

தமிழர்கள் வீடு வாங்கும்போது 8 ஆம் இலக்கத்தை விரும்புவதில்லை. சோதிடத்தில் எட்டு சனியோடு (அட்டமத்துச் சனி) தொடர்பு படுத்திப் பேசப்படுவதே அதற்குக் காரணமாகும். வேறு காரணம் இல்லை.

இதே போல் சீனர்கள் 4 யை விரும்புவதில்லை. அது மரணத்தோடு தொடர்புடைய எண் என்பது அவர்கள் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை ஆகும். கிறித்தவர்கள் 13 யை விரும்புவதில்லை. தொடர்மாடி வீடு கட்டும்போது 12 ஆவது மாடிக்கு அடுத்த மாடியை 14 ஆவது மாடி என்றுதான் இலக்கமிடுகின்றார்கள். காரணம் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முதல்நாள் அவரது இறுதி இரவு உணவில் கலந்து கொண்டவர்களது எண்ணிக்கை 13 என்பதே!

சோதிடர்கள் சொல்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply