தமிழர்களது புத்தாண்டு தை முதல் நாள் என்பதை ஜெயலலிதா மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை!

தமிழர்களது புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற விவாதம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ள உண்மை. இதனாலேயே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் தமிழ்புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த நாள், பொங்கல் நாள் என கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் சனவரி 28, 2008 அன்று சட்ட சபையில் ஒரு மனமாக நிறைவேற்றப்பட்டது. அதனை ஆதரித்து அதிமுக உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.

தமிழர்களது புத்தாண்டு தை முதல் நாள் என்பதை ஜெயலலிதா மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒரு இந்துத்துவ அடிப்படைவாதி. அண்ணாவின் பெயரைக் கட்சிப் பெயரிலும் அண்ணாவின் படத்தைக் கட்சிக் கொடியிலும் போட்டாலும் அவர் தனது குலம் மற்றும் மத நம்பிக்கைகளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பவர்.

“நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவள். சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தை தமிழ் என்ற போர்வையில் களங்கம் செய்வது தவறு. இது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந் நடைமுறையைத் தடைசெய்வேன்” என்று 2011 இல் நடந்த தேர்தல் மேடைகளில் முழங்கினார்.

2011 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்தச் சட்டத்தை மாற்றிப் பழையபடி சித்திரை முதல்நாள்தான் தமிழரின் புத்தாண்டு என ஒகஸ்து 23, 2011 அன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். சித்திரை மாதத்தின் தொடக்கத்தை தமிழ்ப் புத்தாண்டு என்பது ஏன் என்பது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காக திமுக தலைவர் கருணாநிதி புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் ” சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும்” என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்றப் பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லை.

தமிழன் கோயிலில் சமஸ்கிருத மந்திரம், தமிழன் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரம் என்பதுபோல, தமிழன் ஆண்டையும் சமஸ்கிருதமாக்கிய பிற பண்பாட்டின் ஆதிக்கத்தையே சட்டசபைத் தீர்மானம் காட்டுகிறது. தமிழிலே பெயரில்லாத, சமஸ்கிருதத்தில் பெயருள்ள ஆண்டு எப்படித் தமிழாண்டாகும்?

தமிழர்கள் வாழ்வு இயற்கையை அடிப்படையாய்க் கொண்டது. ஆண்டை மட்டுமல்ல, மாதம், கிழமை நாள் இவற்றையும் இயற்கையின் அடிப்படையிலே கணித்தனர்.

ஒரு நாள் என்பது சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு. மாதம் என்பதற்கு திங்கள் என்ற பெயருண்டு. திங்கள் என்பது நிலா. நிலாவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்பட்ட காலம் என்பதால் அது திங்கள் (மாதம்) எனப்பட்டது.

சூரியன் தென்கோடியிலிருந்து, வடக்கு நோக்கித் தொடங்கும் பயணத்தின் முதல் நாளை, ஆண்டின் முதல் நாளாகக் கொள்வதென தமிழ் அறிஞர்கள் தீர்மானித்தனர். அதன்படி தை முதல் நாள் சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கி – சித்திரை மாதம் தலைக்கு மேல் நிற்கும். ஆனி மாதக் கடைசியில் வடகோடிக்குச் செல்லும் புரட்டாசி மாதக் கடைசியில் தலைக்கு மேல் மீண்டும் வரும். மார்கழிக் கடைசியில் தென் கோடிக்குச் செல்லும். ஆக, சூரியன் தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கி, மீண்டும் தென்கோடியைச் சென்றடைய எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஓர் ஆண்டு ஆகும்.

சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஓர் ஆண்டு ஆகும். இந்தச் சுற்றுப் பாதை ஒவ்வொன்றும் 30 பாகைகள் (Degrees) அளவுள்ள 12 பகுதிகளாக விதிக்கட்டுப்பாடின்றிப் (arbitrary) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும் 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மகரம் முதல் தனு இராசி வரை உள்ள 12 சூரிய மாதங்கள் (இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இப்படி காலக்கணக்கைக் கணிப்பதை தமிழில் காலந்தேர் (காலம்+தேர்) என்று அழைத்தார்கள்.

தமிழர், ஞாயிறின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர். இந்தியாவில் மலையாளிகளும் தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள். தற்காலத்தில் தமிழகத்தில் இம்முறை வழக்கத்தில் இருந்தாலும் அம்மாதங்களைக் குறிக்க சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும் சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும் மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு தோற்றப்பாடாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும் புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. தமிழ் முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலப் பகுதியாகும்.

வானியல் அடிப்படையில் ஞாயிறு தனு இராசியில் இருந்து மகர இராசிக்குள் புகுவதே தை புத்தாண்டுப் பிறப்பாகும். சித்திரைப் பிறப்பு மீன இராசியில் இருந்து மேட இராசிக்கு ஞாயிறு புகும் போது இடம்பெறுகிறது. முன்னது ஞாயிறு வடதிசைப் பயணத்தின் தொடக்கம். பின்னது ஞாயிறு வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் இருக்கிறது. அதாவது ஞாயிறு வான் நடுக்கோட்டை (celestial equator) கடக்கும் நாளாகும். எனவே பயணத்தின் தொடக்கத்தை வைத்து ஆண்டைக் கணிப்பதே பொருத்தமாக இருக்கும். மேற்குலகில் தை மாதத்தை ஆண்டின் முதல் நாளாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வருவது மனம் கொள்ளத்தக்கது.

சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுக் கணிப்பில் பல குறைபாடுகள் இருக்கின்றன.

(1) பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இந்தப் புராணக் கதை அருவருப்பான, அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது. அவற்றை தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது தமிழ் ஆண்டுகள் என ஒப்புக் கொள்ளமாட்டான்.

(2) சித்திரை முதல் நாளில் தொடங்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். ஒரு சுற்று 60 ஆண்டுகள் முடிய பழையபடி பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் தொடங்குகின்றன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ‘ ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாததாகும். வரலாற்றைப் பதியும் போது 60 க்கு மேலே ஒரு தொடராகக் கணக்கிட முடியாது. ஒருவர் 60 அகவைக்கு மேல் உயிர் வாழ்ந்தால் அவர் தனது பிறந்த நாளை கொண்டாட முடியாது. ஒருவர் மன்மத ஆண்டில் பிறந்தவர் என்று வைத்துக் கொண்டால் அவர் எந்த மன்மத ஆண்டில் பிறந்தவர் எனச் சொல்ல முடியாது.

(3) ஒரு சிறந்த நாகரிகம் படைத்த தமிழர்களுக்கு சொந்தமாக ஒரு தொடர் ஆண்டு இல்லை.

(4) சித்திரைப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தது.

ஜெயலலிதா தமிழரின் புத்தாண்டு தை முதல்நாள் என்று கலைஞர் கருணாநிதி மாற்றிவிட்டார் எனக் குற்றம் சாட்டுகிறார். அது தவறான குற்றச்சாட்டாகும். தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று மாற்றப்பட்டதற்கு நீண்ட வரலாறு உண்டு.

பிரபவ தொடங்கி அட்சய என்ற 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல் நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள். இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் “மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்’ என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் அடங்குவர்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, 2015 ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2046.

1971 இல் கலைஞர் கருணாநிதி ஆட்சி திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாள் குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டது. 1981 முதல் எம்ஜிஆர் ஆட்சி அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுமாறு ஆணை பிறப்பித்தது.

முதல்வர் ஜெயலலிதா பேசும் போது “சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு ஆகும். சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது. சூரியன், முதல் இராசியான மேட இராசிக்குள் நுழைவதில் இருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும்” எனக் குறிப்பிட்டார்.

முதல்வர் சொல்வது போல ஞாயிறு நடுக்கோட்டுக்கு நேராகப் பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது என்பது சரியென்றால் சித்திரை ஆண்டுப் பிறப்பு மார்ச்சு 21/ 22 இல் பிறக்க வேண்டும். சித்திரை 14 இல் அல்ல. வானியல் அடிப்படையில் மார்ச்சு மாதம் 21/22 அன்றுதான் ஞாயிறு புவியின் நடுக்கோட்டைக் கடக்கிறது. அன்று புவியின் எப்பாகத்திலும் பகல் 12 மணி நேரமும் இரவு 12 மணி நேரமும் அதாவது பகலிரவு சமமாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் Equinox என்று அழைப்பர். அதுவே வேனில் காலத்தின் தொடக்க மாகும்! Résultats de recherche d’images pour « seasons in the sun »

எனவே ஞாயிறு “பூமத்திய ரேகையை ஏப்ரில் 14 இல் கடக்கிறது” என்பது தவறு! ஏப்ரில் 14 இல் ஞாயிறு நடுக்கோட்டுக்கு வடக்கே நாளொன்றுக்கு ஒரு பாகை என அதன் சுற்றுப் பாதையில் 24 பாகை நகர்ந்துவிடுகிறது. இந்தத் தவறுக்குக் காரணம் புவிக்கும் – ஞாயிறுக்கும் – புவிக்கும் நட்சத்திரத்துக்கும் இடையில் காணப்படும் காலக் கணிப்பில் ஏற்படும் அயனாம்ச வேறுபாடாகும். புவி தனது அச்சில் 71.5 ஆண்டில் 1 பாகை மேற்கு நோக்கி நகருகிறது. இதனை இந்திய காலக் கணிப்பு கணக்கில் எடுப்பதில்லை. எனவே புண்ணிய காலங்கள் எல்லாம் 24 நாள்கள் பிந்தி வருகின்றன. புவி நடுக்கோட்டைக் கடக்கும் போது ஞாயிறு மேட இராசியில் இல்லாது மீன இராசி 7.00 பாகையில் காணப்படுகிறது.

மாறி வரும் பருவங்களுக்கும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புவி தனது அச்சில் அதன் ஓடு பாதைக்கு 23.45 பாகை ஒருக்களித்துக் காணப்படுவதே பருவமாற்றங்களுக்குக் காரணமாகும்.

“சித்திரையே வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு கிடையாது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வதுதான் வாழையடி வாழையாக வந்து கொண்டிருக்கும் மரபாகும்.

சங்க இலக்கியத்தில் தை மாதத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு சித்திரை மாதத்துக்குக் கொடுக்கப்படவில்லை. மேலே கூறியவாறு வானியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு தனது தென்திசைச் (தட்சணாயனம்) செலவை முடித்துக் கொண்டு வடதிசைச் செலவைத் (உத்தராயணம்) தொடங்குகிறது. அதாவது தனு இராசியை விட்டு விலகி மகர இராசியல் ஞாயிறு புகுகிறது. தமிழர்களுடைய புத்தாண்டு ஞாயிறின் பயணத்தின் தொடக்கத்தில் இருக்க வேண்டுமா? அல்லது நடுவில் இருக்க வேண்டுமா?

தொல்காப்பியர் காலத்தில் ஆவணி மாதம் ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது என தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நர்ச்சினார்க்கினியர் மூலம் தெரிகிறது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

new2015_j

தொல்பொருள் ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் சென்ற ஆண்டு நடந்த ஒரு வானியல் கருத்தரங்கில் பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்கத் தவறினால் பிற்காலத்தில் அயனப் பிறப்பு நாட்கள் தலை கீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும் என எச்சரித்தார்.

எனவே இந்தக் குளறுபடிகளை நீக்க வேண்டும் என்றால் தமிழ் ஆண்டுக் கணிப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அத்திருத்தம் சமய சார்பற்ற முறையில் அமைய வேண்டும். அதற்குத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு முறையைப் பொங்கல் திருநாளில் தொடங்குவதே சாலவும் பொருத்தமாக இருக்கும்.

ஆக பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அருவருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது. திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க உதவுகிறது.

· * 60 ஆண்டு சுழற்சி வராது.

· * தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம்.

· * தமிழர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்படும்.

· * தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பொய்யில் புலவர் திருவள்ளுவருக்குத் தலைசிறந்த நினைவாக அமையும்.

· * தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச் சிறப்படையும்.

ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். பாலியல் திருமணம், உடன்கட்டை ஏறுதல் இன்று சட்டப்படி தடைசெய்யப்பட்டுவிட்டன. ஆதலால் தைப்பொங்கல் நாளான தைத்திங்கள் முதல் நாள் – திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை!

இருந்தும் இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்காமல் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடலாம். அதில் குற்றமில்லை.

ஆனால் சமய வேறுபாடின்றி ஒரு இந்துத் தமிழனும் ஒரு கிறித்தவ தமிழனும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் நாள் என்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும் கொண்டாடுவதே ‘தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு! அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்’என்பதை மெய்ப்பிக்க உதவும்.

சித்திரைப் புத்தாண்டு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் “நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட தமிழ்ப் புத்தாண்டு நாளில் உறுதியேற்போம்” எனக் குறிப்புட்டுள்ளார்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply