உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  இதஅ கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

மே 01, 2025

ஊடக  அறிக்கை

அன்பான உறவுகளே!

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் மே 06 இல்  நடைபெறுகிறது. ஒரு சனநாயக அரிசியல் அமைப்பில் தேர்தல் முக்கியமானது. தேர்தல்  மூலமே மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம், மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

எந்தவொரு சனநாயகத்திலும் குடிமக்களின் கையில்தான் இறுதி அதிகாரம் இருக்கிறது. அவ்வப்போது நடைபெறும் தேர்தல்கள் மூலம் குடிமக்கள் சர்வாதிகாரம், குடும்ப ஆட்சி மற்றும்  ஊழல் ஆட்சி போன்ற முறையறற்ற ஆட்சியைத் தடுத்து புதிய ஆட்சியை உருவாக்க முடியும்.

நாடாளுமன்றம், மாகாண சபைகள் போலவே உள்ளூராட்சி சபைகளும் முக்கியமானவை. இன்னும் சொல்லப் போனால் கடக்கோடி குடிமக்களின் அத்தியாவரிய  தேவைகளான மின்சாரம், குடிநீர், வீதிகள், வடிகால்கள் போன்றவற்றை உள்ளூராட்சி சபைகளே வழங்குகின்றன.  எனவே மக்கள் வாக்களிக்கு முன் மக்கள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து விட்டு  வாக்களிக்க வேண்டும்.

வட கிழக்கைப் பொறுத்தளவில் வடக்கில் 2 மாநகர சபை, 4 நகரசபை 28 பிரதேச சபைகளுக்கும் கிழக்கில் 3 மாநகர சபை, 2 நகரசபை மற்றும் 28 பிரதேச சபைகளுக்கும் ஆக மொத்தம் 5 மாநகர சபை, 6 நகரசபை 56 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

வட – கிழக்கில் பல கட்சிகள் போட்டியிட்டாலும், பல சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டாலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி (இதஅக) மட்டுமே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும்  வடக்கிலும் கிழக்கிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  இதஅக உள்ளடக்கிய  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 417 இருக்கைகளை கைப்பற்றியிருந்தது.

கடந்த ஆண்டு செப்தெம்பர் 21, 2024 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி (தேமச) வேட்பாளர் அனுர குமார திசநாயக்கா வட – கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் வெறுமனே 246,187 (15.14) வாக்குகளைப் பெற்றுப் படுதோல்வியடைந்திருந்தார். முழு இலங்கையிலும் அவர் வெற்றி பெற்றாலும் அவருக்கு 42.31(5,634,915) வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் சனாதிபதி தேர்தலைத்  தொடர்ந்து தேமச க்கு  வீசிய ஒரு ஆதரவு அலை காரணமாகவே நொவெம்பர் 14 இல்  நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி 25 தேர்தல் மாவட்டங்களில்,  மட்டக்களப்பு நீங்கலாக, 24  மாவட்டங்கில் வெற்றி பெற்றது. வடக்கில் தமிழ்மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்த காரணத்தால் வட – கிழக்கு மாவட்டங்களில் இருந்து  தேமச சார்பாக 7 தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

ஜேவிபி கட்சி அடிப்படையில் ஒரு சிங்கள – பவுத்த மேலாண்மைக் கட்சி. அந்தக் கட்சி பற்றி இன்றைய பிரதமர் ஹரினி அமரசூரியா கூறிய கருத்து உற்று நோக்கத்தக்கது.  அவர்  தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையில்  “மார்க்ஸிசம் மற்றும் சிங்கள தேசியவாதம் ஆகிய இரண்டு கருத்தியல் – அரசியல் நீரோட்டங்களை மிகவும் திறம்பட கையாண்ட  கட்சி ஜேவிபி தான்”  என(PhD Dissertation இல் “The party which managed two ideo-political currents of Marxism and Sinhala nationalism most adroitly was the JVP”)எழுதியிருக்கின்றார். 

இன்று பிரதமர் ஹரினி அமரசூரிய ஜேவிபி இன் கட்டுப்பாட்டில் இருக்கும் தேமச யில் சேர்ந்துவிட்டாலும் அவரது கணிப்பு சரியாகவே இருக்கிறது. தேர்தல் காலத்தில் தமிழ்மக்கள் முகம் கொடுக்கும் காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் போனோர் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை போன்ற சிக்கல்கள் பற்றி சனாதிபதி ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தேசிய மக்கள் சக்தி –

(1) மாகாண சபைக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்ப்பதாகக்  கூறுகிறது.

(2) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகச் சொன்னார்கள். ஆனால் அது நீக்கப்படவில்லை. அதன் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கதிகள் இன்னமும் விடுவிக்கப்பட வில்லை.  அந்தச் சட்டத்தின் கீழ்  தமிழர்கள் இப்போதும் கைது செய்யப்படுகிறார்கள்.

(3) முன்னைய இனவாத அரசுகள் போலவே  போர்க்குற்றங்களை விசாரிப்பதையும் போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதையும் இந்த அரசு  நிராகரித்து விட்டது.

(4) நல்லாட்சிக் காலத்தில் (2015 -2019) இராணுவத்தின் பிடியில் இருந்த சம்பூர் உட்பட மொத்தம்   47,604 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. இருந்தும்  28,500 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தின் பிடியில் இருந்து வருகிறது.  இன்றைய அரசு ஒரு ஏக்கர் காணியையேனும் இதுவரை விடுவிக்கவில்லை. இரண்டொரு வீதிகள் மட்டும் அரையும் குறையுமாகத் திறந்து விடப்பட்டுள்ளன.

(5) இராணுவம் பிடித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராடுகிறார்கள். ஆனால் அரசு வெந்த புண்ணில் வேலை நுழைப்பது போல வடக்கில் சத்தம் சந்தடியின்றி  5,940 ஏக்கர் நிலத்தை இரகசியமாகக் கபளீகாரம் செய்ய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

(6) வலிந்து காணாமல் போனோர் தொடர்பாக “15 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர்கள் போனவர்கள்தான்” எனக்  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் திருவாய் மலர்ந்துள்ளார்.

(7) தமிழர்களின் தாயக நிலமான வட கிழக்கு இணைக்கப்பட்டதை எதிர்த்து நீதி மன்றம் சென்று அதனை மீண்டும் பிரித்தது  ஜேவிபிதான்.

(8) 2004 இல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு உடன்படிக்கை அன்றைய சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா மற்றும்  வி.புலிகளுக்கும் இடையில் யூன் 24, 2005 அன்று எழுதப்பட்டது. அதனை ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகள்  நாடுகள் வரவேற்றன. ஆனால் ஜேவிபி அதனை எதிர்த்து அரசில் இருந்து வெளியேறியது. எதிர்த்து வெளியேறிய 39  ஜேவிபி நா.உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில்  அடிப்படை உரிமை வழக்கை தாக்கல் செய்தார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்.

(9) ஆட்சிக்கு வந்தால் எரிபொருள் விலை குறையும், விலைவாசி குறையும் என்று வாக்குறுதி அளித்தாளர்கள். ஆனால் விலைவாசி குறையவில்லை. ஒரு கிலோ சீனி உரூபா 220 விற்கப்படுகிறது ஆனால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உப்பு ஒரு கிலோ உரூபா 320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவையெல்லாம் கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள். இன்று ஜேவிபி இனவாதத்தையும், மதவாதத்தையும் கைவிட்டு நாட்டின் குடி மக்கள் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் மனோ நிலைக்கு வந்துள்ளது என்று சிலர் நினைக்கலாம். அவர்கள் புனிதர்கள், தமிழ்மக்களை இரட்சிக்க வானத்தில் இருந்து வந்த தேவதைகள் என்றும் கருதலாம். ஆனால் ஆட்சிக் கட்டிலில்  ஏறிய பின்னர் அவர்களது நடவடிக்கைகளில் அப்படி எந்த அதிசயமும் நடைபெறவில்லை.

அதாவது ஜேவிபி தனது மூலோபாய – தந்திரோபாய அணுகுமுறையினைக் கைவிட வில்லை என்பதையே காட்டுகிறது.  அதற்கு நல்ல எடுத்துக்காட்டுத் தையிட்டியில் தமிழர்களது 8 ஏக்கர் நிலப்பரப்பில்  சட்டத்தை மீறிக் கட்டப்பட்டுள்ள திஸ்சா மகாவிகாரை பற்றிய அதனது விலாங்குப் போக்காகும்.  இந்த விகாரை அரச செலவில் முன்னாள் சனாதிபதி கோட்டபய இராசபக்ச காலத்தில் கட்டப்பட்டது. இந்த சட்ட விரோத விகாரைக்கு ஓகஸ்ட் 22, 2018 அன்று அடிக்கல் நாட்டியவர் முன்னாள் வடமாகாண சபை ஆளுநர் றெஜீனோல்ட் கூரே.  அதனை மே 05, 2023 இல் திறந்து வைத்தவர் இராணுவ தளபதி சவேந்திரா சில்வா. இந்த ஆட்சியில் விகாரைக்கு அருகில் கட்டப்பட்ட  பவுத்த மடாலயத்தை  வடக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் தனபால சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். 

ஆக இந்த சட்ட விரோத விகாரை கட்டுவதற்கு முழு அரச இயந்திரமும் ஈடுபட்டு இருந்திருக்கிறது.  தொடர்ந்த ஈடுபட்டு வருகிறது. அது சமயம் தம்புள்ள நகரில் இருந்த  30 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக பௌத்த பிக்குகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் ஒரே இரவில் கோவில் இடிக்கப்பட்டது

திஸ்சா மகா விகாரை அகற்றப்பட மாட்டாது எனப்    புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார். அவருக்கு முன்னர் பாதுகாப்புப் படைகளின் தளபதி  சவேந்திர சில்வா  திஸ்சா மாவிகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது எனக் கூறியிருந்தார்.

ஒருநாட்டில் நீதியும் உரிமையும் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தின்ஆட்சி இருக்க வேண்டும்.  ஒரு இனத்துக்கு ஒரு நீதி இன்னொரு இனத்துக்கு இன்னொரு நீதி என்பது நீதியல்ல. அது அநீதி. ஆனால் தேமச அரசும் ஒரு இனத்துக்கு ஒரு நீதி என்ற கோட்பாட்டைத்தான் பின்பற்றுகிறது. 

எனவே  தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடி அணிந்து வந்திருக்கும் ஜேவிபி இன் சுயரூபத்தை தமிழ்மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூடாது. எமது ஊர்களை ஜெவிபி இன் முகவர்கள் கையில் கொடுக்கக் கூடாது.

கடந்த 75 ஆண்டுகளாக தமிழ்மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்காக எந்த விட்டுக் கொடுப்பும் இன்றித்  தொடர்ச்சியாகப்  போராடி வரும் இதஅக நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்கை அளிக்குமாறு எமது உறவுகளை  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  இதஅக ஆல்  மட்டுமே ஊழலற்ற, வினைத்திறனோடு கூடிய நிருவாகத்தைத் தரமுடியும்.

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

About VELUPPILLAI 3371 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply