திரு சுமந்திரன் வழங்கிய செவ்வி தொடர்பான குற்றச்சாட்டில் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய தீர்ப்பு

திரு சுமந்திரன் வழங்கிய செவ்வி தொடர்பான குற்றச்சாட்டில் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய தீர்ப்பு

            1959 ஆம்  ஆண்டு இலங்கை பாராளுமன்ற அங்கத்துவத் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டபோது வகுக்கப்பட்டதொகுதிதான் பருத்தித்துறைத் தொகுதி. தொண்டைமானாறு தொடக்கம் வல்வெட்டித்துறை, பொலி கண்டி, பருத்தித்துறை, வல்லிபுரம், நாகர்கோயில், செம்பியன்பற்று, உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், கட்டைக்காடு வரைக்கும் வெற்றிலைக்கேணி கிழக்குப் பக்கமாக ஊர்கள் அடங்கிய தொகுதி ஆகும். இத் தொகுதி போக்குவரத்துக்குக்  கஷ்டமான மணற் பிரதேசமாகும். கடற்றொழிலாளர்கள் சமூகங்களை உள்ளடக்கியதாகம்.

            தந்தை செல்வாவினால் பருத்தித்துறைக்கு எனத் திரு துரைரெத்தினம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1960 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 1983 வரை தொடர்ச்சியாக 5 தேர்தல்களிலும் வெற்றிபெற்று தமிழரசுக் கட்சியிலும், தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் ஈடுபட்டவர். 1976 ஆம் ஆண்டு மீண் டும்  தொகுதிகள் மீள்வரையறுக்கப்பட்ட போது வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு ஆகிய இரண்டு ஊர்களையும் உடுப்பிட்டித் தொகுதியுடன் சில அரசியல் காரணங்களுக்காக இணைக்கப்பட்டன. அப்போது 77 ஆம் ஆண்டு நடந்த பொதுத்  தேர்தலின்போது மீண்டும் அவரை வேட்பாளராக நிறுத்தியபோது தனது தொகுதி மக்கள் சிலரால் அவரை நிறுத்தக்கூடாது என்றும் பருத்தித்துறையைச் சேர்ந்தவரையே நிறுத்தவேண்டும் என்றும்  திரு. அமிர்தலிங்கம் அவர்களிடம் முறையிட்டனர். கூடவே தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் கூடி பதாதைகள்  தாங்கி எதிர்ப்பையும் தெரிவித்தனர். பின்னர் திரு. அமிர்தலிங்கம் தலைமையில் இதுபற்றி ஆராய ஒரு ஒரு கூட்டம் (ஏன்! விசாரணை என்றே கூறலாம்) நடை பெற்றது.

இதனால் துரைரத்தினம் மிகவும் கவலைப்பட்டார். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்து விட்டு இறுதியாக இரண்டு வசனங்கள் மட்டும் பேசினார் ”இங்கே எனது கைகளைப் பாருங்கள். இந்த கைகள் கறைபடிந்த கைகளா ? எனது வீட்டுக் கதவு யாருக்காவது எந்த நேரத்திலாவது அடைக்கப்பட்டிருந்ததா?” இந்த வார்த்தைகள் எல்லோரையும் உணர்ச்சிவசப்படுத்தின. அதன்பின் அமிர்தலிங்கம்

அவர்கள், துரைரத்தினம் அவர்களை  அமர்த்திவிட்டு “துரையைப்பற்றி யார் என்ன கூறினாலும் நான் அவரை அறிவேன். எங்கள் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் அவர் உயர்வானவர். பண்பான பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் அவரே பருத்தித் துறைத்தொகுதி வேட்பாளர்” எனக் கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். மீண்டும் அவர் 1977ல் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் 1983 கலவரங்களிற்கு பின்பு கொண்டுவரப்பட்ட ஆறாவது சட்டத்தின் கீழ்  பிரிவினைக்கு எதிரான உறுதிப்பிரமாணம் செய்யமறுத்து பதவியைத் துறந்தவர்.

            இன்று அதேபோன்ற சம்பவம்தான்  தமிழரசுக் கட்சிக்குள் திரு சுமந்திரனுக்கு ஏற்பட்டது போலும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் திரு சுமந்திரனை அரசியல் அரங்கைவிட்டு துரத்த வேண்டும் என்ற நோக்கோடு சிங்கள செவ்வியில் திரு சமுதித்த சமரவிக்கிரம தனது கேள்விகளை கேட்டார். அதற்கு சுமந்திரன் நேர்மையான பதிலை அளித்திருந்தார். இதற்கு எமது கட்சியிலுள்ளவர்களும் மாற்றுக்கட்சியில் உள்ளவர்களும் கூடிப்பேசி எதிராகப் பேட்டியளிக்க, அதற்கு 14-05-2020 காலைக்கதிர், மற்றும் பத்திரிகைகளில் திரு சுமந்திரன் விளக்கம் கூறியிருந்தார்.

            தமிழர்தரப்பில் மும்மொழி பேசும் ஆற்றலுள்ளவராக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நபராக சுமந்திரனே இன்று  இருக்கின்றார். அதுபோல் சுமந்திரனை

அரசியலிலிருந்து      அகற்றுவதற்கு எத்தனை…. எத்தனை…முயற்சிகள். U.K சென்றபோது இடையூறுகள்……ஜெனிவா சென்றபோது நடுவீதியில் குறுக்கீடு…..அவுஸ்திரேலியாவில் கூட்டத்தில் பேசமுற்பட்டபோது தடுக்க முயற்சி…..இவற்றின்  தொடர்ச்சிதான்  திரு சுமந்திரன்  மீதான  குற்றச்சாட்டுகள்.

            எமது தமிழரசுக் கட்சியில் இல்லாதவர்கள், தேர்தலில் வெற்றிபெற முடியாதவர்கள், சம்பந்தன் அவர்களுக்குத்  துரோகம் இழைத்தவர்களன் எல்லாம் சுமந்திரன் அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றக் கேட்கமுடியுமா ?

            இதற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான  திரு  சம்பந்தன்  அவர்கள்  COVID-19 காரணமாக வீட்டில் இருந்தபடியே பத்திரிகைகளில் வந்த பேட்டிகளின்  செய்திகள்  பல வற்றையும் வாசித்ததோடு, திரு சுமந்திரன் சிங்களமொழியில், பேட்டியின் செவ்வியை அகலத் திரையில் போட்டுப் பார்த்துள்ளார். தனது  செவ்விக்கு  கூறிய  விளக்கத்தையும்  சுமந்திரன் பக்கத்தில் வந்த காணொளியையும் உன்னிப்பாகக் கவனித்தார். சட்டத்தரணியான சம்பந்தர் தீர்ப்பைக்கூறி விடயத்திற்கு முற்றுப் புள்ளிவைத்தார். அவர் குறிப்பாக தமிழர் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் நோக்கோடு கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பதில் திரு.சுமந்திரன் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயற்பட்டுள்ளார் என்று தனது தீர்ப்பில் கூறினார்.

            அத்தோடு கூட்டமைப்பின் சார்பில் தமிழருக்கான தீர்வு விடயத்தில் திரு சம்பந்தரோடு, திரு சுமந்திரனும் அரசாங்கத்தோடாயினும் சர்வதேசத்துடனான பேச்சு வார்த்தைகளில் முக்கிய பங்கை வகிப்பவர். அமிர்தலிங்கம் மறைவிற்குப் பின்னர் எத்தனை தமிழரசுத் தலைவர்களை, தொண்டர்களை வடகிழக்கு மாகாணத்தில் நாம் இழந்துள்ளோம். இன்றய நிலையில் தமிழரசுக்கட்சிக்கும், குறிப்பாக பருத்தித்துறைத் தொகுதியைப் பிரதிநிதிப் படுத்துவதற்கும் சுமந்திரனின் சேவை இன்றியமையாதது.

ந.நகுலசிகாமணி,
வல்வை வரலாற்று ஆவணக்காப்பக் கனடா,
தமிழரசுக்கட்சியின் மூத்த தொண்டர்.

30-05-2020

~~~~~~~~~

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply