அற்ப அமைச்சர் பதவிக்கு மலையகத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்த இரண்டகர் ஜிஜி பொன்னம்பலம்
நக்கீரன்
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இதஅக இன் மே நாள் விழாவில் பேசிய பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் 8 இலட்சம் மலையகத் தமிழர்கள 1948 ஆம் ஆண்டு
மலையகத் தமிழர்களது குடியுரிமை பறிபோனதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்சிரஸ் பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். அந்தக் காட்டிக் கொடுப்பு காரணமாகவே தந்தை செல்வநாயகம் அஇதகா கட்சியில் இருந்து வெளியேறி இதஅக உருவாக்கினார்.
20.08.1948 குடியுரிமை சட்டம் (Citizenship Bill) – ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உள்ளிட்ட தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கிறார்கள். மொத்தம் 53 பேர் ஆதரவாகவும் 35 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
ஆனால் அடுத்த இரண்டைப் பாருங்கள் –
25.08.1948 குடிவரவு குடியகல்வு சட்டம் (The Immigrants and Emigrants Bill) – இதில் எஸ்.ஜே.வி செல்வநாயகம் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும் மலையக உறுப்பினர்களான தொண்டமான், சி.வி.வேலுப்பிள்ளை உள்ளிட்டோரும் எதிர்த்து வாக்களிக்கின்றனர். இதிலும் மொத்தம் 53 பேர் ஆதரவாகவும் 35 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
10.12.1948 இந்திய பாகிஸ்தான் குடியிருப்போர் சட்டம் (Indian and Pakistani Residents Citizenship Bill) – இந்த இறுதி சட்டத்தைத் தான் ஜி.ஜி.பொன்னம்பலம் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்ற உதவுகிறார். மொத்தம் 52 பேர் ஆதரவாகவும் 32 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
ஆனால் சுமந்திரன் இன்னொரு முக்கிய சட்ட திருத்தத்தை குறிப்பிட வில்லை. அது 20-09-1949 அன் நிறைவேற்றப்பட்ட நாடாமன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் (Parliamentary Elections Amendment (Franchise). இடதுசாரிக் கட்சிகள், மலையகக் கட்சிகள், எஸ்ஜே.வி செல்வநாயகம் உள்ளிட்டோர் எதிர்த்து வாக்களித்திருந்தார்கள். அனால் அமைச்சராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். குடியுரிமை உள்ளவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு என்பது சட்டமாக்கப்பட்டது. தேர்தலில் குடியுரிமையை இழந்திருந்த மக்கள் இந்த சட்டத்தின் மூலம் வாக்குரிமையையும் இழந்தார்கள்.
“இல்லை, இல்லை எனது பாட்டன் 28/1948 சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார்” என கஜேந்திரகுமார் வாதாடுகிறார். சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். 28/1948 சட்டம் நாடாளுமன்றத்தில் 20 -08 – 1948 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பொன்னம்பலம் செப்தெம்பர் 03 ஆம் திகதி டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்ரவையில் கைத்தொழில் மீன்பிடி அமைச்சராகச் சேர்ந்து கொள்கிறார். அதாவது 28/1948 குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அதன் மை காயு முன்னரே – எண்ணி 14 நாட்களுக்குள் – பொன்னம்பலம் அமைச்சராகிறார். அது எப்படி?
உண்மை என்னவென்றால் குடியுரிமைச் சட்டம் 28/1948 நாடாளுமன்றத்துக்கு வரு முன்னரே பொன்னம்பலம் கட்சிக்குத் தெரியாமல் சேனநாயக்காவோடு தனக்கு ஒரு முழு அமைச்சர் பதவியும் மேலும் ஒருவருக்கு அரை அமைச்சர் பதவியும் மேலும் ஒருவருக்கு துணை அவைத் தலைவர் பதவிக்கும் இரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் என்பதே!
இந்த இடத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை பதிவு செய்ய விரும்புகிறேன். இது எனக்கும் எனது நண்பர்களுக்கும் தந்தை செல்வநாயகம் அறுபதுகளில் அவர் வாயாலேயே சொன்னது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தான் பேசிக் கொண்டிருந்த போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஜிஜி பொன்னம்பலம் “Chelva, don’t burn your boats, Chelva don’t burn your boats” என கிசு கிசுத்துக் கொண்டு எனது கோட் சட்டையை இழுத்தபடி இருந்தார்” எனச் சொன்னார். இந்த ஆங்கில பழமொழியின் பொருள் “நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் படகுகள் / பாலங்களை எரித்தால், அந்த நிலைமைக்கு திரும்புவதற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும் நீங்கள் அழிக்கிறீர்கள்” என்பதாகும்.
இவ்வளவிற்கும் யூலை 17, 1947 மலையகத் தமிழர்களின் நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, அவர்களுக்கு உறுதுணையாக நின்று குரல் கொடுப்பேன் என்று இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஜிஜி பொன்னம்பலம் எழுத்தில் உறுதி அளித்திருந்தார்.
அப்படி எழுத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழி பின்வருமாறு,
“இலங்கையில் இந்தியர்களின் உரிமைகள் மற்றும் தகுதிக்கான இலங்கை இந்திய காங்கிரசின் கோரிக்கையை ஆதரிப்பதாகவும், கடைப்பிடிப் பதாகவும் நான் உறுதியளிக்கிறேன். அதாவது அரசியல் வாக்குரிமைக்கான தகுதி ஆறு மாத எளிய இருப்பிடத் தேர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
அஇதகா உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனதற்கு இந்தத் துரோகம்தான் காரணம்.
1956 வாக்கில் ஜிஜி பொன்னம்பலம் தனது கவர்ச்சியை இழந்துவிட்டார். அவர் தோல்வியைச் சந்திப்பார் என்றும் சுவரில் எழுதப்பட்டிருந்தது. 1947-ல் 9,100 ஆக இருந்த அவரது வாக்கு வித்தியாசம், 9 ஆண்டுகளில் 1,741 ஆகக் குறைந்தது. பதிவான வாக்குகளில் வெறும் 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று (1960) வெற்றி பெற்றார். பொன்னம்பலம் 1960 க்குப் பின்னர் 1965,1970 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியதை அடுத்து அரசியலுக்கு முழுக்குப் போட்டார்.
கஜேந்திரகுமார் தனது பாட்டனார் மீதுள்ள பட்சத்தால் வரலாற்றைத் திரிக்கக் கூடாது. வரலாற்றை வரலாறாகவே பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் அடுத்தடுத்த தலைமுறைகள் எங்களைத் திட்டும்!
Leave a Reply
You must be logged in to post a comment.