தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா.. உழவர் திருநாளா?

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா உழவர் திருநாளா?

நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை உருவாக்கனும் என்ற கருத்து ஏற்றக் கூடியதல்ல. காடழிப்பு.. என்பது தீவிரமான பக்க விளைவுகளை சூழலில்.. பூமியில் ஏற்படுத்தவல்லது என்ற கருத்தை நாசார் உணரவில்லை.. அல்லது உணரச் செய்யப்படவில்லை.. மேலும் தமிழ்நாட்டின் சுதந்திரம்.. இந்திய சுதந்திரத்தை காந்தி பெற்றுக் கொடுத்து விட்டதால் கிடைத்து விட்டதாக நாசர் காட்ட விளைவது உட்பட பல முரண்பாடுகள் இதற்குள் இருந்தாலும்….)

அறுவடைப் பெருநாள் அல்லது உழவர் பண்டிகையான பொங்கல் எப்படிப் புத்தாண்டாகும்?

pongal-celebration.gif

தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது. இதற்கு ஒளவையார் காலத்துப் பாடல்களே சான்று. “வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்.. நெல்லுயரக் கோன் உயர்வான்” என்று..அன்றே ஒளவை உழவுத்தொழிலின் முக்கியத்துவத்தை அது மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கை எடுத்துச் சொல்லிவிட்டார்.

நெல்லை மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே அதிகம் பயிருடுகின்றனர். காரணம் பெரும்பாலும் அவர்களை மழையை எதிர்பார்த்து இப்பயிர் செய்கையை ஆரம்பிப்பதால். இலங்கை மற்றும் தென்னிந்தியா வாழ் தமிழ் மக்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழை வீழ்ச்சியைப் பெறுவதால் புரட்டாதி தொடங்கி மார்கழி வரையான மாரி காலத்தை உள்ளடக்கி நெல்லினைப் பயிருட்டு.. ஏறத்தாழ தை மாதத்தில் அறுவடை செய்து கொள்கின்றனர்.

நெற்பயிர் என்பது சூரிய ஒளியைக் கொண்டு அதன் இலைகளில் உள்ள பச்சையயுருமணிகள் எனும் கலப் புன்னங்கத்ததில் நடக்கும் ஒளித்தொகுப்பு எனும் செயற்பாட்டின் மூலம் சூரிய ஒளிச்சக்தியை இரசாயன சக்தியாக (குளுக்கோஸ் அப்புறம் மாப்பொருள்)மாற்றுகிறது. நெல்மணியை அரசியாக்கி அந்த மாப்பொருளையே நாம் உணவாக்கிக் கொள்கின்றோம். அந்த மாப்பொருளே எமது உடலியக்கத்துக்கு அவசியமான சக்தியின் பிரதான முதலாக உள்ளது.

இதனடிப்படையில் தான் தைத் திங்களில்,பயிர் விளைநிலங்களில் நல்ல விளைச்சலைப் பெற்ற மகிழ்ச்சியில் மக்கள் உழவர் திருநாளை புதுத்தானியங்கள் கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தி, உறவுகளுக்கு உணவு பரிமாறி.. பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை நடத்திக் கொண்டாடுகின்றனர்.

அவர்கள் இதைப் புதிய ஆண்டின் தொடக்கமாகக் கருதி கொண்டாடுவதில்லை. பொங்கல் பண்டிகை முழுக்க முழுக்க உழவர்களின் திருநாள்.

தமிழர்கள் மட்டுமன்றி உழவுத் தொழில் செய்யும் பிற தென்னிந்திய மாநில மக்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமன்றி இந்திய உபகண்டத்தோடு பூமியின் மத்திய கோட்டை அண்மித்த நாட்டு மக்களும் இவ்வகையான உழவர் பண்டிகையைக் கொண்டாடும் குறிப்புக்களும் உண்டு.

“While Pongal is predominantly a Tamil festival, similar festivals are also celebrated in several other Indian States under different names. In Andhra Pradesh, Kerala, and Karnataka, the harvest festival Sankranthi is celebrated. In northern India, it is called Makara Sankranti. In Maharashtra and Gujarat, it is celebrated on the date of the annual kite flying day, Uttarayan. It also coincides with the bonfire and harvest festival in Punjab and Haryana, known as Lohri. Similar harvest festivals in the same time frame are also celebrated by farmers in in Burma, Cambodia, and Korea.”

http://en.wikipedia.org/wiki/Pongal

பண்டைய காலத்தில் தமிழர்களின் பிரதான தொழிலாக உழவுத் தொழில் இருந்த காரணத்தால்.. இப்பண்டிகை தமிழர்களின் பண்டிகையாக இனங்காணப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழர்கள் மட்டுமே உழவர் திருநாள் அல்லது அறுவடைப் பெருநாளைக் கொண்டாடுகிறார் என்பது தவறான ஒரு எண்ணக்கரு.

உழவுத் தொழிலின் சிறப்பினைச் செப்பி.. அந்த தொழில்மூலம் பெறப்பட்ட நல்ல விளைச்சல் கண்டு மகிழ்ந்து அவ்விளைச்சலுக்கு உதவிய சூரியனுக்கு (இயற்கைக்கு) பொங்கலிட்டு நன்றி செலுத்தி ஊர் கூடி உணவுண்டு களித்தலே பொங்கலின் சிறப்பு ஆகும். அதுவே தமிழர் பாரம்பரியமும் ஆகும்.

மறுநாள் மாட்டுப் பொங்கல் என்று உழவுத் தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்குக் கூட பொங்கலிட்டு நன்றி செய்யும் நிகழ்வைச் செய்து தமிழர்கள் தாங்கள் பிற உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர்களாக, அவற்றின் நலனில் அக்கறை உள்ளவர்களாக.. அவற்றுக்கு நன்றி செய்யும் பரோபகாரிகளாக இருந்ததையும், இருப்பதையும் வெளிக்காட்டியே வந்துள்ளனர்.

இவ்வளவு தனித்தன்மைகளைக் கொண்ட தைப்பொங்கல் பண்டிகையை.. இன்று தமிழர்களின் புத்தாண்டாக பிரகடனம் செய்வதால் விளையப் போகும் நன்மைகள் என்ன என்று பார்த்தால்.. வெறும் குழப்பங்களே என்பதுதான் முடிவாக இருக்க முடியும்.

ஏலவே ஆங்கிலேய முறைப்படி ஜனவரி 1 இல் புத்தாண்டு உதயமாகிறது. உலக மக்கள் அனைவருக்காகவும் அது உதயமாகிறது. அதற்குள் 14 நாள் கழித்து தமிழருக்கு என்று ஒரு புத்தாண்டைப் பிறப்பிப்பதனால் எந்த நிர்வாகப் பயனும் கிடைக்கப் போவதில்லை. உலகம் முழுவதும் அரச, தனியார் நிர்வாகங்கள் என்பது ஆங்கிலேய கால-அட்டவணைப்படியே நிகழ்கிறது. அப்படி இருக்க ஏன் இந்த மாற்றம்..??! இது உண்மையில் அவசியம் தானா..??!

உண்மையில் இது சில அரசியல் நோக்கங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. பொங்கல் திருநாளின் தனித்துவத்தை இந்தப் புத்தாண்டுப் பிரகடனம் இன்னும் ஒரு நூறாண்டு காலத்துள் தலை கீழாக்கி.. சென்னை மெரினா கடற்கரையில் மதுபானம் அருந்தும் புத்தாண்டாகக் கொண்டாடக் கூடிய நிலையை தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் தமிழர்களின் பாரம்பரிய தைப் பொங்கல் தனது தனித்துவத்தை இழந்து அதன் அடையாளம் தொலைந்து அருகும் நிலையே தோன்றும்.

இன்று கூட நகரமயமாக்கலின் விளைவால் பொங்கல் திருநாளின் பெறுமதி புதிய சினிமாப் படங்களை தயாரித்து வெளியிடுதல் என்ற நிலைக்குள் மட்டுப்பட்ட அளவிலேயே நகர மக்களிடம் இருக்கிறது. பல நகர வாழ் மக்கள் பொங்கலின் தனித்துவச் சிறப்பை அறியாதவர்களாகவே பொங்கலைக் கொண்டாடியும் வருகின்றனர்.

கிராமிய மக்கள் குறிப்பாக உழவுத் தொழிலில் ஈடுபடும் மக்களே இன்றும் உணர்வு பூர்வமா பொங்கலின் தனிச் சிறப்பறிந்து அதைக் கொண்டாடி வருகின்றனர். இப்படியான ஒரு நிலையில்.. பொங்கலோடு புத்தாண்டு என்பதையும் புகுத்தி பொங்கலின் தனிச் சிறப்பை சீரழிக்கப் போகின்றனரே தவிர தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பது சுத்த பித்தலாட்டமாகவே தென்படுகிறது.

ஏலவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு (ஏறு தழுவதல்)என்னும் காளை அடக்குதல் போட்டியை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்காலத்துக்கு ஏற்ப அதன் பாரம்பரியத் தன்மை இழக்கப்படாது மாற்றி அமைக்க முற்படாமையால் அது இந்திய உச்ச நீதிமன்றத் தடைக்கு இலக்காகியுள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தைக் குறைக் கூறிப் பயனில்லை. ஆண்டுகள் தோறும் ஜல்லிக்கட்டால் மனித மரணங்களும் காயங்களும்.. மிருக வதைகளும் தொடர்ந்ததை கவனிக்காதிருந்த தமிழக அரசுகளே இவற்றுக்குப் பொறுப்பாகும்.

இதே போன்ற போட்டிகள் ஸ்பெயின், மெக்சிக்கோ போன்ற இடங்களில் நடைபெறும் போது அவர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி தமது பாரம்பரிய அடையாளத்தை நிலைநிறுத்துவதை இனம் கண்டும் தமிழக அரசுகள் பேசாமடைந்தைகளாக காலத்தை வீணடித்ததாலேயே இன்று தமிழரின் வீரப் பாரம்பரியம் நீதிமன்றத் தடைக்கு இலக்காகியுள்ளது. ஆனால் இந்த உண்மையைக் கூட புரியாது தமிழகத்தில் ஒரு தரப்பினர் பார்பர்னம்.. அது இதென்று பழைய பல்லவிகளைப் பாடிக் கொண்டிருக்கின்றனரே தவிர தடையை நீக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகளை உத்தரவாதங்களை செய்ய முற்படவோ அவை குறித்துச் சிந்திக்கவோ இல்லை.

வெறும் அரசியல் நோக்கோடு செய்யும் சில நகர்வுகள் நீண்ட காலப் போக்கில் தமிழரின் பாரம்பரிய இன அடையாளத்தையே இந்திய உபகண்டத்தில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அச்சம் இன்று எழுந்திருக்கிறது.

இந்த நிலையிலேயே இவ்வாண்டுக்கான தைப்பொங்கலை வரவேற்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது. ஈழத்திலோ போர் மேகம் தைப்பொங்கலை குருதிப் பொங்கலாக்கிக் கொண்டிருக்க தமிழகத்திலோ அது வேடிக்கைப் பொங்கலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிச் சீரழிகிறது.. தமிழரின் பாரம்பரியம். இதுதான் தமிழரின் தலைவிதியோ என்னோ..!

இக்கட்டுரை 2008 ஜனவரியில் எழுதப்பட்டது.

http://kundumani.blo…og-post_13.html

Edited January 16, 2012 by nedukkalapoovan


தமிழ் மாதங்களின் சிறப்புகள்         

நண்பர்களுக்கு வணக்கம் ,ஒரு ஆண்டில்  12 மாதங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ,நாம் கடைபிடிக்கும் இந்த மாதங்கள் எதனை அடிப்படையாகக்  கொண்டது ,அந்த மாதங்களின் சிறப்புகள் என்ன ,நம் பழந்தமிழர்கள் மாதங்களை எவ்வாறு கழித்தார்கள்என்று ,நிறைய கேள்விகள்  எழும் அல்லவா?   இத்தனையும் இந்த கட்டுரை மூலமாக அறியலாம்  வாருங்கள்!
            முதன் முதலில் ஆண்டுகள் ,மாதங்களை கண்டறிந்தவர்கள் மெசபடோமியர்கள் என்பது ஆங்கில மாதங்களை பயன்படுத்துவோரின்
கருத்தாகும் , நமது தமிழர்களை பொறுத்தவரை மிகவும் பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
              தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு ஆகும்.அவையாவன சித்திரை,வைகாசி,ஆனி ,ஆடி ,ஆவணி ,புரட்டாசி ,ஐப்பசி ,கார்த்திகை ,மார்கழி ,தை ,மாசி ,பங்குனி என்பனவாகும் .பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள், பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும் , பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள் .அவையாவன சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும்  வழங்கப்படுகிறது .
சூரிய மாதம் :
                         சூரிய மாதங்கள் பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும்.அவையாவன
   சூரிய மத பெயர்                  சூரிய மாத தமிழ்ப் பெயர்

  மேஷம்                           மேலம்

விடை                             விடை

மிதுனம்                          ஆடவை

கர்க்கடகம்                      கடகம்

சிம்மம்                            மடங்கல்

கன்னி                              கன்னி

துலாம்                             துலை

விருச்சிகம்                      நளி

தனுசு                                சிலை

மகரம்                               சுறவம்

கும்பம்                              கும்பம்

மீனம்                                 மீனம்

சந்திர மாதம் :

                          ஒரு சூரிய மாதத்தில் சந்திரன் பூரணை  (பௌர்ணமி)அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் சித்திரை  நட்சத்திரம் வரும்என்பதால் சூரிய மாதமான மேஷ மாதத்திற்கு உரிய சந்திர மாதம் சித்திரையாகும் .

நாம் சந்திர மதங்களின் பெயர்களிலேயே  மாதங்களை கடை பிடிக்கிறோம் ,அவையாவன  நாம் நன்கு அறிந்த

சித்திரை

வைகாசி

ஆனி

ஆடி

ஆவணி

புரட்டாசி

ஐப்பசி ,

கார்த்திகை

மார்கழி

தை

மாசி

பங்குனி    ,ஆகியவையாகும்.

ஒரு காலகட்டத்தில் நமது தமிழகத்தின் ஒரு பகுதியாக   இருந்த தற்போதைய அண்டை மாநிலமான கேரளாவில் சூரிய மாதப் பெயர்களே பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் மாதங்களும்,பருவ காலங்களும்  :

நமது பண்டைய தமிழர்கள் பருவ நிலைக்கு ஏற்றார்  போல் காலங்களை வகுத்து வைத்துள்ளனர் ,அவையாவன

இளவேனிற்காலம் ,முதுவேனிர்க்கலம் ,கார்காலம்,                                                     குளிர்காலம்,முன்பனிக்காலம் ,பின்பனிக்காலம் ‘.

இந்த ஆறு பருவ காலங்களும் ,ஒரு பருவகாலத்திற்கு  இரண்டு மாதங்கள் என வகுக்க பட்டுள்ளது  கீழ் கண்டவாறு ,

இளவேனிற்காலம்               -சித்திரை ,வைகாசி

முதுவேனிர்க்கலம்               -ஆனி ,ஆடி .

கார்காலம்                                  -ஆவணி ,புரட்டாசி ,

குளிர்காலம்                              -ஐப்பசி கார்த்திகை

முன்பனிக்காலம்                    – மார்கழி,தை

பின்பனிக்காலம்                      -மாசி ,பங்குனி

சங்க கால பருவகாலங்களை நாம் எவ்வாறு வழங்கி வந்துள்ளோம் என்பதற்கு நமது சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றது,சங்ககாலத்தில் கோடைக்காலம் என்பது முதுவேனிற்  காலம் என வழங்கப்பட்டு வந்தது ,தொல்காப்பியர், காலத்தை பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும் இரண்டாக வகைப்படுத்திக்  கூறியுள்ளார் ,இதனை

‘‘பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா
இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே’’

என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது .
மேலும் ,

“நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே ”

பொருள்:

நடுவு நிலைத் திணையாகிய  பாலையாவது நண்பகற்பொழுது வேனிர்க் காலத்தோடு புணர்ந்து நின்ற வழிக் கருதிய நெறியை உடைத்து .

என்ற இந்தப் பாடல் மூலம் வேனிற்காலத்தை பற்றி நம் முன்னோர் நமக்கு உணர்த்தியது தெரிய வருகிறது
தமிழ் மாதத்தின்  சிறப்புகள் :
தமிழர்கள் ஒவொரு மதத்திலும் அதன் கால நிலைக்கு ஏற்றார் போல் தமது வாழ்க்கை முறையை அமைத்து கொண்டுள்ளனர் ,எடுத்துக் காட்டாக கால நிலைக்கு ஏற்றவாறு விழாக்களை அமைத்து கொண்டும்,பல நெறி
முறைகளை கடைபிடித்து கொண்டும் வாழ்ந்து வந்துள்ளனர்.(picture 1)
சித்திரை:
                      இராசிச் சக்கரத்தில் மேட ராசியில்  சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில்  ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும் .
                      சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள்  புத்தாண்டாகக்  கொண்டாடுவர்.
                       மேலும் இந்த மாதத்தில் இந்திரா விழா என்ற மிகப்பெரும் விழாவையும் பழந்தமிழ் மக்கள் கொண்டாடி வந்துள்ளனர்,               இந்திரவிழா  என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான்.
              இவ்விழாவைத் “தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் “என்று சாத்தனார் கூறுகின்றார்.
வைகாசி மாதம் :
                    தமிழர் காலக் கணிப்பு முறையின்படி ஆண்டின் இரண்டாவது மாதம் வைகாசி ஆகும். இம்மாதப் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரையொட்டி ஏற்பட்டது. சூரியன் மேட இராசியைவிட்டு, இடப இராசிக்குள் புகும் நேரம் வைகாசி மாதப் பிறப்பு ஆகும். சூரியன் இடப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும்.
                     இம்மாதத்தில் தமிழர்கள் தமிழ்கடவுளான முருக பெருமானின்
பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் விழா  எடுத்து அனைவரும்  ஒன்று கூடி மகிழ்கின்றனர் .
ஆனி மாதம்:
                              ஆண்டின் மூன்றாவது மாதம்ஆனி ஆகும். சூரியன் மிதுன இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான  நாட்கள் ஆனி  மாதமாக கணக்கிடப்படும்  .சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி.  தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம்  அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது .இந்த மாதத்தில் கோவில்களில் கேட்டை நட்சத்திர நாளன்று சிறப்பு பூஜைகள் செய்வது பழந்தமிழரின்  வழக்காகும்,
ஆடி மாதம் :
                            தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். சூரியன் கர்க்கடக இராசியுட்புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
                முற்காலத்தில் தமிழர் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுவர். தற்காலத்தில் இவ் வழக்கம் அருகிவிட்டது. இம்மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியன கொண்டாடப்படுகின்றன.
ஆவணி மாதம்:
                            ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆவணி ஆகும். சூரியன் சிங்க இராசியுட் புகுந்து அங்கே வலம் வரும் காலமான 31 நாள், 02 நாடி, 10 விநாடிகளைக்கொண்டதே இம் மாதமாகும். இம்மாதத்தில் நம் முன்னோர்களையும் ,இறைவனையும் வணங்கி வேதங்களை படிக்க உகந்த நாள் என அறியப்படுகின்றது.
புரட்டாசி மாதம் :
                    ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்
                       இந்த புரட்டாசி மாதத்தில் பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களால்
உடலுக்கு ஏற்றவாறு உணவு கொள்ள வேண்டும் என்பதற்காக பெரியோர்கள் விரைவில் செரிமானம் ஆகாத அசைவ உணவை தவிர்க்கவே விரதம் வைத்ததாக ஒரு கருத்தும்  உள்ளது.
ஐப்பசி மாதம்:
தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலா இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள்
ஐப்பசி  ஆகும்.
‘‘ஐப்பசியதனிலோடுந் நீர்வரத்து
குன்றுமதனோடு நீருக்கு அலைதலுஞ்
சேரும். தானியமெலாம் பொன்னுக்கு
நிகரொப்ப நிற்கும் மெய்யே’’
-என்ற பாட்டிலிருந்து இந்த ஐப்பசி மாதத்தில் ஆற்று நீர்ப் பெருக்கு குறைந்து, நீருக்கு சற்று தட்டுப்பாடு மேலோங்கி நிற்கும். தானியங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருளும் விலை கூடிட ஏதுவாகும் என்றறியலாம்.
கார்த்திகை மாதம்  :
                                                             ஆண்டின் எட்டாவது மாதம் கார்த்திகை ஆகும். தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியனானது தமிழில் தேள் என்று சொல்லப்படும் விருச்சிக இராசியுள்புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடிஅளவே இம் மாதமாகும்.
                 தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூமிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.இந்த மதத்தை கீழ்க்கண்ட பெயர்களிலும் அழைக்கலாம்,
தெறுகால்,தேள்,விருச்சிகம்.
கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள்தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.இந்நாளை அங்கி,அளக்கர்,அளகு,அறுவாய்,ஆரல்,இறால்,எரிநாள்,நாவிதன் என்ற பெயர்களாலும் அறியலாம்.
மார்கழி  மாதம்:
                     தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவதுமாதம் ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்.மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும்திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். [1][2]. இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். [3]
அத்திருப்பாவை பாடலில் ஒன்றானது ,
          மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
தை  மாதம் :                ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும்.சூரியன் மகர இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்.  தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களுக்கே சிறப்பான பண்டிகையாதலால் தமிழர் திருநாள் என்றும், அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.சங்க காலத்தில் பெண்கள் தை மாதம் சில வேண்டுதல்களை கடவுள் முன்பு வைப்பார்கள் ,அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை  பரிபாடல் வரிகளில் பார்ப்போம் [பரிபாடல் 11],
“கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும்,‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும்,‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும்
“எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும்.பல பூக்களை நாடும் வண்டுகள் போல,எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும்.எம் கணவரும்,யாமும், கிழவர்,கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம்,பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம்[பேதை,  பொதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை & பேரிளம் பெண் ] எய்துமளவும்,இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”என்கிறது
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply