ஆரியன், தமிழ், சமற்கிருதம் – எனக்கு அந்தச் சிக்கல் இல்லை!
“ஆரியன்” என்றால் நல்ல பண்புகளைக் கொண்டவன், உயர்ந்த குணமுடையவன் என்ற பொருளும் உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால் “ஆரியர்” என்ற சொல் பின்னாளில் சமற்கிருதத்தையும் ஆரிய மரபையும் குறிக்கும் வகையிலும் பயன்படுத்தப்பட்டது.
இந்து மதத்தில் சமற்கிருதம் புனிதமான மொழியாகவும், தமிழ் தாழ்ந்த மொழியாகவும் கருதப்பட்ட மரபுகள் இருந்தன. தமிழை “நீசமொழி” என்று குறிப்பிட்டவர்களும் இருந்தார்கள். தமிழுக்கு கருவறைக்குள் இடமில்லை என்ற நிலைப்பாடும் இருந்தது.
ஆனால் சைவ சமயக் குருமார்கள் பாடிய பாடல்களில் ஒரு சுவையான முரண்பாட்டைக் காணலாம்.
“ஆரியன் கண்டாய், தமிழ் கண்டாய்” என்று அவர்கள் பாடியிருக்கிறார்கள்.
அதாவது, ஆரிய மொழியாகக் கருதப்படும் சமற்கிருதத்தையும் தமிழையும் இறைவனுடைய படைப்பாகவே அவர்கள் போற்றுகிறார்கள்.
அப்படியானால், தமிழ் நீசமொழி என்றால், அதே தமிழை இறைவனுடன் இணைத்துப் போற்றியது ஏன்?
“ஆரியன்” என்றால் நல்ல பண்புகளைக் கொண்டவன் என்றே எடுத்துக்கொண்டால், ஆரியத்தன்மை பிறப்பால் வர முடியாது; பண்பால் மட்டுமே வர முடியும். நல்ல பண்புடையவன் ஆரியன் என்றால், அவன் எந்த மொழியைப் பேசுகிறான், எந்த இனத்தில் பிறந்தான், எந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்பவை ஏன் முக்கியமாக வேண்டும்?
எனக்கு சமற்கிருதத்தின் மீது பகை இல்லை. தமிழின் மீது பெருமை இருப்பதற்காக சமற்கிருதத்தை இழிவுபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் ஒரு மொழியை உயர்த்துவதற்காக இன்னொரு மொழியைத் தாழ்த்துவதையும், மனிதனின் உயர்வை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிப்பதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு 75 ஆண்டுகளாகிவிட்டன.
மொழி மனிதனுக்காக; மனிதன் மொழிக்காக அல்ல.
மனிதனின் பண்பே அவனுடைய உயர்வைத் தீர்மானிக்க வேண்டும்; பிறப்பு அல்ல.

Leave a Reply
You must be logged in to post a comment.