ஜேவிபி க்கு வாக்களித்தவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும்!

உள்ளூராட்சித் தேர்தல்  அடுத்து வரும்  மே 06, 2025 இல் நடைபெற இருக்கிறது. நாடு முழுதும் உள்ள 23  மாநகர சபை, 41 நகரசபை மற்றும் 271 பிரதேச சபை என மொத்தம் 335 சபைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

வட கிழக்கைப் பொறுத்தளவில் வடக்கில் 1 மாநகர சபை, 5 நகரசபை 37 பிரதேச சபைகளுக்கும் கிழக்கில் 3 மாநகர சபை, 5 நகரசபை மற்றும் 37 பிரதேச சபைகளுக்கும் ஆக மொத்தம் 4 மாநகர சபை, 10 நகரசபை 65 பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடைபெறும்.

கடந்த ஆண்டு செப்தெம்பர் 21 ஆம் திகதி சனாதிபதி தேர்தல் நடை பெற்றது. அதில் தேமமு வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கா 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அவருக்கு  27,086 (7.29%)  மட்டும் பெற்று நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். வன்னி மாவட்டத்தில் அவருக்கு கிடைத்த வாக்குகள் 21,412 (9.86%). அதிலும் நான்காவது இடம்தான். மேலும் வட கிழக்கில் உள்ள 7 தேர்தல் மாவட்டங்களில், அம்பாறை நீங்கலாக,  நான்காவது இடம்தான்.  கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுர குமார திசாநாயக்கா அவர்களுக்கு 38,905 (12.19%) வாக்குகளே கிடைத்தன.

இருந்தும் நொவெம்பர் 14, 2024 இல் நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுதும் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஒரு அலை வீசியது. இதன் காரணமாக அந்தக் கட்சி 68,63,186 (61.56%) வாக்குகளைப் பெற்று 159 இருக்கைகளைக் கைப்பற்றியது.  வடக்கில் 5 இருக்கைகளையும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா ஒரு இருக்கையும் கிடைத்தன.

வட கிழக்கு தேர்தல் மாவட்டங்கள்

File:North Eastern Sri Lanka districts.png - Wikimedia Commons

முந்தைய தேர்தல்களில், தேமச அல்லது ஜேவிபி கட்சிக்கு வடக்கில் சரி தெற்கில் சரி வாக்கு வங்கி இருந்ததே இல்லை. 2019 நொவெம்பரில் நடந்த சனாதிபதி தேர்தலில் தேமக கட்சிக்கு  418,553 (3.16%)) வாக்குகளே கிடைத்தன.  மீண்டும்   2020  சனவரியில் நடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் 445,958 (3.84%) வாக்குகளைப் பெற்று 3 இருக்கைகளை மட்டும் பெற்றிருந்தது.

ஜேவிபி கட்சி அடிப்படையில் ஒரு சிங்கள – பவுத்த மேலாண்மைக் கட்சி. அந்தக் கட்சி பற்றி இன்றைய பிரதமர் ஹரினி அமரசூரியா கூறிய கருத்து உற்று நோக்கத்தக்கது.  பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையில்  “மார்க்ஸிசம் மற்றும் சிங்கள தேசியவாதம் ஆகிய இரண்டு கருத்தியல்-அரசியல் நீரோட்டங்களை மிகவும் திறம்பட கையாண்ட  கட்சி ஜேவிபி தான்”  என (PhD Dissertation இல் “The party which managed two ideo-political currents of Marxism and Sinhala nationalism most adroitly was the JVP”) எழுதியிருக்கின்றார்
 

ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி  ஆகியவற்றின் கொள்கைகள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை, காரணம் இந்த இரண்டு கட்சிகளின் தலைவர் அனுர குமார திசாநாயக்கா அவர்கள்தான்.  தொடக்கத்தில் இருந்தே  ஜேவிபி, தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய ஏகாதிபத்தியம் ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டி இந்தியாவை ஒரு பகை நாடாகப்  பார்த்தது.

இதன் விளைவாக, தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு எதிரான போரை ஆதரிப்பதில் ஜேவிபி தெற்கில் உள்ள சிங்கள – பவுத்த பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தது. ஜேவிபி இந்திய – இலங்கை சமாதானஉடன்படிக்கையையும் மோதல்களுக்குத் தீர்வாக மாகாண சபைகளை உருவாக்குவதையும் கடுமையாக எதிர்த்தது. ஒரு தீவிரமான ஆயுதக் கிளர்ச்சியை 1987-1989 வரை அரசுக்கு எதிராக நடத்தியது.  இன்று, ஜேவிபி –

(1) மாகாண சபைகளை நிராகரிக்காத அதே வேளை, அவற்றுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கப்படுவதை எதிர்ப்பதாகக்  கூறிக்கொள்கின்றது.

(2) முன்னர் ஆட்சியில் இருந்த அரசுகள் போலவே தேமச போர்க்குற்றங்களை விசாரிப்பதையும் போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதையும் நிராகரித்து விட்டது.

(3)அதிகாரப் பகிர்வு விடயத்தில் தேமச இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தி பிராந்தியத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கியமானது என்று நம்புகின்றரது. பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் அதிகாரப் பகிர்வின் தேவையை நீக்கிவிடும் என்று வாதிடப்படுகிறநது.  ஜேவிபி யின் அரசியல் சித்தாந்தமானது, ஒரு சோசலிச அமைப்பில்  அதிகாரப் பகிர்வு தேவையற்றது என்பதாகும். ஏனெனில் அத்தகைய அதிகாரப் பகிர்வு ஏகாதிபத்திய நலன்களுக்கு மட்டுமே சேவை செய்கிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

(4) நல்லாட்சிக் காலத்தில் (2015 -2019) இராணுவத்தின் பிடியில் இருந்த சும்பூர் உட்பட மொத்தம்   47,604 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது இன்றைய ஆட்சியில் ஒரு ஏக்கர் காணியேனும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இரண்டொரு வீதிகள் அரையும் குறையுமாகத் திறந்து விடப்பட்டுள்ளன. ஆனால் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை.

(5) வலிந்து காணாமல் போனோர் தொடர்பாக “15 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர்கள் போனவர்கள்தான்” எனக்  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கைவிரித்துள்ளார்.

(6) தமிழர்களின் தாயக நிலமான வட கிழக்கு இணைக்கப்பட்டதை எதிர்த்து நீதி மன்றம் சென்று அதனை மீண்டும் பிரித்தது செய்தது ஜேவிபிதான்.

(7) ஜேவிபி நீண்ட காலமாக இந்தியாவைத்  தீவிரமாக எதிர்த்தும், வெறுத்தும் வந்த கட்சியாகும். 1968 ஆம் ஆண்டு தொடக்கம் “இந்திய விஸ்தரிப்பு வாதம்” என்கிற கருத்தாக்கத்தை ஜேவிபி தோற்றுவித்தது  அதன்படி இந்திய எதிர்ப்பு இலங்கையின் அரசியலில் நேரடியாக தாக்கம் செலுத்தப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்து விட்டது. இந்தியாவின் அரசியல் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரை தனது நான்காம் படையைப் போல பாவித்து வருகிறது என்கிற கருத்து மேற்படி கருத்தாக்கத்தின் பகுதிதான்.

(8) 2004 இல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு உடன்படிக்கை அன்றைய சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா மற்றும்  வி.புலிகளுக்கும் இடையில் யூன் 24, 2005 அன்று எழுதப்பட்டது. அதனை ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகள்  நாடுகள் வரவேற்றன. ஆனால் ஜேவிபி அதனை எதிர்த்து அரசில் இருந்து வெளியேறியது. எதிர்த்து வெளியேறிய 39  ஜேவிபி நா.உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில்  அடிப்படை உரிமை வழக்கை தாக்கல் செய்தார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்.

சரி. இவையெல்லாம் கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள். இன்று ஜேவிபி இனவாதத்தை, மதவாதத்தை கைவிட்டு நாட்டு மக்கள் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் மனோ நிலைக்கு வந்துள்ளது என்று சிலர் நினைக்கலாம். அவர்கள் புனிதர்கள், தமிழ்மக்களை இரட்சிக்க வந்த தேவதைகள் என்றும் கருதலாம். ஆனால் ஆட்சிக் கட்டில் ஏறிய பின்னர் அவர்களது நடவடிக்கை அப்படி எந்த அதிசயமும் நடைபெறவில்லை என்பதையே காட்டுகிறது. அதாவது ஜேவிபி தனது மூலோபாய – தந்திரோபாய அணுகுமுறையினை கைவிட வில்லை என்பதையே காட்டுகிறது.  அதற்கு நல்ல எடுத்துக்காட்டு தையிட்டியில் தமிழர்களது காணியில் சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ள திஸ்ச மகாவிகாரை பற்றிய அதனது நழுவல் போக்காகும். 

தையிட்டியில் தமிழ்மக்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் காணியில் திஸ்ஸ மகாவிகாரை கட்டப்பட்டுள்ளது. இந்த விகாரை கட்டுவதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை. இந்த விகாரையைக் கட்டியது இராணுவம். காணிச் சொந்தக்காரர்கள் தங்கள் காணியைத் தங்களிடம் ஒப்படைக்குப்படி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி (Sunil Senevi) சட்டத்தை மீறிக் கட்டப்பட்ட விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என அடித்துச் சொல்கிறார். சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தன் பங்குக்கு விகாரைச் சிக்கலில் அரசியலாக்க வேண்டாம் அதில் சம்பந்தப்பட்ட காணி சொந்தக்காரர்கள், திஸ்ச விகாரை விகாராதிபதி மற்றும் நாகவிகாரை விகாராதிபதியும் தங்களுக்குள் பேசி ஒரு தீர்வை எட்டுமாறு உபதேசம் செய்கிறார்.

அதாவது களவுகொடுத்தவர் களவு எடுத்தவர்களோடு பேச வேண்டுமாம். போதாக் குறைக்கு ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தரழ்ப்பாள் என்ற கதையாக அந்த விகாரையை அண்டி ஒரு பவுத்த மடாலயம் திறந்து வைக்கப் பட்டுள்ளது. திறந்து வைத்தவர் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் தனபாலி. சட்டம் ஒழுங்கை நடைமுறைத்தப் படவேண்டிய ஒரு காவல்துறை அதிகாரியே சட்டத்தை மீறியுள்ளார். அரசு அதனை ஆதரிக்கிறது.

கோட்டாபய இராசபக்சே அதிகாரத்திலிருந்த போது  இராணுவ தளபதி  சவேந்திர சில்வா தலைமையில் 100 அடி உயரமான தூபி (Stupa) மற்றும் வட மாகாண  ஆளுநராக இருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்ட விகாரை (Vihara) ஆகிய இரு சட்டவிரோத கட்டுமானங்களையும் அனுர குமார திசாநாயக்கா  அரசு நியாயப் படுத்துகிறது. 
 

இதே சமயம்  30 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டிருந்த தம்புள்ள நகரிலிருந்து பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக பவுத்த பிக்குகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் ஒரே இரவில் கோவில் முழுமையாக இடிக்கப்பட்டது. கோவிலை மூடுவதற்கு முன்னர் சில மதச் சடங்குகள் செய்ய முயற்சித்த ஆலய நிர்வாகம் கால அவகாசம் கேட்ட போதும் அவர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு கோவில்  இடிக்கப்பட்டது.

இப்போது அதே நாட்டில் தமிழ்மக்களுக்குச் சொந்தமான உறுதிக் காணியில் – உயர் பாதுகாப்பு வலயம் என்கின்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட  நிலத்தில் –  திருட்டுத்தனமாக, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை சட்டபூர்வமாக்க சனாதிபதி அனுர குமார திசாநாயக்க  மெத்தப் பாடுபடுகிறார்.

வடக்கிலும் – கிழக்கிலும் போருக்குப் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்டு இன்னமும் முப்படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமான 28,000 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தமிழ்மக்கள் போராடி வருகிறார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 3,754 ஏக்கர் காணி இராணுவத்தின் பிடியில் இருக்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் 1,200 ஏக்கர் காணி இராணுவத்தின் பிடியில் இருக்கிறது. இந்தப் பின்னணயில் சனாதிபதி அனுர குமார திசநாயக்கா அவர்களின் அரசு தமிழ்மக்களின் தலையில் இன்னொரு இடியை இறக்கியுள்ளது.

வடக்கில் 5,940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப் படுவதற்கான வர்த்தமானி (இல.5620)  அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகம்  வெளியிடப்பட்டுள்ளது.  இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 319 காணிகளை உள்ளடக்கிய 3,669 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவில் 507 காணிகளில்  1,702 ஏக்கரும், கிளிநொச்சியில் 58 காணிகளின் 515 ஏக்கர் நிலமும் உள்ளடங்குகிறது.

சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்களது அரசு மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபோல நடந்து கொள்கிறது. இராணுவம் பிடித்த காணிகளை விடுவிக்கக் கேட்டால் அரசு மேலும் காணிகளைப்  பிடிக்கிறது.

மே 06 இல் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் தமிழ்வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தேமசக்திக்குள் ஒளிந்திருந்த  ஜேவிபிக்கு  வாக்களித்தவர்கள் அதன் சுயரூபத்தைப் புரிந்து கொண்டு  தங்கள்  தவறை  திருத்திக் கொள்ள வேண்டும்.

எமது மரபுவழி தாயகத்திலுள்ள சகல  உள்ளூராட்சி மன்றங்களும் தமிழ்த் தேசியம் சார்ந்த  கட்சிகளால் ஆட்சி செய்யப்படும் போதுதான் எமது இணைப்பாட்சிக் கோரிக்கை வலுப்பெறும். 

About VELUPPILLAI 3371 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply