சாதிமறுப்பு திருமணத்தை ஊக்கப்படுத்தி பார்ப்பனியத்தை எதிர்த்த மாவீரன் சாகு மகாராஜா !!
சாகு மகாராஜா
இயற்பெயர் யஸ்வந்த்ராவ் அரசர் குடும்பம் இவரை தத்து எடுத்து முடிசூட்டு விழா நடத்தியது .அரசராக பதவி ஏற்கும் முன்பு இவருக்கு பயிற்சி வழங்கியவர் Stuart Mitford fraser என்கிற ஆங்கிலேய அதிகாரி . பிற்காலத்தில் Fraser மைசூர் அரசருக்கும் பதவியேற்கும் முன்பு பயிற்சி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்தியாவில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு முன்மொழிந்த கோல்காபூர் சாகு மகாராஜாவும் (1902) , மைசூர் மகாராஜாவும் Stuart Mitford fraser அவர்களிடம் அரசியல் பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கதக்கது.
பார்ப்பனிய எதிர்ப்பு , கல்வி புரட்சி , பெண் கல்வி , இடஒதுக்கீடு , ஒடுக்கப்பட்டோர் நலன் என மகத்தான ஆட்சியை கோல்காபூர் சமஸ்தானத்தில் தந்தவர் சாகு மகாராஜா .
சாதிமறுப்பு திருமணத்தை ஆதரித்து அவை செல்லும் என்று சட்டம் தந்தவரும் இவரே தான் . பிராமணர் அல்லாதோர் இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று எண்ணி அதற்கான முன்னெடுப்புகளை எடுத்தவர் . முற்போக்கு சக்திகளோடு தோழமை பாராட்டியவர் .
முஸ்லிம்களின் மசூதியை ஹிந்துக்கள் கையகப்படுத்த பார்க்கிறார்கள் என்கிற சிக்கல் எழுந்த போது கூட
இந்து அரசு இந்துக்களின் பக்கம் தான் நிற்கும் என்று இல்லாமல் சுமுகமாக மதச்சார்பு இல்லாமல் அந்த சிக்கலை தீர்த்துவைத்தார் சாகு மகாராஜா
அரசர்களுக்கும் சூத்திரர்கள் தான் என்று பார்ப்பனர்கள் சாகு மகாராஜாவை ஒதுக்கிய போது .
தன்னுடைய சமஸ்தானத்தில் பார்ப்பனர்களுக்கு பதிலாக மராத்தாக்களை அர்ச்சகராக நியமித்தவர் .
டிசம்பர் மாதம் 1917 இந்தியாவில் சுயாட்சி தொடர்பாக இங்கிலாந்து அரசின் இந்திய செயலாளர் மாண்டேகு விடம் , பிற்படுத்தபட்டோரை உயர்த்துவது தான் என் முதல் கடமை , குறிப்பாக தலித் மக்களை . அவர்களுக்கு உங்கள் அரசு அரசியலமைப்பில் போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் , ‘கம்யூனல் பிரதிநிதித்துவம்’ கட்டாயம் வேண்டும் , தலித் மக்களின் சமூக மத தகுதியை உயர்த்தவே நான் பாடுபட்டுவருகிறேன் . அர்ச்சகர்களோடு (பார்ப்பனர்கள்) நான் மோதி வருவது உங்களுக்கு தெரியும் ஆனால் அவர்களை இன்று நான் மண்டியிட வைத்து இருக்கிறேன் .என தன்னுடைய கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்தார் சாகு மகாராஜா .
இதே காலகட்டத்தில் சவுத்போரா குழுவிடம் விட்டல் ராம்ஜி ஷிண்டே தலித் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும் ஆனால் 4ஆம் வகுப்புவரை படித்து இருந்தால் மட்டும் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு யோசனை சொன்னார் அதை ஒருவேளை ஆங்கிலேய அரசு ஏற்க கூடும் என்கிற சூழலில் 1920 களில் புரட்சியாளர் அம்பேத்கரோடு இணைந்து நாக்பூர் பகுதியில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டார் அதில் அம்பேத்கர் அவர்கள் விட்டல் ராம்ஜி ஷிண்டேவின் கருத்தை எதிர்த்து பல தீர்மானங்களை முன்மொழிந்தார் .

சாகு மகாராஜாவுக்கும் -அம்பேத்கருக்கும் இடையே கொள்கை உறவு இருந்தது, அந்த கொள்கை உறவை வெளிப்படுத்த அம்பேத்கர் மீண்டும் போய் அயல்நாட்டில் படிக்க நிதி அளித்து உதவினார் . சாகு அவர்களின் இயற்பெயரான யஸ்வந்த் என்பது தான் அம்பேத்கரின் மகன் அவர்களின் பெயர் என்பதையும் கவனிக்க வேண்டும் . பிளேக் நோய் பரவி இருந்த போது மருத்துவரான தன் தத்து மகனை மக்களிடம் பணியாற்ற சொல்லி பிளேக் நோயில் இருந்து மக்களை காப்பாற்றி அந்த நோயாலேயே தன் மருத்துவர் மகனை போல தானும் இறந்த போன சாவித்திரி பாய் பூலே அவர்களின் மகன் பெயரும் யஸ்வந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சமூகப் புரட்சியை நிகழ்த்திய சாகு மகாராஜா ,1922 மே மாதம் 6, ஆம் தேதி காலை சுமார் 5;45 மணி அளவில் இந்த மண்ணை விட்டு பிரிந்தார் . நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு கடைசி நிமிடம் வரை சுயநினைவோடு இருந்த அவர் “நான் போவதற்கு தயாராகிவிட்டேன் , எனக்கு அச்சம் இல்லை , அனைவருக்கும் போய் வருகிறேன்” என்று சொன்னதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள் .
வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்தை எதிர்த்த அந்த அரசனின் இறுதி நிகழ்வுகள் வரலாற்றில் இன்னொரு சிறப்பை சேர்த்து .
பிற்படுத்தப்பட்டோருக்கு , தலித் மக்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் இது கலியுகம் இந்த யுகத்தில் அரசர்களும் சூத்திரர்கள் தான் என்று பரப்புரை செய்த பார்ப்பனர்கள் சாகு மகாராஜா உயிரோடு இருந்தபோது அவரை அரசராக ஏற்க மறுத்தார்கள் . இதனாலேயே வேதங்கள் தெரிந்த எவரும் அர்ச்சகராக முடியும் என்று சிவாஜி வேத பள்ளியை தொடங்கினார் சாகு , இதில் மராத்தாக்கள் பயின்றார்கள் . அங்கு பயின்ற இளம் மராத்தாக்கள் தங்களுக்கு பிற்காலத்தில் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருக்க வில்லை.
சாகு மகாராஜாவுக்கு முன்புவரை அரசன் இறந்தால் சடங்குகளை செய்து வந்த பார்ப்பனர்கள் ,சாகு உருவாக்கிய வேதப்பள்ளியில் பயின்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கள் அரசனுக்கு இறுதி சடங்குகளை செய்வதை வேறு வழி இல்லாமல் வேடிக்கை பார்த்தார்கள் .
சாகு மகாராஜா
உயிரோடு இருந்த போது தான் பார்ப்பனியத்தை எதிர்த்தார் என்றால் ,இறந்த பிறகும் கூட எதிர்க்கிறாரே என்று பார்ப்பனர்கள் எண்ணி இருக்கமாட்டார்கள் .
சாதிய அமைப்புமுறையை தகர்த்த சாகு மகாராஜா வாழ்க !! அவரின் பார்ப்பனிய எதிர்ப்பு கொள்கை வாழ்க !!
அ .அசோக்
06,மே ,2022
**மீள்பதிவு**

Leave a Reply
You must be logged in to post a comment.