தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?

தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?
பகுதி 01

November 10, 2020  

ராமனை தெய்வமாக்க வேண்டுமா?”

தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கியமானவை. முதலாவது இராமாயணம். இராமர்,இலங்கை அரசன் இராவணனை அழித்து விட்டு,தனது பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தையும் முடித்து விட்டு,மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும் பின் இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர். மகாவம்சத்திற்கு முன் இலங்கையை ஆண்ட மன்னர்களில்  இவன் நாலாவது ஆகும். இராவணனுக்கு முன் இலங்கையை மனு,தாரக,பாலி [Manu,Tharaka,and Bali] ஆண்டார்கள்.

மற்றது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள் ஆகும். நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை.காமரூப நாட்டின் மன்னன்.படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறு கிறான்.அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள்.திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் திருமால்[கிருஷ்ணர்] காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார்.

தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட  அவரது மூன்றாவது மனைவி சத்யபாமா? நரகாசுரனை எதிர்த்துப் போர்செய்து அவனை அழித்தார்.நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடினார்கள்.அதுவே பின் தீபாவளியாக கொண்டாடப் படுவதாக நம்புகின்றனர்.இதில் ஒற்றுமை என்னவென்றால் ராவணன்,நரகாசுரன் இருவரையும் அசுரர்கள் என இந்த புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. சுரர் என்றால் குடிப்பவர் அல்லது கடவுள் என்று பொருள்.அசுரர் என்றால் குடியாதவர் அல்லது கடவுள் அல்லாதவர்,அல்லது கடவுளின் எதிரி என்று பொருள்.ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது.

சோமச் செடியை அவர்கள் தெய்வமாகமே கும்பிட்டார்கள். அசுரர்கள் பொதுவாகவே மேம்பட்ட, முற்போக்குக் கலாச்சாரத்தைக் கொண்டு இருந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள்,அங்கு முன்பே சிந்து வெளி நாகரிகம் அமைத்து வாழ்ந்த பழங்குடியினரான திராவிடர்களை[தமிழர்களை] வென்று தெற்கிற்கு துரத்தினார்கள். பின் அவர்களால் எழுதப்பட்ட வேதம், புராணங்கள் எல்லாம் இவர்களை அசுரர்களாக வர்ணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்

சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள் என்றும் அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள் என்றும் அறிகிறோம்.ஆகவே தீபாவளி என்ற பெயரில், உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள்.அதுவும் ஒரு திராவிட[தமிழ்] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்!

ராமர் என்ற தனியொருவரை தீபத்துடனும் புத்தாடையுடனும் சிறந்த உணவுகளுடனும் கொண்டாடட்டும்.அதே போல கிருஷ்ணாவையும் கொண்டாடட்டும்.அதில் ஒருவருக்கும் ஆட்சேபம் இல்லை.ஆனால்,ஏன் ஒரு மரணம் கொண்டாடப் படவேண்டும்?.காலிஸ்தானார்கள் இந்திரா காந்தியின் படு கொலையை விழாவாக கொண்டாடினால்,அதற்கு நீங்கள் எவ்வாறு முகம் கொடுப்பீர்கள்?சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி,ஆயுதம் ஏந்திய தீவீரவாதிகள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்துகொண்டனர்.

பொற்கோயிலிலிருந்து அவர்களை அகற்ற இந்திரா காந்தியின் உத்தரவில் ராணுவம் எடுத்த நடவடிக்கையின் போது பொற்கோயில் சேதம் அடைந்தது.மற்றும் தீவீரவாதிகளும் யாத்ரிகர்களும் குருத்வாரா ஊழியர்களும் உட்பட 492 பேர் இறந்தனர்.இதனால் ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களுக்கு இந்திரா காந்தி ஒரு மோசமான பெண்.மறவர்களுக்கு அவள் ஒரு நல்ல பெண்.ஆகவே கொலை மற்றும் எதிர் கொலை போன்றவை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாறக்கூடாது. இது,இருதரப்பினர்களுக்கும் இடையில் அவர்களின் பகையான உறவை  ஞாபகப்படுத்தவே  உதவும்.

ராமர் ராவணனை கொல்வதை பற்றியும் கிருஷ்ணன் நரகாசுரனை கொல்வதை பற்றியும் புரிதல் வடக்கு தெற்கு இந்தியாவில் மாறுபட்டு காணப்படுகிறது.அது போல இலங்கையும் காணப்படுகிறது.தீபாவளி விழா தீபத்துடனும் புத்தாடையுடனும் வழிபாட்டுடனும் நின்றுவிட வில்லை.ராவணனின் கொடும்பாவி எரிப்பும் நடைபெறுகிறது.இது ஒரு கவலைக்குரிய நிகழ்வாக இருப்பதுடன்  குறிப்பாக கேள்வி ஒன்றையும் எழுப்புகிறது.சிலருக்கு உருவ பொம்மை எரித்தல் வெடி கொழுத்துதல் போன்றவைக்கு எதிரான காரணம் ஒரு சுற்றாடல் விடயமாக இருக்கலாம். ஆனால் பலருக்கு இது வந்தேறு குடிகள்,பழங்குடி சமூகத்திற்கு எதிராக செய்த அட்டுழியங்களையும் மற்றும் கொலைகளையும் நினைவு படுத்தும் நிகழ்வாக இருக்கும்.

சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் 3300–1500  வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது.பொது யுகத்துக்கு முன் 1500 அளவில் கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களின் படையெடுப்பால் இவர்கள் தெற்கிற்கு துரத்தப்படடார்கள். அதுமட்டும் அல்ல அமைப்பு முறையான சாதி பாகுபாடு போன்றவை அங்கு நிறுவப்பட்டன. இவற்றை ரிக் வேதத்தில் தாராளமாக காணலாம். இவைகளின் விளைவே வென்றவர்களால்,பழங்குடிகளை இழிவுபடுத்தி, எழுதப்பட இதிகாசம், புராணங்கள் ஆகும்.இதன் அடிப்படையிலேயே இந்த தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.ஒரு தேசமோ ஒரு தேசத்தின் ஒரு பகுதியோ ராமரின் பிறந்த தினத்தையோ அல்லது முடிசூட்டு விழாவையோ கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை.ஆனால் ராவணன் உருவப் பொம்மை ஏன் எரிக்க வேண்டும்?

திராவிடர்கள் ராவணனை தங்கள் பிரதிநிதியாக கருதுகிறார்கள்.”செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்,நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன” என்று ராமரை வர்ணிக்கும் ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும், முலையையையும் ராமரின் ஏவல் மூலம்,இலட்சுமணன் அரிந்ததிற்கு எதிர் நடவடிக்கையாகவே சீதையை ராவணன் கவர்ந்தான் என நாம் கருதலாம்.மேலும் ராவணன் எந்த சந்தர்ப்பத்திலும்  சீதையை கெடுக்க வில்லை.சூர்ப்பனகையையும் சீதையையும் அவர்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதை,சம உரிமை உள்ள பெண்ணாக பார்க்கிறார்கள்.ஏன் ராவணனை மட்டும் பூதாகரமாக சித்தரிக்க வேண்டும்?.தீய,கொடூரமான மனம் படைத்தவர்கள் மட்டும்தான்  மரணத்தை விழாவாக கொண்டாடு வார்கள்.

ஒரு பல் கலாச்சார தேசம் ஒன்றில், இறப்பை இன்றி பிறப்பை வழிபாடும் உரிமையை நாம் எல்லோரும் பாதுகாக்க வேண்டும்.நாம் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித் திறன் போன்றவற்றை கொண்டாட்ட வேண்டும் ,அழிவை அல்ல.இந்த தீபாவளியில்,நாம் என்னத்தை கொண்டாடு கிறோம்? நன்மையின் அல்லது தீமையின் வெற்றி என்று நாம் கூறும் போது நாம் என்னத்தை கருதுகிறோம்?அல்லது தங்கள் நாட்டையும் இறைமையையம் பாதுகாக்க,தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் மரணத்தை தான் நாம் கொண்டாடுகிறோமா? என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 

பொதுவாக புராண இலக்கியங்கள், மேலாதிக்க வர்க்க மக்களால்,தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்கவும்,அதே நேரம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை இல்லாமல் ஒழிக்கவும் எழுதப் பட்டவை என்பது எமக்கு தெரியும். ராவணன் திராவிடர்களின் தமிழரின் பிரதிநிதி என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.ராமாயணத்தைப் பற்றி பலவிதமாக படிக்கிறார்கள்,கதாபாத்திரங்களின் தன்மையை பல தரப் பட்ட முறையில் புரிந்து கொள்கிறார்கள்.அப்படியே ராமரையும் ஆகும்.அப்படியே தர்மம் அதர்மம் போன்றவற்றின் கருத்தும் குழுக்களுக்கும் குழுக்களுக்கும் இடையில் வேறுபடுகின்றன.ஆகவே ராமரை வழிபட விரும்புபவர்களுக்கும் அந்த உரிமை உண்டு.

அது போல,ராவணனை வழிபட விரும்புபவர்களுக்கும் அதே உரிமை உண்டு.நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கிருஷ்ணன் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக வேறு சிலர் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறார்கள்.ராவணன் போல நரகாசுரனும் திராவிடர்களின் அல்லது தமிழர்களின் பிரதிநிதியாகும்.அவன்  ஒரு மாவீரன். புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்படும் ஹிரண்யன், ஹம்சன்,இடும்பன்,பகவன்,ஹிரன்யச்சதா,அன்டாகசுரர் உள்ளிட்ட பல அரக்கர்களையும் இப்படி இந்து தெய்வங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சூழ்ச்சியாலும் தந்திரங்களாலும் யுத்த தர்மத்திற்கு எதிராக கொன்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கேட்க்கிறேன்,ஏன் மரணம் கொண்டாடப் படவேண்டும்?ராஜிவ் காந்தியின் படு கொலையை சிலர் விழாவாக கொண்டாடினால்,நீங்கள் எப்படி முகம் கொடுப்பீர்கள்?பலர்  இன்னும் இலங்கையின் பல மரணங்களுக்கு மற்றும் பேரழிவிற்கு இவரே காரணம் என இன்னும் நம்புகிறார்கள்.21 அக்டோபர் 1987,யாழ்பாண மருத்துவமனையில், அதுவும் தீபாவளி அன்று 68 மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள்,நோயாளிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.இலங்கையில் இழப்புக்களை சந்தியாதவர்களுக்கு  ராஜிவ்  காந்தி ஒரு நல்ல மனிதர்,ஆனால் மற்றவர்களுக்கு அவர் ஒரு கொடூர மனிதர்.இது அவர் அவர்களின் நிலையையும் புரிதலையும் பொறுத்தது.
ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்ஆரம்பத்திலிருந்து படிக்க சொடுக்குங்கள் Theebam.com: “தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?”

5 comments:
  1. cheliyanFriday, October 28, 2016
  2. இராம-இராவண யுத்தம் ஏற்கனவே நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு இன அழிப்பே. அன்று ஒரு இராவணனோ அல்லது கூடவே சில வீரர்களோ மட்டும் கொ ல்லப்பட வில்லை . மக்களும் அழிக்கப்படடார்கள். இன்றய தலைவர் பிரபாகரன் தமிழருக்கு தலைவன் .ஆனால் இந்தியா/இலங்கை அரசு இன்றய மொழியில் [அரக்கன் என்று கூறாது] பயங்கர வாதி என்று கூறுகிறது. எதிர்காலத்தில் ஒரு இந்திய சுவாமிஜி இப்பயங்கர வாதி இறந்த தினத்தினை ஒரு தீபாவளி போல் கொண்டாட வேண்டிக் கொண்டால் அதையும் இத் தமிழர் கொண்டாட தயங்க மாடடார்கள்Reply
  3. Yogamalar KannathasanThursday, October 12, 2017
  4. இதிகாச புராணங்கள் உண்மை என்று ஒரு சிலரும் கற்பனை கலந்த கதைகள் என ஒரு சாராரும் கூறி வருகின்றனர் உண்மை சம்பவத்துடன் சேர்ந்த ஒரு கற்பனை கலந்த கதைதான் என்பதை உணர முடிகிறது தர்மத்தையும் அதர்மத்தையும் விளக்குவதற்காக இராவணனைஅசுரன்என உருவகப்படுத்தியுள்ளார்கள் இராமன் இராவணன் இடையே யுத்தம் நடந்திருக்கலாம் அந்த யுத்தத்தில் இராவணன் இறந்து கூட இருக்கலாம் ஆனால் இராவணனைஅசுரர் என குறிப்பிட்டு கூறுவது கற்பனை கதைதான்
    ஆரியரால் வகுக்பட்டது தான் வர்ணப்பாகுபாடு அவர்கள் வர்ணப்பாகுபாட்டின் மூலம் தாங்கள்( பிராமணர்)உயர்ந்த சாதியினர் எனத் பாபடுத்தினர் இதிகாச புராணங்களும் அவ்வாறே எழுந்தன பெரும்பாலான மக்கள் நம்பினர் உருவமே இல்லாத இறைவனுக்கு எப்படி நாம் உருவத்தை கொடுத்து இதுதான் இறைவன் என்று காட்டி மனதை ஒருநிலைப்படுத்த கையாளுகிறோமோ அதே போல் கெட்டது அழிந்து நல்லதைநிலநாட்ட என்பதை உணர்த்த எடுத்த முடிவு தான் இராமன் கடவுளாகவும் இராவணன் அசுரர் ஆகவும் வர்ணிக்கபட்டதெனலாம் இராமன் கடவுள் என்றால் சீதை தீக்குளித்தது ஏன் இராவணன் அசுரர் என்றால் சீதை கற்புடன் எப்படி இருந்தார் எது எப்படியோ மாணவர்கள் கற்க வேண்டிய விஷயம் நூல்களில் பதிவு செய்யப்பட்ட இதிகாச புராணங்கள் தான்
    தனிப்பட்ட முறையில் கூறிய கருத்துக்கு வரலாம் இந்திராகாந்தி இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் இலங்கை வாழ் அனைத்து தமிழர்களும் கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது வீதிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு சோகமாக இசைக்கப்பட்டது ஊரே மயான அமைதி ஆக இருந்தது அதுவே அவரது மகனது இறந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை காரணம் அவர் இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதால் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு சொல்லி மாளாது அதனால் என்னவோ தமிழ் மக்களுக்கு——தெரிகிறார்ReplyReplies
    1. AdminFriday, October 13, 2017
    2. எமது துர்க்குணங்களை நீக்கி புதுமனிதனாக மாறும் நாளாக தீபாவளி இருந்துட்டுப் போகட்டும். அதற்காக எமை அழித்தவர்களை தெய்வமாகவும் அந்நாள் இந்நாள் என்று தொடுத்து எம்மை நாமே அவமானப்படுத்துவதனை நிறுத்துவோம். பல பெண் தொடர்புடைய இராமனை யும் வாழா வெட்டியாக வாழ்ந்து தற்கொலை செய்த சீதையையும் இணைத்து இராமன் சீதை போல் வாழ்க என திருமண வீடுகளில் வாழ்த்துவதை நிறுத்துவோம்.சூரன் போரின் விளக்கம் இக்கட்டுரையின் பின்னர் வெளியிடப்படும்.அது எமது அடுத்த அவமான சின்னம். அதனை அரோகராப் போட்டு எமது ஆலயங்களில் எம் கண்களாலே கண்டு களிப்பதனை நிறுத்துவோம்.
தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?
பகுதி 02

November 11, 2020  

ராமனை தெய்வமாக்க வேண்டுமா?”

ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேரினார்கள்.அங்கு முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை வேள்விக்கு இடையூறு செய்தாள்.”இறைக்கடை துடித்த புருவத்தள்; எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாய வாயாளுமான” என்று கம்பர் அவளை அரக்கியாக்கி பாடுகிறார்.அதை தடுக்கும் முகமாக,ராமன் தனது வாலிப பருவத்தில்,அறமில்லதாக இருந்தாலும்,முனிவரின் கட்டளையை ஏற்று,அவளை கொலை செய்தான். தாடகை ஒரு சிவ பக்தி நிரம்பியவள்! ஒரு பூர்வ குடிப் போராளி!!
ஆக்கிரமிப்பை மீறி அவள் தொடுத்த முதற் போர்.கொன்றது

மட்டும் அல்ல அவளை அரக்கியாகவும் மாற்றிவிட்டார்கள். அரக்கியாகச் சித்தரித்தவன் ஆழ்பவனாகவும்,கொன்றவன் கடவுளாகவும் ஆகிவிட்டார்கள். அதன் பிறகு எந்த தவறும் செய்யாத வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்றான்.

“கானின் உயர்கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி,மேனிநனி பெற்றுவிளை காமநெறி வாசத்,
தேனின் மொழி உற்றினிய செவ்விநன் பெற்று(ஓர்),
மானின் விழிபெற்று  மயில்வந்த தென வந்தாள்”

கற்பகதரு உயிர் பெற்று வந்ததுபோல, ஒளிவீசும் கொடி போன்ற மேனியுடன், மருண்ட மானின் விழியுடனும், மயில் போன்ற அழகுடனும் நறுமணம் எங்கும் பரவுமாறு வந்தாள் சூர்ப்பணகை] என்று கம்பனால் வர்ணிக்கப்பட்ட இராவணனின் சகோதரி சூர்ப்பனகையின் மார்பகங்களையும், மூக்கையும்,ராமனின் முன்னிலையில் இலட்சுமணன் வெட்டி அலங்கோலப் படுத்தினான்.

ஒருவரை திருமணம் செய்ய அல்லது காதலிக்க விரும்புவது ஒரு குற்றம் ஆகாது.அவளின் அந்த திருமணக்கோரிக்கையை ஏற்க விரும்பாவிட்டால், ராமன் அதை நாகரிகமான முறையில் கையாண்டு இருக்கலாம். ஆனால், அதைவிட்டுவிட்டு அவளை தனக்கும்  இலட்சுமணனுக்கும் இடையில் முன்னும் பின்னும் போகவைத்து அவளைக் கேலி செய்தான்.இறுதியாக அவளை அலங்கோலப் படுத்தினான்.இந்த ராமனின்,இலட்சுமணனின் அட்டூழியமே ராவணனை கோபமூட்டி, பழிவாங்கும் முகமாக,சீதையை கடத்த வழி சமைத்தது. ஆகவே, ராவணன் சீதையை

கவர்ந்தது, அவள் மேல் அவன் வைத்த இச்சை அல்ல. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல முடிவு செய்தவுடன், முதலில் அந்த நாட்டின் பசுக்களைக் கவர்ந்து வருவான். இழந்த ஆநிரைகளை மீட்க அந்தப் பகை நாட்டரசன் போருக்கு வருவான்.அதாவது எதிரி நாட்டரசனை போருக்கு வர வழைக்க “ஆநிரை கவர்தல்” ஒரு முகாந்திரமாகப் பயன்பட்டது. அது போலத்தான் ராவணன் சீதாவை கவர்ந்த ஒன்றாகும்.

ராமன் காட்டில் வனவாசத்தில் இருந்ததால்,தன் தங்கையை மானபங்கம் செய்தவர்களுடன் போருக்கு [சூளுரைக்க] அறை கூவ ஒரே வழி-சீதையை கவருவதாகவே அப்பொழுது அவனுக்கு இருந்திருக்கலாம். ஆயுதம் ஏதும் அற்ற தன் தங்கையின் மூக்கை அறுத்து கேவலபடுத்தியதற்கு பழிவாங்க சீதையை கடத்தியிருக்கலாம்?. அப்படி அவன் தன் தங்கைக்காக பழிவாங்காவிட்டால்,அவனது குடிமகன்கள் [பிரஜைகள்] எவருமே அவனை தங்கள் பாது காவளனாக பார்க்கமாட்டார்கள் என்பது ஒரு கருத்தாகும். ஆகவே இந்த கவருதல், தங்கையை அவமான படுத்தியவனை தண்டிக்கவே என இலகுவாக

வாதாடலாம். “இனிய புன்னகையும், அழகிய இடையும் கொண்டவளே {சீதை}, விருப்பமற்ற உன்னை நான் எக்காரணம் கொண்டும் அணுக {அடைய} மாட்டேன்.” அப்படியே ராவணன் சீதையை தொடாமலே அசோகா வனத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தான் .ஆனால்,இதற்கு எதிர்மாறாக,ராமனும் அவரது சேனையும் இலங்கை போது மக்களையும் ,பெண்கள் குழந்தைகளையும் கொன்றும் உயிருடன் எரித்தும் அட்டூழியம் செய்தனர்[வால்மீகி

ராமாயணம்/யுத்த காண்டம்].கம்பர் மிக அழகாக “ஊறுகின்றன கிணறு உதிரம், ஒண்ணகர் ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு நாறுகின்றது, நுகர்ந்திருந்தம் நாம் எலாம்”.அதாவது நகரத்தில் எல்லா கிணறுகளிலும் தண்ணீர் ஊறவில்லை, உதிரம்தான் ஊறுகிறது. அந்த குரங்கு வைத்த நெருப்பு இன்னும் நகரம் முழுவதும் அடங்கவில்லை, அகிலும் சந்தனமும் மணந்து கொண்டிருந்த நகரத்தில் இப்போது மங்கையர்களின் கூந்தல் கருகிய நாற்றம் மட்டும் தான் பரவியிருக்கிறது.அகில், சந்தனம் வாசனையை அனுபவித்துக் கொண்டிருந்த நாம் இப்போது இந்த

துர்நாற்றத்தைத்தான் நுகர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்.மேலும் ராமன் எப்படி அனுமானிடம் சீதையின் அடையாளங்களை, அழகை  கூறி  சீதையை கண்டாறிந்து வா! என அனுப்புகிறான் எனப் பாருங்கள்.

“வாராழி கலசக் கொங்கை,வஞ்சிபோல் மருங்குவாள் தன்,
தாராழிக்கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்!!
பாராழி பிடரில்தங்கும், பாந்தளும்,பணி வென்றோங்கும்,
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?”

என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றவை. அவளுடைய அல்குல் (பெண்குறி) தடங்கடற் போன்றது.”அந்த காலத்தில் மார்பென்பது எளிமையான, காமமற்ற அழகை வெளிப்படுத்தும் அவயம்.அது அழகியல் சார்ந்த விடயம் ஆனால் “இடை,அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் “அல்குல்” அப்படி அல்ல.உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட இப்படி வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான்?  கடைசியில் இராமன் சீதையை மீட்டான்.அன்று மிதிலையில் அவள் நோக்க, அண்ணலும் நோக்கப் பார்வைகளின் சங்கமத்தில் இதயங்களின் பரிமாற்றம் நிகழ்ந்தது. இன்று அவர்கள் இருவரும் சந்திக்கும் போது பார்வைகள் மோத அங்கு ராமனிடம் இருந்து தீப்பொறி தான்  பிறந்தது.

 “அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?” என்று ராமன்  சீதையின் தூய்மையை நம்பாமல் அவளை குற்றம்சாட்டுகின்றான். சீதையை மீட்க தான் வரவில்லையாம். தன்னைப் பிறர் குறைகூறக் கூடாதென்பதற்காகவே அரக்கர் படை அழிக்க வந்ததாகக் கூறுகின்றான் ராமன்.“மருந்தினும் இனிய மண்ணுயிரின் வான் தசை,அருந்தினையே, நறவு அமை உண்டியே;இருந்தினையே, இனி எமக்கு ஏற்பன,விருந்து உளவோ? உரை”அப்பப்பா, எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள்.அவள் உயிருடன் இருந்ததே இப்ப ராமனுக்கு  தவறாகப் படுகின்றது.

அதே போல, வால்மீகி இராமாயணத்தில் ராமன் அவளை பார்த்து “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.” (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23)என்று அடித்து கூறுகிறான் இராமன்

சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்:“இனி உன்னைச் சேர்த்துக்கொள்ளமுடியாது. உன் விருப்பம்போல் யாருடனும் இருக்கலாம்” என்று இராமன் இறுதியாக சீதையிடம் கூறுகின்றான். மேலும், தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் சம்புகன் (Shambuka) என்பவன் இராமனால் கொல்லப்பட்டான்.

கெளமதனின் மனைவி அகலிகை.

இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது.பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச் செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை. “புக்கவ ளோடும் காமப் புதுமணத் தேறல் ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்”அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக் கின்றான். அப்படி அகலிகைக்கு விமோசனம் கொடுத்த ராமன் தனது அழகிய மனைவியை நம்பவில்லை. குற்றமே செய்யாத சீதைக்கு மன்னிப்பு இல்லை. 

அக்கினி பிரவேசம் செய்ய சொல்கிறான். மீண்டும் கருவுற்ற தன அழகிய மனைவியை காட்டிற்கு அனுப்பிவிட்டு தான் அரண்மனையில் இருக்கிறான் .இப்படிச் செய்வது சரியா, தவறா!-என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை. சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுடைய பேரும் புகழுமே அவனுக்குப் பெரிதெனத் தோன்றியது. அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை.அவள் தனி – தாயாக பிள்ளைகளை பெற்று வளர்க்கிறாள் .இன்றைய எமது சமூகத்தில்,பிரிவு,மணமுறிவு,ஒற்றை பெற்றோர் போன்றவற்றை கூடுதலாக காணுகிறோம்.ராமாயணம் அப்படியான பிரச்சனைகளுடன் ஈடுபடுகிறது.

இராமாயண கதையில் சீதையை அப்படியான பாத்திரங்களில் காண்கிறோம். அயோத்திய கண்டத்தில் ராமன் “பெண்ணை நம்பக்கூடாது” என்றும் “ரகசியங்கள் மனைவிக்கு அந்தரங்கப் பகிர்வு செய்ய கூடாது” என்றும் சொல்கிறான்.  அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு.

காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் ராமனுடன் இணைந்து வாழ, இரண்டாவது அக்கினிப்பிரவேசம் செய்து அவமானப் படுவதை விட, சாவது மேல் என உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது!.ஆனால் ஏன் ராவணனை மட்டும்  பூதாகரமாக சித்தரிக்கவேண்டும்? ராமனைப் பற்றி என்ன? ராவணனும் அவனின் சகோதரர்களும் திராவிடர்கள்,தமிழர்கள். திராவிடர்களின் மனம் புண்படும் என்பதை பொருட் படுத்தாமல், அவர்களின் உருவப் பொம்மை தீபாவளி திரு நாளில்  எரிக்கப்படுகிறது.வரலாறு வென்றவர்களின்  கண்ணோட்டத்தில் இருந்து விவரிக்கப் படுகிறது.ஆகவே அது ஒரு பக்க சார்பாக உள்ளது.  தோற்றவர்கள் துரதிஷ்டவசமாக,கெட்டவன், வில்லன்,போக்கிரியாக அங்கு வர்ணிக்கப் படுகிறார்கள். 

வால்மீகியால் சித்தரிக்கப்பட்ட  ராமன் கதாப்பாத்திரம் கடவுளாக போற்றப்படும் அளவுக்கு ராவணன் கதாப்பாத்திரம் இழிவாக அரக்கன் போன்று கற்பனை செய்யப்பட்டுள்ளது.உண்மையில்,வால்முகியாலும், கம்பராலும் சித்தரிக்கப்பட்ட ராவணன் ராமனை விட நல் ஒழுக்கத்திலும், வீரத்திலும், மக்கள் ஆட்சியிலும்,சகோதர பாசத்திலும், இறை பக்தியிலும்,பலமடங்கு பெரியவனாகவே தெரிகின்றான்.எல்லோரும் எளிதாக பொதுவாக  சொல்லி விடுவார்கள், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும்.விரிந்து பரந்த கடலில் முத்து வேண்டுபவனும் மணல் வேண்டுபவனும் தேவையானதை அள்ளுகிறான். ஆழத்தில் அதிசயங்களை ஒளித்துக் கொண்டு இவர்களை எள்ளியபடி சிரித்துக் கொண்டிருக்கிறது சமுத்திரம்.ஆமாம் இராவணன் நல்லவனா?. என அறிய அவனைப்பற்றி மற்றவர்கள் பக்தி காலத்திலும் சித்தர்கள் காலத்திலும் கூறியதை ஒருக்கா பார்த்தால் என்ன ? கதை கேட்கும் வயதில் மிகவும் கொடியவனாக, காமுகனாக, அரக்கனாக வர்ணிக்கப்பட்டவன் இந்த ராவணன்.

ஆனால் சமுத்திரத்தின் அடியில் போய் பார்த்த போது நான் எடுத்ததை உங்களுக்கு தருகிறேன்.போகர், சித்தர்களில் ஒருவர்.‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனைப் போகர் “இராவணனார்” என பெருமதிப்புடன் குறிப்பிடுகிறார்.“

கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு,
தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டை தன்னில்,
வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ,
மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் மகத்தான வசதிகள் மெத்தவுண்டே”[போகர் 7000 சப்த காண்டம்].

சிறு வயதில் தேவாரம் இயற்றத் தொடங்கிய திருஞானசம்பந்தர் பல தேவாரங்களில் இராவணனைப் பாடியுள்ளார்.

“கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்” [கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை ].

“வானினொடு நீரும் இயங்குவோருக்கு இறைவனாய இராவணன்”[வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான இராவணன்].

“சாமவேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும் நாமதேய முடையார்” [இராவணன் சாமகீதம்பாடி வணங்கிய பொழுது வைத்த பெயரே, இறைவனின் பெயராக நிலைத்து இருக்கின்றது].

இதே போல திருநாவுக்கரசரும் தமது தேவாரத்தில் இப்படி பாடியுள்ளார்:[தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் “தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு”[தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு,]

இப்படி சுந்தரமூர்த்தி நாயனார் சொல்வதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது? தம் முன்னோனான இராவணன் வழி நடக்கவே சுந்ரமூர்த்தி நாயனார் விரும்பியது என்னத்தை காட்டுகிறது?இன்னும் நல்லவனா கெட்டவனா என்று நாம் ஏன் எமது மண்டையை உடைப்பான்? இவ்வளவு பெருமை எல்லாம் பெற்ற இராவணனை இந்த நூற்றாண்டு புலவன் எப்படி பெருமை படுத்துகிறான் பாருங்கள் .

“தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்,சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா!
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்,குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்,குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்,என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!இராவணன் காண்!
அவன் நாமம் இவ்வுலகம் அறியும்”.

பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் “புட்பக விமானம்”  ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. மேலும்  ராவணனுக்கு ஜோதிடம் பார்க்கும் அபார திறமையும், வேத மந்திரங்களை கற்று தேறிய ஆற்றலும் அபாரமாக இருந்தது.அத்துடன்,இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது. இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஓங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். 

இந்தியாவிலும் உலகிலும் ராவணன் கோவில் உள்ளது.உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது.அதே போல,மற்றும்- பிஸ்ரக்ஹ் ,கிரேடர் நொய்டா ,உத்தர பிரதேசம்,-ராவண கிராமம் ,விதுசா மாவட்டம் ,மத்திய பிரதேசம்,-கான்பூர் ,உத்தர பிரதேசம், போன்ற இடங்களிலும் ராவணன் கோவில் உண்டு.

இலங்கை, திருக்கோணேஸ்வரம் குன்றில் இராவணன் சிலை ஒன்று உண்டு. அதே போல,தாய்லாந்திலும் இராவணன் சிலை உண்டு. ஆட்சி கலையில் சிறந்து விளங்கியவன் ராவணன். ராமன் அவரை போரில் வதம் செய்த போது ராவணன் இறக்கும் தருவாயில் இருந்தான். அப்போது தன் தம்பி லட்சுமணை ராவணனிடம் அனுப்பிய ராமன், அவனிடம் ஆட்சி கலையை கற்று கொள்ளும்படி சொன்னார்.இதைவிட ராவணனின் சிறப்பை பற்றி வேறு என்ன கூறமுடியும்?

ஆரம்பத்திலிருந்து படிக்க சொடுக்குங்கள் Theebam.com: “தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?”

“தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?
பகுதி 03

Thursday, November 12, 2020  

ராமனை தெய்வமாக்க வேண்டுமா?
வால்மீகி,நாரதரிடம் எல்லா நல்ல குணநலன்களுடனான பிறவி யார் என்று மூன்று கேள்விகளைக் கேட்கிறார். அதற்குப் பதிலாக நாரதர் ராம கதையைச் சுருக்கமாகச் சொல்ல அதனை விரிவாக ராமனை கதாபாத்திரமாக அமைத்து ராமாயணம் வால்மீகி எழுதியதாகச் சொல்லப் படுகிறது.வால்மீகி ராமனின் கதாபாத்திரத்தில் வியத்தக்க ஏதாவது ஒன்றை அல்லது சிலவற்றை கண்டு,அதனால் ஈர்க்கப்பட்டு சமசுக்கிருத மொழியில் கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இராமாயண கதை மிகவும் சாதாரணமானது.அதில் ராமனைக் கடவுளாக்கக் கூடிய எந்த அம்சங்களோ இல்லை.ஆனால், ராமன் கடமை தவறா ஒரு மகன், அவ்வளவுதான்! நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தல் கடினமான வேலை.அது ராமனாக இருந்தாலும் சரி ராவணனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பிறந்தனர் வாழ்ந்தனர் இறந்தனர்… அவ்வளவே! காதல் ஒருத்தியைக்கை ப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளை எதோ ஒரு வழியில்,எப்படியாவது வீழ்த்தி,சீதையை சந்தேகப்பட்டு, தீக்குளிக்க வைத்து,அவளை தன்னம் தனியா காட்டுக்கு அனுப்பி, விலகச்செய்து. இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்து, தனிமரமாக,ராமன் நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறானாம்? வாலியை கொன்ற முறை,அதில் காணும் நியாயக் குறை, சீதையைக் காட்டுக்கு அனுப்பிய அநீதி, இவை போன்ற இன்னும் பல சிக்கல்கள் அங்கு காணப்படுகின்றன. வால்மீகி ரிஷியின் காவியத்தில் ராமனுடைய

நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும் இங்குமங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதாரத்தைச் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன் வீர புருஷன்; அபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன் அம் மட்டே! மகாவிஷ்ணு இராமனாக அவதாரம் எடுத்தார் என நம்புபவர்களும் உண்டு.அவர்களின் கூற்றின் படி,மகாவிஷ்ணு வழக்கம்போல் பாற் கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, லட்சுமி அவர் கால்களை அமுக்கிக் கொண்டிருக்க,தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவர் வணங்கி,அடியேங்களை அசுரப் பயல் இராவணனும், அசுரப் பயல்களும் துன்புறுத்துகிறார்கள். தொல்லை கொடுக்கிறார்கள். யாகம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்.  சுராபானம் குடிக்கக்கூடாதாம், மது அருந்தக்கூடாதாம். இம்மாபாதகச் செயலைச் செய்யும் இராவணனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் மஹாபிரபோ! என்று முறையிட்டார்கள்.அதற்கு,விஷ்ணு, நான் இராமாவதாரம் எடுத்து அந்த இணையற்ற வீரனான இராவணனை எப்படியாவது வதம் செய்து உங்களைக் காப்பாற்றுகிறேன் என்கிறார்.அப்படியே மகாவிஷ்ணு ராமனாக அவதரித்தார் என்கின்றனர்.ஆனால்,ராமன் வழிபட ஏற்புடையவனா? ராமனை கடவுளாக வழிபடுபவர்கள் கொஞ்சம் இந்த உண்மையை அலசி பார்க்கட்டும்.ராமன் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவன் அல்ல,வால்மீகி ராமனுக்கு பல மனைவிமார்கள் இருந்தனர்.

உதாரணமாக, அயோத்திய காண்டம்,அத்தியாயம் 8,சுலோகம் 12 இப்படி கூறுகிறது.”हृष्टाः खलु भविष्यन्ति रामस्य परमाः स्त्रियः अप्रहृष्टा भविष्यन्ति स्नुषास्ते भरतक्षये”. இதோ அந்த வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில உரையைப் பார்ப்போம்.”Rama’s wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata’s waning position.” ஆகும். இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார்.இந்த சுலோகத்தில் காணப்படும் “இராமனின் மனைவிமார்கள் ” என்ற சொல் இதை உறுதி படுத்துகிறது.அப்படியே அவனின் தந்தையும் “अर्ध सप्त शताः ताः तु प्रमदाः ताम्र लोचनाः | कौसल्याम् परिवार्य अथ शनैः जग्मुर् धृत व्रताः ||(2-34-13)”ஆகும்.இதில் ராமன் தந்தையின் உண்மையான பிள்ளையாகவே உள்ளான்.ஆனால்,இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53வது அத்தியாயம்)ஏன் ராமன் கடவுள் பதவிக்கு தகுதி இல்லாதவன் என்பதை சுட்டிக்காட்டிட நாம் குறைந்தது மூன்று சம்பவங்களை எடுத்துக் கூறலாம்-முதலாவது,வாலி வதை,இரண்டாவது சீதைக்கு நடந்த கதி,இறுதியானது சம்புக(Shambuka) வதம் ஆகும்.

தனது மனைவி சீதையை ராவணனிடம் இருந்து மீட்டுக்கொள்ள,ராமன் சுக்கிரீவன்,அனுமான் உதவியை நாடினான்.ஆனால்,வாலியை வதை செய்தால் மட்டுமே தாம் உதவிசெய்வதாக அவர்கள் கூறினார்கள்.ஆகவே இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற வானர வீரர்களோடு கிட்கிந்தையை அடைந்து, வாலியைக் கொல்லுதற்குரிய வழியை ஆராய்ந்தனர்.போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலி மீது அம்பு தொடுப்பதாக இராமன் கூற, சுக்கிரீவன் அதை ஏற்றுக்கொண்டு, வாலியை வலியப் போருக்கழைத்தான்.

அப்படியே யுத்த தருமத்திற்கு எதிராக,மரத்திற்கு பின் ஒழித்து நின்று, இராமன் வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்த வாலி மண்ணில் சாய்ந்தான்.அப்பொழுது, ‘ஒளித்து உயிர் உண்ட நீ’ என்று வாலி,ராமனை சாடினான்.”இல் அறம் துறந்த நம்பி, எம்மனோர்க்கு ஆகத் தங்கள்,வில் அறம் துறந்த வீரன், தோன்றலால், வேத நூலில்,சொல் அறம் துறந்திலாத, சூரியன் மரபும், தொல்லை நல் அறம் துறந்தது ‘என்னா, நகை வர, நாண் உள் கொண்டான்.” என்கிறான் கம்பன். இல்லறத்தை துறந்த இராமன், எங்களுக்காக தன் வில்லறத்தையும் துறந்தான். வேதத்தில் சொல்லப் பட்டவைகளையும் , தொன்று தொட்டு வரும் நல்ல அறங்களையும் ஏன் அவன் துறந்தான் என்று கேள்வி கேட்டு, வெட்கம் வர வாலி நகைத் தானாம். எப்படி ஒரு கடவுள் என கருதப்படும் ராமன் இப்படியான குற்ற செயல்களை தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்வான்? வாலி வதம் சுக்கிரீவனுக்காக இராமர் செய்தது போல் இருந்தாலும், இராமர் தன் சுயநலனுக்காகவே வாலியை கொன்றார்.இராமர் நினைத்திருந்தால் சுக்கிரீவனையும் வாலியையும்

ஒற்றுமைப்படுத்தியிருக்க முடியும். எல்லா அறமும் தெரிந்த இராமர் சகோதரர்களை ஒற்றுமைப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? ராமனைப் பொதுவாக “மரியாதா புருஷோத்தம்”[Maryada Purushatam] என்று வருணிப்பது வழக்கம்.அதாவது, அவர் நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பவரும் மனிதர்களுள் மிகச் சிறந்த மனிதராகவும் இருப்பவரும் என்பது இதன் பொருள்.அப்படியானவர் இப்படி செய்யலாமா?மரியாதா என்பது நல்லொழுக்கம் ஆகும்.மேலும் வேறு ஒருவருடன் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில்,மறைந்து இருந்து கொல்கிறான்.இது ஒரு கோழைத்தனம்!திருமால் எடுத்த அவதாரங்களில் இராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும் மிக முக்கயமானவை. இந்த இரு காப்பியங்களிலும் வீரம் செறிந்த வாலியும் கர்ணனும் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்கள்.

இது ஒரு திட்டமிட்ட சதி.ஆகவே வாலி வதையை பார்க்கும் பொழுது, ராமன் “மரியாதா புருஷோத்தம்”(मर्यादा पुरुषोत्तम) என்று அழைப்பதற்கு எந்த தகுதியும் அற்றவனாகவே தெரிகிறது. 

இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் சாதாரண மனிதனாகவே தோன்றுகிறான்.தனது பேரழகியான மனைவி சீதை, மற்றவர்களால் பேராசைப்படுவதை கண்டு சந்தேகம் நிறைந்த கண்ணோடு பார்க்கிறான். என்றாலும் கண்களில் நீர் வழிகிறது. அகலிகை  கௌதம முனிவரின் மனைவி. தேவர்களின் தலைவனான இந்திரன் அவள் மேல் ஆசை கொண்டு, கௌதம முனிவரின் வேடத்தில் வந்து அவளை வன்புணர்ச்சி செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். அப்படி கல்லாகிய  அகலிகைக்கு ராமன் விடுதலை அளிக்கிறான்.  ஆனால், தனது மனைவியை அதற்கு எதிர் மாறாக நடத்துகிறான்? மிகவும் பலமாக தட்டி கூறும் ஆதாரம்,யுத்த காண்டத்தின் இறுதியில் வருகிறது. அங்கு ராவணனை கொன்று சண்டையை முடிவிற்கு கொண்டுவந்த பின்,ராமன் முதலாவதாக செய்தது, அண்ணனை காட்டிக்கொடுத்து ராமனுக்கு ஒத்தாசை கொடுத்த, விபீடணனுக்கு (விபீஷணனுக்கு)  இலங்கை அரசனாக முடி சூட்டியது. அதன் பின்பு தான்,இராமன் அனுமனை அழைத்து

சீதையைக் கண்டு செய்தி சொல்லி வருமாறு அனுப்புகிறான் தவிர கூட்டிவருமாறு கூறவில்லை.அது மட்டும் அல்ல,10 மாதத்திற்கு மேல் தனிமையில், தன்னை பிரிந்து சிறையில் வாடிய தன் மனைவியை, ஓடோடி அல்லவே இந்த ராமன் கூட்டி வந்திருக்க வேண்டும்? ராமன் சொல்லி அனுப்பிய செய்தி என்ன தெரியுமா?தான் சுகமாக நலமாக இருக்கிறேன்?ஆனால்,சீதையை பற்றி ஒன்றுமே விசாரிக்க வில்லை?என்றாலும் பின் சீதை ராமனிடம் போன பொழுது அவன் என்ன கூறினான் தெரியுமா? கண்கள் கண்ணீர் சோர, தன் காலடியில் விழுந்து வணங்கிய சீதையை அடுத்த கணம் அவளைப் பார்த்த பார்வையில், கருணை மறைந்து ராமனிடம்  சீற்றமே தென்பட்டது.

அந்தச் சீற்றம் கண்களில் மின்ன, இராமன் பேசுகிறான், “சீதா! நீ இராவணனது சிறையில் நெடுநாள் இருந்தாய்.  அங்கு உணவினை விரும்பி உண்டாய். ஒழுக்கம் பாழ்படவும், நீ மாண்டிலை. அச்சம் தீர்ந்து இவண் மீண்டது ஏன்? இராமன் விரும்புவான் என்று கருதியா?” என கோபத்துடன் கேட்டான்.”உன்னை மீட்கவென்றா நான் கடலில் அணை கட்டினேன்.அரக்கர்களுடன் போராடினேன். இராவனனைக் கொன்றேன். மனைவியைக் கவர்ந்தவனோடு போரிட்டு அழிக்கவில்லை எனும் கெட்ட பெயர் எனக்குக் கிட்டிவிடாதவாறு இலங்கை வந்தேன்.அங்கு, நீ இருந்த இடத்தில் மாமிசங்களை உண்டாயோ? மதுவினை அருந்தினாயோ? கணவனைப் பிரிந்த கவலை சிறிதுமின்றி இனிதாகக் காலம் கழித்தாயோ?” என்று தொடர்ந்து கூறினான்.

“நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது?  உன் நடத்தை என் உணர்வைச் சிதைக்கிறதே. நீ இறந்து போவாயாக! அங்ஙனமன்றாயின் என் எதிரே நில்லாமல் உனக்குத் தகுதியான இடத்துக்குச் செல்வாயாக!”[கம்ப ராமாயணம் யுத்த காண்டம்.] என்று வெகுண்டு கூறினான்,இரு கண்களிலிருதும் குருதியும் கண்ணீரும் கொட்ட, அவமானத்தால் தலை குனிந்து ,  நிலத்தினை நோக்கி நிற்கும் சீதை, புண்ணை அம்பினால் குத்திக் கிளறியது போல கடும் துன்பத்தால் பெருமூச்செறிந்தாள்.

இப்படி எந்த சாதாரண மனிதன் கூட தன் மனைவியிடம் கூறமாட்டான்?ஆனால் ராமன் கூறுகிறான். வால்மீகி அதை அப்படியே அத்தாட்சி படுத்துகிறான். ஆனால்,கம்பன் கொஞ்சம் சாந்தமாகக் கூறுகிறான். கம்பன் பல இடங்களில் உண்மையை அப்படியே கூறாமல்  கொஞ்சம் மாற்றி மாற்றி கூறிவிட்டான்.எனவே ராமனின் ஐயத்தை நீக்க,சீதை தீக்குளித்தாள் [அக்னி பிரவேசம் செய்தாள்]. அதன் பிறகு தான் ராமன் அவளை அயோத்திக்கு கூட்டிப் போனான்.அங்கு “அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி.” என்று கம்பன் கூறியது போல ராமன் திருமுடி சூடினான் [பட்டா பிஷேகம் ].

இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். என்றாலும் அரசன் அரசி வாழ்க்கை மிக விரைவாக குழப்பத்தில் முடிந்தது, நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக் கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். எந்த வித முன் யோசனையும் இன்றி,இந்த கெடுக்கும் நோக்கம் கொண்ட பொய்த்தகவலில் இருந்து தன்னை விலக்க,சீதையை கைவிட்டு  கானகம் அனுப்பினான்.

எப்படி,தனது மனைவியை,அதுவும் கர்ப்பவதியை,யாரோ ஒரு துணி வெளுப்பவர் ஒருவர் அவளின் தூய்மையை கேள்வி கேட்டார் என்பதற்காக, தன்னம் தனியாக காட்டுக்கு அனுப்ப மனம் வந்தது? கணவனுக்கு தெரியாதா அவளின்  தூய்மை,கள்ளம் கபடம் அற்ற அவளின் பெண்மை?அவனுக்கு அவளின் வாழ்க்கை பெரிதாக தெரியவில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் தனது பெயரும் தனது புகழும் மட்டுமே.வதந்தியை தடுக்க அல்லது நிறுத்த ஒரு அரசன்,ஒரு கணவன் எதை செய்வானோ,அதில் ஒன்றையாவது ராமன் செய்யவில்லை. 

“தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?”[பகுதி:04]

ராமனை தெய்வமாக்க வேண்டுமா?

பலருக்கு, ராமன்,நிறைமாத கர்ப்பணியான சீதையை நாடு கடத்தி, காட்டிற்குத் தன்னம் தனியாக விட்டது  ஒரு மிகவும் குழப்பமான, புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வாக உள்ளது. இது உத்தர காண்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஆனால் வால்மீகியோ அல்லது கம்பரோ இதை எழுதவில்லை. அவர்கள் பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விட்டார்கள்.

இந்த உத்தர காண்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட  ஒரு வரலாறு இது ஆகும். தமிழில் உத்தர காண்டம் எழுதியவர் ஒட்டக்கூத்தர் ஆகும்.அதில் 
“மன்னவன் ராமன் மானபங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க் கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள் நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு”[பாடல் 728],

அதாவது  “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார். வானவர்களுக்குத் தீங்கிழைத்த ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே”  என்று மக்கள் பேசுகின்றனர் என ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறினார்.ராமனும் அதை அப்படியே ஆமதித்து, லட்சுமணன் மூலம் அவளை  வால்மீகி ஆசிரமம் அருகே,கண்ணை கட்டி கூட்டிக்கொண்டு போய் விட்டான்.

“என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள்”[பாடல் 753],
அதாவது,அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று

உன்னைக் கொண்டு வந்தேன் என்று லட்சுமணன் சீதையிடம் கூறி,காட்டில் விட்டுச் செல்ல,அதனால், பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் சீதை வீழ்ந்தாள் என்கிறது. ஆனால் வால்மீகி ராமாயணத்தில்,கொஞ்சம் மாறுபட விதத்தில்,

“பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி” [பாடல் 3, ஸர்க்கம் 45 ]

அதாவது, தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது. என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது. ஆகவே,ராமன் தன் சகோதரர்களைப் பார்த்து:”அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம்”[பாடல் 14, ஸர்க்கம் 45], அதாவது,மனிதருள் உயர்ந்த என் உறவுகளே ! மக்களின் நிந்தனைக்கு அஞ்சி என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார். சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல? என்று கூறினான்.

இப்படிச் செய்வது சரியா, தவறா!-என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை.அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவ தூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை. பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் விசேஷமான சில பொருட்கள் மீது ஆசைப்படு வார்கள். அத்தகைய ஆசைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவது மரபு.சீதைக்கு அப்படி ஏதேனும் விருப்பமுண்டா என்று முன்பு  ஒரு நாள் இராமன் சீதையிடம் கேட்டான். ஆம் என்றாள் சீதை. அந்த ஆசை என்னவென்று கேட்டான் இராமன்.

கங்கைக் கரையோரம் அமைந்துள்ள ஏதாவதொரு முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அங்கு கிடைக்கும் பழங்களையும், கிழங்குகளையும் சாப்பிட்டு ஓரிரவாவது தங்கித் திரும்ப வேண்டும் என்பதே தன் ஆசை என்றாள் கர்ப்பிணியான சீதை.அது இப்ப அவனுக்கு நினைவு வந்தது,

’அன்பே,நாளையே நீ விரும்பும் ஆசிரமம் போக நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றான். இராமன். நேசத்திற்குரிய கணவனின் நேர்மையான பேச்சென்று சீதை இராமனின் வார்த்தையை கருதினாள். ஆனால் இராமன் செய்ததென்ன?சீதையைக் காட்டிற்கு அனுப்பி கைகழுவிட இதுவே தக்க தருணம் என இராமன் நினைத்து,தம் சகோதரர்களை அழைத்து சீதையை வனவாசம் அனுப்பி விடுவதெனும் தன் அறுதியான முடிவினை தெரிவித்தான். ஆனால்,சீதைக்கு ஒன்றும் கூறவில்லை.அவள் எதோ தன்னை ஒருநாள் தன் விருப்பத்தை

நிறைவேற்ற கணவன் அனுப்புகிறான் என்று மட்டுமே நினைத்தாள். லட்சுமணனும் அப்படியே அவளை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகில் விட்டு விட்டு,”நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம்? என்றும் நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு உள்ளேன்”[பாடல் 13,14 ஸர்க்கம் 47] என்றான்.லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள். மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள். [பாடல் 1, ஸர்க்கம் 48]- மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி- என்பதே ராமனின்  முடிவாயிருந்தது. இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே ராமன் எதிர்பார்த்தான்?மன்னனும் மன்னன் குடும்பமும் நாட்டை வழி நடத்தாத ஒரு சூழலை தான் இங்கு காண்கிறோம்?சீதையைத் தனியே காட்டுக்கு அனுப்பியது இதே சூழலில் தான். அதுவும் அவள் கருவுற்றிருந்தாள் என்பதை கவனத்தில் கொள்ளாது,அந்த நிலையிலும் அவளை காட்டுக்கு அனுப்புகிறான். ராமனால் கைவிடப்பட்ட  சீதை,வால்மீகியின் ஆசிரமத்தில்,முனிவரின்  ஆதரவில் வாழ்ந்தாள்.

அங்கு இரட்டைக் குழந்தைகளை[லவ குசா] அவள் பெற்றெடுத்து,12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது.இவ்வளத்திற்கும் வால்மீகியின் ஆசிரமம் இராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந் தொலைவிலொன்றுமில்லை. இந்த உதாரண கணவன் இராமன், பாசம் மிக்க தந்தை, சீதை என்னவானாள்-அவள் செத்தாளா-பிழைத்தாளா-என்பதைப் பற்றி விசாரிக்கக் கூட இல்லை.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விநோதமான சூழ்நிலையில்

இராமன் சீதையை சந்திக்கிறான்.வால்மீகி, சீதை  எந்த கலங்கமும் இல்லாதவள், அப்பாவி என கூறி,தன்னுடன் வந்த  லவ குசா வை  உனது பிள்ளைகள் என அறிமுகப் படுத்தினார்.சீதாவை திருப்ப அயோத்திக்கு கூட்டிப் போக விருப்பம் இருந்தாலும்,சீதை களங்கமற்றவளாக இருந்தால், இன்னும் ஒரு தீக் குளிப்பு மூலம் அதை நிரூபிக்கட்டும். அதன் பின் அவள் என்னுடன் வரலாம் என்றான்.இதே மாதிரியான சோதனையை சீதை முன்பொருமுறை இலங்கையிலே மேற்கொண்டாள்.இருப்பினும் வால்மீகி சீதையை யாக [வேள்வி]சபைக்கு அழைத்து வருகிறார்.

இராமன் முன் சீதையை நிறுத்தி வால்மீகி சொன்னார்: ‘’தசரதனின் மகனே, வம்பர்களின் வாய்ப் பேச்சைக் கேட்டு காட்டிலே நீ கைவிட்ட சீதை இங்கே இருக்கிறாள். நீ அனுமதித்தால் அவள் மீண்டும் நிரூபிப்பாள்  என்றார். என்றாலும் சீதை அதை ஏற்கவில்லை.அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.அவள் “முன்மாதிரி கணவன்” என இன்றைய ராமபத்தினிகளால்   போற்றப்படும் ராமனுடன் வாழ்வதை விட, சாவதே மேல் எனத் தற்கொலை செய்து கொண்டாள்.

அதாவது காட்டுமிராண்டித் தனமானவனை விட கேவலமாய் நடந்து கொண்ட இராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான இராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது. கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக கூறும் இராஜாஜி வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் எழுதியுள்ளார். மேலும் உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று இராஜாஜி மனமுடைகிறார். ‘உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ‘ ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டம் பற்றிய கதை. அது திராவிடர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கதை ‘

எப்படி அரசாளும் மன்னன் ராமன் ஒரு குடும்ப வன்முறையாளரான  கட்டாடியின் பேச்சை  கேட்ப்பான்?கொஞ்சமாவது தன் புத்தியை பாவிக்க வேண்டாமா?எப்படி அவனை நம்பி தன் மனைவி சீதையை நாடு கடத்துவான்?எப்படி இவன் இலட்சிய நாயகனாக இருப்பான்?அரண்மனையில் வாழாது கணவனுடன் வனவாசம் புகுந்த சீதையை,எப்படி  சந்தேகம் கொள்வான்? சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து,அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றுவது எப்படி? காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பிணி  சீதா, குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.

ஆனால் இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாகப் போற்றி,மணமக்களை அவர்கள் போல வாழ என வாழ்த்துகிறார்கள்????.இது எனக்கு புரியவே இல்லை?
வால்மீகி ராமாயணத்தில்,”செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும் நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன”(கம்பராமாயணம் ஆரணிய காண்டம் பாடல்:117) என்று வர்ணிக்கப்படும் அழகு மங்கை சூர்ப்பனகையினதும்  ‘ஏசல்இல் அன்பினளாய் இனிது உன்பால்[இலக்குவன்] ஆசையின் வந்த அயோமுகி ‘யினதும் (ஆரணிய காண்டம் பாடல்:52) உறுப்புகளை இலக்குவன் அறுத்தது,சீதையின் தீக் குளிப்பு,மற்றும் கர்ப்பவதி சீதையை காட்டில் கைவிட்டது ராமனின் ஆணாதிக்க ஆதிக்கத்தை தெளிவாக காட்டுகிறது.

அது மட்டும் அல்ல, ராமன்,மற்றவர்கள் பின்பற்றக் கூடிய உதாரண உத்தம புருஷன் அல்ல.சீதை ஒரு ஒற்றை தாயார்.அதிகாரப்பூர்வமற்ற முறையில் பிரிந்து வாழ்ந்தாள்.ஆசிரமத்தில்,தனது மகன்களை தனியே வளர்த்தவள்?அது மட்டும் அல்ல பெண்களை நம்பக்கூடாது,மனைவிக்கு  இரகசியம் சொல்லக்கூடாது என்று பெண்களை நம்பாதவன் இந்த ராமன்.(அயோத்திய காண்டம்).மேலும் வாலியை முறையற்று கொன்றது,சீதாவை நடத்திய விதம் எல்லாம் கொடூரமான செயல்கள் ஆகும்.இப்படியானவனை எப்படி நாம் கொண்டாடலாம்?

ஆனால் மறுபக்கம் ராவணன்மாபெரும் வீரனாக, மிகப் பெரிய படைகளுடன் கூடியவனாக, செல்வம், செல்வாக்கு மிக்கவனாக திகழ்ந்துள்ளான்.அது மட்டும் அல்ல, சகல திறமைகளையும் பெற்ற வல்லவனாகவும்,மிகுந்த நாகரீகம் மிகுந்தவனாகவும், மாவீரனாகவும் ஜோதிடத்தில் நிபுணனாகவும் அறிவாளிகளில் மேம்பட்ட அறிவாளியாகவும் மருத்துவம் தெரிந்த வித்தகனாகவும் மாபெரும் இசைக் கலைஞனாகவும்  இருந்தான். சிறந்த கலாச்சாரத்தை உடையதாக தனது நாட்டை வைத்திருந்ததுடன் இவன் காலத்தில் கட்டிடக்கலை சிறந்தும் விளங்கியது. உதாரணமாக கடலை கடந்து இலங்கைக்கு போக ராமனுக்கு மாதக் கணக்கில் எடுத்தது. அதே வேலையை ராவணன் ஒரே நாளில் முடித்து விட்டான். இப்ப சொல்லுங்கள் ராமனா? ராவணனா? யார் பலசாலி? யார் திறமைசாலி? இப்ப எனது கேள்வி,ஏன் நெடுக்கவும் ராவணனை விரல்கள் சுட்டிக் காட்டுகின்றன?

“தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?”
பகுதி:05

Saturday, November 14, 2020  

வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான். மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான்.அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன்,ஒரு மலைச்சாரலில்,ஒரு ஏரிக்கு அருகில்,ஒரு சாது ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டு இருப்பதை கண்டார்.

அவன் அருகில் சென்ற ராமர், ‘ நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்’ என்று கேட்க, அவன்,’மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்’ என விடையளித்தான். உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்றான்.

தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இராமனால் கொல்லப்பட்டான் ?விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை-நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன். இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டிருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்தார்களாம்? கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக ?அவனைப் பாராட்டினார்களாம்?எப்படி இருக்குது ராமன் கதை?இவனுக்கு தான் இந்த தீபாவளி? இவன்தான் கடவுளாம்?இவன் மாதிரி உத்தம புருஷனுக்காக அலைகிறார்களாம் இன்றைய சீதைகள்?எப்படியிருக்குது வேடிக்கை?

திருவிளையாடல் புராணத்தில் 26 வது கதையாக  ‘மாபாதகம் தீர்த்த படலம்’ வருகிறது.அதில்,அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள்.அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான்.தாயை நிர்ப்பந்தப்படுத்தினான்.இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை,அவனைத் தடுத்தார்,ஆனால் அவன்  தந்தையையே கொன்று விட்டு,தனது காம பசி தீர்க்க,தாயை இழுத்துச் சென்று விட்டான்.காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. என்றாலும், இறுதியில்,அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.

இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார். எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும்,ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?இந்த அறிவுரை எமக்கு தேவைதானா?இப்படியான கடவுளும் எமக்கு வேண்டுமா?      

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன.கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும்.இந்த நிகழ்வு பிற்காலத்தில், ஆரியரின்  நாகரிகக் கலப்பால்,தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளியானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை.

விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை)  மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை – செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்?மேலும் தீபாவளிப் பண்டிகை,கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை.ஆனால் அங்கு  ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.

“உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சிமழைகால் நீங்கிய மாக விசும்பில்குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்துஅறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றியவிழவு உடன் அயர வருக தில் அம்மதுவரப் புலர்ந்து தூ மலர் கஞலித்தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின்புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇகூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப்பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகுதீங்குலை வாழை ஓங்கு மடல் இராதுநெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்”[அகநானூறு 141]

உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது.

உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது.ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது.இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்துகிறார்கள். அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல்.

உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை.ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம்,ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது.அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே.ராவணன் அரக்கனும் அல்ல,கடவுளும் அல்ல.அவன் ஒரு சாதாரண மனிதன்.அவன் தவறுகள் விட்டுள்ளான்.நான் அவனை மூடிமறைக்க

முயலவில்லை.நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன், ராமனை சித்தரிக்க கையாளுகிறேன்.அவ்வளவுதான்.கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது ,ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான்.மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள்,பண்புகள் கொண்டுள்ளனர்.ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்? ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள்.ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா?இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா?

கடவுள் என கருதுபவர் மக்களுக்கு,எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும்.அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா?ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம்.இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம். கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு!அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்?ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது  அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை,மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை!இளைஞனாக இருக்கும் பொழுது,அவர் ஒரு தந்தை சொல் தட்டாத  பிள்ளை,ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக, யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் ‘கணவன் மனைவி’ விசுவாசத்தை  சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது  கடமையை, ‘மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி’ என்ற கண்மூடித்ததனமான கீழ்ப்படிதலை   திடீரென்று நினைவுக்கு கொண்டுவருகிறான்.

இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து,காடு சென்று,இறுதியாக தற்கொலை செய்கிறாள்.அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது,’மாற்றான் சொல்’ கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே!தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை? அவன் வாழ் நாள் முழுவதும்,பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்’ நபராகவே,எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!! 

இதுவரையில்  நாம் அலசியதிலிருந்து, ஆரியரின் தந்திரமான புராண செருகலின் விளைவு , தமிழரின் தொன்மை வாய்ந்த தீப ஒளியேற்றும் விழா [விளக்கீட்டு விழா] என்பதின் பாதையையும், கருத்துக்களையும், அது அடியோடு மாற்றிவிட்டன என உணர்கிறோம். [இதேபோன்றுதான் தமிழரின் சிவ வழிபாடு , முருகன் வழிபாடு, நாக வழிபாடு என்பனவும் இந்து சமய போர்வைக்குள் இழுக்கப்பட்டு கொச்சைத்தனமான கதைகளும் புனையப்பட்டு ஆரியர்கள் அதில் வெற்றி கண்டனர்.]    எனவே, உறவுகள் கூடி, எண்ணங்களில்  நல்லொளி ஊட்டித் தீபம்  ஏற்றித் தமிழ்த் ‘தீப + ஆவளி’, அதாவது, ‘தீப’ (என்னும் வடசொல்லும்) + ‘ஆவளி’ என்ற இரு சொற்கள் இணைந்து வெளிப்படும் ‘தீபங்களின் வரிசை’ என பொருள்படும், தீப ஒளித்திருநாளை கொண்டாடுவோம்! எங்கள் ‘தீபாவளி’ வேறு என ஆரிய தீபாவளிக் குப்பைகளை எறிந்திடுவோம்

——————————————————————————————————–

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply