“பார்’ BAR பற்றியே சிந்திக்காத “பார்’+ஆளுமன்ற PAR(LIAMENT) உறுப்பினர்கள்!

Varatharajan Mariampillai

* தலைவர் செயலதிபர் என்று இருக்க தனித்தனியாக அறிக்கை விட்டவர்கள் அல்ல இவர்கள்!

* தலைவர்கள் இருக்கத்தக்கதாக தனித்தனியாகப் போய் பண்டாவை டட்லியை ,ஜே.ஆரை, சிறீ மாவைச் சந்திக்காதவர்கள் இவர்கள்.

* தலைவர்கள் தலைமைப் பீடம் செயற்குழு மத்தியகுழு என்றிருக்க தெற்கின் தலைவர்களைச் சந்தித்து தம் தம்பாட்டில் அறிக்கை விடாதவர்கள் இவர்கள்.

*தேர்தலுக்காகத் தமது காணி பூமி நிலங்களை விற்றவர்கள்.

* பாராளுமன்றம் போய்க் கனகாலத்தின் பின் தான் தம் வீட்டைக் கட்டியவர்கள்.

* எம்.பி யாக இருந்த காலம் முழுக்கத் தமது தொகுதியிலுள்ள தனது வீட்டுக்குப் போகும் ஒழுங்கைக்கு மின் சாரம் போடாதவர்கள்.

* விடுதலைப் போராட்டத்திற்குத் தம் பிள்ளைகளையும் தந்தவர்கள்; இழந்தவர்கள்.

* போராளிக் குழுக்களால் தெருநாய் போல சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்; சுட முன்னும்; சுடும்போதும் தெய்வாதீனமாகத் தப்பியவர்கள்.

* இங்கு வரிசையிலுள்ள இவர்களை மட்டும் அல்ல, இன்னும் பலரின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தலைமைக்கு விசுவாசம், வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மூன்று உதாரணங்களை மட்டும் தருகிறேன்.

•தமிழர் ஐக்கிய முன்னணி தொடங்கிய காலத்தில் அதில் அங்கம் வகித்த தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஜீ.ஜீ யிடம் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுக்கக் கேட்டபோது அவர் “செல்வநாயகமும் இருக்கேக்க கேளும்’ என்று சொன்னாராம். ஜீ. ஜீ பேட்டி கொடுக்கவில்லை.

•தலைவர் சிவசிதம்பரத்திடம் மாவட்ட அபிவிருத்திச் சபையில் நியமிக்கப்பட்ட குழுக்கள் தொடர்பாக நான் கேட்ட போது

” தம்பி அது அமிர்தான் சொல்லவேண்டும் ‘ அமிரைச் சந்திப்பேன் அதற்குப் பிறகு வாரும் சொல்கிறேன்’ என்றார்.

•பருத்தித்துறை எம்.பி. துரைரத்தினத் திடமும் உடுப்பிட்டி எம்.பி இராசலிங்கத்திடமும் நாங்கள் முன்பு அரசாங்கத்தின் அறிவிப்புகள் ஏதாவது தொடர்பாக கூட்டணியின் கருத்தைக் கேட்டால் உடனடியாகவே “அது தலைவர் சிவாவும் அமிரும் தான் சொல்லவேண்டும்; செயற்குழு கூடிய பின் அதுபற்றிய முடிவை அறிவிப்பார்கள். இப்போது எங்களைக் கேளாதீர்கள்’என்று சொல்வதே வழக்கம்.

• உரிமைப் போரில் கலக்க வேண்டி இணைந்து அறவழிப் போராட்டம், பொலிஸ் அடி தடி,

இராணுவ அடக்குமுறை, கைதுகள் சிறை வாழ்வு எனப் பலவற்றைத் தாண்டியவர்கள்! அதிஷ்டலாபச் சீட்டுப் பரிசாக அங்கத்தவர் பதவி கிடைக்காதவர்கள்.

•இறுதி வரையும் தங்கள் மக்களுக்காகக் கொள்கைப் பற்றுடன் தம்மை அர்ப்பணித்த பார் + ஆண்ட+ மன்னர்கள் இவர்கள்!!

•இப்படியும் தலைவர்கள் இருந்தார்கள்; அப்படியான கல்வி, சமூகப் பின்னணியுடனான பிரதிநிதிகளைக் கண்ட தமிழரசியற் சமூகத்தில் நாம் வாழ்ந்தோம்- என்பதை இன்றைய தலைமுறையினரும் இளம் ஊடகர்களும் அறிந்து கொள்வதற்காக,

இவர்களும் பார்+ ஆள்+ மன்ற உறுப்பினர்களாக எமக்கு எம் மண்ணில் இருந்தார்கள்; திரிந்தார்கள்- என்பதை நினைவூட்டவே இந்தப் பதிவு.

Be the first to comment

Leave a Reply