சகல மக்களும் எதிர் பார்க்கும் தீர்வுகள் அனைத்தையும் புதிய அரசமைப்பின் மூலம் பெற்றுக்கொடுப்போம்!
நாட்டின் சகல மக்களும் எதிர் பார்க்கும் தீர்வுகள் அனைத்தையும் புதிய அரசமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கவே நான் முயற்சித்து வருகின்றேன். சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இந்தச் செயற்பாட்டை வெற்றிகொள்வோம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விரைவில் பெற்றுத்தரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய தைப்பொங்கல் நிகழ்வு நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
தைப்பொங்கல் நிகழ்வை தமிழ் மக்களின் முக்கியமான நிகழ்வாக கருதுவதாக முதலில் உரையாற்றிய சிலர் கூறினர். எனினும் தைப்பொங்கல் நிகழ்வு ஒரு தேசிய விழாவாக நான் கருதுகின்றேன்.
தமிழ் மக்களின் இந்த கலா சாரம் நூற்றாண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மன்னர் ஆட்சியின் போதும் அதன் பின்னரும் தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சிங்கள், தமிழ் மக்களின் மத்தியில் கூட சில ஒற்றுமையான தொடர்புகள் காணப்படுகின்றன. ஆகவே, அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இந்த நாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
எனினும், கடந்த மூன்று தசாப்த யுத்தத்தில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகவும் பெரிய அழிவுகளைச் சந்தித்தன. இன்று அவற்றை மீளக் கட்டியெழுப்பி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதேபோல், மலையக தமிழ் மக்களின் உரிமைகளையும் நாம் பேணி வருகின்றோம்.
மேலும் இலங்கையில் காணப்படும் அனைத்துச் சமயங்களும் சமமாகப் பேணப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதியும் நானும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். மேலும், சம்பந்தன் கருத்து ரைக்கும் போது சில விடயங்களை கூறினார். அவற்றை நான் ஏற்றுக்கொள்கின்றேன். மேலும் நாம் தீர்வுகள் வழங்கும் நகர்வுகளை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கின்றோம்.
அரசமைப்பு விவகாரத்தில்ம் ஆரம்பித்த சில விடய ங்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பின் மூலமாக சகல மக்களுக்கும் தீர்வுகளை பெற்றுத்தரும் முயற்சிகளை
நாம் முன்னெடுத்து வருகின்றோம். அவை பூர்த்திசெய்யப் பட வேண்டும். அரசமைப்பு குறித்து ஆராயும் குழுக்களை நியமித்து அதன் மூலமாக அறிக்கை தயாரிக்கப் பட்டு இன்று அதனூடாக கட்சிகளின் எண்ணங்களை பெற்று ஒரு தீர்வை பெற்றுத்தர பாடுபட்டு வருகின்றேன். அவற்றில் வெற்றி கிடைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக செயற்படும் முதல் சந்தர்ப்பம் என நான் கருதுகிறேன்.
மத கலாசாரங்களைப் பாதுகாத்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்கு உள்ளது. வடக்கு, கிழக்கு பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில மக்கள் பெரிய நெருக்கடிகளை
சந்தித்து வந்தனர். ஆகவே, அவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோல் அரசியல் தீர்வும் விரைவில் பெற்றுத்தரப்படும். அரசியல் தீர்வு என்பது சகல விடயங்களிலும்
இணைந்து செல்லக்கூடியது.
கலாசாரம், மதம், இனம் அனைத்தும் இணைந்து செல்லக்கூடியவையாகும். ஆகவே, அவற்றை கருத்திற் கொண்டும் வடக்கு, கிழக்கின் பொருளாதாரத்தை இலக்கு வைத்தும் கல்வி, சுகாதாரத்தை இலக்கு வைத்தும் நல்லிணக்க தீர்வுகளை பெற்றுத்தரும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நான் அரசியல் தீர்வை பெற்றுத் தருவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (காலைக்கதிர்)
Leave a Reply
You must be logged in to post a comment.