சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டும்……..

Kirishanth Mahathevan —

August 8, 2020 

தோற்றவர்கள் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடு இருப்பதாக அழுவது வழக்கமாக நடக்கும் நாடகம்தான். வாக்குகள் தொகுதி தொகுதியாக எண்ணப்படுகிறது. அப்போது விருப்பு வாக்குகள் கூடிக் குறையும். அதுதான் இப்போதும் நடந்தது. சென்ற தேர்தலில் அருந்தவபாலனும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். வாக்கு எண்ணுவதில் பிழை ஏற்பட வாய்ப்பே இல்லை. வாக்கு எண்ணிக்கையை வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். கடைசியாக எண்ணப்பட்ட தொகுதி மானிப்பாய் தொகுதியாகும். இது சித்தார்த்தனது தொகுதியாகும். அந்த வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே சசிகலா சொற்ப வாக்குகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அவர் குறைபட வேண்டும் என்றால் அது சித்தார்த்தனாக இருக்க வேண்டும். சுமந்திரன் அல்ல. ஆனால் வழக்கம் போல பழி முழுதும் சுமந்திரன் தலையில் சுமத்தப்பட்டது. வாக்கு எண்ணப்படும் போது சுமந்திரன் அங்கு இல்லை. அவர் வீட்டில் இருந்தார். சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் சுமந்திரன் எல்லாம் வல்ல ஒரு அரசியல்வாதியாக நினைக்கிறார்கள்.————————————————————————————————————சுமந்திரனை எப்படியும் எப்பாடு பட்டும் வீழ்த்த வேண்டும் என்ற சதியில் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மெத்தப் பாடுபட்டன. கட்சிக்கு வெளியே மட்டுமல்ல கட்சிக்கு உள்ளேயும் சொந்தச் செலவில் சூனியம் வைத்தார்கள். அவருக்கு குழிவெட்டினார்கள். முடிவில் அவருக்கு வெட்டிய குழியில் குழிவெட்டியவர்கள் விழுந்தொழிந்தார்கள். கட்சியின் தோல்விக்கு கட்சித் தலைமை கட்சியில் இருந்து கொண்டு சொந்தச் செலவில் சூனியம் செய்தவர்கள் மீது எந்ந நடவடிக்கையும் எடுக்கத் தவறியது. ஆளாளுக்கு அறிக்கை விட்டார்கள். இதில் கொழும்பு தமிழரசுக் கட்சித் தலைவர் ஒருவர்.அவருக்கு கட்சிக் கட்டுப்பாடு இருக்கிறது, அதற்கமைய நடக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்கவில்லை. ஊடகங்களில் சுமந்திரன் மீது அபாண்டமான குற்றச் சாட்டுக்களை அடுக்கினார்.

தவராசா தன்னுடை சனாதிபதி பதிவி உயர்வை தடுத்தவர் சுமந்திரன் என்றார். சுருக்கமாகச் சொன்னால் படித்தவன் மாதிரி இல்லாமல் படியாத பாமரன் மாதிரி அவரது பேச்சு இருந்தது. இன்னொருவர் தமிழ் அரசுக் கட்சி மரம், மரத்தை வெட்டப்படாது அதில் முளைத்துள்ள குருவிச்சையை மட்டும் அகற்ற வேண்டும் என்றார். குருவிச்சை என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. சுமந்திரனின் சிங்கள ஊடக நேர்காணலை ஊதி, ஊதிப் பெருப்பித்த பெருந்தகை அவர்தான். அது தொடர்பாக சம்பந்தன் ஐயா விட்ட அறிக்கையை வெட்டிக் கொத்தி அவரது நாளேடு வெளியிட்டது! முடிவில் பண பலம், ஊடக பலம் இரண்டும் இருந்தும் தேர்தலில் தோற்றுப் போனார். இத்தனை நெருக்கடிகள், பொய்ப் பரப்புரைக்கு மத்தியிலும் சுமந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார். இது உண்மைக்கும் உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி.————————————————————————————————————தேர்தல்கால சதியொன்று தோல்விகண்டது. நீதியின் குரலாக சுமந்திரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டும்; இதற்கான முழுமையான பொறுப்பையும் மஹிந்த தரப்பின் பசில் ராஜபக்ஷவே நேரடியாகக் கையாண்டார். விடயங்கள் அனைத்தும் பரம இரகசியமாகப் பேணப்பட்டன, ஆனால் அங்கஜன் இராமநாதன் போன்றோரை அல்லது டக்ளஸ் தேவானந்தா போன்றோரை நேரடியாகக் களமிறக்கினால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே புதிய உக்தி அவசியப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சமாந்தரமாக தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் களமிறக்கப்படல் வேண்டும்.அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைக்கப்படல் வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கான வியூகம் வடிவமைக்கப்பட்டது தமிழ் மக்களிடையே செல்வாக்கான ஊடகங்களை கூலிக்கு அமர்த்துதல் என்று தீர்மானிக்கப்பட்டது, கஜேந்திரகுமார் பொண்ணம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழ்த் தேசிய சமாந்தர அணிகளாக களமிறக்கப்பட்டன.

இவர்களுக்கு அனைத்து வளங்களும் சீராக ஒழுங்கமைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சரவணபவன் ஊடாக காய்கள் நகர்த்தப்பட்டன. மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் என்போர் பலியாடுகளாயினர். சதித்திட்டம் தீட்டியபடி வெகுவாக வேலை செய்தது. இறுதி நிமிடம் வரை சதிகாரர்கள் தமது முயற்சியில் இருந்து பின்வாங்கியதாக அறியமுடியவில்லை. அடிக்கடி மக்களுக்கு பிழையான தகவல்களைத் மக்கள் நம்பும் விதமாகத் தந்துகொண்டேயிருந்தார்கள்.

இறுதியாக வாக்கு எண்ணும் நிலையத்திலும் அவர்களது திட்டங்கள் வேலைசெய்யத் தொடங்கின. விருப்பு வாக்கு எண்ணும்போது தமது கைங்கரியங்களை அறங்கேற்றினார்கள், கூட்டமைப்பு தோல்வியடைந்ததுவிட்டது என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்துவதும் சுதந்திரக் கட்சி இரண்டு ஆசனங்களை வென்றது என்பதுமே அவர்களது முதலாவது செய்தியாக இருந்தது, ஆனால் அது எடுபடவில்லை. கூட்டமைப்பு மூன்று ஆசனங்களை வென்றது என்றார்கள், அடுத்து விருப்பு வாக்குகளில் மாவை அண்ணருக்கும் சுமந்திரனுக்கும் கடுமையான போட்டி நிலவுவதாக ஒரு தகவலை கசியவிட்டார்கள், அதுவும் எடுபடவில்லை, இறுதியாக சசிகலா ரவிராஜ் அவர்களை பகடையாகப் பயன்படுத்தினார்கள், சுமந்திரன் சசிகலா ரவிராஜ் அவர்களை மிரட்டுவதாகச் செய்தி வெளியிட்டார்கள், அரசாங்க அதிபரை முடிவுகளை வெளியிடாது தாமதிக்கும்படி கூறினார்கள், சில தொகுதிகளின் விருப்பு வாக்குகள் எண்ணப்படுவதை திட்டமிட்டு தவிர்த்தார்கள்.

இறுதியாக சுமந்திரன் அவர்கள் வெற்றிபெற்றார் என்ற செய்தியை அறிவிப்பதை முடியுமானவரை தடுத்தார்கள். ஒரு குழப்பகரமான சூழலை உருவாக்கி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் ஒரு பாரிய அவப்பெயரைப் பொறிப்பதே சதிகாரர்களின் இறுதி நோக்கம்சதிகார்களின் சதிகள் வேலை செய்திருக்கின்றன. ஆனால் சதிகார்கள் வெற்றியடையமுடியவில்லை. சதிகார்களும், சதிக்குத் துணை நின்றோரும் தோல்வியடைந்திருக்கின்றார்கள். காலம் இன்னும் பல விடயங்களை நமக்குச் சொல்லித்தரும் எமது கொள்கைகளை ஏற்று, எமது வழிமுறைகளை ஆமோதித்து வாக்களித்த அனைவருக்கும், ஜனநாயகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த அனைத்துக் களப்போராளிகளுக்கும் பங்களிப்புச் செய்தோருக்கும் அடுத்ததாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அர்ப்பணிக்கின்றேன்.

சதிகாரர்களின் அனைத்து சதிகளையும் இறுதிநேரம்வரை பொறுமையோடு சளைக்காமல் முறியடித்த என் அன்பு அண்ணன் சுமந்திரன் அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். அதேபோல் எமக்கு முன்னால் நீண்டுவிரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன். அ.அஸ்மின் 07-08-2020

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply