புறநானூறு – பொன்மொழிகள்

புறநானூறு – பொன்மொழிகள்—பகுதி -1

                      பகுதி -1

நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்

                                                                                      இரும்பிடர்த் தலையார், புறநா. 3 : 14

நிலமே பிறழினும் நின்  ஆணையாகிய சொல் பிறழாது

நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது

முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்

இன்மை தீர்த்தல் வன்மையானே

                                                                      இரும்பிடர்த் தலையார், புறநா.3 : 24 – 26

 வேந்தே ! இரவலர்தம் மனக் கருத்தை முகக் குறிப்பினாலே உணர்ந்து  அவர்தம் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உடையவன்  என்பதால்  நின்னைக் காணும் விருப்பத்துடன் இரவலர் வருவர்.

பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே

                                                                              ஊன்பொதி பசுங்குடையார்,புறநா. 10 :  2

 பிறரைக் குறை கூறுவார்தம் சொற்களை உண்மையெனக் கொள்ள மாட்டாய்.

அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை

                                                              ஊன்பொதி பசுங்குடையார்,புறநா. 10 : 7,8

அமிழ்தினும் இனிய உணவை வரும் விருந்தினர்க்கு அளவின்றி வழங்கும் குற்றமற்ற மனை வாழ்க்கை.

நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய

வசை பட வாழ்ந்தோர் பலர் கொல் …

                                                                     நெட்டிமையார்,புறநா.15 : 15,16

பெரும ! ஆவலால் வெற்றி பெற விழைந்த பகைவர் நின்னை எதிர்த்துவெற்றி பெறமுடியாமல் பழிஎய்தி இகழ்ச்சியுடன் உயிர் வாழ்வாராயினர். அவ்வாறு உயிர் வாழ்பவர் பலரோ ?

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே

                                                                       குடபுலவியனார்,புறநா.18 :  21 – 23

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப் படைத்தவர் ஆவர்.

நீரின்று  அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

                                                                     குடபுலவியனார்,புறநா.18 : 18,19

நீரின்றி அமையாத உடலுக்கு  உணவே முதன்மை ;  உடலுக்கு உணவு கொடுத்தோர் உயிரைக் கொத்தவராவர்.

                             .

நிலம் நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

                                                              குடபுலவியனார்,புறநா.18 : 28-30

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலை பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர்  உலகம் உள்ளவரை தம் பெயரை நிறுத்திய புகழை அடைவர். அவ்வாறு செய்யாதவர் இவ்வுலகோடு தம்பெயரைச் சேர்த்த புகழை அடையார்.

புதுப் புள் வரினும் பழம் புள் போகினும்

விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை

                                         குறுங்கோழியூர் கிழார்,புறநா.20 : 18,19

புதிய பறவை வந்தாலும் பழைய பறவை அவ்விடம் விட்டு அகன்றாலும் அத்தகைய தீய குறிகளால் மன நடுக்கமுறாத காவலை உடையவனே.

திருவில் அல்லது கொலைவில் அறியார்

நாஞ்சில் அல்லது படையும் அறியார்

                                                       குறுங்கோழியூர் கிழார்,புறநா.20 : 10,11

மழைவளம் தரும் வானவில்லைத் தவிர கொலை செய்யும் போர்வில்லினைஅறியார்; உழுபடைக் கருவியாகிய கலப்பையைத் தவிர வேறு  கொலைப்படைக் கருவி ஒன்றனையும் அறியார்.

நிற்பாடிய அலங்கு செந்நாப்

பிறர் இசை நுவலாமை

ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ

                                                   குறுங்கோழியூர் கிழார்,புறநா.22 : 31- 33

நின்னைப் பாடிப் பரவிய செவ்விய நாக்கு, பின்னும் பிறருடைய புகழைப் பாடாதவாறு செல்வத்தை வழங்கும் எம் அரசனே.

புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப என்ப தம் செய்வினை முடித்து …

                                          உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.27 : 7 – 9

புலவரால் பாடப்பெறும் புகழுடையோர் வலவனால் இயக்கப்படாது இயங்கும் வானவூர்தியினைத் தாம் செய்யும் நல்ல செயல்களை முடித்தபின் அடைவர் என்பர் அறிவுடையோர்.

நல்ல செயல்களைச் செய்து முடித்தோர் புலவரால் பாடப்பெறும் புகழுடையோர் ஆவர். அவர்கள் வலவனால் இயக்கப்படாத வானவூர்தியினை அடைவர் என்பர் அறிவுடையோர்.

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெரும நின் செல்வம்

ஆற்றாமை நிற் போற்றாமையே

                                உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.28 : 15 – 17

நீ வழங்கும் செல்வம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் ஆற்றுதற்கு உதவும். அவ்வாறு ஆற்றாதார் நின்னைப் போற்றாதாரே.

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்

                                     உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.29 : 11,12

நல்வினையால் வரும்  நன்மையும் தீவினையால் வரும்  தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையவன் ஆகாமல் விளங்குக.

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல

                                                               கோவூர் கிழார்,புறநா. 31 : 1, 2

சிறப்பினை உடைய பொருளும் இன்பமும் அறவழிப்பட்டுச் சிறப்புறுதல் போல.

நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென

அறம் பாடிற்றே ஆயிழை கணவ

                                                         ஆலத்தூர் கிழார்,புறநா.34 : 5 – 7

நிலம் தலைகீழாகப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நன்றியை மறந்தவர்க்கு அத்தீவினையிலிருந்து உய்வதற்கு வழியில்லை என அற நூல் கூறும்.

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்கும் இக்கண் அகன் ஞாலம்

                                                    வெள்ளைக்குடி நாகனார்,புறநா.35 : 27 – 29

மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணானசெயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும்  இவ்வுலகம் அரசரைப்  பழித்துரைக்கும்.

முறை வேண்டு  பொழுதில் பதன் எளியோர் ஈண்டு

உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே

                                                    வெள்ளைக்குடி நாகனார்,புறநா.35 : 15, 16

 நீதி  வேண்டிய காலத்துக் காட்சிக்கு எளியராய் வந்து நீதி வழங்கும்மன்னர், மழைத் துளியை  விரும்பியவர்க்குப் பெருமழை கிடைத்தது போன்றவர்.

ஒரு பிடி படியும் சீறிடம்

எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே

                                                               ஆவூர் மூலங்கிழார்,புறநா.40 : 10, 11

பெண் யானை ஒன்று தங்கும் அளவுடைய இடத்தில்  ஏழு ஆண்யானைகளைக் காக்கின்ற உணவு வளமுடைய நாட்டிற்கு உரியவனே.

மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி

நிலவரை இழிதரும் பல் யாறு போல

புலவர் எல்லாம் நின் நோக்கினரே

                                                                 இடைக்காடனார்,புறநா.42 : 19 – 21

மலையினின்று கீழிறங்கிக் கடலை நோக்கிப் பாயும் ஆறுகள் போலப் புலவர்கள் நின்னையே நோக்கிக் கூடுவர்.

தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்

                                                           தாமப்பல் கண்ணனார்,புறநா. 43 : 18

தமக்குத் தீமை  செய்தோரைப் பொறுத்தருளும் தலை

பால் இல் குழவி அலறவும் மகளிர்

பூ இல் வறுந்தலை முடிப்பவும் நீர் இல்

வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்

இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்

                                                    கோவூர் கிழார், புறநா. 44 : 6 – 9

பால் இல்லாது குழந்தைகள் அழுகின்றன; மகளிர் பூவின்றி வெறுங் கூந்தலை முடிக்கின்றனர்; நல்ல வேலைப்பாடு அமைந்த வீட்டிலுள்ளோர் நீர் இல்லாது வருந்திக் கூவுகின்றனர். இனியும் இங்கே தங்கியிருத்தல் கொடுமையன்றோ?

நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே

ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே

                                                                 கோவூர் கிழார், புறநா. 45 : 3 – 5

சோழவேந்தே ! உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது; உன்னுடன் போரிடுவோன் மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது. உம்முள் எவர் ஒருவர் தோற்றாலும் தோற்பவர் உம் சோழர் குடியினரே.

வரிசைக்கு வருந்தும் இப்  பரிசில் வாழ்க்கை

பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே …

                                                               கோவூர் கிழார், புறநா. 47 : 6, 7

தம்மை ஆதரிப்பாரை நோக்கி வருந்தி வாழும் பரிசில் வாழ்க்கை உடைய புலவர்கள், பிறருக்குத் தீங்கு செய்ய அறிவாரா எனில், அறியார்.

இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

                                                                மோசிகீரனார், புறநா. 50 : 14,15

            இந்த அகன்ற உலகத்தில் பரந்த புகழுடையார்க்கு அல்லாது பிறர்க்கு உயர்நிலை உலகை அடைதல் இயலாது.


புறநானூறு –பொன்மொழிகள் – பகுதி -2

 

உடையோர் போல இடையின்று குறுகி

செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்

எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே

                 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன், புறநா. 54 : 2 – 4

எம் மன்னனின் ஊருக்கு உரியோர் போலக் காலம் பாராது,  பலமுறை அணுகி, அவனுடைய அவைக் களத்தே தலை நிமிர்ந்து புகுதல் எம்போன்ற இரவலர்க்கு எளிது

ஞாயிற்று அன்ன வெந்திறல் ஆண்மையும்

திங்கள் அன்ன தன் பெருஞ் சாயலும்

வானத்து அன்ன வண்மையும் மூன்றும்

உடையை ஆகி …

                                               மதுரை மருதன் இளநாகனார், புறநா. 55 : 13 –16

ஞாயிற்றைப் போல வெம்மையான ஆற்றலுடைய வீரமும் திங்களைப் போலக் குளிர்ந்த மென்மையும் வான் மழையைப் போலக் கொடைச் சிறப்பும் உடையவனாகுக.

காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்

ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது

இன்றே போல்க நும் புணர்ச்சி …

                        காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,புறநா.58 : 26 – 28

அன்பு பொருந்திய மனங்களுடைய உம்மிடையே புகுந்து உம்மைப் பிரிப்பதற்கு அயலார் திரிவர்;  அவர்தம் பொய்ம்மொழிகளைக் கேளாமல் இன்று போல் உங்கள் நட்பு என்றும் நிலைப்பதாகுக.

ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு

திங்கள் அனையை எம்மனோர்க்கே

                           மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், புறநா.59 : 6, 7

உன் பகைவர்க்கு வெப்பம் நீங்காது தோன்றும் ஞாயிறு போன்றவன்; எம் போன்று நின் அருள் பெற்றோர்க்குத் திங்களைப் போன்றவன்.

இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்

                                                                             கோவூர் கிழார், புறநா. 70 : 9

தண்ணீரும் உணவுமாகிய இருமருந்தைப் பசிப்பணிக்குத் தரும் நல்ல நாட்டிற்குத்  தலைவனாகிய கிள்ளிவளவன்.

செல்வை ஆயின் செல்வை ஆகுவை

விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்ன

                                                                   கோவூர் கிழார், புறநா. 70 : 16, 17

விறகு வெட்டச் சென்றோர் பொன் பெற்றார் போல

நீ கிள்ளிவளவனிடம் செல்வாயானால் செல்வம் உடையவன் ஆவாய்

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக என் நிலவரை

            தலையலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், புறநா.72 : 13 – 16

 பகையை அழித்து என் மக்களை நான் காக்காவிடில் சிறந்த தலைமையும் மேம்பட்ட புலமையும் உடைய மாங்குடி மருதன் தலைவனாக, உலகத்தில் வாழும் தகுதி உடையோர் பலராலும் பாராட்டப்பட்ட சிறப்பினை உடைய புலவர் பலரும் என் நிலத்தைப் பாடாது நீங்கும் நிலை அடைவேனாகுக.

துஞ்சு புலி இடறிய சிதடன் போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே …

                 தலையலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், புறநா. 73 : 7, 8

 “ என்னை எதிர்ப்போர் உறங்கும் புலியைக் காலால் இடறிய பார்வையற்றவன் போல உயிர் பிழைத்தல் அரிது.”

குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளின் தப்பார்

                                                 கணைக்கால் இரும்பொறை, புறநா.74 : 1, 2

குழந்தை இறந்து பிறந்தாலும் தசைப்பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றை ஆள் அன்று என்று கருதார்; அவற்றையும் வாளால் வடுப்படுத்தி அடக்கம் செய்யும் முறைமையில் தவறார்.

குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்

சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே

                                                     சோழன் நலங்கிள்ளி, புறநா. 75 : 4, 5

குடிமக்களிடம் வரிவேண்டி இரக்கும் சிறுமை படைத்த உள்ளம் உடையவனும் மேம்பாடில்லாத ஆண்மை  உடையவனுமான ஒருவனுக்கு அரசு உரிமை கிடைத்தால் அது அவனுக்குத் தாங்க இயலாத சுமையாக விளங்கும்.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை

                                               இடைக்குன்றூர் கிழார், புறநா.76 : 1, 2

ஒருவனை ஒருவன் பகைகொண்டு கொல்லுதலும் ஒருவனிடம் ஒருவன் தோற்றுப் போதலும் புதிதாக நடப்பதன்று அது இவ்வுலகத்து  இயல்பாகும்.

புலி சேர்ந்து போகிய கல்லளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

                                                          காவற் பெண்டு, புறநா.86 : 4 – 6

புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவே, அவனைப் போர்க்களத்திலே காணலாம்.

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின் அகத்து அடக்கி

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையோ

                                                               ஒளவையார்,புறநா. 91 : 9 -11

 அதியமான், பெறுவதற்கு அரிதான சிறிய இலையை உடைய நெல்லிக்கனியை அதன் அரும் பயனை என்னிடம் கூறாமல் தன்  மனத்து அடக்கி எனக்கு இறப்பு வாராதிருக்க அளித்தனனே.

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

பொருள் அறிவாரா ஆயினிம் தந்தையர்க்கு

அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை

                                                                           ஒளவையார்,புறநா. 92 : 1 – 3

மழலை மொழி, யாழோசை போல இசை இன்பம் தருவதில்லை; காலத்துடன் பொருந்தி வருவதில்லை; பொருளும் அறிய இயலாது ஆயினும், தந்தையர்க்குத் தம் புதல்வர் மழலையிடம் அருள் இருக்கும் ஆகவே இன்பமுடன் ஏற்பர்.

ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்

பல நாள் பயின்று பலரொடு செல்லினும்

தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ

                                                                   ஒளவையார்,புறநா.101 : 1-3

ஒருநாள் அல்ல இரண்டுநாள் அல்ல பல நாளும் பலரொடும் மீண்டும் மீண்டும் சென்றாலும் முதல் நாள் போலவே அன்பு காட்டும் பண்புடையவன்.

அலத்தல் காலை ஆயினும்

புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே

                                                                 ஒளவையார்,புறநா. 103 : 10,11

உலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமை உடையவன் அவன். அவன் தாள் வாழ்க.

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல் இலை எருக்கம்  ஆயினும் உடையவை

கடவுள் பேணேம் என்னா …

                                                                         கபிலர், புறநா. 106 : 1-3

நல்லனவென்றும் தீயனவென்றும் அல்லாத குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையினையும் உடைய எருக்கம் பூவாயினும் ஒருவன் சூட்டுவதைக் கடவுள் ஏற்க மாட்டோம் என்று கூறுவதில்லை.

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே

                                                                        கபிலர், புறநா. 107 : 3,4

இவ்வுலகைப் பாதுகாப்பதற்குப் பாரி ஒருவன் மட்டுமல்லன்; மழையும் உண்டு.

பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே

                                                                           கபிலர், புறநா. 121 : 7

புலவர்தம் புலமைத் திறம் கருதாது எல்லாரையும் பொதுவாக நோக்குதலைத் தவிர்ப்பாயாக.

வடமீன் புரையும் கற்பின் மடமொழி

அரிவை தோள் அளவு அல்லதை

நினது என இலை நீ பெருமிதத்தையே

                                                                     கபிலர், புறநா. 122 :  8-10

வட திசைக்கண் தோன்றும் விண்மீனை( நட்சத்திரம் ) ஒக்கும் கற்பினையும் மென்மொழியினையும் உடைய நின் மனைவியின் தோள் மட்டுமே நினக்கு உரியது. நின் உரிமைப் பொருள் என்று சொல்ல வேறு ஒன்றும் இல்லை என்ற போதும் நீ பெருஞ் செருக்குடன் விளங்குகின்றாயே.

இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்

                                            ஏணிச்சேரி முடமோசியார்,புறநா.134 : 1,2

 ஆய் என்னும் மன்னன் இப்பிறப்பில் செய்தது மறுப்பிறப்புக்கு உதவும் என்று கருதி அறச் செயல் செய்யும் வாணிகன் அல்லன்.

எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்

பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப …

                                           துறையூர் ஓடைக்கிழார்,புறநா. 136 : 20,21

வறுமையுற்ற எங்களுக்குக் கொடுப்போர் பயன் கருதாது பிறர்க்குக் கொடுத்தலாகிய தன்மையால் வள்ளல் ஆவர். வறுமை உற்றார்க்குக் கொடுக்காமல் பிறர்க்குக் கொடுப்போர் பயன் கருதி வழங்குதலால் அவர் தமக்கே வழங்கிக் கொண்டவராவர்.

வாழ்தல் வேண்டிப்

பொய் கூறேன் மெய் கூறுவல்

                                                  மருதன் இளநாகனார்,புறநா.139 : 5,6

உயிர் வாழ்தலை விரும்பிப் பொய் சொல்லேன்;  உண்மையே கூறுவேன்.

பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி

செய்யா கூறிக் கிளத்தல்

எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே

                                                               வன்பரணர், புறநா. 148 : 5-7

பெருமை இல்லாத மன்னரைப்பாடி, அவர் செய்யாதனவற்றைச் செய்ததாகப் புகழ்ந்து கூறுதலை அறியாதது எம்முடைய சிறிய செவ்விய நாக்கு.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply