தமிழ்மக்களை தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் வாழ விடுங்கள்!

தமிழ்மக்களை தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் வாழ விடுங்கள்!

இராணுவ பிரசன்னம் எம்மை  அவமானப்படுத்துவது போல இருக்கிறது!

நாடாளுமன்றத்தில்  பாதுகாப்பு அமைச்சின் வரவு – செலவு திட்ட விவாதத்தில்  திரு இரா சம்பந்தன் உரை!

கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு – செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த  வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பார்கள்.

சம்பந்தரின் ஆங்கிலப் பேச்சைப் புரிந்து கொள்ளாத அரைவேக்காடுகள்தான் உடுக்கடித்துச் சாமி ஆடினார்கள்.

இங்கு வெளிவரும் உதயன் வார ஏடு விடுதலைப் புலிகள் மீது வசைபாடுவதில் “துரோகி” கே.பி. யை விஞ்சிவிட்ட இரா சம்பந்தன் என்று முன்பக்கத்தில் தலைப்புச் செய்தி போட்டது.

அதோடு நின்றுவிடாமல் “மகிந்தா அரசின் மனித உரிமை மீறல் சார்ந்த கொடுமைகளை சம்பந்தன் அய்யா அனுபவிக்கவில்லையா?” என்று கேள்வி கேட்டு ஆசிரிய தலையங்கம் வேறு  எழுதப்பட்டுள்ளது.

உதயன் ஆசிரியருக்கு ஆங்கிலம் மட்டுமட்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.  தெரியாமல் இருப்பது குற்றமல்ல.  தெரிந்தவர்களிடம் அதற்கான சரியான மொழி பெயர்ப்பை எடுத்திருக்க வேண்டும்.  சம்பந்தரின் 21 மணித்துளி பேச்சு காணொளி ஆக முதலில் வந்தது. பின்னர் அவர் நாடாளுமன்றத்தில் பேசியதை ஒரு வரி விடாது அரச இதழில் வெளிவந்தது.

புலிகளை நான் ஒரு போதும் ஆதரித்தது கிடையாது என்று நேற்றுவரை மார்தட்டிக் கொண்ட ஒருவர். புலி எதிர்ப்பாளர் என அடையாளம் காணப்பட்டவர்  எப்போது காகிதப் புலியாக மாறினார் என்பது தெரியவில்லை.

வி.புலிகள்  வன்னியில் உயிரோடு இருந்த போது அவர்களை  வசைபாடிக் கொண்டிருந்த ஒருவர் இப்போது இல்லாத வி.புலிகளை துதிபாடியிருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது. இது நல்ல முன்னேற்றம். இது தடங்கல் இன்றித் தொடர வேண்டும்.

ஆனால் இந்தப் புலி வேடம் உண்மையானதா போலியானதா என்பதுதான் விளங்கவில்லை. கண்ணில் இருந்து விழுவது ஆனந்தக் கண்ணீரா அல்லது நீலிக் கண்ணீரா என்பதும் தெரியவில்லை.

மகிந்த இராசபக்சேயின் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர் அதே இராசபக்சேயைக் கண்டு 70,000  க்கும் அதிகமான அப்பாவித் தமிழ்மக்களை குண்டுபோட்டு கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த அவரது  குருதி தோய்ந்த கைகளைப் பற்றிக் குலுக்கி   25,000  டொலர்களை அன்பளிப்பாகக் கொடுத்த கனடிய கனவான்களின் படங்களை முன்பக்கதில் போட்டு மகிழ்ந்தாரே? அது மறந்து போச்சா?

உதயன் அலுவலகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கப்பட்ட போது அவரது அலுவலகத்துக்கு ஓடோடிச் சென்று அதனைக் கண்டித்து கீதவாணிக்கு நேர்காணல் கொடுத்தவர் அந்த கனவான்களின் குழுவைச் சேர்ந்தவர் என்பதும் மறந்து போச்சா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்காத காரணத்தால்தான் தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக ரொறன்ரோ ஸ்ரார் நாளேட்டுக்கு செவ்வி கொடுத்திருந்தார். அதுவும் மறந்து போச்சா?

கனடாவுக்கான சிறீலங்கா தூதுவரின் வீட்டில் கிளாசும் கையுமாக நின்ற படங்கள் வெளிவந்ததே? அப்போது மகிந்த இராசபக்சேயின்  மனித உரிமை மீறல்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?  என்ன காரணம்? மயக்கமா? தயக்கமா?

உலகத்தமிழர் ஏட்டு ஆசிரியருக்கும் இதே சிக்கல்தான். அதாவது ஆங்கிலமொழிச் சிக்கல். அது குற்றமில்லை. ஆனால் வெளியில் காட்டுவது குற்றம்.

உலகத் தமிழர் ஏடு முன்பக்கத்தில் “அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பகிரங்க வேண்டுகோள் சம்பந்தர் மன்னிப்புக் கேட்க வேண்டும்”
என்ற தலைப் செய்தி போட்டது. இந்த அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வி.புலிகளது ஆதரவு அமைப்பு. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில்
சம்பந்தனை திருகோணமலையில் தோற்கடிக்க வேண்டும் மாவை சேனாதிராசாவையும் சரேஷ் பிரேமச்சந்திரனையும் யாழ்ப்பாணத்திலும் தோற்கடிக்க வெளிக்கிட்ட தமிழ் மக்கள் தேசிய முன்னணியை ஆதரித்து பரப்புரை செய்து முடிவில் மூக்குடைபட்டது நினைவிருக்கலாம்.

உள்ளுக்குள் 13 ஆம் பக்கத்தில் வீ.ஆர். வரதராஜா எழுதிய “சம்பந்தனின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது” என்ற கட்டுரை. 23 ஆம் பக்கத்தில் தாயத்தில் இருந்து துடிக்கும் ஒரு குரல் எழுதிய “ஈழத்தமிழருக்கு சாபக்கேடாக மாறிவரும் சம்பந்தன்”  அனாமதேயக் கட்டுரை.

எப்படியோ இப்படியான கட்டுரைகளை உலகத்தமிழர் ஆசிரியர் வெளியிட்டு தனது மன அரிப்பை வெளிக் காட்டிக் கொண்டுள்ளார். இது 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்கிறது.

இந்த அழகில் சம்பந்தன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் பதவி விலக வேண்டும் என்று கேட்க இந்த அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவைக்கு என்ன அருகதை இருக்கிறது? சம்பந்தருக்கு வாக்குப் போட்டவர்கள் கேட்டால் அதில் பொருள் உண்டு.  வெளியில் இயங்கும் இந்த அமைப்பு தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

அதே போல் ஜெர்மனியில் இருக்கும் வரதராஜா கிளிசோடம் சொல்கிறார். முன்னர் கிளிசோதிடங்கள் சொல்லி குப்புற விழுந்த வரலாற்றை வசதியாக மறந்து விட்டார்.

2010 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது  மழைக்கு முளைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியை  உலகத்தமிழர் ஏடும் அதேபாணியில் ஆதரித்து பரப்புரை செய்தது.  அதன் ஊதுகுழலான சிரிஆர் வானொலியும் இரவு பகல் ஊழையிட்டது. ஆனால் அந்த முன்னணி தேர்தலில் மண்ணைக் கவ்வியது. அதன் நட்சத்திர வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கட்டுக்காசை இழந்தனர். 2004 இல் நடந்த தேர்தலில் செல்வராசா கஜேந்திரன் பெற்ற 112,077 விருப்பு வாக்குகள்,  பத்மினி சிதம்பரநாதன் பெற்ற 68, 240  விருப்பு வாக்குகள்  கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் பெற்ற 67,077 விருப்பு வாக்குகள் திருநீலகண்டரின் திருவோடு போல்  மாயமாய் மறைந்தன. தேசிய யானை கூட மிதிவண்டியை மிதித்து மானபங்கப்படுத்தி விட்டது.

திரு சம்பந்தர் நாடாளுமன்றத்தில், பலத்த கூச்சல் குழுப்பத்துக்கு இடையில் பேசிய ஆங்கிலப் பேச்சின் முழுமையான தமிழ்மொழி பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படித்து விட்டுத் தீர்ப்புக் கூறுங்கள்.

 

நக்கீரன்


டிசெம்பர் 07, 2012

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

பல தசாப்தங்களாக வடக்குக் கிழக்கைச் சுட்டெரித்த போர் முடிவுக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.  போரைத் தங்கள் நினைவில் இருந்து தள்ளி வைத்துவிட்டுத் தங்கள் வாழ்வை மேம்படுத்தத் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.  வடக்குக் கிழக்கில் நிலைகொண்டுள்ள ஆயுதப்படைகள் வெளியேற வேண்டும் என்பதே தமிழ் மக்களது விருப்பம் என இந்த நாட்டில் சிலர் பிழையாக நம்புவதாகத் தெரிகிறது. அது சரியானதல்ல.

இந்த நாடு முழுதும்  இருப்பதைப் போன்று வடக்கிலும்  கிழக்கிலும் ஆயுதப் படைகள் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதனை நாம்  ஏற்றுக் கொள்கிறோம்.  அதனை  நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். கிழக்கிலும் வடக்கிலும் ஆயுதப் படைகளின் பிரசன்னம் தமிழ் மக்களை அடக்கி ஆளும் விதத்தில் இருக்கக் கூடாது.  தமிழ்மக்களை கீழ்மைப்படுத்தும் விதத்திலோ அல்லது அடிமைப்படுத்தும் விதத்திலோ அவர்கள் இந்த நாட்டில் சமத்துவமான குடிமக்கள்  அல்லர் என உணரும் வகையிலோ அல்லது அவர்கள் இந்த நாட்டில் இருக்கும் மற்றவர்களைவிட தாழ்வான  குடிமக்கள் என எண்ணுமாறோ இருக்கக்கூடாது என்பதையே நாம் கேட்கின்றோம்.  அப்படியான முறையில்  படைகளின் பிரசன்னம் இருப்பதை நாம் விரும்பவில்லை.

தமிழர்களாகிய நாங்கள் வடக்குக்  கிழக்கில்  தன் மானத்துடனும் கண்ணியத்தோடும் வாழ வழியிருக்க வேண்டும்.   அதேசமயம் ஆயுதப்படையினரும் தேவைப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் – நியாயமான, அவசியமான எண்ணிக்கையில் – வடக்கு, கிழக்கில் பிரசன்னமாகவிருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம். (குறுக்கீடுகள்.)

அய்யா, இந்தத் தருணத்தில் நான் தமிழர்களது  போராட்ட வரலாறு குறித்துப் பேசவேண்டி உள்ளது. தமிழர் போராட்டம் சுதந்திரத்துக்குச் சற்றுப் பின்னர் தொடங்கியது. அதற்கு நீண்ட வரலாறு உண்டு. அது  தொடங்குவதற்குப்  பல்வேறு காரணங்கள்,  பல்வேறு மனக்குறைகள் இருந்தன. அவற்றைப் பெரிய தலைவர்களான  காலம்சென்ற எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க,  காலம்சென்ற  டட்லி சேனநாயக்க போன்றவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.  பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கை இருந்தது. டட்லி சேனநாயக்கா –  செல்வநாயகம் உடன்படிக்கை இருந்தது. அந்த உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமே ஆனால் நாடு இன்று இருக்கும் நிலையில் இருந்திருக்காது. நாங்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்கள் அல்லர்.  நாங்கள் சட்டப்படியான,  சனநாயக அடிப்படையில்,  அறவழியில் அரசியல் போராட்டங்களையே முன்னெடுத்தோம்.

நாங்கள் சத்தியாக்கிரகம் செய்தோம்.  நாங்கள் அஹிம்சையைப் பின்பற்றினோம். நாங்கள் அதனை மேற்கொண்டபோது தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அது 1956  இல் நடந்தது, 1958 இல் நடந்தது, 1961 இல் நடந்தது, 1977 இல் நடந்தது, 1981 இல் நடந்தது. 1983 ல் திட்டமிட்ட தமிழர் இனப்படுகொலை அரங்கேற்றப் பட்டது. இவை மறுக்க முடியாதவை.

பிரிக்கப்படாத, அய்க்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் நியாயமான அரசியல் தீர்வொன்றுக்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். எனது தலைவர் செல்வநாயகம் இந்த நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்து எந்தக் கேள்விக்கும் இடமில்லை. அந்தப் பொருள்  குறித்து யாரும் மறுத்துக்கூற முடியாது.  எனவே அதுதான் எமது போராட்ட வரலாறு.

இப்படி சனநாயக வழியில்,  அறவழியில் முன்னெடுக்கப்பட்ட நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு உரிய இடமளிக்க மறுத்து, தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட படுகொலைகள் நீண்டகாலமாக நடந்தேறின.  இப்படியான  சூழ்நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது. .

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றதற்கான உண்மையான  சூழ்நிலையை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும்.  நான் எப்போதும் கொண்டுள்ள கருத்து என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள்  தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டது அல்ல.  உண்மை என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்மக்களது நியாயமான   அரசியல் பெருவிருப்புக்கு இடமளிக்கத்  தொடர்ச்சியாக மறுத்து வந்த அரசுகளாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்  உருவாக்கம் பெற்றதுதமிழ்மக்கள் அறவழியில், அமைதியான முறையில் சட்ட மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்த போது அவர்கள்  (அரச) வன்முறைக்கு ஆளானார்கள்.  அதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள்  உருவானதற்குக் காரணம். தமிழீழ விடுதலைப் புலிகள்  தோற்றம் பெற்றமைக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அதனை யாரும் மறுக்க முடியாது.

அந்த அமைப்பு,  குடிமக்களை – சிங்கள குடிமக்களை, தமிழ் குடிமக்களை, முஸ்லிம் குடிமக்களை – சிவிலியன் தலைவர்களை – தாக்கிய போதுதான்    அது பயங்கரவாத அமைப்பு என  வரையறை செய்யப்பட்டது.

அவர்கள் மனித உரிமைகளைக் கடைப்பிடிக்க வில்லை.  அவர்கள் ஒருபோதும் சனநாயகத்தைப் பின்பற்றவில்லை. இவைதான் அவர்கள் இழைத்த  தவறுகள்.  தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமைக்குப் பலர் சொந்தம் கொண்டாடுகின்றனர். சனநாயகத்தைப் பின்பற்றாததால் – மனித உரிமைகளைப் பின்பற்றாததால் – தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டார்கள். அதுதான் உண்மை என நான் கூறுகிறேன்.  எனது நண்பரும் அதிகம் மதிக்கப்பட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான  இலக்ஸ்மன் கதிர்காமரே தமிழீழழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.  விடுதலைப் புலிகளது செயற்பாடுகளை முடக்கினார்,   உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளது  கட்டமைப்புக்களை தகர்ப்பதில் முன்னணிப் பங்கு பணியாற்றினார்.  விடுதலைப் புலிகளை ஸ்ரீலங்கா தோற்கடிப்பதற்கு பன்னாட்டு  ஆதரவு முழு அளவில் கிடைத்தமைக்கு பெருமளவில் அவரே காரணம் ஆவர்.  இன்று இலக்ஸ்மன் கதிர்காமர் உயிருடன் இருப்பாரானால்  நடைபெறும் பல விடயங்கள் குறித்தும் இன்று கூறப்படும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் அவர் அதிர்ச்சி அடைந்திருப்பார். எனவே நாம் இதனை நினைவில் கொள்ளவேண்டும்.

அய்யா, எனது சொந்தத் தலைவர்கள், எனது சொந்தக்  கூட்டாளிகள் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டனர். நானும் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இடம்பெற்றிருந்தேன். ஏன்? நீங்கள் எங்களை விடுதலைப் புலிகளின் பதிலிகள் என்று அழைக்கின்றீர்கள்? விடுதலைப்  புலிகளால் கொல்லப்பட வேண்டியவர்களாக நாங்கள் இருந்தமையால்தானா நீங்கள் எங்களை அவர்களது பதிலிகள் என்று அழைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகளின்  கொலைப்பட்டியலில் நாங்கள் இடம்பெற்றிருந்த காரணத்தினால் தான் நீங்கள் எங்களை விடுதலைப் புலிகளின் பதிலிகள் என அழைக்கின்றீர்கள்? அவர்கள் போர் நிறுத்தத்த உடன்படிக்கைக்கு இணங்கி  பேச்சு வார்த்தை செயல்முறைக்குள் நுழைந்தபோது மோதலுக்கு  அரசியல் அடிப்படையில்  அமைதித் தீர்வு காண்பதற்கு  எல்லோரும் அவர்களோடு சேர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தமை இயற்கையானதே.

இப்போது விடுதலைப் புலிகள்  இல்லை. விடுதலைப் புலிகள் போய்விட்டார்கள்.  ஆனால், சிலர் தமிழர் சிக்கலும் அதோடு போய்விட்டதாகக் கருதுகின்றார்கள். தமிழர் சிக்கல் அப்படிப் போய்விட மாட்டாது. தமிழர்களின் சிக்கலுக்கு நியாயமான சாத்தியமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,  நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் வரை தமிழர் சிக்கல்  இருந்தே தீரும். விடுதலைப் புலிகளது  மறைவின் காரணமாக  தமிழர் சிக்கல் மேலும் அதிகமான தார்மீக வலிமையையும் கூடுதலான சட்டபூர்வ நியாயத்தையும் பெற்றுள்ளது.  தமிழர் சிக்கல்  வெறுமனே அகன்று விடாது.

இப்போது நான் மற்றொரு விடயத்தைக் குறிப்பிட விழைகிறேன். என்னைத் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது.  போரில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில்  என்ன தவறு உள்ளது? இந்த  ஆண்டு நொவெம்பர் 27  ஆம் நாள்,  முருகப் பெருமானுக்கு  இந்துக்கள் விளக்கேற்றி வணங்கும் முக்கிய சமய நாளாகவும் அமைந்துவிட்டது. கார்த்திகைத் தீபம் ஒரு சிறந்த திருவிழாவாகும்.  அது,  விடுதலைப் புலிப் போராளிகளது நினைவு நாளாகவும் இம்முறை அமைந்துவிட்டது.

ஒரு சகோதரன் உயிரிழந்த தனது சசோதரனுக்காகத் தீபமேற்றுவதில் என்ன தவறு உண்டு? ஒரு தாய் இறந்த தனது மகனுக்காக அல்லது ஒரு தமிழ்ப்பெண் இறந்த தனது கணவனுக்காக விளக்கேற்றுவதில் என்ன தவறு உள்ளது? ஜே.வி.பி. தங்களது நினைவுதின நிகழ்வைக் கடைப்பிடிக்கிறார்கள். அது குறித்து யாரும் முறைப்பாடு செய்ததில்லை.  எதுவும் செய்யப்படுவதுமில்லை. அதையே நாங்களும் ஏன் செய்ய முடிவதில்லை? அது எமது அடிப்படை உரிமை இல்லையா? அது உலகம் முழுவதும் நடக்கின்றது.

நல்ல நோக்கத்துக்காகவோ அல்லது தவறான நோக்கத்துக்காகவோ – நல்ல காரணத்துக்காகவோ – அல்லது தவறான காரணத்துக்காகவோ எதற்காகவாயினும் தங்கள் உயிரை அர்ப்பணித்துத் தியாகம் செய்தவர்களுக்காக அப்படிச் செய்வது உலகின் எல்லா நாடுகளிலும் நடக்கின்றது. அது மக்களுக்கே உரித்தான அடிப்படை உரிமை. அதைத் தடுக்கக் கூடாது. அதுவும் முக்கியமாக  படைபலம் மூலம் தடுத்து நிறுத்தக்கூடாது.

அய்யா,  யாழ்ப்பாண மாணவர்கள் தொடர்பில் தேவையற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளமை எனக்குக் கவலை அளிக்கிறது.  காவலில்  எடுக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட எஞ்சிய மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என  இப்போது எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்னுடைய வலிமையான வாதம் என்னவென்றால் இராணுவம் நொவெம்பர் 27 ஆம் நாள் மாலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவம் நுழைந்தே இருக்கக் கூடாது என்பதாகும். அங்கு வன்முறைகள் இடம்பெற்றிருக்கவில்லை.  அங்கு ஆயுதங்கள் இருக்கவில்லை.  அங்கு யாரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கவில்லை.

அவர்கள் சில தீபங்களை ஏற்றவிருந்தார்களாயின் – தங்களின் மறைந்த சோதரர்களுக்காக அமைதி வணக்கம் செலுத்தவிருந்தார்களாயின் அப்படிச் செய்வதற்கான உரித்து அவர்களுக்கு இருக்கும் போது – அத்துடன் முருகப் பெருமானுக்கு தீபமேற்றி வணங்கும் கார்த்திகைத் தீபத் திருநாளாகவும் அது அமைந்துவிட்ட சந்தர்ப்பத்தில் – இராணுவம் தவறிழைத்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முற்றிலும் சரியான, சட்டப்படியான நடவடிக்கையில் இது தேவையற்ற தலையீடு. தேவையற்ற நுழைவு. அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது விடுதிகள் சேதமாக்கப்பட்டன. அவர்களது சொத்து நாசமாக்கப்பட்டது.   அடுத்தநாள் அவர்களில் நால்வர் சிறைக்காவலுக்கு எடுக்கப்பட்டனர். மூவர் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்.  இந்த விடயத்தை மிகக் கவனமாகக் கையாளும்படி நான் அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்கள் மோதலை விரும்பவில்லை. அத்தகைய நிலை இந்நாட்டில் கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விடயத்தை உடன் கவனித்து, காவலில் உள்ள மாணவர்கள் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு நாம் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆனால் அய்யா,  வடக்கில் கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் நடவடிக்கைகள் பற்றி நாம் கவலை அடைந்துள்ளோம்.  அவர்களது பிரசன்னம் நாம் பிறந்து வாழும் நிலத்தில் தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தடையாக இருக்கிறது.  நாங்கள் படைக் குறைப்பைக் கேட்கிறோம். படையினரை முற்றாக அகற்றக் கேட்கவில்லை. என்னிடம் இருக்கும் தகவலின் படி சிறீலங்கா இராணுவத்தில் 20 படைப்பிரிவுகள் இருக்கின்றன.  இதில் 15 படைப்பிரிவுகள் வடக்கில் இருக்கின்றன. இரண்டு படைப்பிரிவுகள் கிழக்கில் இருக்கின்றன. மூன்று எஞ்சிய பகுதிகளில் இருக்கின்றன.  வடக்கில் 15 படைப்பிரிவுகள் இருந்தால் அதன் பொருள்  குறைந்தது 150,000 இராவத்தினர் வடமாகாணத்தில்  நிலை கொண்டுள்ளனர் என்பதாகும்.   இது மிக மிகக் கூடுதலான எண்ணிக்கை கொண்ட இராணுவம் ஆகும்.  குறிப்பாக வடமாகாணத்தில் அண்ணளவாக 600,000 மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால் நான்கு  குடிமக்களுக்கு ஓர் இராணுவம் என்ற விழுக்காட்டில் படையினர் நிலைகொண்டுள்ளனர். அய்யா, இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.  இராணுவம் ஏனைய விடயங்களிலும் தலையீடு செய்கின்றது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் முதலாவது கூட்டம் நடைபெற்றபோது கூட்டத்துக்காக பாடசாலைக் கட்டிடத்தில் கூடியிருந்தவர்களை ஆயுதப்படைகள் நுழைந்து தாக்கி கூட்டத்தைக் குழப்பின. உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்புக்கு முதல்நாள், குறிப்பாக வன்னியில் – கிளிநொச்சி, முல்லைத்தீவில் – அவர்கள் பலவிடங்களுக்கும் சென்று மக்களின் வாக்காளர் அட்டை மற்றும் அடையாள அட்டைகளைப் பறித்துச்சென்றனர். நான் இது குறித்துத் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டதன் விளைவாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போதும்  இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அதே மாதிரி நடந்து கொண்டனர்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பணியாற்றியவர்களை அவர்கள் அச்சுறுத்தினர்.  அப்படி நடந்துகொள்ள  வேண்டாம் என அவர்களுக்குக் கூறப்பட்டது.  “நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக வேலைசெய்தால் தேர்தல் முடிந்த பின்னர் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி நேரும் என அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அச்சமடைந்தனர். அவர்களால் தேர்தலில் சுயாதீனமாகப் பங்குபற்ற முடியவில்லை.

இதுபோன்ற இராணுவத்தினரது நடவடிக்கை குறித்து நாம் நிச்சயமாக மிகவும் கவலை அடைந்துள்ளோம்.  முக்கியமாக இராணுவம்  வடக்கில்  அதிகளவு நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ளது.  கிழக்கிலும் அப்படித்தான். நாங்கள் பதட்டம் அதிகரிப்பதை விரும்பவில்லை. நாங்கள் இயல்பான சூழலில்  வாழ விரும்புகிறோம். எமது இடங்களில்  தொல்லை உருவாகுவதை விரும்பவில்லை. நாம் படையினரோடு சண்டை பிடிக்க விரும்பவில்லை. நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம். அவர்கள் பெருமளவில் நிலை கொண்டிருப்பதை விரும்பவில்லை. காரணம் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் போது அவர்களது பிரசன்னம் அடக்குமுறைபோல் இருக்கிறது.  அவர்களது பிரசன்னம் எம்மை  அவமானப்படுத்துவது போல இருக்கிறது.  அவர்களது பிரசன்னம் எமது தன்மானம் மற்றும் எமது கண்ணியம் இரண்டுக்கும்  தாக்கலை உண்டாக்குகிறது. எங்களை சமவுரிமை அற்றவர்களாகச் செய்கிறது. எங்களை இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளுகிறது. அதனை நாம் விரும்பவில்லை.

ගරු (ආචාර්ය) මර්වින් සිල්වා මහතා

(மாண்புமிகு (கலாநிதி) மேர்வின் சில்வா)

(The Hon. (Dr.) Mervyn Silva)

එතුමා කියනවා නම් හමුදාව ඉවත් කරන්නය කියලා, මම අහනවා –

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

I am not asking for that.  Hon. Chairman –    மாண்புமிகு தலைவர்கள் அவர்களே – நான் அதனைக் கேட்கவில்லை

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

ගරු ඇමතිතුමා, කරුණාකරලා ඔබතුමා‍ගේ කථාවේදී ඒවා සඳහන් කරන්න. [බාධා කිරීමක්]

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

I am losing my time, Sir.

நான் எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை இழக்கிறேன், அய்யா.

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

දැන් එතුමාගේ අදහස් ප්‍රකාශ කරන්න ඉඩ දෙන්න. ඊළඟ කථාවේදී ඒක පැහැදිලි කරන්න.

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

Sir, in the first instance –  அய்யா,  முதலாவதாக

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

Hon. Sampanthan, you carry on with your speech.    – மாண்புமிகு சம்பந்தன், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடருங்கள்

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

I am losing my time. Please, I should not be disturbed in this way.  – எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை இழக்கிறேன். தயவு செய்து இதுமாதிரி என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

කාලය නාස්ති කරන්න එපා. [බාධා කිරීමක්]ගරු  මර්වින් සිල්වා ඇමතිතුමා, කරුණාකරලා නිශ්ශබ්ද වෙන්න.  ගරු සම්පන්දන් මන්ත්‍රීතුමනි, ඔබතුමා කථා කරන්න.

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

Sir, my time is being wasted.    அய்யா எனது நேரம் வீணடிக்கப்படுகிறது.

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

ගරු  මර්වින් සිල්වා ඇමතිතුමා,  වාඩි වෙන්න. තමුන්නාන්සේට උත්තර දෙන්න  එතුමා ලෑස්ති නැහැ. මම එක දවසකුත් කිව්වා –

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

Sir, I did not in the course of any part of my speech demand the removal of the army from the North and the East – [Interruption.]

அய்யா நான் எனது பேச்சின் எந்தப் பகுதியிலும் இராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் இருந்த அகற்றப்பட வேண்டும் என்று கேட்கவில்லை. (குறுக்கீடு)

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

Hon. Sampanthan, you continue with your speech. மாண்புமிகு சம்பந்தன்,   நீங்கள் உங்கள் பேச்சைத் தொடருங்கள்.

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

அய்யா, எமது மக்கள் வலிகாமத்தில் மீளக்குடியமர முடியாதுள்ளனர். எமது மக்கள் சம்பூரில் மீளக்குடியமர முடியாதுள்ளனர். ஆனால் வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்கள் மீளக் குடியமரமுடியும் என அரசு உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த  கேட்பார்புலவு மக்கள் அங்குள்ள தமது நிலங்களில் குடியமர முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள்  வெகுதொலைவில் உள்ள கோம்பாவில் என்ற இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்னர்.

யாழ்ப்பாணத்தில்  551 வீடுகளில் இராணுவம் இன்னமும் நிலைகொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியாருக்குச் சொந்தமான  காணிகளில் 308 முகாம்கள் உள்ளன. வடக்கில் 153 கிராம சேவையாளர் பிரிவுகளில் இராணுவ முகாம்கள் உள்ளன. இதைப்பற்றித்தான் நாம் முறையிடுகிறோம். அவர்களது அளவுக்கு அதிகமான  பிரசன்னம் பற்றி  நாம் முறையிடுகிறோம். அவர்கள் அங்கே இருக்கவே கூடாது என நாம் கூறவில்லை. குறிப்பிட்ட முகாம்களில் அவர்கள் இருக்கலாம். போருக்கு முந்திய காலம் போல தமது பணிகளை அவர்கள் இப்போதும் செய்யலாம். தங்களது புலனாய்வைப் பேணலாம். தங்கள் கண்காணிப்பைத் தொடரலாம். அந்த விடயங்களில் எந்தச் சிக்கலும் இல்லை. அது அவர்களது கடமை.

எமது மக்களின் வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் – எங்கள் மக்கள் இந்த நாட்டில் தாங்கள் கீழான மக்கள், சமத்துவான குடிமக்கள் அல்லர் என்று அவர்களே உணரும் நிலைமையை உருவாக்கும் விதத்தில் –  இராணுவப் பிரசன்னம் இருப்பதையே நாம் விரும்பவில்லை,

அய்யா, இரணைமடுவுக்கு மேற்கே, ஏ-9 சாலைக்கு கிழக்கே 4,600  ஹெக்டர் – ஏறத்தாழ 12,000 ஏக்கர் – நிலத்தில்  அண்ணளவாக 10,000 வீடுகள் இராணுவத்தினருக்கு கட்டப்படுகின்றன.  இது இராணுவம் முகாம்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற முறைமைக்கு மாறானது.  பத்தாயிரம் வீடுகள் இராணுவத்துக்குக் கட்டப்படுகிறது. இது பாரிய வீடு கட்டும் திட்டம். இதில் பெரும்பான்மையோர் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்தவர்களாக இருக்கப் போகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கப் போகிறார்கள். (குறுக்கீடு) தயவு செய்து என்னைக் குழப்பாதீர்கள்.  தயவு செய்து பிறகு பேசுங்கள். நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் அங்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள் ஆக மாறப்  போகிறார்கள். அவர்கள் நிரந்தர வாக்காளர்களாக வரப்போகிறார்கள். (குறுக்கீடு) அய்யா, இந்த அவையில் ஒழுங்கு வேண்டும்.

இதில் ஓரளவு சமத்துவம் கொடுக்குமுகமாக, இனக் கண்ணேட்டத்தில்,  இராணுவம் தமிழ்ப் பெண்பிள்ளைகளை இராணுவத்தில் சேர்க்கத் தொடங்கியுள்ளது.   அவர்களுக்கு மாதம் உரூபா 35,000  சம்பளம் கொடுக்கப்படுகிறது.  மொத்தம் 118 பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக எனக்குச் சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல சிஎஸ்டி என்று அழைக்கப்படும் சிவில் பாதுகாப்புப் பிரிவுக்கும் சிலர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மஞ்சள் நிறத்தில் CSD  என குறியிடப்பட்ட கருப்பு ரி சேட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப் பெண்கள் ஆண்கள் என 2,500 பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மாதம் உரூபா 18,000  கொடுக்கப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் இராணுவ முகாம்களில் கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளார்கள்.  எமது மக்கள் இப்படியான பொருளாதார நடவடிக்கையை கேட்கவில்லை. எமது மக்கள் விவசாயம் செய்ய விரும்புகிறார்கள். எமது மக்கள் மீன்பிடித் தொழிலைச் செய்ய விரும்புகிறார்கள்.

எமது மக்கள் கால்நடை மற்றும் கால்நடைப்  பண்ணைகளை  மேம்படுத்த விரும்புகிறார்கள்.  தங்களது கைத்தொழிற்சாலைகளைத் தொடங்க விரும்புகிறார்கள்.  அந்தப் பிரதேசங்களில் என்ன நடைபெற்றிருக்கின்றது? தமிழர்களுக்கு ஏதோ செய்வது போல வெளித்தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு உங்களுக்குக் கடப்பாடாக உள்ள சிலரை அழைத்து அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றீர்கள்,  சில தமிழர்களை இராணுவத்தில் சேர்க்கின்றீர்கள், சிலரைப் பணிக்கு அமர்த்தி, பெரும்பாலும் உங்களின் சொந்தத் தேவைகளுக்கும் இராணுவத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் பயன்படுத்துகின்றீர்கள்.

இரணைமடுவில் 25 ஏக்கர் நிலத்தில் இராணுவம் மரக்கறி செய்கை செய்கிறது.  தேராவிலில் 150 ஏக்கர் நிலத்தில் இராணுவம் பழத்தோட்டச் செய்கை  செய்கிறது.  வெள்ளாங்குளத்தில் 600 ஏக்கரில் இராணுவம் காட்டுமுந்திரிகை செய்துள்ளது. முக்கோம்புவில் 100 ஏக்கர் நிலத்தில் தென்னம்  செய்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. சுன்னாவிலில் 600 ஏக்கரில் இராணுவம் மரமுந்திரிகைச் செய்கையை முன்னெடுத்துள்ளது. இவை எல்லாம் வன்னியில் உள்ளன.

கிராமக் குளங்களின் கீழான பரந்த  நெல் வயல்கள் இராணுவத்தினரால் சாகுபடி பண்ணப்படுகின்றன. பொதுமக்கள்  செய்ய  வேண்டிய வேலையை,  பொதுமக்கள் ஈடுபட வேண்டிய இந்த வேலைகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்லமுடியாது. பொதுமக்கள்  இந்தப் பகுதிகளில் குடியிருக்க முடியாது.  பொதுமக்கள் அங்கு நடக்கக்கூட முடியாது. ஏனெனில் அந்தப் பிரதேசங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இடம்பெயர்ந்த ஒரு குடும்பம் குடியிருப்பதற்கும் தனது தொழிலைச் செய்வதற்கும் ஆகக்கூடியது கால் பரப்புக் காணியே வழங்கப்படுகின்றது.

இராணுவம் பேரளவு  பிரதேசத்தை ஆக்கிரமித்திருக்கையில் ஒருவரால் அந்தக் காணிக்குள் வாழமுடியுமா?  இந்த சிறிய இடத்தில் அவனால் உயிர்  பிழைத்து வாழ இயலுமா? அது போதுமானதா? அய்யா, எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இரணைமடுக் குளத்துக்குப் பின்பக்கமாக,  இரணைமடுக் குளத்துக்கும் இராணுவ குடியிருப்புக்கும் இடையில் வெலிஓயாவின் டொலர், கென்ட் பண்ணைகளுக்குப் பின்புறமாக உள்ள பகுதிகளுடன் சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் தூரத்தை இணைக்கும் ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிய வந்துள்ளது.

சுமார் 70 முதல் 80 கிலோமீற்றார் நீளப் பிரதேசத்தில் உள்ள நிலங்கள் இந்த இணப்புக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. அத்தகைய நடவடிக்கைக்குப் பின்னால் கெட்டநோக்கங்கள்  நிச்சயம் உள்ளன. இதை நாம் வெறுமனே பார்த்துக்கொண்டும்  போசாமலும்  அல்லது கேட்டுக்கொண்டும் பேசாமல்  இருக்க முடியாது.  குறிப்பாக,  வடக்கில் சில அரசியல் இலக்குகளை அடைவதற்காகவே இராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.  அதற்காகவே இராணுவம் பயன்படுத்தப்படுகின்றது  என்பதை எனது வாதமாக நான் இங்கே முன் வைக்கிறேன்.

அப்படிச் செய்வதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. அது இராணுவத்தின் வேலையல்ல. இராணுவம் போரில் போரிட்டது. இப்போது போர்  முடிந்துவிட்டது. இராணுவம் முகாம்களுக்குள் இருந்தபடி சட்டரீதியாக அது ஆற்ற வேண்டிய  பணிகளையே முன்னெடுக்க வேண்டும். ஆனால், தமிழ் மக்களது  நிலத்தை இழக்கச் செய்யும் விதத்தில் அல்லது அவர்களுக்கு இடைஞ்சலை உண்டாக்கும் வகையில் இராணுவத்தை நீங்கள் பயன்படுத்தக் கூடாது.

இத்தகைய நடவடிக்கைகள் சில குறிப்பிட்ட – திட்டவட்டமான – அரசியல் இலக்குகளை அடைவதற்கு மட்டுமின்றி இப்போது குறிப்பாக வடக்கில் இனக் குடிப்பரம்பலில் பாரிய மாற்றத்தை உருவாக்குவதற்காகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இது ஏற்கனவே கிழக்கில் நடைபெற்றுள்ளதோடு அங்கு இப்போதும் இடம்பெறுகின்றது. அய்யா,  இந்த மாற்றங்கள்,

ගරු ලක්ෂ්මන් සෙනෙවිරත්න මහතා (ඵලදායීතා ප්‍රවර්ධන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு லக்ஷ்மன் செனெவிரத்ன – வினைத்திறன் மேம்பாட்டு அமைச்சர்)

(The Hon. Lakshman  Senewiratne – Minister of Productivity Promotion)

How many Sinhalese people have been living in Jaffna Peninsula?   யாழ்ப்பாணக் குடாநாட்டில் எத்தனை சிங்களவர்கள் இருந்தார்கள்?

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

For goodness sake, let me speak. We have too many jokers    தயவு செய்து  என்னைப் பேச விடுங்கள். இங்கு பல கோமாளிகள் இருக்கிறார்கள்

[මූලාසනයේ අණ පරිදි ඉවත් කරන ලදී.]

[அக்கிராசனக் கட்டளைப்படி அகற்றப்பட்டுள்ளது]

[Expunged on the order of the Chair.]

in this House, Sir. We have so many buffoons    இந்த அவையில், அய்யா, பல கோணங்கிகள்  இருக்கிறார்கள்

[මූලාසනයේ අණ පරිදි ඉවත් කරන ලදී.]

[அக்கிராசனக் கட்டளைப்படி அகற்றப்பட்டுள்ளது]

[Expunged on the order of the Chair.]

in this House. [Interruption.] இந்த அவையில்

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

බාධා කරන්න එපා.

ගරු අල්හාජ් ඒ.එච්.එම්. අස්වර් මහතා

(மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்)

(The Hon. Alhaj A.H.M. Azwer)

 

Sir, I rise to a point of Order. அய்யா, நான் ஒழுங்கு பிரச்சனை ஒன்றை எழுப்புகிறேன்

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

Point of Order  එක මොකක්ද? ஒழுங்கு பிரச்சனை?

ගරු අල්හාජ් ඒ.එච්.එම්. අස්වර් මහතා

(மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்)

(The Hon. Alhaj A.H.M. Azwer)

 

Mr. Chairman, being the Leader of the Tamil community and a senior politician he cannot use the word “Buffoon”

அவைத் தலைவர் அவர்களே, தமிழ் மக்களது தலைவராகவும் மூத்த அரசியல்வாதியாகவும் இருப்பவர் “கோணங்கிகள்”  என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது

[මූලාසනයේ අණ පරිදි ඉවත් කරන ලදී.]

[அக்கிராசனக் கட்டளைப்படி அகற்றப்பட்டுள்ளது]

[Expunged on the order of the Chair.]

and the word “Jokers”

அதோடு  “கோமாளிகள்” என்ற சொல்

[මූලාසනයේ අණ පරිදි ඉවත් කරන ලදී.]

[அக்கிராசனக் கட்டளைப்படி அகற்றப்பட்டுள்ளது]

[Expunged on the order of the Chair.]

on the Hon. Members of this House. [Interruption.]  Sir, all Members are Hon. Members. There are no jokers and buffoons.

இந்த அவையில் உள்ள மாண்புமிகு உறுப்பினர்கள் (குறுக்கீடு) அய்யா,  எல்லா உறுப்பினர்களும் மாண்புமிகு உறுப்பினர்கள்தான். கோமாளிகள் மற்றும் கோணங்கிகள் என யாரும் இல்லை.

[මූලාසනයේ අණ පරිදි ඉවත් කරන ලදී.]

[அக்கிராசனக் கட்டளைப்படி அகற்றப்பட்டுள்ளது]

[Expunged on the order of the Chair.]

There can be others in the North. Hon. R. Sampanthan, you have to respect the Members.

வடக்கில் மற்றவர்களும் இருக்கக் கூடும். மாண்புமிகு இரா. சம்பந்தன், நீங்கள் உறுப்பினர்களைக் கனம் பண்ண வேண்டும்.

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

 

If I might say so, Sir,  I am not a supporter of ethnic cleansing. I come from a district where Sinhalese people live. [Interruption.]

அய்யா, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நான் இனச் சுத்திகரிப்பை ஆதரிப்பவன் இல்லை. நான் சிங்களவர்கள் வாழும் மாவட்டத்தில் இருந்து வருபவன். (குறுக்கீடு)

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

කථික මන්ත්‍රීතුමා උත්තර දෙන්න ලෑස්ති නැහැ. බාධා කරන්න එපා.

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

ஒரு சிங்களப் பொதுமகனாவது நான் அவனுக்குத்   தீங்கிழைத்தேன் என முறையிடமாட்டான்.

மாண்புமிகு பசில் இராசபக்ச அவர்களே!

உங்களுக்குத் தெரியும், திருகோணமலையிலிருந்து வந்துள்ள உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு சென்றுள்ள உங்கள் அமைச்சர்களும் அங்குள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளனர். அவர்கள் இதனைத் தெளிவாகக் கூறியிருப்பார்கள். அதுதான் எங்கள் நிலைப்பாடு. விடுதலைப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு ஒருவேளை நடந்திருக்கலாம். முன்னர் திட்டமிட்ட இனப் படுகொலைகளின் போது தமிழர்கள் இனச்சுத்திகரிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். புலம்பெயர் சமூகம் எப்படி வந்தது? அதுபற்றித்தான் இபபோது முறையீடு செய்யப்படுகிறது.

புலம்பெயர் சமூகம் உருவாகுவதற்கான காரணம் 1950 களில், 1960 களில் மற்றும் 1970 களில் இடம்பெற்ற  இனப் படுகொலைகள் காரணமாகவே புலம்பெயர் சமூகம் உருப்பெற்றது.  தமிழ்மக்கள் வன்முறை காரணமாக வெளியேறினார்கள். அப்படித்தான் புலம்பெயர் சமூகம் உருவானது. ஆகவே, அய்யா, நாங்கள் இனச் சுத்திகரிப்பை ஆதரிக்கவில்லை.  எமது நிலைப்பாடு என்னவென்றால்  மக்கள்  எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கு தொடர்ந்து வாழ்வதற்கு  ஒவ்வொருவருக்கும் உரித்துண்டு.  அது அவர்களின் அடிப்படை உரிமை. சிங்களவர்களாயினும் தமிழர்களாயினும் முஸ்லிம்களாயினும் எந்த இனத்தவரானாலும் அது அவர்களின் அடிப்படை உரிமை.

நாம் எதை எதிர்க்கிறோம் என்றால் ஒரு பிரதேசத்தின் இனக் குடிப் பரம்பல் முறைமையை மாற்றும் விதத்தில் அரசினால் திட்டமிடப்பட்ட முறையில் மக்கள் குடியமர்த்தப்படுவதை மட்டுமே நாம் எதிர்க்கிறோம். பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கை, டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கை போன்றவையும் இதனையே மறுத்துரைத்துள்ளன. அதனை மட்டுமே  நாம்  வற்புறுத்தினோம்.  அதற்கு மட்டுமே  நாம் குரல் எழுப்புகின்றோம்.  அதற்கு மேல் எதனையும் நாம் எப்போதும் கேட்கவில்லை. இதைத் தவிர, எந்த இனத்தைச் சார்ந்த எவரும் வடக்குக்  கிழக்குக்கு வருவதையோ, குடியமர்வதையோ,  வியாபாரம் செய்வதையோ நாம் எதிர்க்கவில்லை.  அய்யா, இதுதான் எமது நிலைப்பாடு. (குறுக்கீடு)

සභාපතිතුමා

(தவிசாளர் அவர்கள்)

(The Chairman)

ගරු මර්වින් සිල්වා ඇමතිතුමනි, ඊළඟ කථාව භාර අරගෙන කරන්න. ගරු සම්පන්දන් මන්ත්‍රීතුමාට බාධා කරන්න එපා. එතුමාට කථා කරන්න ඉඩ දෙන්න. ඒක එතුමාගේ නිදහස. එතුමාගේ අදහස් ප්‍රකාශ කරන්න නිදහසක් තිබෙනවා. තමුන්නාන්සේ හොඳට ලියා ගෙන ඇවිල්ලා ඒවාට පිළිතුරු දෙන්න. [බාධා කිරීම්] ගරු මර්වින් සිල්වා ඇමතිතුමා වාඩි වෙන්න.

ගරු ආර්. සම්පන්දන් මහතා

(மாண்புமிகு ஆர். சம்பந்தன்)

(The Hon.  R.  Sampanthan)

போர்  முடிவடைந்து மூன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. நான் நினைக்கிறேன் வடக்கு கிழக்குத் தமிழர்கள் தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் அமைதியாகவும் வாழ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவர்கள் தாம் கீழானவர்கள் என்ற தாழ்வுமனப்பாட்டுடன் வாழக் கூடாது.   அரசு சரியான நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனெனில் மீள் நல்லிணக்கத்துக்கு அது அடிப்படையானது.

பல்வேறு இன சமூகங்களுக்கு இடையில் இந்நாட்டில் நல்லிணக்கம் மீள ஏற்பட வேண்டுமானால் –  அத்தகைய மீள்நல்லிணக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையானது எனில் –  நாங்கள்  தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் எமது உரிமைகள் மீளப்பெற்றவர்களாக வாழ வேண்டியதும் அடிப்படையானது. இந்த அவையில் இன்று நான் நடத்தப்பட்ட  விதம் அத்தகைய நம்பிக்கையை ஊட்டுவதாக இல்லை.

இதுதான் எமது வேண்டுகோள்.  இராணுவத்துக்குப்  புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்கள் உட்பட இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலப்பரப்பு அனைத்தும் கைவிடப் படவேணடும். அவை இராணுவ  நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.

எங்களுக்கு இருக்கிற உரித்தின் அடிப்படையில் இந்த அவையில் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். இராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் நோக்கோடு அவர்களது  குடும்பங்களை வடக்கு, கிழக்கில் குடியமர்த்தி  இந்தப் பிரதேசங்களின் இனக் குடிப்பரம்பல் விழுக்காட்டை மாற்றியமைக்கும் திட்டமிட்ட நடவடிக்கை இது என்பதை அவையில் கூறி வைக்க விரும்புகிறேன்.

வேறு வேறு விதமான நிலப்பரப்பில் வேறு வேறு வகையான பயிர்களை இராணுவம் தொடர்ந்து செய்கை பண்ணுமானால், ஆயுதப்படைகள் அங்கிருந்து அகற்றப்பட்டாலும் அதன் பின்னரும் அங்கு அவர்களின் வீடு, வாசல்கள், அவர்களினால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலங்கள் மீதான உரிமைகள் எல்லாம் அங்கு நீடிக்கும். அவர்களின் வாழ்வாதாரங்கள் அங்கு நீடிப்பதால் அவர்கள் வடக்கு, கிழக்கில் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறிவிடுவர்.  இந்தத் திட்டம்தான் இப்போது அரசினால் கனகச்சிதமாக முன்னெடுக்கப்படுகிறது.   இந்தத் திட்டம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என நாம் உறுதியோடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க நன்றி, அய்யா.


 https://youtu.be/QKVvtI9KTRM

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply