சோசலிசமா? காட்டுமிராண்டித்தனமா?

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஏகாதிபத்தியமானது ஒரு அடிப்படை முரண்பாட்டின் மீதுதான் கட்டமைக்கப் பட்டது. முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலக் கட்டத்தோடு ஒப்பிடும்போது இந்த முரண்பாடு நமக்கு மிகத் தெளிவாகப் புலப்படும்.

தவிர்க்க முடியாத விதி

எந்தவொரு காலகட்டத்திலும், ஏகாதிபத்திய உலகிற்குத் தலைமை தாங்கும் நாடானது, முதலாளித்துவம் பரவி வரும் மற்ற முக்கிய நாடுகளுக்காக தனது ஒட்டுமொத்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு பற்றாக் குறையை (Balance of Payments Deficit) சந்திப்பதன் மூலமே தனது தலைமைப் பாத்திரத்தை நிறைவேற்றுகிறது.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன: முதலாளித்துவத்தைப் பரப்புவதற்கு அது மூலதனத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும்; புதிதாகத் தொழில்மயமாகும் நாடுகளின் பொருட்களுக்காகத் தனது சந்தைகளைத் திறந்து வைக்க வேண்டும்; தனது மேலாதிக்கத்தைத் தக்கவைக்க ராணுவச் செலவுகளை ஏற்க வேண்டும்; மேலும் அவ்வப் போது உண்மையான போர்களில் ஈடுபட வேண்டும். இத்தகைய காரணங்களால் ஒரு தலைமை நாடு நிதிப் பற்றாக்குறையைச் சந்திப்பது என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதியாகும். இதன்படி, முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் முன்னணி முதலாளித்துவ நாடாக இருந்த பிரிட்டன், அன்றைய வளர்ந்து வரும் நாடுக ளான ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்காக ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்தது. ஆனால், இவ்வளவு பற்றாக்குறை இருந்தபோதிலும் பிரிட்டன் ஒருபோதும் வெளி நாட்டுக் கடனில் மூழ்கவில்லை.

மாறாக, ஒட்டு மொத்த உலகிற்கும் அது ஒரு நிகரக் கடன் வழங்கும் நாடாகவே (Net Creditor) திகழ்ந்தது.

பிரிட்டனின் இந்த விசித்திரமான வெற்றிக்கு இந்தியா உள்ளிட்ட அதன் வெப்பமண்டல காலனி நாடுகளே காரணமாக இருந்தன. இது இரண்டு வழிகளில் நிகழ்ந்தது: முதலாவதாக, புதிதாகத் தொழில்மயமான நாடுகளின் போட்டியால் பிரிட்ட னின் சொந்தப் பொருட்கள் அதன் உள்நாட்டுச் சந்தை யிலேயே ஓரங்கட்டப்பட்டபோது, அந்தப் பொருட்க ளைத் தனது கட்டுப்பாட்டில் இருந்த காலனித்துவச் சந்தைகளில் பிரிட்டன் திணித்து விற்றது. இரண்டாவ தாக, இந்த காலனி நாடுகள் மற்ற உலக நாடுக ளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்து ஈட்டிய ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி லாபத்தையும் பிரிட்டன் எவ்வித ஈடுமின்றி (Quid Pro Quo) அப்ப டியே அபகரித்துக் கொண்டது. காலனியாதிக்க எதிர்ப்பு இந்திய எழுத்தாளர்கள் இதனைத்தான் “செல்வச் சுரண்டல்” (Drain of Wealth) என்று அழைத்தனர். மார்க்ஸ் கூட 1881-இல் டேனியல்சன் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இதைக் குறிப் பிட்டுள்ளார்.

உதாரணமாக, 1910-ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகப் பிரிட்டனின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை 95 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இதில் சுமார் 60 மில்லியன் பவுண்டுகள் இந்தியா என்ற ஒரே ஒரு காலனியிலி ருந்து மட்டும் பிழிந்தெடுக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், பிரிட்டன் தனது உலகத் தலைமைப் பதவியைத் தனது காலனித்துவப் பேரரசின் மூலம் எவ்விதச் சிரமமுமின்றித் தக்கவைத்துக் கொண்டது.

அமெரிக்காவின் முரண்பாடும் டாலர் மாயையும்

இங்குதான் போருக்குப் பிந்தைய முதலாளித்து வத்தின் அடிப்படை முரண்பாடு ஒளிந்துள்ளது. இந்தப் புதிய காலக்கட்டத்தின் முன்னணி ஏகாதி பத்திய நாடான அமெரிக்காவிற்கு, பிரிட்டனைப் போலச் சுரண்டுவதற்கு நேரடி காலனிகள் இல்லை. பிரிட்டனைப் போலக் காலனித்துவச் சந்தைகளைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது அங்கி ருந்து வளங்களைக் கொள்ளையடிக்கவோ அமெ ரிக்காவால் முடியவில்லை. நேரடி காலனிகள் இல்லாத சூழலில் உலகத் தலைவனாக நீடிக்க வேண்டுமானால், அமெரிக்கா தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இதன் விளைவாக, உலகின் முன்னணி முதலா ளித்துவ நாடே உலகின் மிகப்பெரிய கடனாளி நாடாக மாறிய ஒரு விசித்திரமான சூழல் உருவானது.

ஆரம்பத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. ஏனெனில் அமெரிக்க டாலர் என்பது “தங்கத்திற்கு இணையானது” என்று உலகம் நம்பியது. எனவே, அமெரிக்கா வெளியிட்ட கடன் பத்திரங்களையும் டாலர்களையும் மற்ற நாடுகள் தயக்கமின்றிச் சேமித்து வைத்தன. 1970-களின் தொடக்கத்தில் டாலரைத் தங்கமாக மாற்றும் முறை (Gold Convertibility) முடிவுக்கு வந்தபோது ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது.

இருப்பினும், அமெ ரிக்காவின் மீதான நம்பிக்கை மீண்டும் திரும்பிய தால், டாலர் ஆதிக்கம் தொடர்ந்தது. அமெரிக்காவின் இந்த மேலாதிக்கம் இரண்டு நம்பிக்கைகளின் மீது நின்றது:

முதலாவதாக, அமெரிக்காவிற்குள் விலைவாசி உயர்வு (Inflation) கட்டுக்குள் இருக்கும்; இரண்டாவதாக, உலக எரிசக்தி மூலப் பொருளான எண்ணெய்யின் விலை அமெ ரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் அமெரிக்காவோடு பகைமை பாராட்டுவதுடன், டாலர் அல்லாத பிற கரன்சிகளில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளன. இது டாலரின் மேலாதிக்கத்தை அரித்து, எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

டிரம்ப்பின் காலனித்துவ உந்துதல்

தொடர்ந்து கடனாளியாக இருப்பதையும், தனது வர்த்தகப் பற்றாக்குறையையும் அமெரிக்காவால் இனி சகித்துக்கொள்ள முடியாது. இதனால்தான் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இப்போது ‘அதிரடி’ நடவ டிக்கைகளில் இறங்கியுள்ளது. பிற நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது வரி விதிப்பது, அமெ ரிக்காவின் எரிசக்தி வளங்களை விற்கத் துடிப்பது போன்றவை இதன் வெளிப்பாடுகளே. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, கனிம வளங்கள் நிறைந்த நாடுகளை நேரடியாகக் கைப்பற்றி, பழைய காலனித்துவப் பாணியில் அங்கிருந்து வளங்களைக் கொள்ளையடிக்க அமெரிக்கா துடிக்கிறது. இதன் மூலமே தனது நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும் என அது கருதுகிறது. தாராளவாதிகள் (Liberals) இதற்காக டொனால்டு டிரம்ப்பை மட்டும் குறை கூறுகின்றனர். டிரம்ப் ஒரு புதிய வகை பாசிசவாதி (Neo-fascist) என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், டிரம்ப்பை மட்டும் வில்லனாகச் சித்தரிப்பது என்பது முதலாளித்துவ அமைப்பின் ஒட்டுமொத்தக் குறைபாடுகளை மறைக்கும் செயலாகும். வெனிசுலா மீதான டிரம்ப்பின் நடவடிக்கை காட்டுவது என்னவென்றால் – முதலாளித்துவம் என்பது நேரடி காலனிகள் இருந்தால் மட்டுமே அதன் விதிகளில் சரியாகச் செயல்பட முடியும் என்பதைத்தான். இதனை டிரம்ப் தனது உள்ளுணர்வால் உணர்ந்துள்ளார்.

நவதாராளவாத (Neo-liberalism) முறைகள் மூலம் உலக வளங்களைக் கட்டுப்படுத்துவதை விட, நேரடி காலனித்துவ ஆட்சி முறையே அதிக லாபம் தரும் என ஏகாதிபத்தியம் இப்போது கருதுகிறது.

சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா?

காலனித்துவ ஒடுக்குமுறை என்பது முதலாளித்து வத்திற்குத் தேவையற்றது என்றும், சர்வதேச ஒத்து ழைப்பு மூலம் முதலாளித்துவம் அமைதியாகச் செயல்படும் என்றும் முதலாளித்துவ தாராளவாதி கள் நம்புகிறார்கள். ஆனால் டொனால்டு டிரம்ப்பின் செயல்பாடுகள் இந்த மேலோட்டமான சித்தி ரத்தைத் தகர்க்கின்றன.

முதலாளித்துவம் இன்று மனிதகுலத்தை ஒரு ஆபத்தான விளிம்பிற்குத் தள்ளி யுள்ளது. தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற ஜனநாயகம், காலனித்துவ ஒழிப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் போன்ற வரலாற்றுச் சாதனைகள் இன்று ஏகாதிபத்தியத்தால் பின்னோக்கி இழுக்கப் படுகின்றன. ஏகாதிபத்தியம் உயிருடன் இருப்பதற்காக மேற்கொள்ளும் இத்தகைய வெறிச்செயல்கள் சோச லிசத்தின் அவசியத்தையே மீண்டும் மீண்டும் வலி யுறுத்துகின்றன. ரோசா லக்சம்பர்க் (Rosa Luxemburg) அன்று கூறியது போல, மனிதகுலத் தின் முன்னே இருப்பது இரண்டே தெரிவுகள்தான்: சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா? ஏகாதிபத்தியத்தைத் தக்கவைக்க டொனால்டு டிரம்ப் இன்று செய்யும் இந்த அராஜகங்கள், ரோசா லக்சம்பர்க்கின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை யானவை என்பதை நிரூபிக்கின்றன.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஜனவரி 18, 2026 தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்

About nakkeran 197 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply