சைவத் தமிழர்களால் மட்டுமே தமிழினத்தை முன்னேற்ற முடியும்? பவுத்த சிங்களவர்களும் அதையேதான் சொல்கிறார்கள்!

சைவத் தமிழர்களால் மட்டுமே தமிழினத்தை முன்னேற்ற முடியும்? பவுத்த சிங்களவர்களும் அதையேதான் சொல்கிறார்கள்!

நக்கீரன்

மேற்கு நாடுகளில்  உறுதியான ஆட்சிக்கு முக்கிய காரணம் அந்த நாடுகள் மதசார்பற்ற நாடுகளாக இருப்பதுதான். இந்த நாடுகள் மதத்தையும் அரசையுயும் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஐரோப்பாவை போப்பாண்டவர்களே ஆட்சி செய்தார்கள். அதன் போது பல முரண்பாடுகள் எழுந்தன. மதநம்பிக்கையற்ற அறிவியலாளர்கள்  சிறையில்   அடைத்தார்கள். அல்லது தூக்கிலிடப்பட்டார்கள். அல்லது கம்பத்தில் கட்டி வைத்து தீ மூட்டிக் கொல்லப்பட்டார்கள்.

1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno)  அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584 இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு எதிரான செய்திகள் என 1592 இல் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு 17.2.1600இல் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.

போலந்து அறிவியலாளர் நிக்கோலசு கோபர்னிகசு (Copernicus, Nicolaus;1473-1543) செருமானிய அறிவியலாளர் யோன்னசு கெப்ளர் (Kepler, Johannes; 1571-1630) உடன் இணைந்து பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். எனினும், சமயவாதிகளின் தொல்லைகளால் உண்மைகளை வெளியிட முடியாமல் நண்பர்களின் துணையால் அவர் மறைவிற்குப் பின்பே 6 நூல்கள் வந்தன.

இவர்களின் வழியில் இத்தாலிய அறிவியலாளர் கலிலியோ (1564-1642), கோபர்னிகசு கருத்தான பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதை மேலும் ஆராய்ச்சி செய்து நிலைநாட்டிப் பரப்பி வந்தார். 1632 இல் இவற்றை விளக்கி இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய சொற்போர் (Dialogue of The Two Chief World Systems) என்னும் நூலை வெளியிட்டார். இதனால் வீட்டுச் சிறை வைக்கப் பெற்றார்; 1637இல் கண்பார்வையை இழந்தார்; 1642 இல் வீட்டுச் சிறையிலேயே உயிரிழந்தார்.

உலக சைவத் திருச்சபை வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் “சைவத் தமிழர்களால் மட்டேமே தமிழினத்தை முன்னேற்ற முடியும்” என்று சொல்லப்பட்டுள்ளது. இது மதங்களுக்கு இடையே வெறுப்பை, பாகுபாட்டைக் காட்டி முரண்பாட்டை வளர்ப்பததாகும். கனடாவில் ஒருவரது இனம், சமயம், மொழிஈ பண்பாட்டின் அடிப்படையில் வேறுபாடு காட்டுவது சட்டப்படி குற்றமாகும். செய்தித்தாள்கள் ஏன் இப்படிப்பட்ட விளம்பரங்களைப் பிரசுரிக்கின்றன?

“சைவத்தமிழர்களால் மட்டுமே தமிழினத்தை முன்னேற்ற முடியும்” என்றால் கிறித்துவத் தமிழர்களை என்ன செய்வது? அவர்களை ஓதுக்கிவிடுவதா? கழுவேற்றுவதா?  போர்க் காலத்தில் மன்னார் ஆயர் யோசேப் இராயப்பு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சு, கைது, சித்திரவதை, கொலை போன்றவற்றுக்கு எதிராக அவர்தான் ஓங்கிக் குரல் கொடுத்தார். நல்லூர் ஆதீனத்தைவிட அவரின் சமூகப் பணி சிறப்பாக அமைந்தது. தமிழர்களை மத அடிப்படையில் பிரிக்க நினைப்பது மடமை. மதம் என்பது தனிப்படைவர்களது விருப்பு, வெறுப்பு. தமிழர்களது அடையாளம் மொழியே யொழிய மதம் அல்ல.

தமிழர்கள் சைவர்களாக மட்டுமல்ல பவுத்தர்களாக, சமணர்களாக இருந்திருக்கிறார்கள். தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சக்தியை வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் கணாபத்தியம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.

இந்த ஆறு கடவுளர்களில் முருகனை மட்டும் தமிழ்க் கடவுள் என வழிபடும் வழக்கம் இருக்கிறது. திருமால் வழிபாடும் பழமையானதே. எனவே கடவுளர்களில் சிவன் மட்டும் பெரிய கடவுள் என்பது பொருந்தாது. சிவ வழிபாடு மட்டுமே சரியானது ஏனைய வழிபாடுகள் சிறு தெய்வ வழிபாடுகள் என்பதும் பொருந்தாது. அதனால் பலன் இல்லை என்பதும் பொருந்தாது.

முருகன் சிவனது மகன் என்றே புராணங்கள் போற்றுகின்றன. அப்படியென்றால் தகப்பன் சாமியை மட்டும் குப்பிட வேண்டும் தனயன் சாமியைக் கும்பிடக் கூடாது என்பது வியாபார நோக்கம் கொண்டது. தந்தைக்கு பிரணவ மந்திரத்தை முருகன் உபதேசித்தான் என்றே புராணங்கள் கூறகின்றன.

 தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிமலையில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்ச்சி ஆகியன பெறலாம் என்கிறார்கள்.

தமிழர்களை சைவம், கிறித்தவம் எனப் பிரிப்பது மடமை. அதேபோல் சைவத்தை சிவமதம் என்றும் ஏனைய சமயங்களும் கடவுளரும் சில்லறைக் கடவுகளர் என்பதும்   பேதமை! 

சிவன் ஒன்றே முழுமுதற் கடவுள் என்றால் சங்கரர் சேர்த்துவைத்த ஏனைய மதங்களான வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், கணாதிபத்தியம் பிரிந்து சென்று விடும்.

ஒளவையார் சிவனையும்,விஷ்ணுவையும் ஒன்றாகத்தான் பாடி இருக்கிறார்

மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து.            (6)

மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு.                (7)

இலச்சுமி,சரஸ்வதி,பார்வதி,அக்னி,சூரியன்,சந்திரன் எல்லாம் ஏழு சக்திகள் என்று குறிப்பிட்டிருக்கிறார். (ஞானக்குறள் – வீட்டு நெறிப்பால்,  – ஔவையார்)

இந்த வாதங்களுக்கு முக்கிய காரணம் மனிதனே கடவுள், மதம், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எல்லாவற்றையும் படைத்தான்.

உலக  சைவத் திருச்சபை ஏன் இந்த மாநாட்டை சிவபூமியில் நடத்தாமல் கிறித்தவ பூமியில் நடத்துகிறது? அப்படி நடத்திக் கொண்டு கொஞ்சமேனும் வெட்கம், துக்கம் இன்றி “சைவத் தமிழர்களால் மட்டுமே தமிழினத்தை முன்னேற்ற முடியும்”  என்று சொல்கிறது?

தமிழர்களை சைவர், கிறித்தவர் எனப் பிரித்துப் பேசுகிறது? அதுவும் கனடா போன்ற கிறித்தவ நாட்டில் இருந்து கொண்டு? அதன் வளங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு?

நாட்டில் உள்ள  சிங்கள – பவுத்தர்கள்,  பவுத்த நாடான இலங்கையை பவுத்த சிங்களவர்களால் மட்டுமே சிங்கள இனத்தை முன்னேற்ற முடியும்   என்கிறார்கள்.

அப்படியென்றால் பவுத்த  சிங்களவர்களுக்கும்  தமிழ்ச் சைவர்களுக்கும் என்ன வேற்றுமை?


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply