சங்ககாலம் பொற்காலமா? – ஒரு பகுத்தறிவுப் பார்வை
பேராசிரியர் ந.வெற்றியழகன்

எதனைச் சங்ககாலம் என்பது:
சங்ககாலத் தமிழர் வாழ்வியல் _ பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னர் சங்கம் என்பது எந்தச் சங்கத்தைக் குறிக்கும்? என்று தெளிவுபடுத்துவது தேவை.
ஏற்கெனவே இருந்ததாகக் கூறப்பட்டு அவை கடற்கோளால் கொள்ளப்பட்டுப் போயின என்பது நமக்குத் தேவையில்லை.
அந்தச் சொல்லாடலில் நாம் சொல்லப்போவதும் இல்லை. நாம், சங்ககாலம் என ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது கடைச்சங்கம் என்று சொல்லப்படும் அமைப்பு இருந்த காலத்தையேயாகும். இதன் காலம் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் உண்டு; எனினும், ஆய்வு நோக்கம் கருதி கி.மு.500 _ கி.பி.100 என்கிற காலகட்டத்தை ஏற்று, அதனையே கடைச்சங்க காலம் என்றும், சுருக்கமாக, சங்க காலம் என்றும் கொண்டு அந்தச் சங்ககாலத் தமிழர் வாழ்வியல்பற்றி பகுத்தறிவுப் பார்வையைப் படரவிட்டிருக்கிறோம்.
இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புவது
சமுதாய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு _ என்னும் 400 பக்க அளவிலான ஒரு நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தைப் பொற்காலம் என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புகின்றனர். தமிழ் மொழியும் தமிழர் வாழ்வும் அக்காலத்தில் மேலோங்கி இருந்தமையைச் சங்க நூல்கள் காட்டுகின்றன.
ஆக, தமிழ்மொழியும் தமிழர் வாழ்வும் மேலோங்கி இருந்ததால் அந்தக் காலம் அதாவது சங்ககாலம் பொற்காலமாம்!
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போச்சே!
பொற்காலமாகத் திகழ்ந்த சங்ககாலம் போல இந்தக் காலம் இல்லையே? அந்தக் காலம் மறைந்து போயிற்றே? அந்தப் பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனதே! என, தமிழார்வம், தமிழ்ப்பற்றுணர்ச்சி காரணமாகப் பலரும் பாராட்டு மழையில் நனைகின்றனர். இது உண்மைதானா? ஆய்வு செய்ய இருக்கிறோம்! பகுத்தறிவுப் பார்வையைப் படரவிட இருக்கிறோம்.
இன்றைய ஏற்றம்
இயற்பியல், வேதியியல், பயிரியல், உயிரியல், வானியல், அணுவியல், பொறியியல், மருத்துவ இயல் முதலான அறிவியல் துறைகளின் பேருண்மைகள், பெருவிளைவுகள் இன்று மாந்த சமுதாயத்திற்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது.
இலக்கிய எழுச்சி
தொன்மையும் வளமான தன்மையும், முன்மையும் கொண்ட நம் அன்னைத் தமிழ் பற்றியும், அதில் உண்டான இலக்கியங்கள் குறித்தும் நாம் பெருமிதம் கொள்வது இயற்கையே! அவ்வப்பொழுது, நிலவிய சமுதாய அமைப்பினை எதிரொளி(லி)க்கும் இலக்கியப் படைப்புகளும் தோன்றின என்பது உண்மை. அதுசரி, அதனால், சங்ககாலத் தமிழர் வாழ்வியல் பொற்காலமா?
ஆரியம் தழைத்திருந்த அந்தக் காலம்
பொதுவாகவே, இந்திய நிலப்பரப்பினர் அல்லது தமிழர்களின் பொற்காலம் என்று புகழ(ல)ப் படுவதற்குக் காரணம், அந்தக் காலம் ஆரியம் அல்லது பார்ப்பனியம் செழித்து, கொழித்து தழைத்து இருந்தமையே என புதிய வரலாற்றாசிரியர்கள் புகல்வர். சங்க காலம் அதனால்தான் பொற்காலமா? 7 பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு நம் பகுத்தறிவுப் பார்வையைச் செலுத்துவோம்!

பகுதி (1): தழைத்தோங்கிய தனியுடைமைக் கோட்பாடு
வள்ளல்களும் வறியவர்களும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகைப் பாடல்கள் பெரும்பாலும் மன்னர்களையும், குறுநில மன்னர்களையும் நிலக்கிழார்களையும் போற்றிப் புகழ்ந்து பரிசு பெற வறுமையில் வாடிய பாவலர்கள் பாடிய பாடல்கள், தம் வாழ்க்கையை நடத்துவதற்கு வேறு வழியின்றியே அவ்வண்ணம் பாட வேண்டிய நிலை இருந்தது.
கொடை மிகுந்ததாகவும் வள்ளல்கள் நிறைந்தவர்களாகவும் காணப்படும் சமுதாயம் வறுமை மிகுந்ததாகத்தானே இருக்கும்? மக்கள் வறுமை, பாவலர் வறுமை, கலைஞர்கள் துயரம் இவை நீக்க மன்னன் கொடைத் திறம் இவற்றைச் சங்க நூல்கள் விளக்கும்.
பசித்த வயிறு; பழங்கந்தல் உடை
வயிற்றில் பசியுடன், புறத்தில் பழங்கந்தல் உடையுடன் கூட்டங்கூட்டமாகச் சுற்றித் திரிந்த மக்கட் பிரிவினர் இருந்தனர். யாழ் கையிலே! பசி வயிற்றிலே! பொருத்தப்பட்ட பழங்கந்தை இடையிலே!! -என்ற பொருளில் கையது கடன் நிறை யாழே! மெய்யது
புரவலர் இன்மையின் பசியே! அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
இதன் பொருள்: பாணனே! (பாடிப் பரிசு பெற்று வாழும் பாடகன்) யாழ் கையிலே! பசி வயிற்றிலே!! பொருத்தப்பட்ட பழங்கந்தை இடுப்பிலே உடைய பாணனே! உன் பசி எங்கே தீரும் தெரியுமா?
மன்னன் கிள்ளிவளவனிடம் செல்வாயாக! இதுதான் பாடிப் பிழைக்க வேண்டிய பாணனுக்குக் கூறும்வழி. இது ஆலத்தூர் கிழார் பாடிய பாடலின் கருத்து.
இதிலிருந்து தெரிவது என்ன?
இதிலிருந்து இரு கருத்துகள் தெளிவு. ஒன்று, பசித்த வயிற்றுடனும் பழங்கந்தையுடனும் கூட்டங் கூட்டமாகச் சுற்றித் திரிந்த மக்கள் பிரிவினர் இருந்தனர். மற்றொன்று, பொன்னையும் பொருளையும் தேரையும் நாட்டிலுள்ள அனைத்துப் பொருள்களையும் தம் பொருளாக்கிக் கொண்டு வாழ்ந்த மன்னவன் இருந்தான்.
இருப்பவன் – இல்லாதவன்
மன்னனைப் புகழ்ந்துபாடி, அவனிடம் பரிசு பெற்று வாழும் பாணனைக் காண்கிறோம். மக்கள் பற்றிய சமுதாய நிலை இது. உடையவன் _ இல்லாதவன் வாழ்ந்த நிலை இது! இருப்பவன் இல்லாதவருக்கு ஈந்து தன் ஈகைப் பண்பினைக் காட்டிக் கொள்கிறான். இது போற்ற வேண்டிய பண்புதான்! ஆனால், இருப்பவன் _ இல்லாதவன் என்ற நிலையில் அந்த ஈகை பிறந்தது என்ற சமுதாய நிலையை நாம் பொற்காலம் என்று கூறி நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோமே? கற்றவர், கவிஞர், கலைஞர்கள் மன்னனைக் கண்டு கொடை பெற்றால் பிறர் நிலை _ கல்லாதார் நிலை, வாழ்வு எப்படி இருந்திருக்கும்? கொடை மிகுந்து காணப்படும் சமுதாயத்தில் வறுமை மிகுந்துதானே இருக்கும்?
பறைசாற்றும் பாடல்கள்
செல்வர்களும், வணிகர்களும் பல்லடுக்கு மாளிகைகளில் வாழ, வறியோரும் உழவர்களும் தனிச் சேரிகளில் இருந்தனர் எனப் பாடல்கள் பல பேசுகின்றன. இல்லை, பறைசாற்றுகின்றன.
இருக்கும் இடம் எதுவோ?
சுற்றம் சூழ, சின்னஞ்சிறுவர்கள் எறும்புக் கூட்ட வரிசைபோல நீண்டு, சாரைசாரையாகச் சென்று கொண்டிருக்கின்றனர். எறும்புகளின் வாய் நின்ற முட்டைகள்போல சிறுவர்களின் கைகளில் சோற்று உருண்டைகள் காயும் கும்பியை நிரப்ப. ஒரு கவளச் சோற்றுக்காகப் பறக்கும் வேதனைக் காட்சி. பாணன் ஒருவன், அவர்களைப் பார்த்து வழி கேட்கிறான். வழி எதற்கு? தன் கொடிய நோய் நீங்க! என்ன நோய்? பசி, பசி, மருத்துவன் யார்? சிறுகுடிக்கிழான் பண்ணன் என்பவன், சங்ககாலத்தில் நிலவியிருந்த வறுமை நிலையை குளமுற்றத்துத்துஞ்சிய சோழன் கிள்ளிவளவன் இந்தக் காட்சியை உயிரோவியமாகத் தீட்டியுள்ளான். யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! என்பது அந்தப் புகழ்மிகு கிள்ளிவளவனின் பாடல் முதலடி. பொருளியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாதவர்கள் உள்ளவர்களிடம் அடிமை வேலைகள்; அதற்குரிய ஊதியம் பெறும் தொழிலாளிகளும் இருந்தனர்.
எப்படி இருந்தது?
சங்ககாலச் சமுதாயம் இன்றுள்ள வர்க்க சமுதாயத்தின் முன்னோடிதான் உடைமையாளர், அவன் கீழ் உழைத்தவன் என்ற வர்க்கப் பிரிவுகள், உடைமையாளனுக்கே ஆட்சி என்பதன் ஆணிவேர் சங்ககாலம்தான். இன்று உடையவன் _ இல்லாதவன், செல்வன் _ வறியவன் என்று இருப்பது போலவே சங்க காலத்திலும் மக்கள் பல வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருந்தார்கள். இல்லாரும் இலர்; உடையாரும் இலர் என்ற நிலை சங்ககாலத்தில் இல்லை.
வர்க்கபேத வல்லாண்மை
சங்க இலக்கியங்கள் தரும் காட்சி வர்க்க பேதமற்ற வறுமையற்ற எல்லாரும் எல்லாமும் பெற்றிருந்த பொற்காலம் என்று நினைப்பது சரி அன்று. பத்துப்பாட்டில் வரும் நெடும்பாடல்கள் சோழ, பாண்டியர்களின் பேரரசுகள் பற்றியதாகும். கடற்கரை ஓரங்களிலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் நகரங்கள் தோன்றி மக்கள் வர்க்கப் பிரிவுகளாக வாழ்ந்த நிலையும் ஆண்டான் _ அடிமை வாழ்வும் வாழ்வின்றிச் சீரழிந்தோர் நிலையும் கண்ணாடி போல் விளக்கப்பெற்று ஒரு வர்க்க சமுதாயம் நிலவுடைமை, வல்லாண்மை அமைந்த அமைப்பு இருந்ததைக் காணமுடிகிறது.
பகுதி (2) : புகழ்வேண்டி மேற்கொண்ட போர்ப்பண்பு
சண்டைச் சமுதாயம்: சங்ககாலச் சமுதாயம் சண்டையிடும் சமுதாயம்; போர்ச் சமுதாயம். இளைஞர்கள் போர்க்கலன்கள் ஏந்தி போர்க்களம் சென்று போர் புரிவதே அவர்கள் கடமை.
இன்னின்னார் கடமை இதுதான்!
சங்கப்பாடல் ஒன்று கூறுவதைப் பார்ப்போம். பொன்முடியார் என்கிற பெண்பால் புலவர் தாய், தந்தை, அரசன், தொழிலாளி, மகன் முதலியோர்க்குரிய கடமைபற்றிப் பாடுகிறார். ஈன்று மகனை வளர்ப்பது ஒரு தாயின் கடமை; அவனை வீரன் ஆக்குவது தந்தையின் கடமை; வேல் வடித்துக் கொடுப்பது கொல்லன் கடமை; போர்ப்பயிற்சி தருவது மன்னவன் கடமை; வாள் எடுத்துப் போர்க்களம் புகுந்து, போரிடுதல் மகன் ஆகிய இளைஞனின் கடமை! என்பது, ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று தொடங்கும் அந்தப் பாடலின் கருத்து. இதிலிருந்து, ஒரு மகன், (இளைஞன்) போரிடுவதே அவனுக்கு இன்றியமையா கடமை என்று தெரிகிறது. அத்தோடு, பிள்ளையைப் பெற்று வளர்ப்பதுதான் ஒரு பெண்ணின் கடமை; வேறொன்றும் இல்லை எனத் தெரிய வருகிறதல்லவா?
ஓர் இளைஞன் கல்வியாளனாகவோ அறிஞனாகவோ, ஆகவேண்டாம்! (சான்றோன் என்ற சொல்லுக்கு இந்த இடத்தில் போர்வீரன் _ என்றே மூத்த தமிழாய்வறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமி கூறுகிறார்.)
செத்து மடிந்த சின்னஞ் சிறுவன்
ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்புலவர், முன்பு அவள் அண்ணன், கணவன் போரிடச் சென்று மடிந்த பின்னும், தன் சின்னஞ்சிறு மகனை, கையிலே வேல் தந்து களம் அனுப்பிய செய்தியைப் பாடுகிறார்.
வீரமா? கோரமா?
பால்மணம் மாறாத பாலகன்கூட, போர்க்களம் புகுந்து போர்புரிவதைத் தவிர்க்க முடியாத நிலை சங்க காலத்தில் நிலவியதைக் காட்டுகிறது. இன்னும் சான்றுகள் நிறையக் காட்டலாம். விரிவஞ்சி விடுக்கின்றோம். போர்ச் சமுதாயத்தில் இளம் வீரர்கள் அல்லது சிறார்கள் கொத்துக் கொத்தாக மடிய நேர்ந்த உண்மையை மறுக்க முடியுமா?
கொள்ளையோ கொள்ளை!
இவை மட்டுமா? ஓர் அரசன் மற்றோர் அரசனை அழித்து அவன் நாட்டுச் செல்வத்தைக் கொள்ளை அடிப்பது அன்றைய சமுதாய நிலை. பாண்டியன் நன்மாறன் பிற நாடுகளைத் தாக்கி அழித்து அவர்களின் செல்வத்தை அள்ளிக் கொண்டு வந்தான்.
வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடிய புறப்பாடல் வழி இவ்வுண்மையை அறிகிறோம்.
இப்படிப்பட்ட அரசனைப் புகழ்ந்து பாடிய கவிஞர், புலவர்கட்குப் பரிசில் கிடைக்கும். போர்க்கள வெற்றி, பகையழித்த செயல் கொள்ளை கொண்ட பொருள்கள், பகை மன்னர் அழிதல் _ இவை வீரம் ஆகுமா?
பகுதி (3): ஆழமாய்ப் பதிந்த ஆரியப் பண்பாடு பாவாணரின் படப்பிடிப்பு
பழங்குடிப் பேதைமை; மதப் பித்தம், கொடை மடம் எனும் முக்குற்றமும் ஒருங்கு கொண்ட மூவேந்தரும் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பிராமணரை முற்றிலும் பின்பற்றியதால் கடைக்கழக(சங்க)க் காலத்தில் மதவியல், குமுகாய (சமுதாய) இயல், மொழியியல் என்னும் முத்துறையிலும் ஆரியம் வேரூன்றிவிட்டது _ என்கிறார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள். (நூல்: தமிழர் வரலாறு _ பக்கம் 248)
வேரூன்றிய வேதக்கருத்துகள்
அரண்மனைகளிலும், கோவில்களிலும், செல்வர் மாளிகைகளிலும், வழிபாடுகளும், சடங்குகளும் பிராமணர்களால் சமஸ்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. _ (பாவாணர்: நூல்: திருக்குறள் தமிழ் மரபுரை_ பக்கம் 19)
சனாதனப் பிடிப்புகளும், வேள்விகளும் தமிழர் வாழ்வைச் சங்ககாலத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கியதோடு வேதக் கருத்துகளும் புராணப் பெருக்கமும் நிலைபெற்றுவிட்டன. முதலில், வேள்விகளின் செல்வாக்கு பற்றிப் பார்ப்போம்.
வேத வேள்விகள்:
சங்க காலத்தில் நடந்த வேள்விபற்றி, சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தம் பின்வருமாறு நேரடி வருணனை செய்வதை முதலில் பார்ப்போம். விதானத்தடியில் பருந்துருவம் கொண்ட பல்வகை வேள்விச் சாலைகள்; விலங்கினங்களின் உயிரைச் செருக்கும் பலிபீடங்கள்; யூபம் என்ற (யாக) நெடுந்தூண்களில் கட்டப்பட்ட விலங்கினங்கள்; முத்தீச் செல்வர்கள் வளர்த்த அழற்குண்டங்கள்; முப்புரி நூலணிந்து, மான் தோலுடை பூண்டு அருமறை மந்திரங்களை அடுக்கடுக்காய் உச்சரித்து, அனல் கக்கும் குழியில் குடம் குடமாய் நெய்யை ஊற்றி, பல விலங்குகளின் உயிர்க் குலைகளை அறுத்தெடுத்து அதன் பச்சை இரத்தத்தைத் தீயில் பொழிந்து, வெட்டுண்ட உடலத்தை வாட்டி எடுத்து, வேற்றுலக வாழ்க்கைக்கும் இவ்வுலக இன்பத்திற்கும் வழிகாட்டும் விளக்கங்கள் _ (நூல்: வடிவிழந்த வள்ளுவம். பக்: 7-_8)
அள்ளி அள்ளி
பத்துப் பெருவேள்வி செய்து, இறுதி வேள்வி செய்கையில், தன் மனைவியுடன் விண்ணுலகடைந்ததாகச் சொல்லப்பட்ட பாலைக் கவுதமனார் பார்ப்பனருக்குத் துணையாயிருந்து வேள்வி நடாத்தி, பெருங் கொடைகளை அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த வேந்தர் பெருமக்களும் சங்கத் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள்தாம்!
சங்ககாலம் பொற்காலமா? – 2
பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம்
சிறப்பிழந்த சேரமன்னர்கள்

சேரமன்னர்கள் பார்ப்பனியத்தில் ஊறித் திளைத்தனர். பார்ப்பனர்களுக்குத் தானங்களை வாரி இறைத்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக மகப்பேறு வேள்வி (புத்ரகாமேஷ்டி யாகம்) நடத்தி பிள்ளை பெற்றானாம். (பதிற்றுப்பத்து_74)
சொக்கிப்போன சோழ மன்னர்கள்!
சோழர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? கரிகால் சோழன் வேள்வித்தூண் (யூபம்) எழுப்பி வேள்வி முடித்தான். இராசசூயம் யாகம் நடத்தி இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி என இவன் அழைக்கப்பட்டான்.
பறைசாற்றப் பெற்ற பார்ப்பனத் திமிர்
ஒரு பார்ப்பனப் புலவன், சோழ இளவரசன் ஒருவனோடு சூதாடும் அளவுக்கு மிக நெருக்கமாக இருந்தான். சூதாடும்போது சினம் கொண்டு சூதாடு கருவியினை இளவரசன் வீசியதால் வெகுண்ட பார்ப்பனப் புலவன் இளவரசனைப் பார்த்து, நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் (புறம்: 43: 14) என எச்சரித்துள்ளான். புலவன் என்பதைவிட, பார்ப்பனன் என்னும் வர்ணதர்மச் சிறப்பையே அவன் பெரிதாகக் கருதியுள்ளான். இது, ஆரிய_பார்ப்பன மேலாண்மையை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பார்ப்பன மேலாண்மை பறைசாற்றப்பட்ட சங்ககாலம் தமிழர்களின் பொற்காலம் ஆகுமா?
பணிந்துபோன பாண்டியர்கள்
பாண்டியர்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன? பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், வேள்வி செய்வதில் மிகப் புகழ்பெற்ற புரோகிதப் பார்ப்பனர்களைக் கொண்டு வேள்விகள் பல செய்து பார்ப்பனப் பணியாளராக, இருந்துள்ளார். இதனால்தான் இவனுக்கு இந்த அடைமொழியைச் சங்கப் புலவர்கள் வழங்கியுள்ளனர்.
பல்யாக சாலை அமைத்து வேள்வி நடத்தப்பெற்ற காலம் தமிழர்களின் பொற்காலமா? யாருக்குப் பொற்காலம்? தமிழர்களுக்கா? இல்லை! பார்ப்பனர்களுக்கா? எண்ணிப்பார்த்தல் வேண்டும்!
தொழப்பட்டு வந்த தொன்ம (புராண)க் கடவுள்கள்
இந்து புராண இதிகாசங்களில் வரும் கடவுள்களைச் சங்ககாலத் தமிழர் தொழுது வந்தனர். அவர்களுள், சிவன் ஒருவன். ஆரியப் புராணங்களில் சொல்லப்பட்ட முக்கண்ணன். (அகம்: 181, கலி.2; 104; புறம்-_6.) முப்புரம் எரித்தவன்_(கலி_23, 26, 156; பரிபாடல்_522) உமையொருபாகன் _ (கலி_38; புறம்_17; பதிற்றுப்பத்து_1) நீலகண்டன்(நீலமணிமிடற்றொருவன் _ கலி_142; பரிபாலை, 8,9; புறம்: 55, 56, 57) இவை சிவனைப் பற்றியவை.
முருகன்: கந்தபுராணக் கருத்தில் ஆறுகார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன் _ (முருகு: 25)
திருமால்: பாம்பணையான் (கலி_105, 123; பரி_13) திருமகள் கணவன் _ (பரிபா_3; கலி.104; பரிபா_18;2, பெரும்பாண்: 29)
திருமாலின் 10 அவதாரங்களில் மச்சம், கல்கி இரண்டும் நீங்கலாக 8 அவதாரக் கதைகள் கூறப்பட்டுள்ளன. கூர்மாவதாரம்_பரிபாடல்_3; வராக அவதாரம்_பரி_2,3,4,13; நரசிம்மாவதாரம்_பரி_4. பலராமாவதாரம்_நற்றி_32 புறம்_56, கலி_26, 105; வாமனாவதாரம்_கலி_124; பரி_3, முல்லைப்பாட்டு_1; பெரும்பாண்:29) பரசுராமாவதாரம்_அகம்_220; இராமாவதாரம்_புறம்_328; கிருஷ்ணாவதாரம்_அகம்_39; கலி_103; பரி_3, 134; புறம்_174; 201; மதுரைக்காஞ்சி_558; மேற்கண்ட ஆரியக் கடவுளை வணங்கிய காலம் பொற்காலமா?
பகுதி (4) நுண்ணிய நோக்கில் பெண்ணியக் கருத்துகள்
யாருக்கு யார் உயிர்?
ஆடவர்களுக்கு வினைபுரிதல் உயிர்; ஆனால், ஒளிபொருந்திய நெற்றியையுடைய இல்லத்திலேயே இருக்கும் பெண்டிருக்கு _ ஆடவர்தாம் உயிர்! என்ற பொருளில் அமைந்த சங்கப் பாடல் இது:
வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே! (குறுந்தொகை: 135) இந்தப் பாடல் வழி நாம் அறிவது யாது? ஆடவன் வெளியே சென்று அலுவல் பார்த்தல் வேண்டும். பெண் வீட்டைவிட்டு வெளிச் செல்லாது இல்லத்திலேயே இருத்தல் வேண்டும். அவளுக்கு உயிர் ஆடவன்; அதாவது கணவன்!. இதுதான் சங்ககாலப் பெண்ணின் நிலை! இன்னொரு கருத்து: தன் கணவன் சான்றோர் இகழும்படியாக ஒழுக்கக் கேடனாக இருப்பினும், தகைசான்ற ஒரு பெண் தன் கணவனைப் போற்றிப் புகழ்வதுதான் சால்புடையதாகும் என்னும் பொருள்பட, தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வனை ஏத்தி! _ (பரிபாடல்: 88_89) என்னும் சங்கப் பாடலின் உட்பொருள் எவருக்கும் விளங்காமல் போகாது! சங்ககால மங்கையின் பெருமை இதுதானா? இவ்வன்மை இருந்த காலம் பொன்னான காலமா? பெண்ணடிமைத்தனத்தின் நிலையினை இதிலிருந்து நாம் அறிகிறோம் அல்லவா?
ஒன்று உடன்கட்டை, இன்றேல் தலைமொட்டை:
மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால், மனைவிக்கு இந்த உரிமை கிடையாது! இதைவிட ஒரு கொடுமை: கணவன் இறந்தால் மனைவி அவனோடு சிதையில் படுத்து உயிர்விட வேண்டும். பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு இறந்த கணவன் சிதையில் தீப்பாய்ந்த கொடுமையினைப் புறநானூறு _(216) புகல்கிறது! புகழ்கிறது.
உடன்கட்டை ஏறி உயிர் துறக்காவிட்டால் கணவனை இழந்த மனைவி கொடிய கைம்பெண் (விதவை) ஆகவேண்டும். அதாவது, கைம்மை நோன்பு ஏற்க வேண்டுமாம்!
என்ன கொடுமை! எத்தனைக் கொடுமை!!
கைம்பெண்ணான பெண்ணின் தலையை முழுதும் மழித்து மொட்டைத் தலையாக்குவர். கொய்ம்மொழித் தலையொடு கைம்மையுற _(புறம்: 261:17) கைவளையல்கள் உடைத்து நொறுக்கப்பட்டது. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி (புறம்_250;4) (தொடி_வளையல்).
இச்செயல்களால் அந்தப் பெண்ணின் அழகு குலைக்கப்பட்டது; கலைக்கப்பட்டது. கைம்பெண்டிர் பாயில் படுத்து உறங்கக் கூடாது; பருக்கைக் கற்களில் படுத்துறங்க வேண்டும்; பரல்பெய் பள்ளி பாயின்றி வதியும். வெள்ளரி விதை போன்ற சத்தற்ற நீர்ச்சோறு; எள் துவையல்; புளி சேர்த்துச் சமைத்த வேளைக் கீரை; இவைதான் அவர்கட்குரிய உணவு, உறைவிடம் (புறநானூறு: 246) இந்தச் சங்ககாலம்தான் தங்க காலமாம்!
பகுதி (5) படம் பிடித்துக் காட்டப்படும் பரத்தமை ஒழுக்கம்
இப்படியா பெண்மையை இழிவுப்படுத்துவது?
பரத்தமை ஒழுக்கம் ஒரு தொழிலாகவும், பரத்தையிடம் தங்க, தலைவியை விட்டுப் பிரிதல் ஒரு துறையாகவும், அதுவே தலைவனின் ஒரு பண்பாகவும் இருந்து வந்துள்ளது.
யாரோ? இவர் யாரோ?
பரத்தையர் என்பவர் பொதுமகளிர் எனப்பட்டனர்; வள்ளுவர் இவர்களை வரைவின் மகளிர் எனக் கூறுகிறார். பரத்தையருள், ஒரு தலைவன் மட்டுமே சென்று சிற்றின்பம் நிலையிலுள்ளவர் இல்பரத்தையர் எனப்பட்டனர். (மதுரைக்காஞ்சி: 340, 359, 379, 382) இந்தக் காலத்தில் இவர்கள் சின்னவீடு என்றும் வைப்பாட்டி (Keeper) எனவும் அழைக்கப்படுவர். சேரிப்பரத்தையர் தம்மிடம் இன்பம் துய்க்கவரும் ஆடவரிடமிருந்து செல்வம் பெற்று வாழ்ந்தனர். இவர்கள் கொண்டி மகளிர் எனவும் அழைக்கப்பட்டனர். ஆற்றுநிலப் பகுதிகளில் எல்லாம் பரத்தையர் வாழ்ந்தனர். ஆற்றங்கரை நகரங்களில் அவர்தம் எண்ணிக்கை மிகுதி.
மருதத் திணையின் மதிப்புமிகு உரிப்பொருள்:
மருதத் திணையின் உரிப்பொருளாக உள்ளது. ஊடல் _ ஊடல் நிமித்தம் (வாயில்) தலைவன், தலைவியை நீங்கி பரத்தையிடம் சென்று அவளை நுகர்ந்து வீடு திரும்பும் போக்கினையே காரணமாகக் கொண்டு ஊடுதல் (பிணங்குதல்) தலைவியின் வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இதுபற்றி, கூச்சமோ நாணமோ எவரும் பட்டதாகத் தெரியவில்லை. இச்செய்திகளையே சங்க அகப்பொருள் இலக்கியங்கள் சிறப்பாகவும் பெருமையாகவும் கூறுகின்றன; மாண்புடன் பாடுகின்றன. பெண்ணிழிவும், பெண்ணடிமைத்தனமும் கொடிகட்டிப் பறந்தன.
உள்ளம் கவரும் ஊடற்காட்சிகள்:
பின்வரும் கூற்றுகள் எல்லாம் தலைவியுடையன. கொடியின் இயல்புடைய பரத்தையருடைய புழுகு (புனுகுப்பூனையின் மணப்பொருள்) முதலியவற்றிலே அளைந்த மயிர் முடியினின்றும் உதிர்ந்த பூந்தாதுப்பொடி நின் தோள்பட்டையில் கிடக்க, எம்மைத் தீண்டுதற்கு நீ யார்? திரும்பிப் போய்விடு (கலித்தொகை: 88)
வலிந்து புகுந்து நெருங்கி கூடுதற்கு வரும் தலைவனிடம், எம் இல்லம் வாராதே! போய்விடு! பரத்தையிடம் இருந்துவந்த நீ என்னைத் தொடாதே!
என்னை மன்னிப்பாயா! மன்னித்து என்னை ஏற்றுக்கொள்! _ என்றான் தலைவன். சினம் தணிந்த அந்தத் தலைவி தலைவனுடன் கூடினாள் (கலி: 90)
ஏய்! என்னை ஏமாற்றாதே!
தலைவன் பொய்கூற, தலைவி கூறுகிறார்: பரத்தை தன் கைவிரல் நகத்தால் காமவெறியில் கீறிய கீறல் வடுவாக உள்ளது! எனக்கா தெரியாது? ஏமாற்றாதே போய்விடு (கலி: 91).
வழிதப்பி வந்துவிட்டாயா? ஏடா, மணம் கமழும் கருங்கூந்தல் பரத்தை இல்லம் செல்கிறாய் நீ! இப்பொழுது வழிதவறி வந்துள்ளாயா? இங்கே வாராதே! அவளிடமே போ! போ!!
மறக்க முடியுமா?
மாட்டிக் கொண்டேன் வசமாக உன்னிடம்! மறக்க முடியுமா மாதரசி உன்னை! அருள்புரிவாய் கருணைக்கடலே! அமிழ்தல்லவோ உன் உடலே!! (கலி:91)
சொல்லடா, வாய் திறந்து!
தலைவனிடம் தலைவி: எப்படி நீ இங்கு வந்தாய்?
தலைவன்: குதிரை ஏறி உன்னிடம் வந்தேன்?
தலைவி: எந்தக் குதிரை அந்தக் குதிரை? பரத்தைக் குதிரையா? அந்தக் குதிரைதான் உன் மார்பில் கீறியதோ? பிறாண்டியதோ? சொல்லடா வாய் திறந்து! (கலி: 96)
இவ்வாறான வேண்டத்தகாத பண்பாட்டுத் தவறான பரத்தமை ஒழுக்கம் பரவிக் கிடந்த சங்ககாலம்தான் பொற்காலமா?
பகுதி (6) பெயர் போன பெருங்குடி மக்கள் கூட்டம்!
பல வகைகள்
ஏழையரும் செல்வர்களும், அரசர்களும், புலவர்களும் குடிப்பழக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டனர். குடிக்கின்ற கள் பலவகைகளாக இருந்தன. தென்னங்கள், பனங்கள் (பெரும்பாணாற்றுப்படை:245) அரிசிக்கள் அல்லது நறும்பிழி, (பெரும்பாண்:275) தேக்கள் தேறல்_(மலைபடுகடாம்:171) மட்டு (பட்டினப்பாலை 894), மகிழ்_(பொருநராற்றுப்படை:84), மகிழ்ப்பழம் (பொருநர்_111), தினைக்கள்_(அகநானூறு:284), மாங்கள்(அகம்:27)
இவையன்றி, யவன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேனாட்டுக் கள்ளும் வழக்கத்தில் இருந்தது. பொன்கலத்தில் ஊற்றி _இளம்பெண்கள் ஊற்றித்தர களிப்புடன் அரசர்கள் உண்பர். (புறநானூறு:24; மதுரைக்காஞ்சி_778)
அவ்வையார் அருந்தியகள்
அவ்வையார் போன்ற பெண்பாற் புலவர்களும் புரவலர்களும் குடிப்பழக்கம் உடையவராக விளங்கினர். சிறிது கள் கிடைத்தால் எமக்குக் கொடுப்பான் அரசன்: நிறையக் கிடைத்தால் நாங்கள் பாடி மகிழ அரசன் மகிழ்ந்து கள் உண்பான் என்ற கருத்தில், சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரிய கள் பெறினே யாம்பாடத் தாம் உவந்து ஈயும் மன்னே! _ (புறநானூறு)
இது அதியமானை அவ்வையார் புகழ்ந்து பாடியது. கள் அருந்துவதில் ஆடவர் _ பெண்டிர் எனப் பாகுபாடற்ற நிலை இருந்திருக்கிறது. இந்த நிலையுள்ள காலம் பொற்காலம் என்பது பொருந்துமா?
பகுதி (7) பகுத்தறிவுக்கு மாறாகப் பரவிக் கிடந்த மூடநம்பிக்கைகள்
குருட்டு நம்பிக்கைகளின் கூடாரம்:
ஒரு சமுதாயம் பகுத்தறிவு மனப்பாங்கோடு, சிந்தித்துச் செயல்பட்டு வாழ்வதுதான் அதற்குச் சிறப்புத் தருவதாகும். சங்ககாலச் சமுதாயம் அப்படிப்பட்டதா? அகம், புறம் அதாவது, காதல்-_மோதல் (போர்) இவற்றினையே அடிப்படையாக, கருப்பொருளாகக் கொண்டது ஆகும். இத்தகு வாழ்வில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, ஏன்? புறம்பாக பழமைக் கண்மூடிப் பழக்கவழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள் கோலோச்சி நின்றன. பெரியாரியல் பார்வையில், சுருங்கக் கூறின், மூடநம்பிக்கைச் சேற்றில் முங்கிக் கிடந்தது. இது உண்மையா? வீண் பழியா? பார்ப்போமே?
கண்ணால் அல்லது பொறிகளால் காணாமலும் அறிவால் ஆய்ந்து பாராமலும், காரணகாரியத் தொடர்பு பற்றிக் கவலைப்படாமல் எதனையும் மடத்தனமாக நம்புவதும், ஏற்றுக்கொள்வதும் மூடநம்பிக்கைகளாகும். சங்ககாலத் தமிழர்கள் பகுத்தறிவுக்கு விடைகொடுத்துவிட்டு மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தனர்.
பேய்கள்-பிசாசுகள்:
பேய்கள் இருப்பதாக சங்ககாலத் தமிழர் நம்பினர். போர்க்களம், சுடுகாடு, பொது மன்றங்கள், மரங்கள் முதலான இடங்களில் வாழ்வதாகவும் _ (பதிற்றுப்பத்து 24, 69) நள்ளிரவில் நடுத்தெருவில் அவை திரிவதாகவும் (புறம்:354; 386) பிணத்தின் புண்ணைத் தோண்டித் தின்னும் என்றும் (புறம்:370); பேய், பூதம் முதலான பெயரால் அவை அமையும் என்றும் அவர்கள் நம்பினர்.
கண்ணுபடப் போகுதய்யா!
கண்ணேறு எனப்படும் நம்பிக்கையுடையவர்களாக அவர்கள் வாழ்ந்தனர். ஒருவர் பார்வை மற்றவர்க்குத் துன்பம் செய்யும் என்றும் நம்பினர்.
மூட்டைமூட்டையாக பிற மூடநம்பிக்கைகள்:
1. திங்களைப் பாம்பு விழுங்குவதே கிரகணம்;
2. நாளும் கோளும் நன்மை தீமை செய்யும்;
3. பாம்புகள் மாணிக்கங்களை உமிழும்.
4. சகுனம் பார்த்துத்தான் எச்செயலையும் செய்தல் வேண்டும்.
5. கனவில் காணும் காட்சிகளும் கெட்ட நிமித்தங்கள் ஆகும்.
6. பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு; (நற்றிணை: 189, 323, அகம் 151.)
7. காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர்;
8. இடக்கண் துடித்தால் நன்மை; வலக்கண் துடித்தால் தீமை வரும்.
9. இம்மை _ மறுமையில் நம்பிக்கை;
10. குறி கேட்டல்.
11. தெய்வம் எவர் மீதிலேனும் வெளிப்பட்டுத் தோன்றித்தான் கூற வேண்டியதைக் கூறும்.
இவைபோன்ற, இவற்றிற்கும் மேலான பல மூடநம்பிக்கைகளைச் சங்ககால மக்கள் கொண்டிருந்தனர் என சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் என்று கூறுதல் எப்படிப் பொருந்தும்?
இத்தனையும் இருக்கலாம்!
சங்கத்தமிழர், வீரவாழ்வில் சிறந்து விளங்கியிருக்கலாம்; வெற்றிகள் பல கண்டிருக்கலாம்; வள்ளல்கள் வாரி வாரி வழங்கியிருக்கலாம்; பாவலர்கள் அழகிய, சீரிய பாக்களைப் பாடியிருக்கலாம்; பல நல்ல கருத்துகளை எடுத்துரைத்திருக்கலாம்; களவியல் _கற்பியல் என்னும் அகத்திணை வாழ்வை நடத்தியிருக்கலாம்; எழிற்கலைகளில்(Fine Arts) ஏற்றம் பெற்றிருக்கலாம். முத்தமிழ்த் துறைகளில் கரை கண்டிருக்கலாம்; வணிகத்தால் வளம் பல பெற்றிருக்கலாம்! இவற்றால் இவையிருந்த காலத்தை நாம் பொற்காலம் என்று சொல்லலாமா?
இல்லை என்பது ஏன்?
இத்தனை இருந்தும், பொருளியல் வாழ்வில் வர்க்கபேதம்; சமுதாய வாழ்வில் வர்ணபேதம்; ஆரியத்தின் தாக்கம், பெண்ணடிமைத்தனம்; பரத்தமை ஒழுக்கம், அமைதி தவழாத போர்ப்பண்பு, கரைகாணாத கள் குடி; முற்றிப்போன மூடநம்பிக்கைகள் இவை எல்லாம் வேரூன்றிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் ஆகுமா? அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!
Leave a Reply
You must be logged in to post a comment.