ஆரியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்ட தமிழ்ப்பண்பாடு

`தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு` எனப் பாடுவார் நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம்; தமிழனின் பண்பாடு தனித்துவமானது, குறிப்பாக ஆரியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இதனை நிறுவுவதற்கு நாம் நிறையச் சான்றுகளை அடுக்க வேண்டியதில்லை, ஒரேயொரு சங்க காலப் பாடல் போதும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடல் ஒன்றே போதும். இதோ அவன் பாடிய புறநானூறு 183 ஆவது பாடல்👇

“உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,

பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே;

பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும்,

சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்,

‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்,

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”.

👆 பாடலின் முதல் வரிகளிலேயே தமிழரின் கல்விக் கொள்கையினைப் பறை சாற்றிவிடுகின்றான்; `எல்லோருக்கும் கல்வி, எப்பாடுபட்டேனும் கல்வி` என்பதே தமிழரின் கல்விக் கொள்கை, அதனை முதல் வரிகளில் வெளிப்படுத்துகின்றான். ஆரியரின் பண்பாட்டின் படி, மேல் வர்ணத்தாருக்கு (மேல் சாதிக்கு) மட்டுமே கல்வி, அதுவும் ஆண்களுக்கு மட்டுமே கல்வி. ஆரியத்தின் வழி சாணக்கியன் மக்களை கல்வி அறிவில்லாதவர்களாக வைத்திருப்பதே அரசனுக்கு ஆட்சி செய்ய வசதியானது எனக் கூறுவான். தமிழிலோ ஒரு வேந்தனே எல்லோரையும் படிக்கும்படி வேண்டுகின்றான், அதுவும் கீழ்நிலைகளிலுள்ளவர்களாகக் கருதப்படுபவர்களுக்கு, `நீங்கள் மேலே வர ஒரே வழி கல்வியே` என அறிவுறுத்துகின்றான்.

👉 ஆரியப்பண்பாடோ சமத்தன்மையினை மறுத்து, படிநிலை குமுதாயத்தினைக் கட்டி எழுப்ப முயலுகின்றது. இங்கோ நெடுஞ்செழியன் கல்வி மூலம் எல்லோரையும் சமப்படுத்த முயலுகின்றான்.

👉 ஆரியப் பண்பாட்டின்படி, மூத்தவனே அரசாட்சி உரிமை உடையவன். மூத்தவன் எவ்வளவு முட்டாளாக இருப்பினும் அவனே ஆட்சிக்குரியவன் என ஆரியம் சொல்லும். ஆரியத்தின் இரு பெரும் இதிகாசங்களான மகாபாரதமும் இராமயணமும் மூத்தோனின் ஆட்சியுரிமையினை வலியுறுத்தியே எழுதப்பட்டன. இங்கோ நெடுஞ்செழியன் கூறுவதனைக் காணுங்கள்>>> `ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக வென்னாது அவருள், அறிவுடை யோனாறு அரசும் செல்லும்`. மூத்தோன் என்று பார்க்காது, யாருக்குத் திறமை உண்டோ அவனே அரசாள வேண்டும் என்கின்றான்.

👆👆👆 பார்த்தீர்களா! ஒரேயொரு பாடலில் ஆரியம் வேறு, தமிழப்பண்பாடு வேறு எனக் காட்டிவிட்டான் நெடுஞ்செழியன், அதனால்தான் அவன் ஆரியப்படையினை மட்டுமல்ல, ஆரியக் கருத்துகளையும் சேர்ந்தே கடந்தவனாகின்றான் (வென்றவனாகின்றான்).

🙏 ஆரியம் வேறு , தமிழ் வேறு; ஆரியக் கருத்துகளை வென்று, தமிழ்ப் பண்பாடு காப்போம்🙏

About nakkeran 197 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply