புதிய யாப்பில் அனைத்துத் தரப்பும் வெல்ல வேண்டும்  – திரு சுமந்திரன் நா.உ

புதிய யாப்பு உருவாக்கலில்  அனைத்துத் தரப்பும் வெல்ல வேண்டும்  – திரு சுமந்திரன் நா.உ

புதிய அரசியல் யாப்பிற்கான இந்த வரைவு சட்டமானால் எதிர்காலத்தில் நாடாளுமன்றமே தேவையற்றதாகி விடும் என முன்னாள் ஜனாதிபதி கூறும் வரையில் அந்த யாப்பில் என்ன விடயங்கள் உள்ளது என எம்மவர்களிற்கே தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ம.ஆ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதியில் தகவல் வழிகாட்டி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு அரசியல் யாப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு முன்மொரிவினை ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் விமர்சிக்கின்றனர். அதேபோன்று ஒருமித்த கட்சிகளிற்குள்ளும் எதிர்க் கருத்து உண்டு. இந்த யாப்பின் முதல் இரு பக்கத்திலேயே  இலங்கை மத்தியிலும் மாகாணத்திலும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட நாடு என கூறுகின்றது. ஒரு இடத்தில் மட்டும் அதிகாரம் கொண்டிருந்த நாட்டில் இவ்வாறு மாற்றம் ஏற்படுகின்றது. அதேநேரம் யுனிற்றரி ஸ்ரேட் இலங்கைக்குப் பொருந்தாது எனவும் உண்டு.

அதேநேரம் மாகாணங்களிற்கு கொடுக்கப்படும் ஒரு அதிகாரத்தை மீளப்பெற முடியாத அம்சமும் உண்டு. இவை முன்னேற்றங்கள்.  அதேநேரம் ஏற்றுக்கொள்ளாத விடயமும் உண்டு.  13ம் திருத்தச் சட்டத்தில் கூறிய பொலிஸ் அதிகாரம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டாலும் காணி அதிகாரம் போதாது. அதனைப் பேசித் தீர்க்க வேண்டும் . அதேபோன்று அலகு விடயமும் பேச வேண்டும். இதேநேரம் நாட்டில் உருவாக்கப்படும் ஓர் அரசியல் யாப்பானது அனைத்து தரப்பும் ஏற்கும் பட்சத்தில் மட்டுமே நீடித்து நிலைக்கும்.

அவ்வாறு இல்லாதுவிடின் இந்தியாவானது பொட்டலத்தை கொண்டுவந்து போட்டு வெருட்டியே 13 ஆம் திருத்தச் சட்டத்தை உருவாக்கியது என தற்போது கூறுவது போன்றே இதனையும் கூறுவர். இதேநேரம் வடக்கு  கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களின் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் மாகாணங்களிற்கு காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும்  ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் எனக் கோரியதோடு ஒரு மாகாண அமைச்சர்  ஆளுநர்ரே பதவியே  இருக்க கூடாது எனக் போரினார்ய.

இவ்வாறு அனைவரும் கோரும் அதிகாரப் பகிர்வே கோரப்பட்டது. இவை அனைத்து விடயம் தொடர்பிலும் பேச வேண்டும். யுத்தம் என்பதே எப்போதும் ஒரு தரப்பு வெற்றியாக அமையும். பேச்சு வார்த்தை என்பது இரு தரப்பும்  வெற்றி பெறவேண்டும். அதேநேரம் எமது மக்களின்  தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் . இது சாத்தியமான விடயம். ஆனால் இலகுவான காரியம் அல்ல. பேச்சுக்கள் சரிவராத நிலமையிலேயே போராட்டங்கள் இடம்பெறும். எமது நாட்டில் அதுவும் இடம்பெற்றது.

எனவே இந்த நிலையில் தற்போதும் முடியாது போனால் பெரும் நெருக்கடியே ஏற்படும். சிறப்பாக  எமது மக்களின் எதிர்காலமே கேள்விக்  குறியாகும். இதனால் தற்போது சரியான சூழ்நிலை வகுக்கப்பட்டுள்ளது. அந்தச் சூழலை எல்லா மக்களிற்கும் ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும். அதில் தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும் நிறைவேற்றப்  படவேண்டும். அதற்காகத்தான் வடக்கு கிழக்கு இணைய வேண்டும் அது கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களின் இணக்கத்தோடு இடம்பெற வேண்டும் என எழுதியுள்ளோம்.

எனவே புதிய யாப்பு உருவாக்கலில்  அணைத்துத்  தரப்பும் வெல்ல வேண்டும் என்றார்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply