விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது! நக்கீரன்

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!

நக்கீரன்

யாரைப் பார்த்தாலும் சுமந்திரன் மீதுதான் கல்லெறிகிறார்கள். அவர் அரசியிலில் இருப்பது விக்னேஸ்வரன், சுகாஷ், அருந்தவபாலன், சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோருக்குப் பெரிய தடையாக இருக்கிறார்.  சுமந்திரன் போன்ற ஒரு அறிவாளியை ஓரங்கட்டிவிட்டால் தாங்கள் சுலபமாக மக்களை ஏமாற்றலாம் எனக் கணக்குப் போடுகிறார்கள்.

கடந்த வாரம் சுமந்திரன் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவுக்குத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு முன்னர் (1) கே. கனகரத்தினம் (2) வி.ஏ. கந்தையா (3) தொண்டமான்  (4) பி.எஸ். சூசைதாசன் (1977-83) இந்தப் பதவியை வகித்த தமிழர்கள் ஆவர்.

சுமந்திரனின்  நியமனம்  பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் “ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்,’மூத்தோன் வருக என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் கற்றவர்களின் சிறப்பைக் கூறுகிறது. அரசன் ஒரு குடியில் பிறந்தோரில்  மூத்தவனை அழைத்து ஆலோசனை கேட்காமல் அறிவுடையோனிடமே ஆலோசனை கேட்பான். அதாவது அறிவில் உயர்ந்தவரே இவ்வையத்தில் உயர்ந்தவர் என இப்பாடல் வரிகள் வலியுறுத்துகின்றன.

இரணில் – சிறிசேனா ஆட்சியில் என்றால் இரணில் கொடுத்த ‘இலஞ்சம்’ என அவரது எதிரிகள் எளிதில் சொல்லிவிடுவார்கள். இப்போது இராசபக்சாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர் மீதுள்ள காழ்ப்புணர்வு காரணமாக  கல்லெறிபவர்கள், வெறும் வாயை மெல்லுபவர்கள் இனி என்ன சொல்லப் போகிறார்களோ தெரியாது.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்ன சொல்கிறார்? சுமந்திரன், சம்பந்தரையும் மாவை சேனாதிராசாவையும் ஓரங்கட்டி விட்டுத்  தமிழ் அரசுக் கட்சியின் தலைமையைக் கைப்பற்றச் சதி செய்கிறாராம். விக்னேஸ்வரன் தன்னைப் போல் பிறரை நினைக்கும் பெருமனது படைத்தவர்.

சுமந்திரன் கட்சியின் தலைமையைக் கைப்பற்றலாம் அல்லது கைப்பற்றாமல் விடலாம்.  அதனை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள். விக்னேஸ்வரன் போல் சுமந்திரன் தன்னைத்தானே இணைத் தலைவர், செயலாளர் நாயகம் என அறிவிக்க முடியாது.  கேள்வி என்னவென்றால்  ஏன் விக்னேஸ்வரன் கவலைப்படுகிறார்? ஏன் அவர் தனது தூக்கத்தைக் கெடுத்துக் கொள்கிறார்? அவர்தான் தனிக்கட்சி தொடங்கி விட்டாரே?  அது ஆல் போல் தளைத்து அறுகு போல் வேரோடி கிளைகள் பரப்பி நிற்கிறதே?

தமிழ்  மக்கள் முன்னணி தொடக்கப் பட்டபோது ஓராண்டு கழித்து நடக்கும் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அந்தந்தப் பதவிகளுக்கு  – தான் உட்பட – முறையாக முன்மொழிந்து வழிமொழிந்து தெரிவு செய்யப்படுவார்கள் என  விக்னேஸ்வரன் அறிவித்தார். இந்த அறிவித்தல்  அவரால் 2018 ஆம் ஆண்டு ஒக்தோபர் 24 ஆம் திகதி  சொல்லப்பட்டது. சொல்லி ஓர் ஆண்டும் மூன்று மாதங்களும் சென்று விட்டன.

ஆனால் ஆண்டுப் பொதுக் கூட்டமும் இல்லை.  புதிதாக யாரும் தெரிவாகவும் இல்லை. எந்த வெட்கமோ, மானமோ, துக்கமோ இல்லாமல் விக்னேஸ்வரன் தனது பதவியில் தொடர்கிறார். அருந்தவபாலனும் அப்படியே தனது பதவியில் தொடர்கிறார்.

தமிழ் மக்கள் முன்னணியின் தொடக்கக் கூட்டத்தில் பத்து திட்டங்களை செய்து முடிக்கப் போவதாக அட்டகாசமாக அறிவித்தார். அதில் ஒன்று “போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலம்பெயர் மக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் சுயசார்பு பொருளாதார நடவடிக்கைகளை ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு வளமான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தும் பொருத்தமான ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.”  இது நிறைவேற்றப்பட்டு விட்டதா?  அதற்கான அத்திவாரமாவது போடப்பட்டுள்ளதா?

2017 சனவரியில்  விக்னேஸ்வரன் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரை வி.புலிகளின் எச்சங்கள் விழுந்து விழுந்து வரவேற்றார்கள். இரவு விருந்து வைத்துப்  பெரிய  தொகை நிதியை  வடக்கின் அபிவிருத்திக்கு என்று சொல்லிச் சேர்த்தார்கள்.  நுழைவுச் சீட்டு டொலர் 500, 1,000, 5,000, 10,000 என விற்கப்பட்டது. மக்களும் வஞ்சகமில்லாமல் அள்ளிக் கொடுத்தார்கள். செலவு போக மிகு வருவாய்  50,350 கனடிய டொலர்கள் எனக் கணக்குக் காட்டினார்கள்.

ஆனால் இந்த நிதி சேகரிப்புப்  பற்றி வட மாகாண சபையில் உறுப்பினர்கள் வினாவிய போது “நிதியா? எனக்கு யாரும் நிதியும் தரவில்லை, காசோலையும் தரவில்லை” என்று  விக்னேஸ்வரன் மொட்டையாகச் சொல்லிவிட்டார். அப்படியென்றால் அவரது பெயரைப் பயன்படுத்திச் சேர்த்த நிதிக்கு என்ன நடந்தது? திருநீலகண்டரின் திருவோடு மறைந்த மாதிரி இந்தப் பணமும் மறைந்து விட்டதா? நிதி கொடுத்தவர்களுக்கு பட்டை நாமமா? வெளிப்படைத்தன்மை பற்றி ஓயாது பேசும் விக்னேஸ்வரன் ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்?

தமிழ் அரசுக் கட்சி தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் நிறுவனர் தந்தை செல்வநாயகம் நினைத்திருந்தால்  தலைவர் பதவியை ஆயுள் காலம்  மட்டும் தன்னோடு வைத்திருந்திருக்கலாம். அதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பே வந்திருக்காது. ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவியை ஏனைய தலைவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 18 டிசெம்பர், 1949 இல் தொடங்கப்பட்டது. அப்போது அவர் ஒரு நீண்ட  தீர்க்கதரிசனமான  தலைமைப் பேருரையை ஆற்றினார். வரலாற்று முக்கியம் வாய்ந்த அந்த உரையில் கட்சியின் கொள்கை பற்றியும் கோட்பாடு பற்றியும் அதன் இலக்குப் பற்றியும் எடுத்துரைத்தார்.

“யாம் கோருவதும் இதுதான். ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும் ஒரு ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டுக்கும்  பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள – சமஷ்டி அரசு –  இலங்கையில் ஏற்பட வேண்டும். தமிழ் பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால், இப்படியான சமஷ்டி ஏற்படுவது அவசியமாக இருக்கிறது. “

தந்தை செல்வநாயகம் மேலும் கூறியதாவது:  “ஐரிஷ் தேசியவாதிகளைப் போல , சுதந்திரத் தமிழ் அரசு நிறுவப்படும் வரை  “பதவி ஏற்கமாட்டோம்”  என்று வாக்குறுதி அளித்து உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருக்க வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சில் ஒரு நோக்கமும் இருத்தலாகாது.

செல்வத்தில் குறைந்த எங்களுக்கு, வலிமை பொருந்திய நண்பர்களும் இல்லை – நேர்மையும் – மன உறுதியையும் – இலட்சியத் தூய்மையையுமே  நாங்கள் ஆயுதங்களாகக் கொள்ள வேண்டும்” என்றார். (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர்)

தந்தை செல்வநாயகம் “பதவி ஏற்க மாட்டோம்”  என்று குறிப்பிட்டதற்குத் தக்க காரணம் உண்டு. அவர் திருவாளர் ஜிஜி பொன்னம்பலத்தை மனதில் வைத்தே அப்படிப் பேசினார்.

சோல்பரி ஆணைக்குழு முன் தோன்றிப் பல மணி நேரம் ஐம்பதற்கு ஐம்பது கேட்டு வாதாடிய பொன்னம்பலம் இலங்கை சுதந்திரம் பெற்று 287 நாட்களுக்குள் டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் கைத்தொழில் அபிவிருத்தி கடற்றொழில் அமைச்சராகப்  பதவி ஏற்றுக் கொண்டார்.  1948 ஆம் ஆண்டில்தான் சேனநாயக்க எட்டு இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறித்த  இலங்கை குடியுரிமைச் சட்ட இல. 28,    ஓகஸ்ட் 19 1948  இல்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். அந்த நாள் இலங்கைத் தமிழருக்கு  ஒரு கரிநாள்.  பின்னர் நொவெம்பர் 3 அன்று  அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் பொன்னம்பலம் டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் 3 செப்தெம்பர் அமைச்சராக உறுதிமொழி எடுத்து விட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. குடியுரிமை உள்ளவர்களுக்கே வாக்குரிமை என்பதுதான் அந்த ஒற்றை வரிச் (Ceylon (Parliamentary ElectionsAmendment Act No.48 of1949) சட்டத் திருத்தம். அமைச்சராக இருந்த பொன்னம்பலம் அதற்கு ஆதரவாக வாக்களித்தார். அவரோடு நாடாளுமன்ற செயலாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்ட வி.குமாரசாமி (சாவகச்சேரி) கே.கனகரத்தினம் (வட்டுக்கோட்டை) அந்தச் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். தந்தை செல்வநாயகம்,  கு.வன்னியசிங்கம்,  எஸ். சிவபாலன் ஆகியோர் அரசுடன் இணைய மறுத்துவிட்டனர்.

தமிழ் அரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருமலையில் 14 ஏப்ரில், 1951 இல் நடந்தது. கட்சியின் 3 ஆவது மாநாடு 17 ஏப்ரில் 1955 இல் திருமலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கு.வன்னியசிங்கம், நா.உறுப்பினர்  கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தொடர்ந்து அவர் தலைவர் பதவியில்  24 மே, 1958 வரை தொடர்ந்தார். அதே ஆண்டு வவுனியாவில்  நடந்த ஆறாவது  தேசிய மாநாட்டில் என்ஆர் இராஜவரோதயம், நா.உறுப்பினர்   தலைவரானார். பின்னர்  யாழ்ப்பாணத்தில்  21, 1961 இல் நடந்த 7 ஆவது தேசிய மாநாட்டில்   சிமூ. இராமாணிக்கம், நா.உறுப்பினர்  தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவ்வாறு கட்சியின் தலைமைப் பதவி ஆயுட்காலம் வரை ஒருவரிடமே இல்லாது  பலருக்கு  வாய்ப்பளிக்கப்பட்டது.

இப்படியான சனநாயக  பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியில் பதவியை எதிர்பார்த்துச் சேர்ந்தவர்கள் பதவி கிடைக்கவில்லை என்றவுடன் அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல பறந்து விட்டார்கள். தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வட மாகாணத்தின் முதலமைச்சராக பதவிக்கு வந்த  விக்னேஸ்வரன் தனக்குக் கட்சியின் தலைமைப் பதவி வேண்டும் என்று கேட்டார். இல்லை என்றவுடன் ஏதேதோ நொண்டிச் சாட்டுக்களைச்  சொல்லி கட்சியிலிருந்து விலகி விட்டார்.

இப்போது தமிழ் அரசுக் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால், அதாவது சம்பந்தர், மாவை மற்றும் சுமந்திரன் வெளியேறினால் தான் உள்ளே வர ஆயத்தம் என்கிறார். அப்படியென்றால் அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேறியதற்குக் காரணம் கொள்கை, கோட்பாடு அல்ல. தனிமனித காழ்ப்புணர்வும் தன்முனைப்புமே  காரணங்களாகும்.

ஒரு மாகாண சபையை ஒழுங்காக நடத்தத் தெரியாது  போட்டுடைத்து நாலு பேர் பார்த்துச் சிரிக்கும்  சிரிப்பு  முதலமைச்சர் விக்னேஸ்வரனைத்  தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருத்துவது என்பது  இந்தப் பிறப்பில்  நடக்காது. மாற்றுத் தலைமை வேண்டும் என்று நாயாய், பேயாய் அலையும் பரமார்த்த குரு மு. திருநாவுக்கரசு, அவரது சீடர்கள் நிலாந்தன், யதீந்திரா போன்றோர் விக்னேஸ்வரனுக்கு முடிசூட்சி அழகு பார்க்கட்டும்.

பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களது கதையும் அப்படித்தான். தேசியப்பட்டியலில் இருந்து நா.உறுப்பினராக வர ஆசைப்பட்டார். கிடைக்கவில்லை என்றவுடன் வெளியேறி விட்டார். அப்படி வெளியேறிய இன்னொருவர் க.அருந்தவபாலன். சென்ற தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் (794) வெற்றிவாய்ப்பை இழந்தவர்.   இவரும் தேசியப்பட்டியல் மூலம் நியமனம் கிடைக்கும் என  எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்றவுடன் வெளியேறிவிட்டார். இவரும் தன்னை முற்றும் துறந்த முடிவர் போல நடிக்கிறார்.

தமிழ் மக்கள் கூட்டணி பெரிய ஆரவாரத்தோடும் எதிர்பார்ப்போடும் தொடங்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியும் ஏனைய கட்சிகள் போல் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குக் – குண்டுச் சட்டிக்குள் – குதிரை ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியில் இரண்டு பேருடைய பெயர்கள்தான் ஊடகங்களில் அடிபடுகிறது. ஒருவர் எல்லாமே தான்தான் (தலைவர், செயலாளர் நாயகம், பொருளாளர், செயல்குழு, பொதுக்குழு) என்று சொல்லிக் கொள்ளம்  விக்னேஸ்வரன். மற்றவர்  கொள்கைபரப்புச் செயலாளர் அருந்தவபாலன்.

இருவரும் வீட்டுக்குள் இருந்து கொண்டு அறிக்கை விடுகிறார்கள். செய்தியாளர்கள் மாநாடு நடத்துகிறார்கள்.

மேலே கூறியவாறு  26 ஒக்தோபர் 2018 இல் தொடக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணிக்கு குறைந்த பட்சம் மாதம் ஒரு கிளை என்ற கணக்கில் இதுவரை 15 கிளைகளாவது தொடக்கியிருக்க வேண்டும். குறைந்தது ஐந்நூறு பேரையாவது சேர்த்திருக்க வேண்டும். அறிந்தளவில் மட்டக்களப்ப காரைதீவில் ஒன்று, கிளிநோச்சியில் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஒன்று என மொத்தம் 3 கிளைகள்தான் திறக்கப்பட்டுள்ளன. அவையும் முறையாக இயங்குகின்றனவா, அல்லது திறந்த வேகத்தில் மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டதா என்பது தெரியவில்லை.

இப்படியான திருக் கல்யாண குணங்களைக் கொண்ட  விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் பேரம் பேசுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!

About VELUPPILLAI 3405 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply