ஜோதிடம் கற்கலாம் வாங்க – 2

Neerkondar Entammal Venkudusamy Naidu

18 January 2013

கிரகங்கள் 9

1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. இராகு
9. கேது

ராசிகள் 12

1. மேஷம்
2. ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம்
5. சிம்மம்
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

ஏற்கனவே கூறியபடி வான்வெளியை 12 பாகமாக பிரித்தால்,அதனை12 ராசியாக கொள்ளலாம். 1 பாகத்துக்கு 30 பாகை வரும். ஏனெனில் வட்டத்திற்கு 360 பாகை என்பது அனைவருக்கும் அறிந்ததே. அறியாதவர்கள், 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் வரைகருவிப் பெட்டியை (அதாங்க ஜியாமெட்ரி பாக்ஸ்) வாங்கி பார்த்தால், அதில் ஒரு அரை வட்டம் (பாகைமானி) இருக்கும். அதில் 0 முதல் 180 பாகை வரை குறிக்கப்பட்டு இருக்கும். அரைவட்டத்திற்கு 180 பாகை என்றால், முழு வட்டத்திற்கு 360 பாகையாகும். அந்த 360 பாகையை 12 சம பாகமாக பிரித்தால, 1 பாகத்திற்கு 30 பாகை வரும். இந்த 30 பாகையே ஒரு ராசியின் அளவாகும்.

அன்பரே ! கையில் பேப்பர் வைத்து இருந்தால் அதில் ஒரு வட்டம் வரைந்து, அதனை 12 பாகமாக பிரித்து வரைந்து பார்க்கவும். வட்டம் சில சமயம் கோழிமுட்டை வடிவில் அமையும், பார்க்க அழகாக இருக்காது. அதனால் தமிழர்கள் புத்திசாலிகள், சிரமமாக இருக்கும் எந்த வேலைக்கும் மாற்று வழி கண்டு பிடித்து விடுவார்கள். அவர்கள் பின் வருமாறு சதுரம் வரைந்து, அதனை 12 பாகமாக பிரித்து, சில நொடிகளில் எளிதாக வரைந்து விடுவார்கள்.

தென்னிந்தியா முழுமைக்கும், இந்த வகையிலேயே பயன்படுத்தப் படுவதுவதால் தான் இது நம்மவர்கள் கண்டுபிடிப்பு என்று கூறுகிறேன். தென்னிந்தியாவில் உள்ள, எந்த மொழியிலும், கலை இலக்கியங்களிலும், கலாசாரத்திலும், பழக்க வழக்கங்களிலும், தமிழின் தாக்கம், தமிழரின் பங்கு இருப்பது அறிவியல் முறைப்படி நிரூபணம் ஆகியுள்ளதால் தான், தமிழ் உலக மொழிகளில் பழமை வாய்ந்த 6 மொழிகளில் ஒன்று என செம்மொழி அந்தஸ்து கிடைத்து உள்ளது. (உலகில் உள்ள மற்ற 5 செம்மொழிகள் எவை என்று தெரியுமா? கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனமொழி).

சரி இப்பொழுது ஜோதிடத்திற்கு வருவோம். வரைவதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்பதற்காக பின்வரும் முறையில், வரைந்து பழகுவோம். மேஷ ராசி எந்த கட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்று சற்று ஊன்றி கவனிக்கவும். அதில் இருந்து ஒவ்வொரு ராசியாக எழுதி பழகினால் போதும். இந்த பாடத்தில் உள்ள விவரங்களையும், ராசி சக்கரத்தையும் இப்போதைக்கு வரைந்து பழகுங்கள். விரைவில் மீண்டும் சந்திப்போம்.

12மீனம்1மேஷம்2ரிஷபம்3மிதுனம்
11கும்பம்ராசிகள் 124கடகம்
10மகரம்5சிம்மம்
9தனுசு8விருச்சிகம்7துலாம்6கன்னி

நட்சத்திரங்கள் 27

1. அசுவினி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகிணி

5. மிருகசீரிடம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்திரட்டாதி

27. ரேவதி

இந்த 27 நட்சத்திரங்களை ராசி மண்டலத்தின் மொத்த பாகை 360க்கு பங்கிட்டால் 1 நட்சத்திரத்திற்கு 13 பாகை 20 கலை வரும். ஒரு கிரகத்தின் ஸ்புடம் (இருப்பு நிலை) 10 பாகை 3 கலை என்று கொடுக்கப்பட்டிருந்தால் அந்த கிரகம், முதல் நட்சத்திரமான அஸ்வினியில் நிற்கிறது என்று பொருள். 13-20 க்கு மேல் 26-40க்குள் இருந்தால், 2 வது நட்சத்திரமான பரணியில் நிற்கிறது என்று பொருள். இவ்வாறு கிரக நிலைகளை பகுத்து உணரலாம். சரி பாதம் என்ற சங்கதியைப் பற்றி ( இங்கே) சொல்லியிருந்தீர்களே சாமி, அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை !

ஏற்கனவே சொல்லியபடி 4 பாதங்கள் சேர்ந்தால் 1 நட்சத்திரம் என்ற கணக்குப்படி, ஒரு நட்சத்திரத்திற்கான 13 பாகை 20 கலையை, 4பாகமாக பங்கு வைத்தால் 1 பங்குக்கு 3 பாகை 20 கலை வரை வரும், இது தான் நட்சத்திரத்தில் 1 பாதத்தின் அளவு. அதாவது நட்சத்திரத்தின் ஒரு காற்பகுதி ( ஒரு குவார்ட்டர் ! !)

இனி துல்லியமாக சொல்வதென்றால், 3 பாகை 20 கலை வரை 1 ஆவது பாதம், அதற்கு மேல் (அதாவது 3 பாகை 20 கலைக்கு மேல்) 6 பாகை 40கலை வரை 2 ஆவது பாதம், அதற்கு மேல் 10 பாகை 0 கலை வரை 3ஆவது பாதம், அதற்கு மேல் 13 பாகை 20 கலை வரை 4 ஆவது பாதம் என்று ஒரு நட்சத்திர அளவான 13 பாகை 20 கலையை 4 பாதங்களாக பிரித்து உணரலாம்.

இப்பொழுது விவரமாக பார்க்கலாம். ஒரு கிரகத்தின் ஸ்புடம் (இருப்பு நிலை) 10 பாகை 3 கலை என்று கொடுக்கப்பட்டிருந்தால் அந்த கிரகம், முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 4வது பாதத்தில் நிற்கிறது என்று பொருள் காண வேண்டும். அதனை சுருக்கமாக, ஜாதகத்தில் உள்ள கிரக ஸ்புட அட்டவணையில், கிரகத்தின் நேரே அஸ்வினி – 4 என்று எழுதியிருப்பார்கள். மேலே உள்ள பத்திகளை ஒரு முறைக்கு இரு முறை கவனத்துடன் படித்தால் நன்கு விளங்கும். தெளிவு பிறக்கும்.ராசி மண்டலத்தில் நட்சத்திர பங்கீடு

நாம் ஏற்கனவே கடந்த பதிவுகளில் கூறியபடி, ராசி மண்டலத்தில் உள்ள 108 பாதங்களை 12 ராசிக்கும் பங்கிட்டால், ராசி ஒன்றுக்கு 9 பாதம் வரும் என்று பார்த்துள்ளோம். ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதம் என்பதால், ஒரு ராசியில் 3 நட்சத்திரங்கள் முழுமையாக வருவதில்லை. உதாரணத்திற்கு, மேஷ ராசியை எடுத்துக் கொண்டால், அஸ்வினியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்த்திகையின் முதல் பாதம் (1 பாதம்) மட்டுமே வரும். இப்படி மேஷ ராசியின் 9 பாதங்களும் 3 நட்சத்திரத்திற்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகையின் மற்ற 3 பாதங்களும் (அதாவது 2,3,4 ஆம் பாதங்கள்) அடுத்த ராசியான ரிஷபத்தில் வரும். இப்படியாக 27 நட்சதிரங்களும், 12 ராசிகளுக்கு பங்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பின்வரும் அட்டவணையை பார்க்கவும்.

ராசிநட்சத்திரம்பாத எண்மொத்தபாதங்கள்

மேஷம்
அஸ்வினி12344
பரணி12344
கார்த்திகை11
ஆக மொத்த பாதங்கள்9

ரிஷபம்
கார்த்திகை2343
ரோகினி12344
மிருகசீரிடம்122
ஆக மொத்த பாதங்கள்9

மிதுனம்
மிருகசீரிடம்342
திருவாதிரை12344
புனர்பூசம்1233
ஆக மொத்த பாதங்கள்9

கடகம்
புனர்பூசம்41
பூசம்12344
ஆயில்யம்12344
ஆக மொத்த பாதங்கள்9

சிம்மம்
மகம்12344
பூரம்12344
உத்திரம்11
ஆக மொத்த பாதங்கள்9

கன்னி
உத்திரம்2343
அஸ்தம்12344
சித்திரை122
ஆக மொத்த பாதங்கள்9

துலாம்
சித்திரை342
சுவாதி12344
விசாகம்1233
ஆக மொத்த பாதங்கள்9

விருச்சிகம்
விசாகம்41
அனுஷம்12344
கேட்டை12344
ஆக மொத்த பாதங்கள்9

தனுசு
மூலம்12344
பூராடம்12344
உத்தராடம்11
ஆக மொத்த பாதங்கள்9

மகரம்
உத்தராடம்2343
திருவோணம்12344
அவிட்டம்122
ஆக மொத்த பாதங்கள்9

கும்பம்
அவிட்டம்342
சதயம்12344
பூரட்டாதி1233
ஆக மொத்த பாதங்கள்9

மீனம்
பூரட்டாதி41
உத்திரட்டாதி12344
ரேவதி12344
ஆக மொத்த பாதங்கள்9

இப்படியாக ராசி மண்டலத்தில் உள்ள 108 பாதங்கள்27 நட்சத்திரங்களாக 12 ராசிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடத்தின் மூலமாக, நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இனி தங்களுடைய நட்சத்திரத்தை கூறும்பொழுது, பாதத்தையும் சேர்த்துக் கூறப் பழக வேண்டும். ஏனெனில் மிருகசீரிடம்-2 எனில் ரிஷப ராசியிலும், மிருகசீரிடம்-3 எனில் மிதுன ராசியிலும் வருவதால், ராசி மாறிவிடும். அதனால் பொதுவாக மிருகசீரிடம் என்று சொல்லாமல், பாதத்தையும் சேர்த்து சொல்ல வேண்டும்.

கடந்த பாடத்தில் நட்சத்திர பங்கீட்டை அட்டவணையாக அளித்திருந்தேன். இதனை இராசி சக்கரத்திலும் இந்த பாடத்தில் அளித்துள்ளேன். இப்படி இராசி சக்கரத்தில் குறிப்பிட்டுள்ளபடி தாங்கள் பயிற்சி செய்வது மிகுந்த பயனளிக்கும். ஒரு கிரகத்தின் நட்சத்திர பாதம் கொடுக்கப்பட்டு இருப்பின், அதனை சட்டென்று இந்த ராசி சக்கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி எழுதி விடலாம்.

மீனம்பூரட்டாதி 4உத்திரட்டாதி 1,2,3,4ரேவதி 1,2,3,4மேஷம்அஸ்வினி 1,2,3,4பரணி 1,2,3,4கார்த்திகை 1ரிஷபம்கார்த்திகை 2,3,4ரோகினி 1,2,3,4மிருகசீரிடம் 1,2மிதுனம்மிருகசீரிடம் 3,4திருவாதிரை 1,2,3,4புனர்பூசம் 1,2,3
கும்பம்அவிட்டம் 3,4சதயம் 1,2,3,4பூரட்டாதி 1,2,3இராசி சக்கரம்கடகம்புனர்பூசம் 4பூசம் 1,2,3,4ஆயில்யம் 1,2,3,4
மகரம்உத்திராடம் 2,3,4திருவோணம் 1,2,3,4அவிட்டம் 1,2சிம்மம்மகம் 1,2,3,4பூரம் 1,2,3,4உத்திரம் 1
தனுசுமூலம் 1,2,3,4பூராடம் 1,2,3,4உத்திராடம் 1விருச்சிகம்விசாகம் 4அனுஷம் 1,2,3,4கேட்டை 1,2,3,4துலாம்சித்திரை 3,4சுவாதி 1,2,3,4விசாகம் 1,2,3கன்னிஉத்திரம் 2,3,4அஸ்தம் 1,2,3,4சித்திரை 1,2

பஞ்சாங்கத்தில் கிரக பாத சாரங்கள் என்ற தலைப்பில் பின் வருமாறு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை இராசி சக்கரத்தில் எவ்வாறு அடைப்பது என்று பார்ப்போம்.

கிரகம்நட்சத்திர பாத சாரம்
சூரியன்சித்திரை – 3
சந்திரன்திருவோணம் -2
செவ்வாய்புனர்பூசம் – 4
புதன்ஆயில்யம் – 1
குருகார்த்திகை – 3
சுக்கிரன்அஸ்தம் – 2
சனிஅனுஷம் – 3
இராகுசதயம் – 3
கேதுபூரம் – 3

மேலே கொடுக்கப்பட்டுள்ள இராசி சக்கரத்தில் உள்ள நட்சத்திர பங்கீட்டை கவனித்து அதன் படி கிரகங்களை இராசி சக்கரத்தில் எழுதலாம். உதாரணத்திற்கு, சூரியன் சித்திரை – 3 எனபஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தால், சூரியனை துலா ராசியில் எழுத வேண்டும். இவ்வாறே மற்ற கிரகங்களையும் எழுதினால், சக்கரத்தில் அடைக்க பழகினால், நீங்கள் ஜோதிட தொடக்கப் பள்ளியில்1 ஆம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்று காலரை உயர்த்தி சொல்லிக் கொள்ளலாம்.

குரு
இராகுஇராசி சக்கரம்செவ்வாய்புதன்
சந்திரன்கேது
சனிசூரியன்சுக்கிரன்

அய்யா ! அதெல்லாம் சரி தான். பஞ்சாங்கம் என்று ஒரு சமாச்சாரம் சொல்லுகிறீர்களே அதனை கொஞ்சம் விளக்குங்கள், என்று ஒரு மாணவர் கேட்பதை யாம் ஞான திருஷ்டியில் அறிவோம் ! பெரும்பாலும் ஜோதிடம் அறியாத பலரும், நாள் நட்சத்திரம் பார்ப்பதற்காக பஞ்சாங்கத்தைப் பற்றி தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இருப்பினும், பஞ்சாங்கத்தின் பயன்பாட்டைப் பற்றி தெரியாதவர்களுக்காக அடுத்த பதிவினை எழுதலாம் என்று நினைக்கிறேன், அது வரை பொறுமை காக்கவும்.

நாழிகை கணக்கு அவசியமா?

நாழிகை கணக்கு பாரத நாட்டில் மட்டுமே ஆயிரக் கணக்கான வருடங்களாக கணிதத்தில், ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் காலக் கணக்கீடாகும்.

தற்பொழுது உலகளவில் பயன்பாட்டில் உள்ள மணி நிமிஷ கணக்கை முதலில் காணலாம்.
1 நாள் = 24 மணிகள்
1 மணி = 60 நிமிஷங்கள்
1 நிமிஷம் = 60 வினாடிகள்
வினாடியைப் பிரித்து, 60 ன் மடங்குகளாக சொல்வதற்கு காலக்கணக்கீட்டு முறையோ, பெயரோ மேலை நாட்டு கணிதத்தில் இல்லை. தற்பொழுது கணிப்பொறி காலத்தில் ஏதுவாக, மில்லி செகண்ட், மைக்ரோ செகண்ட், நேனோ செகண்ட் என்று 1 வினாடியைப் பிரித்து 1000ன் மடங்குகளாக சொல்லப்படுகிறது.

சரி, இப்பொழுது நாழிகை கணக்கீட்டைப் பார்க்கலாம்.
1 நாள் = 60 நாழிகை
1 நாழிகை = 60 வினாடி
1 வினாடி = 60 தர்ப்பரை
1 தர்ப்பரை = 60 விதர்ப்பரை

இப்படி போகுதய்யா நம்முடைய காலக் கணக்கீடு. இதற்கு மேலும் 60ன் மடங்குகள் உள்ளது. இந்தப் பதிவின் அளவு கருதியும், எல்லோரின் நேரமின்மை கருதியும் இது போதும் என்று கருதுகிறேன். சரி தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு வரலாம் !

1 நாளை ஆங்கில முறைப்படி 24 பாகமாக பிரிப்பது துல்லியமா? அல்லது இந்திய ஜோதிடவியல் கூறுவது போல 60 பாகமாக பிரிப்பது துல்லியமா? நாழிகை கணக்கு நமக்கு தெரியவில்லை என்பதற்காக, சீ ! சீ ! இந்த பழம் புளிக்கும் என்று ஏமாற்றத்தில் சொல்லும் புத்திசாலி நரியின் நிலைமையில் தான் நம்மில் பலர் இருக்கிறார்கள்.

அதனால், ஜோதிட காலக் கணக்கீட்டில் நாழிகை கணக்கே மிகவும் துல்லியமாகும், அவசியமாகும். ஒரு சில பஞ்சாங்க கணித வல்லுனர்கள் பொது மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, கொஞ்சம் சிரமப்பட்டு, கணிதம் செய்து, மணி நிமிஷங்களில் பஞ்சாங்கங்களை வெளியிடுகிறார்கள். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குவோமாக ! இப்படி காலத்திற்கேற்ப நம்மை புதுப்பித்துக் கொள்வதனால் தானய்யா இந்திய ஜோதிடவியல் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், திருக்கணித முறையை பயன்படுத்துகிறோம்.

GMT என்றால் என்ன?

இந்தப் பதிவை எழுதுவதற்கான அவசியத்தை முதலில் சொல்லி விடுகிறேன். எனது நண்பர் ஒருவர் துபாயில் டாட் நெட் டெவலப்பராக உள்ளார். என்னுடன் கணிணி மென்பொருள் குறித்தும், ஜோதிடம் குறித்தும் அடிக்கடி ஆலோசனை செய்பவர். அமெரிக்காவில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு, யாரோ நண்பர் கொடுத்தார் என்பதற்காக தன்னுடைய விவரத்தையும், இதுவரை செய்த புராஜக்ட் விவரங்களையும், தன்னுடைய அனுபவத்தையும் விவரமாக மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அமெரிக்காவில் அவர் இருக்கிறார், அவரின் மனைவி தமிழ்நாட்டில் மென்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். எனது

நண்பர் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் இருவரின் மின்னஞ்சல் பரிவர்த்தனைகளை குறித்து என்னுடன் ஆலோசனை செய்தார். 3, 4 மின்னஞ்சல் பரிவர்த்தனைகளுக்கு பின், நண்பரிடம் தொலைபேசியில்இண்டர்வியூ செய்ய விரும்பி, அவருடைய தொலைபேசி எண்ணையும், எந்தக் கிழமையில், நேரத்தில் பேசினால் உங்களுக்கு பேச ஏதுவாக இருக்கும் என்றும் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு எனது நண்பர், வெள்ளி, சனிக்கிழமைகள் தனக்கு ஓய்வு நாட்கள் என்றும்,இண்டர்வியூக்கு தோதான நேரத்தை, அதே நேரம் அமெரிக்காவில் இருக்கும் அவருக்கும் சரியாக வருமா என்றும் ஆராய்ந்து, என்னுடன் பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை செய்த அனுபவத்தில், நேரத்தை GMT–ல் தெரிவித்து இருந்தார். இதுவரை பதிலே வரவில்லை, போன் அழைப்பும் இல்லை. மீண்டும் ஒரு முறை அதே மின்னஞ்சலை தட்டி விட்டு பார்த்தார். நோ ரெஸ்பான்ஸ்! மீண்டும் மின்னஞ்சல் அனுப்ப அவருக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்ன பிரச்சினையாக இருக்கும்? 3, 4 மின்னஞ்சல்கள் நல்லாதானே 3 வாரங்களாகப் போய்க் கொண்டு இருந்தது, பதிலும் வந்து கொண்டு இருந்தது. தொலைபேசி எண்ணையும், நேரத்தையும் கேட்டாரே, பேசிவிட்டு ரிஜக்ட் செய்து இருந்தாலும் பரவாயில்லையே! வேறு ஆள் கிடைத்து விட்டதாக சொல்லி பெட்டர் லக் நெக்ஸ் டைம் என்று அந்த மேதாவி வாழ்த்தி இருந்தாலும் பரவாயில்லையே! என்று புலம்பி தள்ளி விட்டார். பிறகு நான் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி உங்கள் மேல் எந்த தவறும் இல்லை, அவருக்கு தான் நீங்கள் கூறிய GMTநேரம் தெரியவில்லை போல, அதனால் அவர் தான் வருத்தப் பட வேண்டும் என்று கூறியவுடன் சிரித்து விட்டார். நம்முடைய நோக்கமே அறிமுகப் பதிவில் கூறியதைப் போல பாஸிடிவ் மனநிலையை உருவாக்குவது தானே!

அமெரிக்க இந்திய மேதாவி தன் அறியாமையை மறைப்பதற்காக அவர் கடைபிடித்த எஸ்கேபிஸம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி இனி சப்ஜெக்ட்டுக்கு வருவோம். GMT என்றால் என்ன?GMT என்பது Greenwich Mean Time என்பதன் சுருக்கமேயாகும். இங்கிலாந்தில் லண்டன் அருகில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தை (அங்கு தான் ராயல் அப்ஸர்வேட்டரி உள்ளது) ஒரு ஆதாரமாக (reference) வைத்து உலகில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் நேர வித்தியாசத்தை கணக்கீடு செய்வதற்காக ஏற்படுத்தினார்கள். International Meridian Conference in 1884-ல் நடந்த போது கிரீன்விச்சை ஆதாரமாக கொள்ள முடிவெடுத்தார்கள். உதாரணத்திற்கு கும்மிடிபூண்டி எங்கப்பா இருக்கு என்று கேட்டால், சென்னைக்கு அருகில் 30 கி.மீ. வடக்கே உள்ளது என்று சென்னையை ஆதாரமாக (reference)வைத்து சொல்லுவோம்.

அதைப்போல எல்லா நாடுகளின் நேரத்தையும் கிரீன்விச்சை ஆதாரமாக வைத்து சொல்கிறோம். இந்திய நேரமானது 5 மணி 30 நிமிடம் கிரீன்வீச்சில் உள்ள நேரத்தைவிட கூடுதலாக இருக்கும். அதனை சுருக்கமாக +5.30 GMT என்று குறிப்பிடுவார்கள். அதாவது இந்தியாவில் மாலை 5.30 மணி எனில் கிரீன்வீச்சில் மதியம் 12.00 மணியாக இருக்கும். பொதுவாக இந்தியர் எல்லோருக்கும் +5.30 GMT என்பது தெரிந்திருக்கும். ஆனால் மற்ற நாடுகளின் GMT நேர வித்தியாசம் அவ்வளவாக தெரியாது. சிங்கப்பூரில் வேலை செய்பவருக்கு சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசம் தெரியும், GMT நேர வித்தியாசமும் தெரிந்திருக்கலாம், ஆனால் அவரிடம் லிபியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கேளுங்கள் தெரியாது என்றுதான் சொல்லுவார். இந்த மாதிரியான குழப்பத்தில்தான் அவர் போன் செய்யவில்லையோ! இருப்பினும் நண்பருக்கு நல்ல எதிர்காலம் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!

பூமிக்கு மனிதனால் வரையப்பட்ட கற்பனை ரேகைகள்.

ஒரு பொருளின் இருப்பிடத்தைக் குறிப்பிட, குறைந்தது 2 ஆயத்தொலைவுகள் ( 2 Coordinates, namely X, Y) வேண்டும். உதாரணத்திற்கு வேலைக்கு போகும் அவசரத்தில் செல்பேசியை எடுத்துக் கொடுக்க மனைவியிடம் சொல்லும்போது, பெட்ரூமில் வலது பக்கத்தில் உள்ள அலமாரியில் வைத்து இருக்கிறேன், எடுத்துக் கொடு என்று கேட்போம். இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் அவர் பெட்ரூம் மற்றும் வலது அலமாரி என்ற இரண்டு ஆயத்தொலைவுகளை வைத்து செல்பேசியின் இருப்பிடத்தை அறிய சொல்கிறார். அதைப்போல பூமியில் நம்முடைய ஊரின் இருப்பிடத்தை அறிய அட்சாம்சம் (Latitude), ரேகாம்சம் (Longitude)ஆகிய இரண்டு ஆயத்தொலைவுகளை பயன்படுத்துகிறோம்.

நாம் ஏற்கனவே கடந்த பதிவில் கூறியதைப்போல கிரீன்விச்சை ஆதாரமாக வைத்து அதன் வழியாக வடக்கிலிருந்து தெற்காக போகும் ஒரு கற்பனை ரேகையை பூஜ்ய பாகை ரேகாம்சமாக ( 00.00degree Longitude) எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கோட்டில் இருந்து கிழக்கே 180 பாகைகளும், மேற்கே 180 பாகைகளும் (ஆக 360 பாகைகள்) கணக்கிட்டு அதில் எத்தனையாவது பாகையில் தங்கள் ஊர் உள்ளது என்று சொல்லவேண்டும்.

சென்னை மாநகரம், கிரீன்விச்சிற்கு கிழக்கே தோராயமாக 80 ஆவது பாகையில் உள்ளது. அதனைக் குறிப்பிட ரேகாம்சம் 80 பாகை கிழக்கு என்று குறிப்பிடுவார்கள். (80 degree East)மிகச் சரியாக சொல்வதென்றால் சென்னை 80° 17′ Eஅதாவது சென்னை கிரீன்விச்சிலிருந்து 80 பாகை 17 கலையில் கிழக்கே உள்ளது.

அட்சாம்சம் (Latitude),

அடுத்தது அட்சாம்சம். எப்படி கிரீன்விச்சிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனையாவது பாகையில் ஒரு நகரம் உள்ளது என்று ரேகாம்சம் (Longitude) என்ற ஆயத் தொலைவை வைத்து சொல்லுகிறோமோ, அவ்வாறே அட்சாம்சம் (Latitude), என்ற ஆயத்தொலைவையும் பயன்படுத்தினோம் என்றால் மிகச் சரியாக அந்த நகரத்தின் இருப்பிடம் தெரிந்துவிடும். அட்சாம்சத்தை பூமத்திய ரேகையை ஆதாரமாக வைத்து சொல்ல வேண்டும். அந்த நகரமானது பூமத்திய ரேகைக்கு வடக்கு அல்லது தெற்கில் உள்ளது என்று கூற வேண்டும். சென்னையின் அட்சாம்சம் 13 பாகை 4 கலை (வடக்கு).

இவ்வாறு, ஒரு நகரத்தின் இருப்பிடத்தை அட்சாம்சம் மற்றும் ரேகாம்சம் ஆகிய 2 ஐயும் கொண்டு துல்லியமாக அறிய முடியும். எதனால் இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் ஜோதிட கணிதத்திற்கு தேவைப்படுகிறது என்றால்,

(1) இந்திய ஜோதிடவியலை உலகில் உள்ள பல நாடுகளில் பிறந்தவர்களுக்கு பயன்படுத்த வேண்டுமெனில் இந்த விஷயங்கள் ஒரு ஜோதிடருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

(2) பெரும்பாலும் பஞ்சாங்கத்தில், சூரிய உதயம் அந்த பஞ்சாங்கம் வெளியிடப்படும் நகரத்தைப் பொறுத்தே கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, வாசன் பஞ்சாங்கத்தில் சூரிய உதயம் சென்னையைப் பொறுத்தும், ஆற்காடு பஞ்சாங்கத்தில் வேலூரைப் பொறுத்தும், பாம்பு பஞ்சாங்கத்தில் திருநெல்வேலியைப் பொறுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். சூரிய உதயத்தை வைத்தே இந்திய ஜோதிடத்தில் லக்னம் மற்றும் பல விஷயங்கள் கணிக்கப்படுவதால், சூரிய உதயம் மிக அவசியமாகும். அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருந்தால் உலகில் உள்ள எந்த இடத்துக்கும் எளிதாக சூரிய உதயம் பஞ்சாங்கத்தின் உதவியின்றி கணக்கிடலாம்.

(3) உள்ளூர் மணி (சுதேச மணி) (LMT – Local Mean Time) கணக்கிட இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.

(4) நட்சத்திர ஹோராமணி(Sidereal Time), பாவஸ்புட கணிதம் போன்ற நுணுக்கமான கணக்கீடுகளுக்கும் இந்த அட்சாம்ச, ரேகாம்ச அளவுகள் தெரிந்திருக்க வேண்டும்.

அதென்ன ஐயா உள்ளூர் மணி?

அடுத்தப் பதிவில் விவரமாகப் பார்க்கலாமா?

வெளியூர் பயணங்கள் காரணமாக தொடர்ச்சியாக பதிவுகள் இட இயலவில்லை. சிலர் மட்டுமே எனக்கு மின் அஞ்சல் அனுப்பி அடுத்த பதிவைப் பற்றி கேட்டிருந்தார்கள். அந்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி ! பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி !

உள்ளூர் மணி (அ) சுதேசி மணி (LMT – Local Mean Time)

இந்தியாவுக்கு காலை 5.30 மணி என்றால், பாகிஸ்தானுக்கு காலை5.00 மணி ஆக இருக்கும். அதாவது இந்தியாவின் GMT +5.30 , பாகிஸ்தானின் GMT +5.00, அதனால் இந்திய ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும், பாகிஸ்தான் ஸ்டாண்டர்டு நேரத்திற்கும் உள்ள வித்தியாசம் 30 நிமிடங்கள். எடுத்துக்காட்டாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்திற்கும், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்திற்கும் இடைப்பட்ட நேர வித்தியாசம் 30 நிமிடங்கள். (இந்த இரு நகரங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு தெரியுமா? சுமார்600 கி.மீ. மட்டுமே). இவ்வாறு 600 கி. மீ. தொலைவு உள்ள இரு நகரங்களுக்கும் இடையே 30 நிமிட வித்தியாசம் என்றால், பெரிய நாடான இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் நகரங்களான மும்பாய்க்கும், கல்கத்தாவுக்கும் (சுமார் 1800 கி.மீ. தொலைவு) எப்படிங்க ஒரே நேரமாக இருக்க முடியும்? ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

இந்திய ஸ்டாண்டர்ட் நேரம், எங்கே மிகச் சரியாக இருக்கும் தெரியுமா? உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரத்தில் மட்டுமே. ஏனெனில் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் கிரீன்விச்சிலிருந்து82 பாகை 30 கலை கிழக்கே (ரேகாம்சம்) உள்ள அலகாபாத் நகரத்தைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது. பாகைக்கு 4 நிமிடங்கள் என்ற அளவிலேயே கணக்கிட வேண்டும்.82 பாகை 30 கலை என்பதை 82.5பாகை எனக்கொள்வோம் ( 30 கலை என்பது 1/2 பாகை என்பதால் .5என்று எடுத்துக்கொள்வோம்), அப்படி என்றால் 82.5 x 4 நிமிடம் = 330நிமிடங்கள் அதாவது 5 மணி 30 நிமிடங்கள். இப்படித்தான் இந்தியாவின் +5.30 GMT அலகாபாத் நகரத்தைப் பொறுத்து உருவானது. அதாவது கிரீன்விச்சில் நள்ளிரவு 00.00 மணி எனில் அலகாபாத்தில் காலை 5.30 மணியாக இருக்கும். இது தான் அலகாபாத் நகரின் உள்ளூர் மணி(LMT – Local Mean Time). இதையே பொது மக்களின் எளிய பயன்பாட்டிற்காக இந்தியா முழுமைக்கும் பயன்படுத்துமாறு இந்திய ஸ்டாண்டர்ட் நேரமாக (IST)அறிவிக்கப்பட்டது. 

ஆக, நாம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் நேரம் அலகாபாத்தின் உள்ளூர் மணியாகும். ஆனால் அறிவியல் ரீதியாகவும், ஜோதிடவியல் ரீதியாகவும் பார்த்தோமானால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் உள்ளூர் மணி வேறுபடும். உள்ளூர் மணிதான் மிகச் சரியான, துல்லியமான நேரமாகும். அதனால் தான் ஜாதகம் கணிக்க உள்ளூர் நேரத்தை முதலில் கணக்கிடுவார்கள். அதற்கு நமக்கு கடந்த பதிவில் பார்த்த ரேகாம்சம் பயன்படுகிறது.

இப்பொழுது சென்னையின் உள்ளூர் மணி கணக்கிடுவோம்.சென்னையின் ரேகாம்சம் 80° 17′ Eஎன கடந்த பதிவில்குறிப்பிட்டிருந்தேன்கிரீன்விச்சிலிருந்து கணக்கிட்டோமெனில் 321நிமிடங்கள் வரும். அதாவது 5 மணி 21 நிமிடங்களே வரும். அப்படி யெனில் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் 5 மணி 30 நிமிடமாக இருக்கும் போது, சென்னையில் உள்ளூர் நேரம் 5 மணி 21 நிமிடங்களாக இருக்கும். இதுதான் சென்னையின் மிக சரியான நேரமாகும். அதாவது சென்னையின் உள்ளூர் மணி அலகாபாத்தின் உள்ளூர் மணியை விட, அதாவது இந்திய ஸ்டாண்டர்ட் நேரத்தை விட 9நிமிடம் குறைவாக இருக்கும். இவ்வாறு பல நகரங்களுக்கும், சரியான உள்ளூர் மணியைக் கணக்கிடலாம்.

என்ன தலை சுற்றுகிறதா? பல முறை படித்து, எழுதி கணக்கிட்டுப் பார்த்தால் எளிதில் விளங்கும்.

இந்திய ஜோதிடம் கிரகம், நட்சத்திரம், ராசி என்ற 3 விஷயங்களை அடிப்படை தூண்களாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. மற்ற எல்லா ஜோதிட விஷயங்களும் இம்மூன்றின் மேல் நுட்பத்துடன் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட கட்டிடமே.

கிரகங்கள் 9நட்சத்திரங்கள் 27ராசிகள் 12 இவைகளைப் பற்றிய முழு விபரங்களையும் ஒருவர் நன்கு அறிந்து, கணித்து, அதன் பயன்பாடுகளை ஜாதகத்திற்கு ஏற்றவாறு பலன் சொல்லத் தெரிந்தால் அவரே ஒரு சிறந்த ஜோதிடர் ஆவார்.

ஜோதிடம் என்பது ஒரு பெருங்கடல் என்றும், அப்பெருங்கடலை கடப்பது அவ்வளவு எளிதல்ல, அதை எல்லோராலும் கற்க, புரிந்து கொள்ள இயலாது என்றும் அதைக் கற்றுணர்ந்த சிலர், பலரிடம் சொல்லி பயமுறுத்தி வருகின்றனர். சிறிய வயதிலிருந்தே நமக்கு அவ்வாறு சொல்லி பழக்கப்படுத்திவிட்டதால் நமக்கு அவ்வாறு தோன்றுகிறது.

பெருங்கடலை கடக்க நமக்கு 3 அடிப்படை விஷயங்களே தேவை. படகு, துடுப்பு, படகோட்டி. ராசி என்னும் படகை, நட்சத்திரம் என்ற துடுப்பைக் கொண்டு, சரியான திசையில் செலுத்தும் படகோட்டியே கிரகமாகும்.

எப்படி படகு, துடுப்பு, படகோட்டி ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவைகளோ அதைப் போல கிரகம், நட்சத்திரம், ராசி இவைகள் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.

அவைகள் எப்படி தொடர்புடையன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த பதிவில் ஜோதிடத்தின் முக்கிய 3 தூண்களாக கிரகம், நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கூறினோம். அவைகளுக்கு இடையேயான தொடர்பை வரும் பதிவுகளில் காண்போம்.

முதலில் கிரகங்களுக்கும் ராசிகளுக்கும்உள்ள தொடர்பைக் காணலாம்

ராசிஆட்சி செய்யும் கிரகம்
மேஷம்செவ்வாய்
ரிஷபம்சுக்கிரன்
மிதுனம்புதன்
கடகம்சந்திரன்
சிம்மம்சூரியன்
கன்னிபுதன்
துலாம்சுக்கிரன்
விருச்சிகம்செவ்வாய்
தனுசுகுரு
மகரம்சனி
கும்பம்சனி
மீனம்குரு

ஆட்சி செய்யும் கிரகம் என்னப்பா செய்யும்? 
ஒவ்வொருவரும் மேற்கூறப்பட்ட ஏதாவது ஒரு ராசியில் / லக்னத்தில் பிறந்தேயாக வேண்டும். அவருடைய ராசிக்கேற்ப ராசியாதிபதியும், லக்னத்திற்கேற்ப லக்னாதிபதியும் அமைந்துவிடுவார். அவர்தான் உங்களுக்கு எல்லாமும். அவருடைய குணாதிசயம்தான் உங்களுக்கு அமையும். ஜாதகத்தில் அவர் அமையும் இடத்தைப் பொறுத்து நன்மை தீமைகளை செய்வார். ஜாதகத்தில் இவர் கெடக்கூடாது. இவர் சொந்த வீட்டில் அதாவது ஆட்சியாக இருப்பது ஜாதகருக்கு சிறப்பாக அமையும்.

உதாரணத்திற்கு ஒருவர் சிம்ம ராசியில் பிறந்திருந்தால் அவருடைய ராசிநாதன் சூரியன் ஆவர். ஏனெனில் மேலே உள்ள அட்டவணைப்படி சிம்ம ராசியை ஆட்சி செய்யும் கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் சிம்ம ராசியிலேயே அமர்ந்து இருப்பாராயின், அவர் ஆட்சியில் உள்ளார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இவர் சொந்த வீட்டில் அதாவது ஆட்சியாக இருப்பது ஜாதகருக்கு மிகவும் சிறப்பாகும். சிம்மம் தவிர்த்து மற்ற ராசிகளில் சூரியன் இருந்தால் அவர் ஆட்சியில் இல்லை என்று கொள்ள வேண்டும், ஜாதகத்தை ஆராய்ந்தே பலன் சொல்ல வேண்டும். இவ்வாறே ராசிகளுக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உண்டாகிறது.

அடுத்தப் பதிவில் நட்சத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் உள்ள தொடர்பைக் காணலாம்.

இந்தப் பதிவில் கிரகங்களுக்கும், நட்சத்திரங்க்ளுக்கும் உள்ள தொடர்பைக் காணலாம். எப்படி ஒவொவொரு ராசியையும் கிரகங்கள் ஆட்சி செய்கின்றனவோ, அதுபோல நட்சத்திரங்களையும் கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. என்னவொரு வித்தியாசம் ராசிகளை ஆட்சி செய்பவர்களின் பட்டியலில் இராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இல்லை. ஏழு முக்கிய கிரகங்களை மட்டுமே ராசிகளின் ஆட்சியாளர்களாக பல கிரந்தங்களில் ஜோதிட மேதைகள் பட்டியலிட்டு உள்ளனர்.

ஆனால் இராகு, கேது ஜாதகத்தில் எந்த ராசியில் நிற்கிறார்களோ அந்த ராசியை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் கில்லாடிகள். உதாரணத்திற்கு, ஒருவருடைய ஜாதகத்தில் கேது விருச்சிகத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கடந்த பதிவில் உள்ள அட்டவணைப்படி விருச்சிகத்தின் சொந்தக்காரர் செவ்வாய். ஆனால் விருச்சிகத்தில் இருக்கும் கேது, செவ்வாய் தர வேண்டிய பலனை அவர் சார்பாக கேதுவே ஜாதகருக்கு தருவார். அரசியல்வாதிகள் அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதைப் போலத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

ஆனால் நட்சத்திரங்களை பகிரும்போது இராகு, கேதுவையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டார்கள். பின்வரும் அட்டவணையில் நட்சத்திரங்களை ஆளும் கிரகங்ளின் விவரங்களை தந்துள்ளோம்.

நட்சத்திரங்கள்ஆளும் கிரகம்
அசுவினிமகம்மூலம்கேது
பரணிபூரம்பூராடம்சுக்கிரன்
கார்த்திகைஉத்திரம்உத்திராடம்சூரியன்
ரோகிணிஅஸ்தம்திருவோணம்சந்திரன்
மிருகசீரிடம்சித்திரைஅவிட்டம்செவ்வாய்
திருவாதிரைசுவாதிசதயம்இராகு
புனர்பூசம்விசாகம்பூரட்டாதிகுரு
பூசம்அனுஷம்உத்திரட்டாதிசனி
ஆயில்யம்கேட்டைரேவதிபுதன்

9 கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்களை, ஆளுக்கு 3 நட்சத்திரங்களாக சமமாக பங்கிட்டு சண்டை போடாமல் சமர்த்தாக இருக்கச் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்குள்ளேயும் ஈகோ பிரச்சினையும், சண்டையும் இருக்கத்தானே செய்கிறது. அதனை எதிர்காலத்தில் வரும் பதிவுகளில் விவரமாகக் காண்போம்.

நட்சத்திராதிபதி என்னப்பா செய்வார்?

இது மிக முக்கியமான கேள்வி என்பதால், இதற்கென ஒரு தனி பதிவை, விளக்கமாக தரலாம் என உள்ளேன். அடுத்து வரும் பதிவுகளில் எதிர்பார்க்கலாம்.

கிரகம், நட்சத்திரம், ராசி என்ற மூன்றும் இந்திய ஜோதிடத்தின்3 தூண்கள் என கடந்த ஒரு பதிவில் கூறியிருந்தோம். அவை மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பார்த்து வருகிறோம். கடந்த பதிவுகளில், கிரகங்களுக்கும், ராசிகளுக்கும் உள்ள தொடர்பையும், கிரகங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் உள்ள தொடர்பையும் பார்த்தோம். பாக்கி நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் உள்ள தொடர்பேயாகும். இதனையும் நாம் ஏற்கனவே தொடர்புபடுத்தியுள்ளோம். நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் உள்ள தொடர்பைக் காணஇங்கே சொடுக்கவும்.

இந்த மூன்றிற்குமான தொடர்புகளை பல முறை படித்து தெளிதல் நன்றாகும். ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்கள், இவைகள் மட்டுமே. இந்த மூன்றிற்கான கணிதங்களையும், பயன்பாடுகளைப் பற்றியும், எழுதத் தொடங்கினால் 30,000பக்கங்களுக்கும் அதிகமான ஒரு புத்தகமாக ஆகிவிடும். அப்பொழுதும் அது முழுமை பெறுமா என்று சொல்ல இயலாது. அவ்வளவு விஷயங்கள் எழுதலாம்.

மூன்றையும் தனித் தனியாக அலசுவோம். முதலில் 9கிரகங்களைப் பற்றி பார்ப்போம்.

முக்கிய கிரகங்களாக உலக அளவில் 7 கிரகங்களே பேசப்பட்டு வந்தன. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு,சுக்கிரன், சனி ஆகும். அதனால் தான் வார நாட்கள் 7 என்றும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கிரகத்தின் பெயரையும் வைத்தனர். இந்திய ஜோதிடத்தில் இந்த 7 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட ராசிகளை நம் முன்னோர்கள் அடையாளம் கண்டனர். ஜோதிட மேதை வராஹமிஹரர் தனது பிருஹத் ஜாதகம் என்ற வடமொழி நூலில் இந்த 7 கிரகங்களைப் பற்றியே எழுதியுள்ளார். அவருடைய காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அவர் இந்த 7 கிரகங்களுக்கே தனது கிரந்தம் முழுவதிலும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இன்றைய காலத்திலும் அவரின் பிருஹத் ஜாதகம் என்ற நூலையே ஜோதிட வல்லுனர்கள் ஆதார நூலாக (ரெஃப்ரன்ஸ்) பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவருக்கு முன்பும், அவருக்கு பின்பும் எழுதப்பட்ட பல கிரந்தங்களில் இராகு, கேதுக்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழிலும் அதற்கான சான்றுகள் உள்ளன. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சைவ சமய 63 நாயன்மார்களில், முக்கியமானநால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தனது கோளறு பதிகத்தில், இராகு கேதுக்களைப் பற்றியும் பாடியுள்ளார். தற்போதைய மேலை நாட்டு ஜோதிடத்தில், சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இந்தியாவிலும் ஒரு சிலர் இதற்கும் ஜாதகத்தில் இடம் கொடுத்து பலன் சொல்லி வருகின்றனர்.

மேலும் நம்மவர்கள் கிரகங்களின் துணைக் கோளையும் (உப கிரகம்), சேர்த்து பலன் சொல்லி வருகின்றனர். துணைக் கோட்களில் முக்கியமான துணைக்கோள், சனிக்கு சொந்தமானது. அந்த துணைக் கோளின் அளவு சந்திரனைவிடப் பெரியது. ஆங்கிலத்தில் அதனை டைட்டான் என்று சொல்லுவார்கள். இதனை கலிலியோவுக்கு பின்பு வந்த ஒரு டச்சு விண்வெளி ஆய்வாளர் Christiaan Huygens 1655-ல்கண்டுபிடித்தார். தமிழில் இந்த மிக முக்கியமான சனியின் துணைக்கோளை மாந்தி என்று அழைக்கிறோம். ஆயிரக் கணக்கான வருடங்களாக இதனை ஜாதகத்தில் நாம் கணித்து, பலன் கூறி வருகிறோம். பெரும்பாலும் வட இந்திய ஜோதிடர்கள் மாந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தென்தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் மாந்தியுடன் தான் ஜாதகத்தைக் கணிப்பார்கள். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு கிரகத்தைப் பற்றியும் தனித்தனியாக பார்க்கலாம். அடுத்தப் பதிவில்குடும்பத்தலைவர் சூரியனைப் பற்றி பார்க்கலாம்.

Posted by njagadeedsan9@gmail.com at 18:58 

Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Labels: jothidam

3 comments:

  1. Unknown1 August 2013 at 00:51sir naan kanni raasi kaarar astham natchathiram
    naan jothidam kattrukkollalaamaa…Reply
  2. indra kumar26 August 2018 at 10:48thiruvonam star, makara rasi.. aanal paadham theriyavillai.. paadham sollungal sirReply
  3. nava7 May 2023 at 18:15டியர் சார்
    இரவில் பிறந்த ஜாதகருக்கு சுதேசி மணி எப்படி கணிப்பது?

    உதாரணமாக
    கார்த்திகை 26 1974
    இரவு 1:10AM
    பிறந்த ஊர் கோவை

    சுதேசி மணி, நட்சத்திரம் ஹோரை மணி, உதயாதி நாழிகை






    Reply

Newer PostOlder PostHome

Subscribe to: Post Comments (Atom)

Labels

Be the first to comment

Leave a Reply