சோதிடப் புரட்டு (61-65)

சோதிடப் புரட்டு (61)

கோள் நிலை ஒரே மாதிரி இல்லை!

இதுவரை பன்னிரண்டு விண்வெளி வீரர் சந்திரனில் கால் பதித்துள்ளார்கள். இவர்கள் 1969-1972 வரை இடம்பெற்ற ஆறு அப்போலோ விண்வெளிக் கப்பல்களில் செலவு செய்தவர்கள். சோதிட சாத்திரத்தின்படி இவர்கள் எல்லோரதும் பிறப்பின் போது கோள் நிலை ஒரே மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அதேபோல் அவர்களது விதியும் (கல்வி, பொருள், திறமை, நல்வாழ்வு, காதல், திருமணம்….) ஒரே மாதிரி அமைந்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்களது கோள் நிலையை ஆராய்ந்தால் அவை ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொருவரும்  வெவ்வேறு இராசியில் பிறந்துள்ளார்கள். கோள்கள்  வெவ்வேறு இராசி வீட்டில் நின்றிருக்கின்றன. அவர்கள் பிறக்கும் பொழுது எந்தெந்த இராசியில் எந்தெந்தக் கோள்கள் நின்றன என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணை காட்டுகிறது

விண்வெளி வீரர்கள்

விண்வெளி வீரர்

பிறந்த நாள் சூரியன் சந்திரன் புதன் வெள்ளி செவ்வாய் வியாழன் சனி
Neil Armstrong ஓகஸ்ட்   5, 1930 கடகம் தனு சிம்மம் சிம்மம் இடபம் மிதுனம் தனு
Buzz Aldrin சனவரி 20, 1930 மகரம் கன்னி மகரம் மகரம் தனு இடபம் தனு
Pete Conrad யூன் 2, 1930 இடபம் சிம்மம் இடபம் மிதுனம் மீனம் இடபம் தனு
Alan Bean மார்ச்  15, 1932 கும்பம்; மேடம் மீனம் மேடம் கும்பம்; கடகம் மகரம்
Ed Mitchell செப்தெம்பர் 17, 1930 சிம்மம் மிதுனம் சிம்மம்; துலாம்; மிதுனம் மிதுனம் தனு
Dave Scott யூன்  6, 1932 இடபம் மிதுனம் இடபம் மிதுனம் மேடம் கடகம்; மகரம்;
Jim Irwin மார்ச்  17, 1930 மீனம் கன்னி கும்பம் மீனம் கும்பம் இடபம் தனு
John Young செப்தெம்பர் 24, 1930 கன்னி கன்னி கன்னி துலாம் மிதுனம் மிதுனம் தனு
Charlie Duke ஒக்தோபர் 3, 1935 கன்னி விருச்சிகம் கன்னி சிம்மம் விருச்சிகம் துலாம் கும்பம்
Alan Shepard நொவெம்பர் 18, 1923 துலாம் மீனம் துலாம் விருச்சிகம் கன்னி துலாம் கன்னி
Gene Carnan மார்ச் 14, 1934 மீனம் கும்பம் கும்பம் மகரம் மீனம் கன்னி மகரம்
Harrison Schmitt யூலை 3, 1935 மிதுனம் கடகம் இடபம் சிம்மம் கன்னி துலாம்

கும்பம்

ஒருவரது குணநலன்கள், திறன்கள், நல்வாழ்வு, தொழில், காதல், திருமணம் போன்றவற்றை அவரவரது சாதகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம் என்று சோதிடர்கள் சொல்கிறார்கள். அதைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. சோதிடர்கள் சொல்வது உண்மையா?

கடந்த 2,000 ஆண்டுகளாக சோதிடத்தை மக்கள் நம்பி வந்திருக்கிறார்கள். அது ஒன்றே சோதிடம் உண்மை என்பதற்கு சான்றாகும் என்கிறார்கள். எடுத்துக்காட்டாக சோதிடர் சிம்ம இலக்கினத்தில் பிறந்தவர் எப்படிச் சிம்மம் மற்றவர்களுக்குப் பணியாதோ அது மாதிரி இவர்கள் மற்றவர்களுக்குப் பணிய மாட்டார்கள், வந்தது வரட்டும் என்று எதிர்த்து நிற்பார்கள், இவர்களுக்கு மறைமுகப் பகைவர்கள் ஏராளம் உண்டு, ஆயினும் இவர்கள் அவர்களை பொருட்படுத்த மாட்டார்கள், இவர்கள் தாம்தான் பெரியவர்கள் என்று எண்ணி மற்றவர்களை அவமதித்துப் பேசும் சுபாவம் உடையவர்கள்.
 தேக்கிய சிங்கந்தனிற் பிறந்தோன்
சிறப்பு மேன்மை யுடையவனாம்
ஆக்கிய புவியிலின்; வரையும்
அவ மதித்தே பேசிடுவான்
பாக்கியச் செருக்கால் பலவகையும்
பணியும் மணியு மிழந்திடுவான்
யோய்கியனைப் போலவே நடித்து
செய்வான் கொடுங்களவையுமே’      (ஜோதிட அமுதம் -பக்கம் 129-131)

இந்தப் பலன் சரிதானா என நூறு சிம்ம இராசிக்காரர்களிடம் கேளுங்கள். தொண்ணூறு விழுக்காட்டினர் ‘ஆம்’ என்று தலையாட்டுவார்கள். எஞ்சிய பத்து விழுக்காடும் அநேகமாக ‘ஆம்’; என்றுதான் தலை ஆட்டு;ம்.

சோதிடர் உங்களுக்கு பணச் சிக்கல் இருக்கிறது என்பார். சோதிடம் கேட்பவருக்கு அது உண்மையாகப் படுகிறது. பணச் சிக்கல் இல்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

உண்மையான சாதகங்களை எடுங்கள், அந்த சாதககாரர்களது குணநலன்களைக் குறித்துக் கொள்ளுங்கள், சாதகத்தில் உள்ள பெயரை அழித்துவிட்டு அவற்றைச் சோதிடர்களிடம் கொடுத்து அதற்குரியவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேளுங்கள். பாதிப் பேர்தான் சரியான சாதகத்தை சரியான ஆளோடு பொருத்துவார்கள். இப்போது, அந்தச் சாதகங்களை சாதாரண மனிதர்களிடம் கொடுத்து சாதககாரர்களைக் கண்டு பிடிக்கச் சொல்லுங்கள். அவர்களும் அதே விழுக்காடு வெற்றி பெறுவார்கள்.
மொத்தம் 1,200 சாதகங்களை 700 சோதிடர்களிடம் காட்டி 47 ஆய்வுகள் செய்தபோது பொதுமேனி 50 விழுக்காடு வெற்றிதான் அவர்களுக்குக் கிடைத்தது.

மிச்சிக்கன் மாநிலத்தைச் சார்ந்த பெர்னாட் சில்வமான் (டீநசயெசன ளுடைஎநசஅயn)  என்ற உளவியலாளர் 2,978 திருமணங்களையும் 478 மணமுறிவுகளையும் ஆராய்ந்து பார்த்து (1967-68) எந்தக் கோள் நிலை, இராசி நிலை திருமண நீடிப்புக்கும் முறிவுக்கும் காரணிகளாக இருக்கின்றன எனப் பார்த்தார். அவர் எட்டிய முடிவு திருமண நீடிப்புக்கும் முறிவுக்கும் கோள்களுக்கும் இராசிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்பதாகும். பொருத்தமற்ற இராசிக்காரர்களும் பொருத்தமுள்ள இராசிக்காரர்களும் திருமணம் செய்துள்ளார்கள். ஆனால், இரு சாராரும் சரி சமமாகவே திருமணத்தை முறித்துக் கொண்டார்கள்!
முழுநிலாக் காலத்தில் (பவுர்ணமி) அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன, மனநோயாளர்களது பேதலிப்பு அந்த நாளில் அதிகரிக்கிறது போன்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது.

ஆனால், ஆய்வுகள் முழுநிலாக் காலத்தில் அல்லது புதுநிலாக் காலத்தில் (அமாவாசை) அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன என்பதில் உண்மை இல்லை எனச் சொல்கின்றன.

அதேபோல் முழுநிலாக் காலத்தில் மனநோயாளர்களுக்குப் பேதலிப்பு அதிகரிக்கிறது என்பதிலும் எந்தவித உண்மையும் இல்லை. ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள், புள்ளி விபரங்கள் அவற்றை உறுதிப்படுத்தவில்லை.

‘என்னைப் பொறுத்தளவில் மனநோயாளிகள் மீதான பவுர்ணமி நிலாவின் தாக்கம் எண்பிக்கப்பட வில்லை. அதற்கான வலுவான சான்றுகள் இல்லை’ என்கிறார் ஐவன் கெலி. இவர் இது தொடர்பான 200 கும் மேற்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கிய 50 ஆய்வறிக்கைகளை மீளாய்வு செய்துள்ளார்.

இருந்தும் மனிதர்களது புத்தி பேதலிப்பு, பாரிய குற்றங்கள், சாலைவிபத்துக்கள் போன்றவற்றுக்கு முழுநிலாவைப் பழி சாட்டும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

இதற்கு இரண்டு காரணிகளைக் கூறலாம். ஒன்று மனிதர்களது தெரிந்தெடுக்கும் ஞாபகசக்தி (ளநடநஉவiஎந அநஅழசநைள ) – ஏதாவது நடக்கக் கூடாதது முழுநிலாவன்று நடந்து விட்டால் அதனை முழுநிலாவோடு தொடர்பு படுத்திப் பேசுவது.
மற்றது ஏதுக்கும் (காரணத்துக்கும்) விளைவுக்கும் (காரியத்துக்கும்) இடையில் உள்ள வேற்றுமையை புரியாமல் மயங்குவது.
எடுத்துக்காட்டாக ஒரு ஆய்வு முழுநிலாவுக்கும் ஒரு குறிப்பிட்ட நடத்தைக்கும் உறவு இருப்பதாகச் சொன்னாலும், முழுநிலாதான் அந்த நடத்தையைத் தோற்றுவித்தது என்று முடிவு கட்டுவது பிழையாகும்.

இன்னொரு சிக்கல் என்னவென்றால் செய்தியாளர்கள் பரபரப்பான செய்திகளைச் சேகரிப்பதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அல்லது பரபரப்பான முடிவுகளை ஆதரிக்கும் செய்திகளில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதனால் ஆய்வுகளின் அடிப்படையில் தரப்படும் செய்திகளை அவர்கள் புறம் தள்ளிவிட்டுக் காவல்துறையிடம் இருந்தும் தாதிமாரிடம் இருந்தும் பெறப்படும் பரபரப்பான செய்திகளையே விரும்புகிறார்கள்.

இலக்கியத்தில் முழுநிலாவுக்கும் அசாதாரண நடத்தைக்கும் தொடர்பு கற்பிக்கப்பட்டுள்ளது. இது சரியா என்பதை ஆராய விரும்பிய மெக்சிக்கன் நாட்டைச் சேர்ந்த துழளந ஊரநசஎழ இலண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த உளவியலாளர் புடநnn றுடைளழn  என்பவரை அமர்த்தினார்.

வில்சனின் ஆய்வின்படி பல நூற்றாண்டு காலமாக முழுநிலா நாள் புராணங்களிலும் நாடோடி இலக்கியத்திலும் கொண்டாட்டத்துக்குரிய நாள் என சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இன்றைய மின்சார வெளிச்சம் வருவதற்கு முந்திய காலத்தில் அவ்வாறான எண்ணம் இருந்து வந்துள்ளது.

எனவே முழுநிலா நாளில் மனிதர்களது நடத்தையில் மாறுதல் காணப்படுவது உண்மையென்றே நம்ப வேண்டியுள்ளது. ஆனால், அதற்குக் கோள்களின் செல்வாக்குக் காரணம் என்பது தவறாகும். முழுநிலா நாளில் நிலவின் வெளிச்சம் அதிகமாக உள்ளது. எனவே ஆடல் பாடல் போன்ற பொழுது போக்குக்கு உகந்த நாளாக அது இருக்கிறது.

இந்தச் செய்தியைப் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் Daily Telegraph  நாளேடு வெளியிட்டிருந்தது.
‘ஒருவன் தான் செய்யும் அற்புதங்களை ஆராய்ந்து பார்க்க அனுமதி மறுப்பவன் களவாளி, அற்புதத்தை ஆராய்ந்து பார்க்கத் துணிச்சல் இல்லாதவன் ஏமாளி, ஒன்றை ஆராய்ந்து பார்க்காது அப்படியே நம்புகிறவன் முட்டாள்.’ (‘He who does not allow his miracles to be investigated is a crook, he who does not have the courage to   investigate a miracle   is gullible  and he who is prepared to believe without verification is a fool’)


இப்படி வெட்டொன்று துண்டு இரண்டு எனச் சொன்ன பகுத்தறிவாதி யார்?


சோதிடப் புரட்டு (62)
அவதாரங்களை அம்பலப்படுத்திய டாக்டர் ஏப்ரகாம் கோவூர்

‘ஒருவன் தான் செய்யும் அற்புதங்களை ஆராய்ந்து பார்க்க அனுமதி மறுப்பவன் களவாளி, அற்புதத்தை ஆராய்ந்து பார்க்கத் துணிச்சல் இல்லாதவன் ஏமாளி, ஒன்றை ஆராய்ந்து பார்க்காது அப்படியே நம்புகிறவன் முட்டாள்’ என்று சொன்னவர் வேறு யாரும் அல்ல,  புகழ் பெற்ற பகுத்தறிவுவாதியும் உளவியல் வல்லுனருமான டாக்டர் ஏப்ரகாம் கோவூர்தான் அப்படிச் சொன்னவர்.

கோவூர் கடவுள் அவதாரங்களுக்கும் பேய், பில்லி சூனியம், மாயமந்திரம், செப்படி வித்தை செய்யும் மந்திரவாதிகளுக்கும் கெட்ட கனவாக விளங்கினார்.

கடவுள் அவதாரம் என்று கருதப்படும் சாயி பாவாவுக்குக் கோவூர் ஓருமுறை சங்கிலி, மோதிரம், கடிகாரம் என்றெல்லாம் வரவழைத்துக் காட்டுகிறீர்கள்! முடியுமென்றால் உங்களால் ஒரு பூசணிக்காயை வரவழைத்துக் காட்ட முடியுமா?” என அறைகூவல் விடுத்தார்.

கடவுள் அவதாரங்கள் என்று சொல்பவர்கள் எப்போதும் உள்ளங்கைக்குள் அடக்கக்கூடிய விபூதி, சங்கிலி, மணிக்கூடு, சிவலிங்கம் போன்றவற்றை வரவழைத்துக் காட்டுவார்களேயொழியப் பூசணிக்காய் போன்ற பருமனான பொருளை வரவழைத்துக் காட்டுவது கிடையாது. காட்டவும் முடியாது.

1992 நொவெம்பர் 23 அன்று பங்களுரில் இருந்து வெளியாகும் Deccan Chronicle  என்ற நாளேடு தனது முன்பக்கத்தில் தில்லியில் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் கலந்து கொண்ட பிறந்த நாள் விழாவில், சாயி பாபா கையை அசைத்து சூனியத்தில் இருந்து ஒரு சங்கிலியை வரவழைத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அந்தப் படங்கள் பிரதமரது வரவைப் படம்பிடித்த அரச வீடியோ படப்பிடிப்பாளர் ஒருவர் எடுத்தவை ஆகும். அந்தப் படங்கள் சாயி பாபாவின் உதவியாளர் இராதாகிருஷ்ண மேனன் அவரிடம் எடுத்துக் கொடுத்த சிலைக்கு அடியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சங்கிலியை கையால் தடவி எடுத்ததைக் கையும் மெய்யுமாக வீடியோ கமராவின் “கண்கள்” காட்டிக் கொடுத்துவிட்டன. இதனால் அந்த விழா நிகழ்ச்சியை இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை இந்திய அரசு திடீரென நிறுத்தி விட்டது. அந்த வீடியோ நாடா வெளிவராது முடக்கிவிட்டது. இருந்தும் அதன் படி ஒன்று எப்படியோ வெளிவந்து உலகம் முழுதும் ஒளிபரப்பப்பட்டது. பிபிசி தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்த Guru Busters  என்ற குறும்படத்தில் அந்த நாடாவைப் போட்டுக் காட்டினார்கள்.

1993 யூன் 06 ஆம் நாள் புட்டபர்த்தி ஊழியர்கள் நால்வர் சாயி பாபாவை அவரது அறையில் வைத்துக் கொலை செய்ய முயற்சி மேற்கொண்டார்கள். பாபா பக்கத்து அறைக்கு ஓடித் தப்பித்துக் கொள்ள, இராதாகிருஷ்ன மேனன் உட்பட பாபாவின் உதவியாளர் இருவர் கொலையாளிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். பின்  காவல்துறை சுட்டதில் தாக்கிய 4 பேரும் கொல்லப்பட்டார்கள். புட்டபர்த்தியில் நடந்த இந்த 6 கொலைகள் தொடர்பாக யாரும் முறைப்பாடு செய்யவில்லை, யாரும் கைது செய்யப்படவில்லை, யார் மீதும் வழக்கும் தொடரப்படவில்லை.

டாக்டர் கோவூர்  1978 செப்தெம்பர் 18 ஆம் நாள் இயற்கை எய்தியபோது அவரது கடைசி விருப்பத்திற்கு இணங்க அவரது கண்கள் இரண்டும் மருத்துவக் கல்லூரிக்குக் கொடுக்கப்பட்டன. அவரது உடல் அவர் நீண்ட காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்குக் (Thurston College,  Colombo) கொடுக்கப்பட்டது. இவை, தான் இறந்த பின்பும் தன்னால் மானிடம் (Humanity) பயனுற வேண்டும் என்ற அவரது மனித நேயத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

டாக்டர் கோவூர் ஒரு அரைநூற்றாண்டு காலமாக மந்திர தந்திரங்கள், பேய் பில்லி சூனியங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்தவர். அவரது முடிவு? அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்பதே! “யாருக்கும் அற்புதங்கள் புரியும் ஆற்றல் கிடையாது, அவை புராணங்களிலும், பரபரப்புக்குப் பெயர் போன செய்தித்தாள்களில் மட்டுமே உண்டு” என்பது டாக்டர் கோவூரின் முடிவாகும்.
தங்களிடம் அற்புத ஆற்றல் உண்டு என்று  சொல்பவர்களை, அந்த அற்புத ஆற்றலை மோசடிக்கு இடமில்லாத கட்டுப்பாடான சூழலில் எண்பித்துக் காட்டுமாறு கோவூர் அறைகூவல் விடுத்தது கடவுள் அவதாரங்கள் மட்டத்தில் கிலியை உண்டு பண்ணியது.

தன்னிடம் உள்ள நூறு உருபாய்த்  தாளின் இலக்கத்தைச் சரியாகச் சொல்லுகிற மந்திரவாதிகள், மாந்திரிகர்கள், சோதிடர்கள் ஆகியோருக்கு ஒரு இலக்கம் உருபாயை (அந்தக் காலத்து ஒரு இலட்சம் இப்போது ஒரு கோடிக்குச் சமம்) பரிசாகக் கொடுக்கத் தயார் என்று கோவூர் செய்தித்தாள்களில் அறிவித்தல் செய்தார். மேலும் தன்னைப் பேய், பில்லி சூனியம் மூலம் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொல்லும் மந்திரவாதிக்கு ஒரு இலக்க உருபாய் பரிசாகக் கொடுப்பதாகவும்  அறிவித்தார். ஆனால், அவர் உயிரோடு இருந்த மட்டும் ஒருவர்கூட அவரது பந்தயத்தை ஏற்க முன்வரவில்லை.

அதே மாதிரி தண்ணீரில் யாராவது நடந்து காட்டினால் அவருக்கு ஒரு இலட்சம் தருவதாகக் கோவூர் அறிவித்தார்.
ஒரேயொரு முறை அவரது பந்தயத்தை மும்பையைச் சேர்ந்த ஒரு சாமியார் ஏற்றுக் கொண்டு தண்ணீரில் நடந்து காட்டுவதாகச் சொன்னார். செய்தித் தாள்களில் அந்தச் செய்தி வெளியாகியது.  மும்பையில் உள்ள ஒரு பிரபல கோட்டலுக்குச் சொந்தமான ஒரு நீச்சல் குளத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சாமியார் தண்ணீரில் நடந்து காட்ட ஏற்பாடாயிற்று. சாமியாரின் சாதனையைப் பார்க்க மக்கள் பெருமளவில் திரண்டார்கள்.

சாமியார் வந்தார்,  கண்ணை மூடிக் கொஞ்ச நேரம் தியானம் செய்தார், தண்ணீரில் இறங்கினார், அவ்வளவுதான், பொதுக்கென்று கீழே போய்விட்டார்! போனவர் போனதுதான் ஆள் வெளியே வரவே இல்லை!

அப்போதுதான் அவருக்கு நீச்சல்கூடத் தெரியாது என்ற உண்மை தெரியவந்தது. பக்கத்தில் நின்றவர்கள் பாய்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சாமியாரைக் கரைக்கு இழுத்து வந்தார்கள்.

கோவூர் கேட்டார் “சாமியாரே! உங்களுக்கு ஏன் இந்த வேலை, ஒரு இலட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரைவிடப்  பார்த்தீரே?”
“இல்லை. ஒரு இலட்சத்துக்கு ஆசைப்பட்டு இதனை நான் செய்யவில்லை, எனக்குக் கொஞ்ச விளம்பரம் தேவைப்பட்டது, அதற்காகத்தான் தண்ணீரில் நடக்க முடியும் என்று சொன்னேன்” எனச் சாமியார் அழுது வடிந்தார்!

டாக்டர் கோவூரும் அவரது மனைவியும் நடுச் சாமத்தில் சுடுகாடுகளில் பேய்களைத் தேடிப் போயிருக்கிறார்கள், பேய் நடமாடுவதாகக் கருதப்படும் வீடுகளுக்குப் போயிருக்கின்றனர்,  பேய்பிடித்த வீடுகளில் படுத்து உறங்கினார்கள்.
தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பட்டறிவை அடிப்படையாக  வைத்து டாக்டர் கோவூர் (1) Begone God men (2)  God Demons  and Spirits என்ற இரண்டு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.  இதில் காணப்படும் ஒரு கதை மலையாள மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு திரையரங்குகளில் 100 நாள்களுக்கு மேல் ஓடிப் பண வருவாயில் சாதனை படைத்தது.
டாக்டர் கோவூர் 1898ம் ஆண்டு கேரளத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் ஒரு சிரிய கிறித்தவ பாதிரியார். தனது தொடக்கப் படிப்பைத் திருவல்லம் சிரியன் கிறித்துவ செமினரியில் முடித்துக் கொண்டு மேல்படிப்புக்காக கல்கத்தா சென்று பெங்கபாசி கல்லூரியில் கல்வி கற்றார். தாவரயியல், விலங்கியல் பாடங்களிலியே அவர் சிறப்புப் புலமை பெற்றார். அதன்பின் கோட்டயம் சி.எம்.எஸ். கல்லூரியில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

டாக்டர் கோவூர் மக்கள் மூடத்தனத்துக்கு இரையாகாமல் பகுத்தறிவோடு வாழ வேண்டும் என்பதைத் தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இதற்காக மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசும் இந்தியாவிற்கு அடிக்கடி போய் வந்தார். “அற்புதங்களை அம்பலப்படுத்தும்” நிகழ்ச்சிகள் பலவற்றைச் செய்து காட்டினார். அவருக்குப் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் இருந்தது.

டாக்டர் கோவூர் தனது பரப்புரைக்குத் தன்னோடு தனது நண்பர் பி. பிரேமானந்த் (இது வேறு பிரேமானந்த் – கொலை மற்றும் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறைக் கம்பிகளிற்குப் பின்னால் இரண்டு ஆயுள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் “சுவாமி” பிரேமானந்தா அல்ல) என்பவரை அழைத்துப் போனார்.

பிரேமானந்த் இந்திய அரசிடம் இருந்து அறிவியலை வளர்த்த தொண்டுக்காக NCSTC   பரிசு பெற்றவர். அவருக்கு அப்போது வயது 75 ஆகி இருந்தது. அவர் மந்திர தந்திரம் கற்றவர். சாதாரண மக்களைத் திகைக்க வைக்கும் 1,500 கும் அதிகமான செப்படி வித்தைகளை, அற்புதங்களை அநாயசமாகச் செய்து காட்டும் ஆற்றல் படைத்தவர்.

எண்ணெய்க்குப் பதில் தண்ணீரில் விளக்குத் திரி எரிவது, நைட்றிக் காடியை அப்படியே விழுங்குவது, கண்ணாடியில் தாமாகவே பிம்பங்கள் தோன்றுவது, கையில் இருக்கும் துணியில் திடீரெனத் தீ பற்றிக் கொள்வது அவற்றில் சிலவாகும்!
டாக்டர் கோவூருக்கும் மந்திர தந்திர வித்தைகள் தெரிந்திருந்தன. அவற்றை மேடையில் செய்து காட்டுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

கோவூர் 1928 ஆம் ஆண்டு இலங்கைக்கு புலம் பெயர்ந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். முதலாண்டில் அவர் தாவரவியல் படிப்பித்ததோடு கிறித்தவ மாணவர்களுக்கு விவிலிய வேதத்தையும் படிப்பித்தார்.
விவிலிய வேத பாடத்தில் அவரது மாணவர்கள் அத்தனை பேரும் சிறப்பாகச் சித்தியெய்தினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு கல்லூரி அதிபர் வண. பிதா. காஷ் (Rt. Rev. Cash) அவரிடம் இருந்து கிறித்தவ பாடப்படிப்பைப்  பிடுங்கி விட்டார்.
அதையிட்டுக் கல்லூரி அதிபரிடம் விளக்கம் கேட்டார் கோவூர். கல்லூரி அதிபர் சிரித்துக் கொண்டே சொன்னார் “ஏப்ரகாம்!  உன்னிடம்  விவிலிய வேத பாடம் படித்த மாணாக்கர் எல்லோருமே நல்ல பெறுபேறுகளைப் பெற்று சித்தி எய்தினர் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் அத்தனைபேருமே தங்கள் மத நம்பிக்கையை இழந்து விட்டார்களே!”

1943 ம் ஆண்டு மத்திய கல்லூரியை விட்டுவிலகி காலி றிச்மென்ட் கல்லூரியில் சேர்ந்தார். அப்புறம் மவுண்ட்லேனியா பரி. தொமாஸ் கல்லூரிக்கு மாறினார். 1959 இல் அறிவியல் துறைத் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதன் பின்னரே டாக்டர் கோவூர் தான் அது காலவரை ஆய்வு செய்து வந்த ஆன்மீகம், ஆவியுலகம்  போன்றவற்றைப்பற்றி முழு நேரம் எழுதவும், பேசவும் தொடங்கினார். தனது இளமைக் காலத்தைப் பற்றி டாக்டர் கோவூர் பின்வருமாறு கூறியிருக்கிறார்:

“மற்றக் குழந்தைகள் போலவே நானும் எனது தாய் தந்தையரால் மூளைச் சலவை செய்யப்பட்டு அவர்களது மதம்பற்றிய மூடநம்பிக்கைகள் என்மீது திணிக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்த இளமைக்கால மூடநம்பிக்கைகளை உதறித் தள்ளுவது என்பது மலைமேல் ஏறுவதுபோல் இருந்தது.”

டாக்டர் கோவூர் சோதிடம், மந்திர தந்திரங்கள், மாந்திரீகங்கள் போன்ற மோசடிகளுக்கு எதிராக ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய கட்டுரைகள் அறியாமை குடிகொண்டிருந்த மக்களது மனதில் பேய்கள்பற்றிய பயத்தைப் போக்கி, அவதாரங்கள், அற்புதக்காரர்கள், சூனியக்காரர்கள், வசியகாரர்கள், சோதிடர்கள், கைரேகை சாத்திரிகள், சாதகம் கணிப்போர், காண்டம் வாசிப்போர், எண்சாத்திரிகள், பஞ்சாங்ககாரர்கள் போன்றவர்களது புரட்டுக்களை அம்பலப்படுத்தி மக்களிடம் பகுத்தறிவை வளர்க்க உதவியது.

தனது குடும்பத்தில் நடக்கும் மங்களகரமான நிகழ்ச்சிகளை அட்டமி,  நவமி, இராகுகாலம், யமகண்டம் பார்த்து வைத்துக் கொண்டார். அதன் மூலம் நாளும் கோளும் பார்ப்பது மூடநம்பிக்கை என்பதை எடுத்துக்காட்டு மூலம் எண்பித்தார்.
இயற்கைக்கு மாறான அற்புதங்கள், அறியாமைபற்றிய நம்பிக்கைகள் பயத்தாலும் அறியாமையாலும் ஏற்படுகின்றன, இப்படியான நம்பிக்கைகள் மனிதன் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழந்த காலத்தில் ஏற்பட்டதாகும்.

காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த மனிதனுக்கு இயற்கை நிகழ்வுகளுக்குரிய காரண காரியங்கள் தெரியாது இருந்தன. இடி, மின்னல், புயல், சூறாவளி, மழை, கிரகணம், வால்மீன், காட்டுத் தீ, நிலநடுக்கம், எரிமலை, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை நிகழ்வுகளை வியப்போடு பார்த்த ஆதி மனிதன் பயத்தால் நடு நடுங்கி குகைகளுக்குள் ஓடி ஒளிந்தான். மரப் பொந்துகளில் பதுங்கி வாழ்ந்தான்.

மேலும் இயற்கை அனர்த்தங்கள் யாவும் தனக்கு மேலான ஒரு ஆற்றலால் ஏற்படுவதாக நினைத்து அதனை வழிபடவும் ஆரம்பித்தான். அவற்றைத் திருப்திப் படுத்த ஆடு, மாடு, குதிரை, கோழி போன்றவற்றைப் பலியிட்டான். பூ, காய், கனி, பால், தயிர், தேன், பொங்கல், முறுக்கு, வடை, பணியாரம், பாயாசம், புக்கை, மோதகம் போன்றவற்றைப் படையல் செய்தான்.
சூரிய வழிபாடு ஒரு காலத்தில் எல்லா இன மக்களது பண்பாட்டிலும் காணப்பட்டது. குறிப்பாக எகிப்தியர்களுக்குச் சூரியனே கண்கண்ட தெய்வமாக இருந்தது. இப்படித்தான் மனிதனின் மனதில் எண்ணற்ற கடவுள்கள், தெய்வங்கள், தேவதைகள் உற்பத்தியாகின. இதனைப் பாரதியார்-

மௌளப் பல தெய்வம் கூட்டி வளர்ந்து
வெறும் கதைகள் சேர்த்துப் – பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர் மறை
காட்டவும் வல்லீரோ?

என அறிவே தெய்வம் என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.

அன்றைய மனிதனின் கையில் வேல், வில், அம்பு, கல், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. இன்றைய மனிதனின் கையில் அணுக்குண்டு, நீரகக்குண்டு, நியூட்றன் குண்டுகள் இருக்கின்றன.

மனிதன் மனதளவில் அவன் இன்னும் கற்காலத்திலேயே வாழ்கிறான். நாகரிகம் வளர்ச்சி அடைந்தும் அதையொட்டிய பண்பாட்டு, சமூக மாற்றங்கள் அதே வேகத்தில் இடம் பெறவில்லை. அன்றைய குகை வாசிகளைப் போலவே இன்றைய மனிதனும் பேரளவு அதே கடவுள்களையும் தெய்வங்களையும் தேவதைகளையும் வழிபடுகிறான். ஆன காரணத்தினால்தான் அறிவியல் பட்டதாரி கூட “செவ்வாய்க் குற்றம்” உள்ள தனது மகளின் சாதகத்தை எடுத்துக்கொண்டு அதே செவ்வாய்க் குற்றமுள்ள மாப்பிள்ளையைத் தேடி அலைவதைப் பார்க்கிறோம்.

தினமணி நாளிதழில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “காலம் உங்கள் கையில்’ என்ற சோதிடப் பகுதி வெளியிடப்படுகிறது. அப் பகுதியில் வாசகர்கள் தங்களின் துன்ப துயரங்களைக் கூறி என் கஷ்டம் தீருமா? பரிகாரம் உண்டா? திருமணம் நடைபெறுமா? வேலை கிடைக்குமா? நோய் தீருமா? என்றெல்லாம் கேட்டு எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றை மட்டு எடுத்துக் கொள்வோம்.  சூரியக் கடவுள் சோதிட நம்பிக்கை கொண்ட குடும்பப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன் வழக்கம் போல் மணமகனது சாதகத்தோடு பொருத்தம் பார்த்து, மிகப் பொருத்தமான வரன், வாழ்வு சிறப்பாக அமையும் 10 பொருத்தங்களில் 9 சரியாகப் பொருந்துகிறது என்றெல்லாம் சோதிடர் சொன்ன பிறகு நாள், நட்சத்திரம், இலக்கினம், மங்களகரமான நேரம் பார்த்துப் பெரியோர்கள் திருமணம் செய்து வைத்தார்கள்.  சில ஆண்டு கழிந்து அப்பெண் தினமணி (6-04-2001) சோதிடப் பகுதிக்குக் கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். “என் கணவரால் பலவிதக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நான் தற்போது 7 அகவை மகனுடன் தனித்து வாழ்ந்து வருகிறேன்…… என் கஷ்டம் தீருமா?” என்று கேட்டிருக்கிறார்.

சோதிடர்; கூறியபடி அப் பெண்ணின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாமல் கணவரின் சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கிறார். இதிலிருந்தாவது சோதிடம் உண்மையா? சோதிடர் கூறியபடி அப்பெண்ணிற்கு நல்வாழ்க்கை அமைந்ததா? இல்லையென்றால் சோதிடம் புரட்டு என்பதையாவது உணர வேண்டாமா?

டாக்டர் கோவூர் இலங்கைப் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார். அறிவியலின் அடிப்படையில் சமூக மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்தார். மக்களிடம் பகுத்தறிவைப் பரப்பப் பாடுபட்டார். மக்கள் எதனையும் பகுத்தறிந்து ஏற்கவோ தள்ளவோ வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஊழி அறிவியலைச் சேர்ந்தது, அறிவியல் ஒன்றே மானிட முன்னேற்றத்திற்கு அச்சாணியாக இருக்க முடியும் என்று சொன்னார்.

மானிட எண்ணங்களை செம்மைப்படுத்துவதில் அவர் Bertrand Russell  க்கு அடுத்த படியில் இருந்தார். அடுத்த கிழமை மூடத்தனத்தை ஒழித்து பகுத்தறிவுச் சுடர் கொளுத்திய டாக்டர் ஏப்ரகாம் அவர்கள் Times of India  செய்தி ஏட்டில் எழுதிய Is Astrology Scientific?   (சோதிடம் அறிவியல் சார்ந்ததா?) என்ற கட்டுரையின் தமிழாக்கத்தை படிக்கலாம்.


சோதிடப் புரட்டு (63)
சோதிடமும் கைரேகையும் சமுதாயத்திற்குச் சாபக்கேடு!

“அடிப்படையில் பிழையான ஒரு கோட்பாடு பெரும்பான்மையோர் நம்புகிறார்கள் என்பதாலோ அல்லது சில அறிவியலாளர்களும் புகழ்வாய்ந்தவர்களும் நம்புகிறார்கள் என்பதாலோ உண்மையாகி விடாது.

சோதிடக் கணிப்புக்கள் பிழையான தரவுகளின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.  ஒன்பது கோள்களில் (நவக்கிரகங்கள்) அய்ந்துதான் உண்மையான கோள்கள்.

மிகுதி நான்கில் ஒன்று விண்மீன் (ஞாயிறு)  ஒன்று துணைக்கோள் (நிலா) மற்ற இரண்டும் (இராகு கேது) கற்பனை அல்லது நிழல்க் கோள்கள்.

இப்படிப் பிழையான தரவின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படிச் சரியாக இருக்க முடியும்? சாதகங்கள் ஒரு குழந்தை பிறக்கும்போது இராசி வட்டத்தில் கோள்களின் ஒப்பீட்டு இருக்கையை வைத்தே கணிக்கப்படுகிறது. கோள்கள் புவியில் இருந்து கோடிக்கணக்கான கல்களுக்கு அப்பால் ஞாயிறை வலம் வருகின்றன. விண்மீன்கள் பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலக்கம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.

சோதிடர்களுக்கு இந்த உண்மையெல்லாம் தெரியாது. தெரிந்தாலும் அவற்றைக் கணக்கில் எடுப்பதில்லை. கோள்கள், இராசி மண்டலங்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் உண்மையான இருக்கையைக் கணக்கில் எடுக்காமல் கண்ணால் பார்க்கின்ற காட்சியை வைத்தே தங்கள் கணிப்பைச் செய்கிறார்கள்.

சோதிடர்களுக்கு கோள்கள் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் உண்மையான இருக்கைகளை வானியல் கணிப்புக்கள் மூலம் கணித்து அறியும் அறிவும் ஆற்றலும் இருக்குமேயானால் அவர்களுக்கே சோதிட சாத்திரத்தில் உள்ள நம்பிக்கை போய்விடும்!

கோள்கள் மற்றும் விண்மீன்களில் இருந்து புறப்படும் ஒளி புவியை வந்து சேர சில மணித்துளி தொடங்கி பல இலக்கம் ஆண்டுகள் எடுக்கும் என்பதால் சோதிடர்கள் கணிக்கும் சாதகம் சில மணித்துளி தொடங்கி பல இலக்கம் ஆண்டுகள் பிழையாக இருக்கும்!

கெப்லர் அல்லது கார்ல் ஜங் (Carl Jung) சோதிடத்தை நம்பினார்கள் என்ற அடிப்படையில் அதனை நம்புவது மொராஜி தேசாய் நோய் நொடி வராது இருப்பதற்கு மூத்திரம் குடித்தார் அதைப்போல் மற்றவர்களும் மூத்திரம் குடிக்க வேண்டும் என்ற முட்டாள்த்தனம் போன்றது.

பூஜ்லே சோதிடத்துக்கு எதிரான கருத்துக்களை எண்பிப்பது அறிவியலாளர்களது பொறுப்பு என்கிறார். இதனைச் செய்வதற்கே 15 ஆண்டு காலமாக நான் விடுத்து வரும் அறைகூவலில் சோதிடம், கைரேகை இரண்டையும்  எனது அட்டவணையில் உள்ள  23 குறிப்பெண்களில் சேர்த்துள்ளேன். மேலும் நான் வைக்கும் தேர்வில் 95 விழுக்காடு சரியான எதிர்வுகூறல் (predictions) கூறுபவர்களுக்கு ஒரு இலக்கம் உருபா பரிசளிப்பதாக அறிவித்துள்ளேன்.

நான் பூஜ்லே சோதிடத்துக்கு எதிரான கருத்துக்களை எண்பிப்பது அல்லது மறுப்பது அறிவியலாளர்களது பொறுப்பு என்று கூறுவதை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நான் அதனைச் செய்ய முன் வந்ததற்குக் காரணம் சோதிடமும் கைரேகையும் ஏனைய மூடப்பழக்கங்களைப் போல் சமுதாயத்துக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து விட்டது என்பதே.

நான் வைக்கும் தேர்வை எதிர்கொள்ளுமாறு பூஜ்லே ஒரு சோதிடரை அல்லது ஒரு கைரேகைச் சாத்திரியை ஒப்புக் கொள்ளுமாறு தூண்ட முடியுமா? நான் இப்படியான தேர்வைப் பல தடவை நடத்தியிருக்கிறேன்.

சோதிடர் சரி, கைரேகை சாத்திரி சரி வெறுமனே அனுமானிக்கிற சாதாரண மனிதர்களைவிடச் சரியாகக் கணித்துச் சொல்லவில்லை என்பதை நான் கண்டிருக்கிறேன்! கடை.சியாக நான் இப்படியான தேர்வை பெப்ரவரி 12, 1978 இல் வைத்தேன்.

இலங்கை சண்டே ஒப்சேவர் (Sunday Observer) நாளேட்டில் ஒரு செய்தியைப் படித்தேன். இலண்டனில் சோதிடத்தைத் தொழிலாகக் கொண்டு பணம் தேடும் ஒரு இலங்கையர் கானாவின் சனாதிபதியின் கைரேகை அச்சைப் பார்த்து (palmprint)  கானா நாட்டில் எங்கெல்லாம் எண்ணெய் இருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார் என்பதுதான் அந்தச் செய்தி.

நான் யோசித்தேன்,  இந்த  மனிதர் விடுமுறையில் இலங்கை வரும்போது ஸ்ரீலங்காவில் எங்கெல்லாம் எண்ணெய் இருக்கிறது என்பதை சனாதிபதி ஜே.ஆர். ஜெவர்த்தனாவின் கையைப் பார்த்து சொல்ல வைக்கலாமே?

எனவே அதே நாளேட்டின் மூலம் கைரேகை சோதிட சாத்திரியான சைரஸ் அபயகோன் (Cyrus Abeyakone) மற்றும் இலங்கையில் உள்ள சோதிடர்கள் கைரேகை சாத்திரிகள் எல்லோரும் பெப்ரவரி 12, 1978 அன்று கொழும்பு  தேர்ஸ்ரன் கல்லூரி (Thurston   College, Colombo) இல் நடக்க இருக்கும் தேர்வுக்குத் தோன்றுமாறு அறைகூவல் விடுத்தேன்.

போட்டியாளர்களுக்குக் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கம் போல 95 விழுக்காடு சரியாக மறுமொழி சொல்பவர்களுக்கு ஒரு இலட்ச உருபா பரிசு கொடுக்க முன்வந்தேன். செய்தியேடுகளில் வழக்கமாகப் பிறந்த நாள் நட்சத்திரத்தை அல்லது கைரேகையைப் பார்த்து பலன் சொல்லப்படும் என நாளேடுகளில் விளம்பரம் செய்யும் சோதிடர்களையும் இந்தத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன்.

நான்கு குறி சொல்வோர் (fortune – tellers) தாங்கள் தேர்வில் பங்குபற்ற வருவதாக அறிவித்தார்கள். அய்ந்தாம் ஆள் தொலைபேசி மூலம் தான் யேசு கிறித்துநாதரிடம் பிரார்த்தனை செய்து நோயாளிகளைக் குணப்படுத்துவதைப் பகிரங்கமாக எண்பித்துக் காட்டுவதாகச் சொன்னார். பிரார்த்தனை மூலம் நோய் தீர்ப்பது எனது 32 குறிப்பெண்களில் (items) ஒன்றென்பதால் அவரையும் வருமாறு கேட்டுக் கொண்டேன்.

பெப்ரவரி 12 ஆம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே தேர்ஸ்ரன் கல்லூரி அரங்கு பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. சரியாக 5 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. எனது தொடக்க உரையில் சூனியம் மற்றும் மாயமந்திரம் (witchraft  and occultism) இரண்டின் தோற்றம் அதன் படிமலர்ச்சி (Evolution) பற்றியும் எதற்காக மாயமந்திரம் மற்றும் அற்புத ஆற்றல் தங்களுக்கு இருப்பதாகக் கூறுபவர்களுக்கு எதிராக நிரந்தர அறைகூவலை விடுக்கிறேன் என்பதையும் விளக்கினேன்.

இதனைத் தொடர்ந்து சோதிடர்களையும் கைரேகை சாத்திரிகளையும் மேடைக்கு வந்து இருக்கைகளில் உட்காருமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், அரங்கில் பல குறிசொல்வோர்கள்  (fortune – tellers) இருந்தாலும் ஒரு கைரேகை சாத்திரியும் முன்னர் கூறிய நம்பிக்கைப் (மூலம்) பிணி போக்காளரும் (faith-healer)  மட்டுமே மேடைக்கு வந்தார்கள்.

பொது மக்களுக்குப் பலன் சொல்லி மாதம் உருபா 5000 இல் இருந்து உருபா 10,000  வரை உழைக்கும் இந்த ஆட்கள் எனது  இலட்ச உருபா பரிசை ஏற்க முன்வராததற்கு  என்ன காரணம் என்பதைப் அறிவாளிகளான வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

இவர்கள் எனது பரிசைப் பெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. தங்களது பொட்டுக்கேடு வெளியானால் பிழைப்புக் கெட்டுவிடும் என்பதால் அவர்கள் வலிய வருமிடரை (risk) எடுக்க விரும்பவில்லை.

அரங்கில் இருந்த பொதுமக்களில் ஒருவர்  மேடைக்கு வந்து மற்றவர்களோடு இருக்கையில் அமருமாறு கேடடேன்.  முதலில் நான் பிணி போக்காளரைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப் படுத்தினேன். பின்னர் அவரிடம் நான் கைரேகை சாத்திரிகளுக்குத் தேர்வு நடத்திக் கொண்டிருக்கும் போது எனது மூக்கின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு கறுப்பு மச்சத்தை (mole)  நீக்குமாறு யேசுநாதரிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள் என அவரிடம் சொன்னேன்.

நான் அவரிடம் எனது மூத்திரப்பையில் உள்ள புற்றைக் குணமாக்குமாறு யேசுநாதரிடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டிருக்கலாம். ஆனால், ஒரு biopsy   மூலம் முடிவைக் கண்டறிந்து பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பதற்கு வாய்ப்பில்லாததால் முதல் வழியைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

நம்பிக்கைப் பிணிபோக்காளர் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்க நான் எனது கோப்பில் இருந்து இரண்டு உறைகளை எடுத்தேன். அதில் ஒன்றில் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கக் காவல்துறை பத்துப் பேரிடம் இருந்து எடுத்த இரண்டு பெருவிரல் அடையாளங்களைக் கொண்ட முத்திரை உறை ஒன்றை எடுத்தேன்.

அதே போல் பொறுப்பான காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்த அந்தப் பத்துப் பேரது பால், உயிருடன் இருக்கிறார்களா இறந்து விட்டார்களா என்ற தரவுகளைத் தெரிவிக்கும் இன்னொரு உறையையும் எடுத்தேன்.

அந்தப் பத்துப் பேரும் பிறந்த ஆண்டு, மாதம், நாள், கடைசி மணித்துளிவரை சரியான நேரம், சரியான நெடுக்கோடு (longitude) சரியான குறுக்குக்கோடு  (Lattitude)  பற்றிய தரவுகள் அந்த உறையில் இருந்தன.

இன்னொரு முத்திரையிட்ட உறையில் உயிரோடு இருக்கும் அல்லது இறந்து போயிருந்தால் அவர்களது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து உறுதி செய்யப்பட்ட தரவுகள் இருந்தன.

நான் முதல் உறையின் முத்திரையை உடைத்து அதில் இருந்த இலக்கம் இடப்பட்ட பத்துப் பேரது கைரேகை அச்சுகளை (pயடஅ-pசiவெள) முதலில் கைரேகை சாத்திரியிடமும் பின்னர் அந்தப் பொதுமகனிடமும் கொடுத்தேன். அவர்கள் கொடுக்கப்பட்ட தாளில் அந்தப் பத்துப் பேரில் யார் ஆண்கள், யார் பெண்கள், யார் உயிரோடு இருக்கிறார்கள், யார் இறந்து விட்டார்கள் என்பதைக் குறிக்குமாறு கேட்டேன்.

அரங்கில் இருந்த இரண்டு செய்தியாளர்கள் மேடைக்கு அழைத்து காவல்துறை அதிகாரி கொடுத்த தரவோடு ஒப்பிட்டுப் பார்த்து சரியான மறுமொழியைக் கணக்கிடுமாறு கேட்டேன்.

கைரேகை சாத்திரி 30 விழுக்காடு,  பொதுமகன் 20 விழுக்காடு சரியான பதில் எழுதியிருந்தார்கள். நான் மேலும் சில பொதுமகன்களைக் கூப்பிட்டிருந்தால் அவர்களில் சிலர் குறைந்தது 50 விழுக்காடு வெற்றி பெற்றிருப்பர். எந்தப்  பேயனாலும் அந்தளவு விழுக்காட்டைப் பெற முடியும்.

எனது கறுப்பு மச்சம், ரூபா ஒரு இலட்சம் இரண்டும் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன. பத்துப் பேரது பிறப்புத் தரவுகளைக் கொண்ட முத்திரையிட்ட உறையை வேறொரு முறை பயன்படுத்துவதற்கு என்னோடு வைத்திருக்கிறேன்.

உள்ளுர் செய்தித் தாள்களில் இந்தத் தேர்வின் முடிவுகள் பற்றி அடுத்த நாள் பெரிதாகச் செய்தி வெளி வந்தது.  இது மக்கள் மத்தியில் ஒரு நலமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பல குறிகாரர்கள் வாடிக்கைகாரர்கள் இல்லாமல் கடையை மூடினார்கள். ஆனால், இப்படியான வழிமுறைகள் மூலம் அம்பலப்படுத்தினாலும் இந்தச் சமுதாய ஒட்டுணிகளை (social parasites) ஒழிக்க முடியாது. காரணம் அவர்களிடம் பலன் கேட்பதற்கு சில ஏமாந்த சோணகிரிகள் தொடர்ந்து  இருக்கவே செய்வார்கள்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரியான பிரதமர் எஸ்..டபிள்யூ.ஆர்..டி. பண்டாரநாயக்க தனது பதவி ஏற்பு நிகழ்ச்சியைக் குடும்ப சோதிடரின் அறிவுரைக்கு ஏற்ப 30 மணித்துளி  தள்ளி வைத்தார். அப்படி அவர் நல்ல முகூர்த்தத்தில் பதவி ஏற்பு உறுதிமொழியை செய்து கொண்டாலும் தனது பதவிக் காலம் முடியு முன்னரே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இருந்தும் தொடர்ந்தும்  இலங்கை – இந்திய பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் போலிச் சோதிடர்கள் கணித்துக் கொடுக்கும் நல்ல நேரத்தில்தான் பதவி ஏற்பு உறுதிமொழியைச் செய்து கொள்கிறார்கள்.

எனது தெய்வீக அற்புதங்கள் அம்பலப்படுத்தும் பரப்புரையின் (Divine Miracles Exposure  Campaign)  போது நான் பங்களுரைச் சேர்ந்த பி.வி. இராமனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் பங்களுரில் நான் செய்யும் சொற்பொழிவு ஒன்றில் கலந்து கொள்ளுமாறும் நான் விடுத்துள்ள அறைகூவலை ஏற்றுச் சோதிடத்தின் மூலம் எதிர்காலப் பலன்களைக் கூறமுடியும் என்பதைப் பொது மக்களுக்கு எண்பித்துக் காட்டுமாறும் கேட்டிருந்தேன்.

இராமன் தான் நடத்திய சோதிட சஞ்சிகை  மூலம் பெரும் பணம் திரட்டியிருந்தார். பங்களுரைச் சுற்றி எட்டுப் பொதுக் கூட்டங்களில் நான் பேசினாலும் அதில் ஒன்றுக்குக் கூட அவர் வரவில்லை.

காரணம் ஒரு அறிவியல் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை அறியும் புத்திசாலித்தனம் அவருக்கு இருந்திருக்கிறது என்பதுதான்.

‘சோதிடம் ஒரு மூடநம்பிக்கை என்ற கூற்றை எண்பிக்க அறிவியல் அடிப்படையில் முயற்சி எதுவும் நடைபெறவில்லை’ என்று சொல்லும் பூஜ்லே தானே பி.வி. இராமனை அத்தகைய தேர்வுக்கு உட்படுத்தி இந்தப் புராதன வழிபாட்டு முறையின் (Ancient cult)   வெற்றுப் புனைந்துரையைப் பற்றிய நம்பிக்கையை உறுதிப்படுத்தலாமே?’

கோவூர் இவ்வாறு தனது கட்டுரையை முடித்திருந்தார்.

எமது பால் வெளி மண்டலம் பற்றி முன்னரே (புரட்டு 25) குறிப்பிட்டுள்ளேன். பால் வெளி மண்டலம் என்பது பல கோடி நட்சத்திரங்கள், வாயு, தூசி இவற்றின் தொகுப்பாகும். அண்டத்தில் எமது பால் வெளி மண்டலத்தைப் போல் 10,000 – 20,000 கோடி பால் வெளி மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு பால் வெளி மண்டலத்திலும் 50,000 கோடி நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. எமது பால் வெளி மண்டலம் சுருள் (spiral)  வடிவானது.

ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி மூலம் அண்டத்தைப் பார்த்ததில் 1,200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள பொருள்கள் தெரிந்தன. இது இந்த அண்டம் தோன்றிய தொடக்க காலத்தில் தோன்றிய மிகப் பெரிய உருப்படிகளாக இருக்க வேண்டும் போல் தெரிகிறது. அண்டம் தோன்றி 1,300 கோடி ஆண்டுகள் என்று கணித்திருப்பதால் அதனை ஒளி வேகத்தால் பெருக்க (13,000,000,000 x  300,000 = 39,000,000,000,000,000 கிடைக்கும் எண்ணே அண்டத்தின் பார்வைக்கு உட்பட்ட பகுதி என்று வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் அண்டம் உள்ளதா என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அறியவும் முடியாது. மேற் கூறிய 39.00 என்ற எண்ணையே அண்டத்தின் பரப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும.

அண்டம் என்ன பொருளால் ஆனது? 4 விழுக்காடு அணுக்களால் ஆனது. அதாவது எமது புவியில் காணப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற மூலகங்களினால் ஆனது. எஞ்சியது 73 விழுக்காடு இருள் ஆற்றல் (Dark energy) 23 விழுக்காடு இருள் பொருள் (Dark matter) ஆகும்.

அண்டத்தின் ‘அகவை’ 1300.7 கோடி ஆண்டுகள் எனத் திருத்தமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது 1 விழுக்காடு முன்பின் பிழைக்கக் கூடும். முன்னர் 800-2,000 கோடி ஆண்டுகள் இருக்கும் என எண்ணப்பட்டது. பெரு வெடிப்பின் பின்னர் 20 கோடி ஆண்டளவில் நட்சத்திரங்கள் தோன்றின. முன்னைய மதிப்பீடுகள் 50-100 கோடி ஆண்டு எனக் கணிக்கப்பட்டது.

எமது ஞாயிறைச் சுற்றி 30,000 ஆயிரம் குறுங்கோள்களும் (meteoroids) 100,000 மில்லியன் (1000 கோடி) வால்வெள்ளிகளும் (comets) வலம் வருகின்றன.

எமது ஞாயிறு பால் வெளி மண்டலத்தின் மையத்தில் இருந்து 30,000 ஒளி ஆண்டுக்கு இப்பால் இருக்கிறது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி விநாடிக்கு 186,000 கற்கள் (300,000 கிமீ) வேகத்தில் ஓர் ஆண்டு செல்லும் தொலைவாகும். அதாவது 6,000,000,000,000 (6 trillion) கற்கள் அல்லது 9,500,000,000,000 கிமீ ஆகும். எமது ஞாயிறுக்கு அடுத்து இருக்கும் கிட்டடி நட்சத்திரம் Alpha Centauri ஆகும். அது 4.35 ஒளி ஆண்டுகள் தொலைவில் அல்லது 270,000 மடங்கு தொலைவில் உள்ளது. (புரட்டு 28)

ஏராளமான வாசகர்கள் எண்சாத்திரம் பற்றி எழுதுமாறு கேட்டிருக்கிறார்கள். சோதிடப் புரட்டின் தம்பி முறையான எண்சாத்திரப் புரட்டுப் பற்றி அடுத்த அதிகாரத்தில் எழுதுவேன்.


சோதிடப் புரட்டு (64)

ஏமாளிகளின் தலையில் மிளகாய் அரைக்கும் சோதிடர்கள்!

எண் சோதிடம் என்றால் என்ன? இது ஒவ்வொரு சோதிடரைப் பொறுத்தது! தட்ஸ்தமிழ் என்ற இணைய தளம் எண் சோதிடத்துக்குத் தந்திருக்கும் வரைவிலக்கணம் இது:

‘இது மிகப் பழமையான ஜோதிட முறை. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். கண்களை மூடிக் கொண்டு 3 எண்களை மட்டும் நினையுங்கள். அதை எங்கள் ஜோதிடரிடம் சொல்லுங்கள். உங்களின் பிரச்சினையையும் தேவையையும் சொல்லுங்கள. நீங்கள் சொன்ன எண்களை வைத்தே உங்கள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வார். எந்தக் கால அளவுக்கு (வாரங்கள், மாதங்கள், வாழ்நாள்…) ஜோதிடம் கணிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடவும்.

நீங்கள் கொடுத்த எண்களின் அடிப்படையில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வையும் உங்கள் எதிர்காலத்தையும் கணித்துச் சொல்வார். நீங்கள் கேட்ட கால அளவுக்கு ஏற்றவாறு ஜோதிடம் கணித்துச் சொல்லப்படும்.

1) மூன்று மாத கணிப்புக்கு           – 8 அ. டொலர் அல்லது இ. உருபா 480
2) ஒரு வருடகால கணிப்புக்கு  – 12 அ. டொலர் அல்லது இ. உருபா 720
3) ஆயுட்கால கணிப்புக்கு           – 30 அ. டொலர் அல்லது இ. உருபா 1,800

இந்தச் சோதிடரின் பெயர் வேத பண்டிதர் சிவலிங்க சுவாமி. கடந்த 18 ஆண்டுகளாய் ஜோதிடக் கலையில் ஈடுபட்டு வருபவர். துல்லியமாய் எதிர்காலத்தைக் கணிப்பதில் வல்லவர். மணப் பொருத்தம், ஜோடிப் பொருத்தங்களைக் கணிப்பதில் மிகவும் வல்லவர். ஜாதகம் எழுதுவதில் முன்னணியில் இருக்கும் ஜோதிடர்.

உங்களது பிரச்சினைகள், சந்தேகங்களை எங்கள் ஜோதிடருக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பலாம்.

கேள்விகள் எது தொடர்பாகவும் இருக்கலாம் (உடல் நலம், வேலையில்லா பிரச்சினை, செல்வம்…)

உங்களுக்கு எந்தக் கால கட்டம் வரை (எந்த மாதம் வரை, நாள் வரை…) கணிப்பு வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

எங்கள் ஜோதிடருக்கு கீழ்க்கண்ட  3 விவரங்களைத் தந்தால் போதும்.

1) பிறந்த தேதி (நாள்-மாதம்-ஆண்டு)
2) பிறந்த நேரம்
3) பிறந்த இடம்

உலகின் பல பாகங்களில் வசிக்கும் மக்கள் இவரது ஆலோசனைகளால் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். உடல்நலப் பிரச்சினைகள், சட்டச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், வேலை வாய்ப்புக்கள், வேலையில்லாப் பிரச்சினைகள், தள்ளிப் போகும் திருமணங்கள் எனப் பல விடயங்கள் குறித்தும் இவரிடம் ஆலோசனைகள் பெறலாம்.

இவரது சேவையை பயன்படுத்திப் பலன் பெற வாழ்த்துக்கள் என தட்ஸ் இணையதளம் பரிந்துரை செய்துள்ளது.

ஜோடிப் பொருத்தம், அதிர்ஷ்டக் கல், பரிகாரம், சந்தேகங்கள், ஜாதகம் எழுதல், எண் ஜோதிடம் இவற்றால் பலனடைந்தவர்கள் சொல்வது என்ன?

‘ஜோதிடரின் பரிந்துரைகளில் உள்ள எளிமையில் நான் அசந்து போனேன்! பரிகாரங்கள் தொடர்பான ஜோதிடரின் யோசனைகள் என்னைக் கவர்ந்தன. கிட்டத்தட்ட எல்லா பிரச்சினைகளுக்குமே இவரிடம் தீர்வுகள் இருப்பதை நான் உணர்ந்தேன்’ என்கிறார் வினய்.

‘அனைவருக்குமே ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், மகிழ்ச்சியாகவும் மன அமைதியுடனும் வாழ்வது அவரவர் கைகளில் தான் என்கிறார் ஜோதிடர். நான் மனச் சோர்வடையும் நேரத்தில் எல்லாம் அவரைத்தான் தொடர்பு கொள்கிறேன், பிரச்சினையைச் சொல்கிறேன், அவர் என் பிரச்சினைகளை அமைதியுடன் கேட்கிறார், யோசனைகள் சொல்கிறார், அவரின் ஆலோசனைகள் எனக்கு மனதில் அமைதியை பரப்புவதை உணர்கிறேன்’ என்கிறார் ஸ்ருதி.

இப்படி வாடிக்கையாளர்களிடம் இருந்து வருவது போல நற்சான்றிதழ்கள் தயாரித்துப் பெரிதாக விளம்பரம் செய்வது வாணிக தந்திரமாகும்.

இன்னொரு சோதிடர் பெயர்  பிஜேன் தாருவாலா. இவர் பொதுக் கேள்வி, காதல் திருமணம், சிறப்பு சோதிடம், சாதகம், முகூர்த்தம், ஓராண்டு பலன் ஆகியவற்றில் ‘விற்பன்னர்.’

பிஜேன் தாருவாலா  உலகின் மிகச் சிறந்த ஜோதிட விற்பன்னர், இந்திய பாரம்பரிய ஜோதிடத்தையும், மேற்கத்திய ஜோதிடக் கலைகளையும் கற்றுணர்ந்து துல்லியமாய் எதிர்காலத்தைக் கணிப்பவர்!

உங்களுக்கு விதி இருந்தால் ஒழிய காதல் அமைந்துவிடாது என்பதை மறக்காதீர்கள்! காதல் உன்னதமானது, அதில் உங்களுக்கு வெற்றி கிடைத்திடுமா?

உங்கள் இருவருக்கும் குண்டலி பொருத்தம் (பொறுத்தம் என்று பிழையாக எழுதப்பட்டிருக்கிறது) எப்படி இருக்கிறது? திருமணத்துக்கு முன்பே அதைத் தெரிந்து கொள்வது வாழ்வு செழித்திட உதவுமே?

நீங்கள் நினைத்த வரன் அமைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இந்த வரன் பொருத்தமாய் இருக்குமா என்ற கேள்வி உங்களைத் துளைத்தெடுக்கிறதா?

திருமணப் பந்தத்தில் சிக்கலா? நினைத்துப் பார்த்திராத பிரச்சினைகள் தலைகாட்டுகிறதா? உங்களின் வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது? எதிர்காலம் என்ன சொல்கிறது?

வாழ்வின் அடிப்படையே உடல் நலன்தான். அது எப்படி இருக்கும் என்ற கவலையா?

குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்புண்டா? எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? செய்யும் தொழில் எப்படி இருக்கும்? உங்களுக்கு ஏற்ற தொழில் எது?

பொருளாதார நிலை மந்தமாகவே உள்ளதா? நல்ல காலம் எப்போதுதான் வரும்? நிதி நிலையைச் சரி செய்ய என்னதான் வழி?

வீடு, அபார்ட்மெண்ட், நிலம், கார் என கனவுகள் விரியக் காத்திருக்கிறீர்களா? அவை எப்போது சாத்தியப்படும்?

உங்களுக்கு இதுவரை ஜாதகம் எழுதப்படவில்லையா? கவலை வேண்டாம்! அடிப்படை விவரங்களைக் கொடுங்கள். உங்கள் ஜாதகம் தயார்!

நல்ல காரியங்களை நல்ல நேரத்தில் செய்வதுதானே சரி?  நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சரி. நல்ல நேரம் குறித்துத் தரப்படும்.

இந்த ஆண்டு உங்களுக்கு என்னவெல்லாம் வைத்திருக்கிறது? என்னவெல்லாம் தரப்போகிறது? இத்தனை கேள்விகளுக்கும் பிஜேன் தாருவாலா விநாயகரின் அருளாசியுடன் ஆராய்ந்து துல்லியமாகப் பதில் தருவார்!

எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. உங்கள் பிரச்சினையைச் சொல்லுங்கள். பிஜேன் உதவுவார். இறைவன் அருளால் அதைக் கணித்துச் சொல்லக் காத்திருக்கிறார்.

தீவிர விநாயகரின் பக்தரான இந்த பிஜேன் தாருவாலா மூலமாய் உங்களுக்கு ஜோதிட சேவைகள் வழங்குவதில் தட்ஸ்தமிழ்.காம் பெருமை கொள்கிறது.’

ஒவ்வொரு கேள்விக்கும் கட்டணம்                     –  இ. உருபா 750
முதல் ஆண்டுப் பலனுக்கு (சிறப்பு சோதிடம்) –  இ. உருபா 1,250
இரண்டு ஆண்டு                                                             – இ. உருபா 2,500
மூன்று ஆண்டு                                                               – இ. .உருபா 3,500
நான்கு ஆண்டு                                                                – இ. .உருபா 4,500.

இந்தச் சோதிடரின் பெயரைப் (பிஜேன்) பார்த்தால் வட நாட்டுச் சோதிடர் போல் தெரிகிறது. உலகம் முழுதும் இருக்கிற இலட்சக்கணக்கான ஏமாளிகளில் ஒரு நாளில் பத்துப் பேராவது இந்தச் சோதிடர்கள் போடும் தூண்டிலைக் கவ்வினால் போதும்! அப்புறம்  சோதிடர் வீட்டில் காசு மழைதான்! நாளாந்த வருமானம் சில ஆயிரத்தை எட்டிவிடும்!

இன்னொரு சோதிடர் இந்திய உருபாயிலும் அமெரிக்க டொலரிலும் கட்டணத்தைப் போட்டுள்ளார். இவர் பெயர் ஸ்ரீ சிவகுமார் நாயனார். சோதிடம் உளவியல் இரண்டிலும் பட்டம் பெற்றிருக்கிறார். பன்னிரண்டு வயதில் இருந்து எண் சாத்திரம், வாஸ்து, தெலிபதி, சித்த மருத்துவம் செய்து வருகிறார். இருபத்தொரு வயதில் தனியாகத் தஞ்சையில் நாடி சோதிடம் பார்த்துப் பலன் சொன்னவர்.

பொது வாசிப்புக்கு இ. .உருபா 2,221 (அ.டொலர் 46) கல்வி மற்றும் பொருள், உடன்பிறப்புக்கள், குழந்தைகள், நோய் நொடி, திருமணப் பொருத்தம் ஒவ்வொன்றுக்கும் இ. உருபா 4,333 (அ.டொலர் 91) கட்டணம்.

ஒரு நாளைக்கு 2 நாடி சாத்திரம் சொன்னாலே சோதிடரின் ஒரு நாள் வருமானம் 182 அ. டொலர் (உருபா 8,666) எட்டி விடும்!

அறிவியல் கண்டு பிடித்த கணினி மற்றும் இணையதளம் ஊடாக இந்தச் சோதிடர்கள் எதிர்காலம் பற்றிய மக்களது இயல்பான கவலையையும் பயத்தையும் மடமையையும்  பயன்படுத்தி அவர்களை ஏய்த்துப் பிழைக்கிறானர்.

எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. மற்றவர்களது சிக்கல்களுக்கு எல்லாம் கை நுனிவிரலில் தீர்வுகளை வைத்திருக்கும் இந்தச் சோதிடர்கள் முதலில் தங்கள் சிக்கல்களை, குறிப்பாக பணமுடையை, ஏன் தீர்த்து வைக்கவில்லை? பணமுடை இருப்பதால்தானே இந்தக் கேவலமான சோதிடத் தொழிலைச் செய்கிறார்கள்! மற்றவர்களுக்குச் செய்யும் யாகம், சாந்தி, கிரக பரிகாரம், தாயத்து, நவரத்தினக் கல், யந்திரம், மோதிரம், காப்பு முதலியவற்றைத் தங்களுக்குச் செய்து சீரும் சிறப்புடனும் வாழ்வதுதானே? அப்படிச் செய்தால் கட்டுக் கட்டாக ஓலைச் சுவடிகளைச் சுமந்து கொண்டு கனடா, அமெரிக்கா என்று விமானம் ஏறிப் பறக்க வேண்டிய அவசியம் இல்லையே? ஏன் செய்யவில்லை?

சோதிடத்தைவிட எண் சாத்திரம் அண்மைக் காலத்தில் ஒரு தொற்று நோய் போல் தமிழ் மக்களிடம் பரவி வருகிறது. இதற்குக் காரணம் அதன் எளிமைதான். ஒன்று தொடக்கம் 22 வரை கூட்டக் கழிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் தங்களை எண் சோதிடர்கள் என்று சொல்லிக் கொண்டு கடையை விரிக்கலாம்!

கிரேக்க கணிதவியலாளர் பைதாகொறாஸ்தான்  (Pythagoras – BC 580-500)  இந்த எண் சாத்திரத்திரத்தை முதலில் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது.

இவர்தான் ஒற்றை இரட்டை எண்கள், முக்கோண எண்கள், நிறைவான (pநசகநஉவ) எண்கள் என எண்களை வகைப்படுத்தியவர்.

எண்களுக்குத் தெய்வாம்சம் மற்றும் தனி ஆளுமை உண்டெனவும் அவர் நம்பினார். ஒவ்வொரு எண்ணுக்கும் பால் வேற்றுமை (ஆண், பெண்) நிறைவான அல்லது நிறைவற்ற, அழகான அல்லது அலங்கோலமான குணாம்சங்களைக் கற்பித்தார்.

மிகவும் சிறந்த எண் (1 2 3 4 = 10) பத்து என்றும் அதனைக் குற்றுக்களாக எழுதும் போது நிறைவான முக்கோண வடிவமாக அமையும் எனக் கூறினார்.

இன்றைய கணிதவியலில் இந்தத் தெய்வாம்சம் அல்லது மாயக் கோட்பாடு நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆனால், அதன் எச்சசொச்சம் பாமர மக்களிடம் காணப்படுகிறது.

எண் சாத்திரத்தில் 11 எண்களைப் பயன்படுத்தி பலன் சொல்லப்படுகிறது. அந்த எண்கள் 1 2 3 4 5 6 7 8 9  11  22 ஆகும்.

ஒருவரது பிறந்த திகதி அல்லது திகதியோடு பெயரையும் சேர்த்து அவற்றுக்குரிய எண்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த எண்களைக் கூட்டி அதன் பெறுபேறு  9 க்கு மேல் வருமானால் அதை மேலும் கூட்டி ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க வேண்டும்.

பேரெண்களான 11, 22 இதற்கு விதி விலக்கு. அவை  2 (1 ூ 1) 4 ( 2  ூ 2) எண்களை விடச் சிறந்தவை அல்லது ஈடானவை என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு எண்ணும்   வெவ்வேறு குணாம்சங்களையும் பண்புகளையும் குறிக்கின்றன. எண்கள் 11, 22 மேல்படிப்புக்குரிய வாய்ப்பையும் மற்றும் (அல்லது) உளைச்சலான ஒரு சூழலில் சாதனை ஈட்டுதலையும் காட்டுகின்றன எனச் சொல்லப்படுகிறது.


சோதிடப் புரட்டு (65)

பிறப்புக்கும் பெயருக்கும் எண்ணுக்கும் உறவே இல்லை!

எண் சாத்திரத்தில் ஒருவரது பிறந்த திகதிதான் முக்கியமானது. அது மாதம், நாள,; ஆண்டு என்ற வரிசையில் வைத்துக் கணக்கிடப்படுகிறது. அதனை வாழ்க்கைப் பாதை (life – path) என அழைக்கின்றனர்.

ஒருவர் பிறந்தபோது பதிவு செய்த பெயர் எண்ணாக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும் எந்த எழுத்துக்களின் பெறுபேற்றைக் குறிக்கிறது என்பது கீழே தரப்பட்டுள்ளது.

1   2     3       4    5     6      7      8         9

A      B      C       D      E       F      G       H         I

J       K       L      M     N      O      P       Q         R

S      T      U       V     W      X      Y       Z

இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கிப் பலன் சொல்கின்றனர். எண்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது என்பது சொல்லப்படவில்லை. அவர்களுக்குத் தெரியுமா என்பதும் அய்யமே.

1   –  ஞாயிறு
2   –  கேது
3   –  குரு
4  –  இராகு
5   –  புதன்
6   –  சுக்கிரன் (வெள்ளி)
7   –  சந்திரன்
8   –  சனி
9   –  செவ்வாய்

இப்போது எண்சோதிட அடிப்படையில்  ஒருவரது பிறந்த திகதியை வைத்து எண்ணைக் கணித்துப் பார்ப்போம்.

ஒருவர் டிசெம்பர் 14, 1968 இல் பிறந்ததாக வைத்துக்கொள்வோம்.  மாதம் 3 (1 + 2) நாள் 5 (1 + 4) மற்றும் ஆண்டு 6 (1 + 9 + 6 + 8 = 24. மீண்டும் 2 + 4 = 6.

முதல் அறைகூவல் (challenge)  பிறந்த மாதத்துக்கும் பிறந்த நாளுக்கும் உள்ள வேற்றுமையைக் காணல். இது 5 – 3 – 2.

இரண்டாவது அறைகூவல்  பிறந்த நாள் பிறந்த ஆண்டு இரண்டுக்கும் இடையில் உள்ள வேற்றுமையைக் காணல். இது 6 – 5 = 1.

இறுதி அறைகூவல் மேற் காட்டிய முதல் அறைகூவலுக்கும் இரண்டாம் அறைகூவலுக்கும் இடையில் உள்ள வேற்றுமை. இது 2 – 1= 1.

முதல் அறைகூவல் ஒருவரது முதல்ப்; பாதி வாழ்க்கைப் பாதையை முடிவு செய்கிறது. இரண்டாவது அறைகூவல் மீதி வாழ்க்கைப் பாதையை முடிவு செய்கிறது. இறுதி அறைகூவல் முழு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவீனத்தையும் சிக்கல்களையும் காட்டுகிறது.

இவ்வாறு எண்களுக்கு ஆங்கில அகரவரிசையை ஒதுக்குவதும் கோள்களை ஒதுக்குவதும் அவற்றுக்கு குணாம்சங்கள் கற்பிக்கப்படுவதும் எண் சோதிடர்களால் விதிக்கட்டுப்பாடின்றி (arbitrary) செய்யப்படுகின்றன என்பது நன்கு புலனாகும். அடிப்படை பிழையென்றால் அதன் கீழ் எடுக்கப்படும் முடிவுகளும் பிழையாகவே இருக்கும் என்பது வாய்ப்பாடாகும்.

சிலர் பெயரை விட்டு விட்டுப் பிறந்த திகதியை வைத்தே பலன் சொல்கின்றனர். இன்னும் சிலர் பிறந்த நாளை வைத்தே பலன் சொல்லிவிடுகின்றனர்! இதனால்தான் இன்று யார் மீது நீங்கள் தடுக்கி வீழ்ந்தாலும் அவர் ஒரு எண் சோதிடராக இருக்கிற வாய்ப்பு இருக்கிறது!

சோதிடம் போலவே எண் சோதிடத்திலும் கோட்பாடு பற்றி ஒத்த கருத்தில்லை. சிலர் 1-9 எண்களை வைத்துப் பலன் சொல்கின்றனர். சிலர் 1-8 எண்களை மட்டும் வைத்துப் பலன் சொல்கிறார்கள். இன்னும் சிலர் 11, 22 எண்களையும் சேர்த்துப் பலன் சொல்கிறார்கள்.

எண்சோதிடத்தில் ஒருவர் பிறந்தவுடன் வைத்த பெயரே முக்கியமானது. அதுதான் அவரது தலைவிதியை தீர்மானிக்கிறதாம். இடையில் அவர் பெயரை மாற்றினால் அது அவரது தற்போதைய ஆளுமையை தீர்மானிக்கிறதாம். ஆனால், இதுபற்றி நடத்திய ஆய்வுகள் இந்த நம்பிக்கைகளை மெய்ப்பிக்கவில்லை.

எண் சோதிடர்கள் இப்படிப் பிறந்த திகதியையும் பெயரையும் கூட்டி வருகிற எண் அலையதிர்வுகளை (vibrations) எழுப்புவதாகச் சொல்கிறார்கள்.

எண்களுக்கு அலையதிர்வுகள் உண்டா? எண்கள் தெய்வீக சக்தியின் வெளிப்பாடா? இன்ன எண்ணுக்கு இன்ன பலன் என்று யார் வகுத்தார்கள்? என்ன அடிப்படையில் வகுத்தார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு எண்சோதிடர்கள் சொல்லும் விடை ‘இந்த எண்சாத்திரம் மாய மந்திரம் சார்ந்த ஒரு தெய்வீகக் கலை.  நாங்கள் சொல்லும் பலன் சரியா பிழையா என்று ஒருமுறை சோதித்துப் பாருங்கள்! அப்போது உண்மை தெரியும்” என்கிறார்கள்! ஆனால், வேறு சிலர் எண்சோதிடம் அறிவியல் அடிப்படையில் அமைந்த கலை என்கிறார்கள்! எண்களை வைத்துக் கொண்டு-

1) ஒருவரது குணம், நடை, திறமை, வாழ்க்கையின் நோக்கம், துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?

2) எந்த நகரத்தில் எந்த வீட்டில் குடியிருக்க வேண்டும்?

3) எப்போது நிலபுலம் வாங்க வேண்டும்?

4) எப்போது முதலீடு செய்ய வேண்டும்?

5) பயணம் செய்வதற்குரிய சிறந்த நாள் எது?

6) புது வாணிகம் எப்போது தொடங்க வேண்டும்?

7) எப்போது அறுவை வைத்தியத்தை வைத்துக் கொள்ளலாம்?

என்பதை எல்லாம் தங்களால் கணித்துக் கூற முடியும் என்கிறார்கள்.

சுற்றியும் சுற்றியும் சுப்பருடைய கோடிக்குள் என்பது போல உலகத்தில் இன்று வாழும் 600 கோடி மக்களை 9 எண்களில் எண்சோதிடர்கள் அடக்கி விடுகிறார்கள். இதனால்  அண்ணளவாக ஒரே எண்ணில் உள்ள 66.6 கோடி மக்களது விதி ஒரேமாதிரி இருக்க வேண்டும்! அப்படி இருக்கிறதா? இருக்க முடியுமா? அது சாத்தியமா? எண் சோதிடம் பாhப்பவர்கள் இவற்றை ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை?

எண்சோதிடர்கள் அராபிக் எண்களைப் பயன் படுத்துவதை ஓரளவு நியாயப்படுத்தலாம். அது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆங்கில அரிச்சுவடியைப் பயன் படுத்துவது எந்தவகையில் நியாயம்? ஆங்கில மொழி பேசுவோர் தொகையைவிட இந்தி, சீன மொழி பேசுவோர் தொகை உலகில் அதிகம் ஆயிற்றே?

வேடிக்கை என்னவென்றால் இந்திய எண்சோதிடர்கள் கூட ஆங்கில அரிச்சுவடியைத்தான் பயன்படுத்துகின்றனர். இது எண்சாத்திரம் மிக மிக அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

எண்களைப் பற்றிய மூடநம்பிக்கை எல்லாப் பண்பாட்டிலும் இருந்து வந்துள்ளது. இன்றும் இருந்து வருகிறது.

இரண்டு (2)  சீனமொழியில் (Cantonese) ‘சுலபம்’ என்பது போல் ஒலிக்கிறது. அதே நேரம் 24 எண் ‘சுலபமாகச் சாதல்’ என்பது போல் ஒலிக்கிறது.

நான்கு (4) சீன யப்பானிய பண்பாட்டில் போகூழ் (unlucky)  எண்ணாகக் கருதப்படுகிறது. காரணம் அந்த எண்ணை ஒலிக்கும் பொழுது சாவு என்ற ஒலிபோல் ஒலிக்கிறது. எனவே சீனர் 4 எண் வரும் வீட்டை வாங்குவதில்லை. மாறாகத்  தமிழர் பண்பாட்டில் 4 பற்றிய பயம் எதுவும் இல்லை.

ஏழு (7) பல பண்பாட்டில் போகூழ்  (unlucky) எண்ணாகவே கருதப்படுகிறது. தமிழரிடை இந்த எண் தீமையான எண்ணாகக் கருதப்படுகிறது. ஏழில் செவ்வாய் தோசமாக எண்ணப்படுகிறது. ஏழரைச் சனியன் ஒருவரை அலைக்கும் என நம்பப்படுகிறது.

எட்டு (8) சீனர் யப்பானியர் இருபாலாராலும் ஆகூழ் (lucky)   எண்ணாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் ஒலிப்பு வளமை என்ற ஒலிப்பைப் போல் இருக்கிறது.

ஆனால், தமிழரிடையே 8 கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. எட்டில் சனி மரணத்தைக் குறிப்பதாக சோதிட சாத்திரம் சொல்கிறது.

கனடாவில் வீடு வாங்கும் தமிழர் 8 வரும் வீடுகளை வாங்குவதில்லை. ஆனால், சீனர் அதனையே விரும்பி வாங்குகிறார்கள்!

பதின்மூன்று (13) மேற்குலக பண்பாட்டில் அச்சத்தை ஊட்டும் எண்ணாகக் கொள்ளப்படுகிறது. தொடர்மாடி வீடுகளைக் கட்டும்போது 12 ஆவது மாடிக்கு அடுத்த மாடியை 14 ஆவது மாடி என்று எழுதி வைத்துவிடுகிறார்கள்.

யேசுநாதரின் கடைசி விருந்தில் கலந்து கொண்ட 13 சீடர்களில் ஒருவரான யூதாஸ் யேசுவை 30 வெள்ளிக்காசுக்கு உரோம் ஆளுநருக்குக் காட்டிக் கொடுத்தவன் என்பதுதான் இந்த அச்சத்துக்குக் காரணம்.

ஆனால், 13 எண் சீனர்களது மொழியில் ‘வாழ்வு நிச்சயம்’ என ஒலிப்பதால் அது  நல்ல எண்ணாகக் கருதப்படுகிறது.

பதினேழு (17) இலத்தீன் மொழியில் XVII   என்று எழுதும் போது அது ‘நான் வாழ்ந்து முடித்து விட்டேன்’ (“I have lived”)  என்ற பொருளைத் தருகிறது, அதாவது இறப்பைக் குறிக்கிறது. எனவே இத்தாலி நாட்டில்  17 எண் போகூழாகக் கருதப்படுகிறது.

666 மிருகத்தின் எண் எனச் சொல்லப்படுகிறது.

9413 எண் சீன மொழியில் ‘தப்பி வாழும் வாய்ப்பு மிகவும் குறைவு’ (“slim chance of survival” ) மற்றும் ‘ஒன்பது பேர் இறக்கிறார்கள் ஒருவர் மட்டும் வாழ்கிறார்’ என்ற பழமொழிகளைக் குறிப்பதால் அது போகூழாகக் கருதப்படுகிறது!

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு எண் நல்லதா கெட்டதா நன்மையா தீமையா என்பது மனிதரது மனதைப் பொறுத்தது என்பதாகும். எண் பாபம். கோள்கள், இராசிகள், இராசி வீடுகள், நட்சத்திரங்கள் போல அதற்கு ஒன்றும் தெரியாது! அதற்கு எந்தச் சிறப்பு அதிர்வலைகளும் கிடையாது.

சாதகத்தைக் கணிக்கும் சோதிடனாவது ஒருவன் பிறந்த இடம், நாள், நேரம் இவற்றை வைத்து அந்தக் கணத்தில் விண்ணில் கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் நின்ற நிலைகளின் அடிப்படையில் சாதகத்தைக் கணித்துப் பலன் சொல்கிறான். கையால் சாதகத்தைக் கணித்துப் பலன் சொல்ல ஒரு நாள் பிடிக்கும்! ஆனால், எண்சோதிடத்தில் பலனைக் கணித்துச் சொல்ல சில மணித்துளி போதும்!

பிறந்த திகதியை எடுத்துக் கொண்டால் எதற்காக கிறித்தவ ஆண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்? கிறித்தவ ஆண்டை விட-

கலியுக ஆண்டு                         –    (கிமு 3102)
பவுத்த ஆண்டு                          –     (கிமு 544)
விக்கிமாதித்த ஆண்டு           –    (கிமு 57)
திருவள்ளுவர் ஆண்டு          –    (கிமு 31)
சாலிவாகன ஆண்டு              –   (கிபி 78)
இஸ்லாமிய (கிஜிரி) ஆண்டு  –    (கிபி 622)
கொல்லம் ஆண்டு                      – (கிபி 825)

இவற்றை ஏன் பயன்படுத்தக் கூடாது?

இந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது. காரணம் அவற்றுக்கான பதில் எண்சோதிடர்களிடம் இல்லை. அவர்கள் வெறுமனே தாங்கள் சொல்வதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மேலும் நெருக்கினால் எண் சாத்திரம் மாய மந்திரக் கலைகளைச் சார்ந்தது என மழுப்பி விடுகிறார்கள்.

கிறித்தவ நாள்காட்டியை எடுத்துக் கொண்டால் கூட அது தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. கிமு 1 யை அடுத்து கிபி 1 என கணிக்கப்பட்டதால் ஒரு ஆண்டு கூடுதலாக கணக்கிடப்பட்டுவிட்டது. யேசுநாதர் பிறந்த ஆண்டுத் தொடக்கமும் ஒரு ஊகம்தான்.

கிபி முதல் நூற்றாண்டு  1-100 வரை.  இரண்டாம் நூற்றாண்டு 101-200 வரை.  முதல் புத்தாயிரம் 1-1000 வரை. இரண்டாவது புத்தாயிரம் 1001 – 2000 வரை.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டு 2000 என எண்ணப்பட்டது. 2001 தான் மூன்றாவது புத்தாயிரத்தின் முதல் ஆண்டு. ஆனால், உலகம் 2001 ஆம் ஆண்டுக்குக் காத்திராது 2000 ஆம் ஆண்டையே மூன்றாவது புத்தாயிரம் ஆகக் கொண்டாடியது!

இந்தக் குழப்பத்திற்குக் கிபி 976 வரை சுழி (ணநசழ) அய்ரோப்பாவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் ஏது ஆகும்.  நடப்பு ஆண்டு 2004 குப் பதில் 2003 என்று இருக்க வேண்டும்!

இது மட்டுமல்ல, கிறித்தவ நாள்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தி அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நாள்கள், மாதங்கள் கூட்டியும் குறைத்தும் வந்திருக்கின்றன.

போப்பாண்டவர் கிறெகோறி (Popr Gregory XIII) 1582 இல் யூலியன் நாள்காட்டியைத் திருத்தி அமைத்தார். காரணம் யூலியர் சீசரால் (கிமு யூலை 13, 100- கிமு மார்ச் 15, 44) உருவாக்கப்பட்ட நாள்காட்டி (கிமு 46) தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 365 நாள்களாகவும் நான்காவது ஆண்டு 366 நாள்களாகவும் (leap year) கணிக்கப்பட்டது. கூடுதலான நாள் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை பெப்ரவரியில் கூட்டப்பட்டது. ஆனால், அப்படிச் செய்த போது ஆண்டொன்றுக்கு 11 மணித்துளி 14  நொடி கூடுதலாகக் கணக்கிடப்பட்டு விட்டது.

இந்தத் தவறைத் திருத்த 1582 இல் போப்பாண்டவர் கிறெகோறி யூலியன் நாள்காட்டியில் இருந்து 10 நாள்களைக் குறைக்குமாறு கட்டளை பிறப்பித்தார். அதற்கு அமைய 1582 ஒக்தோபர் 4 க்கு அடுத்த நாள் ஒக்தோபர் 15 எனக் கொள்ளப்பட்டது!

எனவே காலத்துக்குக் காலம் மாற்றப்பட்டும் திருத்தப்பட்டும் வந்த நாள்காட்டியின் அடிப்படையில் எண்கணித சோதிடர்கள் பலன் கூறுவது பகுத்தறிவுக்கு முரணானது.

எண்சோதிடர்கள் வௌ;வேறு எண்முறை (9, 8)  வௌ;வேறு எழுத்துமுறை (ஆங்கிலம், கீப்புறு) பயன்படுத்துவதால் அவை வௌ;வேறு முடிவுகளைத் தருகின்றன.

எண்களைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் ஒரே மாதிரியான விளக்கம் இல்லை. முதலாம் எண்காரர் மிகவும் செல்வாக்கானவர் எனவும் பேரளவு ஆளுமை உடையவர்; என்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது.  ஆனால், 4 எண்காரர் ‘தோல்வி, வறுமை மற்றும் துயர் நிறைந்தவர்களாக இருப்பர்’ எனச் சொல்லப்படுகிறது.

எனவே எண்சோதிடரின் பலன்கள் எண்சோதிட முறையைப் பொறுத்திருக்கிறதே ஒழிய எண்களைப் பொறுத்ததல்ல என்பது எளிதில் பெறப்படும். இதற்கு மேல் எண்சோதிடத்தைப் பற்றி எழுதுவது நேரத்தைப் பாழாக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கைரேகை சாத்திரத்தைப் படித்தவர்கள் என்று கூறப்படுகின்றவரும் நம்புகிறார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. கையில் கோடுகள் ஏன் காணப்படுகின்றன என்பதை அவர்கள் அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

குழந்தை கருவில் உருவாகும்போதே கைக் கோடுகள் உண்டாகின்றன.  கால் கோடுகள் பிற உறுப்புக்கள் எதற்காகத் தோன்றினவோ அதற்காகவே இந்தக் கோடுகளும் ஏற்பட்டுள்ளன கைவிரல்களை மடக்கவும், உள்ளங்கையைக் குழிக்கவும், குவிக்கவும், சுருக்கவும் இயற்கை கொடுத்தவை ஆகும்.

இக்கோடுகள் இல்லையேல் கைத்தோல் சுருங்காது விறைப்பாகவே இருக்கும். எதையும் எடுக்கவும் பிடிக்கவும் அள்ளவும் எழுதவும் முடியாது. கையில் ஏதேனும் வீக்கம் உண்டாகி தோலிலுள்ள சுருக்கக் கோடுகள் சமமாகிவிட்டால் கையை முடக்கவும் எழுதவும் முடியாமலிருப்பதை பலர் பட்டறிவில் பார்த்திருப்பார்கள்.

எனவே, கையிலுள்ள ரேகைகள் கையைப் பல வகையிலும் மடக்க ஏற்பட்ட சாதனமேயன்றி, மனிதனின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வரையறுத்துக் கூற வல்ல அடையாளங்களல்ல.  இஃது உடற்கூறு பற்றிய உண்மையாகும்.

குழந்தை கருவில் உருவானதும் கையைப் பலவாறு அசைக்கத் தோல்சுருங்குவதால் உண்டானவையே கைக்கோடுகள.; எல்லோருக்கும் கைரேகைகள் ஒரே மாதிரி இல்லாதிருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு குழந்தையின் அசைவும் (அழஎநஅநவெ) வௌ;வேறு விதமாக இருப்பதே ஆகும்.

கோடுகளை ஆயுள் ரேகை, தனரேகை என்று பெயரிடுவதும் கையில் உள்ள மேடுகளை சந்திர மேடு சனி மேடு என்று பெயரிடுவதும் எந்த விதிக்கட்டுப்பாடும் (யசடிவைசயசல) இல்லாது செய்தவை ஆகும்.

இத்தகைய கோடுகளைக் கொண்டு ஒருவருக்குப் பலன் சொல்வது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்றது ஆகும். தவிர கை தவிர்த்துப் பிற உறுப்புகளின் அமைப்புகட்கு ஏன் சோதிடம் சொல்லப் படவில்லை? உடல் கூற்றின்படி அமைந்த அவற்றை நீக்கி கைக் கோடுகளுக்கு மட்டும் கற்பனைச் சோதிடத்தைப் (கைரேகை) புகுத்துவது பொருத்தமன்று. ஆங்கிலத்தில் Pயடஅளைவசல என்று அதற்குப் பெயரிட்டு நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அதனைத் தமிழில் பெயர்த்துக் கொண்டு சிலர் குறி சொல்லிப் பிழைக்கின்றனர். சோதிடம் போன்றே கைரேகை சாத்திரத்தை நம்பும் மூட மதியினர் சிலர் எந்த நாட்டிலும் இருக்கவே செய்வார்கள்.

கைரேகை பார்ப்பவனும் கையைப் பார்த்துக் கொண்டு இராசி, கோள் ஆகியவற்றின்  பெயர்களைச் சொல்லித் தான் பலன் கூறுகிறான். எனவே, சோதிடமும் கைரேகையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப பலன் கேட்டு வருபவரது முகத்தை வைத்தே சோதிடர்கள,; கைரேகை சாத்திரிகள,; நாடி சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள் என்பது எளிதில் தெரியவரும்.

சோதிடம், கைரேகை, நாடி ஆகிய சாத்திரங்கள் ஒருவனது உயர்வுக்கு முயற்சியும் நிறைந்த அறிவும் இடைவிடாத செயலும் வேண்டியதில்லை கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் பார்வை இருந்தால் போதும் என மக்களை நம்பவைத்து அவர்களைச் சோம்பேறியாக்குகின்றன.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply