சித்தர்களின் வாழ்வியல் சிந்தனைகள்

முன்னுரை

மனித இனத்தின் உயர்ந்த பண்புகள், செயல்கள் போன்ற அனைத்திற்கும் மூலமாக விளங்குவது ஆன்மீகம். சித்தர்கள் என்றாலே சித்திகள் கைவரப் பெற்றவர்கள், அவர்களுடைய அறிவுரைகள் அனைத்தும் ஆன்மிகத்தின் வழியாகத்தான் மக்களை சென்றடைந்திருகின்றன. சித்தர்கள் தங்கள் கருத்துகளைப் பாடல்களாகப் பாடியுள்ளனர். மனித சமுதாயத்தின் துன்பங்களைப் போக்கப் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள். ஆன்மீகம்,யோகம், தத்துவம், மருத்துவம், இயற்கை, விஞ்ஞானம், மெய்ஞானம் என்று பல நிலைகளில் தம் பாடல் கருத்துகளை வழங்கியுள்ளனர். மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்தளித்தவர்கள் சித்தர்கள் ஆவர். சித்தர்கள் தம் பாடல்கள் மூலம் மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளனர். அவர்களின் பாடல்கள் மக்களுக்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதாக உள்ளது.

சித்தர்கள்

அளப்பரும் கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கனுள் சித்தமிசை அறிவைக் குடியேற்றி வாழும் நிலை அறிந்தவர்கள் சித்தர்கள். இவர்கள் ஆசனங்கள் பலவற்றை மேற்கொண்டும், பிராணாயாமம் வாசி யோகம் போன்ற சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டும், உடலை ஓம்பி உயிருக்கு ஆக்கம் தேடிக் கொண்டனர். நரை, திரை, பிணி, மூப்பு மற்றும் சாக்காடு ஆகிய அனைத்தையும் வென்று மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் மாபெரும் கலையை அறிந்தவர்கள் சித்தர்கள். பயனுடையவை எவை என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மத மாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்தவாதிகளாகவும் காணப்படுகின்றனர். நோயற்ற வாழ்வும் சாகாநிலையும் மனிதன் அடையக் கூடிய இடம் என்று நிரூபித்தனர். சித்தர்களின் முறைகள் அறிவியல் பார்வைக்கு உடன்பாடாக இருக்கின்றன. ‘ஸித்’ என்னும் வடமொழி வேர்ச்சொல்லே ‘ஸிது’ என்றாகி ‘ஸித்த’ என்னும் சொல்லாக உருமாறியது. இது எண்வகைச் சித்துகளைக் கைகூடப் பெற்றவர்களைக் குறிக்கும். இதுவே தமிழில் ‘சித்தர்’ என்றாகியது.

“ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாரும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே” (திருமந்திரம்.168)

தாமறிந்த கலையை “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் அருள் நோக்கில் உலக மக்களுக்கு அறிவித்தவர்களும் சித்தர்கள் ஆவர். சித்தர் என்ற சொல்லுக்குப் பலவகையான பொருள்களைப் பலர் தந்துள்ளனர். அவற்றில், உலகியலைத் துறந்தவர்கள், உலக நடப்பிலிருந்து வேறுபட்டவர்கள், சித்துகள் ஆடுவதில் வல்லமை பெற்றவர்கள் ஆகியவை முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

http://www.muthukamalam.com/script/ad468X60a.php

சித்தர்-சொல்

சங்க இலக்கியங்களில் சித்தர் என்ற சொல் கையாளப் பெறவில்லை. சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையில் முதன் முதலாகச் சித்தன் என்னும் சொல் இரு இடங்களில் காணப்பெறுகின்றது. தமிழ் இலக்கண நூல்களில் நமக்கு கிடைத்த அரிய நூலான தொல்காப்பியம், சித்தர்களை ‘அறிவன்’ என்றும், ‘நிறைமொழி மாந்தர்’ என்றும் அழகுற அழைக்கிறது. இதனைக் குறிக்கும் நூற்பாவானது,

“மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்”
 (தொல்காப்பியம், புறத்.1021)

என்று உணர்த்துகிறது. இரட்டைக் காப்பியங்களில் இரண்டாவதான மணிமேகலையும் சித்தர் இயல்புகளைச் சுட்டுகிறது. ‘இருத்தி’ என்னும் தமிழ்ச் சொல்லுக்குச் சித்தி என்று பொருள். மணிமேகலை கதாபாத்திரமான கந்திற்பாவை மணிமேகலையிடம், அவளது எதிர்காலத்தைப் பற்றிக் கூறும் போது, அளவற்ற சித்திகளுடன் புத்தபிரான் தோன்றுவார் என்கிறது. அப்பாவை மணிமேகலையை நோக்கி கூறும் போது,

“அறவெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியோடு
புத்த ஞாயிறு தோன்றும் காறும்”
 ( மணிமேகலை,அ.ள் .46-47)

என்று உரைக்கிறது.

நிலையாமை

உலக வாழ்க்கையில் மனிதன் சேர்த்து வைக்கும் புகழ், ஆடம்பர வாழ்வு, மனித உடல் என்ற அனைத்தும் நிலையில்லாதது என உணர்த்த திருமூலர் பல பாடல்களைப் பாடியுள்ளார். வணிகம் செய்து பொருளைக் கொண்டு வந்த கணவன், மனைவியிடம் அவற்றைத் தந்து சிறந்த முறையில் உணவு செய்து தருமாறு கேட்க, மனைவியும் அவ்வாறே சுவையாக உணவு சமைத்து இருவரும் மனமகிழ்ச்சியோடு உணவினை உண்டனர். பிறகு கணவனுக்கு வெற்றிலை மடித்துச் சுவைக்கக் கொடுத்தாள். இத்தகு மகிழ்ச்சியான தருணத்தில் திடீரென்று கணவன் தன இடப்பக்க மார்பு சிறிது வலிக்கிறது என்றான். சற்று நேரத்திலேய அவன் உயிர் உடற்கூட்டை விட்டு பறந்து சென்றது என்பதை,

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇரைநொந் ததுஎன்றார்
கிடக்கப் படுத்தார் கிடக்கொழிந்தாரே” (திருமந்திரம்.321)

என்றும்,

“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் முழ்கி நினைப் பொழிந்தார்களே”(திருமந்திரம்.145)

என்று திருமூலர் இப்பாடல்களின் வழியே, இறைவன் படைத்த மனித உடல் என்பது நிலையில்லாதது என்பதையும், மனித வாழ்க்கை என்பது கானல் நீர் போன்றது என்பதையும் மக்கள் உணர வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்டுள்ளார்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” (கடுவெளி சித்தர்.4)

என்ற கடுவெளிச் சித்தரின் பாடலும் நிலையாமையை வலியுறுத்துவதாக உள்ளது.

http://www.muthukamalam.com/script/ad468X60b.php

சித்தர்களின் உடல் தத்துவம்

“உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பின் உள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்பின் உள்ளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பை யானிருந்து ஓம்புகின்றேனே” (திருமந்திரம்.725)

உடம்பினை அசுத்தம் என்று நினைத்து வெறுத்து, பின்பு தியான நிலையில் அமர்ந்து உள்ளேயே ஏதோ ஓர் அற்புத ஆற்றல் இருப்பதைக் கண்டு, இறைவன்தான் உடலில் கோயில் கொண்டுள்ளான் என்பதை அறிந்து உடலை மிகவும் தூய்மையாக பாதுகாத்து வருவதாக உடலின் சிறப்பினைத் திருமூலர் எடுத்துரைத்துள்ளார்.

நம் உடலானது 96 தத்துவங்களால் ஆனது என்பதை பகுத்தறிந்து சிந்தித்து உணர வேண்டும் என்றும், கண்ணுக்குத் தெரியும் நம் உடல் பொய் என்றும், அறிவினால் அறியும் ஆன்மாவே மெய் என்றும் சித்தர்கள் உரைக்கின்றனர்.

“உடம்பார் அழியின் உயிரால் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேனே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” (திருமந்திரம்.724)

இறைவன் மனித உடலில் இருப்பதையும், உள்ளங்கை நெல்லிக்கனி போன்று மிக அழகாகவும், தெள்ளத் தெளிவாகவும் பாடியுள்ளார்.

உயிர் வாழ்வதற்கு உறைவிடமாக இருக்கும் மனித உடலைப் பேணி பாதுகாப்பதன் அவசியத்தைத் திருமூலர் பல பாடல்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார். சித்தர்களின் பார்வையில் உடம்பு என்பது மோட்சம், சாதனம் அதாவது வீடுபேற்றிற்கான கருவி. யோகம் என்கிற மனோ – வேதிச் செயலுக்கு அதுவே அடிப்படை. இதனைக் காயசாதனை என்று சொல்லுவர். அகப்பேய்ச்சித்தர் காயசாதனையைத் தேவஞானம் என்கிறார்.

“யோகம் ஆகாதே அகப்பேய்!
உள்ளது கண்டக்கால்
ஞானமடி அகப்பேய்
தேடாது சொன்னனே” (அகப்பேய்ச் சித்தர்.26)

இந்த நிலையில் உடம்பு தூய்மைப்படுத்தப்பட்டு சிதைக்க முடியாத தன்மையைப் பெறுகிறது. ஒருவன் தன் உடம்புக்குள்ளேயேத் தனக்காக ஏற்படுத்திக் கொள்கிற ஒரு குழலாகும். சித்தர்கள் உடம்பை ஆக்கபூர்வமான ஒன்றாகவேக் கருதுகிறார்கள். இந்த நிலைப்பாடு உடம்பைப் பழித்தும், அதனை ஓர் இழிபொருளாக எண்ணியும் வசைப்பாடுகிற மற்ற சமயச் சிந்தனையிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டதாகும். உலகின் உண்மைத் தத்துவத்தை விளக்கிக் கூறுவதே சித்தர் பாடலின் நோக்கமாக உள்ளது.

http://www.muthukamalam.com/script/ad468X60c.php

பாம்பாட்டிச் சித்தர்

“முக்கனியுஞ் சர்க்கரையும் மோதகங்களும்
முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்
மிக்க உயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே” (பாம்பாட்டிச் சித்தர்.46)

மனித உடலிருந்து உயிர் பிரிந்த பிறகு, உடலைப் பிணம் என்கின்றனர். சுவை மிகுந்த உணவை அதிகமாக உண்டு சுவைத்த வாயனாது, இறுதியில் மண்ணை உண்கின்ற நிலை ஏற்படுகின்றது. மனித உடலில் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது எந்தப் பொருளையும், எந்த இன்பத்தையும் எடுத்துப் போவதில்லை என்பதைப் பாம்பாட்டி சித்தர் தனது பாடலில் உணர்த்தியுள்ளார்.

அழுகணிச் சித்தர்

அழுகணிச் சித்தர் பாடல் ஒப்பாரி போலவே அமைந்த்திருக்கின்றது. அழுகின்ற ஓசையே அப்பாடலின் இசையைமைப்பாக உள்ளது. அழுகின்ற இசை போன்று பாடியிருப்பதால் இவர் அழுகணிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். மனித உடல் என்பது நிலையில்லாதது என்ற கருத்தை வலியுறுத்தி கூறப்பட்ட பாடல்

“ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்…” ( அழுகணிச் சித்தர்.8)

நீரில் எழுதப்படும் எழுத்து உடன் அழிவது போன்று யாக்கையும் விரைவில் அழியும் இயல்புடையது. இது பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றிற்கு ஆட்பட்டு நிலை தடுமாறும் தன்மையுடையுது. உடலில் உயிர் உள்ளவரை மட்டுமே உடம்பிற்கு மதிப்பு, உடம்பிலிருந்து உயிர் பிரிந்தவுடன் அதைப் பிணம் என்று பெயரிட்டு தீயிட்டு எரித்து விடுவர். இத்தகைய யாக்கையில் நிலையற்ற தன்மையினைச் சித்தர்களும் எடுத்துக் கூறியுள்ளார்கள். “வீட்டைக் கட்டி சுகவாழ்விற்காக வேள்விகளைச் செய்து மெய்யும் பொய்யும் பேசி மக்கள், மனைவி, சுற்றமென்று வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களே “எமன் உயிரைக் கொண்டுபோன பிறகு ஒரு ஓடுபெற்ற மதிப்பைக் கூட உடம்பு பெறாது என்பதை உணருங்கள்” என்று யாக்கையின் நிலையாமைத் தன்மையினை சிவவாக்கியர் குறிப்பிடுகிறார்.

செல்வம் நிலையாமை

மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பெருக்கிக் கொள்ள செல்வம் என்பது தேவையான ஒன்றாகி விட்டது. அத்தகைய செல்வமானது நிலையில்லாதது என்பதை அறிந்து கொள்ள மனிதன் மறுக்கிறான். தன்னுடைய ஆரம்பச் செலவுகளுக்காகச் செல்வத்தைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றான்.

“நாடுநகர் வீடுமாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின்பவற்றால் கொள்பவன் என்னோ
கூத்தன் பதங் குறித்து நின்றாடாய் பாம்பே”
 (பாம்பாட்டிச் சித்தர்.40)

நாம் வாழ்கின்ற நாடும் நகரமும் வீடும், மாடும், பிற நல்ல வளமும் நடுவானம் எமன் நம்மை அழைத்துக் கொண்டு போக வரும்போது நம்முடன் வருமா, வராது. இச் செல்வம் நமக்கு நிலையாமை. எனவே, சிவனை வணங்கி அவன் பாதம் போற்ற வேண்டுமென்கிறார்.

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும்வெண்கலமும்
காடுங் கரைகளும் கல்லாம் பணியும் கருபாயும்
தேடும்பல் பண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே!” ( இடைக்காட்டுச் சித்தர்.25)

மனிதர்கள் மாடு, வீடு, பிள்ளைகள், ஆபரணங்கள், காடு போன்றவற்றைத் தேடித் தேடிச் சேர்த்து வைக்கின்றனர். அவை அனைத்தும் ஏதேனும் ஒரு நிலையில் திருட்டு, இயற்கை பேரழிவு காரணமாக நொடியில் காணாமல் போய்விடும், அதனால் மனதுள் இறைவனை மட்டும் தேட வேண்டும் என்று செல்வ நிலையாமைக் குறித்து இடைக்காட்டுச் சித்தர் பாடியுள்ளார்.

http://www.muthukamalam.com/script/ad300X250a.php

உடலே இறையுறையும் கோயில்

சித்தர் மரபில் மனிதவுடல் என்பது பேரண்டத்தின் குறுவடிவமாகக் கொள்ளப்படுகின்றது. உடலை ஒப்புக் கொள்கின்றவன் உலகையே ஒப்புக் கொண்டவனாகின்றான் என்பதே சித்தர்களின் நிலைபாடு. உருவிலங்குமேனி எனும் புலன்களால் உணரத்தக்க மனித உடலின் தன்மை காலத்தால் அழிவதும், திருவிலங்குமேனி எனும் அகவுணர்வால் உணரத்தக்க உடல் அழியாமற் பாதுகாக்கப்பட வல்லதுமாகும் என்பது சிவவாக்கியர் கொள்கை. இக்கொள்கையானது,

“உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றநீர்
திருவிலங்கு மேனியாகச் சென்றுகூட லாகுமே” (சிவவாக்கியர்.61)

என்ற பாடலில் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது.

உடலைப் பேணி இறைவனை அடைய வேண்டும் என்பது சிவவாக்கியரின் உயரிய சிந்தனையாகும்.

இளமை நிலையாமை

இளமை பருவம் என்பது அனைத்து மக்களாலும் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடியது. எதையும் துணிச்சலுடன் செய்யக்கூடியது. கல்வி, காதல், திருமணம், உழைப்பு என்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இப்பருவத்தை சரியான முறையில் வழிநடத்தினால் வாழ்வில் உயர்வு கிட்டும். “இளமையில் கல்”, “இளமையில் புகழ்” என்பது போல இளமைக் காலத்திலேயேச் செய்யத்தகுந்த நற்செயல்களைச் செய்து புகழ் அடைய வேண்டும். ஏனெனில் இந்த இளமை நிலையில்லாதது என்பதைத் திருமூலர் தம் திருமந்திரத்தில்,

“பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் காவன கண்டும் அறிகிலார்
ஏலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே” (திருமந்திரம்.225)

என்கிறார். மேலும், இளமையானது சிறிது சிறிதாகக் குன்றித் தேயும் இயல்புடையுது. பௌர்ணமி நாளில் முழுவதுமாகக் காட்சி அளித்த நிலவானது சிறிது சிறிதாகத் தேய்ந்து போகும். அது போல் இளமையும் தேயும் தன்மையுடையது. எனவே மூப்பு அடைந்து உடலில் வலிமையற்று போவதற்குள் இறைவனை வழிபட்டு மனிதாபிமானத்துடன் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர்.

உடலுக்குரிய இளமைப் பொலிவு வளர்வது போலவே, தளர்ந்து முதுமை அடைவதும் இயல்பாகின்றது. இந்த உண்மையை எல்லோரும் உணர்ந்தால், வீணே செருக்கு அடைய மாட்டார்கள். இதற்காகவே இந்த நிலையாமையை முன்னறிவிப்புச் செய்கிறார். திருமூலர், மக்கள் இறை உணர்வில்லாமல் பல ஆண்டுகளை வீணாக்குகின்றனர். உலக உயிர்கட்கெல்லாம் அப்பனாகிய இறைவனை உள்ளத்திலேக் கொண்டவர்கள் பலர். அவர்களும் இறைத்தன்மையின் முழுமையை உணரவில்லை. மக்கள் கூட்டம் நீண்ட காலம் வாழ்கின்ற வாய்ப்பு இருந்தும், தூண்டு விளக்கின் பெருஞ்சுடரான இறைவனை அறிந்து தொழாமல், காலத்தை வீணே கழிக்கின்றனர் எனத் திருமூலர் விவரிக்கின்றார். இளமைப் பருவத்தின் நிலையாமையை உணர்ந்த நல்லறிவாளர்கள் மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயேத் துறவு பூண்டனர். இவர்கள் குற்றம் நீங்காத நிலையற்ற இளமைப்பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தனர். முதுமையில் கோலை ஊன்றி எழுந்திருப்பார் என்று உணர்த்தப்படுகின்றது.

சித்தர்களின் கருத்துச் செறிவு

சித்தர்கள் மிக ஆழமான கருத்துகளைப் பாமரர்களும் எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் கூறியுள்ளனர். தாம் உணர்ந்தவற்றை மக்களுக்கும் உணர்த்தினார்கள். பாடலைப் படிக்கும் போது மேலோட்டமாக ஒரு பொருளும், உள்ளார்ந்த ஒரு பொருளும் அமையப் பாடி வைத்துள்ளனர். சித்தர் இலக்கியங்களில், மற்ற இலக்கியங்களைப் போலவே சொல், பொருள், நயம் மிகுதியாகக் காணப்படுகின்றன. சிவவாக்கியர் பாடலில் சான்றாக,

“அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்ற நான் அம்பலத்தில் ஆகுமே”
 (சிவாக்கியர்.18)

என்ற இப்பாடலில் வரும் அஞ்செழுத்து பஞ்சபூதத்தின் கூட்டாகிய இவ்வுலகம் தோன்றுவதற்குக் காரணம். ஐந்து என்னும் சொல் பஞ்சாட்சரத்தைக் குறிக்கும்.

http://www.muthukamalam.com/script/ad300X250b.php

முடிவுரை

சித்தர்கள் மக்களுக்கு வாழ்வியல் கருத்துக்களைக் கூறுவதோடு மட்டுமல்லாமல், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் தங்கள் பாடலில் கூறியுள்ளனர். சித்தர்கள் மானுட வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாய் நின்றார்கள். சித்தர்கள் கூறிய கருத்துகள் எண்ணற்றவை. ஒரு சில கருத்துகள் மட்டுமே எழுத்து வடிவம் பெற்றவை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதில் சித்தர்கள் உறுதியாக இருந்தனர். சித்தர்கள் குறிப்பிட்ட எந்த சமயத்தையும் சார்ந்தவர்கள் அல்லர். இறைவன், மனித உள்ளத்தில் குடிக்கொண்டிருக்கிறான் என்பதைத் தம் பாடல்களில் உணர்த்தியுள்ளனர். சமுதாயத்தில் மக்களுடன் கலந்து விட்ட மூடப்பழக்க வழக்கங்கள் முதலானவற்றைக் கண்டு வெகுண்டு, அதனைக் களைய தம் பாடல்கள் வழியாகச் சித்தர்கள் வழிகாட்டியுள்ளனர். சித்தர்கள் தத்துவங்களைச் சொல்லியிருந்தாலும் நடைமுறைக்குத் தேவையான பாமர மக்கள் அனுசரித்து பயன்பெறக் கூடிய பல தகவல்களையும் சொல்லியிருக்கிறார்கள். மனித குலத்துக்கு உதவுவதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கின்றது. எனவே தான் சித்தர்கள் தற்காலத்திலும் சூட்சும சரீரத்தில் வாழ்ந்து வேண்டுவோருக்கு உதவிகளைப் புரிந்து வருகின்றனர் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது.

துணை நின்ற நூல்கள்

1. பி. என். பரசுராமன், சித்தர்கள் சரித்திரம், ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை. (2010)

2. சி. எஸ். முருகேசன், சித்தர்கள் கண்ட இறைமை, சங்கர் பதிப்பகம், சென்னை. ( 2008)

3. அகமுக சொக்கநாதர் குருஜி, யார் அந்த தமிழ்ச் சித்தர்கள், கற்பகம் புத்தகாலயம், சென்னை. (2013)

4. கவிஞர் பத்மதேவன், சித்தர் பாடல்கள், சுப்ரா பிரிண்டெக்,சென்னை (2013)

5. புலவர் த. கோவேந்தன், சித்தர் பாடல்கள் (பட்டினத்தார் முதல் பாரதியார் வரை), பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை (2000)

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply