வாழ்க்கையின் கடைசித் தோல்வி மரணம்

வாழ்க்கையின் கடைசித் தோல்வி மரணம்

கருவறையில் இருந்து வெளி வந்தவுடனேயே கல்லறை நோக்கிய பயணம் தொடங்கி விடுகிறது. இந்தப் பயணத்தை சிலர் விரைவில் முடித்துக் கொள்கிறார்கள். சிலர் பைய முடித்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை எதிரும் புதிருமானது.

உலகமும் அப்படித்தான்.

இறப்பு – பிறப்பு,
பகல்    – இரவு,
இன்ப – துன்பம்,
செல்வம் – வறுமை,
நல்லது   – கெட்டது,
உயர்வு   – தாழ்வு,
உண்மை – பொய்,
வெற்றி   – தோல்வி,
வெளிச்சம் – இருட்டு,
வரவு          – செலவு

இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

நண்பர் திரு வி.எஸ்..துரைராசா இன உணர்வும், மொழிப்பற்றும் உடைய ஒருவர். பல பொது அமைப்புக்களில் தலைவராக இருப்பவர். தனது நேரத்தையும் உழைப்பையும் பொருளையும் பொதுப் பணிக்கு ஈகை செய்பவர்.

கடந்த சனிகிழமை (ஒக்தோபர் 21) அவரது பேத்தி திருநீற்தா சபசேசன் அவர்களின் நடன அரங்கேற்றம் சீன கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. உற்றார், உறவினர், நண்பர்கள் எனத் திரண்டு வந்து ஆடலழகி திருநீற்தா சபேசனை மனதார வாழ்த்தினர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பல்கலைக் கழககம் வரை படிப்பிப்பதோடு நில்லாமல் இசை, நடனம், தண்ணுமை, வீணை, வயலின் போன்ற நுண்கலைகளில் ஒன்றிலாவது புலமை பெற வைக்கிறார்கள்.

பகல் வந்தால் இரவும் வந்துதான் ஆக வேண்டும்.
மகிழ்ச்சி இருந்தால் துக்கமும் வந்தே தீரும்.
பிறப்பிருந்தால் இறப்பும் இருக்கும்.

இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

வெள்ளிக்கிழமை அந்தக் கெட்ட செய்தி இடிபோல் வந்தது.

திரு துரைராசா அவர்களது மருமகள் காலமாகிவிட்டார் என்பதுதான் அந்தச் செய்தி.

அவர் சிறிது காலம் உடல்நலக் குறைவாக இருந்திருக்கிறார். ஆனால் இவ்வளவு விரைவில் அவர் இயற்கை எய்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் இறக்கும் போது அகவை 41 மட்டுமே. இது துயரத்தை இரட்டிப்பாக்குகிறது.

எனக்கு வேண்டும் வரங்களை 
இசைப்பேன் கேளாய் கணபதி! 
மனத்தில் சலனம் இல்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல், 
நினைக்கும் பொழுது நின்மவுன 
நிலைவந்திட நீ செயல்வேண்டும். 
கனகுஞ் செல்வம்,நூறுவயது: 
இவையும் தரநீ கடவாயே.

என்று வரம் கேட்ட மஹாகவி பாரதியார் தனது 39 அகவையில் மறைந்து போனார்!

இறப்பும் பிறப்பும் எம் கையில் இல்லை!

திரு துரைராசா அவர்களது மனைவி, மக்கள், மருமக்கள், உற்றார், உறவினர் எல்லோருக்கும் எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்கீரன் குடும்பம்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply