சங்க இலக்கியத்தில் சிவன்

சங்க இலக்கியத்தில் சிவன்

பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம்.

தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதையும் அது சங்க காலத்திற்கு முற்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என்றாலும் தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை. பொதுவாக உள்ள சில கருத்துகள் சைவத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் இருப்பதால் அதனைப்பற்றி இந்தப் பகுதியிலேயே காண இருக்கிறோம்.

1.2.1 தொல்காப்பியக் குறிப்பு

‘மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

(பொருள். கற்பியல்: 190)

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

(பொருள். அகத்திணையியல் – 5)

(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன்,மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)

இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.

”வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்” என்பது மற்றொரு நூற்பா. ‘வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ”கடந்து நிற்பது” என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார்.

காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்


(பொருள், புறத்திணையியல்: 81)

இங்கே ‘கடவுள்’ என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.

திருவள்ளுவர் ஆண்ட ‘இறை’ (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும்.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

(பொருள், புறத்திணையியல் : 85)

”இறைவன்” முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

1.2.2 எட்டுத்தொகை

அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம், புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.

காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.

சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கலித்தொகை

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல……..

(கலித்தொகை, 38)

(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடைய, அந்தணன் = இங்குச் சிவன், அரக்கர் கோமான் = இராவணன், தொடி = ஓர் அணிகலன், பொலி = விளங்குகின்ற, உழப்பவன் = வருந்துபவன்)

இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் ஆகிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல…..

இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி – 38)

கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடலைக் கீழே பார்க்கலாமா?

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்

(கலித்தொகை, 2)

(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன் = அயன், பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட, மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)

இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.

• புறநானூறு

உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே…..

(புறம் :91)

(மிடறு – கழுத்து)

என்கிறார்.

பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.

இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.

மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.

நன்றாய்ந்த நீணிமிர்சடை
முது முதல்வன்

(புறம் :166)

புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது… ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)

ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்p2021aud.gif
என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.

(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)

அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.

சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய – புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ….. நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் – குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து – சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.

1.2.3 பத்துப்பாட்டு

சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும்,நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும் பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும், தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும் இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.

நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ….ஆய்

(சிறுபாணாற்றுப்படை, 96-97)

(கலிங்கம் = ஆடை, ஆலமர் செல்வன் = சிவன், ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)

இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.

மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை.

நீரு நிலனுந் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துடனியற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக

(வளி = காற்று, விசும்பு = ஆகாயம்)

என்ற குறிப்பு வருகிறது.

இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு …. என்று கொள்ளலாம்.

இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு
Tamil Sangam Literature (BC) hailing Lord Shivan
எட்டுத்தொகை

மாநிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாக
படர்கதிர் மதியமொடு சுடர்கண் ணக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே நற்றிணை க வா

5. நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே. ஐங் க.வா. 1

எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!

பதிற்றுப்பத்து



ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
நாக நாணா மலைவில் லாக
25 மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
பாக முண்ட பைங்கண் பார்ப்பான்
உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
30 இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த
தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு
35 திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை
சிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
வசித்ததைக் கண்ட மாக மாதவர்
மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
40 சாலார் தானே தரிக்கென அவரவி
யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்
தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்
வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
கடவுள் ஒருமீன் சாலினி யொழிய
45 அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
50 பெரும் பெயர் முருக ! பரி 5; 21-50

(பொருள்: ஆதி அந்தணனாகிய பிரமன் அறிந்து தேர்க்குதிரைகளை ஓட்ட,

வேதமானவை குதிரைகளாகவும், வையகமே தேராகவும்,

வாசுகி நாகம் நாணாகவும், மேரு மலை வில்லாகவும்,

பொன்-வெள்ளி-இரும்பு ஆகிய மூவகைப் புரங்களை

ஒரு தீக்கணையாலே வேகும்படியும், அத்திசையே தீயாக எய்தவனும்;

அமரர் மூலமாக (அவர்களை அதிஷ்டித்து) வேத யாகங்களின்

அவியுணவை எற்பவனும் ஆகிய இளமை பொருந்திய கண்களையுடைய

பார்ப்பானாகிய சிவபெருமான், உமையம்மையைத் திருக்கரம் பற்றிய

அழகு (காமர் – அழகு) பொருந்திய திருமணத்தில், விண்ணோர்களிலெல்லாம்

வேள்வி முதல்வனாக இருக்கின்ற விரிகதிர் போன்ற மணிகளைப் பூண்ட

இந்திரனுக்குத் நெற்றியில் இமையாத கண்ணுடைய தான் அளித்த வரமாகிய,

“தனக்குக் காமப் புணர்ச்சி இல்லையாயினும் ஒரு விலக்கமாக

(புத்திரனைப் பெற்று) அமைய வேண்டும்” என்பது தான் உண்மைப் பொருளாக

விளங்குவதால் “செய்வதற்கில்லை” என்று கூறி ஒதுக்காது,

அழிவில்லாத மழுவுடைய அவன், எரி போலக் கனன்று உருவினைக் கொண்டான்

ஏழு உலகங்களும் அச்சமுறுமாறு. அந்த நெருப்புருவத்தின் கருவினைப்

பெற்றுக்கொண்ட உடல் பழுத்துத் தவம் பெருக்கி மெலிந்த சப்தரிஷிகளும்

அதன் பெருமை உணர்ந்து அதனைப் பிரித்தெடுத்துத் தாம் வசீகரணம்

செய்துகொண்டு மாதவர்களாகிய அவர்கள் தம் மனைவியர் வயிற்றில்

அமையச் செய்தால் அது தகாதென (அதாவது சிவபெருமான் திருவருட்

பிரசாதத்தைத் தாம் உண்டு அதனை அற்பமான புணர்ச்சி மூலம் தம் மனைவியர்

வயிற்றில் அமைத்தல் பெருமானுடைய திருவருளாகிய அக்கருவின் பெருமைக்குத்

தாகாது என), அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் என்று வேள்வித்தீ வளர்த்து

அந்த முத்தீயில் அவியுடன் இட்டனர். அவ்வாறு அவ்வேள்வித் தீயில் திகழ்ந்ததான

பிரசாதத்தை வடதிசையில் திகழும் விண்மீன்களான ஏழு மகளிருள்

அருந்ததி தவிர மற்ற அறுவரும் உண்டனர். மாசு மறு ஏதும் இல்லாத

கற்புடைய மாதவர் மனைவியராகிய அவர்கள் தவறாமல் உன்னைக் (முருகப்பெருமானை)

கருக்கொண்டனர்

குறிப்பு: இப்பாடல் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பது.

சிவபெருமான் உண்மை பொருளாவதும், எல்லோரும் புணர்ச்சியின் மூலமே

மகவு பெறும்பொழுது அரிதினும் அரிய பரமசிவம், மற்ற உயிகள் போலன்றி

அரிய செயலாகப் புணர்ச்சி இன்றியே முருகப் பெருமானைப் பெற்றனர்

என்பதும் இப்பரி பாடல் கூறும் சிவபெருமான் திறம் ஆகும்.)


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்
தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் பரி 7, 1-4

புங்கவம் ஊர்வோனும் பரி 8,2

ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர் பன்னொருவரும் பரி 8, 6

மறு மிடற்று அண்ணல் பரி 8, 127

இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி
விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு பரி 9, 1-7

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:
5 படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
10 வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?
கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

என ஆங்கு

15 பாணியும், தூக்கும், சீரும், என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி கலி க வா
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
5 உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல் கலி 2, 1-7

ஆன் ஏற்றுக் கொடியோன் கலி 26, 5

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை
எடுக்கை செல்லாது உழப்பவன் போல கலி 38; 1-5

சீறு அருமுன்பினோன் கணிச்சிபோல் கோடு சீஇ கலி 101, 8

படரணி யந்திப் பசுங்கட் கடவுள்
இடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக்
குடர்கூளிக் கார்த்துவான் கலி 101, 21 – 26

கொலைவன் சூடிய குழவித் திங்கள் கலி 103, 15

எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறை கலி 103, 25

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

முக்கண்ணான் உருவே போல் கலி 104, 11-12

பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல கலி 105, 13

கோடுவாய் கூடாப்பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும் கொல்லோ – மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றையான் கலி 142, 24-28

அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும்,
கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
5 மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென,
விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,
அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்
10 பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?
கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,
‘வெரு வந்த ஆறு’ என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?
15 கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால்,
‘ஒதுக்கு அரிய நெறி’ என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்,
புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்
கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ?
ஆங்கு
20 அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த
பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே! கலி 150
கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்

தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே. அகம் க வா

…. மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு அகம் 141, 5-11

(கார்த்திகை விளக்கீடு – திருநாளைக் குறிப்பது)

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ன மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. புறம் க.வா.
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே புறம் 6. 17-18

ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல புறம் 55,5

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று
அருங் கணிச்சி மணி மிடற்றோனும் புறம் 56, 1-2

12. பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே புறம் 91, 5-7

நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ
மூவேழ் துறையு முட்டின்று போகிய
உரைசால் சிறப்பி னுரவோர் மருக புறம் 166, 1-9

பத்துப்பாட்டு

வெள் ஏறு
வலம்வயின் உயரிய, பலர் புகழ் திணி தோள்,
உமை அமர்ந்து விளங்கும், இமையா முக் கண்,
மூஎயில் முருக்கிய, முரண் மிகு செல்வனும் திருமுருகு 151-154

திருமுருகாற்றுப்படை முழுமையும்

நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும் சிறுபா 96 – 99

நீம்நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக, 455

மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,
அந்தி விழவில் தூரியம் கறங்க மதுரைக் 453-460

2. தென்னவற் பெயரிய துன்னரும் துப்பின்
தொன்முது கடவுள் மதுரைக்
20. நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரியுண்டிக் கடவுள தியற்கையும் மலை

பதினெண் கீழ்க்கணக்கு

முக்கட் பகவன் அடி தொழாதார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாதொழுகின்னா
சக்கரத்தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் தாள் தொழாதார்க்கு இன்னா நாற்பது க.வா.
கண் மூன்றுடையான் தால் சேர்தல் கடிதினிதே இனியவை நாற்பது க.வா.

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து முழுதேத்தி சிறுபஞ்சமூலம் க.வா.
அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வணங்கிப் – பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு
இறைபுரிந்து வாழுதல் இயல்பு. ஏலாதி க.வா.

வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத் தமரிய கொழுவேல்
கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்
கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே. கைன்னிலை க.வா.

பிற நூல்கள்

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு முத்தொள் க.வா.

செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூ
பைங்கண்வெள் ளேற்றான் பால் கண்டற்றால் – எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும் முத்தொள் 91

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்
வெள்ளியம்பலத்து சிலம்பு – பதிகம், 39-41

குழவித் திங்கள் இமையோர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்தாயினும் சிலம்பு 2 38 – 39

பெரியோன் தருக திருநுதல் ஆக என சிலம்பு 2 41

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் சிலம்பு 5:69

திரிபுரமெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவ ளொருதிற னாக வோங்கிய
இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும் சிலம்பு 6 40 – 43

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன் பாண் டரங்கமும் சிலம்பு 6 44 – 45

பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய சிலம்பு 11 72
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும் சிலம்பு 11 128 – 129

கண்ணுதல் பாகம் சிலம்பு 12 2

ஆனைத்தோல் போர்த்து சிலம்பு 12 8

புலியின் உரி உடுத்து சிலம்பு 12 8

கண்ணுதலோன் சிலம்பு 12 10

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து சிலம்பு 12 55

நஞ்சுண்டு கறுத்த கண்டி சிலம்பு 12 57

நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் சிலம்பு
செஞ்சடை வானவன் அருளினில் விளங்கி
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய் சிலம்பு
தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் சிலம்பு
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி சிலம்பு
சென்னியன் இளம்பிறை சூடிய இறையவன் சிலம்பு 22 86 – 87

ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோய் சிலம்பு 23 91
ஆலமர் செல்வன் மகன் சிலம்பு 24 15

நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன் சிலம்பு 26 54 – 60

குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத்
தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் க்டவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன் ஆகித் தகைமையில் செல்வுழி சிலம்பு 26

சடையினர் விடையினர் சாம்பற் பூச்சினர் சிலம்பு கால்கோட் காதை

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய் சிலம்பு – வேட்டுவவரி

திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்
செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழ லவிழா
துமையவ ளொருதிற நாக வோங்கிய
விமைய னாடிய கொட்டிச் சேதம் சிலம்பு 28 67 – 75

இமையச் சிமையத் திருங்குயிலாலுவத்து
உமையொரு பாகத்து ஒருவனை சிலம்பு 28 102-103

See Also:
1. thirukkuRaL kaDavuL vAzhththu.
2. Shaivam a Perspective
3. Hinduism A Perspective
4. திருக்குறள் போற்றும் சிவபிரான்
5. ஔவையார் போற்றும் சிவபிரான்

சைவத்தின் தோற்றம்-டாக்டர்.பத்மாவதி (தமிழ்நாடு தொல்லியல் துறை)

இந்திய சமூக வரலாற்றில் சைவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இதே முக்கியப் பங்கினை சைவம் தமிழக வரலாற்றிலும் ஆற்றியுள்ளது. ஒரு சமூகத்தில் சமூகத் தேவைகளின் அடிப்படையில் எந்த ஒரு தத்துவமும் தோன்றுகிறது. சமூக வரலாற்றில் சமூகத் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தத்துவமும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ந்து வருகிறது. இம்மாற்றங்களின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் ஒரு தத்துவம் வழக்கொழிந்து போவதும் பின்னர் கால ஓட்டத்தின் வேறொரு புதிய சமூகத் தேவைகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்படுவதும் இம்மாற்றங்களில் அடங்கும். இந்தியாவில் சைவத் தத்துவமானது இத்தகைய வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டே வளர்ந்திருக்கிறது.

இன்று சைவ சமயம் என்று அழைக்கப்படுகின்ற தத்துவம் கி.பி, இரண்டாம் நூற்றாண்டில் பாசுபதம் என்ற பெயரில் முதன் முதலில் நிறுவனப் படுத்தப்பட்ட சமயமாக உருவானது. பாசுபதம் என்ற பெயரில் சைவ சமயத்தை நிர்மாணித்தவர் லகுளீசர் என்பவர் ஆவார். அவரது மாணவர்கள் காளாமுகம், காபாலிகம் என்ற பெயர்களில் உட்பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு சமயத் தத்துவங்களை பரப்பி வளர்த்தனர். அதன் தொடர்ச்சியே அப்பர், ஞானசம்பந்தர்ம் பின்னர் சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் ஏற்படுத்திய சமய மறுமலர்ச்சியாகும்.

லகுளீசர் சைவ சமயமாகிய பாசுபத மதத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் உள்ள சான்றுகளைக் காண்பது முக்கியமானது. இன்று சிவன் என்றும் ருத்ரன் என்றும் கூறப்படுகின்ற கடவுளின் தொன்மைச் சான்றுகளாக கொஹஞ்சதாரோ ஹரப்பாவில் கிடைத்த சான்றுகளும், வேத இலக்கியங்களில் கிடைத்த சான்றுகளும் முக்கியமானவை. அச்சான்றுகளை உள்ளடக்கிக் கிரகித்துக் கொண்டு வளர்ந்த மதமே பாசுபதம் என்பதால் அச்சான்றுகளைச் சுருக்கமாக காண்பது அவசியமானதாகிறது.

தொல்காப்பியத்தில் ருத்ர – சிவன் காணப்படவில்லை.

தொல்காப்பியர் கூறுகின்ற நானிலத்திற்குரிய கடவுள்களில் சிவன் பெயர் காணப்படவில்லை.

மாயோன் மேய காடுறை உலகம் சேயோன் மேய மைவரை உலகம் வேந்தன் மேய தீம்புனல் உலகம் வருணன் மேய பெருமணல் உலகம்

எனக் கூறும் நால்வரில் ஏன் சிவன் இல்லை. வேந்தன் எனக் கூறியிருப்பது இந்திரனையே குறிக்கும்.

சிவ – ருத்ரன் ஆரியரல்லாத இனக்குழு மக்களின் கடவுள் ஆதலால், வேத கருத்துக்களின், செயல்பாட்டின் தாக்கம் சங்க இலக்கியங்களில் காணப்பட்ட போதும், ருத்ரன் காணப்படவில்லை. காரணம் சில ருத்ரன் உபநிஷத காலங்களிலேயே ஆரியர்களால் தங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறான். அதனால்தான் அதற்குப் பின்னர் எழுந்த கலித்தொகை, பரிபாடல்களிலும் ஓரிரு புறப்பாடல்களிலும் காணப்படுகிறான்.

அதுபோல சங்க இலக்கியங்கள் குறிக்கும் கந்து வழிபாட்டையும் லிங்க வழிபாட்டோடு தொடர்புபடுத்துகின்றனர். கந்து ஊரின் நடுவே அமைந்திருந்த மன்றில் காணப்பட்டது. இந்த கந்தைத்தான் அப்பர் கன்றாப்பூர் பதிகத்தில் நடுதறி என்றார். நடுதறியாகிய கந்து அப்பர் காலத்தில் சிவனாக மாற்றப்பட்டதேயன்றி, சங்க காலத்தில் கந்தாக வழிபடப்பட்டபோது சிவ வழிபாட்டைக் குறிக்கவில்லை.

சங்க இலக்கியங்களில்…

சங்க காலம் என்பது புத்தர் தோன்றிய காலமாகிய கி.மு.7ம் நூற்றாண்டுக்கு முன்னர் தொடங்கி பின்னர் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து கி.பி. 3ம் நூற்றாண்டு வரை நீடித்த நெடிய கால கட்டமாகும். இக்கால இலக்கியங்களுள் சிவபெருமானைப் பற்றிக் குறிக்கும் பாடல்கள் புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் சிவனைப் பற்றிக் கூறும் செய்திகளாக திரு. அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் கூறும் செய்திகளில் ஓரிண்டைத் தவிர பிற குறிப்புகள் எல்லாம் சிவனைக் குறிப்பவை அல்ல. அவரே மிகவும் வலிந்துதான் அக்கருத்துக்கு வந்துள்ளார். சங்க காலத்தில் சமணமும் பெளத்தமும் ஆசீவகமும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அக்காலத்தில் நிலப்பரப்பின் அடிப்படையில் அமைந்த தெய்வங்களே மக்கள் வழிபாட்டில் நிலவின.

சிவன், ருத்ரன், சைவம் என்பதெல்லாம் சங்க இலக்கியங்களில் இல்லாத செய்தியாகும். அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூலுலும் பேராசிரியர் கு.சுந்தர்மூர்த்தி அவர்கள், ‘சிவபெருமான் என்னும் தெய்வம் இன்றைக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களில் காணப்பட்டிலது” என்று கூறியிருக்கிரா.

ஆனால் அவரும் ஆலமரச் செல்வன், மழுவாள் நெடியோன், நீலமணி மிடந்றொருவன் என்றெல்லாம் குறிக்கப்பட்டிருக்கும் கடவுள் சிவபெருமானே என்ற கருத்துக்கு வந்திருக்கிறார். அவர் மேலே கூறுகின்ற பெயர்கள் எல்லாம் பிற்காலத்தில் அதாவது புராண காலங்களில் சிவனுக்கு ஒன்றிய பெயர்களாகும். சிவனுக்குரிய பிற்காலப் பெயர்கள், சங்க காலத்தில் வேறு ஒரு கடவுளுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

சங்க இலக்கியத் தொகுதிகளுள் பரிபாடலும், கலித்தொகையும் பிற்காலத்தவை என்பதை யாவரும் அறிவர். இவை தவிர புறப்பாடல்கள் சிலவற்றில் சிவன் பற்றிக் கூறும் பாடல்களும், பிற்காலத்தைவயே. குறிப்பாக புறநானூற்றுப் பாடல்கள் 55, 56, 166 ஆகியவற்றைக் கூறலாம்.

அரக்கர்கள் மூவர் இரும்பு. பொன், வெள்ளி ஆகிய உலோகங்களால் கோட்டை கட்டிக்கொண்டு தேவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தினராம். சிவன் ஒரு வில்லைகொண்டு மூன்று எயில்களையும் அழித்தானாம். இக்கதை புறநானூரு பாடல் 55 கூறுகிறது.

இக்கதை இப்பாடல் தவிர வேறெங்கும் கூறப்படவில்லை. இக்கதை முதன் முதலாக மகாபாரதத்தில் பகுதி 33 – 35ல் கர்ணபர்வதத்தில் கூறப்பட்டுள்ளது. பிராம்மண நூல்களின் காலம் வரை கூட இக்கதை காணப்படவில்லை. எனவே இக்கதையைக் கூறும் புறம் 55 மகாபாரதத்திற்கு பிந்தைய காலத்தைச் சேந்த பாடலேயாகும். அதுபோல சிவனும் உமையும் அமர்ந்துள்ள கயிலையை தன் தோளால் அசைக்க முயன்ற இராவணனின் தோள் நெரிய சிவபெருமான் இறுக்கியதாகக் கூறப்படும் கதை குறிஞ்சிக் கலியில்(2) கூறப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புறப்பாடல் 378- இராமன், அவன் மனைவி சீதை, அவளை கவர்ந்து சென்ற அரக்கன், குரங்கு கூட்டம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இராமாயணக் கதை நன்று வளர்ந்து பரவலாக பேசப்பட்ட பின்னர் எழுதப்பட்ட பாடலே இது எனக் கொள்ளலாம். வால்மீகி இராமாயணம் எழுதப் பெற்ற காலத்திற்குப் பிற் காலத்தைச் சேர்ந்ததாகவே இப்பாடல் இருத்தல் வேண்டும்.

–Ksubashini (பேச்சு) 08:33, 2 ஆகஸ்ட் 2013 (CDT) சைவ சித்தாந்தம்
 

https://134804.activeboard.com/t64947110/topic-64947110/?page=1&w_r=1554410731

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply