ஊடக முதலாளி கந்தையா பாஸ்கரனின் ஐபிசி (தமிழ்வின்) சம்பந்தன் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறது! கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறது!
நக்கீரன்
சென்ற வாரம் ஐபிசி (தமிழ்வின்) இணையதளத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு மிகவும் வேடிக்கையானது. ” தமிழரசுக் கட்சியால் நொந்து நொடிந்து போன சம்பந்தனின் இறுதி நிமிடங்கள்” என்பதுதான் அந்தத் தலைப்பு. அந்தக் கட்டுரையில் இருந்து முக்கிய பந்திகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) இதற்கு முன்னர் இருந்த தந்தை செல்வா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வயது முதிர்ந்தாலும் கூட கட்சிக்குள் மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில், நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று கூறி அவரின் இறுதிக் காலத்தில் அரசியல் ரீதியாக அவரை துன்பத்திற்குள் உள்ளாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை சம்பந்தனை மனதளவில் மிகவும் பாதித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
பதில்: இலங்கைத் தமிழரசுக் கட்சி சங்கர மடமோ அல்லது நல்லை ஆதீனமோ அல்ல. அது 75 ஆண்டு கால வரலாற்றை கொண்ட அரசியல் கட்சி. அது மக்களுக்கு, குறிப்பாக தேர்தல்களில் வாக்களித்த மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய கட்சி. தனி ஆள் நலன்களைவிட கட்சி நலன், வாக்களித்த மக்கள் நலன் மேலானது. சம்பந்தன் ஐயா தனது நாடாளுமன்றப் பிரதிநித்துவப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவு கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவு. தீர்க்க ஆலோசித்த பிறகு எடுத்த முடிவு. திருகோணமலை மாவட்டம் கேந்திர முக்கியம் வாய்ந்த தொகுதி. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மாவட்டத்தில் இன்று தமிழர்கள் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை 1 திருகோணமலையில் தமிழர்களது குடிப்பரம்பல் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டதைக் காட்டுகிறது.
அட்டவணை 1
ஆண்டு | முஸ்லிம் | தமிழர் | சிங்களவர் | ஏனையோர் | தொகை | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | % | எண். | % | எண் | % | எண் | % | ||
1827 | 3,245 | 16.94% | 15,663 | 81.76% | 250 | 1.30% | 0 | 0.00% | 19,158 |
1881 | 5,746 | 25.89% | 14,304 | 64.44% | 935 | 4.21% | 1,212 | 5.46% | 22,197 |
1891 | 6,426 | 24.96% | 17,117 | 66.49% | 1,105 | 4.29% | 1,097 | 4.26% | 25,745 |
1901 | 8,258 | 29.04% | 17,060 | 59.98% | 1,203 | 4.23% | 1,920 | 6.75% | 28,441 |
1911 | 9,700 | 32.60% | 17,233 | 57.92% | 1,138 | 3.82% | 1,684 | 5.66% | 29,755 |
1921 | 12,846 | 37.66% | 18,580 | 54.47% | 1,501 | 4.40% | 1,185 | 3.47% | 34,112 |
1946 | 23,219 | 30.58% | 33,795 | 44.51% | 11,606 | 15.29% | 7,306 | 9.62% | 75,926 |
1953 | 28,616 | 34.10% | 37,517 | 44.71% | 15,296 | 18.23% | 2,488 | 2.96% | 83,917 |
1963 | 40,775 | 29.43% | 54,452 | 39.30% | 39,925 | 28.82% | 3,401 | 2.45% | 138,553 |
1971 | 59,924 | 31.83% | 71,749 | 38.11% | 54,744 | 29.08% | 1,828 | 0.97% | 188,245 |
1981 | 75,039 | 29.32% | 93,132 | 36.39% | 85,503 | 33.41% | 2,274 | 0.89% | 255,948 |
2001 [c] | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a | n/a |
2007 Enumeration | 151,692 | 45.37% | 96,142 | 28.75% | 84,766 | 25.35% | 1,763 | 0.53% | 334,363 |
2012 | 152,854 | 40.42% | 122,080 | 32.29% | 101,991 | 26.97% | 1,257 | 0.33% | 378,182 |
1827 இல் 81.76 % இருந்த தமிழர்களது குடிப்பரம்பல் 1901 இல் 59.98 % குறைந்தது. 1946 இல் இது 44.51 ஆக மேலும் குறைந்தது. இன்று 32.29 % குறைந்துவிட்டது! திருகோணமலை மாவட்டம் 11 பிரதேச சபைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அட்டவணை 2 அதனைக் காட்டுகிறது.
அட்டவணை 2
பிரதேச செயலகப் இனவாரிக் குடிப்பரம்பல் கணக்கு
பிரதேச செயலகப் பிரிவு | கி.அ பிரிவு | பரப்பு (ச.கிமீ) | ஆட்தொகைக் கணக்கெடுப்பு (2012) | |||||
---|---|---|---|---|---|---|---|---|
சோனகர் | இலங்கைத் தமிழர் | சிங்களவர் | இந்திய தமிழர் | மற்ற வர்கள் | மொத்தம் | |||
1. கோமரங்கடவை (கோமரங்கடவல) | 10 | 288 | 1 | 25 | 7,313 | 0 | 0 | 7,339 |
2. கந்தளாய் | 23 | 404 | 5,108 | 1,534 | 37,448 | 2,478 | 73 | 46,641 |
3. கிண்ணியா | 31 | 165 | 58,447 | 2,522 | 19 | 3,445 | 18 | 64,451 |
4. குச்சவெளி | 24 | 438 | 21,307 | 10,553 | 1,193 | 40 | 7 | 33,100 |
5. மொறவேவா (முதலிக்குளம்) | 10 | 329 | 1,300 | 888 | 5,750 | 3 | 5 | 7,946 |
6.. மூதூர் | 42 | 195 | 34,984 | 20,935 | 444 | 4 | 12 | 56,379 |
7. பதவி சிறிபுர | 10 | 152 | 1 | 10 | 11,846 | 0 | 1 | 11,858 |
8. சேருவில | 17 | 311 | 2,426 | 1,816 | 9,293 | 3 | 8 | 13,546 |
9. தம்பலகாமம் (தம்புலகமுவ) | 12 | 226 | 16,164 | 4,701 | 7,476 | 0 | 15 | 28,356 |
10. திருகோணமலை பட்டினமும் சூழலும் | 42 | 148 | 13,113 | 61,282 | 21,179 | 546 | 1,114 | 97,234 |
11. வெருகல் & ஈச்சிலம்பற்றை | 9 | 71 | 3 | 11,283 | 30 | 12 | 4 | 11,332 |
மொத்தம் | 230 | 2,727 | 152,854 | 115,549 | 101,991 | 6,531 | 1,257 | 378,182 |
மொத்தம் 11 பிரதேச சபைகளில் சிங்களவர்கள் 5 இல், முஸ்லிம்கள் 4 இல், தமிழர்கள் 2 இல் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். விபரம் பின்வருமாறு.
1. கோமரன்கடவல – முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான குமரேசன்கடவை, தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டபிரதேசம்.
2. கந்தளாய் – தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டுள்ளது. மகாவலி குடியேற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே இருந்தனர்.
3. கிண்ணியா – பெரும்பான்மையாக முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசம்.
4. குச்சவெளி – பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம்.
5. மொரவெவ/முதலிக்குளம் (பழைய வழக்கில்) – முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான முதலிக்குளம், தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
6. மூதூர் – முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். தமிழர்கள் உள்ள பிரதேசம், இலங்கை அரச வர்த்தமானியின் மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பலாத்காரமாத் தமிழர்கள் மீளக்குடியமர முடியாது செய்யப்பட்டது.
7. பதவிசிறிபுர – பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
8. சேருவில – பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
9. தம்பலகாமம் – பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம். சிங்களத்தில் தம்பலகமுவ என்றழைக்கப்படுகின்றது.
10. திருகோணமலை பட்டினமும் சூழலும்
11.வெருகல் மற்றும் ஈச்சிலம்பற்றை – தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் அநேகமான இடங்கள் தற்போதைய உள்நாட்டுச் சண்டையினால் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
தமிழர்களது குடிப்பரம்பல் 120,080 (32.29%) ஆனால் அவர்கள் குடியிருக்கும் நிலப்பரப்பு 219 ச.கிமீ 8.03 % மட்டுமே! அதே நேரம் சிங்களவரின் குடிப்பரம்பல் 101,991 (26.97%) ஆகும். இருந்தும் அவர்கள் குடியிருக்கும் நிலப்பரப்பு 1024 ச.கிமீ (37.55%) ஆகும்! கீழ்க்கண்ட அட்டவணை 3 தமிழ்மக்களின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அட்டவணை 3
திருகோணமலை மாவட்டத்து ஆட்தொகை மற்றும் நிலப் பங்கீட்டுக் கணக்கை காட்டுகிறது
சோனகர் | இலங்கைத் தமிழர்கள் | சிங்களவர் | இந்தியத் தமிழர் | மற்றவர்கள் | மொத்தம் | |
ஆட்தொகை | 152,854 | 115,549 | 101,991 | 6,531 | 1,257 | 378,182 |
விழுக்காடு | 40.42 | 30.55 | 26.97 | 1.72 | 0.34 | 100 |
நிலப்பரப்பு ச.கிமீ | 1,484 | 219 | 1024 | – | – | 2727 |
விழுக்காடு | 54.42 | 8.03 | 37.55 | – | – | 100 |
1977 – 1983, 2001 – 2024 வரை மொத்தம் 30 ஆண்டுகள் திருகோணமலைத் தொகுதியைப் பிரதிநித்துவப் படுத்தி வந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது . இந்தப் புள்ளி விபரங்கள் 2012 இல் எடுக்கப்பட்ட குடிப்பரம்பல் மற்றும் நிலப்பரப்புப் கணக்கு ஆகும். அடுத்த ஆட்தொகைக் கணக்கெடுப்பு 2025 இல் எடுக்கப்பட இருக்கிறது. அப்போது தமிழர்கள் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டால் அதையிட்டு வியப்படையத் தேவையில்லை.
1983 இனக் கலவரத்தை அடுத்து திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மூவாயிரம் குடும்பங்களுக்கு மேலாக தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார்கள். நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் ஐயாவின் முயற்சி காரணமாக தமிழ்நாட்டு மறுவாழ்வு முகாம்களில் இருந்து 800 குடும்பங்கள் திருகோணமலையில் மீள் குடியமர்த்தப்பட்டனர். கோவிட் குறுக்கிட்டதால் அந்த மீள்குடியமர்வைத் தொடர முடியவில்லை. தமிழ்நாட்டின் மறுவாழ்வு முகாம்களில் அண்ணளவாக 65,000 பேர் வாழ்கிறார்கள். வெளியில் 35,000 பேர் வாழ்கிறார்கள். இவர்களை அழைத்து வந்து மீள்குடியமரச் செய்தால் தமிழ்மக்களின் மக்கள் தொகை அதிகரிக்கும். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்மக்கள் தொகை கூடும்.
வேறு எந்த மாவட்டத்தையும் விட திருகோணமலை பாரிய நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. சிங்களக் குடியேற்றம் – பவுத்த மயப்படுத்தல் விரிவாகவும் விரைவாகவும் இடம்பெற்று வருகிறது. குச்சவெளியில் மட்டும் இரண்டு விழுக்காடு சிங்கள மக்களுக்கு 4 விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன. குச்சவெளி பிரதேச செயலகத்தின் புல்மோட்டை பகுதியில் உள்ள சாந்தி விகாரை, யான் ஓயா விகாரை, புடைவைக்கட்டு சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம், புல்மோட்டை ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம் ஆகிய நான்கு பௌத்த இடங்களும் இவற்றோடு அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமது மகா விகாரை, ஆகிய விகாரைகள் கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பௌத்த புனித இடங்களாக பிரகடனம் செய்யப்பட்டு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விகாரைக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் கோட்டபாய வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் திருகோணமலையில் சிங்கள – பவுத்த மேலாதிக்கம் பொடிகட்டிப் பறக்கிறது. அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட அல்லது கட்டப்பட்டு வருகிற பவுத்த கோயில்களின் பட்டியல் இது. இது முழுமையான பட்டியலல்ல.
No GN Division Name of the Land Name of the Vihara Extent (AC)
1 Thennamaravady Thennamaravady Sankamale Purana Raja Maha Viharai 162
2 Pulmoddai.4 Varukutharai Shanthipura Purana Raja Maha Viharai 98
3 Pulmoddai.3 Kanneeravu Pulavu Nagalena Purana Raja Maha Viharai 46
4 Pulmoddai.2 Arisimalai Aesri Hantha Purana Raja Maha Viharai 236
5 Pulmoddai.1 Aaladippulavu Thondamurippu Sri Saddharma Yuththika Purana Raja Maha Viharai 127
6 Pulmoddai.1 Mathawachikadu Earamadukadu Aththanagi Kantha Purana Raja Maha Viharai 219
7 Pulmoddai.1 Yanoya Yanoja Purana Raja Maha Viharai 91
8 Pulmoddai.1 Mihindulene Mihindulene Purana Raja Maha Viharai 50
9 Thiriyai Aaththikkadu Sapthanaha Bapbatha Wana Senasuntha 155
10 Thiriyai Thiriyai Main Road Pathma Raja Pappatha Purana Raja Maha Viharai 369
11 Thiriyai Kallarawa Sthapitha Thapasu Kalluku 6
12 Thiriyai Kaddukulam Kaddukkulam Girihandu Seya Purana Raja Maha Viharai 278
13 Kuchchaveli Kuchchaveli Pichchamal Purana Raja Maha Viharai 2
14 Kuchchaveli Sembimalai Saiththiya Kiri Purana Raja Maha viharai 10
15 Casimnagar Ilanthaikkulam Masangweva Purana Raja Maha Viharai 374
16 Jayanagar Saharapura Samuththira Kiri Purana Raja Maha Viharai 96
17 Kumburupitty East Pattanvayal Bambarakala Purana raja Maha Viharai 266
18 Kumburupitty East Pattanvayal Debaragala Purana Raja Maha Viharai 255
19 Kumburupitty East Salappayaru Bhahiya Pabbatha Wana Senasunatha 40
20 Kumburupitty East Kumburupitty East Vithyaloga Raja Maha Viharai 0.5
21 Periyakulam Periyakulam Borulukantha Purana Raja Maha Viharai 27P
22 Nilaveli Kandaikkadu Kandal Kaadu Purana Raja Maha Viharai 5.5

சம்பந்தன் ஐயா பதவி விலக வேண்டும் என்று கேட்டதற்கு இந்த நெருக்குவாரம்தான் காரணம். 2020 இல் நடந்த தேர்தலில் பின்னர் சம்பந்தன் ஐயா மூன்று தரம் திருகோணமலைக்குச் சென்றிருந்தார். மூன்று தரமும் காளிகோயில் திருவிழாவுக்குப் போயிருந்தார். ஒருதரம் கூட தொகுதிமக்களைச் சந்திக்கவில்லை.
இந்த இடத்தில் ஒரு உண்மையைப் பதிவு செய்ய வேண்டும். 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சம்பந்தன் ஐயா போட்டி போட விரும்பவில்லை. “குகதாசன் நீ கேள்! நான் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றம் போவேன்” என்று சொன்னார். ஆனால் அவரது முடிவை மாற்றிய பெருமை அன்றைய கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா. “சம்பந்தன் ஐயா தேர்தலில் நிற்காவிட்டால் ததேகூ பின்னடவைச் சந்திக்கும். வாக்குகள் விழாது. எனவே சம்பந்தன் ஐயா தேர்தலில் நின்றே ஆகவேண்டும்” என்று நாண்டுகொண்டிருந்தார். அவரது அரை மணித்தியாலப் பேச்சின் பின்னர்தான் சம்பந்தன் ஐயா தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
(2) இதேவேளை, சிவிகே.சிவஞானம் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, “சம்பந்தன் கட்சிக்குள் சிறிது சிறிதாக ஓரங்கட்டப்படுவதை கண்டு நொந்து வேதனையடைந்திருக்கின்றோம். இதனை நாங்கள் கண்கூடாக கண்டிருக்கின்றோம். எங்களது, கண்முன்பாகவே தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தன் அவமதிக்கப்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பதில்: இப்படி சிவிகே சிவஞானம் சொல்லியிருப்பாரா என்பது தெரியவில்லை. சம்பந்தன் ஐயா பதவி விலக வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்த குழுவில் சிவஞானமும் இடம்பெற்றிருந்தார். பதவி விலக வேண்டுமா? வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை சம்பந்தன் ஐயாவுக்கு மட்டும் உண்டு. மற்றவர்கள் வற்புறுத்த முடியாது என சிவஞானம் சொல்லியிருந்தார்.
(3) இவ்வாறான சந்தர்ப்பத்தில், சம்பந்தன் தொடர்பான சுமந்திரனின் கருத்துக்கள் பல விமர்சனங்களையும் கட்சிக்குள்ளேயே தோற்றுவித்திருந்துடன், சம்பந்தனிடத்திலும் கூட பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கலாம். இது சம்பந்தன் ஆதரவளாளர்களிடத்திலும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
பதில்: சம்பந்தன் ஐயா பதவி விலக வேண்டும் என்ற வேண்டுகோள் கட்சி எடுத்த முடிவு. அதற்காக கட்சி ஒரு குழுவை அமைத்தது. அதில் –
வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா,
வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
எப்போதும் நேர்படப் பேசும் சுமந்திரன் கட்சி எடுத்த முடிவை ஆதரித்தார். அவரது சொந்த முடிவும் அப்படித்தான் இருந்தது. இங்கே வேண்டும் என்று சுமந்திரன் மீது வழமை போல் சேறு பூச ஐபிசி முனைந்துள்ளது.
சம்பந்தன பதவி விலக வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழரசுக் கட்சியின் செயல்குழு வேறு வழியில்லாமல் திருகோணமலை மாவட்ட தமிழ்மக்களின் நன்மை கருதியே கனத்த இதயத்துடன் – ஆரஅமர ஒருமுறைக்குப் பலமுறை – யோசித்து விட்டுத்தான் எடுத்தது. இலேசில் எடுக்கவில்லை. சம்பந்தன் ஐயா பதவி விலக மறுத்ததும் விடயம் அதோடு கைவிடப்பட்டது.
ஆனால் சம்பந்தன் ஐயாவை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தவர் ஊடக முதலாளி கந்தையா பாஸ்கரன்தான்! அவர் தனது ஐபிசி தொலைக்காட்சிக் கொடுத்த நேர்காணலில் என்ன சொன்னார்?
தலைவர்களின் வயதுகளைப் பார்த்தால் எழுபதைத் தாண்டி விட்டது. இவர்கள் எல்லோரும் அரசியலில் இருந்து ஒதுங்கி இளைய தலைமுறையினரை உள்ளே கொண்டுவந்து அவர்கள் ஊடாக ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர எத்தனிக்க வேண்டுதே தவிர திரும்பவும் நாங்கள் தான் அரசியலில் இருக்க வேண்டும் என எண்ணக் கூடாது.
“ஒரு அரசியல் தலைவர் மூன்று ஆண்டுகளாக உறங்கு நிலையில் இருந்தார். இப்போது மூன்று மாதமாக விடுமுறை எடுத்திருக்கின்றார். இவ்வாறான நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வைப் பெற்றுக்கொடுப்பார்கள்.
மேலும், இங்கு யாருக்கும் தமிழ் மக்களின் மீதோ மண்ணின் மீதோ காதலோ ஆசையோ கிடையாது. பதவியின் மீதும் அந்த பதவியினால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை, சுகபோகங்களை அனுபவிக்கும் பதவி ஆசையே இங்கு பலருக்கும் இருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலை உலகத் தமிழர்கள் பார்த்து ஏளனம் செய்யும் அளவிலும் சிரிக்கும் அளவிலும் இருக்கின்றது. ஒரு நீண்ட நெடிய அரசியல் பாதையிலே வந்த முதிய தலைவர் பல ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்கு பாதாள குழியைத் தோண்டி வைத்தார். இப்போது மற்றுமொரு வழக்கறிஞர் வந்து அந்த குழிக்குள் தமிழரசுக் கட்சியை தள்ளி கிரியை செய்வதற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்த இரண்டு விடயங்களும் சமகாலத்திலேயே எங்கள் கண்முன்னே நடந்துகொண்டிருக்கின்றது.“ எனத் தெரிவித்தார். (https://ibctamil.com/article/tamil-political-parties-issues-message-k-baskaran-1714546084)
கந்தையா பாஸ்கரன் அதிகம் படியாதவர். அது அவரே சொன்னது. “ஒரு நீண்ட நெடிய அரசியல் பாதையிலே வந்த முதிய தலைவர் பல ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்கு பாதாள குழியைத் தோண்டி வைத்தார்” என அவர் விமர்ச்சித்தது சம்பந்தன் ஐயாவைத்தான். அப்படிச் சொல்லி நோகடித்தவர் கந்தையா பாஸ்கரன்தான்!
நண்டு கொழுத்தால் வளையில் இருக்காதாம். குப்பை மேட்டில் இருந்து கோபுரத்துக்கு ஏறிவிட்ட ஐபிசி இன் முதலாளி கந்தையா பாஸ்கரனுக்கு நாவடக்கம் தேவை. நாவடக்கம் இல்லாத காரணத்தால் தன்னை அரசியலில் பிரகஸ்பதி மற்றவர்கள் தற்குறிகள் என்ற தோரணையில் அலட்டிக் கொள்கிறார். பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது உண்மைதான். ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், பொருள் மதிப்புடையவராகச் செய்துவிடும் என்பதும் உண்மைதான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு.
இயக்கச்சியில் கந்தையா பாஸ்கரன் றீட்(ஷா) என்ற பெயரில் ஒரு இயற்கை வேளாண் பண்ணையை கிளிநொச்சியில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதன் மூலம் சில நூறு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். அந்தப் பண்ணையின் பெயர் றீ(ச்)ஷா (Ree Cha). அது என்ன மொழிப்பெயரோ தெரியவில்லை. தன்னை 24 கரட் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக் கொள்ளும் கந்தையா பாஸ்கரன் ஏன் பிறமொழிப் பெயரை – அதுவும் பொருள் புரியாத சொல்லை – சூட்டினார் என்பது புரியவில்லை. அதே சமயம் உணவகம், விடுதிகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை (முல்லை, மருதம்…) சூட்டியிருக்கிறார்.
கந்தையா பாஸ்கரன் அவர்களது இந்த முயற்சி நல்ல முயற்சி. அவருக்குத் தோதான தொழில். எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றதற்கு நிகர் என்கிறார் திருவள்ளுவர். இப்படி ஒரு பத்துப் பண்ணைகளை தமிழ்ச் செல்வந்தர்கள் உருவாக்கினால் வடமாகாணத்தின் பொருளாதாரத்தையும் போரினால் நலிந்து போன எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்திவிடலாம்.
கந்தையா பாஸ்கரனுக்கு சம்பந்தன் ஐயா போன்று சுமந்திரனையும் பிடிக்காது. “‘சுமந்திரன் தமிழ் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டும்… தமிழ் மக்கள் அதனைச் செய்வார்கள்” என அவரது IBC தமிழ் தொலைக்காட்சியின் ‘நிலவரம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது திருவாய்மலர்ந்துள்ளார். (https://ibctamil.com/article/bk-reply-to-sumanthiran-1714545985)இங்கேதான் அவர் அரசியலில் ஒரு ஞனசூனியம் என்பதை எண்பித்துள்ளார். படித்தவர்களைப் பிடிக்காத கூட்டத்தில் தானும் ஒவரும் ஒருவர் என்பதைக் காட்டியுள்ளார்.
உண்மையில் சம்பந்தன் ஐயாவை நொந்து நூலாக்கித் நோகடித்தவர் கந்தையா பாஸ்கரன் என்ற ஊடக முதலாளிதான்.
Leave a Reply
You must be logged in to post a comment.