அருந்தமிழும் அன்றாட வழக்கும்

அருந்தமிழும் அன்றாட வழக்கும்

முதல் பாகம்

9. தமிழின் தனித்தன்மை..!

முனைவர் ஔவை ந.அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,தமிழ்நாடு

“இன்றளவும் வழங்கும் தமிழை மேனோக்காகக் காண்பவரும் அதன் சொற்களின் தனித்தன்மையைக் காணலாம்” என்பார் எடுத்துக்காட்டி விளக்குவது இது:

உழவும் கலப்பையும், காரும் கயிறும், குண்டையும் நுகமும், சாலும் வயலும், வாய்க்காலும் ஏரியும், மடுவும் ஏற்றமும் பிறவும், பயிர்களையும், நட்டலும் கட்டலும், முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளான் இயன்றனவே. தமிழர்கள் வதியும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கிடையும், புழைக்கடையும், கூரையும் வாரையும், கூடமும் மாடமும், தூக்கும் தூணும், கல்லும் கதவும், திண்ணையும் குறடும், தரையும் சுவரும், மண்ணும் மானும், மற்றவுந் தமிழே. தலையும் காலும், கண்ணும் காதும், மூக்கும் மூஞ்சியும், வயிறும் மார்பும், நகமும் தசையும், நாவும் வாயும், பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தனித் தமிழன்றோ தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர், சீரூர், ஆரூர், பேரூர், புத்தூர், புற்றூர், சேய்ஞ்ஞலூர், மணலி, நெல்லூர், நெல்லை, கொன்னூர், குறட்டூர் என்னும் இடப் பெயர்களும், செவ்வாய், வியாழம், வெள்ளியும் ஆகிய கிழமை பெயர்கள் தமிழ்ப் பெயர்களே.

தொண்ணுற்றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களில் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை. ஆழாக்கு உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, துணி, கலன் என்னும் முகத்தலளவையும், இன்னும் கீழ்வாயிலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே. 
தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும், காயும் கறியும், பாலும் பழமும், நெய்யும் தயிரும், உப்பு முதல் ஒன்பதும், பருப்பு முதல் பத்தும், தமிழ்ச் சுவையே. எழுத்தும் சொல்லும், பொருளும், யாப்பும், அணியும் ஆகிய ஏடுஞ் சுவடியும், எடுத்துப் பார்க்குமிடமெல்லாம் தமிழே. துணியும் அணியுந் தமிழே. தொழும் கடவுளும் தமிழ் மயமே. வீடும் நாடும், காடும் மேடும் ஆகிய எங்கும் தமிழ் மயமாகவே இருக்கின்றது. தமிழின் தனிச்சிறப்பை ஏற்க மறுப்பாரும் இருந்தமையன்றோ வியப்பு. 

இது தொடர்பாகச் ‘செந்தமிழ் வழக்கு’ என்னும் நூலில் புலவர் இளமுருகனார், உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் பயின்றுவருஞ் சொற்களைப் பற்றிச் சிறிது ஆராயலாம் என்று தொடங்கி விரிந்த கருத்துகளை வழங்கியுள்ளார். சொல்லாவது, பொருளை அறிவிக்கும் ஆற்றலுடைய எழுத்தொலியாகும். அஃது, இருதினைப் பொருள் தன்மையையும், ஒருவர் உணர்ந்து கொள்வதற்குக் கருவியாகும். பொருள்களைப் புலப்பட விளக்கும் தன்மையை நோக்கி வடநூற் புலவர் சொல்லை விளக்கு என்பர். அது குறித்துச் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ‘‘சொல்லெனப்படுஞ் சோதி தோன் றாதாயின், எல்லை நீர் ஞாலத்தில் எப்பொருள்தான் புலப்படும்?

ஆதிபகவனை அறிவதும் இல்லை. ஆகமங்களை அறிவதும் இல்லை! அறம், பொருள் முதலியவற்றை அறிவதும் இல்லை. அவற்றை வலியுறுத்தும் பழஞ்சரிதங்களை அறிவதும் இல்லை. தங்கருத்தைப் பிறர் அறிவதும் இல்லை. பிறர் கருத்தைத் தாம் அறிவதும் இல்லை அறியாமை யாண்டும் தலைப்படும். உலகம் தலைதடுமாறும். ஆதலால் உலகை வழங்கிவரச் செய்வது சொல்லெனப்படுஞ் சோதியென்றே சொல்லுக” என்றார்.

சொற்கள் நான்கு வகைப்படும். அவை இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்பனவாம். இவற்றைப் பெயர், வினை, இடை, உரிச்சொற்களுடன் சேர்த்தவழிப் பத்தாகும்.

இவற்றுள் இயற்சொல்லாவது, உலக வழக்குக்குரிய செஞ்சொல்லாகும். இயற்சொல் – இயல்பாய்ப் பொருள் உணருஞ்சொல். அச்சொல் செந்தமிழ் நிலத்துக்குரியதாய்க் கற்றார்க்குங் கல்லாதார்க்கும் ஒப்பத் தன் பொருளை விளக்குந் தன்மையுடையது. தமிழ்மக்கள் பேசுதற்கும் உரைநடையில் எழுதுதற்கும் இயல்பாய் அமைந்த சொல்லென்பது கருத்து.
  அடுப்பு, நெருப்பு, நிலம், நீர், காற்று, பகல், இரா, மலை, ஆறு, கடல், குளம், விளக்கு, உப்பு, புளி, வீடு, கோயில், மக்கள், காடு, மேடு, பள்ளம், யானை, குதிரை, நடந்தான், இருந்தான், பார்த்தான், கற்றான், கொன்றான், தின்றான் என்பனவும் பிறவும் இயற்சொற்களாம். மக்கள், நாளிலும் பொழுதிலும் தம் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கருத்தைத் தாம் உணரவும் அச்சொற்கள் பெரிதும் துணை புரிவன. 
  புதுப்பொருள்களும், புதுக்கருத்துகளும், புது நிகழ்ச்சிகளும், புது நுகர்ச்சிகளும், பிறக்குந்தோறும் உலகவழக்குச் சொற்களை மக்கள் பெருக்கிக் கொள்வர். இவ்வாறு உலக வழக்குச் சொற்களை நாளடைவிலே பெருகி மொழியை வளப்படுத்தும். இனி, இவ்வுலக வழக்குச் சொற்களேக்கல்லாதாருங் கற்றாரும் வழங்குவாராதலின், ஒருசேர அவருள் கற்றார் அவற்றை இலக்கண நெறிக்கு ஏற்ப வழங்கு வரென்றும், கல்லாதார் அந்நெறியிகந்து வழங்குவரென்றும் அறியலாம். கற்றார் வழக்கே உயர்வழக்கென்றும் கூறுவர். உலகவழக்குச் சொற்கள் இழிவழக்காக மாறுவதைச் சிறிது விளக்குவோம். பார்த்தான், கொன்றான், தின்றான். கோபம், நுங்கு, பனாட்டு, ஆற்றங்கரை, அகப்பை, ஒன்று. ஆண்பிள்ளை, இளநீர், கடற்கரை, கைம்மாற்று. சிவப்பு, சுவர், சுருட்டு, கிரகணம், புடைவை, பிட்டு, திறப்பு, பன்றி, பாகற்காய், நாற்றம் என்பனவற்றை இக்கால எழுத்தாளர், பாத்தான், கொண்டான், தின்னான், கோபம், நொங்கு, பினாட்டு, ஆத்தங்கரை, ஆப்பை, ஒண்டு, ஆம்பிளை, இளனி, கடக்கரை, கைமாத்து, சிகப்பு, சிவர், கிராணம், பிடவை, புட்டு, துறப்பு, பண்டி, பாவக்காய், நாத்தம் என்று தாம் எழுதும் நூல்களில் வழங்கிவரக் காண்கின்றோம்.
  இச்சொற்களுக்கு இலக்கண அமைதியில்லை. பார்த்தான் என்பதற்குப் பார் என்பது பகுதி, பார், நோக்கு, பார்த்தல், பார்த்தான், பார்த்தாள் என்று எழுதியவழியே நோக்குதல், நோக்கினான், என்ற பொருள்படும். பார்த்தான் என்பதற்குப் பகுத்தான் என்பதும் பொருள். பாத்தல் – பகுத்தல், ஆகவே, இரண்டுக்கும் பொருள் வேறுபாடு மிகுதியுமுண்டு. பார்த்தலும் பாத்தலும் ஒன்றெனக் கருதிக்கொள்ளும் வழக்குமிகுமாயின் பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்டல் அரிது என்னும் திருக்குறளைப் படிப்போர், தான் உண்பதைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்க உண்னும் இயல்புடைய வனைப் பசி என்னும் தீய நோய் தீண்டாது, என்று பிழையாகப் பொருள் கொண்டு திருவள்ளுவர் கருத்தை மாறாக விளங்கிப் பெரிதும் மயங்குவரன்றோ இவ்வாறே ஏனைய சொற்களையும் பொருத் திக் காண்க. ஆகவே, இழிவழக்குச் சொற்கள் எழுத்திற் புகுந்து ஆட்சி செய்யுமாயின், செந்தமிழ் வழக்குச் சொற்களெல்லாம், பொருளில் மாறுபட்டுத் தமிழ் மொழி முழுவதுஞ்சிதையும், ஆதலினாலன்றோ செந்தமிழ்ச் சான்றோர் இழிவழக்கை வழக்கென்று கொள்ளாது. உயர் வழக்கையே உலக வழக்கென்றும், சான்றோர் வழக்கென்றும், அவ்வழக் கின் நிலைப்பாட்டை மரபென்றும், வரையறுத்துக் கொள்வாராயினர் ஆசிரியர் தொல்காப்பியனாரும், இக்கருத்தை உணர்த்தவே, “மரபு நிலை திரியிற் பிறிது பிறிதாகும்” என்று இலக்கணஞ் செய்தார். இவ் வழக்கை மீறிக் கல்லாதார் பேசுவது போலவே எழுதிச் சிறுகதை இலக்கியஞ் செய்தல் வேண்டும் என்பார் கொள்கை, செந்தமிழ் வழக்கை அழித்துக் கொடுந்தமிழ் வழக்கை நிலைநாட்டும் கொடுமையாகும்.

செய்யுள் வழக்குச்சொற்கள்

உரைநடை இலக்கியங்கட்கு இயற்சொற்களே பெரிதும் உரிமையுடையன என முன்னர்க் காட்டினோம். செய்யுள் வழக்குக்கு அவ்வியற்சொல்லும், திரிசொல்லும், வடசொல்லும், திசைச்சொல்லும் ஆகிய நால்வகைச் சொற்களும் உரிமையுடையன. அவற்றுள்ளே திரிசொற்கள் செய்யுட்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாம். அவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுள்மொழி என்பர். திரிசொல் இயற்சொல்லின் வேறாயது. திரிதல் வேறுபடுதல், வேறுபடுதலாவது, இயற்சொற்போல வெளிப்படையாகப் பொருள் விளங்காது. கல்வியறிவால் உணர்வதாய் அமைவது. ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அமையும். திரி சொல் இயற்சொல்லின் வேறாய் நின்று அரிதிற் பொருள் விளக்குஞ் சொல். இயற்சொல்லினுந் திரிசொல்லே இலக்கியத்துக்கு இன்றியமையாதது. திரிசொல் இல்லையாயின், சுருங்கச் சொல்லுதல் கூடாது. சுவைபெறப் பெய்தலும் கூடாது. மோனை, எதுகை முதலியன அமைதலுங் கூடாது. கவிநடையும் வேறுபட்டு இழியும், என்று கூறிப் போந்தார். 

வடசொல்

ஆரிய சொல் தமிழ்நடை பெற்று வழங்குதல் வடசொல்லெனப்படும். தமிழ்நடை பெறுதலாவது, தமிழோசைக்கு இணங்கி அதற்கு நிகரான தமிழெழுத்தால் அமைவது. வடமொழியோசையும், அதற்குரிய எழுத்தும் அமைய நிற்பன ஆரியச் சொல்லென்றும், தமிழ் நடைபெற்றுத் தமிழே போல விரவி நிற்பன வடசொல்லென்றும் பகுத்துணர்ந்து கொள்ளலாம். தமிழ் இயற்கை ஒலியுடையதாகலின், உரப்பியும், எடுத்துங்கனைத்தும் கூறும் வடவெழுத்துகளை நீக்கி, அவற்றுக்கு நிகரான தமிழ் எழுத்துகளை இட்டு வழங்குதலைத் தொல்காப்பியனாரும் நன்னூல் பவணந்தியாரும் அவரையுள்ளிட்ட ஆசிரியர் எல்லாரும் வேண்டினர். செந்தமிழ் வழக்கை மதித்து நூல் செய்த சங்ககாலச் சான்றோரும், இடைக்காலச் சான்றோரும், பிற்காலச் சான்றோரும், இக்காலச் சான்றோரும், அம்மரபினை வழுவவிடாது பெரிதும் பேணி வருவாராயினர். 

செயற்கை ஒலிகளையுடையது ஆரியம். அவ்வாரியமொழிச் சொற்களைத் தமிழ்நடைப்படுத்தாது கிடந்தாங்கு வழங்குதலினால், இனிய செந்தமிழ்க்கு அமைந்த இனிய நல்லோசை வளங்குன்றிவிடும். எழுத்துகளின் இன்னோசை அமைப்புத் திரியும். நாளடைவில் அவ் வழக்குத் தமிழின் மொழி நடையை மாற்றி அது பிறிதொரு மொழியாகத் திரிதற்குத் துணை செய்யுமென்க. அவ்வாறே அருந்தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடமாகத் திரிந்ததை மொழி வரலாற்றால் அறிகின்றோம். அத்துணை சிறந்த பாதுகாப்பினை ஆசிரியர் தொல்காப்பியனார் ஐயாயிரவாண்டுகளுக்கு முன்னரே தமது இலக்கண நூலிற் செய்தமை பாராட்டற்பாலதாம். 

‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே,என்றும், சிதைந்தன வரினு மியைந்தன வரையார்.”

என்றும் பொதுவகையில் இலக்கணவரம்பு செய்தார். அச்சூத்திரங்களை விளக்கிய சேனாவரையர், ‘‘வடசொற்கிளவியாவது, வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்லாம். எனவே, பொதுவெழுத்தால் இயன்ற வடசொல்லும் செய்யுள் செய்தற்குச் சொல்லாம் என்றவாறாயிற்று. அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன. பொதுவெழுத்தால் இயன்றனவேயன்றி வடவெழுத்தால் இயன்ற வடசொல் சிதைந்துவரினும் பொருத்தமுடையன செய்யுளிடத்து வரையார். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரிய வாய்வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க என்று கூறியதும் நோக்கியறிக.

“இனி உரப்பியும், எடுத்துங்கனைத்தும் வருகின்ற செயற்கையொலிகள் ஆரியத்தில் உண்டென்பர் நச்சினார்க்கினியர், உரப்போடு கூடிய எழுத்துகள், கவ்வருக்கம் முதற் பவ்வருக்கம் முடிய ஐந்து வருக்கங்களிலுமுள்ள இரண்டாம் எழுத்துகளாம். எடுப்போடு கூடிய வெழுத்துகள், ஐந்து வருக்கங்களில் மூன்றாம் எழுத்துகளாம். கனைப்போடு கூடிய வெழுத்துகள், அவற்றில் நான்காம் எழுத்துகளாம். ஏனைய வெழுத்தொலிகளிற் சொற் பயிலாமை நோக்கி அவற்றை விட்டனரென்க.
  இனி, இற்றைக்கு ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த பவணந்தி முனிவர், தொல்காப்பியனார் பொதுவகையில் வகுத்த வடமொழியாக்க விதியைச் சிறப்பு முறையிலே விளக்கி விதிசெய்வாராயினார். பவணந்தி முனிவர் காலத்திலே வடமொழி இலக்கியப் பயிற்சி தமிழ் நாட்டிலே மிகுவதாயிற்று. ஆரியச் சொற்கள் வரம்பின்றி இலக்கியங்களிற் கலக்கத் தொடங்கின. அக்கலப்புத் தமிழ்மொழியின் ஒலித் தூய்மையை அழித்துவிடும் என்றஞ்சிய பவணந்தி முனிவர் ஆரியச் சொற்களைக் கிடந்தாங்கு வழங்காது. தமிழ் நடைபெற்ற வடசொல்லாய் வழங்குமாறு விளக்கமாய் விதி செய்தனர். நன்னூலிற் பதவியலின் ஈற்றிலே வடமொழியாக்கம் என்னும் பகுதியிலும், (146 – ஆம் சூத்) பெயரியலில் 274 ஆம் நூற் பாவிலும் கண்டு கொள்க. ஆகவே, வடசொற்கள், ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொதுவான எழுத்துகளாலும், ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்துத் திரிந்த எழுத்துகளாலும், இயன்று செந்தமிழ்ச் சொல்லை ஒப்பனவாகிச் செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவனவாம் என்றுணர்க.
  இனி பவணந்திமுனிவர் விளக்கமாய்ச் செய்த வடமொழியாக்கத்தை அவர்க்குப் பின்னிருந்த இலக்கண நூலாசிரியர்களெல்லாரும் வழி மொழிந்து பேணி வந்தனர். யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் குமார சுவாமிப்புலவர், அவ்வடமொழியாக்க மரபினைத் திட்பநுட்பமாய் ஆராய்ந்து பவணந்தி முனிவரைக் காட்டிலும் பெரிதும் வற்புறுத்துவாராயினர். அதனை அவர் செய்த இலக்கணச் சந்திரிகை, இலக்கியச் சொல்லகராதி என்னும் நூல்களிற் கண்டு தெளிக.

ஆரியச் சொற்களை வழங்கும்பொழுது, அவற்றிலுள்ள வடவெழுத்துகளை நீக்கியெழுதும் மரபு, தமிழகப் புலவராற் பெரிதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை போல, ஈழத்துப் பூதன்றேவனார் முதல் இன்றுகாறும் உள்ள யாழ்ப்பாணப் புலவராலும் தமிழ்மொழி நலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையரசின் கல்விக்குழுவின் அறிக்கை நாம் காணத்தக்கதாகும்.

வடமொழியாக்க மரபின் நோக்கம் தமிழ்மொழிக்கு இயல்பாய் அமைந்த இயற்கை ஒலியுடைமையைப் பாதுகாப்பதேயாம். செயற்கை ஒலிக்கூட்டங்கள், ஆரியம் ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சொற்கள் வழியாகத் தமிழிலே புகுந்து ஆட்சி செய்யுமாயின், தமிழ்மொழி தனக்கியல்பாய் அமைந்த இனிய மெல்லோசையில் திரிந்து போகும். ஆயிரக்கணக்கான சொற்கள் அங்ஙனம் புகநேரின், தமிழ் பிறிதொரு மொழியாகச் சில ஆண்டுகளிலோ பல ஆண்டுகளிலோ மாற்றமடையும். இவ்வகைச் செயற்கையொலிக் கூட்டச் சொற்கள் வரம்பின்றிக் கலந்த பெருங்கலப்பாலே தமிழ், பல்லாண்டுகளுக்கு முன்பே மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலியனவாக மாற்றமடைந்த வரலாற்றுக்கு மொழி நூல்கள் உறுதி கூறுகின்றன. அம்மொழிகளின் இக்கால வடிவத்தை நுணுக்கமாக ஆராய்வோமெனில், கல்லாதார் வழக்காகிய கொடுந்தமிழும், ஆரியச் சொற்கோவையும் பிறவும் ஒன்றும் சேர்ந்த பிழம்பே அவை என்பதைக் காண்போம்.
  ஆகவே, இக்காலக் கொடுந்தமிழ் வழக்கு ஒரு நூற்றாண்டுக்கு ஆட்சி செய்து நிலைக்குமாயின், செந்தமிழ்மொழி வேறு வடிவமெய்தும் என்பது மறுக்க முடியாத பேருண்மையாகும். யாமுரைத்த உண்மையை உணர்தற்குப் பின்வருஞ் சொற்கோவை மிகப் பயன்படும். அஃது இக்கால எழுத்தாளர் செய்த சிறுகதை இலக்கியங்களிலே கண்டு கோவைப்படுத்தப்பட்டது. ஆரியச் சொற்களைத் தமிழ் நடைப்படுத்தி வட சொல்லாக்காது, வழங்கிய கொடுந்தமிழ் வழக்கே இஃது என்று கொள்க. அச்சிறுகதை நூல்களிற் காணப்படும் பிறமொழிச் சொற்கோவையும் பிறவகை வழுக்களும் காணலாம்.

ஜலம் – ஜனம் – ஜகம் – ஜடம் – ஜங்கமம் – ஜனகன் – ஜனனம் – ஜயம் – அம்புஜம் – ராஜ்யம் – சமாஜம் – விஜயன் – துவஜம் – ஜாதி – ஜாலம் – ஜாக்கிரதை – ஜீவன் – ஜீரணம் – ஜீவாலை – இராஜன் – புஜம் – போஜனம் – ஜெந்து – பிரஜை – பூஜை – ஜோதி – அஷ்டம் – அதிர்ஷ்டம் – திருஷ்டிவிஷம் – கிருஷ்ணன் – சிருஷ்டி – துஷ்டன் – நஷ்டம் – பாஷை – ஒளஷதம் – குஷ்டம் – சீஷன் – நிமிஷம் – வருஷம் – வேஷம் – அபிஷேகம் – ஷண்முகம் – ரிஷி – அஸ்திரம் – அஸ்தமனம் – அவஸ்தை – உத்ஸவம் – கஸ்தூரி – சரஸ்வதி – சாஸ்திரம் – புஸ்தகம் – மஸ்தகம் – வாஸ்ம் – விஸ்தாரம் – ஸ்பா -ஸ்வாமி – ஸ்க்தி – ஸ்ப்தம் – ஹரி – ஹனுமன் – ஹிமிம் – ஹிதம் – ஹீனம் – ஹேது ஸ்நேஹம் – கூடிணம் – பக்ஷ – அக்ஷரம் – கூேடிமம் – லகஷ்மி – பரீகூைடி – ராமன் – ரகசியம் – ரசாயனம் – ரஞ் சிதம் – ரசம் – ராணி – ராணுவம் – ராத்திரி – ராமாயணம் – ராவணன் – ருக்மணி – ருசி – ருத்திரன் – ருது – ரோகிணி – ரதம் – ரதி – ரவி – ராகம் – ராசன் – ரோமம் – லகு – லஞ்சம் லாபம் – லிங்கம் – லோகம் – லோபம். இவை ஒரு சிலவாம். இவற்றின் வடசொல்லாக்கம் காண முற்பட்டால் சலம் – சனம் – சகம் – சடம் – சங்கமம் – சனகன் – சனனம் – சயம் – அம்புசம் – இராச்சியம் – சமாசம் – விசயன் – துவசம் – சாதி – சாலம் – சாக்கிரதை – சீவன் – சீரணம் – சுவாலை – இராசன் – புயம் – புசம் – போசனம் – செந்து – பிரசை – சோதி – அட்டம் – அதிட்டம் – திட்டிவிடம் – கிருட்டிணன் – (கண்ணன் – சிருட்டி – துட்டன் – நட்டம் – பாடை – ஒளடதம் – குட்டம் – சீடன் – நிமிடம் – வருடம் – வேடம் – அபிடேகம் – சண்முகம் – இருடி – அத்திரம் –அத்தமனம் – அவத்தை – உற்சவம் – கத்துரி – சரசுவதி – சாத்திரம் – புத்தகம் – மத்தகம் – வாசம் – வித்தாரம் – சபை – சாமி – சுவாமி – சக்தி – சத்தம் – அரி – அநுமன் – இமம் – இதம் – ஈனம் – ஏது – சிநேகம் – கணம் – பட்சி – அட்சரம் – அக்கரம் – சேமம் – இலக்குமி – பரீட்சை – இராமன் – இரகசியம் – இரசாயனம் – இரஞ்சிதம் – இரத்தம் – இரசம் – இராணி – இராணுவம் – இராத்திரி – இராமாயணம் – இராவணன் – உருக்குமணி – உருசி – உருத்திரன் – இருது – உரோகிணி – இரதம் – இரதி – இரவி – இராகம் – இராசன் – உரோமம் – இலகு – இலஞ்சம் – இலாபம் – இலிங்கம் – உலோகம் – உலோபம் என்பனவாம்.
  இவற்றுக்கு நேரான செந்தமிழ்ச் சொற்கள் பற்பல கிடப்பவும், அவற்றை வழக்கழிந்து ஒழியவிட்டு, வடமொழிச் சொற்களை வாங்குதல் உய்தியில் குற்றமாம். அவ்வடசொற்களுக்கு நேரான சொற்கள் தமிழில் இல்லாதவழி அவற்றைத் தமிழ்நடைப்படுத்தி வழங்குதல் குற்றமாகாது.

திசைச்சொற்கள்

ஏறத்தாழ வடமொழிக்கு முந்தைய வடிவம் கொண்ட ஆரியச்சொல் வடதிசை யினின்றும் வந்து தமிழில் புகுந்ததைப் போலவே, ஏனைய திசைகளிலிருந்தும் சில சொற்கள் வந்து புகுந்துகொண்டன. அவற்றைத் திசைச்சொல் என்று குறித்தனர். நட்புறவு, வணிகம், கல்வி முதலிய தொடர்புகளினாலும், வேற்றவர் ஆட்சியினாலும், திசைமொழிகள் மக்கள் பேசும் மொழிகளில் கலப்பது இயற்கையாகும். அச்சொற்களை வரம்பு கடந்து செல்ல விடாமல் மட்டுப்படுத்துவதும், அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்களை படைத்து வழங்குவதும், தமிழுக்கு மரபாயிற்று.  
ஆரியச் சொற்களை எங்ஙனம் தமிழ்நடைப்படுத்தி வடசொல்லாக்கி வழங்கினார்களோ, அங்ஙனமே திசைச்சொற்களையும் தமிழோசைக்கேற்பத் தமிழ் எழுத்துகளால் தமிழ் நடைப்படுத்தி வழங்குதல் வேண்டும்.  அங்ஙனம் தமிழ்நடைப்படுத்தி வழங்கிய வழியே அவை திசைச்சொற்கள் எனப்பட்டன. ஆரிய மொழிக்குரிய எழுத்துகளை அப்படியே வழங்கத் தொடங்கினால், ஏனைய திசைச்சொற்களையும் அவ்வத் திசைமொழிக்குரிய எழுத்துகளால் கொள்ள வேண்டும். அங்ஙனம் வழங்குதல் தமிழ்மொழியின் ஒலியமைப்பையும் தூய்மையையும், இலக்கண வரம்பையும் சீர்குலைத்துவிடும். மதி நுட்பமும், மொழிப்பற்றும் மிகுந்த இலக்கணச் சான்றோர் ஆரியம் முதலாய எல்லாத் திசைமொழிச் சொற்களையும் தமிழ் நடைப்படுத்தி வழங்குமாறு ஆணையிட்டனர்.
நன்னூற்கு உரைகண்ட சங்கர நமச்சிவாயப்புலவர், ‘‘வடக்கும் ஒரு திசையன்றோ திசைச்சொல்லன்றி வடசொல்லென வேறு கூறுவதென்னையெனின், தமிழ் நாட்டிற்கு வடதிசைக்கட் பதினெண் மொழிகளுள் ஆரிய முதலிய பல மொழியுளவேனும் தென் தமிழ்க்கு எதிரியது கடவுட் சொல்லாகிய ஆரியமொன்றுமேயென்பது தோன்ற, அவற்றுள் தமிழ் நடைபெற்றதை வடசொல்லென்றும், ஏனைவற்றுள் தமிழ் நடை பெற்றதைத் திசைச்சொல்லென்றும் சான்றோரால் நியமிக்கப்பட்டன என்று உரை எழுதினார். இனி அக்காலத்திலே தமிழ்நிலத்தைச் சூழ்ந்த பதினேழ் நிலத்தையும், ‘சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுகு குடம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த் தமிழ்சூழ் பதினேழ்புவி தாமிவையே’ என்னுஞ் செய்யுளாலறிக’’ என்று கூறினர்.  
இந்த பதினேழு நாடுகளின் அமைப்பும் நெருக்கமும் இவையென்று நம்மால் விளக்கமாக அறிய முடியவில்லை.  இக்காலத்திற் போர்த்துக்கேய நாடு, ஒல்லாந்த நாடு, ஆங்கிலேய நாடு, பிரெஞ்சு நாடு முதலிய நாடுகளுந் தமிழ் நாட்டுடனும் இலங்கை யுடனுந் தொடர்பு கொண்டமை அறியப்படும். அந்நாடுகளுக்குள்ளே ஆங்கில நாட்டுக்குரிய ஆங்கிலம், இந்நாளில் உலகப் பொதுமொழியாக மதிக்கப்படுவதாலும், தமிழ் மொழியை வளப்படுத்தும் புத்தம்புதிய கலைகள் அம்மொழியினின்றும் பெயர்த்துக்கொணர வேண்டியிருத்தலினாலும், அம்மொழிச் சொற்கள் பலவாய்த் தமிழிலே புகுதற்கு வாய்ப்பு உண்டாகும். அதனை ஒரு காரணமாகக்கொண்டு புதிய கலைக்குரிய, சொற்களைத் தமிழிலே ஆக்கிக் கொள்ளாது விடுவதும், அக்கலைச் சொற்களைக் அப்படியே வழங்குவதும், தமிழ்மொழிக்குச் செய்யும் கேடாகும் என்பது இலக்கண முடிவாகும். ஆகவே, இன்றியமையாது வேண்டப்படும் சிற்சில இடங்களிலே மட்டும் ஆங்கிலம் முதலான வேறு மொழிச் சொற்களை ஓசையாலும் எழுத்தாலும் தமிழ்நடைப்படுத்தி வழங்கிவருதல் வேண்டும்.
வரம்பிட்டும் தடுக்க முயன்ற நிலையிலும் வடமொழிக் கொள்கைக்கு இலக்கணம் வரைவதற்காகவே கி.பி. 11ஆம் நூற்றாண்டில் புத்தமத்திரர் வீரசோழியம் எழுதினார். கி.பி 17ஆம் நூற்றாண்டில் சாமிநாத தேசிகர் இலக்கணக் கொத்து எழுதியதோடு, உரையும் வரைந்தார். வடமொழி தமிழ்மொழி என்னும் இருமொழிகளுக்கும் இலக்கணம் ஒன்றே என இவர் கூறினார். இதே நூற்றாண்டில் பிரயோக விவேகம் என்னும் நூலைச் சுப்பிரமணிய தீட்சிதர் இயற்றி வடமொழிக்கு வாழ்வளித்தார். சோழர் காலத்தில் கல்வியென்றால் வடமொழிக் கல்வியே ஆகும். கல்லூரிகளில் வேதாந்தம் வியாகரணம், மீமாம்சம் போன்றவற்றைக் கற்பதுதான்.  தமிழ்க்கல்விக்கென ஒரு மானியம் தரப்பட்டதாக ஒரு கல்வெட்டும் இல்லை. கி.பி. 1640இல் நாயக்க மன்னராட்சியில் மதுரையில் மட்டும் பதினாயிரம் மாணவர் வட மொழிக் கல்வியைக் கற்றனர் என்ற குறிப்பும் உண்டு.
வடமொழியிலும், தமிழ்மொழியிலும் ஒரே வடிவமுடையனவாக வழங்கப்படும் சொற்கள், ஒலிவடிவில் ஒற்றுமைப்பட்டிருப்பினும், வெவ்வேறு பொருள்களைக் குறிக்கின்றன. நிகர்வடிவமுடைய வடமொழி தென் மொழிச் சொற்கள், முரணான பொருளில் வழங்குதலையும் பின்வரும் பட்டியலில் காணலாம்.

சமஸ்கிருதம் (வடசொல்) – தமிழ்1. உத்தியோக – முயற்சி உத்தியோகம் – வேலை2. உபந்யாச – நாவல், புதினம் உபந்நியாஸம் – அருள்நெறிச் சொற்பொழிவு 3. கல்யாண் – நல்ல, மங்கள கலியாணம் – திருமணம்4. சரித்ர – ஒழுக்கம் சரித்திரம் – வரலாறு5. சேஷ்ட்டா – முயற்சி, சேஷ்டை – கெட்ட நடவடிக்கை, குறும்பு 6. பிரசங்கம் – முன்பின் சந்தர்ப்பம் பிரசங்கம் – சமயச் சொற்பொழிவு7. பத்ர – மென்மையான பத்திரம் – சாக்கிரதை8. ம்ருக – மான் மிருகம் – விலங்கு9. விலாஸ் – சுகபோகமான விலாசம் – முகவரி10. சங்கதி – தொடர்பு சங்கதி – செய்தி11. சம்சார் – உலகம் சம்சாரம் – மனைவி12. சமாதான் – ஐயங்களை விளக்குதல் சமாதானம் – ஒத்துப்போதல்13. சாது – சந்நியாசி சாது – எளியவன், சரளமானவன்14. அபராத் – குற்றம் அபராதம் – தண்டனை15. ஆதர – மரியாதை ஆதரவு – துணை16. பாச – பயிறு பாசம் – பற்று17. பிரச்ன – கேள்வி பிரச்சினை – சிக்கலான செய்தி18. ஆலய – இடம் ஆலயம் – கோயில்19. காய – சரீரம் காயம் – புண்20. நீர – தண்ணீர் நீர் – நீங்கள்21. பத்ர – இலை, கடிதம் பத்திரம் – விலைச்சீட்டு22. பிரமாத் – சோம்பேறித்தனம் பிரமாதம் – நன்றாக23. யோஜனா – திட்டம் யோசனை – சிந்தனை24. ரண – போர் ரணம் – காயம்25. துவார் – வாயில் துவாரம் – சந்து26. அன்னம் – சமைத்த சாதம் அன்னம் – அன்னப்பறவை27. வயிராகி – பற்றற்றவன் வைராக்கியம் – மனஉறுதி28. வைபவ – செழிப்பு வைபவம் – குடும்ப அலுவல்29. சர – அம்பு சரம் – மாலை தொடுக்கும் நூல்30. சாலா – கூடம் சாலை – பாதை31. ஸ்ருங்கார் – இன்பச்சுவையுள்ள சிங்காரம் – அழகுபடுத்துதல்32. சமய் – காலம் சமயம் – மதம்33. சகாய – உதவி சகாயம் – மலிவான34. சித்தி – ஆன்மிக வெற்றி சித்தி – தாயின் தங்கை35. காதக் – கொல்பவன் காதகன் – பொறாமைக்காரன்36. பசு – பிராணி பசு – பசுமாடு37. மணி – இரத்தினம் மணி – காலம்38. சமாச்சார் -உயர்ந்த ஒழுக்கம் சமாச்சாரம் – செய்தி39. அகம் – ஆணவம் அகம் – உள்ளே (வீடு)40. கேவல் – தனியே கேவலம் – இழிந்த 41. புருஷ் – ஆண்மகன் புருஷன் – கணவன்42. விகட் – மிகக் கடுமையான விகடம் – நகைச்சுவை43. அவதி – எல்லை அவதி – துன்பம்44. விஜய் – வெற்றி விஜயம் – வருகை45. விஷய – ஐம்பொறிகளால் நுகரும் பொருள்கள் விஷயம் – செய்தி46. ஆலோசனா – திறனாய்வு ஆலோசனை – யோசனைகேட்பது47. ஆஸா – நம்பிக்கை ஆசை – விருப்பம்48. நிர்வாணம் – முத்தி, வீடுபேறு நிர்வாணம் – ஆடையற்ற நிலை49. நாம் – பெயர் நாமம் – திரிபுண்டரம் அணிதல்50. காலத்தைக் கழிப்பது காலட்சேபம் – சமயச்சொற்பொழிவு51. கரி – யானை கரி – அடுப்புக்கரி52 முத்ரா – நாணயம் முத்திரை – சின்னம்53. மாத்ரா – அளவு மாத்திரை – மருந்து, மாத்திரை54. காயம் – ஆகாசம்55. பூதி –  பூழ்தி விபூதி56. புடவி – ப்ருத்வி57. மதங்கம் – மிருதங்58. பவளம் – பிரவாளம்59. மெது – ம்ருது 60. ஸ்ரு – செவியுறு.

தமிழ் வடமொழி 1. அப்பம் 2. அரவம் 3. ஆயிரம் 4. உரு, உருவம் 5. கலுழன் 6. காலம் 7. சாமை 8. சொல்வம் 9. திடம் 10. தீவு 11. பக்கம் 12. படிமை 13. பரம் 14. பாகம் 15. மண்டலம் 16. மந்திரம் 17. மயில் 18. முகம் 19. மாயை 20. முத்து, முத்தம்  இவ்வாறு சொற்கள் சான்றுகளாகக் காட்டப்பட்டுள்ளன. உலகத் தொடர்பு பெருகும்போது, பல்வேறு மொழிச் சொற்கள் பல்கும்போது, தூய்மையும் தாய்மையும் அமைந்துவிடுகின்றன.  

நன்னூல் பதவியலில், வடமொழியாக்கம் பற்றிய அயல் வழக்குகள் குறிக்கப்பட்டுள்ளன.
இடையில் நான்கும், ஈற்றில் இரண்டும்,அல்லா அச் ஐ வருக்கம் முதல், ஈறு;யவ் ஆதி நான்மை, ளவ், ஆகும் ஐ-ஐம் பொது எழுத்து; ஒழிந்த நால்-ஏழும் திரியும். (19) அவற்றுள்,
ஏழாம் உயிர் இய்யும் இருவும்; ஐ வருக்கத்து இடையில் முன்றும், அவ்அம் முதலும்,எட்டே யவ்வும்; முப்பது ச, யவும்; மேல் ஒன்று ச, டவும்; இரண்டு ச, தவும்; முன்றே அ, கவும்; ஐந்து இரு கவ்வும்; ஆ, ஈறு ஐயும், ஈ, ஈறு இகரமும். (20) ரவ்விற்கு அம் முதல் ஆம் முக் குறிலும், லவ்விற்கு இம் முதல் இரண்டும், யவ்விற்கு இய்யும், மொழி முதல் ஆகி முன் வருமே. (21) இணைந்து இயல்காலை ய, ர, லக்கு, இகரமும், மவ், வக்கு, உகரமும், நகரக்கு அகரமும், மிசை வரும்; ரவ் வழி உவ்வும் ஆம் பிற. (22) ற, ன, ழ, எ, ஒவ்வும், உயிர்மெய்யும், உயிரளபு, அல்லாச் சார்பும், தமிழ், பிற பொதுவே. (23)
நன்னூலார் இந் நூற்பாக்களில், வடமொழியாக்கம்’ நிகழும் நெறி முறைகளைச் சுட்டினார். 
தமிழுக்கு இலக்கணம் வகுத்த நன்னூலார், வடமொழியாக்கத்திற்குத் தனித் தலைப்பு வகுத்துக் கொண்டு இலக்கணம் வரைவது சிந்திப்பதற்குரியது. தமிழ்க் கலைகளோடன்றி வடவர் வடமொழிக் கலப்பு மிக்கோங்கி வடவர் கலைகளை அறிந்துகொள்வதற்குத் துணையாகத் தவிர்க்க வியலாத நிலையில், தமிழ் வழக்கில் வடசொற்களை இடம்பெறச் செய்யும் முறைகளை நன்னூ லார் காட்டியுள்ளார். நன்னூல் கூறும் விதிகளின்படி, வடமொழிச் சொற்கள் தமிழில் கலக்கும்போது, தமிழில் மொழிக்கு முதலில் வாராத ரகரம் வடசொல்லில் வந்திருந்தால், அதன் முன் அ இ உ என்பன வற்றுள் ஏதேனும் ஓர் ஒலியினைச் சேர்க்க வேண்டும். சான்று ரங்கம் – அரங்கம் 
ராமன் – இராமன்
ரோமம் – உரோமம் 
மொழி முதலில் வாராத லகரம் வட சொல்லில் இருந்தால், அதன்முன் இ, உ என்பனவற்றுள் ஏதேனும் ஓர் ஒலியினைச் சேர்க்க வேண்டும்.
சான்று லேசு – இலேசு 
லோகம் – உலோகம்
வடசொல்லின் ஈகார இறுதி தமிழில் இகரமாக வேண்டும். ஆகார இறுதி ஐகாரமாக வேண்டும்.
சான்று கெளரீ – கெளரி ; சீதா – சீதை
வடசொல்லின் மொழி இடைச் சிறப்பு மெய், தமிழில் அவ்வவ் விடத்து முதல் மெய்யாக வேண்டும். ஜ என்பது ச ஆக வேண்டும் அல்லது யகரமாக வேண்டும்.

சான்று நிஜம் – நிசம் பங்கஜம் – பங்கயம்
வடசொல்லின் ஸ என்பது தமிழில் தகரமாக வேண்டும்.
சான்று மாஸம் – மாதம்
வடசொல்லின் ஷ என்பது தமிழில் டகரமாக வேண்டும்.
சான்று நஷ்டம் – நட்டம் வேஷம் – வேடம்
வடசொல்லின் முதலிலோ இடையிலோ வருகிற ‘ஹ’ என்பது தமிழில் மறைந்து விட வேண்டும்.
சான்று ஹரி – அரி: பிராஹ்மணர் – பிராமணர்
வடசொல்லின் க்ஷ என்பது தமிழில் க்ச அல்லது ட்ச ஆக வேண்டும்.
சான்று மீனாக்ஷி – மீனாட்சி பக்ஷம் – பக்கம்  பக்ஷி – பட்சி
தமிழில் மயங்கக்கூடாத இரண்டு மெய்கள் வடசொல்லில் மயங்கி வந்தால், அது தமிழாகும்போது ஓர் ஒற்றுடன் உகரம் அல்லது இகரம் சேர்க்க வேண்டும்.
சான்று பக்வம் – பக்குவம் பத்மம் – பதுமம்
ரத்னம் – இரத்தினம் சுக்லம் – சுக்கிலம்
அல்லது மயங்கக் கூடாத இரண்டு மெய்களும் ஓரினமாக்கப் படவேண்டும்.
சான்று சிம்ஹம் – சிம்மம் கன்யா – கன்னி
வடசொல் யகரத்துடன் தொடங்கினால், தமிழில் யகரத்தின் முன் இகரம் அல்லது உகரம் சேர்க்க வேண்டும்.
சான்று யமன் – இயமன் யுத்தம் – உயுத்தம்
அல்லது யகரம் எகரமாக வேண்டும். அல்லது யகரம் உகர மாக வேண்டும். 
சான்று யமன் – எமன் யுத்தம் – உத்தம் யுக்தி – உத்தி 

மேலே வடசொல்லுக்குக் கூறப்பட்ட விதிமுறைகள் பிறமொழிச் சொற்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும்.

சான்று ரயில் – இரயில் வில் – உயில் பெஞ்ச் – பெஞ்சு
ஜேசு – இயேசு பஃராங் – பரங்கி லண்டன் – இலண்டன் 
ஜனவரி – சனவரி

பிறமொழிக் கலப்பைப் பற்றிச் சிந்தித்து, நன்னூலார் அளித்த கருத்துகளை இலக்கண முறையாக ஏற்றுக் கொள்ளலாம்.

இன்றைய நிலையில் தமிழ்ப்புலவர் சிலர் யாப்பியலும் புத்தி லக்கண வரைவியலும் செய்துள்ளனர் அவ்வகையில் தமிழ் என்ற இலக்கண நூல் யாத்த திருவாரூர்ப் புலவர் சரவணத் தமிழன், அயல் மொழிப் பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுதுவதற்கான விதிகளை வரையறுத்துள்ளார்.

‘எழுத்தைக் குறிப்பினும் அயன்மொழிப் பெயர்ச்சொல் வழுத் தும் பொழுதில் வாய்ப்பு நோக்கியும் கூறிய மூவகை மாறியும் வருமே.” என்னும் நூற்பாவின் வழிப் பிறமொழிப் பெயர்களை எடுத்துக் கூறும் போதில், மூவிட விதி சற்றே மாறுபட வரலாம் என்பது கருத்து. சான்று கால்டுவெல், கேப்டன், பெர்னாட்சா, அலெக்சாண்டர், குப்தர், அப்துல், அப்துல் வகாப்பு, இட்லர், போப்பு).

தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்திருப்பதைத் தற்சமம், தற்பவம், திரிபு என்று குறிப்பதுண்டு. யாதொரு மாறுபாடும் இன்றித் தமிழில் வழங்குவது தற்சமமாகும். நதி, ஜலம், பருவதம், தேசம் முதலியன சான்றுகளாகும். வடமொழிச் சொற்கள் நேர்வடிவில் அமை யாமல், பிராகிருதச் சொற்களாயிருந்து தமிழில் இடம் பெறுவதைத் தற்பவம் என்பர். தற்பவம் என்பது பின்வருமாறு அமையும்:
வடமொழி பிராகிருதம் தமிழ்
ஸ்திரி இத்தி த்தி (மறத்தி) 
ராகு ராணி 
ஆகு ஆனா ஆணை 
முக்தா முத்தா முத்து 
ஆர்ய அஜ்ஜ அய்யன் 
ப்ரவாலி பவள பவளம் 
வணிஜ வாணிய வாணியன் 
கிருஷ்ண கண்ண கண்ணன் 
சிரேஷ்டி செய்டி சேடசெட்டி 

திரிபு இரு வகைப்படும்

  1. திரிவு விதிகளின்படி மாறுபட்டுத் தமிழில் வழங்கும் வட மொழிச் சொற்களாக உலகம், அரசன், அட்டமி, முத்தி, பக்கம், புரிதல், இராமன், அரங்கம், இலக்கணம், இலக்கியம், பகுதி முத லியவற்றைக் குறிக்கலாம்.
  2. எவ்விதிக்கும் இசையாது உருக்குலைந்தவை என்ற நிலையில் அவிட்டம், திருவோணம், கேட்டை, ஆயில்யம், வைகாசி, மார்கழி, பங்குனி முதலியன என்பர்.

தமிழுள் வழங்கும் வடசொற்களுள் பல உபசருக்கங்கள் ஒட்டி வருவனவாகக் காணப்படுகின்றன. மதிநுட்பம் என்னும் குறளுரையில், ‘அதி என்பது ஓர் இடைச்சொல் என்று பரிமேலழகர் குறிப்பிட்டார். இவ்வாறு இடைச்சொற்கள் இருப்பதாகக் கொள்வாருண்டு. சான்றாகச் சிலவற்றைக் காணலாம்.

பிர – பிரதானம், மிகுதி, எதிர்பரா – பின், எதிர், அதிகம், முரிதல்அப – எதிர், அப்பால், பிரிவு, தள்ளல்சம் – சுகம், நன்மை, அழகுஅது – பின், கூட, வரிசை, ஒப்புநிர் – நிச்சயம், விலக்கு, வெளியாதல்துர் – நிந்தை, துக்கம், விலக்குவி – விலக்கு, பிரிவு, விசேட நிச்சயம், அற்பம்ஆ – அற்பம், எதிர், எல்லை, நிறைவுநி – அதிகம், சமீபம், நிச்சயம், எதிர்அபி – ஐயம், நிந்தை, பின்அதி – அதிகம், கடத்தல், அதிசயம்சு – மேன்மை, அதிகம், அதிசயம்உத் – மேல், அதிகம், விகற்பம்பிரதி – எதிர், விலக்கு, அளவு
இவ்வாறு நன்னூல், மொழிக்கலப்பில் கடைப்பிடிக்க வேண்டிய முறையை வரையறுத்துக் கூறுகிறது. இவ்வரையறை இருந்தும் சொற்களின் பொருள் முழுமையும் அறியாது தமிழில் அச்சொற்களே திரிபடைந்தன.

சான்றாக, ‘நீர் என்ற இனிய தனித் தமிழ்ச்சொல்லை  நீர, நீரம், நீரஜா என்ற வடமொழிப் புணர்ப்பாக்கி மாற்றியதோடன்றி பிற்கால நூலாசிரியர் தமது நூல்களில் மேற்கோளாக நீர் என்ற சொல்லைச் சமக்கிருதமாகச் சுட்டியதையும் முந்தைய கட்டுரையில் கண்டோம். நீர், மீன் சொற்களை வடசொற்களாக நினைப்பதற்குத் துளியும் இடமில்லை. நீர் என்பது மென்மை, தண்மை, இயல்பு, நேர்மை என்றெல்லாம் பொருள்படுமாறு இலக்கியங்கள் காட்டியதை மொழிஞாயிறு பாவாணர் எடுத்துச் சொல்லிப் பெருமிதம் ஊட்டினார்.

மணிப்பிரவாளம் 

பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடை என வழங்கப்பட்ட புதிய நடைப்போக்குத் தமிழகத்தில் தோன்றியது. மாலையில் மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொடுக்கப்பட்டதைப் போன்று, தமிழ்த் தொடர்களையும் வடமொழித் தொடர்களையும் மாற்றி மாற்றிக் கட்டிய நடைப்போக்கே இலக்கிய மணிப்பிரவாள நடையாகும்.

மணிமிடை பவளம் என்ற அகநானூற்றுத் தொடரைப் பின்னாளில் கலப்பு வடிவுக்கும் பெயராகக் காட்டினர். மாணவர்களுக்கு இனிமையாக இவ்விதிமுறையை ஊட்ட வேண்டும் என்று பேராசிரியர் தெய்வசுந்தரம் வலியுறுத்துவார். மெல்ல மெல்லப் பழக்கத்தில் இந்த விதிமுறை இலக்கியப் பயிற்சியால் பதிய வேண்டும். 

unread,1 Jul 2020, 18:39:47to மின்தமிழ்13. மணியும் பவளமும் விரவிய மாய மாலை..!

– முனைவர் ஔவை ந.அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,தமிழ்நாடு

உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார்.

  1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது.
  2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண வேறு பாட்டால் காட்சிக்கின்பம் பயத்தல் போல, வடமொழியும் தென்மொழியும் கலந்த இந்நடை செவிக்கின்பம் பயத்தலால், இப்பெயர் பெற்றது. (இது செவிக்கு இன்பமா?)
  3. நவமணியும் பவளமும் கலந்து சேர்க்கப்பட்ட மாலைபோலச் செந்தமிழும் வடமொழியும் கலந்து இயன்றதால், இப்பெயர் வந்தது.
    வடமொழியும் தமிழும் கலந்து மணிப்பிரவாளம் என்னும் இந்நடைப்போக்கை நடை என்று வீரசோழியம் கூறியது. இந்நடை சமய சாத்திரங்களிலும், விளக்க உரைகளிலும் மிகுதியாகப் பயின்று வந்தது. வடசொற்கள் எல்லை கடந்து இவற்றில் வழங்கப்பட்டன.
    வடமொழியிலக்கணமும், தமிழிலக்கணமும் ஒன்றே என்னும் கொள்கை உருவாகும் அளவிற்கு இந்நடை தமிழ்மொழியில் பெரு வரவாயிற்று. வடமொழிக் கலப்பைத் தடுக்க வடமொழி கற்ற தமிழர் தாய்மொழியில் மேற்கொண்ட வீண் முயற்சியின் விளைவே மணிப்பிரவாள நடை என்றும், கிரந்த எழுத்துகளும் இம்முயற்சியின் விளைவாகத் தோன்றியவை என்றும், ஸ்ரீபுராணம் முதலிய நூல்களின் அளவிலும், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் முதலிய சில ஊர்ப் பெயர்களை மாற்றும் அளவிலுமே அந்த முயற்சிகள் நின்று தோற்றன என்றும் அறிஞர் மு.வ. கருதினார்.

சமண சமய நூலான ஸ்ரீபுராணத்தில் பயின்று வரும் நடைக்குச் சான்று: ஒருநாள் மஹா மேருபர்வத நந்தன வனத்துப் பூர்வதிக்ஜின பவனத்தை அடைந்து, ப்ரதக்கூடிணிகரண ப்ரணாமஸ்தவநாப்யர்ச்சனம் பண்ணியபின், அங்கே, ஸ்ந்நிஹிதராகிய விபுலமதிசாரண தபோத னரை நமஸ்கதிர்த்துத் தர்மஸ்ரவணா நந்தரம் ஏன் ஸ்வாமி, புத்திரியாகிய கந்தர்வ தத்தை, யாவர்க்கு யோக்யை, என்று யான் வினவ, அவரும் அவதி ஞனத்தாற் பார்த்து அருளிச் செய்வார் ‘‘ஜம்பூத்விப பரத கூடித்ர ஹேமாங்கத விஷய ராஜ மஹாராஜபுத்ரனுக்கு வீணாஸ் வயம்வத்தால் தேவியாகும்” என்று அருளிச் செய்தனர்.

‘ராஜ மஹா புரத்து வருஷபதத்த ஸ்ரேஷ்டிக்கும் பத்மாவதிக்கும் புத்திரன், ஜினதத்தனென்பான். அவனால் நமது அபிப்பிரேத கார்யம் ஸித்திக்கும். அஃது எவ்வண்ணமென்னின், ராஜ மஹாபு ஸ்மீபமாகிய ப்ரீதவர்த்தநமென்னும் உத்யானத்து ஸாகசேன கேவலிகளுக்குக் கேவல பூஜார்த்தமாக நின் பிதாவினோடுங் கூடச் சென்று கேவல பூஜை பண்ணியபின், தர்ம வாத்ஸல்யத்தால் வருஷபதத்த ஜினதத்தர்களோடு பாந்தவமுண்டாயிற்று. அதன்பின் வ்ருஷபதத்தன் புத்ரனுக்கு ஸ்ரேஷ்டிப் பதங்கொடுத்து குணபால முனி சமீபத்தே தீக்ஷத்தனள். ஸ்ரேஷ்டிபத ப்ராப்தனாகிய ஜினதத்தனும் வாணிஜ் யார்த்தமாக ஜலயாத்திரையால் இங்கே வருவன். ‘இது தமிழா?’ என்று அனைவரும் வினவத் தோன்றும் ஆம் ‘இதுதான் தமிழ்’ என்று எழுத முயன்றனர் அந்நாளைய ஸ்ரீபுராணச் சமணர்கள்.
பெரிய வாச்சான் பிள்ளை என்ற வைணவப் பெரியார், நாலாயிரப்பிரபந்தப் பாடல்களனைத்திற்கும் பேருரை எழுதினார். அதற்கு ‘ஈடு’ எனப் பெயர் தரப்பட்டுள்ளது. அந்த ஈடு மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டதாகும். ‘சார்வ பெளமராய்ப் போந்த இராஜாக்கள் அந்த ராஜ்யஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆனார்கள். ஆன பின்பு, ஸ்ரீவத்ய யஷ நித்யஸ்ரீ ஸ்ரீவத்சத்தை மார் பிலேயுடையவன் நித்யமான ஸ்ரீயையுடையவன். இப்பாசுரத்திற்கு ஏகமூர்த்தி என்பது பரத்துவத்தைச் சொல்லுகிறதென்றும், இருமூர்த்தி என்பது வியூகத்தைச் சொல்லுகிறது என்றும் அதாவது வாசுதேவ ஸங்கர்ஷணரைச் சொல்லுகிறது என்றும், மூன்று மூர்த்தி என்பது யூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறதென்றும், பல மூர்த்தி என்பது, அவதாரத்தைச் சொல்லுகிறதென்றும், ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அறிவாகி நாகம் ஏறி, நடுக்கடலுள் துயின்ற நாராயணனே என்பது இன்னார் சிருஷ்டிக்கக் கடவர்; இன்னார் பாது காத்தலுக்குக் கடவர் என்கிறபடியாலே, சொல்லுகிறதென்று நிர்வகிப் பாரும் உளர். இவை, திருவாய்மொழி ஈட்டின் பகுதிகளாகும். ஈட்டின் தமிழாக்கத்தை சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் புருஷோத்தமன் நாயுடு அவர்கள் வெளியிட்டது பெருமைக்குரியது.
‘தமிழ்மொழிக்கே உரிய சமயமெனப்படும் சைவத்திலும், காமிகம் முதலிய சைவ ஆகமங்களுள் ஞான பாதத்தினுளதாகிய ஆசங்கை நீக்கி, அவற்றில் பொருளுண்மை, பொதுவியல்பு, சிறப்பியல்பு என்று இருவேறு வகைப்படுத்திக் காட்டிப் போதித்ததற்கு, இரெளர ஆகமத்தின் எழுந்த சிவஞானபோத நூலினைத் தமிழுலகம் உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து, பொழிப்புரைப்பான் எடுத்துக் கொண்ட ஆசிரியர் சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிது மனுகாமை புரிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு சிறிது மணுகாமை அறிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு நீக்குவதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்து வதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்.’

இது, சிவஞானபோதம் என்னும் சைவ சாத்திர நூலுக்கு எழுதப்பட்டுள்ள சிற்றுரையில், மங்கல வாழ்த்துப் பாடலுக்குரியதாகும். சிவஞான போதமே வடமொழியிலிருந்து வந்த மொழிபெயர்ப்பு என்று குறித்த இக்கொள்கையைச் சைவ சித்தாந்தப் பெருமன்றத் தலைவர்கள் நூற்று இருபது காரணங்களைக் காட்டிச் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பன்று தமிழ்நூலே என நிறுவியதைத் தமிழுலகம் நன்கறியும்.
தமிழகத்துக்கேயன்றி, பாரதப் பெருநிலத்திற்கும் புறச்சமயங்களாகிவிட்ட கிறித்தவ, இசுலாமிய சமயங்களின் வரவாலும் தமிழில் பிறமொழிச் சொற்கள் புகலாயின. கிறித்தவ வேத நூலாகிய விவிலியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
அதிலிருந்து நரஜீவன்களையெல்லாம் பட்டக் கருக்கினால் வெட்டிச் சங்காரம் பண்ணினார்கள். சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை. ஆதி ஆதீ சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

யுத்தம் பண்ண இஸ்ரேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவருக்கு ஹிருதயம் கடினமானதும், இப்படியே அவர்களின் பேரில், இரக்கம் உண்டாகாமல் கர்த்தர் மொலேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை அழித்து ஸங்காரம் பண்ணி னதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. – யோசுவா: 1.1

இவ்வாறு பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கக் காணலாம். இப்போது எளிய இனிய தமிழில் எழுதிய நூல்கள் வந்துள்ளன.

ஆட்சித்துறையில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் செழிப்பாக விளங்கித் தமிழை ஆட்சிமொழியாகப் போற்றி வந்ததாலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பத்திமைப் பாடல்களைத் தமிழில் வெள்ளமெனப் பாடி உணர்வூட்டியதாலும், சமய ஆர்வம் மிகுந்த நிலையிலும் முழுவதும் வட சொற்களையே நாடாவண்ணம் தமிழிலேயே வேண்டு வனவற்றை வழங்கியதாலும் மணிப்பிரவாள முயற்சி பின்னர்த் தோற்றுத் தொலைந்தது.

மொழிக்கலப்பு எதிர்ப்பு மறுப்பும் தூய்மை விருப்பும்பிறமொழிச் சொற்கள் தம் மொழியில் புகுவதை ஒவ்வொரு மொழியின் அறிஞர்களும் ஒவ்வொரு காலத்திலும் தமது எதிர்க் கருத்தைக் கூறி இக்கடிந்து வருகின்றனர். தமிழில் வடசொற்கலப்பும் இவ்வாறே தொடர்ந்து எதிர்க்கப்பட்டது. தேவையும் பயனும் கருதிச் சில சொற்களைக் கடன் பெறும்போது எதிர்ப்புணர்ச்சி எழுவதில்லை. அழகுக்காகவும் தாம் ஒன்றை அறிந்தவர் என்று தம்மைத்தனிக் குழுவினராக வேறுபடுத்திக் காட்டும் அகந்தைக்காகவும் பிறமொழிச் சொற்களை இணைக்கும்போது எதிர்ப்பு எழுகிறது. 

ஒரு மொழியை நன்கு கற்றுப் புலமை பெற்றவர்களும், இன்றியமையாமை உணராமல், தாம் அறிந்த பிறமொழிச் சொற்களைக் கண்டவிடமெல்லாம் புகுத்த முயல்வாராயின், அம்முயற்சியும் விரும்பத்தக்கதில்லை. பிறமொழி கற்றவர்கள், தாம் கற்ற மொழி உயர்ந்தது என்ற மனப்பான்மை கொண்டு, இல்லை என்று இரப்பவனுக்குப் பெருமிதத்துடன் ஈபவன் கொடை வழங்குதல் போலச் சொற்கள் பலவற்றை ஒரு மொழியில் புகுத்தத் தொடங்கினும், அம்முயற்சி எதிர்க்கப்படும் புதிய அறிவுத் துறைகளைப் பயிலும்போது, தாமே புதுவதாக அறியத் தொடங்குவதால், தமக்கே முழுமையாக விளங்காத நிலையில் தாம் கேட்டறிந்த சொற்களை மொழிபெயர்க்க முடியாமல் கணக்குக் குறியீடுகளைப்போல அவ்வச் சொற்களை எழுதுவதுமுண்டு. மொழி பெயர்க்கத் தெரியாமையோடு, தவறாக மொழிபெயர்த்ததால் நேரும் சிக்கலைத் தவிர்க்கவும், ஒருகால் மொழிபெயர்த்தாலும் அத்தமிழ்ச் சொற்கள் வேறு பொருளைக் குறிப்பதாலும் என்றெல்லாம் பல சூழல்கள் நிலவின; சிலநிலைகளில் இன்று நிலவுகின்றன. இதுவும் எதிர்கொள்ள வேண்டியதாகும். இத்தனை எதிர்ப்பும் இன்றிச் சில சொற்கள் ஒரு மொழியில் புகுந்தபின், அந்த மொழிக்கே உரிமையான செஞ்சொற்களும் கடன் வாங்கப்பட்டவையே என்று யாரேனும் எடுத்தியம்பி, வருமொழியைப் பல காட்டி நிலைமொழியான தமிழைத் தாழ்வுபடுத்த முனையினும் எதிர்க்கப்படும்.

தொன்றுதொட்டே வடமொழிச் சொற்களைத் தங்குதடையின்றி ஏற்றுக் கொள்ளாமல் தமிழ் மரபு மறுதலித்து வந்துள்ளது. வட மொழியிலிருந்தே தமிழ் கடன் வாங்கியது என்றும், தமிழிடமிருந்து வடமொழி எதையும் பெற்றதில்லை என்றும், அதனால் தமிழைவிட வடமொழி உயர்வுடையது என்றும் உண்மைக்குப் புறம்பாகக் கூறி வந்ததால், வடசொற்கள் தமிழர் நெஞ்சில் ஒரு முள்ளாகவே இருந்தது. நடுவு நிலைமையின்றி. ‘வடமொழியை உயர்ந்தது’ எனப் பரப்பிய கருத்துகள் தமிழ் வடமொழிப் பகைமைக்கு வித்தூன்றின. இதன் விளைவாக எழுந்த மொழிக்கிளர்ச்சி மொழியைக் காக்கும் எல்லையோடு நிற்காமல் தனித்தமிழ் இயக்கத் தோற்றத்திற்கும் பெருமிதமான வழி அமைத்தது.

எழுதவே விரல் நடுங்கிய மேற்கோள்களைப் படிக்க நான் திணறியபோது, உடனிருந்து உதவிய பெரும்புலவர் அமுதலிங்கம் எனக்குத் துணை நின்றதை நான் நினைவுகூராத நாளில்லை

  1. தனித்தமிழியக்கம்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்மொழித் தூய்மையை நிலைநிறுத்தும் தனித்தமிழியக்கம் தோன்றியது. அவ்வியக்கம் மனோன்மணீயம், சீவகன், புருடோத்தமன், குடிலன், சகடன் என்ற பெயர்கள் வடமொழிப் பெயரின என்றாலும் வடமொழியினும் தமிழே உயர்ந்தது, சதுர்மறை ஆரியம் வருமுன் சகம் முழுவதும் நினதே என்றும், கனம் சடை என்று உருவேற்றிக் கதறுவரோ என்றும் வடமொழி எதிர்ப்பு வளர்ச் சியை வேரூன்றச் செய்த முதன்மைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையைச் சாரும். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் முதலியோருடைய ஊக்கமும் இந்நல்லுணர்வுக்கு ஆக்கம் தந்தன.

பிறமொழிச் சொற்களுக்கு அதிலும் குறிப்பாக வடமொழிச் சொற்களுக்கு எதிரான இயக்கமாகும். பரவலாக ஆட்சியிலுள்ள, தேவையான பிறமொழிச் சொற்களைக்கூட விலக்க வேண்டுமென அவ்வியக்கத்தினர் கூறுவதைப் பலர் ஒப்புக் கொள்ளத் தயங்கலாம். ஆனால், பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத, தேவையற்ற பிற மொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர் என கருதினார் தெ.பொ.மீ. இந்த இயக்கம் பெரும் பாலும் தமிழில் மலிந்த வடசொற்களைக் களையும் நோக்கத்தில் தான் தோன்றியது.

புலவர்கள், கற்றறிந்தோர், அரசு கல்வி நிலையங்கள் ஆகிய நிலைகளில் தனித்தமிழ் உணர்வு பரவுதற்கு இவ்வியக்கம் வழி வகுத்தாலும், அன்றாட வாழ்வில் வளர்ந்த நாகரிகக் கூறுகளால், புதிய துறைகளால், வாணிகம், அறிவியல் வளர்ச்சியால், கல்விப் புதுமைகளால், வடமொழியையும் விஞ்சி ஆங்கிலச் சொற்கள் பரவலாக நுழையத் தொடங்கியதால், இவ்வியக்கம் வடமொழியைப் போல ஆங்கிலச் சொற்களையும்களையும் பெருஞ்சுமையை ஏற்க வேண்டியுள்ளது.

தனித்தமிழியக்கம் தோன்றிய வரலாறு சுவையுடையது. பரிதிமாற் கலைஞரே தனித்தமிழியக்கத்தின் வழிகாட்டி என்றுரைப்பின் பொருந்தும். தம் இயற்பெயராகிய சூரிய நாராயண சாஸ்திரியார் எனும் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். தனிப்பாசுரத்தொகை எனும் நூலின் உண்மைப் பதிப்பு எத்தகையது என்பதை உணர விரும்பித்தான் பரிதிமாற் கலைஞர் எனும் புனைபெயரை அமைத்துக் கொண்டார். அவர் அவ்வாறு பெயர் மாற்றம் தொடங்கியதாகப் பின்னர்ப் பலர் தங்கள் பெயரை மாற்றிக் கொள்வதற்கும் வழிகாட்டியாக அமைந்தது.

அளவிறந்த வடமொழிக் கலப்பினை அவர் வெறுத்து ஒதுக் கினார் என்பது உண்மை. அதே நிலையில் அவரது நூலின் தலைப்பு கள், நூலில் அவர் கையாண்ட பெயர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களாகவே அமைந்திருந்தன.

மனோன்மணியம் பற்றியும் முன்னர் இக்கருத்தைக் காட்டியுள் ளோம். தனித்தமிழ் உணர்ச்சி அவரிடம் அமைத்திருந்தது என்றாலும், நெடுங்காலமாக நிலைத்த வடமொழியின் பிடிப்பிலிருந்து அவரா லும் விடுபட முடியவில்லை என்றே யுரைக்கலாம். மறைமலையடி களார் மட்டுமே பின்னர்த் தனித்தமிழியக்கத்தைக் தோற்றுவித்து, அதனை ஒரு பேரியக்கமாகத் தாமே தலைமையேற்று நடத்தினார். அவர் அவ்வாறு செயற்படத் தூண்டுகோலாயமைந்தது பரிதிமாற் கலைஞரின் தனித்தமிழ் ஆர்வம் என்பதும் நினைக்கத்தக்கது.
‘இந்தச் சூரிய நாராயணருக்கு மட்டும் ஏன் இவ்வளவு தமிழ்ப் பற்று. அதிலும் தனித்தமிழ்ப் பற்று. நான் தனித்தமிழ் இயக்கம் காண்பதற்கு முன்பே அவர் தனித்தமிழ் உணர்ச்சி கொண்டு, தம் வடமொழிப் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டாரே’

என்று பரிதிமாற் கலைஞரைப் பற்றித் தம் வாழ்நாள் முழுவதும் மறைமலை அடிகள் பாராட்டிக் கொண்டிருந்தார் என்னும் கருத்து இதனை உறுதி செய்கிறது.

தனித்தமிழ் காக்கவும், வடமொழி நீக்கவும் தமிழகத்தில் தோன்றிய மூன்று வெவ்வேறு அமைவுகள் காரணங்களாயின.

  1. சமயஞ்சார்ந்த தமிழுணர்ச்சி: இதற்குத் தலைமையேற்றவர் மறைமலை அடிகள். 2. சமுதாய அடிப்படையில் உருவான மொழியுணர்ச்சி; தந்தை பெரியார் தலைமையேற்கத் தமிழர் திரண்டெழுந்த காலம். 3. தேசிய எழுச்சி அடிப்படையில் பிறந்த மொழியுணர்ச்சி: இதில் பாரதியார், வ.உ. சிதம்பரனார், திரு.வி. கலியாணசுந்தரனார் போன்றோர் ஈடுபட்டனர். இம்மூன்று உணர்ச்சிகளும் ஒன்று பட்டு நிகழ்த்திய பெரும்போரில், தமிழ் வடமொழிக் கலப்பி லிருந்து காக்கப்பட்டது எனில், மிகையன்று. தமிழ் மொழியை இழந்தால் தமிழர் கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றையும் இழந்து, வடமொழக்குத் தமிழர் அடிமையாவர் என்னும் கருத்து வலிமை பெற்றது. இது பற்றி மறைமலை அடிகளார் வரலாற்று நோக்கில் கண்டு எழுதினார்.

தமிழையும், தமிழரின் கலைகளையும் கலாச்சாரத்தையும் சீர்குலைப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள். இந்த சூழ்ச்சி சென்ற 500 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மக்களை எழுச்சி கொள்ளச் செய்தார் அடிகளார், தமிழ்த் தென்றல் திருவிகவும்.நம் மக்கள் வாழ்வே தமிழ் வாழ்வு. நாம் கண்டது தமிழ் கேட்டது தமிழ் உண்டது தமிழ் உயிர்த்தது தமிழ், உற்றது தமிழ் அத்தமிழ் அமிழ்தங் கொண்ட நாடு இந்நாடு. இதுபோது தமிழின்பம் நுகர்கிறோமா? இல்லையே! காரணமென்ன? உரிமையிழந்தோம்; தமிழை மறந்தோம்; மீண்டும் உரிமையுணர்வு பெற யாண்டுப் போதல் வேண்டும். தமிழ்த்தாயிடம் செல்வோமாக! அவள்சேவையால் உரிமையுணர்வு பெறலாம்.தமிழ் மக்களே சேவைக்கு எழுங்கள் எழுங்கள் என எழுச்சி உரையாற்றி, மொழித்தூய்மை காக்க தேசிய உணர்வுடன் முற்பட்டார்.

இத்தகு எழுச்சியால் தமிழ் வடமொழியின் நுழைவுப் பிடியி லிருந்து பெருமளவு நிலைபெற்றது. தந்தை பெரியார் இப்போக்கினை அரசியல் இயக்கமாக்கியதால், தமிழ் மக்கள் அனைவர் நெஞ்சங்களிலும் தமிழ் எழுச்சி பேரெழுச்சியாய் மலர்ந்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழியக்கத்தின் வரிகள் ஒவ்வொன்றும் வைர வரிகளாயின. தமிழ்த்தென்றல், நவசக்தி, தேசபக்தன் என்று வெளியிட்டபோது, குடியரசு, விடுதலை அழகியத் தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்திய தன்மான இயக்க ஏடுகள், பெரியார் பாசறையிலிருந்து வெளிவந்த படைக்கலன்களாகும்.

எனினும், பம்பாயில் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்மொழிக் கவியரங்கில், புரட்சிக் கவிஞர் வழங்கிய ஒரு கவிதையில் இந்தியப் பெருநாட்டை – ஒருமைப்பாட்டைக் கருதினாலும், ஓரினத்து மொழியைப் பல இனத்தும் பரப்பும் முயற்சியைக் கடிந்து கூறினார். ஓரினத்துக்குள்ள மொழியைப் பலவினத்துள்ளும் பரப்ப முயல்வதால், நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற கோட்பாடு சரியென்று கொள்வதற்கில்லை. அவ்வவ்வினத்தின் அவ்வம் மொழிகளைச் செம்மை செய்து, செழுமையாக்கி இனத்து மக்கள் எவர்க்கும் பரப் பும் ஒன்றினால் மட்டுமே ஒற்றுமை ஏற்படும் என்பது நோக்கமாகும். இப்படி இருவேறு கருத்துகள் இருந்தே வந்தன.

மொழிக்கலப்பால் சொற்கள் வழக்கிழத்தல்பிறமொழிக்கலப்பு நேர்ந்ததாலும், கலந்த சொற்கள் நிலைத்த வழக்கிலிருப்பதாலும் தொன் மொழியின் சொற்கள் காலப்போக்கில் வழக்கிலிலிருந்தே மறைந்துவிடும். தூய தமிழைக் குழந்தைகளுக்கும் வலியுறுத்தும் நிலையைப் பாவேந்தர் பாடலில் காணலாம். காட்சி என்றெழுது தம்பி – சிலர்காமாஷி என்பார் அது தப்பாம்!காட்சி எனும் பெயர்தம்பி – கேள்காணும் எனும் சொல்லின் விளைவாம்

அடிக்கடி உத்யோகம் என்பர் அதைஅலுவல் என்றுரைத்திடு தம்பி
படிப்பது வாசித்தல் இரண்டனில் – உன்பழந்தமிழ் முன்னது தம்பி!
மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்று பெயர்கள் இவ்வடிவம் பெற்றன.

  1. செழும் தொன்மையும் மரபும் செழிந்த செம்மொழி..!
    கலப்பினால் தமிழில் வழக்கிழந்த சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். சான்றாக, அகநாழிகை அல்லது உண் ணாழிகை கர்ப்பக்கிருகம் நாளங்காடி (பகற்கடை) அல்லங்காடி (மாலைக்கடை) அடுத்துண் (தீவனத்திற்கு விட்ட நிலம்) அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்று) மதில் (அணல் தாடி) அணிகம் (வாகனம்) அணியம் (ஆயத்தம்) அணுக்கன் திருவாயில் (கர்ப்பக்கிருகவாயில்) இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை) இதழ்குவி பா (ஒட்டியம்) இதழகல் பா (நிரோட்டகம்) இரப்போன் (பிச்சைக்காரன்) இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்) இயம் (வாத் தியம்) இயவன் (வாத்தியகாரன்) இளிந்த நாக்கடித்தல் (ஆராயாது வாக்களித்தல்) உகப்பு உறாவரை அல்லது முற்றுட்டு (சர்வமானியம்) அறம் (தருமம்) ஆடிடம் (விளையாடுமிடம்) ஆரோசை (ஆரோகணம்) அமரோசை (அவரோகணம்) ஆளுங்கணம் (ஆளொட்டி அல்லது ஆளொதுங்கி) காவற்கூடு (ஆளோடி குளத்தின் மதிலுள் புறமாக மக்கள் நடப்பதற்குக் காட்டிய வழி) ஒம்படுத்தல் அல்லது ஒம்படை (மக்களைக் காத்தல்) ஊட்டகர், ஊட்டுநர் (போஷகர்) ஊட்டுப்புரை (அன்னசத்திரம்) ஊமையாமொழி (அஜபா மந்திரம்) ஐயம் அல்லது இரப்பு (பிச்சை) ஐயம் அல்லது அயிர்ப்பு (சந்தேகம்) ஒப்புரவு (உபகாரம்) தெரிப்பு (தெரிந்தெடுக்கை) வலிவு மெலிவு ஒகநன் (கடலாளி) ஓமாலிகை (நறுமணச் சரக்கு) ஒலக்கம் (அரசு வீற்றிருக்கை) கண்ணெச்சில் (கண் திருஷ்டி) கரிசு (பாவம்) குடவோலை (குடும்பு) கூலம் (தானியம்) கூற்றம் (தாலுகா) கூற்றுவன் (எமன்) கையடை (பாதுகாக்கும்படி ஒப்புவித்த பொருள்) நீர்ச்சீலை (பீனம், கோவணம்) கதியெழுகை (தேசாந்திரம்) பண்டுவம், பரிகாரம் (சிகிச்சை) பலகணி (சன்னல்) பாடுகிடத்தல் (வரங்கிடத்தல்) பிறங்கடை (வாரிசு) புரவுவரி (வருவாய்) புலம்பன் (ஆன்மா) பொதுநாயகம் பொருநன் (போர்வீரன்) மதங்கம் (மிருதங்கம்) மதவலி (பயில்வான்) கையறம் (சரமகவி) கலக்கரணை (செளகரியம்) சார்ச்சி வழக்கு (உபசார வழக்கு) சால்வு (திருப்தி) தக்கை முறுக்கி (ஸ்குரூ) தவப்பழி (உண்ணாவிரதம்) தார்ச்சீலை (இலங்கோடு) திணைக்களம் (துறை) மெய்ப்பாடு (பாவம்) வலவன் (சாரதி) வழக்காரம் (பிராது வழுவாய்) மருப்பு (தந்தம்) மறம் (வீரம்) மழவன் அல்லது மறவன் (வீரன்) மன்பதை (சமுதாயம்) மீகாமன், மீகான் (மாலுமி) வாய் வாளாமை (மெளனம்) விறல் (சத்துவம்) விசி (பலகை).

  2. மேற்காட்டிய பொதுச்சொற்கள் போன்றே, சாத்தன், கொற்றன், ஆதன், பூதன், கீரன், பேகன், பாரி, காரி, நள்ளி, குமணன், வெளியன், தித்தன், நம்பி, கம்பன், கூத்தன், கண்ணன், முருகன், புகழேந்தி, அடி யார்க்கு நல்லான், நச்சினார்க்கினியன், பரிமேலழகன், தோலாவழக்கன் முதலிய எண்ணிறந்த மக்கட் பெயர்களும், கயற்கண்ணி (மீனாட்சி), கலைமகள் (சரஸ்வதி), மலைமகள் (பார்வதி), திருமகள் (இலட்சுமி) முதலிய தெய்வப் பெயர்களும் பொருநை (தாம்பிர பரணி), தில்லை (சிதம்பரம்), மறைக்காடு (வேதாரணியம்), பழமலை அல்லது முதுகுன்றம் (விருத்தாசலம்) மயிலாடுதுறை (மாயவரம்) குரங்காடுதுறை (கவித்தலம்) முதலிய பல இடப்பெயர்களும் வழக்கற்றன. விடாப்பிடி (வைராக்கியம்) தடுமம் அல்லது நீர்க்கோவை (ஜலதோஷம்), ஊக்கம் (உற்சாகம்), திருவிழா (உற்சவம்) விழிப்பு (ஜாக்கிரதை முதலிய பல சொற்கள் வழக்கு வீழும் நிலையில் உள்ளன.
    கனவு, தூக்கம், பயிற்சி, வெள்ளி முதலிய தென்சொற்களிருப் பவும், சொப்பனம், நித்திரை, அப்பியாசம், நட்சத்திரம் முதலிய வடசொற்கள் வீணே உலவி வருகின்றன. எழுநாட்பெயர்களுள், அறிவன் (புதன்), காரி (சனி) என்னும் இருநாட் பெயர்கள் வழக்கு வீழ்ந்து போயின. இரங்கும் நிலையில், ‘அளியன் அளியள்’ ‘அளிது அளிய’ என்றும் சொல் வழக்கு வீழ்ந்து, பாவம் என்னும் சொல்லோ வேரூன்றிக் கொடிவீசலாயிற்று.
    இந்த நிலையிலும் தமிழிற்போதிய சொற்களில்லை என்று கூறுதலும் வழக்கற்ற சொற்களைப் புகுத்தக்கூடாதென்று தடை செய்தலும் சிலர்பால் உண்டு. ஆட்சியும் மாட்சியும் நீங்கி நெடுங்காலம் கழிந்த பின்னும், இக்காலக் கருத்துக்கேற்ற சொற்களும் சொற்கருவிகளும் தமிழில் எஞ்சியுள்ளன. பல தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்தமைக்குக் காரணம், அயலாரால் புகுத்தப்பெற்ற சொற்களின் விளைவாகும். எனினும், அவற்றுக்கு மாறாகப் பழஞ் சொற்களைப் பெய்தல் தமிழர் கடனாகும்.

புதிய அணுகுமுறைஇன வளர்ச்சி, மொழி வளர்ச்சியின் அடிப்படை இன வளர்ச்சிக்கு எதிரான மொழிக் கொள்கையை நாம் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அதனால் இன வளர்ச்சியும் கெடும்; மொழி வளர்ச்சியும் தடைப்படும். நமது சமுதாயத்தின் தனி வளர்ச்சிக்கோ, நாம் தலைமை பெறுவதற்கோ, மாறான நம்பிக்கைக்கோ நமது நோக்கம் ஆட்பட்டுவிடலாகாது.

பழைமை, பழம் பெருமை, பழைய பண்பாடு, மொழியின் தனித் தன்மை, தூய்மை போன்றன நாம் தலை நிமிரப் பயன்படலாம். அவை நாம் தடம் புரளவும் காரணமாகாமல் கண்காணித்துக் கொள்ள வேண்டும். ஒரு கொள்கையோ, ஒரு தத்துவமோ, மரபோ மக்கள் வாழ்வியற் கலைகளின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறதா என்ற வினாவை ஒவ்வொரு நிலையிலும் நாம் எழுப்ப வேண்டும். ‘துணை’ என்ற நிலை மாறிச் சுமை என்ற நிலைமைக்கு ஒரு மரபோ அணுகு முறையோ வந்து சேர்ந்தால், எவ்விலை கொடுத்தும் அதைத் தாங்கும் மனநிலை நமக்கு அமையக் கூடாது.

தமிழ் விண்ணிலிருந்து வந்தது அன்று விண்ணவர் தந்ததுமன்று. மனித சமுதாயம் தமக்குத்தாமே பெருகப் பெருக தட்டுத்தடுமாறி, அரிய முயற்சியின் பெரியதாக மொழியை உருவாக்கிக் கொண்டது. மனிதன் படைத்த எதுவும் குறையுடையது; வளர்ச்சிக்கு வழி கோலுவது வளர வேண்டிய தேவையுடையது. எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் தேவையான எல்லாவற்றையும், மொழியைப் பொறுத்தவரை முன்னரே அமைந்ததாக முடிந்ததாக எண்ணவோ நம்பவோ இடமில்லை.

தமிழும் உலகிலுள்ள மற்ற மொழிகளைப் போன்றதே ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் இருக்கலாம். தமிழுக்குச் சில சிறப்புகள் கூடுதலாகவே இருக்கலாம். இருப்பினும், வளர்ந்த நாட்டினரின், மொழி வளர்ச்சியும், அவர்கள் தம் மொழியில் கடைப்பிடித்த முறை, அவர்கள் கண்ட அனுபவம் ஆகியன சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நமக்கும் பயன்படும். பயன் தரும் நமது மொழி மற்ற மொழிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இயல்பும், சிறப்பும் உடையது என்ற நோக்கோடும் மற்ற மொழியினர் பெற்ற அழுத்தங்கள் நமக்குத் தேவையில்லை, அல்லது பயன்படா என்னும் மனநிலையோடும்; காதும், கருத்தும் கண்ணும் மூடிய நிலையில் நடக்க முடியாது. முன்னேறியுள்ள நாடுகளின் கடந்த கால அனுபவங்களை ஆராய்ந்து இயன்ற வழியில் தேவையான மாற்றங்களோடு அவற்றைப் பயன்கொண்டு அதன்வழி நாம் நலம் பெறவேண்டும் என்ற பணிவுடைமை நமக்கு எந்நாளும் வேண்டும்.

ஆங்கில மொழி 50 சதம் இலத்தீனிலிருந்தும் 25 சதம் கிரேக்கத்திடமிருந்தும் கடன் பெற்று வளர்ந்தது என்பர். சீன மொழியோ பிறசொற்களை ஏற்பதில்லை. பிறநாட்டு இடப்பெயர்கள் இயற்பெயர்களாகக் கூடத் தம்மொழிக்கேற்பவோ மொழி பெயர்த்தோ சொல்கின்றனர். வடமொழியாரோடும் ஊர்ப் பெயர்கள் இயற்பெயர்களை மொழி பெயர்த்து மாற்றுவதை நாம் அறிவோம். தமிழரிடத்திருந்த அரிய நூல்களை மொழிபெயர்த்துத் தமிழர் அறிந்த முன்னமே தாம் அறிந்தன போலவும், வட மொழியிலிருந்தே அவற்றைத் தாம் அறிந்தனர் போலவும், வட மொழியிலிருந்தே தமிழிற்கு அவை வந்தன போலவும் ஆரியர் காட்டினர் என்று வீ.கோ. சூரிய நாராயண சாத்திரியார் தமிழ்மொழி வரலாற்றில் எழுதினார்.
அறிஞர் வ.சுப. மாணிக்கம் இது தொடர்பாகத் ‘தமிழ் ஒரு முதுமொழி. அதனை அது வளர்ந்து வந்த இயற்கைப்படி வளர்க்க வேண்டும். தமிழ்ஞாலத் தொன்மொழியாதலானும், பல மொழிகள் ஞாலத்திடை தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோன்றி வளர்ந்து இலக்கண இலக்கியங்கண்ட செம்மொழியாதலானும், ஒரு குடும்பத்துக்கு ஒரு மகவு போல் உடன் பயில்மொழியாதுமின்றித் தனித்து ஓடியாடி உரம்பட்ட செல்வ மொழியாதலானும் அதனைத் தன்னிச்சைப்படி வளர்ப்பதுவே நெறி.
ஆங்கிலம் இந்தி முதலான பன்மொழிகள் ஏராளமான மொழிகள் வழங்கிய உலகக் காலத்துப் பிறந்தன. கலப்பிற் பிறந்தன; கலப்பிலே வளர்ந்தன. கலப்பிலே வளரும் பெற்றியன. ஆதலின் அன்ன மொழிகளை அசை பிறந்த சூழற்படி வளர்ப்பதுவே நெறி. இவை மொழியியற்கையாதலின், பெருமை சிறுமை என்ற ஏத்துக்கும் ஏச்சுக்கும் இடம் யாண்டுண்டு? என வினவுவது குறிக்கத் தக்கது.
 எட்டிப் பறித்த பூக்களில், எழிலார்ந்த நன்மலர்கள் விடுபட, என நண்பர்கள் சுட்டிக்காட்டிய தனித்தமிழ் தானை மறவர்களை நாடு எப்போதும் மறப்பதில்லை.  பாவாணர், மூதறிஞர் வ.சுப.மா., பாவலரேறு, முன்னாள் அமைச்சர் அறிஞர் தமிழ்க்குடிமகன், கழகப் புலவர் இராமநாத அடிகள், இளவழகனார், அண்ணல் தங்கோ, கோவை இளஞ்சேரன், அறிஞர் அருளி, இளங்குமரனார், மதிவாணன், இ மு சு, வளனரசு என்ற பட்டியல் குறிக்கத்தக்கது.
 அறிஞர் தமிழ்க்குடிமகன், அமைச்சராகவும் திகழ்ந்த நிலையில், தனித்தமிழுக்கென அரும்பணியாற்றினார். அரசு ஆணைகளிலும், அறிவிப்புகளிலும், வணிகக் கடைப் பெயர்களிலும் தனித்தமிழ் மணங்கமழச் செய்தார்.   நூற்றாண்டு கண்ட சைவ சிந்த்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார், வெளியிட்ட அனைத்து நூல்களும், தனித்தமிழ்ச்சாறு ததும்பும் கனிச்சுளைகளாகும். சுழன்றும் சுப்பையா பின்னது பதிப்புலகம் என்று பாவாணர் பாராட்டினார்.  

unread,16 Jul 2020, 22:59:07to மின்தமிழ்16. ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..!

மொழிக் கொள்கை பற்றிய பூசல் நம்மிடையே பட்டிமன்றமாகவே ஒருவர் எடுத்து மொழியவும், மற்றவர் மறுத்துக் கூறவுமாக நடுவர் இல்லாமலேயே நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது பற்றிய பொருண்மையில் மற்ற மொழிகளிலிருந்து ஆங்கிலமொழிச் சொற்களைக் கடன் வாங்கி வளர்ந்த அனுபவத்தை ஒருவர் சுட்டிக் காட்டினால், அதை அறிவு நோக்கில் ஆய்ந்து, அந்த அனுபவம் தமிழுக்குப் பொருந்துமா, பொருந்தாதா என முடிவு செய்வதுதான் முறை. முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதைவிடுத்து ஏழை கடன் வாங்குவான் இரவலன் இரக்கிறான். அதற்காகச் செல்வந்தர்களும் கையேந்த வேண்டுமா?’ என்று வினவுவது மொழியியலுக்கு முறையாகாது. மொழியியல் வேறு வாழ்வியல் நடப்பு வேறு. உள்ளத்தில் உண்மையும், கடமையில் தெளிவும், நமது மொழி எல்லா நிலைகளிலும் எல்லோர்க்குமாக ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வும் நடைமுறையில் வளர்ச்சியை நாம் அனைவரிடமும் நல்லனவற்றைப் பெற வேண்டும் என்ற துடிப்பும் மேம்பட்டு வருகின்றன.

சென்ற வாரம் என் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை வினவினார். உலகில் பிறமொழிச் சொற்கள் கலக்காத மொழி ஏதுமில்லை. சீனம் பிறமொழிச் சொற்களை ஏற்பதில்லை என்பது முற்றிலும் சரியான கருத்து அல்ல. கம்பன் பயன்படுத்திய ஐயோ என்ற சொல் இன்றும் அதே பொருளில் சீனத்தில் வழக்கிலுள்ளது. மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன (எ-டு: கடை) பிற மொழிகள் தமிழ்ச் சொற்களை ஏற்கும்போது பெருமிதம் கொள்ளும் நாம், தமிழ் பிற மொழிச் சொற்களை ஏற்கும்போது ஏன் வருந்த வேண்டும்? மொழி என்பது மக்கள் சார்ந்தது. அதை அறிஞர் சார்ந்த மொழியாகக் கருதித் தூய்மைப்படுத்த முனைந்தால் அது அழிந்து போகும் வாய்ப்பு வரும். பிராகிருதம் செப்பம் செய்யப்பட்ட சமசுகிருதமாகிய தால்தான் வழக்கொழிந்தது.

அதேநிலையில், மாற்றாகவும் கருத்துரைக்கலாம். சிறிதளவு கலப்பு எல்லா மொழிகளிலும் எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து வந்துள்ளன. தமிழைப்போல அதனை இலக்கணத்திலும் சேர்த்துக் கூறிய மொழிகள் உலகில் எத்தனை உள்ளன? அளவிறந்தும், தேவையற்றும் கலப்பது மொழியைச் சிதைக்கும். சிதைத்துத் திரிந்து அற்றும் போன மொழிகள் பல. உணவில் உப்பு இருந்தால் சுவை கூடும், ஆனால், உப்பாகக் கொட்டி வைத்தால் அது உணவன்று.

அதிகம் கலப்பதாகக் கருதப்படும் பல புதின, கதை எழுத்தாளர்களின் எழுத்துகளை அலசினாலும் அதில் கலப்பு குறைவே (5-15%). நான் அலசி இருக்கின்றேன். அக்கலப்புகள் குறைவாக இருந்திருந்தாலும் சுவை ஒன்றும் குன்றிவிடாது என்று என் நண்பர் கூறினார்.

கலப்பால் சிக்கல் இல்லை. இந்தக் கலப்பால் வேண்டுமென்றே ஓர் ஆங்கில, சமற்கிருத பிறமொழி மோகத்தை உண்டுபண்ணும் பண்பாட்டுப் புரட்டால்தான் எதிர்ப்புணர்வு. தாழ்வு மனப்பான்மை வலிந்தும் நுட்பமாயும் ஊட்டுவதைச் சிலர் எதிர்க்கின்றனர். அளவான கலப்பு என்றுமிருக்கும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழர்கள் தமிழில் சொல்லி மகிழ்பவர்கள் அது அவர்கள் விருப்பம்.

தூய்மை, தனித்தன்மை என்பன உயர்ந்த கூறுபாடுகளைக் குறிப்பிடும் சொற்கள். ஆனால், மொழித்துறையில் எது தூய்மை, எது தனித்தன்மை என்பதில் தெளிவு கண்டாக வேண்டும். கன்னித் தன்மைதான் தூய்மையுடையது என்பதில்லை. தாய்மையும் தூய்மையானதே. தனிமை வேறு, தனித்தன்மை வேறு. பலருடன் சேர்ந்து செயற்படும் பொழுதுதான் ஒருவரது தனித்தன்மை புலனாகிறது. அறிவு ஓரிடத்தில் தேங்காமல் நாளடைவில் மற்றைய கருத்துகளாகி, எண்ணுதற்கு எட்டாத எழிலார்ந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தழுவி நடைபெறுகின்றது. சமயம், தத்துவம், மொழியியல், கலை, பொருளாதாரம், வாணிகம், போக்குவரவு, அறிவியல், தொழில் நுட்பம், அணுவியல், மரபணுவியல், மின்னியல், கணினியியல், ஊடகவியல், வாழ்வியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் உலகின் எந்த மூலையில் வளர்ச்சிப் பொறி தட்டுப்பட்டாலும், அது மானிடத்தின் பொதுச் சொத்தாகி மலர்ந்த காலம் இன்றைய காலமாகும்.

வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நாகரிக வளர்ச்சியுடன் எல்லாக் காலத்திலும், எல்லா நாட்டினராலும், எல்லா இனத்தாராலும் உருவாக்கப்பட்ட அறிவுடைமை முழுமைக்கும் நாமும் உரிமை கொண்டாடும் வாய்ப்பு அமைந்துள்ளது. ஊர்கூடித் தேரிழுக்கும் மக்கள் வெள்ளத்தில் நாமும் பங்கு கொள்ளும் மனப்பான்மையும் விளைநலங்களைப் பயன்படுத்தும் திறனும் நமக்கு வேண்டும். அறிவு வளர்ச்சியில் அயன்மை என்று ஒன்றும் இல்லை. நமக்கு ஏற்றது. ஏலாதது, தேவையானது, தேவையில்லாதது என்ற பாகுபாடு வேண்டுமானால் நாம் வகுத்துக் கொள்ளலாம். ஓர் இனத்தின் வாழ்வோடு. உணர்வோடு நெருங்கிய கலை, பண்பாடு, செயற்பாடு போன்றவை கூட மற்ற இனங்களின் தொடர்பால் மாற்றங்களைப் பெறுகின்றன.
‘‘உயிரோட்டமுள்ள நாகரிகம், வளரும் நாகரிகமாக நாற்புறமும் வீசும் அலைகளை அரவணைத்து அவற்றின் மூலம் மேம்பட்டு முன்னேறிச் செல்லும் தகுதியுடையதாகத் திகழ வேண்டும். தாக்குதல் தொடாத இடத்தில் தாழிட்டுக் கொண்டு வாழக்கூடாது. தனது பின்னணியைத் தனக்கே வாய்த்த தனித்தன்மையைத் தமிழ் நிகழ்த்தி வந்த தரத்தை உரிய அளவில் நிலைநிறுத்திக் கொண்டு புதியவற்றுள், தக்கவற்றைத் தன்மயமாக்கிக் கொள்ளும் திறன், வளரும் இனத்திற்குத் தேவையான ஒன்றாகும்” என்று அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி, மொழித்தூய்மை, மொழிக்கலப்புப் பற்றிக் குறித்த கருத்துரைகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கனவாகும். மொழி என்பது வழிபடுபொருளாய், எல்லையறு பரம்பொருளாய், உணர்ச்சிக் குவியலாய் எண்ணும் நிலையில், அதன் தூய்மை மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

வளர்ச்சிக்குரிய உயிருடையதாய் உலகத் தொடர்புப் பாலமாய் மொழியைக் கருதும் இந்நாளில் மாற்றங்களுக்கு உட்படுதலே உயிருணர்ச்சிக்கு அடையாளமாகிறது. என்ற நிலையைத் தவிர்க்க இயலாது. எனவே, மொழிக்கலப்பு இனத்தின் வளர்ச்சி நோக்கி நிகழும்போது, ஏற்புடையதாகவும், இனத்தின் குலைவுக்கும் தாழ்ச்சிக்கும் வழிவகுக்கும்போது நீக்கத்தக்கதாகவும் கருதலாம். இப்புதிய அணுகுமுறை மொழி வளர்ச்சிக்கு உலக நாடுகள் மேற்கொண்டு காட்டிய நடைமுறையாகும்.

அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, 16ஆம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரையில், ஆங்கிலேயர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தம் ஆட்சியை ஏற்படுத்தியதும், ஆதிக்கம் செலுத்தியதும் முதன்மைக் காரணமாகத் தெரிகிறது. ஆங்கிலேயரின் ஆதிக்கம் ஆங்கில மொழிக்குச் செல்வாக்கை ஏற்படுத்தியது. அடிமை நாட்டார் மேல் ஆட்சி மொழி திணிக்கப்பட்டது. இந்தியா, மியான்மர், இலங்கை, மலேயா, ஆங்காங், இசுரேல் போன்ற நாடுகள் இதற்கு எடுத்துக் காட்டுகளாய் உள்ளன.
சமுதாயவியல் அடிப்படையில் ஆராயும்போது, தங்கள் அரசியல் செல்வாக்கினால் உலகில் மிகப்பெரும் ஆளும் வல்லரசாக மாறிய ஆங்கிலேயர், தொழில், அறிவியல் ஆகிய புதிய துறைகளில் பெரும் வளர்ச்சி பெற்று முன்னோடியாகத் திகழ்ந்ததைக் காண்கிறோம். தொழிற்புரட்சி முதன் முதலில் தோன்றியது இங்கிலாந்தில்தான். இவர்களுக்குப் பின்னரே உருசியரும், அமெரிக்கரும், செருமானியரும், சப்பானியரும் முன்னேற்றமடைந்தனர். ஓர் இனம் பல துறைகளில் சிறப்பையும் முதன்மையையும் அடையும்போது, அந்த மக்களிடம் மொழி இயல்பாகவே மேன்மையுறுகிறது; விரிவடைகிறது. வளர்ச்சியை எய்துகிறது. அவ்வகையில் ஆங்கிலம் கல்வி மொழியாகவும், அறிவியல் மொழியாகவும், தொழில்சார் மொழியாகவும், ஊடக மொழியாகவும் ஓங்கியதில் வியப்பில்லை. வளர்ச்சியின் பின்தங்கிய நாடுகளும் தங்கள் முன்னேற்றப் பாதையின் வழிகாட்டியாக ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கின.
பிரித்தானியத் தூதரகங்களிலும், வானூர்தி நிலையங்களிலும், கலைகளிலும், அறிவியலிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், இலக்கியத்திலும் உலகில் தலை சிறந்தது பிரித்தனே என்ற பெருமிதம் பறைசாற்றும் பலகையைக் காணலாம்.

  1. அரியணை மொழியே அனைவரையும் ஈர்த்தது..!
    ‘ஊர் கூடித் தேர் இழுப்போம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு தனித்தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் பா.இறையரசன் எனக்கு எழுதிய மடல் சிந்திக்கத்தக்கது.

“தமிழறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் எனப்பலரும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுத்தால் உண்டு நன்மை. ஆங்கிலம் தன்னை வளர்த்துக் கொள்ள பிறமொழிச் சொற்களைப் பெற்று- தன்னில் கலப்படம் செய்து வளர்ந்தது பொருந்துமா என்று ஆய வேண்டும். வணிகம், சமயம், ஆட்சி, கல்வி, பயணம், இடப்பெயர்வு ஆகியவற்றால் மொழிக்கலப்பு, கடன் வாங்கல், மொழித் திரிபு நிகழ்கின்றன. ஆட்சியாளர்களால் அவரது மொழிச்சொற்கள் ஆளப்படுவோரிடம் விரைந்து பரவுவதுண்டு. அவ்வழிச் செல்வாக்குப் பெற்ற ஆங்கிலம், வளராத குறுமொழியாக இருந்ததால், இலத்தீனிலிருந்து பிறந்து / பிரிந்து பல மாற்றங்களைப் பெற்றுக் கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் இற்றைநிலை அடைந்துள்ளது. தாம் வென்ற சென்ற நாடுகளில் உள்ள அயல்மொழிச் சொற்களைக் கடன் பெற்று வளர்ந்தது. அவ்வாறு பிற மொழிச்சொற்களைத் தமிழ் கடன்பெற வேண்டுமா?

பல்லாயிரம் ஆண்டு வளர்ச்சியும் தோண்டத் தோண்ட வற்றாமல் வழங்கும் கருவூலமாய்ச் சொல்வளமும் மொழி நலமும் மிக்கது தமிழ். மிகப்பெரிய செல்வவளம் மிக்க வணிகன், சிலநேரங்களில் கடன் வாங்குதல் போல், பிற மொழிச்சொற்களைக் கடன் வாங்கலாம். ஆனால், தன் மொழியின் திறத்தால் கலைச்சொல்லாக்க ஆளுமையால் புதிய புதிய கலைச் சொற்களைத் தன்னகத்திலிருந்தே தமிழ் உருவாக்கம் செய்ய வேண்டும். கடன் பெற்றே வாழ முயன்றால், இப்போது “தங்கிலிசு” எனும் நிலையில் உள்ள தமிழ் திரிநிலை மொழி ஆகிடும். அவ்வாறாகாமல் தடுக்க, பிற மொழிக்கலப்பைத் தடுப்பதும், தமிழில் பல்லாயிரம் கலைச்சொற்களை உருவாக்குவதும் வேண்டும். அதற்காகத் தமிழ் அறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தமிழக அரசினர் என அனைவரும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும் என்ற உங்கள் எழுத்து எப்போதும் பொருந்தும்.”

அதேநிலையில், மாற்றுக் கருத்தை மொழிபெயர்ப்பாளர் வத்சலா எழுதியிருந்தார்.
“பழந்தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் வேறு சொற்களைப் பயன்படுத்துவது தவறில்லை என்று நினைக்கிறேன். 21-ம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தை உபயோகிப்போம், ஆனால், சொற்கள் மட்டும் தொல்காப்பியர் காலத்தவையாக இருக்க வேண்டும் என்றால் எப்படி? அகல் விளக்கும், பனை ஓலையும், எழுத்தாணியும் பயன்படுத்திய காலத்துச் சொற்கள் இந்த மின்னணு உலகில் யார் பயன்படுத்துவர்? அரசாங்கம் புகுத்த முயலலாம். மக்கள் ஏற்பரா? எவ்வளவு ஆண்டுகளாக அரசாங்கம் ‘பேருந்து’ என்றே கூறி வருகிறது. மக்களோ விடாப்பிடியாக ‘பஸ்’ என்றே கூறுகின்றனர். தமிழைத் தன்போல் விட்டாலும் அழியாது என்பதே என் கருத்து”.இதற்கு மட்டும் நான் இப்படிச் சொல்ல விழைகிறேன்.பல்லாயிரம் ஆண்டுகளாக கண் காது, வாய், மூக்கு, அன்பு அறிவு, ஆறு, குளம் என்பதுபோல பல்லாயிரக்கணக்கில் சொன்னவற்றை இன்றும் அப்படியேதான் பயன்படுத்துகின்றோம். அதில் என்ன பிழை. அது உண்மையில் சிறப்பு. பேன்ல, கொஞ்சம் ஆயில் போர் பண்ணுங்க என்பது 21 ஆம் நூற்றாண்டுத் தமிழா? தட்டைச் சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுங்கள் என்பன போலச் சொன்னால் தவறா?

அப்புறம் விடாமல் இந்தப் ‘பேருந்தை’ திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். கூகுளில் ‘பேருந்து’ என்று இட்டுப்பாருங்கள். 1,520,000 தேடல் முடிவுகள் வருகின்றன. ‘பஸ்’ என்றிட்டால் 1,800,000 முடிவுகள் வருகின்றன. பேச்சுவழக்கில் மக்கள் ‘வண்டி’ என்று சொல்வதும் வழக்கம். எல்லா மொழிகளிலும் இரட்டை வழக்கு (எழுத்து மொழி – பேச்சுமொழி) உண்டு, தமிழில் இவ்வழக்கு சற்று கூடுதலான வேறுபாட்டைக் கொண்டதுதான். அதனாலும் சில மாறுபடுவதுண்டு. ஆங்கிலத்திலே பேசும்பொழுது commence என்று சொல்வதில்லை, ஆனால், அது எழுத்துமொழியில் பல இடங்களில் வழங்குவது. ஆங்கிலத்தில் முறையாக எழுதுமிடத்தில் gimme, lemme என்றெழுதுவதில்லை. இதுபோல பல்லாயிரக்கணக்கானச் சொல்லாட்சிகளைச் சொல்லமுடியும்.

தமிழர்கள் தங்களுக்குத் தேவையான இக்கால உலகுக்கான சொற்களை அழகாக பல்லாயிரக்கணக்கில் ஆக்கிக்கொண்டே இருக்கின்றார்கள் (அறிவியல், பொறியியல், மருத்துவம்…). ஆனால், தாழ்வு மனப்பான்மை கொண்டு, பிறப்பு வளர்ப்பால் தாய்மொழியைத் தள்ளி வைக்கும் போலியாகவும், பகட்டாகவும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோரால்தான் பலவும் மேலும் செல்வாக்குப் பெறாமல் இருக்கின்றது.
ஆங்கிலத்தைவிட அதிகமாகப் பேசப்படுகின்ற மொழி சீனமாகும். தற்போது உலக அளவில் 200 கோடிக்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தைப் பேசவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்ற சூழலில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், ஆங்கிலம் உலகிலேயே அதிகமாகப் பேசப்படும் மூன்றாவது மொழியாகும்.

அயர்லாந்து விடுதலை பெற்றதாக அறிவித்தபோது, இங்கிலாந்திலிருந்து தனது தொடர்புகளை அறுத்துக்கொள்ள முயன்றது. இங்கிலாந்திற்கும் தமக்கும் இடையேயான இறுதி உறவான ஆங்கில மொழியையும் துண்டித்து விடுங்கள் ‘ஐரிசு’ மொழியையே பேசுங்கள் என்று கூறும் பலகைகள் ஆங்காங்கே ஐரிசு நாட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆனால், அந்தப் பலகைகளும் வழியின்றி ஆங்கிலத் திலேயே எழுதப்பட்டிருந்தன. நீக்கமற நிறைந்து விடும் ஆங்கிலத்தின் நிலையை, வளர்ச்சியை இதன்வழி அறியலாம். எத்தியோப்பியாவில் ஆங்கிலமும் பிரெஞ்சும் ஆட்சிமொழிகளாக உள்ளன. எதிர்காலத்தில் ஆங்கிலத்திலேயே முழுவதும் நடத்தும் திட்டங்கள் உள்ளன. இவ்வாறு உலக அரங்கில் ஆங்கிலம் தனிச் செல்வாக்கும், பிற மொழிகளில் ஊடாட்டம் நிகழ்த்தும் வல்லமையும் பெற்ற மொழியாக விளங்குகிறது.

நம் இந்தியப் பெருநாட்டின் பதினெட்டு மொழிகளையும் 350 வட்டார மொழி வழக்குளையும் மக்கள் பேசுகின்றனர். ஆனால், ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவு கொண்டு எந்த ஒரு மொழியிலும் பேசிப் பழக முடியவில்லை. நமது மக்கள் தொகையில் 2 கோடி மக்கள் மட்டுமே பேசக்கூடிய ஆங்கிலம்தான் நமது ஒரே தொடர்பு வாயிலாக நிலவுகின்றது. இந்நிலை ஆங்கிலத்தின் இன்றியமையாத பெரும் பங்கினை எந்த நிலையிலும் செலுத்துகிறது. மனிதகுலம் மொழியைக் கருவியாகக் கொண்டே தனது சமுதாயக் கடமைகளை நிறைவேற்றி வருகிறது. இனங்கள் பலவாய், மொழிகள் பலவாய் இயங்குகின்ற நிலைகளில் மொழிக்கலப்புத் தவிர்க்க இயலாததாகின்றது. உயிருள்ள மொழிகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது, அவற்றுக்குள் கொடுக்கல் வாங்கல் நிகழ்கின்றன. தமிழ்மொழியோடு பல மொழிகள் இவ்வுறவைக் கொண்டிருந்தாலும், ஆங்கிலமே இன்றுவரையில் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தமிழில் ஊடாட்டம் நிகழ்த்தும் மொழியாக இருந்து வருகிறது. இவ்வாறு கலந்த ஆங்கிலம், நம் அன்றாட வழக்குகளில் வல்லாண்மை செலுத்தி வருதலை வகை பிரித்தறிதலே இவ்வியலின் நோக்கமாகும். அரியணையில் அமர்ந்த மொழியை அனைவரும் அரவணைத்துத் தம்மை தொழும்பர்களாக மாற்றிக் கொண்டனர். எழுத்து வழக்கு, மக்கள் வழக்கு எனும் இரு பகுப்புகளில் ஆங்கிலச்சொற்களின் கலப்பு நிலைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

தொன்று தொட்டுத் தமிழ் இலக்கியம் பல இலக்கண நெறிகளுக்குட்பட்டு வளர்ந்து வந்தது. பிற்கால இலக்கியங்களிலும் அவற்றுக்கு முன்னர்த் தோன்றிய இலக்கியங்களிலும் பிறமொழிக் கலப்பு மிகுதியாகத் தொடங்கிற்று. இந்நிலைக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம், வடமொழிக் கலப்பை ஓரளவிற்குத் தடுத்தது எனினும், ஆங்கிலத்தின் நுழைவை முற்றிலுமாகத் தடுக்க இயலவில்லை. ஆங்கிலேயர் 300 ஆண்டுக்காலம் நம் நாட்டை ஆண்டனர். அவர்கள் நம் நாட்டிற்குக் கொண்டு வந்த புதிய துறைகள் வழியாக அத்துறைகளுக்குரிய சொற்கள் என்னும் முத்திரையோடு, ஆங்கிலச் சொற்கள் தமிழிற் கலந்தன. ‘சைக்கிள்’ மட்டுமல்லாது அதன் தொழில் நுட்பத் துணைப் பொறிகள் அனைத்தும் ஆங்கிலச் சொற்களாலேயே சுட்டப்பட்டதை எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.

சீட், வால்டியூப், பெல், மட்கார்டு, பிரேக், சீட்கவர், வீல் கோன், ரிம், செயின், போக்ஸ், செயின்கார்டு, பெடல், டைனமோ, டயர், லைட், டேஞ்சர்லைட், ஹாண்டில், ஸ்டேண்ட், கேரியர், பிரேக் ஒயர் என்ற ஆங்கிலச் சொற்கள் பேச்சு வழக்கில் இன்றும் நீங்காமல் நிலைத்துள்ளன. இவ்வாறு பல பொருள்கள் வந்தன போன்று தமிழிலக்கியத்திற்கும் சில இலக்கிய வடிவங்கள் ஆங்கிலத்திலிருந்து வந்து கலந்தன. இவ்வாறு வந்தவற்றில் முதன்மையானது நெடுங்கதையாகிய நாவல் என்னும் உரைநடை வடிவம் ஆகும். செய்யுளே தமிழ் என்ற நிலை மாறி, உரைநடை வடிவத்தில் தமிழ் வளரத் தொடங்கியபோது, பிறமொழிச் சொற்கள் கலக்க நேர்ந்தன. இக்கலப்பை நிகழ்த்துவதில் வடமொழியே முதலிடம் பெற்றிருந்தாலும், அடுத்த நிலையில் அண்மைக்காலம் வரையில் இவ்வுரைநடையில் ஆங்கிலச் சொற்கள் அதிகமாக இடம் பெற்று வருகின்றன எனக் கருதலாம்.

வட மொழி எதிர்ப்பினால், தனித்தமிழ் இயக்க எழுச்சியால் தமிழில் கலந்திருந்த வடமொழிச் சொற்கள் மறையத் தொடங்கின என மகிழ்ச்சியுறும் அதே நேரத்தில், ஆங்கிலச் சொற்கள் அந்த இடங்களில் அமர்ந்து கொள்வதை மறுக்க இயலாது. சான்றாக,அவர் பிரபலமானவர் (வடமொழி)அவர் புகழ்ப்பெற்றவர் (தாய்மொழி)அவர் பேமசானவர் (ஆங்கிலம்)‘பிரபலமானவர் என்ற வடசொல், பேமசானவர் என்ற ஆங்கிலச் சொல்லால் இடம் பெயர்கின்றது.‘ஆசீர்வாதம்’ என்ற வடசொல் வாழ்த்தாக மாறி, இப்பொழுது ‘பெஸ்ட் விஷஸ், கிரீட்டிங்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இடம் அளித்துள்ளது.இத்தகைய ஆங்கிலக் கலப்பு இன்றைய புதினங்களிலும் கட்டுரைகளிலும் இடம் பெறுகிறது. பெரிதாகத் தமிழில் பரபரப்பாக விற்பனையாகும் புதினங்களில் இந்நிலையே உள்ளது. போற்றப்பட்ட எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் தான் எழுதிய ஒரு கதையில்கூட 337 சொற்களில் 36 சொற்கள் பிறமொழிச்சொற்கள் (ஏறத்தாழ 10.7%) இடம்பெற்றிருந்தன. 2619 எழுத்துகளில் 22 எழுத்துகள் கிரந்த எழுத்துகளாக அமைந்தன.

தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் இதழ்களுக்கு ஆங்கிலத்திலே பெயரிட்டு, அதைத் தமிழ் எழுத்துகளிலேயே எழுதுவதும் உண்டு. ‘பாக்கெட் நாவல்’, ‘எ நாவல் டைம்’, ‘கிரைம் நாவல்’, ‘சஸ்பென்ஸ்’, ‘ஜாப் கைடு லைன்ஸ்’, ‘இந்தியா டுடே’ இவையனைத்தும் தமிழ் எழுத்துகளால் வழங்கப்பட்டு வரும் ஆங்கிலப் பெயர்கள். இவை மட்டுமின்றி இதழ்களில் வரும் தமிழ்க் கதைகளில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதும் அவல நிலை உள்ளது.

கலப்பு மொழி கன்னல் மொழியாகக் காட்சியளிக்கிறதே..!

கல்விக்கூடங்களில்…

கல்விக்கூடங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வரையறுக்கப்பட்ட கல்வி முறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றன. ஆங்கிலம் பயிற்று மொழியாகவே (Medium of Instruction) எங்கும் எளிதில் உள்ளதென்றால் மிகையாகாது. ஏறத்தாழ இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த நிலைதான். ஆங்கில ஆட்சிக்கு அகப்பட்ட நாடுகள் அனைத்திலும் இந்த அவலம் உண்டு.

தமிழ்நாட்டில் ஆங்கிலத்தின் வாயிலாகப் பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புக்குச் செல்வாக்கு மிகுதியாக உள்ளது. ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள வகுப்பிலே பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் இந்நாட்டில் முனைந்து பாடுபடுகிறார்கள்.

ஆங்கிலம் அறிவு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுதல் பொருந்தும் அது அந்த நிலையில் இன்றியமையாதது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், ஆங்கிலமே பயிற்று மொழியாக நீடு விளங்க வேண்டும் என்று கூறும்போதுதான் ஆங்கிலத்தின் மீது உள்ள மோகம், தேம்சு நதிக்கரையில் உள்ளவர்களின் பற்றைவிடப் பெரிது என்று தெரிகிறது. இதன் பயனாக நாட்டில் இளைஞர்களின் வாழ்வில் விளையும் தீமை எத்தகையது என்பதை அவர்கள் பார்ப்பதே இல்லை.

தமிழகத்தில் மழலையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்து வருவது கண்கூடு. இதன் விளைவாக மாணவப் பருவத்திலிருந்தே தாய்மொழியில் சிந்திக்கும் வழக்கம் குறைந்து விடுகிறது. எப்பொருளையும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே அறிமுகப்படுத்தும் இக்கல்வி முறை, ஆங்கிலச் சொற்களைத் தாய்மொழியில் கலக்கவும் வழி வகுக்கிறது.
Uniform, Slate, Tiffin Box, Pen, Lace, Socks, Water Bag, School Bag, Book, Pencil, Rubber எனப் பல ஆங்கிலச்சொற்களை இளஞ்சிறார்களும் பெற்றோர்களும் தமிழாகவே எண்ணித் தமிழைப் போல் பயன்படுத்துகின்றனர்.

பள்ளிகளில் கல்விமுறையில் மட்டுமின்றிப் பேச்சுமொழியில் ஆங்கிலம் பெருமளவில் கலந்து உள்ளது.
Chalk Piece, Bath Room, Miss, Board, Prayer, Friend, Table, Desk, Revision, Sheet, Portion, Master, Tuition, Duster, Interval, Exam எனப்பல சொற்களை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
இவ்வாறு ஆங்கிலப் பயிற்று முறை, ஆங்கிலச் சொற்களின் கலப்பைப் பெருக்குவதோடு மட்டுமின்றித் தாய்மொழிப் பயிற்சியையும், தாய்மொழிச் சொற்களை அறிந்துகொள்ளும் வாயில்களையும் அடைத்துவிடுகின்றது.

கல்லூரிகளில் பள்ளிகளைக்காட்டிலும், ஆங்கிலச் சொற்புழக்கம் அதிகம் எனலாம். பாடத் திட்டங்கள், ஆங்கில மொழியில் அதிகமாக இடம் பெற்றிருப்பது இதற்குரிய முதன்மையான காரணம். பாடத் திட்டத்தில் ஆங்கிலத்தில் படித்தும், எழுதியும் பழகிவிடும் மாணவர்களும், ஆசிரியர்களும் பழகும் இடங்களிலும் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தும் போக்கினைக் காணலாம். Principal, Professor, Lecturer, Laboratory, ‘Cut’ அடித்தல், ‘Bit’ அடித்தல், Fail, Pass, Arrears, T.C., Degree, Library, Attender, Syllabus என்பவை கல்லூரிகளில் அன்றாட வழக்கில் கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்களுக்குச் சில சான்றுகள். பள்ளிச் சிறார்களுக்குப் பழகிய சொற்களை விலக்கித் தாய்மொழியில் புரியவைக்கும் கடமை பெற்றோர் முதல் ஆசிரியர் வரையில் அனைவருக்கும் உண்டு. இருப்பினும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தாய்மொழிச் சிந்தனை குறைந்தவர்களாக இருப்பதாலும், சிறார்களுக்குப் புரியும்மொழியில் பேசுவதே போதுமென்ற எண்ணத்தினாலும் இத்தகைய மொழிக் கலப்புத் தடுக்க இயலாததாகிறது.

இக்காரணங்களைவிடவும் தன் குழந்தை ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டு மகிழும் ஆங்கில மதிப்புயர்வு, பெற்றோர்களிடத்தில் மிகுந்துள்ளதே மொழிக்கலப்பு நிகழ்வதற்குப் பெருங்காரணமாகக் கொள்ளலாம். ஆங்கிலம் வாழ்நிலைக்கு மதிப்பூட்டும் அடையாளமாகி விட்டது.

மாணவர்கள் ஆங்கிலத்தைப் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் முறை இங்குச் சிந்திக்க வேண்டிய ஒன்று. தமிழின் ஒலிக்குறிப்புகளை ஆங்கிலத்தோடு இணைத்துப் பேசும் புதியமுறை வேகமாக வளர்ந்து வருகிறது.

‘கம்’டா (come‘டா’), ‘வாட்’பா (What ‘பா’), ‘எஸ்’யா (Yes ‘யா’) என டா, பா, யா, தமிழ் ஒலிகளை ஆங்கிலச் சொற்களோடு இணைத்தும் மாணவர்கள் பேசி வருகின்றனர்.
கல்லூரி நிலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள். இவர்கள் தாய்மொழியைப் பற்றியும், ஆங்கிலத்தைப் பற்றியும் சிந்தனை செலுத்திப் பிற மொழிக் கலப்பை நீக்குதலில் தனியார்வம் காட்டவேண்டும்.

ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுத் தமிழர்பட்ட தொல்லைகளைவிட ஆங்கிலத்துக்கு அடிமைப்பட்டுத் தமிழ் இளைஞர் படும் தொல்லைகள் மிகுதியாக உள்ளன. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் அல்லர் அறிவு மொழியாகிய ஆங்கிலமும் அன்று தமிழ்ப்பற்று இல்லாத தமிழர்களுக்கு உள்ள ஆங்கில மோகமே ஆகும்.

கற்றவர்கள் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும்போது, அவர்கள் கூறும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அவர்கள் அறிந்திருக்கக்கூடும். இருப்பினும், வழக்கத்தில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை.

ஐரோப்பிய மாணவர்களுக்குத் தம் தாய் மொழியைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை இல்லை. தன்குஞ்சு பொன்குஞ்சு என்னும் காக்கைகளாக உள்ளனர். தமிழர்களோ பொன்குஞ்சு பெற்றும் ஏங்கும் பேதை நெஞ்சம் உடையவர்களாக உள்ளனர். தமிழர்களில் பெரும்பாலோர்க்கு மொழிப்பற்று இல்லை. (வீட்டுப் பெயர்கள், கடைப் பெயர்கள், விற்பனைச் சீட்டுகள், கடிதத் தலைப்புகள், கடித முகவரிகள், அளவளாவும் பேச்சுகள் முதலியவற்றைக் காணில் இந்த உண்மை விளங்கும்) இந்திய நாட்டிலேயே மொழிப்பற்று உடைய படித்த தமிழருள் பலருக்குத் தம் தாய்மொழி எந்தக் கருத்தையும் உணர்த்தும் ஆற்றல் வாய்ந்த அருங்கலையாக விளங்க வல்லது என்ற நம்பிக்கை இல்லை. ஆங்கிலச் சொற்கள் தமிழில் அதிகமாகக் கலந்தமைக்கு இச்செயற்பாடும் ஒரு காரணமாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, Cinema, Shop, Theatre, Purchase, Marker, Advancement, Road, Doctor, TV, Serial, Fees, Drainage, Drama போன்ற பல ஆங்கிலச் சொற்கள் பலராலும் பயன்படுத்தப்படுதலை நாம் காணலாம். இச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்கள் எளிதில் கிடைப்பன. வழக்கத்திலும் சில இருந்து வந்தன. இருப்பினும், அன்றாட வழக்கில் இவற்றைப் பயன்படுத்துவது கற்றவர்களிடையே இயல்பாக இருந்து வருகிறது. இந்நிலை மாறிடின், ஆங்கிலச் சொற்கலப்பைக் குறைக்க முடியும்.

அலுவலகங்களில்…

அலுவலகங்களில் அன்றாட வழக்கில் ஆங்கிலச் சொற்கள் மிகப் பலவாக வழங்கப்படுகின்றன. அலுவலகப் பதிவு முறைகள், பதிவேடுகள், கோப்புகள் போன்றவை அரசின் ஆணைகளின்படித் தமிழில் பேணப்பட்டுவந்த போதிலும், பேச்சு வழக்கில் இன்னமும் ஆங்கிலம் இருந்து வருகிறது.

Attendance, Sign, Late Permission, Telephone, Memo, Note, File, Promotion, Increment, Paper, Report, Statement, Pay Advance, Leave, Medical Leave, Casual Leave, Fund, Scheme, Camp, Inspection, Office, Conference Meeting, Urgent, Section Officer, Under Secretary, Deputy Secretary, Action, Suspense, Dismiss, Explanation, Enquiry Commission எனப்பல ஆங்கிலச் சொற்களை அலுவலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திற்குமுரிய பதிவுகள் தமிழில் இருந்த போதிலும், பேச்சு வழக்கில் ஆங்கிலத்திலேயே புலப்படுத்தும் போக்குக் குறிப்பிடத்தக்கது. எனவே, அலுவலகங்களின் அன்றாட வழக்கிலும் ஆங்கிலம் தன் செல்வாக்கைச் செலுத்தி வருகிறது என்பதை அறியலாம். ‘அரசியலார் அலுவலகம், அறமன்றம் இங்கெல்லாம் அலுவல் பெற்றீர்! உரையனைத்தும் ஆங்கிலமோ?’ எனப் புரட்சிக்கவிஞர் வினாத் தொடுத்தும், நிலைமை இன்னும் மாறவில்லை என எண்ணிட வேண்டியுள்ளது.

பொழுதுபோக்கிடங்களில்…

பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மட்டுமன்றிப் பொழுது போக்குமிடங்களிலும் ஆங்கிலச் சொற்கள் அன்றாட வழக்கில் மிகுந்திருத்தலை அறியலாம்.
Walking, Hello, Jogging, Shopping, Strain, Side Seeing, Heart Attack, Driving, Swimming, Hockey, Appointment, Diving, Tennis Club / Ground, Party, Bun, Meeting Hall, Snacks, Lecture, Friend, Speaker, Complaint, Matter, Aim, Speech, Small Recreation, Switch, Employment, Aim Large போன்ற ஆங்கிலச் சொற்கள் பொழுது போக்குமிடங்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, மக்களால் ஆங்கிலச் சொற்கள் தடையின்றிப் பேசப்படுகின்றன. தமிழில் புரிந்த, தெரிந்த ஒரு பொருளைக் குறிப்பிடவும், விளக்கவும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. இவ்விடங்களில் மொழியைப் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை என்றே கூறலாம். இதன் விளைவாகத் தாய்மொழியின் பயன்பாடு குறைந்து ஆங்கிலச் சொற்களின் வரவு அதிகமாகிறது.

வீதிகளில் பேருந்துகளில்…

“தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தானில்லை” எனக் கவலையுற்றார் புரட்சிக்கவிஞர். இன்றும் தமிழகத்தில் வீதிகளின் பெயர்கள் பலவும் பிறமொழிகளில் அமைந்துள்ளன.
Luz, Church Road, Armenian Street, Flat, Anderson Street, Avenue, Villa, Sector, Apartments, Colony என்பன வீதிகளையும், குடியிருப்புப் பகுதிகளையும் குறிப்பதற்காக வழங்கப்பட்டு வரும் ஆங்கிலச் சொற்கள். இவ்வாறு கூறும் வழக்கம் இன்னும் நீங்கவில்லை. வீதிகளில் உள்ள கடைகளில், நிறுவனங்களில் இன்னமும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகளே இருந்து வருகின்றன.

Readymade Shop, Jewellery, Hardware, Hospital, Doctor, Guest, Telephone Booth இவை கடை வீதிகளில் வீற்றிருக்கும் ஆங்கிலப் பெயர்களுக்குச் சில சான்றுகள். இவ்வாங்கிலப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதி வைக்கும் முறை, மக்களின் தாய்மொழிப் பற்றின்மையையும், மொழியறிவின்மையையும் காட்டுவதாகவே உள்ளது. “உணவுதரு விடுதிதனைக் கிளப்பென வேண்டும் போலும் துணிக்கடைக்குச் ‘சில்க் ஷாப்’ எனும் பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்” எனப் புரட்சிக்கவிஞர் எள்ளி நகையாடி எத்தனையோ ஆண்டுகள் கழிந்தன. இன்னமும் இனிய தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கப்படாத நிலைதான் உள்ளது.

பேருந்துகளில் வழங்கப்படும் ஆங்கிலச் சொற்களைக் காண்போம்…
Stopping, Checking, Break-down, Bus, Inspector, Token, Foot-board, Driver, Change, Conductor, Overtake, Depot, Ticket, Left, Time keeper, Stage, Jerking, Hold-on, Accident, Bata, Ladies, Whistle, Excess Collection, Up, Pass, Down Punch. பேருந்துத் தொடர்பாக மட்டுமே இத்தனை சொற்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. பேருந்தில் உள்ள Tyre, Gear, Steering, Break, Air, Diesel என்பன போன்ற பல சொற்கள் தொழில்நுட்பம் வாய்ந்தவையெனக் கருதப்பட்டு ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டு வருகின்றன. பேருந்துத் தொடர்பான மேற்குறிப்பிட்ட பல சொற்களைத் தமிழில் தடையின்றிப் பேசமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆங்கிலத்தை அகற்ற முயலா மக்கள் இத்தனை சொற்களை இன்னமும் வழங்கிவருகின்றனர்.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்தையார் இலக்கியக் கூட்டத்தில் பேசும்போது நயமாக ஒரு குறிப்பினைச் சுட்டிக் காட்டினார். விடியற்காலையில் ஒரு குக்கிராமத்தில் தான் சீருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே ஒருமுறை நிறுத்தி முகவரியை வினவிவிட்டுப் புறப்படும்போது, ஒரு மூதாட்டி தனது பெயர்த்தியிடம் சாணியை Thick-ஆக் கரைடி என்று சொன்னதைக் கேட்டு வியந்து ஆங்கிலம் எவ்வளவு Thick-ஆக நம்முள் ஊடுருவியிருக்கிறது என்று குறிப்பிட்டதை நான் இப்போது நினைவுகூர்கிறேன்.

ஆங்கிலத்தை எளிதாக ஒதுக்க முடியாது. காரணம், ஆங்கில மொழியில் பேசுவது Habit-ஆகவே மாறிவிட்டது. அவ்வளவு எளிதில்லை. அந்த ஆங்கிலச் சொல்லில் H-ஐ எடுங்கள் ‘a bit’ remains, அந்த a-ஐ எடுங்கள் ‘bit’ remains, அந்த b-ஐ எடுங்கள் ‘it’ remains என்று அடிக்கடி என் அப்பா வேடிக்கையாகச் சொல்வதும் குறிப்பிடத் தக்கதாகும்.

  1. எல்லா நிலைகளிலும் சார்பின்றி வாழ எழுச்சி பெறுவோம்
    சென்றவாரம் என் கட்டுரையப் படித்தவுடன், என் நெருங்கிய உறவினர் திரு.மதனகோபால் எனக்கு எழுதிய குறிப்புரையை நான் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இளம் சிறார்களுக்குப் பெற்றோர்களுக்கும்அதாவது மழலையர் பள்ளி உயர்நிலை பள்ளி ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருவது கண்கூடு அதில் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலக்கவும் சிறு எடுத்துக்காட்டாக uniform முதல் rubber வரை ஆங்கிலம் பெருமளவில் தமிழில் எல்லா இடத்திலும் கலந்து உள்ளது ஆங்கிலச் சொற்களோடு இணைத்து மாணவர்கள் பேசிவருகிறார்கள்வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி ஆங்கிலச் சொற்கள் மிகப் பரவலாகப் பேசப் படுகிறது ஒரு எடுத்துக்காட்டு நாம் வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி பார்த்தேன் என்று கூறுவதைவிட டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்கிறோம் வங்கி காசோலையைக் கையொப்பம் விடுகிறேன் என்று சொல்ல மாட்டோம் cheque book sign என்றுதான் கூற முடிகிறது என் அம்மா கூட ஆங்கிலத்தில் pension வாங்க Bank இக் செல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

தமிழில் இருந்த போதும் அன்றாட பேச்சு வழக்கில் ஆங்கிலத்திலேயே புலப்படுத்தும் போக்கு குறிப்பிடதக்கது அலுவலகத்தை நாமே சில நேரத்தில் ஆங்கிலத்தில் office என்றுதான் குறிப்பிட வேண்டியது உள்ளது நிலைமை இன்னும் மாறவில்லை என எண்ணிட வேண்டியுள்ளது.

இல்லங்களில் வழங்கிவரும் ஆங்கிலச் சொற்கள் அளவற்றன. காலை முதல் இரவுவரை மொழியோடு உறவாடும் மக்கள் தம் கருத்துகளைப் பிறர் புரிந்துகொண்டால் போதுமென்ற நிலையில் மொழிச் சிந்தனைக்கு உரிய இடமளிக்காது விடுகின்றனர். இதன் விளைவாக இல்லங்களிலும் அன்றாட வழக்கில் ஆங்கிலம் அரசோச்சுகின்றது.
ஆங்கிலச் சொற்களையும், பிறமொழிச் சொற்களையும் பயன் படுத்துவதில், கற்றார்க்கும், பாமரர்க்கும் வேறுபாடுண்டு. கற்றோர் பயன்படுத்தும்போது, தாய்மொழியில் அச்சொற்களுக்கு இணையான சொற்கள் இருப்பதை அறிந்தும், பிற மொழிச்சொற்களையே பயன்படுத்துவர். ஆனால் பாமரர்கள் தாய்மொழியில் மிகுந்த அறிவுடையவர்கள் அல்லர். மொழியைப் பற்றியும், அதன் பயன்பாட்டைப் பற்றியும் போதிய தெளிவற்றவர்கள். ஒருவன் தப்பித்தான், ஓடிவிட்டான் என்பதை, ‘ஜகா வாங்கினான்’ என்று கூறினாலே போதுமென்று எண்ணுபவர்கள். இவர்கள் வாழ்வில் மொழிச்செம்மைக்கு இடமில்லை. இதனால் பிறமொழிச் சொற்கள் இவர்களிடம் பெருமளவில் புழங்கத் தலைப்பட்டன என்றால், நகர மக்களின் தவறான சொற் புணர்ப்புச் செயன்மைகளே காரணம்.தமிழில் அன்றாட வழக்கில் கலக்கும் ஆங்கிலச் சொற்களில் தொழில் நுட்பச் சொற்களும், வாணிகச் சொற்களும் மிகுந்த அளவில் இடம்பெறுகின்றன. ஆங்கிலத் தொழில் நுட்பங்களின் வரவாலும், வாணிகப் பொருள்களின் வரவாலும் இந்நிலை தோன்றுகிறது. கம் யூட்டர் என்னும் கணினி வரவாலும் இணைப்பாலும் குறைந்தது நூறு ஆங்கிலச் சொற்கள் நிலைபெறும். இக்காரணங்களையும் கடந்து தமிழ்ச்சொற்களை வாழ்விக்க வேண்டும். அதுவே மொழி உரிமை என்கிறார் மு.வ.

மென்மை குறைந்த ஆடையாக இருந்தாலும் நம் நாட்டு ஆடையை உடுத்துவதே நாட்டுப்பற்று என்று அன்று உணர்ந்தோம். அதுபோலவே ஆங்கிலம் போல் திறம்பட எழுத முடியாவிட்டாலும், தமிழில் நடத்துவதே உரிமை யுணர்ச்சிக்கு அடையாளம் என்று உணர வேண்டும் எனக் குறிப்பிடு கின்றார்.ஆங்கிலச் சொற்களின் பட்டியல், ஆங்கிலம் செல்வாக்கால் ஊடுருவிக் கொண்டிருப்பதை மெய்ப்பிக்கிறது எனினும், நமக்குரிய மொழிச் சிந்தனை சீரமைக்கப்பட வேண்டும் என்பதையும் உய்த்துணர வழிகாட்டுகிறது.இன்றைய நிலையில், தமிழர் பிற மொழிகளைப் பழித்துப் பேசியும் வெறுத்துப் பேசியும் ஆறுதல் அடைவதில் பயனில்லை. பிறரை வெறுப்பதில் உள்ள ஆர்வத்தில் ஒரு பாதியாவது நம்மவரை விரும்புவதில் உள்ளதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பிறமொழியைப் பழிப்பதில் உள்ள ஊக்கத்தில் கால்பங்காவது தம்மொழியைப் போற்றுவதில் உள்ளதா என்று கவனித்துக்கொள்ள வேண்டும்.கடைத்தெரு முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழர்க்குத் தமிழ் மொழியில் பற்று உள்ளது என்பதற்குச் சான்றுகள் வேண்டும். “நான்கு பேர் கூடினால் தமிழ் பேசக் கூசுவது, தமிழில் கடிதம் எழுத நாணுவது தமிழைப் போதனை மொழியாகக் கொள்ளத் தயங்குவது ஆகிய இவற்றையே இன்று தமிழகம் காண்கிறது” என மு.வ. மொழியும் கருத்துகளின் வழி நமது மொழிச் சிந்தனையைச் செம்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாமிருக்கிறோம் என்பதை மறுக்க இயலாது; மறக்கவும் இயலாது.

மொழிக்கலப்பு, மொழித்துய்மை பற்றி நாவலர் ச. சோமசுந்தரப் பாரதியார் கூறியுள்ள கருத்துகளும் நமது மொழிச் சிந்தனைக்குப் புதிய வழித்தடம் அமைப்பனவாக உள்ளன. வழுமலிந்து முடிவு ஒவ்வாக் கீழ்மக்கள் கொச்சைக் குழறலை மொழிநலம் விரும்புவோர் நல்ல தமிழெனக் கொள்ள இசையார். மாரிக்காலத்து நீரில் கத்தும் தவளை போலச் சந்தையில் தெருவில் மக்கள் பேசும் சழக்குரை எல்லாம் தமிழெனக் கொண்டால், அழகிய எழுத்தும், ஐந்து இலக்கணமும் நிரம்பிப் பழுத்த செந்தமிழ் பாழாய்ப் போய்விடும். பல பத்திரிகை வித்தகர்கள், செலாவணி செய்யும் புதிய மொழிநடை கால்முடமும், உடல் நோயும் காட்டுகிறது. அது போதாமல் இலக்கணத்தை எரித்துவிட்டு ஊரார் பேசுகிறபடி எழுது வதே நல்ல தமிழ் என்று சிலர் கூசாமல் கூறவும் கேட்கிறோம். இவர்கள், ‘யார் பேசுகிறபடி எழுதவேண்டும் என விளக்குகிறார்கள் இல்லை. ஊர்தோறும் பேச்சு வேறுபடுகிறதே. ஓர் ஊரிலும் வகுப்புவாரியாக, தொழில்வாரியாக, இனவாரியாக உருவழிந்து, பல்வகை மொழிகள் உலாவுகின்றனவே ஒலி உருவும், வரி வடிவும் அற வேறுபட்ட எழுத்து களின் இயைபும், பயனும் அறியாமல் எல்லாம் குழம்பிக் கதம்ப நடை தொடுப்பதைக் காணுகிறோம். வல்லின ற கரத்தையும் சிறப்பு ‘ழ’ கரத்தையும் நாடாமல் நாடு அகற்றி, ‘ர கர ‘ள கரங்கட்கே ஊராண்மை தருபவர் பலர் ஆவர். ‘நாகரிக உலகில் எந்த மொழி யிலும் வழுமலியப் பேசும் வகுப்பார் உண்டு. ஆனால் அவர் பேச்சு எதுவும் எழுத்தாளர் கொள்ளமாட்டார். ‘வலைச்சியர் புலை மொழி’ (BILLINGS GATE) போன்ற கொச்சைமொழிகளை மேல்நாட்டார் இகழ்ந்து விலக்குவதை யாவரும் அறிவர். அம்மொழிமரபு அறிந்தோ அறியாமலோ கேட்போர் கேட்பதைக் கேட்டபடி கொள்வதே தமிழ் வளர்ப்பதாகும் எனத் துணியும் தமிழ்ப்புலமையை வியப்பதா நகைப்பதா என்பதைத் தமிழர்களே தேர்ந்து தெளியட்டும்.

ஆங்கிலம் முதலிய கலைச்செல்வம் நிறைந்த புதிய உயர் மொழியிலுள்ள வளங்களையும் எழில்களையும் தமிழ்மகள் அடைந்து, புதிய பெருவாழ்வு பெற்று முன்னிலும் சிறந்தோங்கச் செய்வது நம் கடன். எனினும் அவ்வளங்களும் எழில்களும் நிரம்பத் ததும்பும் ஆங்கிலத்தைக்கூடக் கட்டாயப் பாடமாக வைத்திருப்பது தவறு.இவ்வியலில் ஆங்கிலச்சொற்களின் பட்டியலிலிருந்து நாம் பின்வரும் கருத்துகளைப் பெறலாம்.Ø ஆங்கிலச் சொற்கள், கல்வி, வாணிகம், தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கால்கோளாகக் கொண்டு தமிழில் கலக்கின்றன.Ø சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும், மக்கள் வழக்கில் ஆங்கிலச் சொற்களே நிலவி வருகின்றன. (எ.டு. கல்லூரி – College, பேருந்து – Bus, நிறுத்தம் – Stop.Ø ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்படாமையால், அவ்வாங்கிலச் சொற்கள் வழக்கில் நீண்ட காலம் வழங்கப்பட்டு வருகின்றன. Umpire, Elastic, Enamel, Wire.Ø சில ஆங்கிலச் சொற்களுக்கு உருவாக்கப்படும் தமிழ்ச்சொற்கள் வழக்கில் வருவதற்குக் கடினமாக இருப்பதாலும், அவ்வாறு வழக்கில் வருவதற்கு நீண்ட காலமாவதாலும் ஆங்கிலச் சொற்களே நீடித்து வருகின்றன. (எ.டு. Inchtape – விரற்கிடைவார், Agency – முகவாண்மை, Ice – பனிகம், Ice cream – பனிப்பாகு)இவ்வியலின் முடிப்பாகச் சில கருத்துகளைத் தெள்ளிதின் உணரலாம்.Ø ஆங்கில மொழிக்கலப்பு என்பது, ஆங்கில மொழியின் செல்வாக்கால் மட்டுமன்றித் தமிழ் மக்களின் ஆங்கில மோகத்தாலும் நிகழ்கிறது.Ø தமிழகக் கல்வி முறையில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பேரிடம், தமிழ்வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது.Ø பிறமொழி எதிர்ப்பால் மட்டுமே தமிழின் வளர்ச்சி நிகழ்ந்து விடாது, பிறமொழியை எதிர்க்கும் நிலைகளிலும் களங்களிலும் தமிழை நிலைப்படுத்தி, வழக்கில் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.Ø அறிவியல், தொழில் நுட்பங்கள் ஆங்கிலத்தின் வழியே நம் மொழிக்கு வரும்போது, அவற்றைத் தமிழ்ப்படுத்தி அறிமுகப் படுத்தவும், ஆளவும் முயல வேண்டும்.Ø புதிய கலைச் சொல்லாக்கங்களும், மக்கள் சுணக்கமின்றி ஏற்கத் தக்க மொழிபெயர்ப்புகளும் பிறமொழிக் கலப்பைத் தடுக்க உதவி செய்வன. இம்முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.Ø மொழிக் கலப்பைத் தடுக்கத் தமிழில் தொன்மையில் வழங்கப்பட்டு, இன்று வழக்கிழந்து போயிருக்கும் அரிய சொற்களை மீண்டும் வழங்கத் தலைப்படல் வேண்டும்.Ø உலக அறிவியல், பொருளாதார, வாணிக முன்னேற்றத்தில் நாமும் கலந்து பயன்பெறத் தக்க வகையில் தனித் தன்மையை இழக்காத பிறமொழியைப் பயன்கருதி மட்டும் ஏற்கும் நிலைக்கு நமது மொழிச் சிந்தனை செம்மை படுத்தப்படவேண்டும்.

unread,11 Aug 2020, 23:15:39to மின்தமிழ்20. வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு

  • முனைவர் ஔவை ந.அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,தமிழ்நாடு=================================================
    இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது பல சொற்களைக் கடன் வாங்கிக் கொள்ளும். பின்னது ஒரு சில சொற்களையே கடன் வாங்கும். வடமொழியில் தமிழ்ச் சொற்கள் ஒரு சில மட்டும் இருத்தற்கும், தமிழில் வட சொற்கள் பல புகுந்தமைக்கும் காரணம் இதுவே.
  • இவ்வாறு படிப்படியாக நிகழும் மொழிக்கலப்பு, எழுத்து மொழியில் இடம்பெற நீண்ட காலமாகும். பேச்சு மொழியிலோ விரைவில் இடம் பற்றி வழக்கில் இருக்கும்.இவ்வாறு பேச்சுமொழி வழக்கில் இருக்கும்போதே, தாய்மொழியில் தோன்றிய சொல்லாக்கத்தின் எதிர்ப்பால் பிறமொழிகள் மறைந்தும் போகும்.‘ஜனம்’ – மக்கள், ‘ராஜா’ – அரசன், ‘அபேட்சகர்’ – வேட்பாளர், ‘ஓட்டு’ – வாக்கு, ‘ஓட்டர்’ – வாக்காளர், ‘விருக்ஷம்’ – மரம், ‘கேசம்’ – முடி.மேற்குறிப்பிட்ட சொற்களில் வடமொழிச் சொற்கள், பழைய தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்படுத்தியதாலும், புதிய சொல்லாக்கங்களாலும் வழக்கொழிந்து விட்டதை அறியலாம்.மொழிக்கலப்பு நிகழும் போது மக்களின் நம்பிக்கையின் வழியாகச் சென்று கலக்கும் பிற மொழிச் சொற்கள் நீண்ட காலம் உயிர்வாழ நேரிடுகிறது. இதே போன்று வாணிக வழியில், அறிவியல் வழியில் நுழையும் சொற்களையும் அகற்றுவது ஒரு மொழிக்குக் கடினமாகும். மொழிக் கலப்பு நிகழ்ந்த தமிழ் மொழியிலும், இவ்வாறே எழுத்து வழக்கிலும், பேச்சு வழக்கிலும் பிற மொழிச் சொற்கள் கலக்க நேர்ந்துள்ளது.இவை எழுத்து வழக்கில் குறைவாக இருப்பினும், பேச்சு வழக்கில் இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்பட்டு வரும் பிறமொழிச் சொற்களை இவ்வியலில் ஆய்ந்தறியலாம்.

  • வடமொழி வழக்கு
  • —————————
    வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் செய்திகள் பலவற்றையும் தத்தம் தாய்மொழிகளில் எழுதிய சான்றோர்கள், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகவும், விரிவாகவும் குறிப்பிட வேண்டிய செய்திகள். இந்திய எல்லையில் அனைவருக்கும் பயன்படல் வேண்டுமென்ற கருத்தால் அவற்றை வடமொழியில் வரைந்தனர்.மேலும் வானியல், சிற்பம் போன்றவற்றின் கலைச்சொற்கள் பலவும் வடமொழியிலேயே கொள்ளப்பட்டுத் தத்தம் மொழிகளுக்கு ஏற்பச் சில திரிபுகளுடன், இந்திய நாட்டில் பன்மொழி பேசும் பல்வேறு பகுதியினரின் தாய்மொழிகளிலும் ஏற்கப்பட்டன. இம்முறையில் வடமொழிச் சொற்கள் பல அப்படியேயும், சிறிது திரிந்தும், தமிழிலும் வழங்கப்பட்டன. இன்று வழங்கும் விண்மீன்களின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும், வடமொழியிலிருந்து தமிழொலிக்கேற்பச் சிறிது திரித்தும், திரிக்காமலும் கொள்ளப்பட்டன.

இற்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத் திகழும் தொல்காப்பி யத்திலும், மாதப் பெயர்களும் விண்மீன்பெயர்களும் ஏற்கப்பட்டன என்று கருதுவாரும் உளர்.சொல்லமைப்பிலும், சொற்றொடர் அமைவிலும் வடமொழியைப் பின்பற்றிய முறைகளும் உண்டென்றும் சிலர் எழுதினர். இவ்வாறு தொன்று தொட்டே வடமொழி தமிழின் மீது வல்லாண்மை செலுத்திக் கலப்பு நிகழ்த்தும் மொழியாக இருந்து வந்துள்ளது.கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றிருந்த போதிலும், வடமொழியின் வரவுக்கு வழிவகுத்தனர்.

வட மொழியின் வழியாகப் புகுத்தப்பட்ட சமயம், சோதிடம் போன்ற நம்பிக்கைகள் மன்னர்களுக்கு மகிழ்வூட்டும் கலைகளாக இருந்தன. இத்துறைகளில் வல்ல பல வடமொழியாளர்களைத் தமிழ் மன்னர்கள் காத்து, அவர்கள் மொழி தமிழகத்தில் பரவிடவும் வழி வகுத்தனர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் நிகழ்ந்த தமிழ்க் காப்புப் போராட்டம் வடமொழிக்கலப்பைத் தடுக்க முயன்றது. இருப்பினும் மணிப்பிரவாள உருவில் வடமொழிக் கலப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது.

இந்நூற்றாண்டில் தோன்றிய திராவிட இயக்கம், தமிழ்மொழி, இனம், பண்பாடு, கலை ஆகியவை பிறமொழித் தாக்குதலிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனப் பொங்கி எழுந்தது’.இதன் விளைவாக மேலும் பிறமொழிக் கலப்பு நிலை தடுக்கப்பட்டது. இருப்பினும், அன்றாட வழக்கில் கலந்துவிட்ட வடமொழிச் சொற்கள் கடவுள் நம்பிக்கை வழிவந்தவையாகவும், சோதிடக்கலை வழிவந்தனவாகவும் இருந்தமையால், அவற்றை எளிதில் நீக்க இயலாத நிலை உள்ளது.இவற்றை நல்லன எனக்கருதி மக்கள் ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக உள்ளது. மக்கள் ஏற்றுக் கொண்டமைக்கான காரணத்தைப் பேராசிரியர் இரா. இராகவையங்கார் ‘தமிழ்மொழியுள் ஆரியச் சொற்கள் நேரேயும் திரிந்தும் சிதைந்தும் மற்றைத் திசைச் சொற்களினும் மிகுதியாக வழங்கியதற்குக் காரணங்கள் அடுத்துப் பயின்ற திசைத் தொடர்பு மட்டுமல்லாது, அறிவு ஒற்றுமையும், மனக்கோட்பாட்டிற்குப் பெரிதும் ஏற்றது பற்றியும், எம்மொழியிலும் அதன் கண்ணுள்ள நல்லனவற்றையும் கொள்ளும் சிறந்த பெருநோக்கமும் ஆகுமென்று துணிவது தகும்’ எனக் குறிப்பிடுவதைக் கருத்தில் கொள்ளலாம்.
கடவுள், கோயில் தொடர்பாக இன்றும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் வடமொழிச் சொற்களைக் காண்போம்.
‘பிரகாரம்’, ‘பார்வதி’, ‘பூஜை’, ‘தீபாராதனை’, ‘புனஸ்காரம்’, ‘அங்கப் பிரதட்சணம்’, ‘புஷ்பம்’, ‘எதேஷ்டம்’, ‘உற்சவம்’, ‘மூலவர்’, ‘பிரபை’, ‘ஞானம்’, ‘நைவேத்தியம்’, ‘பிரசாதம்’, ‘ஈசுவரன்’, ‘பிரதிஷ்டை’, ‘பிரம்மா’, ‘பஞ்சலோகம்’, ‘விஷ்ணு’, ‘விக்ரகம்’, ‘லக்ஷ்மி’, ‘ஆத்மா’, ‘சரஸ்வதி’, ‘விபூதி’, ‘குங்குமம்’, ‘திதி’, ‘கலசம்’, ‘மகோத்ஸவம்’, ‘பஞ்சாமிர்தம்’, ‘கும்பாபிஷேகம்’, ‘சுபம்’, ‘விரதம்’, ‘கும்பம்’, ‘நவக்கிரகம்’, ‘பிரதிமை’, ‘சனீஸ்வரன்’, ‘சாஷ்டாங்கம்’, ‘தீர்த்தம்’, ‘நவலோகம்’, ‘ஜலம்’, ‘அலங்காரம்’, ‘அஷ்டம்’, ‘அர்த்தஜாம பூஜை’, ‘தூபம்’, ‘அந்திம பூஜை’, ‘தூப தீபம்’, ‘தீட்சிதர்’, ‘அர்ச்சகர்’, ‘பாகவதர்’, ‘அர்ச்சனை’, ‘தேவன்’, ‘அஷ்டமி’, ‘நவமி’ என மிகப்பல வடமொழிச் சொற்கள் இன்றும் அன்றாட வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன.இவை மக்களின் இறை நம்பிக்கையைக் கால்கோளாகக் கொண்டு புகுத்தப்பட்டமையால், இன்னும் நீங்கா நிலையில் உள்ளன. சோதிடம் என்பது காலக்கணக்காகக் கருதப்பட்டாலும், இதனால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் மிகப்பலவாகும்.‘ஜோசியம்’, ‘கிரகப்பிரவேசம்’, ‘ராகு’, ‘புத்தி’, ‘ஓரை’, ‘சகுனம்’, ‘சுக்கிரன்’, ‘அமாவாசை’, ‘கிருத்திகை’, ‘ஜென்மநட்சத்திரம்’, ‘பூராடம்’, ‘விருச்சிகம்’, ‘யோகம்’, ‘அபிஷேகம்’, ‘கஷ்டகாலம்’, ‘நட்சத்திரம்’, ‘திசை’, ‘லக்னம்’, ‘நிமித்தம்’, ‘திவசம்’, ‘பாட்டிமை’, ‘பஞ்சாங்கம்’, ‘போகம்’, ‘மகம்’, ‘தனுசு’, ‘சித்தம்’, ‘துலாம்’, ‘பஞ்சமிதிதி’, ‘ஜாதகம்’, ‘கிரகணம்’, ‘கேது’, ‘பலன்’, ‘விவாஹம்’, ‘ராசி’, ‘கேட்டை’, ‘அனுகூலம்’, ‘ஆயில்யம்’, ‘உத்திராடம்’, ‘மீனம்’, ‘துவாதசி’ இவ்வாறு சோதிடத் துறையால் புகுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள் பலவாகும்.இவையனைத்தும் மக்களின் சோதிட ஆர்வத்தைக் கால்கோளாகக் கொண்டு தமிழில் நுழைந்தவை.திருமணத் தொடர்பாக வடசொற்கள் வருமாறு:-‘கரணம்’, ‘சேவித்தல்’, ‘கங்கணம்’, ‘ஓமம்’, ‘அட்சதை’, ‘அருந்ததி’, ‘ஜானவாசம்’, ‘ஆசீர்வாதம்’, ‘மாங்கல்யம்’, ‘பிரகாரம்’, ‘விவாக சுபமுகூர்த்தம்’.தமிழ் ஆண்டுகள் என்று பெருவழக்காகச் சொல்லப்படும் அறுபது ஆண்டுகளும், ஆண்டில் பன்னிரு மாதங்களும் வடமொழிச் சொற்களே. கிழமைகளாக வழங்கப்படுபவற்றுள்ளும் பெரும்பான்மையின வடமொழிச் சொற்களே.
அன்றாட வாழ்வில் இவற்றை வழங்காமல் நீக்குவது எளிதானதல்ல. நம்பிக்கை வழியாக மட்டுமின்றி, வடமொழியாளர் தொடர்பால் புகுந்த ஏராளமான சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன.நகர்ப்புறங்களில் ஆங்கிலக் கலப்பு இருந்து வருவதால், வடமொழிக் கலப்புக் குறைகிறது. ஆங்கிலத்தின் வரவால் வடமொழி மறைவதில் தமிழுக்குப் பயன் விளையாது.பிறமொழிகள் இரண்டும் கலப்பு நிகழ்த்தும் நிலையில்தான் தமிழின் அன்றாட வழக்கு இயங்கி வருகிறது என்பதைக் கருத வேண்டும்.‘அக்ரகாரம்’, ‘அகடவிகடம்’, ‘அகந்தை’, ‘அகிம்ஸை’, ‘அங்கஹீனம்’, ‘அங்கீகாரம்’, ‘அசந்தர்ப்பம்’, ‘அசாதாரணம்’, ‘அசுரன்’, ‘அசெளக்கியம்’, ‘அட்டகாசம்’, ‘அத்தியாவசியம்’, ‘அதிசயம்’, ‘அதிபர்’, ‘அதோகதி’, ‘அந்திமம்’, ‘நாமம்’, ‘அநியாயம்’, ‘அப்பிராணி’, ‘அபத்தம்’, ‘அபிப்பிராயம்’, ‘அம்சம்’, ‘அமங்கலம்’, ‘அயோக்கியன்’, ‘அரிதாரம்’, ‘அவகாசம்’, ‘அவதாரம்’, ‘அவஸ்தை’, ‘அக்ரமம்’, ‘அகதி’, ‘அகஸ்மாத்து’, ‘அகிலம்’, ‘சேஷ்டை’, ‘அசடு’, ‘அனந்தகோடி’, ‘அசிங்கம்’, ‘அசுத்தம்’, ‘நமஸ்காரம்’, ‘அத்தாட்சி’, ‘தர்மம்’, ‘அதிபதி’, ‘அதிர்ஷ்டம்’, ‘அந்தரங்கம்’, ‘அந்நியன்’, ‘அநாமதேயன்’, ‘அநீதி’, ‘அபகரித்தல்’, ‘அபயம்’, ‘அபாண்டம்’, ‘அபிவிருத்தி’, ‘அம்பிகை’, ‘அமிர்தம்’, ‘அர்த்தபுஷ்டி’, ‘அலங்காரம்’, ‘அவசரம்’, ‘அவதானம்’, ‘அக்கினி’, ‘அக்கினிப் பிரவேசம்’, ‘அகாலம்’, ‘அகோரம்’, ‘வஸ்திரம்’, ‘சந்தர்ப்பம்’, ‘அசம்பாவிதம்’, ‘அஜீரணம்’, ‘செளக்கியம்’, ‘அட்சதை’, ‘அத்தியாயம்’, ‘அதர்மம்’, ‘சதிபதி’, ‘அதிருப்தி’, ‘அந்தஸ்து’, ‘அநாதை’, ‘அபிஷ்டு’, ‘அப்பாவி’, ‘அபசாரம்’, ‘அபராதம்’, ‘அபாயம்’, ‘அபூர்வம்’, ‘அம்புஜம்’, ‘அமோகம்’, ‘அர்த்தம்’, ‘அலட்சியம்’, ‘அவசியம்’, ‘அவலட்சணம்’ எனப்பல வடமொழிச் சொற்கள் அன்றாட வழக்கில் மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப வருதலை அறியலாம்.எனவே, தமிழில் கலந்த பிறமொழிச் சொற்களில் வடமொழியே முதன்முதலில் மிகுதியான சொற்களைக் கலந்தது . வடமொழியோடு நெருங்கிய தொடர்புடையன பிராகிருத மொழிகளாகும். தமிழும்,பிராகிருதமும் என்ற கட்டுரையில் ‘அக்கி’, ‘அத்தம்’, ‘இசை’, ‘உவச்சன்’, ‘ஊராண்மை’, ‘ஐயர்’, ‘ஓமாலிகை’, ‘கப்பம்’, ‘கண்ணன்’, ‘கலுழன்’, ‘காமம்’, ‘கோட்டி’, ‘சதுக்கம்’, ‘சிட்டன்’, ‘சுண்ணம்’, ‘தக்கினம்’, ‘தம்பலம்’, ‘தயிர்’, ‘தலைவர்’, ‘தானம்’, ‘திட்டி’, ‘துவை’, ‘தூசு’, ‘தொடி’, ‘நேயம்’, ‘படிமை’, ‘பள்ளி’, ‘பளிங்கு’, ‘பாயிரம்’, ‘பிசைமட்டம்’, ‘மயானம்’, ‘முத்து’, ‘மையம்’, ‘வயிரம்’, ‘விஞ்சை’ முதலிய சொற்களைப் பேராசிரியர் வையாபுரியார் பிராகிருதம் எனப் பட்டியலிட்டுள்ளார். வைதிக சமயத்தால் வடசொற்களும், சமண சமயத்தால் பிராகிருதச் சொற்களும், பெளத்த சமயத்தால் பாலி மொழிச் சொற்களும் பல கலந்தன என்றும் கூறினார்.

  1. தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு
    சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி சிவம் அவர்களுடைய “மிக அருமையான, ஆழமான, சிந்திக்கத் தூண்டும் கட்டுரை அருள்.” என்னும் பாராட்டுரை குறிப்பிடத்தக்கது. அவ்வண்ணமே மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடுகின்ற தனியிதழான ‘திசையெட்டும்’ ஆசிரியர் பெருந்தகை திரு. குறிஞ்சிவேலன் அவர்களின் “இத்தனை சொற்களும் பிறமொழிகளிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளோம் அல்லது பயன்படுத்துகிறோம் என்று தமிழறிஞர்கள் சொன்னதை முனைவர் அருள் பட்டியலிட்டுள்ளார். இவற்றை விடுவிப்பதோ பயன்படுத்துவதோ என்பதை முடிவு செய்வது மக்களின் பேச்சிலும் எழுத்திலும்தான் உள்ளது. அவ்வளவு ஏன் படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மாலேயே இவற்றை விடுவிக்க முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்…” என்ற குறிப்புரை சிந்திக்கத் தூண்டுகிறது.

தெலுங்கு மொழிச்சொற்கள் வந்த வரலாறு:தமிழ் தெலுங்குத் தொடர்பு, சங்க காலத்திலிருந்தே பழைமையானது. சங்க இலக்கியங்களில் திருப்பதிக் குன்றுகளை ஆண்ட சிற்றரசர்கள் தொடர்பான குறிப்புகள் வருகின்றன. பிற்காலச் சோழப் பேரரசர்கள் வெளியுறவுக் கொள்கையின் நிமித்தமாகத் தெலுங்கு மொழிபேசும் வேங்கியர்களுடன் திருமண உறவு கொண்டனர். தெலுங்குக் காப்பியப் புலவர்களில் முதல்வரான நன்னயப்பட்டரை ஆதரித்த மன்னர் இராசராசேந்திரன் முதலாம் இராசேந்திரனின் மருமகனாவார். பின்னர் இவர் குடும்பத்தில் தோன்றிய முதலாம் குலோத்துங்கன் பதினோராம் நூற்றாண்டில் சோழப் பேரரசனாகின்றான்.
இம்மன்னர்கள் அளித்த வாய்ப்பால் தெலுங்குச் சொற்கள் தமிழிற் கலந்தன. ‘அக்கடா’ முதலிய தெலுங்குச் சொற்கள் கம்பராமாயணத்தில் வருவதாகக் கூறுவர். தெலுங்கு மொழியில் வழங்கிய ஆபரணங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள், வேலைக்குப் பயன்படும் கருவிகள், சாதிப்பெயர்கள் ஆகியவை தொடர்பான சொற்கள் இவற்றின் தொடர்பால் தமிழில் கலக்கத் தொடங்கின.
‘இரளி’, ‘உப்புசம்’, ‘சளிப்பு’, ‘கலிங்கம்’, ‘கண்டி’, ‘கத்திரி’, ‘கடப்பாரை’, ‘ராயசம்’, ‘தரகரி, ‘சேந்திரவர்’, ‘கம்பத்துக்காரர்’, ‘குப்பம்’, ‘ரெட்டியார்’, ‘பத்தர்’, ‘கோமட்டி’, ‘ராஜா’, ‘கரிசை’, ‘அளவு’ முதலிய சொற்கள் தெலுங்கிலிருந்து வந்தவை. ‘அந்தரங்க வைபவம்’, ‘அட்டி’, ‘அண்ணு’, ‘இண்டிமாமா’, ‘ரவிக்கை’, ‘ராவடம்’, ‘ரேக்கு’, ‘லஞ்சம்’, ‘லாகிரி’, ‘உத்தி’, ‘உம்மச்சு’, ‘ஒட்டாரம்’, ‘கட்டடம்’, ‘கந்தை’, ‘கண்ணாவி’, ‘கபோதி’, ‘கம்பத்தம்’, ‘கம்பல்’, ‘கலப்படம்’, ‘கவுனி’, ‘காட்டம்’, ‘குப்பு’, ‘கெடுவு’, ‘கொப்பி’ (கும்பி), ‘கொலுசு’, ‘சந்தடி’, ‘சலவை’, ‘ஜயிப்பு’, ‘சிட்டிகை’, ‘சிமிளி’, ‘உருண்டை’, ‘சுங்கு’, ‘தெண்மை’, ‘சதை’, ‘சொக்கா’, ‘சொட்டு’, ‘சவுத்தி’, ‘த்ராபை’, ‘தடவை’, ‘திப்பி’, ‘திமிசு’, ‘தும்பு’, ‘தெப்பல்’ (அடி), ‘தெலுங்கு’, ‘தெட்ட’, ‘தேவாத்தி’ (வேட்டி), ‘நீச்சு’ (மீன்நாற்றம்), ‘பட்டறை’, ‘பண்டைப்பேச்சு’, ‘பலப்பம்’, ‘பவிசு’, ‘வாணலி’, ‘பால்மாறுதல்’, ‘பிருடை’, ‘பூஞ்சைக்காளம்’, ‘போல்’, ‘ஜப்பை’, ‘ஜாஸ்தி’, ‘சந்து’, ‘சுளுவு’ முதலிய சொற்களும் தெலுங்கில் இருந்து வந்தனவென்று கூறுகிறார் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். தெலுங்கு அதிகாரிகள் தம் ஆட்சியின் போது, அங்கெல்லாம் தெலுங்கு மட்டுமே விளங்குமாறு செய்தனர். அவர்கள் தாய்மொழிப் பற்று மிகுந்தவர்கள். தமிழர்கள் கடமையுணர்ச்சி குறைந்தவர்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கிற்று, சித்தூர் மாவட்டத்தில் பெருந்தொகையான மக்கள் தமிழ் பேசுவோராக இருந்தபோதே, மாவட்ட அரசியல் மொழி தெலுங்கு ஆயிற்று என பேராசிரியர் மு.வரதராசனார் குறிப்பிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம். தெலுங்கின் வரவால் தமிழகத்தின் ஊர்ப்பெயர்களிலும் தெலுங்குச் சொற்கள் இடம்பற்றின. பச்சூர், பழையனூர், புதூர், கட்காவூர், பழைய பேட்டை, கோமுட்டியூர், வாலாரிப்பட்டி – என வழங்கப்பட்ட பழைய தமிழ்ப் பெயர்கள் மாற்றம் பெற்றுப் பந்தார பள்ளி, அதனகவுணி, பல்லிகொண்ட, சிந்தனபல்லி, கொத்துரர், ஜயந்திபுரம், பய்யப்ப நாயனுபேட்டெ, நல்ல கதிரணபல்லி எனத் தெலுங்கு மொழியிலே ஊர்ப் பெயர்கள் மாற்றம் பெற்றுத் தமிழர்களால் பொருள் விளங்கிக் கொள்ளாமலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழில் கலந்துள்ள தெலுங்குச் சொற்களைக் காண்போம்.செகண்டி – கோன்மணி, சேட்டை, சேனை, சோலி – கருமம், சொரு – உவர்ப்பு, டக்கு (வார்) – பதிப்படை, டமாரம் – முரசு, டேவணி – முன்பணம், தக்கழ – பொய், ததி – தகுந்த நேரம், தம்பி – தாமரை, தரகரி – தரகன், தறிபடுகு – நெட்டிழை, துண்டரிக்கம் – முகக்களை, துண்டை – துடுக்கன், துருசு – விரைவு, துலாபி – பகட்டுச் செலாவணி, தேலிக்கை – மென்மை, தொம்பரம் – பலருக்குச் சமைத்த ஊன், நவாது – வெண் சர்க்கரை, பவனி – உலாவரல், பிகுவு – இருக்கம், வலிவு பேட்டு – பட்டைக்கரை, சூடு மைதா – கள்மயக்கம், ரெப்பை – இரப்பை, லத்தி – சாணம், வெட்டை லாகிரி – மதுக்களிப்பு, ஜட்டி – மல்லர் அணியும் கவ்வுரி வகையுள் ஒன்று, சேகரம் – கூட்டம், சேதாரம், சோம்பு – பெருஞ்சீரகம், செளக்கம் – பண்டமலிவு, டக்கு – விகு, பிகு, டப்பை – மூங்கிற் பிளாச்சி, டாப்பு – பட்டி, டொங்கு – பொந்து, தபலை – மாழைக்குடம், தனை – ஆசை, தருசு – நெருங்கிய இழை, திப்பை – மேடு, துண்டன் – கொலைஞன், துத்து – பொய், துருதை – தினவு, துப்பிரதண்டி – சொற்படிகேளாள், தொடக்கம் – மிதித்துத் துவைக்கை, தோசிளி – இருவகைத்தவசம், பங்காரு – பொன், மலுவு – எடைக்கனம், பிசினாறி – கருமி, கஞ்சன், பொக்கிஷம் – பொருளறை, ரம்பம் – அரிவாள், லச்சி – குப்பைக்காரி, லம்பாடி – இலம்பாடியினம், திரிநன், வெளித்தி – ஒல்லி, ஜண்டை – இணை, ஜோடி, ஜல்லடை – சலிதட்டு, ஜலுப்பு, ஜாஸ்தி – மிகுதி.

மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு
தமிழும் மலையாளமும் தாயும் மகளும் என்ற தொடர்புடையன. மலையாளத்தைத் தமிழின் உடன்பிறந்த தங்கை என்றே கருதுகிறார்கள் மொழியியலாளர்கள். மலையாள மொழியில் தொடக்க நிலையில் கருத்தறியாத் தமிழ்ச்சொற்கள் பலவும், உருத்திரிந்தன. சிலவும் வழங்கி வந்தன. இன்றும் மலையாள மொழி தமிழர்க்கும், தமிழ்மொழி மலையாளிகட்கும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடியனவாகவே உள்ளன என்பார் அறிஞர் வையாபுரிப் பிள்ளை. நாஞ்சில் நாடு (கன்னியாகுமரி மாவட்டம்) திருவாங்கூர் அரசின் கீழ் நீண்டகாலம் இருந்தமையும் இதற்குக் காரணம் எனலாம். தமிழில் கலந்த மலையாளச் சொற்கள் தமிழாகவே மாறிவிட்டவை என்பதால், அவற்றை வேறுபடுத்தி அறிவது சிக்கலானதாகும் என்றும், ‘சக்கை’, ‘சாயா’, ‘கஞ்சி’, ‘வஞ்சி’, ‘வெள்ளம்’, ‘அவியல்’, ‘கச்சவடம்’, ‘காலன்’, ‘கொச்சி’, ‘சொக்கன்’, ‘குரங்கு’, ‘தளவாய்’, ‘தேநீர்’, ‘நெரியல்’ போன்றவை மலையாளச் சொற்களே என்றும் பேராசிரியர் தெ.பொ.மீ. கருதுகின்றார். திராவிட மொழிகளுள் இடம் பற்றியும் இயல்பு பற்றியும் தமிழுக்கு மிக நெருக்கமாவது மலையாளமாகும். அதில் வடசொற்கள் அளவிறந்து கலந்துள்ளன என்று ஒப்பியலறிஞர் கால்டுவெல் கூறியுள்ள கருத்து, அதன் நூல்வழக்கைச் சார்ந்ததேயன்றி, உலக வழக்கைச் சார்ந்ததன்று.
இன்றும் மலையாளப் பேச்சு வழக்கை நோக்கின், அது பெரிதும் வடசொற் கலப்பற்றதென்பது புலனாம். இற்றைத் தமிழில் வழங்கும் சில வடசொற்களும் ஆங்கிலச்சொற்களுக்கும் நேர் மலையாள மொழியில்தான் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில சொற்களைக் காண்போம்.மைத்துனன் – அணியன், மத்தியானம் – மதியம், உச்சி, வருஷம் – ஆண்டு, கொல்லம் (ஏகர்), ஆரம்பம் – தொடக்கம், உபாத்தியாயர் – வாத்தியார், எழுத்தச்சன், அமாவாசை – காருவா, பூரணை – பவுர்மணி, வெளுத்தாவு, கறுத்தாவு – வெள்ளுவாசோழ, பாண்டி நாடுகளில் வழக்கற்றுப் போன ஒரு சில சொல்வினைகள், சேர நாடாகிய மலையாள நாட்டிலேயே இன்று வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டு:மலையாளம் (ஒருசொல்வினை) இற்றைத்தமிழ் (இருசொல்வினை)கட்குன்னு, கக்குன்னு களவு செய்கிறான்குலெக்குன்னு குலை தள்ளுகிறதுமுருடுன்னு முருடாகின்றதுகுழிக்குன்னு குழிதோண்டுகின்றான்சேரநாட்டுத் தமிழின் சிறந்த சொல்வளம், மலையாளம் மொழியின் வாயிலாகவே இன்று அறியக் கிடக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஆழ்ச்ச – கிழமை, ஆழ்ச்சவட்டம் – வாரம், பகர்க்குக – படியெடுக்க, பையாணி – தசையைக் கொத்திப் பிடுங்கும் ஒருவகைப்பாம்பு, நொண்ணு – உள்வாய், முத்தாழம் (முற்றாலம்) – காலையுண்டி, அத்தாழம் (அற்றாலம்) – இராவுண்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதேபோல், ஆங்கிலச்சொல்லுக்கு நேரான சில தமிழ்ச்சொற்கள் (சேரநாடு) வருமாறு:-பென் – தூவல், பாத்ரூம் – குளமுறி, டிராயர் (மேசை) – வலிப்பு, காம்பவுண்டு – பரம்பு, வேக்கன்சி – ஒழிவு, நோட்டு – குப்பாயம், வெராந்தா – கோலாயி.உச்சி, ஆண்டு, தொடக்கம் முதலிய தென்சொற்கள் தமிழ்நாட்டு வழக்கிலும், மலையாள நாட்டிற்போல அத்துணைப் பெருவழக்காகவும் நாடு முழுமையும் வழங்குகின்றன. இற்றைத் தமிழ்நாட்டில் வழங்கும் சில தென்சொற்கட்டு எதிர்பாற்சொற்கள் இன்று மலையாள நாட்டு வழக்கிலேயே உள்ளன. எடுத்துக்காட்டு,அச்சி(தாய் தமக்கை) – அச்சன்(தந்தை), சிறுக்கி – செறுக்கன்(சிறுக்கன்), தம்பிரான் – தம்பிராட்டி,தொன்றுதொட்டுச் சேரநாட்டில் வழங்கி வரும் மீன் பெயர்கள், திசைச்சொல் முறையில் மலையாளத்தில் வழங்கும் தென் சொற்கள் மாபெருந்தொகையின,எடுத்துக்காட்டாக, கயறு – ஏறு (ஏவல் வினை), கரிச்சல் – குடலை, குறுக்கன் – நரி (குள்ளநரி), கோளாம்பி – படிக்கம், பகரம் – பதில், பதிலாக, மேடி – வாங்கு, வெடிப்பாக்கு – துப்புரவாக்கு, வெளுத்தோடன் – அலக்குரான், வண்ணான், குட்ட – தீவட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம். மலையாளத்தில் வழங்கும் திசைச்சொற்களும் பெரும்பாலன சற்றே பொருள் திரிந்த தமிழ்ச்சொற்களே.எடுத்துக்காட்டுஅதே – ஆம்அடுக்கல் – பக்கம், கிட்ட இடம்என்ற அடுக்கல் – என்னிடம்ஒடுக்கம் – முடிவு, முடிவில்களி – விளையாட்டு, களித்தாடுகுட்டி – பிள்ளைதெற்று – தப்பு, பிழைநேராக்க – செப்பனிடுகசெருமன் – கள்மன், களத்தடிமைசெறு – வயல்வலிய – பெரிய,வளரே – மிகவிடக்கு – கெட்டவிடக்குகுட்டி – கெட்டபிள்ளைகழியும் – முடியும்செய்வான் கழியும் – செய்ய முடியும்கள, களை – விடு,வன்னுகள – வந்துவிடுமதி – போதும் (போதிய அளவு)சில தென்சொற்கள் பழம்பொருளிலேயே இன்றும் மலையாள நாட்டில் வழங்கி வருகின்றன.

எ.டு. கோயிலகம் – அரண்மனைஅம்பலம் – கோயில்பொன்னம்பலம், வெள்ளியம்பலம், சிற்றம்பலம், பேரம்பலம் என்னும் வழக்குகளை நோக்குக.‘வெயில் என் கிளவி மழையியல் நிலையும் என்னும் தொல்காப் பிய நூற்பாப்படி, வெயில் என்னும் நிலைமொழி அத்துச் சாரியை பெற்றுப் புணரும் புணர்ச்சியை, இன்று வெயிலத்துச் சென்று, ‘வெயிலகத்து போகருது’ என மலையாள நாட்டு வழக்கில்தான் காண்கின்றோம்.‘பதிற்றுப்பத்து’ என்னும் புணர்மொழி பெயரோடொத்த முப்பத்திற்றுப்பத்து அம்பதிற்று நாலு முதலிய இற்றுச்சாரியைப் புணர்ச்சித் தொடர்மொழிகளும் இன்று மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன.இவ்வாறு தமிழின் வேர்ச்சொற்களையும், வழக்குச் சொற்களையும் கொண்ட மொழியாக மலையாளம் விளங்குகின்றது. இதன் விளைவாக மலையாள வழக்குச் சொற்கள் தமிழில் கலக்கும் காலத்தில் அவை தமிழெனவே கருதும் நிலை ஏற்பட்டு, அச்சொற்கள் தமிழினின்றும் பிரித்தறிய முடியாதனவாகியுள்ளன.

22. கன்னடம், உருது சொற்கள் வந்த வரலாறு

சென்ற வாரம் வெளிவந்த ‘தெலுங்கு மலையாளம் சொற்கள் வந்த வரலாறு’ கட்டுரையை நூற்றுக்கணக்கான அன்பர்கள் படித்து மகிழ்ந்து பலர் என் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கியபோது, நெடிதுயர்ந்த ஆய்வு மாணவியாக சற்குணவதி அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இலக்கியத்துறை மாணவ மாணவிகளுக்குப் பாடம் நடத்திய விதம் பாங்குற உள்ளளது என்று என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் அவர்களுடைய நூலை, அதே பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் வெளியிடும் வாய்ப்புப் பெற்றேன். பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வித் துறையின் தலைமைப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும், பல்கலைக்கழகம் அவரை விடுவதாக இல்லை. மீளமீள அவருக்கு ஆய்வுப் பணிகளை ஒப்படைத்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களுக்கு படைத் தளபதியாக மிளிர்கிறார். தமிழ்நாட்டில் மலையின மக்களின் வாழ்வு வரலாறு பண்பாடு என்று யார் கேட்டாலும் அத்தலைப்பில் கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறார். முதுமுனைவர் சற்குணவதி அம்மையார் என்னைப் பாராட்டி, ”நீங்கள் குறிப்பிட்டுள்ள வரலாறும் தெலுங்கு, மலையாளம்- தமிழுடன் கலந்துள்ள சொற்களும் படிப்பதற்கே மலைப்பாக உள்ளது நம்மை அறியாமலேயே பயன்படுத்துகிறோம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று கட்டுரை அருமை வாழ்த்துகள்” என்று எழுதிய வரிகள் என்னை மலைக்க வைத்தது. 
கன்னடம்:சங்க இலக்கியங்களில் வரும் ‘வடுகர்’ என்னும் சொல் கன்னடர்களைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது. யாப்பருங்கலக் காரிகை உரை, குணகாங்கேயம் என்கிற கன்னட யாப்பு நூலைக் குறிப்பிடுகிறது. அட்டிகை, இதா, எகத்தாளம் எட்டன், சமாளித்தல், சாடுமாலி, ஒரு சிறை, அரிசி, சொத்து, பட்டாக்கத்தி, பம்பு, மூங்கில், பீக்கலட்டம் முதலிய சொற்கள் கன்னடத்திருந்து வந்தவையே. டாசு மாலி (வீடு பெருக்கி), தண்டால், தப்பிலி, தவுக்கை (மாழைத்தட்டு), திகளர் (தமிழர்) ரகளை, ஜவுளி ஆகிய சொற்களும் தமிழில் கலந்துள்ள கன்னடச் சொற்களே. 

தமிழில் இன்றும் வழக்கில் உள்ள கருமாறி, கருமாறிப் பாய்ச்சல் ஆகிய சொற்கள் பழங்கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த வரலாறு, சுவையும் பயனும் அளிப்பதோடு, கன்னடம் தமிழில் கலந்த முறையையும் தெளிவாக்குகிறது செந்தமிழ்ச் செல்வியில் கூறப்பட்ட அவ்வரலாறு. இந்தச் சான்றுகளினாலே கருமாடம் என்னும் சொல் உண்டென்பதும், அதன் பொருள் மாடிவீடு என்பதும் நன்கு தெரிகின்றன. எனவே, நக்கீரர் தம்முடைய நெடுநல்வாடையில், கருவொடு பெயரிய இல் என்னும் தொடருக்கு அவர் கருதிய சொல் கருமாடம் அல்லது கருமாடி என்பது ஐயமறத் தெரிவாகத் தெரிகிறது. கருமாடம் என்னும் சொல் பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வழக்கொழிந்து விட்டபடியால், மிகப் பிற்காலத்தவரான நச்சினார்கினியர், இச்சொல்லுக்குக் கர்ப்பக் கிரகம் என்ற தவறான பொருத்தமற்ற உரையை எழுதி விட்டார் என்பதும் அறிந்தோம். 
பழந்தமிழகத்தில் வழங்கி வந்த கருமாடம் அல்லது கருமாடி என்னும் சொல் பிற்காலத்தில் மறைந்து விட்டாலும், திராவிட இன மொழியாகிய கன்னடத்தில் இச்சொல் இலக்கிய நூல்களில் இன்றும் நின்று நிலவுகின்றது. கருமாடி என்னும் சொல் தமிழ்நாட்டில் இலக்கிய வழக்கில் மறைந்து போனாலும், இச்சொல் பேச்சு வழக்கில் நெடுங்காலம் வழங்கி வந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் மட்டும் இருந்தபடியால், இச்சொல் சிதைந்து வழங்கிற்று. 
கருமாடி என்பது பேச்சுவழக்கில் கருமாறி என்று திரிந்து விட்டது. சில ஊர்களில் கருமாறியம்மன் என்னும் பெயருள்ள காளி (கொற்றவை) கோயில்கள் உள்ளன. கருமாடியம்மன் என்பதே கருமாறியம்மன் என்று திரிந்து வழங்குகிறது என்பது தெளிவு, பெரிய மாடமாக அதாவது பெரிய கோயிலாக அமைந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அம்மன் என்பது இதன் கருத்து அல்லது கருமாடமாகிய அரண்மனையில் அமைந்த அம்மன் கோயில் என்பது இதன் கருத்தாகும். கருமாடி என்னும் சொல் கருமாறி என்று பிற்காலத்தில் திரிந்து விட்டது என்பதை அறிகிறோம். 

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் குளக்கரையின் மேல் ஒரு கருமாடி உண்டு, அது, மூன்று நிலையுள்ள மாடக்கோயில், அக்கருமாடியில் இப்போது நின்றான், இருந்தான், கிடந்தான் என்னும் பெயருள்ள மூன்று திருமால் திருவுருவங்கள் எழுந்தருளியுள்ளன. முற்காலத்தில் இந்தக் கருமாடியில் மூன்று புத்த உருவங்கள் நின்றான் இருந்தான் கிடந்தான் என்னும் அமைப்பில் இருந்தன என்பதைப் புராணங்களால் அறிகிறோம். இந்தக் கருமாடி பிற்காலத்தில் உருமாறி என்று திரித்து வழங்கப்பட்டது. இடைக்காலத்தில், உற்சவக் காலத்தில் இந்தக் கருமாடியின் மேல் தளத்திலிருந்து குளத்தில் குதிப்பது ஒரு காட்சியாக நடைபெற்றது. அக்காட்சியை மக்கள் திரண்டு வந்து கண்டனர். அதற்குக் கருமாறிப் பாய்ச்சல் என்பது பெயர். கருமாடிப் பாய்ச்சல் என்பதுதான் கருமாறிப் பாய்ச்சல் என்று தவறாக வழங்கப்பட்டது. 
பதினான்கு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்தவரான காளமேகப்புலவர் கருமாறிப் பாய்ச்சலைக் கூறுகிறார் அவர் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்த ஆறு சிறப்புச் செய்திகளை அவர் கூறுகிறார். அவர் கூறிய செய்யுள் இது. “அப்பா குமரகோட்டக் கீரை செவிலிமேட் டுப் பாகற்காய், பருத்திக் குளநீர் – செப்புவா சற் காற்று, கம்பத் தடியில் தவம், கருமா றிப் பாய்ச்சல் யார்க்கும் இனிது.” – (தனிப்பாடல்) 
காளமேகப் புலவர் காலத்தில் காஞ்சிபுரக் குமரகோட்டத்துக் கொல்லையில் விளைந்த கீரையும், செவிலிமேட்டுக் கொல்லையில் விளைந்த பாகற்காயும் சுவையாக இருந்தனவாம். இப்போதும் மண் வளம் குன்றாமல் அவை சுவையாக இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. பருத்திக்குளம் இப்போது பாழடைந்துள்ளது. ஆகையால், அதன் நீர் இனிமையாக இருக்கமுடியாது. செப்புவாசல் என்பது செப்பினால் செய்யப்பட்ட கோபுரவாயில், அங்குச் சென்று தங்கினால் காற்று இனிமையாக வீசுமாம். அந்தச் செப்புவாசல் இப்போது இல்லை. கம்பத்தடியில் தவம் என்பது திருவேகம்பத்தில் உமையம்மையார் தவம் செய்தார் என்பது புராணக்கதை இந்தக் காட்சியை இன்றும் ஏகாம்பர ஈசுவரர் கோயிலில் காணலாம். கருமாறிப் பாய்ச்சல் என்பது, காமாட்சியம்மன் குளக்கரைமேல் உள்ள கருமாடி என்னும் மாடக் கோயிலின் உச்சியிலிருந்து குளத்தில் குதித்துப் பாய்வது, கருமாடிப் பாய்ச்சல் என்பது காளமேகப்புலவர் காலத்தில் கருமாறிப் பாய்ச்சல் என்று வழங்கப்பட்டது. 

கருமாடிப் பாய்ச்சலைக் கருமாறிப் பாய்ச்சல் என்று நாலாயிரத் திவ்யப்பிரபந்த வியாக்கியானமும் கூறுகிறது. கருமாடி என்னும் சொல்வழக்கு கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் மாறுபட்டுக் கருமாறி என்று வழங்கியதை இதனால் அறிகிறோம். 
இவ்வாறு கன்னட மொழியும் தமிழில் கலப்பு நிகழ்த்திய மொழியே என்பதை அறியலாம்.

உருது: தென்னிந்தியாவில் இசுலாமியர் ஆண்டபோது, தெக்காணி உரு அவர்களால் ஓங்கியது. இதன் விளைவாக உருதுச் சொற்கள் மிகப்பலவாகத் தமிழில் கலந்தன. இன்றும் தமிழில் வழக்கிலுள்ள உருதுச் சொற்கள் மிகப் பலவாகும். 181 உருதுச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டுள்ளேன். 
உருது – தமிழ் (சொற்பட்டியல் 181) கந்திரி (இரவலன்), கசர் (கொசுறு), குலாபு (நீர்மலர்), குலாம் (அடிமை), குந்தா (துமுக்கியடி), குரிசி (நாற்காலி), குஜிலி (அந்திக்கடை), சக்ரத்து (இலவசம்), சப்பிராசி (வேலையாள்), சுனாவணி (வேண்டுகோள் படிக்கை), சூத்தி (செருப்பு), செரு (துண்டுநிலம்), செலாவணி (பொருண்மாற்று), சேந்தி (கள்), சேர்பந்து (சாட்டை), சோகாரிகன் (வேட்டைக்காரன்), சோராவரி (கொள்ளை), செளடால் (டப்பாசு), டாணா (காவலிடம்), தகலுப்பு (ஏமாற்றுகை), தண்டை (சொந்தரை), தப்புத் தண்டா (குற்றம்), தமாம் (முழுவதும்), தமுக்கு (வார்ப்பறை), தர்கா (பள்ளிவாயில்), தர்பீத்து (பயிற்சி), தர்மா (ஊதியம்), தர்முஸ்தாஜர் (உட்குத்தகைக்காரன்), தரத்தூது (முயற்சி), தரப்பு (பக்கம்), தராசு (துலாக் கோல்), தரீப்பு (தீர்மானம்), தரோபஸ்து (முழுவதும்), தலாக் (மனைவிக்கு), சிறாயத்து (குச்சி), சுபேதார் (படையதிமான்), சூர்மா (கண்மை), செண்டா (கொடி), சேடை (நீர்க்கட்டு), சேம்பா (சளிநோய்), சோக்கு (பகட்டாரம்), சோட்டா (தடிக்கம்பு), சோல்னா (தொங்குபை), டக்கர் (குழப்பம்), டபேதார், டாபர் (கூட்டுபவன்), தண்டா (சண்டை), தண்டோரா (பறையறிவிப்பு), தபால் (அஞ்சல்), தமாஷ் (வேடிக்கை), தயார் (அணியம்), தர்ணா (மறியற்போராட்டம்), தர்மா (அறமன்றம்), தர்ஜமை (மொழிபெயர்ப்பு).

தரப்தார் (கீழ்ப்பணிஞன்), தரா (வகை), தரி (நன்செய்நிலம்), தரோகா (பொய்), தலப்பு (ஊதியம்), தலாயத்து (ஏவலன்), தலால் (தரகன்), தாலவி (உசாவல்), தவுஜி (ஓய்வூதியம்), தஜ்வீஸ் (தீர்ப்பு), தஸ்தா (24 தாள்கள் கொண்ட தொகுதி), தஸ்தாவேஜூ (உரிமைச் சான்றாவணம்), தஸ்து (தாண்டிய இருப்புத் தொகை), தாக்கலா (கணக்கிற்பதிகை), தலாலி (தரகு), தவுடு (படையெடுப்பு), தனியா (அரைக்கச்சை), தஸ்கத் (கையெழுத்து), தஸ்துர் (வழக்கம்), தாக்கல் (குறிப்பீடு, அறிக்கை), தாக்கீது (உத்தரவு), தாசில்தார் (வட்டாட்சியர்), தாதி (முறையீட்டாளன்), தாபிதா (பட்டாடை), தபேதார் (சாரியன், பின்னடையன்), தமாஷ் (நேர்ப்பகிர்வு), தாயத்து (சுருள்தகடு), தாரிப்பு (மதிப்பு), தாரோகா (ஏவல் தலைவன்), தாலுக்கா (வட்டம்), தாளா (ஒப்பு), திக்குறு (புனமுருங்கை), திண்டேல் (கப்பல் கண்காணி), தில்பசந்து (உயரொட்டுமா), திவான் (அரசிறையதிகாரி), தீன் (மதம்), துனியா (நாடு), துபாஷ் (இருமொழிவல்லான்), மொழியெர்ப்பாளன், தும்பால் (கொடை), துரஸ்து (தூய்மை), தாசில் (வட்டாட்சி), தாத்து (முறையீடு), தாதுபிராது (அறிகுறி), தாபே (பின்பற்றி), தஹசீல் (நிலவரித்தண்டல்), தாம் (விலை), தாமேஷா (ஈவு), தாயி (முறையீட்டாளன்), தாரிக் (நாள்), தாலாப்பு (குளம்), தாவா (வேண்டுகை), தாஜா (புதியது), திகர் (வேறு), திம்மாக்கு (வீண்பெருமை), திவால் (பணகொடி), தினிசு (பொருள்வகை), தீன்தார் (அழிவு), துபாரா (இருமுறை), துராய் (முத்துத்தலையணி), தேக்சா (குடுவி, குடக்கலம்), பிராது (முறையீடு), பீடி (இலைச்சுருட்டு), புகார் (பெருங்கூச்சல், முறையீடு), பில்லை (தலைவல்லை), புதினா (ஈயெச்சக்கீரை), பூரி (மரப்பூதி, பூதி), பேசரி (மூக்கொட்டி), பேட்டி (நேருரை), பேமானி (மானமிலி), பேஷ் (மிகநன்று), பைசா (காசு), போதை (வெறிமயக்கம்), மசூதி (பள்ளிவாயில்), பூந்தி (பொடிக்கோளி), பேக்கு (மடையன்), பேட்டா (படிப்பயணம்), பேடி (விலங்கு), பேஜார் (சோர்வு), பைசல் (தீர்வு), போணி (முதன்மாறு), மகால் (அரண்மனை), மண்டி (பெருவிற்பகம்), மசோதா (சட்டமுதல் முந்தாவணம்), மத்தாப்பு (தீப்பூ), மாகாணம் (மாநிலம்), மார்வாரி (வட்டியீட்டு), மிராசுதார் (முகமையன்), மைசூர்ப்பாகு (கண்டப்பாகு), மைனா (நாகண வாய்ப்புள்), மெளசு (கவர்ச்சி), ரப்பு (இழையோட்டுகை), ரேக்கு (ஒள்ளிதழ், பூவிதழ்), லத்தி (குறுந்தடி), லாடம் (குளம்பணி), லோலாக்கு (தொங்கணி), வசூல் (தொகுத்தல், தண்டல்), வாய்தா (தவணை), விலாவரி (முழுவிளக்கம்), ஜரூர் (விரைவு, கடிது), மல் (பெல்லி), மாஞ்சா (ஆடிப்பொடிப்பயன்), மாஜி (முந்தின), முண்டா (தோள்), மைதா (மைதாமா), மோஸ்தர் (எழிற்பாங்கு), ரகம் (வகை), ராட்டை (இராட்டினம்), ருசு, ருஜூ (மெய்ப்பிப்பு), ரேக்ளா (ஓரியனுர்தி), லாகு (தாங்குதல்), லோட்டா (நீர்ச்செப்பு), வகையறா (முதலியன, பிற), வாபஸ் (திரும்பப்பெறல்), வாரிசு (மரபுரிமையன்), ஜமின்தார் (நிலக்கிழார்), ஜல்தி (விரைவு), ஜிம்கானா (பொதுவிளையாட்டிடம்), ஜிகினா (ஒண்தகடு), ஜீரா (தீங்கூழ்).  

  1. அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு

சென்றவாரக் கட்டுரைக்கு எனக்கு பல நண்பர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி எனக்குக் கூடுதலாக ஊக்கம் வழங்கினார்கள். எந்தையார் ஒளவை நடராசன் அவர்கள் போற்றும் ஆங்கிலப் பேராசிரியர் கும்பகோணம் சங்கரநாராயணன் அவர்கள் என்னை வாழ்த்தியது என்னுடைய வாழ்வின் பெரும்பேறாகும். பேராசிரியர் சங்கரநாராயணன் சைவத் திருமுறைகள், தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், பல சங்க இலக்கியப் பாடல்கள், முழுமையாக ஒற்றை வரியிலேயே திருக்குறள், பாரதியார், பாவேந்தர் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் மட்டுமில்லை, அண்மையில் நீங்கள் யார் எதை எழுதியிருந்தாலும், செழுமையான ஆங்கிலத்தில், மொழியாக்கம் செய்யும் வல்லமை படைத்தவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதாளர், எண்ணற்ற மாணவர்களை உருவாக்கிய பேராசிரியப் பெருந்தகை முனைவர் சங்கர நாராயணனின் பாராட்டு வரிகள் என்னை மேலும் நெகிழ்விக்கிறது. அவர் வாழ்த்திய வரிகள் பின்வருமாறு:- 
“அன்புள்ள அருள். நீங்கள் தினச்செய்தியில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளை நான் அச்செடுத்து வரிக்கு வரி படித்து வருகிறேன். சென்றவாரம் நீங்கள் எழுதிய கட்டுரை நுட்பமான கட்டுரையாகும். மிகவும் பயனுள்ள கட்டுரை. தமிழோடு இரண்டறக் கலந்த வேற்றுமொழிச்சொற்களை முற்றிலும் தவிர்த்து தமிழைத் தூய்மையாக்குவதென்பது இமைப்பொழுதில் நிகழக்கூடியதன்று. காலம் அதனை நிறைவேற்றும். ஆனால், அனைத்துத் தமிழ்ச் சொற்களையும், அதில் கலந்துள்ள வேற்றுமொழிச் சொற்களையும் உள்ளடக்கி, ஒவ்வொரு சொற்களின் தனிச்சிறப்புகளையும் விவரித்து, அச்சொற்களுக்கு வேற்றுமொழியில் வழங்கும் பொருளையும் உள்ளடக்கி பேரகரமுதலி ஒன்றை உருவாக்குவதே காலத்தின் தேவையாகும் (இத்துடன், தமிழ் ஒலிக்குறிப்பு அகராதியையும், சிறப்பு ஒலி வடிவங்களையும் கருதிப் பார்க்கலாம்). இதற்கென பேரகரமுதலி வல்லுநர்களைக் கொண்ட குழுவொன்றையும் நாம் உருவாக்கலாம். ஒரேசொல்லில் இரண்டு வேர்ச்சொற்கள் இடம்பெற்றிருப்பது தமிழுக்கே வாய்த்த தனிச்சிறப்பாகும். மொழிகள் ஒன்றோடொன்று கலக்கும் இயல்பினவாகும். அவ்வாறே முரண்பட்ட பேச்சுவழக்கைக் கையாளும் திறன்பட்டனவாகும்.

அரபு: முகமதியரின் சமய மொழியாக அரபுமொழி திகழ்ந்தது. திருக்குரான் மிளிர்ந்ததும் மலர்ந்ததும் இம்மொழியில்தான் என்பது நாம் அறிந்தது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இசுலாமியப் பெருமக்கள் தமிழில் செய்யுளிலும் உரை நடையிலும் நூல்கள் எழுதி வருகின்றனர். பல அரேபியப் பெயர்களும் சொற்களும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. 

தமிழில் ஏறத்தாழ 61 சொற்கள் தமிழாகவே இப்போது படர்ந்திருப்பதை இச்சொற்களின் வாயிலாக அறியலாம். அல்வா, இலாக்கா, சுபேதார், புகார், சுல்தான், கல்மானா, சுன்னத்து, சேப்பு, சைத்தான், தக்சீர், தகத்து, தகரார், தகவல், தகாதா, தாக்கீது, தசரிப்பு, தணிக்கை, தத்தாரி, தப்சீல், தப்தில், தபளா, தபா, தவாவத்து, தமகு, தவில், தாவாதார், தினார், துனியா, தைக்கா, நக்தி, நகத், நிக்கா, நகல், பக்கிரி, பலானவன், பாக்கி, மக்கர், மகசூல், மராமத்து, மவுஸ், மிட்டாய், முகாம், முரப்பா, முலாம், முனிசீப்பு, முன்ஷி, முஸ்திப்பு, மொபஸில், ரத்து, லங்காடி, லாயம், வக்கீல், வஜா (நிலவரித் தள்ளுபடி), ஜப்தி (கைப்பற்றல்), ஜபர்தஸ்து (வல்லந்தம்), ஜமாய்த்தல் (திறம்பட முடித்தல்), ஜவாப் (விடை, மறுமொழி), ஜப்பா (குப்பாயம்), ஜில்லா (மாவட்டம்), ஜேப்படி (பைப்பறி), ஜேப்பி (சட்டைப்பை). மேலே அடிக்கோடிடப்பட்ட சொற்களை உற்றுப்பார்த்தால் தமிழ்ச்சொற்கள்தான் இவையென்று பட்டிமன்றமே நடத்தலாம். இந்தச்சொற்கள் அரபுச் சொற்கள் என்று சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை. எவ்வளவு ஆழமாக, அகலமாக, நீளமாக அரபுச் சொற்கள் நம்மிடையே படர்ந்து, தொடர்ந்து, வளர்ந்து தமிழ்ச் சொல்லாகவே மாறியிருக்கிறது என்பதைப் பார்த்து மொழியியலாளர்கள் வியந்து நிற்கிறார்கள். 
பாரசீகம்: இந்திச் சொற்கள்
உருதுமொழி வழியாகவும் பாரசீக வழியாகவும் தமிழில் படர்ந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார் பேராசிரியர் திலகம் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். மாலிக்காபூரின் படையெடுப்பு களுக்குப்பின் மதுரையில் நாற்பது ஆண்டுகள் சுல்தானியர் ஆட்சி நடைபெற்றதும் பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்தமைக்குக் காரணமாகும். தமிழில் கலந்துள்ள பாரசீகச் சொற்களைப் பற்றி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெரும் சிந்தனையாளர் இந்திய நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல் மூதறிஞர் இராஜாஜி நிகழ்த்திய ஆய்வு இங்கு எண்ணத்தக்கது. “ஒரு பாஷையில் அந்நிய மொழிகள் வந்து சேருவதற்குப் பல காரணங்கள் உண்டு. அது ஒரு தாழ்வாகாது. மேன்மையுமன்று. இந்துஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய பாஷைகளில் அரபி, பாரசீக மொழிகள் ஏராளமாகக் கலந்திருப்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், தமிழிலுங்கூட அரபு, பாரசீக மொழிகள் இல்லாமலில்லை.

மிராசுதார் உலகத்தில் அடிபடும் சொற்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கிஸ்தி, மகசூல், வசூல், ஜப்தி, ஜாரி, அசல், பாக்கி, ஜாமீன், ரசீது, வக்கீல், தாவா, தாக்கல், ஜமீன், மிராசு, பசலி, மாமுல் இவையெல்லாம் அராபி அல்லது பாரசீகச் சொற்கள்தானெனினும், அராபியே அதிகமாகக் கலந்துள்ளது. இப்படித்தான் வீடுகளில் உரையாடல் நடக்கிறது. 

வசந்தன் ஆபிஸிலிருந்து வந்தான். வந்ததும் தலையிலிருந்து சரிகை உருமாலையை எடுத்து, மெதுவாக மேஜைமேல் வைத்து விட்டுச் சோம்பேறி நாற்காலியில் கால் நீட்டி உட்கார்ந்து மனைவியைக் கூப்பிட்டு காமு நல்ல காபி போடுவாயா? முதல்தரமாக இருக்க வேண்டும். எவ்வளவு ஜல்தியில் முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என்றான். 
காப்பி அராபிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. கூடவே அதன் அராபியப் பெயரும் வந்தது. இது இயற்கை., ஆனால், ஜல்தி என்ற அராபிய மொழி எதற்கு? 

இதைப்பேச்சில் கலப்பதில் தமிழருக்கு ஒரு தனி மகிழ்ச்சி, “சரிகை” பாரசீகச் சொல். “சரி” என்பது தமிழில் சரிகையாயிற்று. உருமலை என்பது பாரசீகம், ‘மாலை’க்கும் ‘உருமாலை’க்கும் சம்பந்தமில்லை. ‘ருமால்’ என்ற பாரசீகச் சொல்லின் திரிபு அது. வடநாட்டில் ‘ருமால்’ என்றால், கைக்குட்டை அதாவது முகம் துடைக்கும் துணி என்று பொருள், தமிழ், தெலுங்கு கன்னட நாடுகளில் கைத்துண்டைத் தலையில் கட்டிய காரணத்தால், ‘உருமால்’ என்பது தலைப்பாகையாயிற்று. 
‘டோபி’ என்றால் இந்துஸ்தானி என்றும், ‘குல்லாய்’ என்பது நல்ல தமிழ் என்றும் சிலர் எண்ணலாம். ஆனால் ‘குல்லா’யும் பாரசீகச் சொல்லே, ‘மேஜை‘ என்பது பாரசீகச் சொல்லேயாகும். ‘முதல்தரமான காப்பி’ என்பதில் ‘தரம்’ என்பது உண்மையில் தமிழன்று. நீங்கள் இப்படி அவசரப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். காப்பி தயாராக வைத்திருக்கிறேன். பேஷ்! அப்படியல்லவோ இருக்கவேண்டும் வாழ்க்கைத் துணைவி! 
பேஷ், சபாஷ், வகையறா போன்ற மகிழ்ச்சிக் குறிப்புகள் பாரசீகத்திலிருந்து தமிழருக்குக் கிடைக்காமலிருந்திருந்தால், பாட்டுக் கச்சேரிகள் தமிழ்நாட்டில் எவ்வாறு இச்சொற்களிலில்லாமல் நடந்திருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வகையறா என்பதற்கும், வகை என்ற தமிழ்ச் சொல்லுக்கும் ஒரு தொடர்புமில்லை. வகையறா என்பது சுத்த பாரசீகச் சொல்லாகும். அதிலுள்ள ககரம் நெஞ்சிலிருந்து வரவேண்டும். கச்சேரியைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. 

தயார் என்பது சுத்த அராபியச் சொல்லாகும். சாப்பாடு தயார். திருமணத்திற்கு எல்லா சமையற் சாமான்களும் தயாராகிவிட்டனவா? அவன் எதற்கும் தயார், என்றெல்லாம் பல வீடுகளில் பேச்சு நடக்கும்போது, அராபியச் சொல் ஒன்று எவ்வளவு நுணுக்கமாக தமிழில் படர்ந்திருக்கிறது என்பதை நோக்குங்கால், சொற்கலப்பின் சிறப்பு தெரிய வருகிறது. 

வசந்தன் நிமிர்ந்து உட்கார்ந்து, பேனாவை நாசூக்காக வாயில் வைத்து, மனைவியைப் பார்த்த வாக்காகக் காப்பியை உறிஞ்சினான். 

‘சுமாராக இருக்கிறதா?’, என்றாள் மனைவி. ‘கொஞ்சம் சர்க்கரை ஜாஸ்தி’ என்றான் வசந்தன். நேற்று இவ்வளவேதான் போட்டேன். கம்மி என்றீர்களே? நேற்று காப்பிப் பொடி ஜாஸ்தியாக இருந்திருக்கலாம். அதனால் சர்க்கரையை எடுத்துக்காட்டவில்லை. சரி இனி எல்லாம் தராசில் நிறுத்துத்தான் நான் சமையல் வேலை செய்ய வேண்டும். குஸ்திக்கு வரவேண்டாம், அம்மே கேட்டதற்குப் பதில் சொன்னேன். 

‘குஸ்தி’ பாரசீகச் சொல் என்பது வெளிப்படை. ஜாஸ்தி, கம்மி, தராசு, நாசூக் எல்லாம் பாரசீகச் சொற்களே. ‘ஜாஸ்தி’ என்பது மொகலாய மராட்டிய ஆட்சியில் நிலத்தீர்வை, ஜமாபந்தி மொழிகளுடன் வந்திருக்கவேண்டும். 
‘ஜ்யாமிதி’ என்பது பாரசீகச் சொல்லின் சுருங்கிய உருவம். ‘சுமார்’ என்ற சாதாரண மொழியும் ஒரு சுத்த பாரசீகச் சொல்லாகும். ‘பதில்’ என்பதும் நல்ல அராபியச் சொல்லாகும், தமிழன்று. பெருமக்களே இதற்கென்ன பதில் சொல்லப் போகிறீர்கள். தோற்றத்திலும் பயன்பாட்டிலும் ‘சுமார்’ என்பது ‘ஏறக்குறைய’ என்பதைத் தோற்கடிக்கிறது. ‘பதில்’ என்பதும் அவ்வாறே ‘விடை’ என்பதைத் தோற்கடிக்கும். 

‘கதர்க்கடையில் புதுத் தினுசு நிறைய வந்திருக்கிறதாம் போய்ப் பார்க்கலாம், நீங்களும் வாருங்கள். அப்படியே கலாய்க்காரனிடம் கொடுத்திருக்கும் பாத்திரச் சாமான்களையும் வாங்கி வரலாம்’ .,‘ஒரு மாதத்தில் எத்தனை தபா கலாய் பூசுவது? மண் பாத்திரமே உபயோகித்தால் என்ன? உடம்புக்கும் கூட அது நல்லது என்கிறார்கள்’. 
‘அப்படியே செய்யலாம், நீங்களும் ஆபீசில் காகிதத்திற்குப் பதில் பனை ஓலையையே உபயோகித்து வரலாம்’. ‘ரகம்’ என்பது அரபி மொழி. மோஸ்தர் என்பதும் அவ்வாறே அன்னியமொழி. 

ஆனால், ‘தினுசு’ என்பது தமிழ் என்று சிலர் எண்ணலாம். இது தவறு. ‘ஜினுசு’ என்றால் ஓர் அராபி வியாபார மொழியின் தமிழ்த் திரிபு. ஜினுசு என்றால் வியாபாரச் சரக்குகள். பட்டு ஜினுசு கம்பளி ஜினுசுகள் தானிய ஜினுசுகள் என்றும், உயர்ந்ததும், தாழ்ந்ததுமாகப் பண்டங்களை வகை வகையாகப் பிரித்து வைத்திருக்கும் முறையில் இம்மொழியின் உபயோகம். அதுவே தினுசு என்றாயிற்று. அதிலிருந்து அவன் பேச்சு ஒரு அலாதி தினுசு, இது புதுத் தினுசு மீசை என்றெல்லாம் விற்பனைக்கு அமைக்கப்படா விஷயங்களைப் பற்றியும் இம்மொழியின் பிரயோகம் நடைபெற்று வருகிறது. 

‘கலாயம்’ என்பது அராபியச் சொல்லாகும். தங்கம், வெள்ளி முதலிய நாகரிகப் பூச்சுக்கு ‘முலாம் பூசுவது’ என்பதும், அராபிய மொழிச் சொல்லாகும். ‘சாமான்’ என்பது பாரசீகச் சொல்லாகும். மகர ஒற்றும் னகர ஒற்றும் மொழியின் ஈற்றில் வந்து, தமிழ் வடிவமாகப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. ‘காகிதம்’ என்பது பாரசீகச் சொல். ‘காகஸ்’ என்பது இந்துஸ்தானியச் சொல் என்பார்கள். 

‘கடுதாசி’ என்றாலும் அந்நிய மொழியிலிருந்து தப்பமாட்டோம். அது அராபியச் சொல்லான ‘கிட்தாஸ்’ என்பதன் திரிபு. 

மலையாளத்தில் அராபி மொழிச்சொற்களின் சேர்க்கை அதிகமானதால், ‘கலதாஸி’ என்பது மலையாளத்தில் அதிகமாகப் புழங்கும் சொல்லாகும். 

“எங்கள் அம்மா கல்சட்டியில் குழம்பு செய்வாள்; அதன் ருசியே அலாதி”. 

“அம்மா எது செய்தாலும் உங்களுக்கு நன்றாகவிருக்கும். நான் கல்சட்டியன்று. பொன்சட்டியில் செய்தாலும்கூட உங்களுக்குப் பிடிக்காது”. மன்னிக்க வேண்டும். நான் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். 
‘வாபஸ்’ என்பது பாரசீகச் சொல், ‘அலாதி’ என்பதும் அராபியச் சொல். இவை எவ்வாறு தமிழில் வந்து சேர்ந்தன என்று அராபி அறிஞர் ஒருவர் மிகவும் வியந்தார். அண்ணன் பங்கும், என் பங்கும் அலாதி என்றெல்லாம் பேச்சில் சாதாரணமாக வருகிறது. 

ஆசாமி பரவாயில்லை. கெட்டிக்காரர்.      இனாமாகக் கொடுத்தாலும் வேண்டாம்.      நீ என்ன அவனுக்குச் சிபாரிசு பேசுகிறாய்.      கடன் வாங்கின ஆசாமிகளில் பாதிப்பேர் பராரி.      இரண்டு மாதத்திற்குள் பைசல். 
இந்தச் செருப்புக்கு யாரும் வாரிசு இல்லை போலிருக்கிறது இத்தகைய செந்தமிழ்ப் பேச்சில், ஆசாமி, பரவா, இனாம், சிபாரிசு, பராரி, பைசல், வாரிசு எல்லாம் அராபி அல்லது பாரசீகம். 

அராபி மொழியை ஏன் பயன்படுத்தக் கூடாது? சமசுகிருதம் மட்டும் உயர்ந்த மொழியோ? 
அப்படி யாரும் சொல்லவில்லை. எந்த மொழியானாலும் சரிதான்; வழக்கத்தில் வந்து, தமிழ் வடிவம் பெற்று அனைவரும் பொருள் அறிந்த வார்த்தையாயிருந்தால், அதைப் பொருந்திய இடத்தில் பயன்படுத்துவதில் யாதொரு பிசகும் இல்லை. வைதிகர்கள் கூட தடைசொல்ல மாட்டார்கள். 

தமிழிற் கலந்த பாரசீகச் சொற்கள்:காக்கி, கிஸ்தி, சுவான்தார் (உரிமையன்), செஞ்சி (போர், போரகம்), சொளதாகிரி (குதிரை வாணிகன்), டகர்பாச்சி (ஏமாற்று), டப்தர் (ஆவணக்கட்டு), டவாலி, (தோட்கச்சை), டாகு (புள்ளி), தக்கியா (இரவலர் இல்லம்), தகா (ஏமாற்று), தீவாணம் (அரசாட்சி), தீவானம் (பித்து), துருஸ்து (பழுதுபார்க்கை), நமூனா (சான்றாவணம்), நாஸ்தா (சிற்றுண்டி), பஜார் (கடைத்தெரு), பிஸ்தா, மஜா, மைதானம், மைதுனம், மோர்சிங்கு, ரசீது, ரஸ்தா, லகான், லங்கடா, லுங்கி, வஸ்தாது, ஜமீன், ஜரிசை, ஜோர், ஷாமியானா.

  1. பாரசீகம் மற்றும் பிறநாட்டு மொழிச்சொற்கள் தமிழில் கலந்த வரலாறு 
    என் அருமைத்தம்பி தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரான பரதனும், என்னுடைய மைத்துனர் புகழ்வாய்ந்த மென்பொறியாளர் தங்கவேலு இராமலிங்கம் என்கிற சக்தி ஆகிய இருவரும் அடிக்கடி என்னிடம் சொல்லுவது, எந்தத் தகவலையோ, தரவையோ, கணக்கையோ, மருத்துவ, பணிக் கோப்புகளையோ ஐந்து நிமிடத்திற்குள் கணினியிலிருந்து மீள எடுப்பதில் தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டுமென்று. அங்ஙனம் இல்லையென்றால், கணினிப் பயன்பாட்டில் நீங்கள் வளரவேயில்லை என்பது பொருளாகும் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். இன்றைய இளைஞர் உலக இப்பொருண்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோளாகும். 

தினச்செய்தி இதழில் நான் தொடர்ந்து வரைந்து வரும் தொடர் கட்டுரைகளையும், எந்தையார் எழுதிவரும் தொடர் கட்டுரைகளையும் மிக நுட்பமாக எண்ணுடனும், தேதியுடனும் ஒரே சுட்டியில் காத்து வரும் என் தோழி அமெரிக்காவைச் சார்ந்த ஜோதி எஸ். யை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். 
ஓக்லஹோமா மாநில அரசில் திட்ட ஆய்வாளராக (Program Analyst) பணியாற்றியவர். தன்னார்வலராக முன்னர் ‘வல்லமை’ இதழின் துணை ஆசிரியராகவும், தற்பொழுது ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ பன்னாட்டு அமைப்பின் “மின்தமிழ்மேடை” காலாண்டு இதழின் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டு வருவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் செயலாளராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் கூகுள் மின்தமிழ் குழுமத்தின் நெறியாளராகவும் செயற்படுகிறார். 

கடந்த ஒன்பது ஆண்டுகளாக திண்ணை, வல்லமை, கீற்று, சிறகு போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளும்; ஆய்விதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வருவதும், தமிழகம் மற்றும் இலங்கையைச் சார்ந்த பழந்தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரையையோ, தொகுப்பையோ அவர்களின் ஒளிப்படத்தையோ, நான் வினவியவுடன் உடனுக்குடன் மின்னஞ்சலில் அனுப்புகிற தகைமையும், அவருடைய தலைமைக் குணத்திற்குப் புகழ்ச் சிறகுகளாகும். 

பாரசீக மொழி:தில்லி சுல்தான்கள் காலம் முதல், முகலாயர்கள் காலம் வரை நாடெங்கும் பாரசீக மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. நீதி நிருவாகத்திலும், ஆட்சியிலும் பாரசீக மொழியே இருந்தது. அரசுப் பணியில் இருந்த இந்துக்கள், இந்தி மொழியைப் பயன்படுத்தினர். இந்தியாவிலுள்ள பல அரசுகள் மாமன்னர் அக்பரின் ஆணையினால் அரசின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் பாரசீக மொழியிலேயே கணக்குகளை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

ஆங்கிலம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து நிலையாக அமரும்வரை பாரசீக மொழிச் சொற்கள்தான் அரசு நிருவாகத்தில் கோலோச்சியது. பாரசீகம் –  தமிழில் கலந்த பல பாரசீகச்சொற்கள் இன்றும் வழக்கிலுள்ளன. 1) அஜ்மாஷ் – ஆய்வு செய்தல், பயிரடைப்பு 2) கம்மி – குறைவு 3) குமாஸ்தா -எழுத்தர் 4) கொத்தவால் – காவல்முறை அலுவலர் ஆணையாளர் 5) சராசரி – நிரல் 6) சிரஸ்தார் – அலுவலக மேலாளர் 7) தர்காஸ்து -தரிசு நிலம் 8) பந்தோபஸ்து – காப்புச் செய்தல் 9) பினாமி -இரவல் பெயர் 10) ரசீது – பற்றுச்சீட்டு 11) ஜமீன் – நிலம் 12) டபேதார் -அலுவலக உதவியாளர் 13) டவாலி -கச்சை 14) தஸ்தாவேஜி – ஆவணம் 15) பிராது -குற்ற முறையீடு, குறையீடு 16) காபந்து -அக்கறையுடன் கூடிய பாதுகாப்பு 17) சிப்பந்தி -பணியாளர் 18) யாதஸ்து -எழுத்தாலான குறிப்பாணை 19) ரோந்து -சுற்றிவரல் 20) காகிதம் -தாள் 21) சிப்பாய் -படைவீரன் 22) பஜார் – கடைத்தெரு 23) துப்பாக்கி – சுடும் கருவி 24) பாரா – காவல் 25) சந்தா – தவணைப்பணம் 26) நங்கூரம் -ஆதாரம், நிலைக்கச் செய் 27) அந்தஸ்து – நிலை பொருள் 28) சிபாரிசு -பரிந்துரை 29) சுமார் – பரவாயில்லை 30) தயார் – ஆயத்தம் 31) தராசு – துலாக்கோல் 32) ஜல்தி – விரைவு 33) சடுதி – விரைவு 34) செலான் -செலுத்துச்சீட்டு 35) பட்டா – நில உரிமை ஆவணம் 36) மிட்டா -நிலக்கிழார் 37) தண்டோரா – ஒலி எழுப்பி அறிவித்தல் 38) தமுக்கு -ஒலி எழுப்பி அறிவித்தல் 39) திவால் -முறிவு 40) பஞ்சாயத்து – ஊராட்சி 41) புகார் – முறையீடு 42) பட்டுவாடா – வழங்கல், ஊதியம் வழங்கல் 43) பேட்டி -நேர்காணல் 44) உண்டியல் – சிறு பணப்பெட்டி 45) வரா – குறிவு 46) லத்தி – தடி 47) வசூல் – தண்டல் 48) இஸ்திரி -பெட்டி போடல் 49) செலாவணி – நாணயம் 50) பட்டியல் -அட்டவணை 
51) பாலம் -இணைப்பு மேடை 52) ஜோடனை – அலங்கரித்தல் 53) வாரித -மரபுரிமை 54) வாய்தா -தள்ளிப்போய் 55) ஒப்தி – கைப்பற்றல் 56) ஒவாமு – மறுமொழி 57) ஜமாபந்தி – வருவாய்த் தீர்வாயம் 58) ஜாமீன் – பிணையம் 59) ஜாஸ்தி – அதிகம் 60) மகஜர் – மனு, விண்ணப்பம் 61) அசல் – முதல் 62) அத்து – எல்லை 63) அமுல் – நடைமுறைப்படுத்தல் 64) அநாமத்து – ஒப்படைத்த பொருள் 65) அயன் -அதைரியம் 66) ஆசான் -ஆசிரியன் 67) ஆப்காரி -மது உற்பத்தி விற்பனை வரி 68) ஆஜர்பட்டி – வருகைப்பட்டி 69) ஆபத்து -இடர், பேரிடர் 70) இனாம்தார் – மானிய நிலத்துக்குரியவர் 71) இருகால் -செலுத்துகை 72) உசூர் – மாவட்டம் 73) கலால் -சாராயம் 74) கஜானா -கருவூலம் 75) காயம் -நிலையான 76) காஜி – நீதிபதி 77) கிஸ்தி -தீர்வை 78) குலாம் -அடிமை 79) கைது – சிறையீடு 80) சரகம் – வட்டாரம் 81) சரத்து -நிபந்தனை 82) சராப்பு -காசுக்கடைக் கருவூல உதவியாளர், பணம் அளிப்பவர் 83) ஜாப்தா – பட்டியல் 84) ஜாரி – சேர்ப்பித்தல் 85) ஜில்லா – மாவட்டம் 86) தனக்கை – கணக்குச் சரிபார்த்தல் 87) தர்ஜமா – மொழி பெயர்த்தல் 88) தாக்கீது – குறிப்பாணை 89) தபா – காலம் 90) திவான் – பிரதம அமைச்சர் 91) தோபா – கப்பம் 92) நமூனா – படிவம் 93) நகல் – படி 94) பசலி – வருவாய்த்துறை ஆண்டு வேளாண்மை ஆண்டு 95) மராமத்து – பழுதுபார்த்தல் 96) மஹால் – மாளிகை 97) ருஜி – மெய்ப்பித்தல் 98) மராத – நிலக்கிழார் 99) மகசூல் – விளைச்சல் 100) முகலம் – தந்தல் 
101) முச்சலிகா – உடன்படிக்கை 102) ரயத்து – குடியானவன் 103) ரயத்துவாரி – நிலத்தீர்வை 104) ரொக்கம் – பணம் 105) லாயக்கு – தகுதி 106) அம்பாரம் – குவியல் 107) அலாதி – தனி 108) ஆப்காரி – மதுவரி 109) கரம் – சூடு, காரம் 110) சாவி – பதர் 111) சிப்பந்தி – பணியாள் 112) ஜமீன்தார் -நிலக்கிழார் 113) பிராது -குறையீடு 114) பூரா – முழுவதும் 115) மனு – விண்ணப்பம் 116) மனுதாரர் – விண்ணப்பதாரர் 117) ராஜனாமா – பணிவிலகல் 118) சிபாரிசு – பரிந்துரை 
பிற மொழிகள்: தமிழகமும் இலங்கையும் கொண்டிருந்த தொடக்கக் கால உறவால் சிங்களச் சொற்கள் தமிழில் இடம் பெற்றுள்ளன. முருங்கை, ஈழம் என்ற இலங்கைச் சொற்கள் பழைய உரையாசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளன. 
தக்கோலி, அருமணவன், கிடாரவன் முதலிய தாய்லாந்துச் சொற்கள் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளன. 
கிடங்கு, கிட்டங்கி என இன்றும் தமிழில் வழங்கப்படும் சொற்கள் மலாய்ச் சொல்லான ‘கடாங்’ என்பதிலிருந்து உருப்பெற்றுத் தமிழில் கலந்தவை. இம்மொழியிலிருந்து ‘சாம்பிராணி’ என்னும் சொல் தமிழில் வழங்கப்படுகிறது.
‘சொங்கு’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் ஜாவானியச் சொல்லிலிருந்து வந்ததாகும். 
படகு வகையைச் சேர்ந்த ‘சம்பான்’ என்ற சொல்லும் பெரிய மண்கலத்தைக் குறிக்கும். காங்கு என்ற சொல்லும், பீங்கான் என்ற சொல்லும் சீன மொழியிலிருந்து வந்தவையாகும். 
‘ரோஜா’ என்னும் மலர்ச்சொல் இலத்தீன் மொழிக்குரியது எனக் கூறுகிறது அயற்சொல் அகராதி. 
‘கொய்யா’ என்னும் தமிழ்ச்சொல் பிரேசில் நாட்டுக்குரியது. 
‘கக்கூஸ்’, ‘துட்டு’ என்னும் சொற்கள் டச்சு மொழியில் இருந்து வந்து தமிழிற் கலந்தவை. 
கடுதாசி, கிராதி, கொரடா, கோப்பை, சங்கடம், சப்பாத்து, செருப்பு சாவி, திராவி, துவாலை, பாதிரி, மேசை, சன்னல் என்பவை தமிழில் வழங்கப்படும் போர்த்துகீசியச் சொற்களாகும். 
‘மிச்சம்’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் பாலி மொழியைச் சார்ந்தது. கபே, ரோந்து, லாந்தர் என்று தமிழில் வழங்கப்படும் சொற்கள் பிரெஞ்சு மொழியைச் சார்ந்தவை. 
‘ரிக்ஷா’ எனத் தமிழில் வழங்கப்படும் சொல் சப்பானிய மொழியைச் சார்ந்தது. 
மேற்குறித்த சிங்களம், மலாய், தாய், ஜாவானிய, சீன, லத்தீன், பிரேசில், டச்சு, போர்த்துகீயம், பாலி, பிரெஞ்சு போன்ற பிறமொழிக் கலப்புச் சொற்ககளிலிருந்து பெறப்படும் முடிவுகளாவன:- 1. ஆட்சிக் செல்வாக்கும், வாணிகத் தொடர்பும் மிகுதியாகப் பெற்றிருந்த வடமொழி, இந்தி, உருது போன்ற மொழிகள் தமிழில் மிகுதியாகக் கலந்துள்ளன. 2. மொழிக் கலப்பால் தமிழில் கலந்த பிறமொழிச்சொற்கள் மக்களின் கல்வி, நாகரிகம், இவற்றிற்கேற்ப வும், நகரம் கிராமம் என்ற பாகுபாட்டிற்கேற்பவும் வழக்கில் உள்ளவை களாக மாற்றம் பெற்றுள்ளன. 3. ஆட்சிச் செல்வாக்கு, வாணிகத் தொடர்பு, மக்களின் நம்பிக்கைகள் இவற்றைக் கால்கோள்களாகக் கொண்டு தமிழில் புகுந்த பிறமொழிச் சொற்கள் நீண்டகாலம் அன்றாட வழக்கில் இருந்து வருகின்றன. 4. நாளடைவில் கலப்பால் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் இன்று வழக்கிழந்து மறைந்துள்ளன. எடுத்துக்காட்டு – தும்மா (பிரெஞ்சு) – பாடை, திவரம் (மராத்தி) – நாடு. அபாண்டம், கச்சாயம், காகிதம், காசாண்டி, காமாண்டி, கில்லாடி, குண்டான், கெண்டி, கேசரி, மற்றும் கோகம்பரி போன்ற சொற்களும் தமிழில் கலந்த மராத்தி மொழிச் சொற்களேயாகும். மராத்திய மொழியைப் பற்றி இன்னொரு சிறப்புக்கூறு என்னவென்றால், அருட்தந்தை தாமஸ் ஸ்டீஃபன் 1615-ஆம் ஆண்டு, கொங்கணி மற்றும் போர்த்துக்கீசிய மொழிச் சொற்களைக் கொண்டு ‘கிறித்து புராணத்தை’ மராத்திய வரிவடிவத்தில் இயற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. கொங்கணி மொழிக்கு எழுத்து வரிவடிவம் என்று ஒன்றுமில்லாத சூழலில், மராத்தியம், கன்னடம், மலையாளம், தேவநாகரி மற்றும் உரோம வரிவடிவங்களை ஏற்றுக் கொள்கிறது. பலர் தங்கள் தாய்மொழியின் புகழை எடுத்துரைப்பதை பல நிகழ்வுகளில் நாம் கண்டு வந்திருக்கிறோம். ஆங்கில மேனாட்டறிஞர்கள் புகழ்ந்துரைப்பதையும் கண்டு நாம் பெருமிதம் அடைந்திருக்கிறோம். ஆனால், மராத்திய மொழியைப் பற்றி அருட்தந்தை தாமஸ் ஸ்டீபன் 1580-ஆம் ஆண்டுகளில், சொன்ன வரிகள் பொன்வரிகளாக மிளிர்கின்றன.       “கற்களில் ஒளிரும் இரத்தினமாக       இரத்தினங்களில் மின்னும் மாணிக்கமாக       மலர்களில் மணம் கமழும் மல்லிகையாக       நறுமணங்களில் மணக்கும் கஸ்தூரியாக       பறவைகளில் ஆடும் கலாப மயிலாக       விண்மீன்கள் மத்தியில் கண்ணைக் கவரும் நட்சத்திர ஒளிவெள்ளமாக       மொழிக்குடும்பங்கள் மத்தியில் சிங்க நிகர் மராத்திய மொழி தகத்தகாயமாக ஒளிர்கிறது.”
” Excellence of the Marati tongue      Like a jewel among pebbles       Like a sapphire among jewels       Like the jasmine among blossoms       the musk among perfumes       the peacock among birds       the zodiac among the stars       is Marati among languages.”

  1. தமிழில் உருவாகும் புதிய சொல்லாக்கங்களைப் பிறமொழிக் கலப்பால் வந்து வழங்கப்படும் சொற்களின் வழக்கை நீக்குகிறது. வளரும்… 
  2. இந்துத்தானியம், இந்தி மொழிச் சொற்கள் தமிழில் பங்குகொண்ட வரலாறு

பெருமக்களே! கடந்த 24 வாரங்களாக நான் எழுதிவரும் மொழியியல் கட்டுரை பெரும் வரவேற்புப் பெற்று பலர் பல வினாக்களை எனக்கு மின்னஞ்சலிலும், கருத்துகளை தொலைபேசியிலும் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். ஐந்தாம் வகுப்பு பயிலும்போதே என்னுடைய கணக்காசிரியர் திருமதி இராஜலட்சுமி அம்மையார், நான் சரியாகக் கணக்குப் பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை என்பதை என்னிடம் சுட்டிக்காட்டினாலும், அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் என் தம்பி பரதனிடம், “உன் அண்ணன் அருளுக்கு சுத்தமாகக் கணக்கு வரவில்லை. நீயாவது உன் பெற்றோரிடம் சொல்லி இக்குறையைக் களைய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தம்பி என்னிடம் சிரித்துக் கொண்டு, “நான் சொல்லியா தெரியப் போவது. பெற்றோர்கள் அறியாததா இது!” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.

துணிந்து நானும் வாராத கணக்குப் பாடத்தை உடும்புப் பிடிபோல் பிடித்துக் கொண்டு ஆறாவது முதல் பத்தாவது வகுப்பு வரை, சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்தவ ஆடவர் மேனிலைப் பள்ளியில் பயின்றேன். பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பையும் மேலும் துணிந்து கணக்கை முதன்மைப் பாடமாக எடுத்துக் கொண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை (M3) வகுப்பில் பயின்றேன். Algebra, Trigonometry, Calculus, Integral Calculus போன்ற கணக்குப் பாடச் சுழலில் திக்குமுக்காடி எழ முடியாமல் தத்தளித்தேன். இன்றுவரை பல இரவுகளில் இக்கணக்குப் பாடங்கள் என் கனவில் வந்து உறுத்தும்.

1985-ஆம் ஆண்டு, சனவரி, பிப்ரவரி திங்களில், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், என்னைப் பல வழிகளில், கணக்கைப் புரிய வைக்க வேண்டுமென்று அரும்பாடு பட்ட என் பள்ளியின் கணக்காசிரியர் பெருந்தகை சௌந்தரராசன் என்னிடம், தனி நேர்வாகக் கேட்ட ஒரு வினாவிற்குப் பதில் அன்றைக்குத் தெரியவில்லை. ஆனால், முப்பதாண்டுகள் கழித்து, மீண்டும் மீண்டும் என்னை அக்கேள்வி நினைக்கத் தூண்டியது என்றால், என் கணக்காசிரியர் பெருந்தகை சௌந்தர ராசனின் சிறப்பை என்னென்று சொல்வேன்! என்னுடைய இலக்கியப் படிப்பிற்கும் வளர்ச்சிக்கும் திரு. சௌந்தர ராசன்தான் மூல விதையாவார். என்றும் என் பணிவான வணக்கம் அவருக்கு உரித்தாகுக. அவ்வினா என்னவென்றால், “அருள்! பொதுத் தேர்வு முடிந்த பிறகு நீ என்ன படிக்கப் போகிறாய்? நீ என்ன இளங்கலை தமிழிலக்கியம் சேரப் போகிறாயா?” என்பதுதான்.
பொதுத்தேர்வு முடிவுகள் வந்து வெற்றிபெற்று பச்சையப்பன் கல்லூரியில் இளம் அறிவியல் வேதியியல் பயில அனுமதிக் கடிதமும், மயிலையிலுள்ள விவேகானந்தர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியத்திற்கு அனுமதிக் கடிதமும், தனியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் புலத்திற்கு வைப்புத் தொகையுடன் சிறப்புக் கட்டணம் கட்ட வேண்டிய கடித அனுமதியும் கிடைத்தது. கணிதம் மற்றும் அறிவியல் சுழலில் அகப்பட வேண்டாம் என்றெண்ணி, பொறியியல் கல்லூரியையும், பச்சையப்பன் கல்லூரியையும் நானாகவே தவிர்த்து விட்டேன்.
என் தாயார், மருத்துவமாமணி தாரா நடராசனும், என் அக்கா திருமதி சுதா நலங்கிள்ளியும், பலமுறை வேண்டிவேண்டி என்னை விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலம் பயிலுமாறு நெறிப்படுத்தினார்கள். உயர்கல்வி, நல்லொழுக்கம், அறச்சிந்தனை, ஈகையுணர்வு விவேகானந்தர் கல்லூரியில் கிடைக்கும் என்று உறுதி கூறினார்கள். ஆயிரம் முறை கேட்டுக் கேட்டும் இளங்கன்று பயமறியாது என்ற துடுக்கு நெஞ்சத்துடன் யாவரும் திடுக்கிடும் வண்ணம், அந்த அனுமதிக் கடிதத்தையும் புறந்தள்ளினேன்.
எங்கும் அனுமதி கிடைக்காமல், சூலைத் திங்களும் சென்று கொண்டிருக்கிறது. அச்சூழலில் எந்தையாரின் ஆணைக்கிணங்க, அவரின் நேர்முக உதவியாளர் முனைவர் கண்ணன் (பதிப்பாசிரியர், சென்னை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்) மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் விண்ணப்பம் வாங்கி, நிறைவு செய்து ஒரே நாளில் என்னை அக்கல்லூரியில் சேர்த்து விட்டார்.

மிகவியப்பான செய்தியென்னவென்றால், நான் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு பயிலும்போது, செட்டிநாட்டரசர் வள்ளல் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் எந்தையார் மீது தனிப்பரிவு கொண்டு, எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு சேர்வதற்கு அனுமதிக் கடிதம் வழங்கினார். அதையும் ஏற்காமல் தமிழிலக்கியத்தையே பயின்றேன்.–இந்துஸ்தானி மொழிச்சொற்கள் பங்குகொண்ட வரலாறு:1) ஆஸாமி  – ஆள்2) கித்தான்  – சாக்கு3) ஜதை  – இணை4) ஜாகீர்  – மானியம்5) ஜாகீர்தார்   – ஊழிய மானியம் பெற்றவர்6) ஜிம்கானா  – விளையாட்டிடம்7) ஜோடி  – இணை8) டப்பா, டப்பி  – கொள்கலன்9) டேரா  – கூடாரம்10) டோபிகானா  – வெளுப்பகம்11) தம்  – மூச்சு12) நாசூக்  – நாகரிகமாக13) நாடா  – பட்டை14) பக்கா  – முற்றிலுமாக15) பரவாநகி  – சுமார், பரவாயில்லை16) முஸாபரி பங்களா  – பயணர் விடுதி17) மேஸ்திரி  – மேற்பார்வையாளர்       18) ரசீது  – பற்றுச்சீட்டு19) ரொக்கம்  – மொத்தப்பணம்20) லஸ்கர்   – உழையர், சிற்றேவலர்21) லேவாதேவி  – கடன் வரவு செலவு.

தில்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் தங்களது ஆட்சியின்போது பயன்படுத்திய ஆட்சிச் சொற்களும் நூற்றுக்கணக்கில் அடங்காதன. சான்றாக,1) ஹாஜர்  – வருகை2) ஹாஜர்பட்டி  – வருகைப் பதிவேடு3) இன்குலாப்  – புரட்சி4) கமால்  – ஊர்ப்பணியாளர்5) ராஜிநாமா  – பதவி விலகல், எழுத்தாலான ஒத்திசைவு6) இலாகா  – துறை7) இஜாஸ்து  – அனுமதி, விடைபெறல்8) இஸ்தியார்  – அறிக்கை, அரசுப்பொது அறிவிப்பு விளம்பரம்9) ஹுக்கும் – அனுமதி ஆணை10) கச்சேரி – அரசு அலுவலகம் (வருவாய்த்துறை, நீதித்துறை அலுவலகம்)11) கபூலி – ஏற்பு, இசைவு, ஒப்புதல் வாக்குமூலம்12) கபூலியாட்டு – எதிர்த்தரப்பு ஒப்பந்தம்13) காய்டா – ஆணை விதி14) காயம் – நிலையான, நிரந்தரம்15) கார்வார் – மேலாண்மை16) காலி – ஒழிவு, வெறுமை17) கானுன் – சட்டம் விதி18) சாப்பா – முத்திரை19) சம்சாயி – கடன்20) சர்க்கார் – அரசு21) வடிரா – குறிப்பு, நிபந்தனை, குறிப்புரை22) ஜரூர்  – காலந்தவறாமை23) ரஜா  – விடுப்பு24) ரத்து – நீக்கம்25) ருக்கா – குறிப்பாணை26) ரோஜ்கார்  – பணி, வேலை வாய்ப்பு27) வாபஸ் – திரும்பப் பெறல்28) சாப்பு – படி, பார்த்து எழுது 29) ஹத்து பந்தி – நான்கெல்லை குறித்தல்.

பதவிப்பெயர்கள்
1) அஞ்சனதார், தொகாக்காரன் – மதிப்பீட்டாளர் 2) அமல்தார்  – வருவாய் அலுவலர் 3) அமீனர் – உரிமையியல் நடுவர் மன்றக் கீழ்நிலைப் பணியாளர் படைத்தலைவன்4) அமீர் – படைத்தலைவன்5) அர்க்கார் – கண்காணிப்பாளர்6) அசமகர்ணம் – கிராம கர்ணம் 7) கஜான்ஜி – கருவூல அலுவலர்8) காலிபா – அரசன், சுல்தான்9) கார்கூன் – இயக்குநர், மேலாளர், வருவாய் ஆய்வாளர்10) கார்வாரி – மேலாளர், முகவரி, கண்காணிப்பாளர்11) கணக்க – கிராம அல்லது மாவட்ட அலுவலர்12) குமாஸ்தா – எழுத்தர்13) குல்லா சேவகன் – காவலர்14) குலாப்தலையாட்டு டரப்தாரி – அலுவலக உதவியாளர்15) கொத்தவால் – காவல்துறை ஆணையாளர்16) சமாத்துர் – கோட்ட வருவாய் அலுவலர்17) சர்தார் – உயர் அதிகாரி18) ஷராப்பு – கருவூல உதவியாளர், பணம் அளிப்பவர், காசுக்கடை19) ஜலான் – காவலர்20) சவுக்கிதார் – சுங்கத்துறை அலுவலர்21) சிப்பந்திபாகந்தாஸ் – ஆயுதப்படைக் காவலர்22) சிப்பாய் – படைவீரர்23) சிரஸ்ததார் – அலுவலக மேலாளர், நடுவர் மன்ற மேலாளர்24) சுபேதார்  – ஆளுநர்25) சொக்கன் – உடனாள்26) கோக்கீரா – பணிப்பையன்27) டபேதார்.தரோகா – தலைமை அலுவலக உதவியாளர்28) ட்ப்தார். பந்து, தஸ்தார்தர் – பதிவறை எழுத்தர், ஆவண எழுத்தர்29) தபால்காரன் – அஞ்சல் ஆண்30) தாசில்தார் – வட்ட ஆட்சியர்31) திவான் – பிரதம அமைச்சர், மாநிலத்தின் முதன்மை அலுவலர்32) துபாசி – விளக்கிப் பொருள் கூறுவோர், மொழி பெயர்ப்பாளர்33) நவசினதா – கணக்கர்34) நவாப்  – முகலவாள ஆளுநர்35) நிஜாம் – அரசன்—இந்தி மொழிச் சொற்கள் பங்குகொண்ட வரலாறு:இந்திய அரசில் அரசு மொழிகளாகப் பதினெட்டு மொழிகள் ஏற்கப்பட்டுள்ளன. இந்தி நடுவணரசை நடத்தும் மொழியாக விளங்குகிறது. இந்தி ஒன்றே இந்நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டுமென்னும் கருத்து அடிக்கடித் தோன்றுவதும், பிறமொழி பேசும் மாநிலங்களில் புகுத்தப் படுவதும், பிற மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு நிலைக்கேற்ப இக்கருத்துத் திரும்பப் பெறப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆட்சிமொழி எனும் உயர்நிலை பெற்ற இம்மொழி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வகைகளில் ஊடாட்டம் நிகழ்த்துகிறது. ஆட்சிமொழி என்பதால், நடுவணரசின் மாநில அலுவலகங்கள் முதலாகத் தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு வழிகளில் இந்தி மக்களிடையே பரவுகின்றது. தமிழகத்தில் இந்திமொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இவர்கள் வழியாகவும் இந்தி தமிழில் கலக்கிறது.1) ஆகாஷ்வாணி – வானொலி2) தூர்தர்ஷன் – தொலைக்காட்சி3) சமாச்சார் – சமாச்சாரம்4) உத்யோக் – உத்தியோகம்5) தோத்தி – வேட்டி6) ஷர்வானி – ஒருவகை உடை7) அதிகார் – அதிகாரி8) முக்ய – முக்கிய9) மண்டல் –  மண்டலம்10) நிரூப் – நிரூபணம்11) படா – பெரிய12) சோட்டா – சிறிய13) சோர் – திருடன்14) அச்சா – நன்று15) பகுத் அச்சா – மிக நன்று16) ஜாவ் – போ17) ஜிந்தாபாத் – வாழ்க, வெல்க18) ஜெய்ஹிந்த் – இந்தியா வெல்க19)  பாரத் – பாரதம்20) தர்ணா – மறியல்21)  தர்ம் – தருமம்22)  உதார் – உதாரணம்23) அபராத் – குற்றம்24) மஸ்தூர் – தொழிலாளர்25) கட்டுமஸ்து – கட்டுடல்26) வஸ்து – பொருள்27) நமஸ்தே – வணக்கம்28) உத்தர் – வடக்கு29) சொஜ்ஜி – சிற்றுண்டிவகை30) சோக்ரா – ஏவல் செய்பவன்31)  தட்டுவாணி – நாட்டுக் குதிரை32) தம்படி – காசு33) தம்புரு – நரம்பு வாத்தியம்34) துப்பட்டா – துணிவகை35) தூட்டி – ஆடை36) மிட்டாதார் –  பணக்கார்ர்37) பந்த் – கடையடைப்பு38) மந்திரி – அமைச்சர்39) தோசா – தோசை40) சுந்தர் – அழகு41) தோஸ்த் – நண்பன்42) பச்சா – மகன்43) மோடா – கூடை இருக்கை44) நாம் –  பெயர்45) பகவான் – கடவுள்46) சோடனை – ஒப்பனை47) சோதா – சோம்பேறி48) சோபதி – தோழன்49) சொக்கிதார் – சுற்றுக்காவலன்50) சௌடோல் – யானை51) டக்கர் – தக்கணம்52) டப்பா – தகட்டுப்பெட்டி53) டபாய் – ஏமாற்று54)  டீக்கு – சரி55) டேரா –  தங்குதல்56) டோசர் – மோதுகை57) சட்னி – உணவு வகை58) டோபி – சலவையாள்59) டோலி – தூக்குப்படுக்கை60) முண்டாசு – தலைப்பாகை61) மோட்டா – கடினமான62) ரொட்டி – உணவுவகை63) லேவாதேவி – கொடுக்கல் வாங்கல்64)  ஜகா – பின்வாங்குதல்65) ஜதை – இரண்டுஇவ்வாறு அன்றாட வழக்கில் மக்கள் பயன்படுத்தும் இந்திச் சொற்கள் பல உள்ளன. நடுவணரசின் ஒப்புதல் பெற்ற பள்ளிகளில் இந்தி ஒரு மொழிப்பாடமாகவே கற்பிக்கப் படுகிறது. தமிழகத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு இணையான அளவில் இந்தித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆட்சிமொழி எனும் செல்வாக்கும், மக்கள் தொடர்புக் கருவிகளில் வழங்கப்படும் மொழியாக உள்ள வாய்ப்பும் இந்தி தமிழில் கலக்கக் காரணங்களாக அமைகின்றன. “நடுவணரசு இந்தியை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதாலும், நம் பள்ளிச் சிறுவர்கள் தொடக்க வகுப்பகளிலே இதனைக் கற்றுக் கொள்ளத் தொடங்கி விடுவதாலும், காலப் போக்கில் மேலும் இந்திச் சொற்கள் தமிழில் வந்து சேரலாம்” எனக் கருதுகின்றார் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இந்திமொழியினாலேயும் தமிழ்மொழி உரம் மிகுந்து வளரும் என்பதுதான் உண்மையெனத் தோன்றுகிறது என்பது இந்திமொழிக் கலப்பைப் பற்றிப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கொண்டிருந்த கருத்தாகும்.

  1. செய்யுளில் வரும் இயற்சொற்கள்
    முனைவர் ந. அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு
    இளவரசர்களின் எழிற்சோலை (Princes of Presidency) என்ற பெருமிதப் பெயர் நானிலம் புகழும் மாநிலக் கல்லூரிக்கு வழக்கிலிருந்த நிலையில், அரண்மனைக்குள் நுழைவதைப்போல் தனிப்புகழ் வாய்ந்த தமிழ்த்துறையில் இளங்கலை தமிழிலக்கியத்தில் 1985-இல் இணைந்தேன். தமிழ்த்துறையில் பணியாற்றிய பதினேழு பேராசிரியப் பெருமக்களை (‘Major’ P. பாண்டுரங்கன், (தமிழ்த்துறைத் தலைவர்), ‘சிந்தனைத் திலகம்’ இ. மறைமலை, ‘அன்பின் அன்னை’ இராசலட்சுமி, ‘கவிவேந்தர்’ மு. மேத்தா, ‘கவிதைப் பேரொலி’ பொன் செல்வகணபதி, ‘இலக்கணச்சுடர்’ இரா. சண்முகம், ‘இலக்கண ஒலி’ மு.கங்காதரன், ‘பண்புச் செம்மல்’ ப. அன்பு, ‘பகுத்தறிவுச் செம்மல்’ இரா. இளவரசு, ‘அருங்கலைத் திலகம்’ மாணிக்கம், ‘கலைச்செம்மல்’ கு. தாமோதரன், ‘நற்றமிழ்ப் பேராசிரியர்’ இரா.கு.நாகு, ‘பேராசிரிய செம்மல்’ தி.வ. மெய்கண்டார் (இளந்தமிழர் இதழாசிரியர்), ‘தென்குமரி’ P. யோகீசுவரன் பிள்ளை, ‘ஒப்புரவாளர்’ பெ. ஊரப்பன், ‘ஆய்வுச் செம்மல்’ ம.செ. இரவிசிங், ‘அருட்பா பாவலர்’ சுப. பாலச்சந்திரன்) நான் பார்த்தபோதே தமிழ்த்தென்றலும், தடங்கடலில் புரண்டுவரும் வெற்றி அலைக்காற்றும் என்னை மகிழ்வித்தன.
    எனக்குப் பசுமரத்தாணி போன்ற ஒரு நினைவு. எனக்கு முதல் வகுப்பாக மாபெரும் கூடத்தில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில், ‘பாடும் நிலாவே, தேன் கவிதை’ என்ற திரையிசை வரிகளை அறிமுகம் செய்த கவிவேந்தர் மேத்தா, ‘நீ எதற்குத் தமிழ் படிக்க வந்தாய்?’ என்று அவர் வினவியபோது, என் தந்தையார் இட்ட பணியை தொட்ட பணியைத் தொடர வந்துள்ளேன் என்று சொல்லி என்னை அறிமுகப்படுத்தினேன்.
    நானும், என்னுடைய தோழன் ஆண்டவரும் வகுப்பில் அருகருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து, ‘ஆண்டவனும் அருளும், இந்த வகுப்பறையில் எப்போதும் நிறைந்துள்ளனர்’ என்று பேராசிரியர் மறைமலை அடிக்கடி கூறுவார்.
    அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. இராஜுவின் அரும்புதல்வர், நிழக்கிழாராக மிளிரும் திரு.இரவிசங்கர், திண்டிவனத்தில் பெருவணிகராகத் திகழும் முகமது இப்ராஹிம், புனேயில் உள்ள இராணுவ நெஞ்சக நோய் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் Lieutenant Colonel ஆகத் திகழும் கு. பர்ணபாஸ், இன்றைக்குத் தமிழ்த்துறையில் சீரும் சிறப்புமாக விளங்கும் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் முத்துராமலிங்க ஆண்டவர், புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகத் திகழும் அப்துல் காதர், விழுப்புரத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையின் இணைப் பேராசிரியராகத் திகழும் முனைவர் ச. மகாவிஷ்ணு, திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் அரசு மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகத் திகழும் செங்குட்டுவன், அரிய தமிழிலக்கிய நூல்களை வெளியிட்ட ‘பார்க்கர்’ பதிப்பகத்தின் உரிமையாளராக இருந்து, இப்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கருணாநிதி, இலங்கையில் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்று கவிஞராய்த் திகழும் பகீரதன், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பு.பிராங்க்ளின், சீனிவாசன் ஆகிய பதினோறு வகுப்புத் தோழர்களுடன் படித்து, அளவளாவி மகிழ்ந்த நாள்களை எண்ணிப்பார்த்துப் பெருமிதம் அடைகிறேன்.

மாநிலக் கல்லூரியில் பயிலும்போதே, அந்நாளைய சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில், பட்டிமன்றத்தில் பங்குபெறும் ஒரு பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குமுதம் இதழின் பால்யு அவர்கள் என்னைப் பேட்டியெடுத்து வெளியிட்ட பெருமிதமும் அப்போதே என் நண்பர்கள் சொல்லிப் பாராட்டினார்கள்.

செல்லும் திசையெல்லாம், இன்றைக்கு நாங்கள் ஆங்கிலத்தில் சொல்லும் ஒரே வரி, ‘East or west, Presidency is the Best’ என்றே சொல்லிக் காட்டுவோம். எழிலார்ந்த கட்டடமும், பசுமையான சோலைகளும், வசந்த மண்டபத்தைப் போன்ற வகுப்பறைகளும், எங்கும் காணக் கிடைக்காத அறிவுக் கோயிலான நூலகமும், தமிழ்த் தாத்தா உ.வே.சா. திருவுருவச் சிலையும், சலவைக்கற் சிலைகளும், மாநிலக் கல்லூரியின் மாட்சிமையைப் புலப்படுத்தும் நினைவகங்களாகும். இன்றைக்கு அரசு பெரும் பொறுப்புகளில் இருக்கும் தலைமை அதிகாரிகளும், பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களும் மாநிலக் கல்லூரியின் மாணவர்கள் என்று அவர்கள் எடுத்துரைப்பது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக உள்ளது.

இயற்சொற்கள்:இன்றளவும் வழங்கும் செய்யுளை மேனோக்காகக் காண்பவரும் அதன் இயற் சொற்களின் தனித்தன்மையைக் காணலாம்.

உழவும் கலப்பையும், காரும் கயிறும், குண்டையும் நுகமும், சாலும் வயலும், வாய்க்காலும் ஏரியும், மடுவும் ஏற்றமும் பிறவும், பயிர்களையும், நட்டலும் கட்டலும், முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளான் இயன்றனவே.

தமிழர்கள் வதியும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கிடையும், புழைக்கடையும், கூரையும் வாரையும், கூடமும் மாடமும், தூக்கும் தூணும், கல்லும் கதவும், திண்ணையும் குறடும், தரையும் சுவரும், மண்ணும் மானும், மற்றவுந் தமிழே.
தலையும் காலும், கண்ணும் காதும், மூக்கும் மூஞ்சியும், வயிறும் மார்பும், நகமும் தசையும், நாவும் வாயும், பல்லும் மயிரும் மற்றவும் ஆகிய உடற்கூற்று மொழிகள் தனித் தமிழன்றோ!
தமிழ்நாட்டிலுள்ள சிற்றூர், சீரூர், ஆரூர், பேரூர், புத்தூர், புற்றூர், சேய்ஞ்ஞலூர், மணலி, நெல்லூர், நெல்லை, கொன்னூர், குறட்டூர் என்னும் இடப் பெயர்களும், செவ்வாய், வியாழம், வெள்ளியும் ஆகிய கிழமை பெயர்கள் தமிழ்ப் பெயர்களே.
தொண்ணூற்றொன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது வரையில் எண்ணப்பட்ட எண்களில் ஒன்றேனும் வடமொழியால் எண்ணப்படுவதில்லை. ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலன் என்னும் முகத்தலளவையும், இன்னும் கீழ்வாயிலக்கமும் அவற்றின் குறியீடுகளும் எல்லாம் தமிழே.
தமிழர்கள் உண்ணும் சோறும் சாறும், காயும் கறியும், பாலும் பழமும், நெய்யும் தயிரும், உப்பு முதல் ஒன்பதும், பருப்பு முதல் பத்தும், தமிழ்ச் சுவையே.
எழுத்தும் சொல்லும், பொருளும், யாப்பும், அணியும் ஆகிய ஏடுஞ் சுவடியும், எடுத்துப் பார்க்குமிடமெல்லாம் தமிழே.
துணியும் அணியுந்தமிழே, தொழும் கடவுளும் தமிழ் மயமே, வீடும் நாடும், காடும் மேடும் ஆகிய எங்கும் தமிழ்மயமாகவே இருக்கின்றது.
தமிழின் தனிச்சிறப்பை ஏற்க மறுப்பாரும் இருந்தமையன்றோ வியப்பு!
இது தொடர்பாகச் செந்தமிழ் வழக்கு என்னும் நூலில் புலவர் இளமுருகனார், “உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் பயின்றுவருஞ் சொற்களைப் பற்றிச் சிறிது ஆராயலாம் என்று தொடங்கி விரிந்த கருத்துகளை வழங்கியுள்ளார். சொல்லாவது, பொருளை அறிவிக்கும் ஆற்றலுடைய எழுத்தொலியாகும். அஃது, இருதிணைப் பொருள் தன்மையையும், ஒருவர் உணர்ந்து கொள்வதற்குக் கருவியாகும்”. பொருள்களைப் புலப்பட விளக்கும் தன்மையை நோக்கி வடநூற் புலவர் சொல்லை விளக்கு என்பர். அது குறித்துச் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் “சொல்லெனப்படுஞ் சோதி தோன்றாதாயின், எல்லை நீர் ஞாலத்தில் எப்பொருள்தான் புலப்படும்? ஆதிபகவனை அறிவதும் இல்லை! ஆகமங்களை அறிவதும் இல்லை! அறம், பொருள் முதலியவற்றை அறிவதும் இல்லை! அவற்றை வலியுறுத்தும் பழஞ்சரிதங்களை அறிவதும் இல்லை! தங்கருத்தைப் பிறர் அறிவதும் இல்லை! பிறர் கருத்தைத் தாம் அறிவதும் இல்லை! அறியாமை யாண்டும் தலைப்படும். உலகம் தலைதடுமாறும். ஆதலால் உலகை வழங்கிவரச் செய்வது சொல்லெனப்படுஞ் சோதியென்றே சொல்லுக” என்றார்.
சொற்கள் நான்கு வகைப்படும். அவை இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்பனவாம். இவற்றைப் பெயர், வினை, இடை, உரிச்சொற்களுடன் சேர்த்தவழிப் பத்தாகும். இயற்சொல்லாவது, உலக வழக்குக்குரிய செஞ்சொல்லாகும். இயற்சொல் – இயல்பாய்ப் பொருள் உணருஞ்சொல். அச்சொல் செந்தமிழ் நிலத்துக்குரியதாய்க் கற்றார்க்குங் கல்லாதார்க்கும் ஒப்பத்தன் பொருளை விளக்குந்தன்மையுடையது. தமிழ் மக்கள் பேசுதற்கும் உரைநடையில் எழுதுதற்கும் இயல்பாய் அமைந்த சொல்லென்பது கருத்து. அடுப்பு, நெருப்பு, நிலம், நீர், காற்று, பகல், இரா, மலை, ஆறு, கடல், குளம், விளக்கு, உப்பு, புளி, வீடு, கோயில் மக்கள், காடு, மேடு, பள்ளம், யானை, குதிரை, நடந்தான், இருந்தான், பார்த்தான், கற்றான், கொன்றான், தின்றான் என்பனவும் பிறவும் இயற்சொற்களாம். மக்கள், நாளிலும் பொழுதிலும் தம் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கருத்தைத் தாம் உணரவும் அச்சொற்கள் பெரிதும் துணை புரிவன.
உலகவழக்குச் சொற்களை புதுப்பொருள்களும், புதுக்கருத்துகளும், புது நிகழ்ச்சிகளும், புது நுகர்ச்சிகளும், பிறக்குந்தோறும் மக்கள் பெருக்கிக் கொள்வர். இவ்வாறு உலக வழக்குச் சொற்களை நாளடைவிலே பெருகி, மொழியை வளப்படுத்தும். இனி, இவ்வுலக வழக்குச் சொற்களேக் கல்லாதாருங்கற்றாரும் வழங்குவாராதலின், ஒருசேர அவருள் கற்றார் அவற்றை இலக்கணநெறிக்கு ஏற்ப வழங்குவரென்றும், கல்லாதார் அந்நெறியிகந்து வழங்குவரென்றும் அறியலாம். கற்றார் வழக்கே உயர்வழக்கென்றும் கூறுவர். உலகவழக்குச் சொற்கள் இழிவழக்காக மாறுவதைச் சிறிது விளக்குவோம். பார்த்தான், கொன்றான், தின்றான், கோபம், நுங்கு, பனாட்டு, ஆற்றங்கரை, அகப்பை, ஒன்று, ஆண்பிள்ளை, இளநீர், கடற்கரை, கைம்மாற்று, சிவப்பு, சுவர், சுருட்டு, கிரகணம், புடைவை, பிட்டு, திறப்பு, பன்றி, பாகற்காய், நாற்றம் என்பனவற்றை இக்கால எழுத்தாளர், பாத்தான், கொண்டான், தின்னான், கோபம், நொங்கு, பினாட்டு, ஆத்தங்கரை, ஆப்பை, ஒண்டு, ஆம்பிளை, இளனி, கடக்கரை, கைமாத்து, சிகப்பு, சிவர், கிராணம், பிடவை, புட்டு, துறப்பு, பண்டி, பாவக்காய், நாத்தம் என்று தாம் எழுதும் நூல்களில் வழங்கிவரக் காண்கின்றோம்.

இச்சொற்களுக்கு இலக்கண அமைதியில்லை. பார்த்தான் என்பதற்குப் பார் என்பது பகுதி. பார், நோக்கு, பார்த்தல், பார்த்தான், பார்த்தாள் என்று எழுதியவழியே நோக்குதல், நோக்கினான், என்ற பொருள்படும். பார்த்தான் என்பதற்குப் பகுத்தான் என்பதும் பொருள். பாத்தல்-பகுத்தல், ஆகவே, இரண்டுக்கும் பொருள் வேறுபாடு மிகுதியுமுண்டு.

பார்த்தலும் பாத்தலும் ஒன்றெனக் கருதிக்கொள்ளும் வழக்குமிகுமாயின்

“பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்டல் அரிது”       (குறள் – 227)
தான் உண்பதைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்க உண்ணும் இயல்புடைய வனைப்பசி என்னும் தீயநோய் தீண்டாது, என்று பிழையாகப் பொருள் கொண்டு திருவள்ளுவர் கருத்தை மாறாக விளங்கிப் பெரிதும் மயங்குவரன்றோ! இவ்வாறே ஏனைய சொற்களையும் பொருத்திக் காண்க. ஆகவே, இழிவழக்குச் சொற்கள் எழுத்திற் புகுந்து ஆட்சி செய்யுமாயின், செந்தமிழ் வழக்குச் சொற்களெல்லாம், பொருளில் மாறுபட்டுத் தமிழ் மொழி முழுவதுஞ் சிதையும், ஆதலினாலன்றோ செந்தமிழ்ச் சான்றோர் இழிவழக்கை வழக்கென்று கொள்ளாது, உயர் வழக்கையே உலக வழக்கென்றும், சான்றோர் வழக்கென்றும், அவ்வழக்கின் நிலைப்பாட்டை மரபென்றும், வரையறுத்துக் கொள்வாராயினர் ஒல்காப்புகழ் தொல்காப்பியனாரும், இக்கருத்தை உணர்த்தவே, “மரபு நிலை திரியிற் பிறிது பிறிதாகும்” என்று இலக்கணஞ் செய்தார். இவ்வழக்கை மீறிக் கல்லாதார் பேசுவது போலவே எழுதிச் சிறுகதை இலக்கியஞ் செய்தல் வேண்டும் என்பார் கொள்கை, செந்தமிழ் வழக்கை அழித்துக் கொடுந்தமிழ் வழக்கை நிலைநாட்டும் கொடுமையாகும்.

  1. நாளொரு சொல்லும் புதிய பயன்பாடும்

பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான ஏழு திங்கள் கழித்து இராயப்பேட்டையிலுள்ள சரோஜினி தனியார் மருத்துவமனையில் பிறந்ததிலிருந்து 1973 வரை இராயப்பேட்டையிலேயே, 10, பெசன்ட் சாலையில் வளர்ந்து வந்தேன். 

பெசன்ட் சாலையின் சிறப்பு என்னவென்றால், நாங்கள் மாடி வீட்டில் இருந்தோம். கீழ்தளத்தில் பொதுப்பணித் துறையின் பொறியாளர் பழனிசாமி, அவரின் துணைவியார் கமலா, அருமைப் பிள்ளைகள் மோகன், குமார், திருமதி கமலாவின் தங்கை சிவகாமி, மற்றும் திரு. பழனிசாமியின் தம்பி வழக்கறிஞர் நல்லியண்ணன் துணைவியார் திருமதி மல்லிகா, மகன் கோபி, அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருந்த காட்சியையும் மாட்சியையும் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன். வீட்டின் எதிர்ப்புறத்தில்தான், கவிஞர் கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஏ.எல். சீனிவாசனின் இல்லம் இருந்தது. அந்நாளைய மவுண்ட் ரோட்டில், சஃபையர் திரையரங்கின் எதிர்ப்புறத்தில் விண்ணெட்டும் திரைப்படப் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். அப்பதாகைகள் தயாரிக்கப்படும் மோகன் கலைக்கூடமும் எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்தது. எங்கள் வீட்டின் இடப்புறத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ‘Friend’ இராமசாமியின் இல்லமும், நாடகப் பயிற்சிக் கூடமும் இருந்தது. அடுத்ததாக நடிகர் திலகத்தின் மகள் சாந்தியின் இல்லமும், நடிகர் திலகத்தின் அலுவலகமும் அமைந்திருந்தது. அவ்வண்ணமே புகழ்படைத்த மருத்துவர் தாராபாய் இல்லமும், தலைசிறந்த மனநல மருத்துவர் அருணகிரியின் இல்லமும், கவியரசி திருமதி சௌந்தரா கைலாசத்தின் தம்பி வழக்கறிஞர் சேதுரத்தினம் இல்லமும் அமைந்திருந்தது. எங்கள் வீட்டின் பின்புறத்தில், பழம்பெரும் நடிகர் திரு. சகஸ்ரநாமம், பழம்பெரும் நடிகை திருமதி எம்.என்.இராஜம் இல்லங்களும் இருந்தன. 

எங்கள் வீட்டிற்கு அடுத்த வீடான மருத்துவர் ஸ்ரீதர் வீட்டின் நெல்லிக்காய் மரம் எங்கள் சமையலறையிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் இருந்தபடியால், கொத்துக்கொத்தாய் எங்களால் எளிதாகப் பறிக்க முடிந்தது. சில கல்தூரம் நடந்தால், பெரும்புகழ் படைத்த ஔவை டி.கே.எஸ். இல்லமும், அவர் வீட்டிற்கு எதிரில் சிலம்பொலி செல்லப்பனார் இல்லமும் இருந்தது. 

அதற்கருகில், இசையாசிரியைகள் முத்து மீனாட்சி, லலிதா இல்லங்களும், மருத்துவர் சகுந்தலா இல்லமும் இருந்தது. வீட்டிலிருந்து இரண்டு கல் தூரம் நடந்தால் முதன்மைச் சாலை வரும். அச்சாலையில் ஈஸ்வரி தனியார் நூலகம் எங்கள் பெற்றோர்களுக்கு அறிவுக் கோயிலாக மிளிர்ந்தது. அதன் எதிரில் காஷ்மீர் சிற்றங்காடி, Snow White சலவையகம், Bison பெருங்கடை, சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஜனார்தனத்தின் தாயார் இல்லம் போன்றவை அமைந்திருக்கும். அங்கிருந்த நல்வழி மண்டபத்தில் எந்தையாரின் பல கூட்டங்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். 
கோபாலபுர கனரா வங்கிக்கு எதிரில் உள்ள பழம்பெரும் கட்டடத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி.யும், யு.கே.ஜியும் பயின்றேன். பாடத்தைவிட அதிகமாக என் வகுப்புத் தோழி ஸ்ரீமதியைப் பற்றித்தான் அதிகமாகப் பேசுவேன் என்று என்னுடைய அம்மா சிரித்துக் கொண்டே சொல்லுவார். 
ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளை இல்லத்திற்கு அருகில் உள்ள நேஷனல் பள்ளியில் படித்தபொழுது, ஆசிரியை என்னை அடித்ததனால் சினமுற்று பள்ளி முதல்வரிடம், “குழந்தைகளை அடிக்கக் கூடாது. மீறி அடித்தால், மேதகு ஆளுநரிடம் புகார் தெரிவிப்பேன்”, என்று எழுபதுகளிலேயே பேசுகிற மனத்திறம் என் அம்மாவிடம் மட்டுமே இருந்தது என்று நான் பெருமையாகச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். 
இரண்டாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை அண்ணாநகரில் உள்ள புகழ்பெற்ற வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் பயின்றேன். என் அப்பாவின் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் இப்பள்ளியின் நிறுவனராவார். தொடக்கத்தில், அவர் வாழ்ந்த செனாய் நகர் இல்லத்தில் பயிலத் தொடங்கி சிந்தாமணி அங்காடிக்கு எதிரில் வானுயர்ந்த பள்ளியில் மாறிவந்து வகுப்புகள் தொடர்ந்தன. 
எங்கள் தலைமையாசிரியையாகத் திகழ்ந்த திருமதி செண்பகம், கனிவும், கண்டிப்புக்கும் உரிமையானவர். ஆசிரியப் பெருந்தகைகளான திருமதி இராஜலட்சுமி, திருமதி தங்கம், திருமதி லில்லி, திருமதி சாவித்ரி, திருமதி நவநீதம், திருமதி உமா, திருமதி தங்கமணி, திருமதி தில்லிகுமாரி, திருமதி சகுந்தலா, திருமதி செந்தாமரை ஆகிய பதின்மரும் நன்முறையில் வகுப்பெடுத்து எங்களை நல்வழிப் படுத்தினார்கள். நாள்தோறும் பள்ளி தொடங்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆங்கிலத்தில் ‘All things bright and beautiful’ என்ற பாடலும் பாடி வகுப்பகள் தொடங்கப்பெறும். அவ்வேளையில், வாரம் ஒருமுறை அந்நாளைய செய்திகளை ஆங்கிலத்தில் அவையில் பேசுமாறு அழைக்கப்படுவேன். வாரம் ஒருமுறை தையற்வகுப்பு நடைபெறும்போது, ஒருமுறைகூட என்னால் ஒரு கைக்குட்டை கூட செய்யமுடியாமல் தத்தளித்தேன்.
என் வகுப்பில் பயின்றோரான, ஸ்ரீராம், அரவிந்த், வெங்கடேஷ் பாபா, அமுதா இன்றும் தொடர்பிலுள்ளனர். உடன்பயின்ற மற்றவர்கள் சாரதா, இராதா, வித்யபிரியா, அனுசூயா, கீதா, தாமோதரன், சிவக்குமார், கல்பனா, சிவகாமி, வள்ளி, சொர்ணலதா, மாலா, பிரபா, மோகன்ராஜ், பீயூசு, பத்ரி நாராயணன், எம்.பி. லதா, பி.லதா, தீபா, மம்தா, மீரா, சுஜாதா, மதுசூதன், இராஜ்மோகன், தேன்மொழி, கணேஷ், கலையரசன், இராம்பிரபு, பிரமோது, தனசேகர், கணேஷ் நிரஞ்சன், என்.எஸ்.பாலாஜி, பாலாஜி, மாதவி, மகாலட்சுமி, அருணா, நஜிமுனிஷா ஆகிய 41 பேருடன் பயின்றேன். 
மூன்றாம் வகுப்பு பயிலும்போது, பள்ளியின் மாறுவேடப் போட்டியில் குறத்தியாகவே வேடமணிந்து நடித்தேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும், நண்பர்களும் உண்மையிலேயே பெண்ணாகவே நீ மாறிவிட்டாய் என்று பாராட்டினார்கள். ஆனால், என்னுடைய வருத்தம் நான், “ஒரு குறத்தி நான் ஒரு குறத்தி நான் ஒரு குறத்தி”, என்று மூன்றுமுறை மட்டும் சொல்லி இறங்கி விட்டேன். நான்காம் வகுப்பின் மாறுவேடப் போட்டியில், நான் மருத்துவராகவும், என் தம்பி பரதன் நோயராகவும் நடித்து முதல் பரிசு பெற்று கூடுதலாக பணிநிரம்ப செய்யும் நிறுவனரையும், தலைமையாசிரியையும் நான் பரிசோதிக்க விரும்புகிறேன் என்று நான் அறிவித்தவுடன் அரங்கமே அதிர்ந்து சிரித்தது. 
ஐந்தாம் வகுப்பு மாறுவேடப் போட்டியில், நான் ஆரூடக் காரனாக புனைந்து நடித்து சில காலங்களில் இப்பள்ளி ஒரு பெரும் கல்லூரியாக மாறும் என்று சொல்லி வாழ்த்தினேன். அந்த வாழ்த்தொலிக்குப் பெரும் கரவொலி எழுந்தது. வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி என்று வான்முட்ட இன்று பட்டொளி வீசிக் கொண்டிருப்பது பெருமையாகும்.
அன்றாட சொற்கள்ஆங்கில மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட விழைகிறேன். அக்கூற்று நாம் சிந்திக்கத் தக்கதாகும்.“The words with which we have to do, taking the most extensive view of the field, are in fact organic remains deposited under the various currents of external influence that have washed the shores of India during twenty centuries or more…The trade and conquests of the Arabs both brought foreign words to India and picked up and carried westward, inform more or less corrupted, words of Indian Origin, some of which have in one way or other become part of the heritage of all succeeding foreigners in the East…The conquests and long occupation of the Portuguese, who by the year 1540 had established themselves in all the chief ports of India and the East, have as might have been expected, bequeathed a large number of expressions to the European nations who have followed and in great part superseded them.”
தொ. எண். நாடுகளின் பெயர் இயற்பெயர் திசைச்சொல்1 தென்பாண்டிநாடு எருமை, ஆ சோறு பெற்றம் சொன்றி2 குட்டநாடு தாய், ஞாய் தள்ளை, ஞெள்ளை3 குடநாடு தந்தை அச்சன்4 கற்காநாடு வஞ்சர் கையர்5 வேணாடு கோட்டம் கிழார்6 பூழிநாடு நாய், சிறுகுளம் ஞமலி, பாழி7 பன்றிநாடு செறு செய்8 அருவாநாடு செறு, சிறுகுளம் செய், கேணி9 அருவாவட தலைநாடு குறுணி, புளி குட்டை, எகினம்10 சீதநாடு ஏடா,தோழன் தோழி , தம்மாயி எலுவன், இகுளை தந்துவை11 மலைநாடு தோழி இகுனை12 புனல்நாடு தாய் ஆய்13 குடகம் பிள்ளை குடா14 சிங்களம் ஐயோ அந்தோ15 கருநடம் கைப்பற்ற விளித்தல் பனிக்க சிக்க கரைதல் குளிர16 வடுகநாடு சொல் செப்பு17 தெலுங்கநாடு பசு, எருது பாண்டில்18 துளு மாமரம் கொக்கு
செய்யுள் வழக்குச் சொற்கள்உரைநடை இலக்கியங்கட்கு இயற்சொற்களே பெரிதும் உரிமையுடையன என முன்னர்க் காட்டினோம். செய்யுள் வழக்குக்கு அவ்வியற்சொல்லும், திரிசொல்லும், வடசொல்லும், திசைச்சொல்லும் ஆகிய நால்வகைச் சொற்களும் உரிமையுடையன. அவற்றுள்ளே திரிசொற்கள் செய்யுட்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாம். அவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுள்மொழி என்பர். 
திரிசொல் இயற்சொல்லின் வேறாயது. திரிதல் வேறுபடுதல், வேறுபடுதலாவது, இயற்சொற்போல வெளிப்படையாகப் பொருள் விளங்காது. கல்வியறிவால் உணர்வதாய் அமைவது. ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அமையும். திரிசொல் இயற்சொல்லின் வேறாய் நின்று அரிதிற் பொருள் விளக்குஞ் சொல். 
இயற்சொல்லினுந் திரிசொல்லே இலக்கியத்துக்கு இன்றியமையாதது. திரிசொல் இல்லையாயின், சுருங்கச் சொல்லுதல் கூடாது. சுவைபெறப் பெய்தலும் கூடாது. மோனை, எதுகை முதலியன அமைதலுங் கூடாது. கவிநடையும் வேறுபட்டு இழியும், என்று கூறிப் போந்தார்.
வடசொல்ஆரிய சொல் தமிழ்நடை பெற்று வழங்குதல் வடசொல்லெனப்படும். தமிழ்நடை பெறுதலாவது, தமிழோசைக்கு இணங்கி அதற்கு நிகரான தமிழெழுத்தால் அமைவது. வடமொழியோசையும், அதற்குரிய எழுத்தும் அமைய நிற்பன ஆரியச் சொல்லென்றும், தமிழ் நடைபெற்றுத் தமிழே போல விரவி நிற்பன வடசொல்லென்றும் பகுத்துணர்ந்து கொள்ளலாம். தமிழ் இயற்கை ஒலியுடையதாகலின், உரப்பியும், எடுத்துங்கனைத்தும் கூறும் வடவெழுத்துகளை நீக்கி, அவற்றுக்கு நிகரான தமிழ் எழுத்துகளை இட்டு வழங்குதலைத் தொல்காப்பியனாரும் நன்னூல் பவணந்தியாரும் அவரையுள்ளிட்ட ஆசிரியர் எல்லாரும் வேண்டினர். செந்தமிழ் வழக்கை மதித்து நூல்செய்த சங்ககாலச் சான்றோரும், இடைக்காலச் சான்றோரும், பிற்காலச் சான்றோரும், இக்காலச் சான்றோரும், அம்மரபினை வழுவவிடாது பெரிதும் பேணி வருவாராயினர்.
செயற்கை ஒலிகளையுடையது ஆரியம். அவ்வாரியமொழிச் சொற்களைத் தமிழ்நடைப் படுத்தாது கிடந்தாங்கு வழங்குதலினால், இனிய செந்தமிழ்க்கு அமைந்த இனிய நல்லோசை வளங்குன்றி விடும். எழுத்துகளின் இன்னோசை அமைப்புத் திரியும். நாளடைவில் அவ்வழக்குத் தமிழின் மொழி நடையை மாற்றி அது பிறிதொரு மொழியாகத் திரிதற்குத் துணை செய்யுமென்க. அவ்வாறே அருந்தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடமாகத் திரிந்ததை மொழி வரலாற்றால் அறிகின்றோம். அத்துணை சிறந்த பாதுகாப்பினை ஆசிரியர் தொல்காப்பியனார் ஐயாயிரவாண்டுகளுக்கு முன்னரே தமது இலக்கண நூலிற் செய்தமை பாராட்டற்பாலதாம்.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே,என்றும்,சிதைந்தன வரினு மியைந்தன வரையார்.என்றும் பொதுவகையில் இலக்கணவரம்பு செய்தார். அச்சூத்திரங்களை விளக்கிய சேனாவரையர், “வடசொற்கிளவியாவது, வடசொற்கே உரிய வெனப்படுஞ் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்லாம். 
எனவே, பொதுவெழுத்தால் இயன்ற வடசொல்லும் செய்யுள் செய்தற்குச் சொல்லாம் என்றவாறாயிற்று. அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந் தொடக்கத்தன. பொதுவெழுத்தால் இயன்றனவேயன்றி வடவெழுத் தால் இயன்ற வடசொல் சிதைந்துவரினும் பொருத்தமுடையன செய்யுளிடத்து வரையார். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரிய வாய் வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க என்று கூறியதும் நோக்கியறிக.
Report of the special Committee on Education 1943″The problem of teaching Tamil also is primarily a problem of providing books. Those at present used in the schools are obtained from South India. Written to suit Indian students, they are not altogether suitable for Ceylon Students. Though the literary language is the same in India and in Ceylon, the Colloquial languages of the two countries differ widely. Owing to the insularity of the country, the Tamil language of Ceylon has remained comparatively free from the influences of other languages, and struck out on a line different from the Tamil language of India. Through the influence of Indo Aryan language and of Arabic and Persian, the spoken Tamil of India contains many non-Tamil words and phrases which are unintelligible in Ceylon. There is too a tendency in India to borrow Sanskrit words and phrases without changing them into the Tamil phonetic system. Moreover, the Indian text books use Sanskrit Characters for reproducing foreign words with non-Tamil sounds, a, practice which has never obtained in Ceylon. Ceylon Tamil is to be maintained in its purity, therefore, the selection of Indian books to be used in our schools must be carefully made. The considerable differences between written and spoken Tamil require that considerable attention be paid to grammar.”
வளரும்…

  • முனைவர் ஔவை ந. அருள்,தொடர்புக்கு dr.n…@gmail.com—-

unread,5 Oct 2020, 17:03:39to மின்தமிழ்28. அருந்தமிழில் கலந்துள்ள வடமொழி / ஆங்கிலச் சொற்கள்
முனைவர் ந. அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு================================================= 
என் அம்மாவின் ஆருயிர் தந்தையார் திரு.மாசிலாமணி பிள்ளையவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரைப் பற்றி, என்அப்பா எழுதிய நினைவுக் குறிப்பை என் தாயாரிடம் படித்துக் காண்பித்தேன். அப்போது உடனே என் அம்மா கேட்டார்கள், ‘உனக்கு என் அப்பாவை நினைவிருக்கிறதா?’ என்று. எனக்குத் தாத்தாவை மிக நன்றாக நினைவிருக்கிறது என்று நான் கூறினேன். அவர் எனக்குப் பால் கலந்து தந்த காட்சிகளெல்லாம் என் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறது என்றேன். அவர் மறையும்போது உனக்கு என்ன வயது என்று என்னிடம் என் அம்மா மீண்டும் கேட்டார்கள். எனக்கு மூன்று வயது என்றேன். மூன்று வயதில் நடைபெற்றது உனக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டு வியந்தார்கள். 
எங்கள் மூவரின் வளர்ச்சியில் நாள்தவறாமல் கண்ணூன்றிக் கண்டு நெகிழ்ந்த பெறற்கரியவர் என் அன்னையார். என் நினைவுகளின் நீளத்தை நான் எடை போட்டுப் பார்க்க விரும்பினேன். நான் சிறுவனாக இருந்தபோதே விருந்தினர்கள் எங்கள் வீட்டிற்கு வரும்போது என் அண்ணன் கண்ணனுக்கு நிறையத் தின்பண்டங்கள் வாங்கி வந்து தருவார்கள் என்று என் பெற்றோர்கள் சொல்வார்கள். ஆனால் ஒன்றைக்கூட அவன் எடுத்து உண்டதேயில்லை. வைத்த இடத்தில் அப்படியே இருக்கும் என்பார்கள். ஆனால், நான் இரண்டாம் மழலையாகப் பிறந்தபோது, அண்ணனுக்கும் எனக்கும் இரண்டாண்டுகள் இடைவெளி. நான் பிறந்து சில மாதங்கள் கழித்துத் தின்பண்டங்கள் அனைத்தையும் நான் ஆர்வமாக உண்பேன் என்று என் அண்ணன் கூறியதாக என் பெற்றோர்கள் மகிழ்ந்து வியப்பார்கள்.
நான் வளர்ந்த பெசன்ட் ரோடு அழகான இடமாகும். அந்தக் காலத்தில் ‘கிருஷ்ணாயில்’ என்று வண்டியில் மண்ணெண்ணெய் விற்பார்கள். ‘கெரோசின்’ எண்ணெயைத் தான் கிருஷ்ணாயில் என்று சொல்கிறார்கள் என்று ஒருமுறை அப்பா கூறினார். பெசன்ட் ரோட்டில் திரு. நாராயண பிள்ளை, கதையாசிரியர் பாலசுப்பிரமணியம், நகைச்சுவைத்திலகம் டி.எஸ். துரைராஜ், டி.என். சிவதாணு இல்லங்கள் இருந்தன. மேலும், பாலசுப்பிரமணிய பக்தஜனசபை என்ற மண்டபத்தில் பல்வேறு கூட்டங்களில் எங்கள் தந்தை உரையாற்றும்போது பார்வையாளராகக் கலந்து கொண்டதையும் நான் நினைந்து பார்க்கிறேன். எங்கள் பெசன்ட்ரோடு இல்லத்திற்கு வராத பெரியவர்கள் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச் செல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் திரு. துரைமுருகன், முத்தமிழ்க் காவலர், தவத்திரு ஊரனடிகள், புலவர் புலமைப் பித்தன், பல தலைசிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள் என்று பட்டியல் நீளும்.

அப்போது நான் பயன்படுத்திய கருப்பு நிறப் பையில், என் வியர்வை படர்ந்து என் கைகளில் கருப்பு நிறம் படிந்ததை நான் பலமுறை கண்டிருக்கிறேன். என் அம்மா என்மேல் தூசி படிய விடமாட்டார்கள். சின்ன அண்ணா என்னை அடிக்கடி துடைத்துவிடுவார். அம்மாவுக்கு சிறுகறை, தூசி எங்கும் பிடிக்காது. அண்ணாநகரிலுள்ள வள்ளியம்மாள் மேனிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும்போது, முதன்முறையாக நான் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு, ‘சித்தார்த்தா மீண்டும் மனக்குழப்பமா’ என்ற வரிகளையே மீண்டும் மீண்டும் சொல்லி, அதற்கு மேல் பேச முடியாமல் திணறி நின்றேன்.

அப்பள்ளியில் ‘பீயுஷ்’ என்ற நண்பர் முத்து முத்தாக எழுதுவார். என்னுடன் இரண்டாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து படித்து வந்தவர் வெங்கடேஷ் பாபா, அரவிந்து என்பவராவர். இவர்கள் இருவரும் என்னுடன் பன்னிரண்டாவது வரை படித்து வந்தனர். 

என்னுடன் படித்த திரு. அரவிந்து (லால்குடி ஜெயராமன் மாணவர்) அற்புதமாக வயலின் வாசிப்பவராவார். இன்றைக்கு அவரும் அமெரிக்காவில் இருக்கிறார். நண்பர் வெங்கடேஷ் பாபா தனியார் விமான நிறுவனத்தில் பெரிய பதவியில் உள்ளார். இவரும் ஆங்கிலக் கருவியான ‘Band’ வாசிப்பதில் வல்லவராக பல இன்னிசை நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். அவர்களைப் போலவே என்னுடன் 2-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயின்ற ஸ்ரீராம் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே வளர்ந்தவர். அவருடைய அண்ணன் இராமசாமி, தம்பிகள் இராமநாதன், சங்கர், தங்கைகள் சித்ரா, சுதா போன்றோர் எங்கள் குடும்பத்துடன் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். இவர்கள் படிப்பதற்காகவும், ஐ.ஐ.டி.யில் சேர்வதற்காகவுமே படித்து அமெரிக்காவில் குடியிருக்கப் போகிறார்கள் என்ற நோக்கத்திலேயே அவர்களின் பெற்றோர் வளர்த்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம். 
இவர்கள் ஆறு பேரும் பின்னர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து, பின்னர் ஐ.ஐ.டி-யில் சேர்ந்து படித்து, இன்று அமெரிக்காவில் புகழோடு வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அப்பா புகழ்பெற்ற ‘டன்லப்’ நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தவர். என்மீது அதிகம் பரிவுகாட்டி நீயொருவன்தான் உன் தந்தையைப் போலத் தமிழ்பேசி, தமிழிலக்கியம் பயின்று மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகவே உன் அப்பாவைப் போல வருவாய்” என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுத்துவார். அவர் சொன்னது உண்மையாகவே மாறிவிட்டது. அவர் இன்று அமெரிக்காவில் தன் குடும்பத்தாருடன் பெருவாழ்வு வாழ்வதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன். என்னுடன் 5-ஆம் வகுப்புவரை பயின்ற திரு. இராஜ்மோகன் வீட்டிலுள்ள Weston TV-யில் வரும் ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வாரந்தோறும் சென்று வருவேன். 
இந்த பள்ளியின் சிறப்பு இன்றைக்கு எங்கும் சிறந்து இருப்பதால் என்னுடன் பயின்ற திருமதி அமுதா இன்றைக்கு வள்ளியம்மாள் பள்ளி மாணவ-மாணவியர்களையெல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்காக ஒருமுறை விருந்து நிகழ்ச்சி நடத்தி என்னை அழைத்ததையும் நான் நினைவுகூர்கிறேன். அண்மையில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பாக மாலை அணிவிக்கும்போது, அப்பள்ளியின் முதல்வர் திருமதி பத்மினி அவர்களை நான் பார்த்து, நான் உங்கள் பள்ளியில் படிக்கும்போது, நீங்கள் எனக்கு நான்கு வயது மூத்தவர்கள் என்று நினைவுப்படுத்தியதை அறிந்து அவர் வியந்தார். 

எப்படி என்னை நினைவிருக்கிறது என்றவுடன், என் வீட்டின் அடுத்த வீட்டில் Indian Fertilizers Limited- நிறுவனத்தில் பணியாற்றிய திரு. சீனிவாசன் அவர்களின் மகள் பிரேமா தங்கள் வகுப்புத்தோழி. அவர்களும், அவர் தம்பி ராம்கியும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்கள் இன்னொரு அக்கா சுதா அக்காலத்தில் மருத்துவக் கல்லூரியில் பயின்றதும் நினைவு கூர்ந்து, இன்று பிரேமா மருத்துவராக அமெரிக்காவிலும், ராம்கி, சீனாவிலுள்ள ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டேன். ஆக, வள்ளியம்மாள் பள்ளியில்தான் என்னுடைய தொடக்கக்கல்வி உரம் அமையத்தொடங்கியது என்று நான் நினைத்து  மகிழ்கிறேன்.

தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களின் பொதுப் பட்டியல்

தொ. எண் தமிழ் வடமொழி 1. இலக்கு – லக்ஷ்ய 2. உலகம் – லோக 3. கலை – கலா 4. கோட்டம் – கோஷ்ட 5. சாலை – சாலா 6. தயிர் ததி 7. திறம் – ஸ்திர 8. தூண் – தூணம் ஸ்தாணு 9. படி – பரதி 10. பதம் – பத 11. பலம் – பல 12. பாதை – பாதா 13. மது – மட்டு மது 14. மயிர் – ஸ்மஸ்ரு 15. மாகம் – நாகம் 16. மாதம் – மாஸம் 17. மீன் – மீந 18. வட்டம் – விருத்த 19. விதை – பீஜ 20. விந்து – பிந்து 21. குட்டம் – குஷ்ட 22. மடி – மிரு 23. சடலம் – சரீரம் 24. தாமரை – தாமரஸ 25. மானம் அனுமானம், உபமானம், சமானம், பிரமாணம்26. கமுகு – கரமுக 27. விதை – வருஷ 28. வித்து – விந்து 29. வேட்டி – வேஷ்டி 30. சலம் – ஜலம் 31. நாழி – நாடி 32. ஆகாயம் – ஆகாசம் 33. பூதி – பூழ்தி விபூதி 34. புடவி – ப்ருத்வீ 35. மதங்கம் –  மிருதங் 36. பவளம்  – பிரவாளம் 37. மெது  – ம்ருது 38. செவியுறு –  ஸ்ரு 
தமிழில் கலந்துள்ள ஆங்கிச் சொற்களின் பொதுப் பட்டியல்: அங்கிள், அட்வெர்டைசர், அட்டாக், அடிஷனல், அண்டர்கிரவுண்டு, அண்டர்வேர் அப்ளாஸ், அபார்ஷன், அம்ப்பயர், அயர்ன் பாக்ஸ், அர்ஜென்டு, அரேஞ்ச்மென்ட், அலர்ஜி, அவுட்சைட், அசிஸ்டெண்ட், அலர்ஜி, அவுட்சைட், அசிஸ்டெண்ட், ஆக்டர், ஆக்ஷன், ஆட்டம்பாம், ஆட்டோகிராப், ஆட்டோமொபைல்ஸ், ஆஃப், ஆப்பரேஷன், ஆடியோசென்ட்டர், ஆம்லெட், ஆப்செட்பிரஸ், ஆர்ட்பிரிண்டர்ஸ், ஆல்ரைட், ஆர்ட்ஸ் காலேஜ், ஆஷ்டிரே, ஆன் பண்ணுதல், இங்க்பாட்டில், இன்சூரன்ஸ், இன்ச்டேப், இன்ஜெக்ஷன், இன்ஜினியர், இன்ஸ்டிடியூட், ஈவினிங், ஈஸி, உல்லன், எக்கோ, எக்ஸ்கியூஸ், எக்ஸ்பர்ட், எஞ்சின், எடிட்டர், எம்.எல்.ஏ., எம்பிராய்டரி, எம்ப்ளாய்மெண்ட் எக்சேன்ஜ், எம்போரியம், எம்.பி., எமெர்ஜென்சி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக் – ட்ரெயின், எலாஸ்டிக், எலெக்ஷன், எவர்சில்வர், என்.ஜி.ஓ., என்.சி.சி, எனாமல், எஸ்டிமேட், எஸ்டேட், ஏர்கண்டிஷண்டு, ஏர்லைன், ஏரியா, ஏஜென்ட், ஐ.ஏ.எஸ்., ஐகோர்ட், ஐட்டம், ஐடியா, ஐரோடு, ஐ.ஜி, ஐஸ், ஐஸ்கிரீம், ஒய்ப், ஒயர், ஒரிஜினல், ஓ.கே, ஓல்டேஜ், ஓவர் ஆயிலிங், ஓவர்டேக், ஓவர்லுக், க்யூ, க்ராக், க்ராப், க்ராஸ், க்ரீம், கிரீஸ், க்ரைண்டர், க்லாஸ், க்ளிப், க்ளீன், க்ளைமாக்ஸ், கசின், கட்டிங்பிளேயர், கட்பீஸ், கண்டிஷன், கம் (பிசின்), கம்ப்ளெய்ண்ட், கம்பவுண்டர், கம்யூனிஸ்ட், கமெண்ட்டரி, கர்ச்சிப், கரண்ட், கலர், கலெக்டர், கவர்னர், கண்ட்ரோல், கன்ஸ்யூமர், கஸ்டம்ஸ், காட்டன், காம்பவுண்டு, கார், காலண்டர், காலிஃப்ளவர், கான்ட்ராக்டர், கான்வென்ட், காஸ்ட்லி, கிக், கிரிக்கெட், கிலோகிராம், கிலோமீட்டர், கீ, குருடாயில், குவார்ட்டர்ஸ், கூல்ட்ரிங்க்ஸ், கூலிங்கிளாஸ், கேக், கேன்ட்டின், கேமிரா, கேரம்போர்டு, கேஸ், கைடு, கொக்கோ, சப்ளை, சம்திங், சர்க்கஸ், சர்ட், சர்வேயர், சலூன், சவுண்டு, சாக்லேட், சார், சாலரி, சான்ஸ், சிக்னல். சிகரெட், சிட்பண்ட், சில்க், சிலிண்டர், சீசன், சீல், சீன், சூட்கேஸ், சூப்பர் மார்க்கெட், செக், செட்டில்மெண்டு, செயின், செஸ்ட், செஸ், சைடு பிசினஸ், சோபா, ட்யூப்லைட், ட்ரம், ட்ரா, ட்ராபிக், ட்ராமா, ட்ரிம், ட்ரை, டம்ளர், டவல், டாக்ஸி, டாப், டாய்லெட், டார்ச், டயல், டான்ஸ் , டிப்ஸ், டிபன்பாக்ஸ், டிமாண்ட், டிலே, டெய்லர், டெய்லி, டென்னிஸ், டேபிள், டொனேஷன், டோக்கன், டெளட், திக், நம்பர், நர்ஸ், நர்ஸரி, நர்சிங் ஹோம், நார்மல், நியூஸ், நெக்லஸ், நெய்ல்பாலீஷ், ப்ரெசன்ட், ப்ரஷர் குக்கர், பிரெட், ப்ரேயர், ப்ரோக்கர், ப்ளக், ப்ளாட், ப்ளாக், ப்ளாஸ்டிக், ப்ளேடு, கஃப்ராடு, பட்டன், பர்ஸ், பவுஃபுல், பவுடர், பாண்டு, பாத்ரூம், பாய்லர், பார், பால்பென், பாலிடெக்னிக், பாலித்தீன், பாலிஷ், பிசி, பில், பிஸ்கட், பீட்ரூட், பீன்ஸ், பீஸ், பெயிண்ட், பென்ஷன், பேஷண்ட், பைப், போட்டோ, போலீஸ், போன், மக், மஃப்ளர், மாடல், மிக்சர், மிக்ஸி, மிஸ்டர், மூட், மெடிக்கல் ஷாப், மெயின்ரோடு, மெஸ், மேடம், மைக், மொசேயிக், யூ.கே.ஜி, யூஸ்லெஸ், ரசீது, ரப்பர், ரவுடி, ரவுண்டு, ரஷ், ராஸ்கல், ரிசப்ஷன், ரிசர்வேஷன், ரிப்பேர், ரியல் எஸ்டேட், ரிலீஸ், ரூம், ரெடி, ரெஸ்ட், ரேட், ரேஷன், ரைட், ரைஸ்மில், ரோஸ்மில்க், லக், லாட்ஜ், லாரி, லிட்டர், லிப்ஸ்டிக், லிஃப்ட், லிஸ்ட், லூப், லூஸ், லெட்டர், லேட், லைசென்ஸ், லோன், வயரிங், வாட்ச், வாலிபால், விக், விசா, விசில், விட்டமின், வில்லன், வீக், வெராந்தா, வெரிகுட், வேன், வேஸ்ட், ஜாம், ஜாலி, ஜீன்ஸ், ஜூஸ், ஜெயில், ஷட் அப், ஷட்டர், ஷாம்பு, ஷிப்ட், ஷூ, ஷோரூம், ஸ்கிரீன், ஸ்டவ், ஸ்டுடியோ, ஸ்டோர், ஸ்பீக்கர், ஸ்பீடு, ஸ்லிப்பர்ஸ், ஸ்லோ, ஸ்வெட்டர், ஸுப்பர், ஹலோ, ஹால்டிக்கட், ஜெயில்.
வளரும்…- 

e from this group, send email to minTamil-u…@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

You received this message because you are subscribed to the Google Groups “மின்தமிழ்” group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u…@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ae82badf-7c2e-45f7-b341-a3ce11c5e43an%40googlegroups.com.

unread,25 Oct 2020, 17:41:07to மின்தமிழ்29. அயற் மொழிச் சொற்களின் அணிவகுப்பு
முனைவர் ந. அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு================================================= 
இராயப்பேட்டையிலுள்ள பெசன்ட் ரோடு இல்லத்தில் இருந்தபொழுது எங்களுடைய வீட்டில் எந்தையாரின் நண்பர்கள் பலர் வந்து செல்வதுண்டு. அதில் மிகக் குறிப்பாக பெருமிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் ‘நயவுரை நம்பி’ ஜெகத்ரட்சகன், மேலவை உறுப்பினர் டாக்டர். இரா. ஜனார்த்தனம், பேராசிரியர்கள் சி. பாலசுப்பிரமணியம், சஞ்சீவி, ‘அருட்பா அரசு’ கிரிதாரி பிரசாத், ‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்ரமணியம், திரு. அருள் சங்கர், திரு. வீரமணி, திரு. சுகிசிவம், வழக்கறிஞர் இரவி, ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான், ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், கவிஞர் மீரா, கவிஞர் முருகு சுந்தரம், கவிஞர் நா. காமராசன், கவிஞர் முருக சரவணன், கவிஞர் புலமைப்பித்தன், ‘பாரதி காவலர்’ இராம்மூர்த்தி, ‘பாரதி அடிப்பொடி’ மணி, பேராசிரியர் சு. பாலச்சந்திரன், ஒய்.எம்.சி.ஏ. பக்தவத்சலம், பெ.நா. அப்புசாமி என்ற பல பழுத்த தமிழறிஞர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து சென்றதைக் கண்டு மகிழ்ந்தேன். 

‘கவியருவி’ ஈரோடு தமிழன்பனின் ஒல்லி உடலும், ஒளி உமிழ் சொற்களும் எங்களால் மறக்க முடியாது. என் அண்ணனையும் என்னையும் தூக்கிச்சுமந்த அந்த தோள்களும் ஜெர்ரி, ககாரின் என்று எங்களை அழைப்பதையும் நாங்கள் மறக்கவே முடியாது. தொலைக்காட்சியில் அவர் செய்திகள் படிப்பதைக்கேட்ட பிறகு தான் தமிழுக்கு அமுது என்று பேர் என்று நான் நினைப்பது உண்டு. 

பெசன்ட்ரோடு இல்லத்தில் இருந்த பொழுது என்னுடைய தந்தையாரும் தாயாரும் அலுவல் பணியாக காலை முதல் மாலை வரை பணியாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் எங்கள் மூவரையும் காவல் தெய்வம் போல இருந்து அரவணைத்தவர் திரு.நாராயணன் என்பவர் ஆவார். அவரை நாங்கள் ‘சின்னண்ணா’ என்று தான் எப்பொழுதும் அழைத்துப் பழகியிருக்கிறோம். அவர்தான் எங்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். அவர் காரைக்குடியில் இருந்து வந்தவர். திருத்தணிகையிலுள்ள சரஸ்வதி மில்லின் உரிமையாளர் திரு. நாராயணன் செட்டியாரிடம் பணியாற்றிக் கொண்டிருந்த திரு சுப்பையாவும், திரு.அழகப்பனும் எங்கள் அப்பா அங்கு செல்லும் போதெல்லாம் உடனிருந்து கவனித்தவர்கள். அவர்களிடம் எந்தையார் ஓர் இளைஞரை சென்னைக்கு எனக்கு உதவியாளராக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் உடனே தங்கள் தம்பி நாராயணனை பெசன்ட் ரோடு இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அவர் எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களைக் கண்ணும் கருத்துமாக எங்களுடைய படிப்பு, உணவு, நாங்கள் எப்படி எல்லாம் பண்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களைச் செதுக்கிச் செதுக்கி வளர்த்தவர். கண் இமை இரண்டும் காப்பது போல் எங்கள் குடும்பத்தை வண்ணமுறக் காத்தவர். எங்கள் பெற்றோர்கள், “ஒரு நாளும் அவர் வாய் முணுத்துக் கண்டதே இல்லை” என்பார்கள். 
அவர் எங்களுக்கு வாத்தியாராகவும், வளர்ப்புத் தாயாகவும் எல்லா வகையிலும் எங்களைப் பார்த்து, நாங்கள் ஒரு குறையுமின்றி, நாங்கள் எந்த வேளையில் சாப்பிட வேண்டும், பால் எந்த வேளையில் அருந்த வேண்டும், மோர் எந்த வேளையில் அருந்த வேண்டும் என்று நயந்து சொல்வார். 
என்னுடைய தந்தையார் அடிக்கடி அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியராய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் இங்கு இவனைப் பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேன் என்று பாரதியின் வரிகளை அடிக்கடி சொல்லி மகிழ்வார். அவருடைய கண்ணிலேயே நல்ல குணம் இருப்பதைப் பார்த்துத்தான் எங்கள் இல்லத்தில் இருந்து, வளர்ந்து அவர் அடுத்த நிலையாக அருட்செல்வரின் தனிச்செயலாளர் பண்புத்திலகம் இரவியின் பரிந்துரையால் சின்னண்ணா-நாராயணன் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு ஆணிவேராக திரு.இரவி திகழ்வதை இன்று நினைத்தாலும் நம் கண்களில் நீர் கசியும். 
அருட்செல்வர் மகாலிங்கம் ஐயா அவருடைய கண்ணுக்கும், அவருடைய சொல்லுக்கும் ஏற்ற ஒரு நல்ல சேவகனாய், தொண்டராய் அவரிடம் பல ஆண்டுகள் பணியாற்றி இன்றும் குடும்பத்திற்கும் அலுவலகத்திற்கும் வேண்டப்பட்டவராக மிக நயமாகப் பணியாற்றுகின்ற பண்பாளராய் மிளிர்கிறார். பல ஆண்டுகள் கழிந்தாலும் இன்றைக்கும் நாங்கள் அவரைப் பார்க்கும் போதெல்லாம் சின்னண்ணா… சின்னண்ணா… என்றுதான் அழைத்து மகிழ்கிறோம். 
பெசன்ட் ரோடு இல்லத்திலிருந்து புறப்பட்டு 1973-களில் அண்ணா நகருக்கு மாறிவிட்டோம். ஆனாலும் பெசன்ட் ரோடு எங்களுக்கு என்றைக்கும் நீண்ட உறவாகவே இருந்ததற்கு காரணம் நாங்கள் அந்த பெசன்ட் ரோடில் இருந்து வெளியேறிய பிறகு எங்களுடைய பெரியம்மா அவர்கள் குடும்பம் அங்கேயேதான் பல ஆண்டுகள் இருந்தார்கள். 
வள்ளியம்மாள் பள்ளியில் இருக்கும் பொழுதே என்னுடைய பெற்றோர்கள் முடிவெடுத்து விட்டார்கள். இனிமுதல் இவர்கள் மூவரும் ஆடவர் பள்ளியில்தான் பயில வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து சென்னையிலேயே எண்பதுகளில் மிகச் சிறப்பாக இருந்த சென்னை கிறித்துவ மேனிலை ஆடவர் பள்ளியில் எங்கள் மூவரையும் எங்களுடைய பெற்றோர்கள் இணைத்தார்கள். வள்ளியம்மாள் பள்ளியிலிருந்து அண்ணனை சென்னை கிறித்துவக் பள்ளிக்கு மாற்றும் பொழுது, மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்கு பல நாட்கள் செலவானது என்பார்கள். நான் ஐந்தாவது படித்தவுடன் என்னுடைய தேர்ச்சி சான்றிதழுடன் என்னுடைய மாற்றுச்சான்றிதழ் அனுப்பி விட்டதைக் கண்டு எங்கள் அம்மா மிகவும் வியந்து பெருமிதம் அடைந்தார்கள். எந்த விதமான முயற்சியும் இன்றி என்னை சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது பள்ளி முதல்வர் திரு.கிளமென்ட் பீலிக்ஸ் எங்கள் அம்மாவிடம் சொன்னார்களாம், “மூன்று பிள்ளைகளையும் நீங்கள் சேர்க்கலாம். ஒருவர் சேர்ந்தால் அடுத்தவர் தானாகவே சேர்க்கப்படுவார்” என்று சொல்லி நாங்கள் மூவரும் அப்பள்ளியிலேயே பயின்றோம். 
பள்ளியின் விளையாட்டுத் திடல் F1, F2, F3, F4 என்று நான்கு நிலைகளாகவும் பள்ளியே மொத்தம் 100 ஏக்கருக்கு மேல் விரிந்து இருப்பதைக் காணும் பொழுது பிரமிப்பாக இருக்கும். பெரிய வகுப்பறைகளையும், கவினார்ந்த கட்டிடங்களையும் கண்ட பொழுது இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற மிகச்சிறந்த பள்ளியான ETON என்ற பள்ளிதான் நினைவு வரும். பள்ளியில் எந்தப் படிப்பிற்கும் குறைவில்லை. எந்தப் படிப்பையும் படிக்கலாம். ஓவியம் கற்றுத் தரப்படும். மரத்தச்சு வேலைகளையும் நாங்கள் பயின்றோம். மிக அற்புதமான ஒரு இசைக்குழு (band) இருந்தது. எல்லாவிதமான மேற்கத்திய இசைக் கருவிகளைக் கற்றுத் தெளிவதற்கும் அங்கு ஓர் ஆசிரியர் இருந்தார். 
ஆறாம் வகுப்பில் நாங்கள் சேரும் பொழுதே மொத்தமாக 72 மாணவர்கள் பயின்றோம். ஆறாவது வகுப்பு பயிலும்போதே முதன்முறையாக சுற்றுலாவாக மாமல்லபுரத்திற்கு 20 ரூபாய் செலவில் சென்று வந்ததை நான் இன்றும் நினைந்து மகிழ்கின்றேன். 
மிகத் திறமையான மாணவர்கள் எங்கள் மத்தியில் படித்தார்கள். இன்றைக்கு அவர்கள் எல்லாம் தலைசிறந்த மருத்துவர்களாக, பொறியாளர்களாக, அமெரிக்காவிலும், துபாயிலும், லண்டனிலும், சென்னையில் மிகப்பெரிய நிறுவனங்களிலும் மிகப்பெரிய பதவிகளிலும் இருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகின்றேன். ஆசிரியர்களாக திரு.லோகநாதன், மணிவாசகம், தமிழாசிரியர் ஜெயராமன், தமிழாசிரியர் சம்பத், மோசஸ் கணபதி, திரு. லட்சுமி நாராயணன், திரு. கட்டார் சிங், சுந்தர் சிங் என்று ஆசிரியப் பெருமக்கள் பட்டியலே நீளும். 
ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது டேராடூனில் ராஷ்ட்ரிய மிலிட்டரி சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று நான் நேர்காணலில் வெற்றி வாய்ப்பு இழந்தேன். ராணுவப்படை, கப்பற்படை, விமானப்படை என மூன்று பிரிவுகள் இருந்தன. நான் 7ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை அந்தக் கப்பல் குழுவில் இடம் பெற்று செவ்வாயும், வியாழனும் பள்ளி வகுப்புக்கள் முடிந்த பிறகு அணிவகுப்புகளில் எல்லாம் கலந்து கொண்டதை நினைத்துப் பார்க்கின்றேன். சென்னைத் துறைமுகத்தில் பெரிய கப்பல்களைப் பார்க்கும் வாய்ப்பும், பாய்மரப்படகு ஓட்டுவதற்கான வாய்ப்பும் தரப்பட்டது. 
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் அப்பொழுதே நான் கலந்து கொண்டு திருக்குறள் செல்வன் என்ற வெற்றிச் சான்றிதழையும் பெற்று மகிழ்ந்தேன். பாரதியினுடைய நூற்றாண்டு விழா நடைபெற்ற பொழுது முதன்முறையாக அனைத்து பள்ளிப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டியிலும் நான் கலந்து கொண்டேன். 
பள்ளிக்கூடத்திற்கு நாள்தோறும் பேருந்தில் சென்று நெடுக நடந்து எல்லோரிடமும் பண்பாகவும் பரிவாகவும் நடந்து பல நண்பர்களைப் பெற்றேன். 
இன்றும் நண்பர்கள் அனைவரும் தொடர்பிலேயே உள்ளோம். குறிப்பாக என்னுடைய இனிய நண்பராக திரு. சாய்சேஷன் எந்தவொரு ஐயத்திற்கும் அமுதசுரபி போலத் தீர்வுகளை வழங்கி வருவதுடன், என்னுடைய முனைவர் ஆய்வு நூலை நேர்த்தியாக மெருகேற்றியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமையும் தமிழில் ஆழ்ந்த செழுமையும் வாய்த்தவர் ஆவார். ஒருமுறை என் மகள் ஆதிரையைக் கண்டதும் அவர் கேட்ட கேள்வியொன்று எவ்வளவு அழகான கவிதை நடையில் அமைந்துள்ளதென்று பாருங்கள். 
நான் அருளுடன் பள்ளிக்குச் சென்றேன், ஆத்திசுடி கற்றுக் கொண்டேன். எழுதியது யார்? என்றேன். ஔவையார் என்றார்கள். அவ்வை யார்? என்றேன். பாட்டி என்றார் தமிழ் ஆசிரியர். இன்று அருள் இல்லத்திற்கு சென்றேன் ஆதிரை சொல்கிறாள் அவ்வை தாத்தா என்று காலம் மாறிவிட்டது. 
பெரும் பேராசிரியர் தெ.ஞானசுந்தரத்தின் மகன் சேந்தன் அமுதனும் என்னுடன் பயின்றவர் ஆவார். மதிய உணவு வேளைக்குப் பிறகு எங்கள் பள்ளியின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள ‘மேரி ஐஸ்கிரீம்’ வண்டியில் வரும் பலவண்ண ஐஸ்கிரீம்களையும் மாங்காய் கீற்றுகளையும் தவறாமல் உண்பது எங்கள் வாடிக்கையாகும். 
—————————- அயற்மொழிச் சொற்களின் அணிவகுப்பு I. அணிகலன்:- 1 அட்டிகை கன்னடம் 2 கொலுசு தெலுங்கு 3 ஜிமிக்கி இந்தி 4 தோடு இந்தி 5 நத்து இந்தி 6 பேசரி இந்தி 7 ராக்கடி இந்தி 8 லோலாக்கு இந்தி 9 தாயத்து அரபு 10 நகாசு அரபு 11 பாட்லா மராட்டியம் 12 பாசிபந்து பாரசீகம் 13 புல்லாக்கு துருக்கி 14 மெடல் ஆங்கிலம் 
II. ஆடை உடை:- 1 உருமால் பாரசீகம்2 குடித்துணி பாரசீகம் 3 குல்லாய் பாரசீகம் 4 சரிகை பாரசீகம் 5 சகலாத்து பாரசீகம் 6 சால்வை பாரசீகம் 7 தாவணசி பாரசீகம் 8 மல் பாரசீகம் 9 லுங்கி பாரசீகம் 10 கதர் இந்தி 11 டோரியா இந்தி 12 துப்பட்டி இந்தி 13 தோத்தி இந்தி 14 தொப்பி இந்தி 15 பாகை இந்தி 16 புட்டா இந்தி 17 நாடா இந்தி 18  முண்டாசு இந்தி 19 லங்கோடு இந்தி 20 ஜோடு இந்தி 21 கமிசு அரபு 22 சிராய் அரபு 23 நிசார் அரபு 24 மகமல் அரபு 25 ஜிப்பா அரபு 26 பனியன் அரபு27 சொக்காய் தெலுங்கு 28 ஜாக்கட்டு ஆங்கிலம் 29 டிராயர் ஆங்கிலம் 30 பாடி ஆங்கிலம் 31 சூட்டு ஆங்கிலம்32 ஷர்ட் ஆங்கிலம் 33 கோர்ட்டு ஆங்கிலம் 34 காலர் ஆங்கிலம் 35 டை ஆங்கிலம் 36 பாக்கெட் ஆங்கிலம் 37 பித்தான் ஆங்கிலம் 38 பிளானல் ஆங்கிலம் 39 பெல்டு ஆங்கிலம் 40 பூட்சு ஆங்கிலம் 41 சப்பாத்து போர்த்து 42 துவாலை போர்த்து 43 சாரி சமஸ்கிருதம் 44 நோரியல் மலையாளம் 
III. உணவு:- 1  அல்வா அரபு2  ஜிலேபி அரபு3  மசாலா அரபு4  முரப்பா அரபு5  மைசூர்பாகு அரபு6  கிச்சடி இந்தி7  கீர் இந்தி8  கேசரி இந்தி9  கோவா இந்தி10  கொத்சு இந்தி11  லட் இந்தி12  பக்கோடா இந்தி13  பஜ்ஜி இந்தி14  பூரி இந்தி15  பேணி இந்தி16  பேடா இந்தி17  மிட்டாய் இந்தி18  ரவை இந்தி19  ரொட்டி இந்தி20  சப்பாத்தி பாரசீகம்21  பர்பி பாரசீகம்22  பாதாம் பாரசீகம்23  பூந்தி பாரசீகம்24  புலாவ் பாரசீகம்25  மைதா பாரசீகம்26  சாம்பார் மராட்டியம்27  சேமியா மராட்டியம்28  கோசுமரி மராட்டியம்29  டாங்கர் மராட்டியம்30  பட்டாணி மராட்டியம்31  பாத்து மராட்டியம்32  தோசை போர்த்து33  கருவாடு போர்த்து34  ஐஸ்கிரீம் ஆங்கிலம்35  கேக்கு ஆங்கிலம்36  சாக்லட்டு ஆங்கிலம்37  பப்பிரமெண்டு ஆங்கிலம்38  பிஸ்கொத்து ஆங்கிலம்39  டோஸ்ட்டு ஆங்கிலம்40  அன்னாசி போர்த்து41  பரங்கி (ப்பழம்) போர்த்து42  பப்பளிமாசு மலேயம்43  மங்குஸ்தான் மலேயம்44  ஆரஞ்சு ஆங்கிலம்45  ஆப்பிள் ஆங்கிலம்46  சப்போட்டா ஆங்கிலம்47  தம்பட்டம் ஆங்கிலம்48  பேரிக்காய் ஆங்கிலம்49  ஒயின் ஆங்கிலம்50  ஓவல் ஆங்கிலம்51  கலர் ஆங்கிலம்52  காபி ஆங்கிலம்53  கொக்கோ ஆங்கிலம்54  சாலட் ஆங்கிலம்55  சோடா ஆங்கிலம்56  பிராந்தி ஆங்கிலம்57  லெமனேட்டு ஆங்கிலம்58  ஆல்பக்கடா பாரசீகம்59  எலுமிச்சை அரபு60  சர்பத்து அரபு61  கொய்யா பிரேசில்62  சாயா சீனம்
IV. கட்டடப்பொருள்:- 1 ஆர்ச்சு ஆங்கிலம் 2 கர்டர் ஆங்கிலம் 3 காம்பரா ஆங்கிலம் 4 காம்பவுண்டு ஆங்கிலம் 5 கேட்டு ஆங்கிலம் 6 செட்டு ஆங்கிலம் 7 பங்களா ஆங்கிலம் 8 தார்சா ஆங்கிலம் 9 கோரி பாரசீகம் 10 ஜன்னல் போர்த்து 11 வராந்தா போர்த்து 12 குசினி போர்த்து 13 கிராதி போர்த்து 14 கக்கூசு டச்சு 15 காடிகானா இந்தி 16 பாலம் இந்தி 17 மால் அரபு 
V. அறையுறை:- 1 அலமாரி போர்த்து 2 மேசை போர்த்து 3 ஈசிசேர் ஆங்கிலம் 4 சோபா ஆங்கிலம் 5 டீப்பாய் ஆங்கிலம் 6 பீரோ ஆங்கிலம் 7 பெஞ்சு ஆங்கிலம் 8 குரிச்சி அரபு 9 பங்கா இந்தி 
VI. பயன்பொருள்:- 1 குண்டாக் மராட்டியம் 2 கெண்டி மராட்டியம் 3 கூஜா அரபு 4 கோப்பை ஆங்கிலம் 5 தம்ளர் ஆங்கிலம் 6 கெட்டில் ஆங்கிலம் 7 பீங்கான் சீனம் 8 லோட்டா சீனம் 9 அண்டா இந்தி 10 வாளி இந்தி 11 தேக்சா இந்தி 

VII. கூலங்கள்:- 1 அரிக்கன் ஆங்கிலம் 2 ஆரொட்டி ஆங்கிலம் 3 ஆக்கர் ஆங்கிலம் 4 இசுக்போல் ஆங்கிலம் 5 இஞ்சின் ஆங்கிலம் 6 ஊக்கு ஆங்கிலம் 7 சிமிட்டி ஆங்கிலம் 8 சிலேட்டு ஆங்கிலம் 9 பம்பு ஆங்கிலம் 10 பாட்டில் ஆங்கிலம் 11 பல்பு ஆங்கிலம் 12 பிக்காசு ஆங்கிலம் 13 புனல் ஆங்கிலம் 14 மிஷின் ஆங்கிலம் 15 மில் ஆங்கிலம் 16 மீட்டர் ஆங்கிலம் 17 நட்டு ஆங்கிலம் 18 லஸ்தர் ஆங்கிலம் 19 லாந்தர் ஆங்கிலம் 20 ராட்டு ஆங்கிலம் 21 வாட்சு ஆங்கிலம் 22 ஜாக்கி ஆங்கிலம் 23 கப்பி அரபு 24 கித்தான் அரபு 25 கீல் (கீர்) அரபு 26 கோலி பாரசீகம் 27 படுதா பாரசீகம் 28 குப்பி இந்தி 29 கொப்பரை இந்தி 30 ஜமுக்காளம் இந்தி 31 டப்பா இந்தி 32 டப்பி இந்தி 33 சாக்கு டச்சு 34 சாவி போர்த்துக்கீசியம் 35 சாடி போர்த்துக்கீசியம் 36 பீப்பாய் போர்த்துக்கீசியம் 
வளரும்… 

அயற்மொழிச் சொற்களின் அணிவரிசை

இளம் பிள்ளைகளாக நாங்கள் இருந்த பொழுதே நாங்கள் அணிந்த சட்டைகளும் பேண்டுகளும் வித்தியாசமாக அமைந்ததற்குக் காரணம் இராயப்பேட்டை கவுடியா மடத்திலுள்ள ‘ஜூவல் டெய்லர்ஸ்’தான். அதேபோல அருகிலுள்ள பைலட் திரையரங்கத் தில் நாங்கள் பல திரைப்படங்களைப் பார்த்துள்ளோம். குறிப்பாக, ‘காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தை அங்கு தான் நாங்கள் பார்த்தோம்.
அண்ணாநகரில் எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே, பெரிய விளம்பர நிறுவனத்தை நடத்திய திரு.இ.பி.ஜி. நம்பியார், சென்னையின் ஆட்சியராக இருந்த திரு.எம்.ஏ. ஷெரீப் இ.ஆ.ப., தலைசிறந்த குழந்தை நல மருத்துவர் திருஞானசம்பந்தம், திரு. சீதாராம்தாஸ், இ.ஆ.ப., திரு. ஏ.பி. முத்துசாமி, இ.ஆ.ப., முன்னாள் தலைமைச் செயலாளர் திரு.ஜெ.ஆர். இராமநாதன், இ.ஆ.ப., திரு.சி.என். இராமதாசு, இ.ஆ.ப., திரு.ஷெனாய், இ.கா.ப. ஆகியோர் இல்லங்களும் அமைந்திருந்தன. எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த ஃபோர்டீன் ஷாப்ஸில் (14 Shops) இல்டா (HILDA) ஸ்டோர்ஸ் என்ற கடையும் இருந்தது. என்னுடைய அப்பா தொலைபேசியில் யார் பேசினாலும், “இல்டா ஸ்டோர்சுக்குப் பின்புறம் வாருங்கள் அங்குதான் என்னுடைய இல்லம் உள்ளது” என்று பேசுவார்கள்.
அதேபோல முன்னாள் சட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.பொன்னையன் இல்லமும், எங்களுடைய ஆசிரியர் திருமதி. சாவித்திரி அம்மையார் இல்லமும் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. குடும்ப நண்பர் என்கிற வகையில், அவர்களுடைய இல்லத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் பலமுறை வந்து செல்வார். தீபாவளியை முன்னிட்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் வந்த பொழுது எனக்கு எப்படி பட்டாசு வெடிப்பது என்று கற்றுக் கொடுத்தார். ஒரு வத்திப்பெட்டி அளவுக்கு உள்ள ஒரு ரயில் பெட்டி, கயிற்றிலே வேகமாகப் போவது போல வெடி வெடிக்கும் ஓர் அற்புதமான நிகழ்வையும், எப்படியெல்லாம் பட்டாசுகள் வெடிக்கலாம் என்பதையெல்லாம் அவர் எனக்கு பொறுமையாகக் கற்றுக்கொடுத்தது இன்றைக்கும் நினைவில் உள்ளது.
அண்ணாநகர் இல்லம் அருகில்தான் பாரதரத்னா எம். விஸ்வேஸ்வரய்யா கோபுரம் உள்ளது. கல்லூரிக் காலங்களில் என் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்குள்ள படகுக் குழாத்தில் படகிலேயே சென்ற நினைவுகள் எல்லாம் எனக்கு நினைவில் உள்ளது. சென்னை கிறித்துவப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நாட்டு நலப்பணித்திட்டத்தில் நான் சேர்ந்து அங்கும் சமூகத் தொண்டில் ஈடுபட்டேன். அதேபோல புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியிலும் நாட்டு நலப்பணித்திட்டத்தில் கலந்து கொண்டேன். தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின் அணிவகுப்பின் பள்ளியின் சார்பாக கலந்து கொண்டேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கட்டிடத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு எதிரிலுள்ள மொழித்துறையில் முதுகலைத் தமிழிலக்கியம் ஈராண்டுகள் பயின்றேன். என்னைத் துறையில் இணைத்து எனக்கு எல்லாமாக இருந்து வழிநடத்தியவர் பேராசிரியப் பெருந்தகை முனைவர் சி. பாலசுப்பிரமணியம் அவர்களாவார். அவர் எந்தையாரின் வகுப்புத் தோழர்; பெரும்பேராசிரியர்; அங்குலம் அங்குலமாக என்னை வளர்த்துப் பல பேச்சுப் போட்டிகளுக்கெல்லாம் அனுப்பி செதுக்கியவர் ஆவார். நான் முழுமையாக தமிழிலக்கியத்தில் ஈடுபட்டு கல்லூரிப் பேராசிரியராக வளரவேண்டுமென்று பெரிதும் விரும்பினார். களங்கமில்லாத நெஞ்சத்தோடு என்னை வளர்த்த பெருந்தகைக்கு நான் எப்பொழுதும் கடன்பட்டவனாவேன்.——————————————————–அயற்மொழிச் சொற்களின் அணிவரிசைகவின்பொருள்:-1 அம்பர் அரபு2 அத்தர் அரபு3 உக்கா அரபு4 ஊதுபத்தி அரபு5 சவ்வாது அரபு6 சலாமிசிரி அரபு7 அபின் பாரசீகம்8 கசகசா பாரசீகம்9 ரவேஸ் பாரசீகம்10 ரெக்கு பாரசீகம்11 கஞ்சா இந்தி12 சோப்பு ஆங்கிலம்13 சிகரெட்டு ஆங்கிலம்14 சாம்பிராணி மலேயம்
போக்குவரவு:-1 ஏரோப்ளேன் ஆங்கிலம்2 கார் ஆங்கிலம்3 கோச்சு ஆங்கிலம்4 சாரட்டு ஆங்கிலம்5 சைக்கிள் ஆங்கிலம்6 டக்கு ஆங்கிலம்7 டிராம் ஆங்கிலம்8 மோட்டார் ஆங்கிலம்9 பஸ் ஆங்கிலம்10 பீட்டன் ஆங்கிலம்11 லாரி ஆங்கிலம்12 ரயில் ஆங்கிலம்
தகவல் தொடர்பு:-1 இன்சூர் ஆங்கிலம்2 கவர் ஆங்கிலம்3 கார்டு ஆங்கிலம்4 போஸ்டாபீசு ஆங்கிலம்5 மணியார்டர் ஆங்கிலம்6 ரிஜிஸ்தர் ஆங்கிலம்7 லேபில் ஆங்கிலம்8 லெட்டர் ஆங்கிலம்9 ஜட்கா இந்தி10 சப்பரம் இந்தி11 டோலி இந்தி12 ரேக்ளா இந்தி13 தபால் இந்தி14 லக்கோடா இந்தி15 மேனா பாரசீகம்16 கடுதாசி அரபு17 ரிக்‌ஷா

யப்பான்

வாணிகம்:-1 அட்வான்சு ஆங்கிலம்2 ஆண்டிமாண்டு ஆங்கிலம்3 காண்டிராக்டு ஆங்கிலம்4 டெண்டர் ஆங்கிலம்5 டிப்பாசிட்டு ஆங்கிலம்6 பண்டு ஆங்கிலம்7 மார்க்கட்டு ஆங்கிலம்8 வங்கி ஆங்கிலம்9 அட்டவணை மராட்டியம்10 உண்டியல் இந்தி11 சவுக்கார் இந்தி12 செலாவணி இந்தி13 சிட்டை இந்தி14 துபாஷ் இந்தி15 பட்டியல் இந்தி16 வட்டம் இந்தி17 லாலா இந்தி18 லேவாதேவி இந்தி19 கசர் அரபு20 கசாப்பு அரபு21 கரார் அரபு22 குசில் அரபு23 சிராப்பு அரபு24 தினுசு அரபு25 தினுசுவாரி அரபு, பாரசீகம்26 மகமை அரபு27 மெளசு அரபு28 ரகம் அரபு29 கிட்டங்கி மலேயம்30 சந்தா பாரசீகம்31 தராசு பாரசீகம்32 பசார் பாரசீகம்33 மேஸ்திரி போர்த்து34 நிரக்கு போர்த்து
எடை அளவு:-1 அந்தர் ஆங்கிலம்2 டன் ஆங்கிலம்3 அஞ்சு ஆங்கிலம்4 பர்லாங்கு ஆங்கிலம்5 மைல் ஆங்கிலம்6 ஏக்கர் ஆங்கிலம்7 செண்டு ஆங்கிலம்8 டசன் ஆங்கிலம்9 கொயர் ஆங்கிலம்10 ரீம் ஆங்கிலம்11 கண்டி மராட்டியம்12 ராத்தல் அரபு13 தோலா இந்தி14 கஜம் பாரசீகம்15 தஸ்தா பாரசீகம்.

ஆட்சியியல்:-1 அசல் அரபு2 அத்து அரபு3 அமுல் அரபு4 அகேர் அரபு5 அனாமத்து அரபு6 அயன் அரபு7 ஆசாமி அரபு8 ஆசில் அரபு9 இனாம் அரபு10 இருசால் அரபு11 உசூர் அரபு12 ஐவேசு அரபு13 கஜானா அரபு14 கவுல் அரபு15 காயம் அரபு16 சிபாயத்து அரபு17 கிஸ்து அரபு18 கைது அரபு19 ஷரத்து அரபு20 தணிக்கை அரபு21 தபசில் அரபு22 தஸ்தி அரபு23 தாக்கீத் அரபு24 தாக்கல் அரபு25 தாசில் அரபு26 பசலி அரபு27 பாக்கி அரபு28 நகது அரபு29 மசரா அரபு30 மராமத்து அரபு31 மாசூல் அரபு32 மாமூல் அரபு33 மிராசு அரபு34 முகாம் அரபு35 ரயத்து அரபு36 ரொக்கம் அரபு37 வசூல் அரபு38 வஜா அரபு39 வாரிசு அரபு40 வாய்தா அரபு41 ஜப்தி அரபு42 ஜமாபந்தி அரபு43 பாரசீகம் அரபு44 ஜாரி அரபு45 ஜாமீன் அரபு46 ஜாஸ்தி அரபு47 ஷரா அரபு48 அமீனா அரபு49 ஆஜர் அரபு50 இஸ்தியார் அரபு51 கைதி அரபு52 தகராறு அரபு53 தகதா அரபு54 தரப்பு அரபு55 தாணா அரபு56 பைசல் அரபு57 நாசர் அரபு58 முனிசிப்பு அரபு59 ரத்து அரபு60 ராசி அரபு61 ருஜூ அரபு62 ரோக்கா அரபு63 வக்காலத்து அரபு64 வக்கீல் அரபு65 இலாக்கா அரபு66 கஸ்பா அரபு67 சன்னது அரபு68 தாக்கீது அரபு69 தாலுக்கா அரபு70 பிதிஷி அரபு71 பிர்க்கா அரபு72 மசோதா அரபு73 மாகாணம் அரபு74 மாசர் அரபு75 மாப்பு அரபு76 மாஜி அரபு77 ரஜா அரபு78 அம்பாரி அரபு79 லாயம் அரபு80 கசரத்து அரபு81 அம்பாரம் பாரசீகம்82 அர்ஜி பாரசீகம்83 ஆப்காரி பாரசீகம்84 ஜமாசு பாரசீகம்85 கம்மி பாரசீகம்86 கார்வார் பாரசீகம்87 கானுகோ பாரசீகம்88 குமாஸ்தா பாரசீகம்89 கொத்துவால் பாரசீகம்90 கோஸ்பாரா பாரசீகம்91 சரகம் பாரசீகம்92 சராசரி பாரசீகம்93 சிரஸ்தார் பாரசீகம்94 தர்க்காஸ்து பாரசீகம்95 பந்தோபஸ்து பாரசீகம்96 பாவத்து பாரசீகம்97 பினாமி பாரசீகம்98 நவுக்கர் பாரசீகம்99 ரசீது பாரசீகம்100 வாபீசு பாரசீகம்101 ஜமீன் பாரசீகம்102 டபேதார் பாரசீகம்103 டவாலி பாரசீகம்104 தஸ்தாவேஜு பாரசீகம்105 பிராது பாரசீகம்106 சர்க்கார் பாரசீகம்107 பிப்பந்தி பாரசீகம்108 தர்பார் பாரசீகம்109 திவான் பாரசீகம்110 மொகர் பாரசீகம்111 யதாஸ்து பாரசீகம்112 ரோந்து, லோந்து பாரசீகம்113 சிப்பாய் பாரசீகம்114 துப்பாக்கி பாரசீகம்115 பாரா பாரசீகம்116 பீரங்கி பாரசீகம்117 சர்தார் பாரசீகம்118 சவாரி பாரசீகம்119 சவுக்கு பாரசீகம்120 சுபேதார் பாரசீகம்121 சேணம் பாரசீகம்122 லகான் பாரசீகம்123 பட்டா இந்தி124 மிட்டா இந்தி125 கேது இந்தி126 சுருதி இந்தி127 கலான் இந்தி128 டேரா இந்தி129 கொட்டடி இந்தி130 டலாய்த்து இந்தி131 கச்சேரி இந்தி132 தண்டோரா இந்தி133 தமுக்கு இந்தி134 பிசானம் தெலுங்கு135 சம்பிரதி தெலுங்கு136 கலெக்டர் ஆங்கிலம்137 செட்டில்மெண்டு ஆங்கிலம்138 டே ஆங்கிலம்139 வாரண்டு ஆங்கிலம்140 ஜவாப் ஆங்கிலம்141 அசெசர் ஆங்கிலம்142 அபிடவிட்டு ஆங்கிலம்143 அப்பீல் ஆங்கிலம்144 இன்லெண்டு ஆங்கிலம்145 ஈரங்கி ஆங்கிலம்146 உயில் ஆங்கிலம்147 கிரிமினல் ஆங்கிலம்148 கேசு ஆங்கிலம்149 கோர்ட்டு ஆங்கிலம்150 சம்மன் ஆங்கிலம்151 சிவில் ஆங்கிலம்152 டிக்கிரி ஆங்கிலம்153 புரோநோட்டு ஆங்கிலம்154 பீசு ஆங்கிலம்155 பெட்டிஷன் ஆங்கிலம்156 பென்ஷன் ஆங்கிலம்157 நோட்டீசு ஆங்கிலம்158 மவுண்டு ஆங்கிலம்159 மேயர் ஆங்கிலம்160 மேடோவர் ஆங்கிலம்161 மைனர் ஆங்கிலம்162 ரிக்கார்டு ஆங்கிலம்163 ரூல் ஆங்கிலம்164 லாயர் ஆங்கிலம்165 ஜட்ஜ் ஆங்கிலம்166 ஜெயில் ஆங்கிலம்167 ஆபீசு ஆங்கிலம்168 எலெக்‌ஷன் ஆங்கிலம்169 எஸ்டேட் ஆங்கிலம்170 ஏஜண்டு ஆங்கிலம்171 ஓட்டு ஆங்கிலம்172 கவர்னர் ஆங்கிலம்173 சர்க்கிள் ஆங்கிலம்174 சப்போர்ட் ஆங்கிலம்175 சீல் ஆங்கிலம்176 சூப்பிரண்டு ஆங்கிலம்177 பவுண்டு ஆங்கிலம்178 பியூன் ஆங்கிலம்179 போலீசு ஆங்கிலம்180 மேஜிஸ்டிரேட் ஆங்கிலம்181 கிளிப்பு ஆங்கிலம்182 கம் ஆங்கிலம்183 பென்சில் ஆங்கிலம்184 பேப்பர் ஆங்கிலம்185 பேனா ஆங்கிலம்186 பின் ஆங்கிலம்187 பிளாட்டிங்கு ஆங்கிலம்188 நிப்பு ஆங்கிலம்189 ஸ்டீல் ஆங்கிலம்190 துப்பு ஆங்கிலம்191 ஏட்டு ஆங்கிலம்192 ரிவால்வர் ஆங்கிலம்193 படாலியன் ஆங்கிலம்

‘வழக்குச் சொற்கள் முடிவதில்லை’

சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முழுநேர வகுப்பில் இணைந்து, பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் அறிவுரைக்கிணங்க போராசிரியர் வ.ஜெயதேவனிடம் முதுநிலை ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் வ. ஜெயதேவன் உயர்ந்த சிந்தனையாளர்; அடுத்தவரை ஊக்குவிக்கும் மனமாட்சியும், மதிநுட்பமும் வாய்ந்தவர். பல்வேறு செய்திகளைத் தேர்ந்து தெளிந்து முடிவுகளைக் கூறுபவர். பேராசிரியர் ஜெயதேவன் போன்றவர்கள் தொடக்கத்திலேயே அயல்நாடுகளுக்குச் சென்றிருந்தால், அவருடைய அறிவுப் பெருமிதம் உலகெல்லாம் பரவியிருக்கும். போதுமென்ற மனமே அவருடைய புலமைக்கு அமைதி மனத்தைத் தந்துவிட்டது. கவியரசர் ஈரோடு தமிழன்பன் எழுத்தெண்ணி இவரைத் ‘தமிழின் தங்கக் கப்பல்’ என்று அழைத்தது பொருத்தமான தொடராகும்.
தமிழர் மனங்களில் ஒரு தங்கக் கப்பல்ஆரவாரிக்கும்உப்புக் கடலுக்கு எதிரேஅமைதியானஅருந்தமிழ்க்கடல் பேராசிரியர்வ. செயதேவன்…கிழக்குச் சூரியன்முகம் பார்த்துக் கொள்ளக்கிடைத்தமானுடக் கண்ணாடிஅதிர்ந்து நடக்காதபூனையின்மெத்தென்ற பாதங்களில்உதித்துவரும்இவர் சொற்கள்;ஆனால்வாஞ்சை மட்டுமே இருக்கும்வஞ்சகம் இருக்காது!வளர்வது நம் கண்ணுக்குத்தெரியாமல் வளர்ந்துவரும்குழந்தைகள் போலவளர்ந்துவரும் இவர் செயல்கள்!உழுந்தளவுசெயலாற்றவே உலக அளவுஅலட்டிக்கொள்ளும்மனிதர்களிடையேஉலகளவு செயல்கள் இவரிடம்உழுந்தளவு அலட்டல்இல்லை…..உதாரண மனிதர் செயதேவன்!சிவந்தரோஜா மொட்டாய் இருக்கும்மெரினாக் கட்டடத்துள்மலர்ந்த மானுட ரோஜாசெயதேவன்!இயக்கமாக இருந்துஇயங்கிக் கொண்டிருக்கும்செயதேவன் அறைக்குள்போய்வந்த காற்றுக்குள்ளும்கதவு திறக்கும்காரியாலயங்கள்ஈர நிலா ஒளிபட்டுஇரும்புகள்உருகும் சாத்தியம்எங்கும் இருக்காது எனினும்செயதேவன்அறைக்குள்ளும் துறைக்குள்ளும்எப்படியோ சாத்தியம்என்பதைவரலாறு முரசறையும்!தமிழர் மனங்களில்ஒருதங்கக் கப்பல்…செயதேவன்!பயணப் பதிகம்வளரக்கோடி கோடி அலைகளில்குவிக்கிறோம் வாழ்த்துகள்.———————————-
எதையும் புதுவதாக அறிந்து ஒழுக நினைக்கும் வேட்கை மக்களினத்திற்கு அமைந்த மனவுணர்ச்சியாகும் அரசியல், வாணிகம், கலை, இலக்கியம், பண்பாடு, இணைந்து நாம் நடத்தும் வாழ்க்கையில் பெருகிவரும் உறவுகளின் பயனாகக் கொண்டும் கொடுத்தும் மக்கள் தங்கள் மொழிகளை வளர்க்கின்றனர். அறிவியல் துறைகளைப் பற்றிய விவரங்களும் செய்திகளும் பொதுமக்கட்குச் சென்று சேரவேண்டும் என்னும் கருத்து உலகமெல்லாம் வரவேற்கப்படுகின்றது. காலை முதல் மாலை வரை நம் வாழ்வில் அயல் நாட்டுப் பொருள்கள், சொற்கள், சிந்தனைகள் எவ்வாறேனும் கலந்து விடுகின்றன. 
இந்நிலையில் கற்றார்க்கு மட்டுமே ஒரு மொழி உரியதாக நிற்பதில்லை. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் வகையில் எல்லார்க்கும் இசைவதாய்க் கூட்டு முயற்சியிலேயே மொழி ஊட்டம் பெறுகிறது. தமிழ்மொழியில் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட வழக்காறுகள் பிற்றை நாளில் மாறின. தொல்காப்பியர் காலத்தே ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் கூறப்பட்ட ஆண்பால் பெண்பால் இளமைப் பெயர்கள் இன்றைய வாழ்வில் நாம் காணுமாறு வழக்கில் பல இல்லை. ஏறு, ஒற்றை, ஒருத்தல், மோத்தை, தகர், கண்டி, மூடு, நாகு, அளகு, பிறவு போன்ற சொற்கள் இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு மரபுகள் தாமாகவே விலகும் போலும் புது வரவுகளை ஏற்றுக்கொள்ளவே வழுவமைதிகளும், மரூஉக்களும் ஒரு மொழியின்கண் அமைந்தன எனக் கூறுவாரும் உளர். இவ்வாறு காலந்தோறும் கடியப்படாத வகையில் பல்வேறு சொற்கள் மொழியில் கலந்து இடம் பெறும் சொற்குவியலைத் தொகுத்துக் கூறும் முன்னிலை ஆய்வாக நான் எழுதமுற்பட்ட ஆர்வத்தைக் கருத வேண்டுகின்றேன்.

வாணிகத்தின் பொருட்டும், அரசியல் உறவு காரணமாகவும், தொழில் நுணுக்கத் தொடர்பாலும் மக்கள் பலரோடு இணைந்து வாழ்ந்தனர்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்பயனற வறியா யவனர் இருக்கையும்கலந்தரு திருவில் புலம்பெயர் மாக்கள்கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்”என்று சிலப்பதிகாரத்திலும்,

“மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடிக்கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை?”என்று மணிமேகலையிலும் நாம்காணும் போது, மாற்றங்கள் பலவற்றைக் காணும் இன்றைய நிலையை நாம் என்னென்று கூறுவது.

மொழிக்கலப்பு என்பது தமிழில் மட்டுமே நிகழ்ந்ததன்று. உலகின் செல்வாக்குள்ள மொழியாக அமைந்த ஆங்கிலம் பெருங்கலப்புக்கு உள்ளான மொழியே. இந்திய மொழிகளின் சொற்கள் பலவும் ஐரோப்பிய மத்திய ஆசிய மொழிகளின் வழியாக ஆங்கிலத்தில் பரவிக் கலந்தன என்று ஆப்சன் ஜாப்சன் தம்முடைய சொல்லகராதியின் முன்னுரையில் கூறியிருப்பது கருதத்தக்கது. வானத்தின் கீழே உலகத்தில் ஒவ்வொரு பகுதியினின்றும் பாயும் ஆறுகளனைத்தும் இணைந்து கலக்கும் கடலாகத் திகழும் ஆங்கிலமென்னும் நாகரிக மொழிக்கு நான் நன்றி பாராட்டும் அவாவினன் என்று எமர்சன் தமது தாய் மொழியைப் போற்றினார்.

மொழியைப் பற்றிய சிந்தனைகளையும் இனம், கலை, பண்பாடு நாகரிகம் பற்றிய தனிக்கருத்துகளையும் தெளிவாக அறியும் முயற்சிகள் மொழிவழி மாநிலப் பிரிவுகளுக்குப் பிறகு இந்திய நாட்டில் முன்னேற்றம் பெற்றன. மொழிக்கலப்பின் தேவையைத் தவிர்க்கவியலாது என ஒரு சாராரும், மொழிக்கலப்பால், மொழி கெடும் – தடுக்கப்பட வேண்டியது எனப் பிறிதொரு சாராரும் தத்தம் கருத்துகளை வலியுறுத்துகின்றனர். மொழியியல் நோக்கில் மொழிக்கலப்பிற்கான காரணங்களை அறிஞர் மு.வ. பின்வருமாறு குறித்தார்.
‘எபர்சன் கருத்துப்படிச் சொற்களைக் கடன் வாங்குவதற்குரிய காரணங்கள் மூன்றாகும். 
முதலாவது தம்மிடம் இல்லாத புதிய பொருள்களைப் பயன்படுத்தும்போது, அவற்றின் பிறமொழிப் பெயர்களைக் கடன் வாங்குதல். 
இரண்டாவது ஒரு மொழியாரிடமிருந்து செல்வாக்கோ உயர்வோ பெற்றுள்ள ஒரு துறையைக் கற்கும்போது, அதற்கு உரிய அம்மொழிச் சொற்களையும் கற்றுக் கையாளுதல். 
மூன்றாவது மொழி பெயர்ப்பாளர்கள் சோம்பலின் காரணமாகத் தம் மொழிச் சொற்களைத் தேடிக் காணாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வந்து கலந்து சேர்த்தல்.’ இவ்வாறு ஒரு மொழி கடன் வாங்கியதைப் பற்றி ஆராயும்போது, இன்ன அளவிற்குத் கடன் வாங்கியது என்றும் ஆராய்தல் வேண்டும். பெரும்பாலும் கடன்வாங்கப்படுபவை பொருள்களின் பெயர்களும் பண்பும் ஆகும். வினைச்சொற்கள் மிகக்குறைந்த அளவிலே கடன் வாங்கப்படுகின்றன. இடைச்சொற்கள் கடன் வாங்கப்படுதல் அரிது. துணைவினை முதலியவற்றைக் கடன் வாங்கல் இல்லை. வேற்றுமையுருபுகள், வினை விகுதிகள் முதலியவற்றைக் கடனாகப் பெறுதல் சிறிதும் இல்லை எனலாம். ஒரோவழி எண்ணுப் பெயர்களில் ஒரு சில கடன் வாங்கப்படுதல் உண்டு.
மொழியில் இயற்கை நிகழ்வாக இக்கலப்பு நேர்ந்து கொண்டிருக்க மொழித்துய்மைக்கு அரணாக நின்றோர் பிறமொழிச் சொற்களைச் சுட்டிக் காட்டியும் மொழித் தூய்மையை வலியுறுத்தினர். “வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா” என்று வினவினார் பாவேந்தர் பாரதிதாசன், வடவர் ஆதிக்க எதிர்ப்பு, ஆரிய வெறுப்பு, இந்தி மறுப்பு என்ற எண்ணங்களிலிருந்து விடுபடாமலேயே இந்திய நாட்டு ஒற்றுமைக்கு இசைவாகப் பல்வேறு மாநில மொழிச் சொற்கள் விரவுவதை மறுக்க இயலாதவராக,
“பிரிந்த பகுதி பிணைந்தது பாரடிபிரிய நினைத்தவர் பிழையுணர்கின்றார்.பெருநிலத்தில் ஒரே கொடி பறந்ததுநாவலந்தீவிலோ எல்லாரும் நல்லவர்எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர்இமயச் சாரலில் ஒருவன் இருமினான்குமரி வாழ்வான் மருந்து கொண் டோடினான்.ஒருவர்க்கு வந்தது அனைவர்க்குமென்றமனப்பாங்கு வளர்ந்தது. வேண்டிய மட்டும்இமயம் மீட்கப்பட்டது ஈதோ பார்சீனன் செந்நீர் கண்ணீராகஎங்கோ ஒட்டம் எடுக்கின்றானடி” என்றும் பாடினார்.
வடசொற்கள் எனக் கருத்தப்பட்டவை தமிழ்ச் சொற்களே என வாதிட்டுப் பல சொற்களைப் பலர் பட்டியலிட்டனர். சான்றாக கனம், தானம், இலக்கணம், நேயம், ஆசை, நாடகம், பூசை, தெய்வம், காவியம், காப்பியம், இமயம், வேதம், மானம், ஆதி பகவன், கங்கை, சலம், உவமை, அமிழ்து, ஆலயம், நாகரிகம், திராவிடம், முட்டி, ஆசாரம், அதி, ஆசிரியர், அடம், அரங்கு, முரலை, முரலி, மா, கண்ணியம், காயம், ஓம், சங்கம், பதி, பிலம், குலம், மனம், கன்னி, காலம், உலகம், ஆகுலம், சிவம், சட்ட செட்டி, முகம், காரணம், காரியம், கடிகை, கடிகாரம், கற்பனை, வடிவு, படிவு, தாரம், ஒரை, பரதர், பாரதம், பரதன், தாசர், வித்தகம், மளிகை, பூ (பூமி), குடம், வினயம், கவி, புருவம், வாரி, வாரிதி, தாமரை, பஞ்சம், பனாதி, வேந் தன், ஆய்தம், சங்கம், வரம், பகுதி, பிச்சை, தச்சன், பாக்கியம், கோட்டி, கருப்பம், கூகை, மனிதர், விருத்தம், தூது, சுவர்க்கம், தேவர், அவி, நாகம், பலி, துளசி, வாலி, தாமரை, இலட்சம், கோடி, மலம், ஆயுள், பசு, பதம், கவசம், குண்டம், சூது, விஞ்சை, சடை, மேதை, கம்பளம், அவிசு, அவை, சபை, மேழம், சாரீரம், வீணை, தூரம், கூட்டம், கோட்டம், கூகம், கவழன், இராகு, அகளம், அங்கம், தங்கி, அங்குடம், அங்குரம், அசடு, அடவி, அம்பரம், அம்பா, அமர், ஆகுலம், மங்கலம், மங்களம், ஒட்டகம், தூலம், இயேசு, பலபம், சுலபம், தாளம், மேளம் அருச்சனை, புதன், வியாழன், இலம்பாடி, இரகு, கோளம், காவிரி, ஏளனம், ஆலாபனம், சேது மூலம், வண்ணம், அலாதி, முந்திரி, தை, மது, சாரம், சுரம், பாலன், பாலியன், நீதி, சேட்டு, திருமதி, விகுதி, அச்சாரம், பெட்டி, காந்தி, ஒருவந்தம், புத்தகம், வேகம், திசை, திக்கு, சொத்து, வேகம், வேதனை, சொந்தம், படி, அனுப்பு, அனுபோகம், உத்தரவு, உத்தாரம், உச்சரி, கண்ணியம், கவனம், கண்டம், கொஞ்சம், பாடம், படம், இயேசு, கண்ணி, குமரி, கொட்டாரம், பந்து, சிப்பம், கன்னம், சக்கரம், அகராதி, தன்மை, கிண்கிணி, நுகர், தானம், சிரத்தை, கவனம், செந்திரை, தரை, மானம் என்ற பட்டியலைக் காணலாம்.

32 – ‘வழக்குச் சொற்கள் முடிவதில்லை’

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றபோது,
முனைவர் சி. பாலசுப்பிரமணியம் – சங்க இலக்கியத்தையும், முனைவர் வ. ஜயதேவன் – அகராதியியலையும், முனைவர் மா. செல்வராசன் – இக்காலம் (ம) இடைக்காலம் மற்றும் படைப்பிலக்கியத்தையும், முனைவர் இ. சுந்தரமூர்த்தி – தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தையும், முனைவர் அ. அ. மணவாளன் – இலக்கியத்திறனாய்வு ஒப்பிலக்கியத்தையும், முனைவர் ந. தெய்வசுந்தரம் – பொது மொழியியலையும், முனைவர் இன்னாசி, முனைவர் பொன்னுசாமி மற்றும் ஆய்வு மாணவர் திரு. கார்த்திகேயன் – இலக்கியப் படைப்பியலையும், ஆய்வு மாணவர் திருமதி நிர்மலா – மொழிபெயர்ப்பியலையும் கற்பிக்கும் பேராசிரியப் பெருந்தகையர்களாகத் திகழ்ந்தனர்.
என்னுடன் முதுகலை பயின்றவர்களில், மூர்த்தி குருநானக் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகவும், சற்குருநாதன் அம்பேத்கர் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகவும், ஜயச்சந்திரன் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், மகாதேவ ராவ் தனியார் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் உரிமையாளராகவும், மணிமேகலை சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

எது கலையென்று தெரிவதற்குள்ளே முதுகலையில் முந்திக்கொண்டு பல்வேறு கல்லூரிப் பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் வீறுகொண்டு கலந்து அங்கிங்கெனாதபடி நான் சென்னையை வலம் வந்தேன்.

என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்கப் பல்கலைக்கழகம் செல்லத் திட்டமிட்டு, சிகாகோ இலினாய் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பெர்க்ளி பல்கலைக்கழகம், விசுகான்சின் ,மேடிசன் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பினேன். தொண்ணூறுகளில் இப்பல்கலைக்கழகங்களில், தெற்காசிய இலக்கியத் துறையொன்று அமைந்திருந்ததால், பேராசிரியர் ஏ.கே. இராமானுஜன், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், பேராசிரியர் நார்மன் கட்லர் இவர்களுக்கெல்லாம் தொடர்ந்து கடிதம் எழுதி தமிழிலக்கியத்தை ஆய்வாக அங்குவந்து பயில்வதற்கு முனைந்தேன். இம்முயற்சிகளுக்கெல்லாம் என்னுடைய மாமா மருத்துவர் இளமதியும், முனைவர் வானவன் ஏகாம்பரமும் உறுதுணையாக இருந்தனர். அப்பொழுதே சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு நான் செல்ல திரு.வி.ஜே.பாபு மிகவும் உதவியாக இருந்தார். சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியர் திரு. சுப. தின்னப்பன் மகன் அருண் வீரப்பன் , திருமதி பனையப்பன், திரு. பேரம்பலம், திரு. பார்த்திபன் சண்முகம் போன்றோர் துணை நின்றனர். என்னுடைய அமெரிக்கா ஆய்வு முயற்சி அன்றைய சூழலால் நான் செல்வதற்கு இயலாமல் நின்றது . என் அன்னையாரும் அமெரிக்காவிற்குச் சில ஆண்டுகள் கழித்துச் செல்லலாம் என்று தேற்றினார்கள். அதேபோல உன்னை அந்த நாடே அழைக்கும் ஒருநாள் வராமலா போய் விடும் என்று ஆற்றுப்படுத்தினார்கள். அம்மாவின் வாக்கின்படி, சென்ற ஆண்டு சூலை – பத்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் அரசின் சார்பில் கலந்து கொள்வதற்காக அதே சிகாகோவிற்குச் செல்ல நேர்ந்தது. அம்மாவும் நானும் மகிழ்ந்தோம்.

பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து நீக்க வேண்டுமென்ற துடிப்பு ஒரு புறத்திலும், இவற்றை நீக்க வேண்டியதில்லை என்று கருத்து மறுபுறத்திலுமாகத் தமிழின் மொழிக்கொள்கை இருவேறு இயல்பாக உருப்பெற்றது.

இந்நிலையில் ஒருசாரார் புதிய அறிவுத்துறைப் பொருண்மைகளைக் குறிப்பதற்குப் பிறமொழிச் சொற்களை எடுத்தாளுதலில் எவ்வகையான தடையும் இருக்கக் கூடாது என்றனர். வேறொரு சாரார் தமிழ்ச் சொற்களைத்தான் எங்கும் நாம் வழங்குதல் வேண்டும் என்றனர். இப்போக்கினைப் பற்றி, “இது முடிந்து விடவில்லை. இந்நிலை என்றேனும் முடிந்துவிடப் போவதும் இல்லை, இது புதிதாக உண்டான ஒரு விவாதமும் அன்று. தமிழ் மொழியில் தொடக்க நிலையிலிருந்தே எப்பொழுதும் இது உள்ளதுதான். ஆனால் முன்பெல்லாம் கட்சிப் பிரதிகட்சிகள் இல்லை. வாதப் பிரதிவாதங்களும் இல்லை. பிறமொழிக் கலப்பினால் நமது மொழி பாழாய்விடும் அதைப் பாதுகாத்தற்குத் தமிழ்ப் பாதுகாப்புப் படை ஒன்றுவேண்டும் என்று படை திரட்டியதும் இல்லை. எனினும், உள்ளூர அடிப்படையில் இந்த விவாதம் அமைதியாய் நடந்து கொண்டுதான் இருந்தது. நமது தாய்மொழிக்கு மட்டும் இவ்விவாதம் தனி உரிமையுமில்லை; வழக்கிலுள்ள எல்லா மொழிகளிலும் இது காணப்படுவதே” என்றார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

ஒருவர் வாணிகத் துறையில் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவரிடம் விடுமுதல் அதிகமாயில்லை. தம்மிடமுள்ள கைப்பொருளுக்கு ஏற்றபடிச் சுருங்கிய அளவில் வணிகம் தொடங்குகிறார். இவரிடத்தில் ஐம்பது சரக்குகள்தாம் உள்ளன. இவரைச் சுற்றி வாழும் மக்களுக்குத் தேவையோ இருநூறு சரக்குகள். அச்சரக்கு அவரிடம் இல்லை. அதைக் காட்டிலும் தம்மிடமுள்ள வேறொரு சரக்கு அதிகம் பயனுடையது என்று சொல்லி இச்சரக்கை இவர் கொடுத்து வருகிறார். மக்கள் நிறைவு அடையவில்லை. இதைக் கண்டதும் அவர்கள் கேட்கும் சரக்கு இதுதான் என்று தம் கடையிலுள்ள பிறிதொரு சரக்கைக் கொடுத்து வருகிறார். மக்கள் நிறைவடையாமல் , வாணிகர் மீது மிகுந்த வெறுப்புக் கொள்ளுகிறார்கள். இவர் கடையில் வாடிக்கை வைத்துக் கொள்ளாது வேறுகடைக்கு மக்கள் செல்கிறார்கள். வாணிகர் மற்ற கடைகளோடு சமமாகப் போட்டி போட்டு, மக்கள் வேண்டும் சரக்குகளையும் வாங்கிவைத்து அவர்களையும் நிறைவு பண்ணித் தருகிறார். இவ்வணிக நிகழ்ச்சி போன்றதே மொழி வரலாறும். சொற்களே சரக்குகள் மக்கள் தேவைதான் புதிய அறிவுத் துறைகள்.
ஆனால் வருங்காலத் தமிழைப் பற்றி ஒன்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. வாணிகர் தனது சரக்குகளைச் செய்தது போலத் தமிழ்மொழியும் உயிர் என்ற சொல்லை எவ்வளவு பயன்படுத்தக் கூடுமோ அவ்வளவும் செய்து விட்டது. ஆனால் நாழி முகவாது நானாழி. புதுச் சரக்குகளை வாங்கத்தான் செய்தார் வாணிகர். அது போல ஆன்மா என ஒன்று உண்டு என்று சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, சொல்லளவிலாவது அதனைக் கடன் வாங்க வேண்டியதுதான். கடன் வாங்கிய அச்சொல்லைத் தள்ளிவிட முடியாது என்றும் அவர் குறிப்பதும் சிந்தனைக்குரியது.
பிறமொழிச் சொற்களை முழுவதும் ஏற்பது, அறவே தள்ளி விடுவது என்ற நிலைகளை விடுத்து, இயன்றவரையில் தமிழாக்கம் செய்தும் தனித்தமிழில் எழுதியும் வரும் நிலை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பேரறிஞர் அண்ணா இம்முயற்சியில் தாம் எவ்வளவு வெற்றி பெற்றோம் என்பதைக் குறிப்பிடும் போது, “தம்பி பலவற்றை நான் எழுதிய பிறகு அவற்றில் பிறமொழிச் சொற்களின் கலப்பையெண்ணி வருந்தியுள்ளேன். என்னால் இயன்றது அவ்வளவுதான். நீயாவது பிறமொழிச் சொற்கலப்பை நீக்கி எழுதவும் பேசவும் பழகு” எனக் கூறுவது இங்குக் கருதத்தக்கது.
உலக அறிவியல் வளர்ச்சியோடு ஒப்புநோக்கி பேரறிஞர் வா. செ. குழந்தைசாமி குறிப்பிடும் கருத்துகள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டி, மொழிக் கோட்பாட்டில் ஒரு புதிய அணுகுமுறையை நமக்கு அறிவிப்பதாக அமைந்திருக்கிறது.
தூய்மை, தனித்தன்மை என்பது உயர்ந்த கூறுபாடுகளைக் குறிப்பிடும் சொற்கள். ஆனால், மொழித்துறையில் எது தூய்மை, எது தனித்தன்மை என்பதிலும். அது எங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் நமக்குத் தெளிவு வேண்டும். கன்னித் தன்மை தான் தூய்மையுடையது என்பதில்லை. தாய்மையும் தூய்மையானதே. தன்மை வேறு தனித் தன்மை வேறு. பலருடன் சேர்ந்து செயற்படும் பொழுதுதான், ஒருவரது தனித்தன்மை தெரிகிறது.
தமிழ் விண்ணிலிருந்து பிறந்தது அன்று விண்ணவர் தந்ததும் அன்று மனித சமுதாயம் படைத்த மொழி; மனித சமுதாயம் வளர்த்த மொழி; மனிதன் படைத்த எதுவும் குறையுடையது. வளர்ச்சிக்கு வழியுடையது வளர வேண்டிய தேவையுடையது. எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் தேவையான எல்லாவற்றையும், நம் மூதாதையர்கள், மொழியைப் பொறுத்தவரை முடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று நாம் எண்ணவோ, நம்பவோ இடமில்லை.
தமிழும் உலகிலுள்ள மற்றைய மொழிகளைப் போன்றதே. ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்புகள் இருக்கலாம். தமிழுக்குச் சில சிறப்புகள் கூடுதலாகவே இருக்கலாம். இருப்பினும், வளர்ந்த நாட்டினர் தம் மொழி வளர்ச்சி, அதில் அவர்கள் கடைப்பிடித்த முறை, அவர்கள் கண்ட அனுபவம் ஆகியன சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நமக்கும் பயன்படும் பயன் தரும். நமது மொழி மற்ற மொழிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இயல்பும், சிறப்பும் உடையது என்பது போன்ற பார்வையோடும், மற்ற மொழியினர் அனுபவம் நமக்குத் தேவையில்லை, அல்லது பயன்படாது என்னும் மனநிலையோடும், காதும், கருத்தும் மூடிய நிலையில் இருந்து கொண்டு எழுதுவதும், பேசுவதும் தக்க பாதையாகாது. முன்னேறியுள்ள நாடுகளின் கடந்த கால அனுபவங்களை ஆய்ந்து, அவற்றை இயன்ற வழியில், தேவையான மாற்றங்களோடு பயன்படுத்தி, அதன் வழி நாம் பயன் பெறவேண்டும் என்ற நோக்கம் நமக்கு வேண்டும்.
அருந்தமிழில் அயற் சொற்களை ஆய்வு செய்த வகையில், எதிர் கால நலன் கருதி நாம் ஏற்கத் தக்கதாக துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமி கருத்து அமைகிறது. எனினும், அயல் மொழிச் சொற்கள் வழக்கில் வந்தமை கருதிப் பொதுமக்களுக்கு என்று எழுதும் நூலில் பலவாகப் பிறமொழிச் சொற்கள் அமையுமானால், அவர்களுக்கு என்ன விளங்கும்? கல்லூரியில் பாடநூல்கள் வேறு, பொதுமக்கள் படிக்கும் நூல்கள் வேறு. பொதுமக்களுக்கு அவர்கள் அறிந்த சொற்களைக் கொண்டே தெளிவாக எழுதி நாம் விளக்க வேண்டும். இங்கே மணிப்பிரவாள நடை பயன்படாது. இதனாலேயே இந்த நாட்டுப் பழைய மணிப்பிரவாள நடை வேர்கொள்ளாது மறைந்து விட்டது. உலகம் போகின்ற போக்கில், பொதுமக்கள் மக்களாட்சியில் சிறந்த இடம் பெற வேண்டுமானால், உலக அறிவை எல்லாம் ஒரு வகையாக அவர்கள் எளிமையாகப் பெற்றே தீரவேண்டும். கலைச் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களாக அவர்கள் வாயிலும் காதிலும் இனிக்கின்ற காலம் அமையவேண்டும். முற்காலத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதினாலன்றிச் சில கருத்துகளை விளக்கவே முடியாதென்று அறிஞர்கள் சிலர் கருதினார்கள். ஆனால் நாளடைவில் அந்த அறிவையெல்லாம் எளிய தமிழில் எழுதிக் காட்டக்கூடும் என்ற நிலை ஏற்பட்டபோது, மணிப்பிரவாள நடை தானாவே மறைந்து போனது. இலத்தீனில்தான் கருத்துகளைத் தெரிவிக்க முடியுமென்று நியூட்டன் எழுதினார். இப்போதோ அந்த நிலைமாறி ஆங்கிலத்தில் எழுதும் காலம் அமைந்து விட்டது. அந்த நிலை தமிழில் ஓராண்டில் ஈராண்டில் வாராது. எனினும், கற்றவர்கள் பொதுமக்களுக்காக எழுதும்போது இந்த நிலை படிப்படியாக வளரும். அதுவரையிலும் ஆங்கிலத்தமிழ் மணிப்பிரவாள நடை வழக்கத்தில் இருந்து கொண்டுதான் வரும். பாவேந்தர் பாரதிதாசன் பல புதிய சொல்லாக்கங்களை நமக்கு வழங்கிய போதிலும் அவரும், மியூசியம், தியேட்டர், இண்டியன், ரெயில், இந்தியன் பார்லிமெண்டரி, கவர்னர் ஜெனரல், கோர்ட், எலக்சன், கொம்முயூன், எலச்சியம், அத்மினிஸ்ராத்தேர், பிரெஞ்சு, சர்க்கார், போஸ்த், பிரிட்டிஸ், ஹைதராபாத், பிர்க்கா, தாலுக்கா, ஸ்தலஅதிகாரி, காண்டிராக்ட், பம் பாய், கிராணிக்கல், பிரிபிரஸ் ஜர்னல், நேஷனல் ஸ்டாண்டர்ட், ரிமாண்டு, கமிஷன், கார்ப்பரேஷன், மோட்டார், சோஷலிஸ்டுகள் போன்ற ஆங்கிலச் சொற்களைத் தம்முடைய படைப்புகளில் சேர்க்க நேர்ந்ததை எண்ணிப் பார்க்கலாம். ஆங்கிலம் என்பது ஆங்கிலேயர் மொழி என்னும் பொருளுடையதன்று. ஆங்கில மொழி இன்றைய நிலைக்கு உலக வளர்ச்சியில் புதுமையின் வடிவமாக, புதுமையின் வாய்க் காலாக அமைகிறது. அதனைத் தமிழ்நிலத்தில் பாய்ச்சிக் கொள்வதில் கேடொன்றுமில்லை. பழையன இங்கு நிறைய உண்டு. எல்லாம் செழிப்பாக வளர்வதில் என்ன ஐயம்? எனப் பேராசிரியர் தெ. பொ. மீ. வினவுவது, வருங்காலம் நோக்கித் தமிழில் ஆங்கிலக் கலப்பு நிகழ்வதைத் தவிர்க்க இயலாது என்பதைத் தெளிவாக்குகிறது.

unread,9 Nov 2020, 03:28:57to மின்தமிழ்33 – ‘கலப்புச்சொற்களைத் தவிர்ப்பதில்லை’
முனைவர் ந. அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு================================================= 
முதுகலைமுடித்து முதுநிலை ஆய்வு (M.Phil.) வகுப்பில் இணைந்தேன். அவ்வகுப்பில் 16 பேர் இணைந்து படித்தோம். பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராகவும், பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் பேராசிரியர் சித்ரா மற்றும் மல்லிகா, செந்தாமரை, மூர்த்தி, மகாதேவராவ் போன்றோர் என்னுடன் பயின்றனர்.
எனக்கு இளம் பிராயத்தில் எதைப் படித்தாலும் அப்பாடத்தை ஒட்டிய இடங்களைப் பார்க்க வேண்டும், படித்த நாடகக் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணங்களெல்லாம் என் ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும். ஆறாம் வகுப்பில் செஞ்சிக்கோட்டை என்ற பாடம் படித்தபோது எந்தையாரிடம் செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துச் செல்லுமாறு பலநேரம் கேட்டேன் என்று என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதேபோல, பத்தாம் வகுப்பில் ‘பதினேழாம் நாள்’ நாடகம் படித்து மகிழ்ந்தேன். அந்நாடகத்தை எழுதியவர் என் மாமா பேராசிரியர் இரா.குமரவேலன். அந்நாடகத்தை எங்கள் அண்ணாநகர் இல்லத்தில் திறந்தவெளி மாடத்தில் அரங்கேற்றினோம். அதில் நான் துரியோதனனாகவும், அண்ணன் கண்ணன் கிருஷ்ணராகவும், தம்பி பரதன் புரோகிதராகவும், அண்ணன் முரளி சல்லியனாகவும், நண்பர்கள் இராமசாமி, ஸ்ரீராம், இராமநாதன், கோபால் ஏனைய மகாபாரதப் பாத்திரங்களாக நடித்தனர். கதாபாத்திரங்கள் ஒப்பனைகள் அனைத்தையும் நாங்களே மிக நேர்த்தியாகச் செய்ததெல்லாம் நினைத்து மகிழ்கிறேன். நிறைவாக, நாடகத்தைப் பாராட்டிப் பேசும்போது, எந்தையார் ‘துரியோதனனாகவே அருள் மாறிவிட்டான்’என்று பாராட்டியதையும் நினைத்து மகிழ்கிறேன்.
இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமாண்டு மாநிலக்கல்லூரியில் பயின்றபோதே தமிழ்த்துறை மாணவர்களுக்கு தமிழ்ச்சங்க விழாவில் மிகப் புதுமையாக ‘அணுக்கதிர்ப் பிளவும் – கசிவும்’ என்ற தலைப்பில் ‘மருத்துவ மாமேதை’ செ.நெ. தெய்வநாயகம் தலைமையில் ‘மருத்துவத் திலகம்’ அமலோற்பவநாதன் , ‘மருத்துவச் சுடர்’ சுதா சேஷைய்யன் போன்றோரை மாநிலக் கல்லூரியில் அழைத்து தமிழிலேயே உரையாற்றியதை அப்பொழுதே இதழ்கள் பாராட்டின.
மாநிலக் கல்லூரியில் பயிலும்போதே முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வந்த என் நண்பர் சிவக்குமார் வழிகாட்டுதலில், ‘லியோ கிளப்’பில் உறுப்பினராக நான் சேர்ந்தேன். அங்கு நாங்கள் அரிமா சங்கத்தின்கீழ் இடையறாது சமூகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அச்சூழலில், திங்கள்தோறும் வெளியிடப்படும் ‘லியோ லிங்க்’ என்ற தனியிதழின் ஆசிரியப் பொறுப்பும் எனக்குக் கிடைக்கப்பெற்றது. வாரந்தவறாமல், கூட்டங்களில் ஆங்கிலத்திலேயே பேசுவதும், இதழ்களில் ஆங்கிலக் கட்டுரைகளை வரைவதும் இளங்கலை வகுப்பிலேயே ஒரு பயிற்சியாக மாறிவிட்டது. பல பெருந் தலைவர்களையும், நடிகர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் இயல்பாகக் கிடைக்கப் பெற்றது. கல்லூரிப் பருவத்திலேயே அரிய வாய்ப்பாக பொதுமக்கள் உறவும், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் மலர்ந்தது. லியோ கிளப் கூட்டத்திற்கு தலைமை தாங்க வந்த திருமதி சாவித்திரி இராகவேந்திரா என் ஆங்கில உரையைக் கேட்டுப் பாராட்டி எழுத்தாளர் சிவசங்கரியிடம் பரிந்துரைத்து அவர்கள் தலைமையில் எழுத்தாளர் மாலனுடன் நானும் என் நண்பர்கள் கணபதி சுப்பிரமணியம், அண்ணாமலையுடன் தில்லிக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. அப்பயணத்தில் எழுத்தாளர் சிவசங்கரி மூலமாக பாரதப் பிரதமர் திரு. இராஜீவ் காந்தியை மிக அருகில் சென்று சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது.
லியோ கிளப் வாயிலாக கல்லூரிகளில், பொதுவிடங்களில் குருதிக்கொடை முகாம்கள் நடத்தி கலைஞானி கமலஹாசன் தலைமையில் பேசும் வாய்ப்புக்கள் அமைந்தன. லியோ கிளப்பின் நல்லுறவால் கிடைக்கப்பெற்ற தோழி வித்யா மூலம், பம்பாய் விளம்பர நிறுவனமான கிளியா விளம்பர நிறுவனத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளராக முதுகலை முடித்தவுடனே ஒருசேரப் பணியும் கிடைத்தது. அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சீரோடு சீருந்தில் சென்றுவரும் வசதியுடன், முதுநிலை ஆய்வையும், தில்லி முனைவர் பட்ட ஆய்வையும் முடித்து அதே நிறுவனத்தில் 1997 வரை நிறுவன மேலாளராகப் பணியாற்றி பல்வேறு வணிக நிறுவனங்களின் பங்கு முதலீட்டு விளம்பரவாணராக மிளிர்ந்து இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு வானூர்தியில் எளிதாக சென்று வரும் பாங்கும் வளர்ந்தது.

இந்தியாவிலுள்ள பல நிறுவனங்களுக்கு நல்ல தமிழில் விளம்பரம் வரைவதை உறுதியாக்கம் செய்தேன் என்பது எனக்கு பெருமகிழ்ச்சியாகும்.

என் பாட்டனார் உரைவேந்தர் ஒளவை துரைசாமியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் பெரிய விளம்பரப் பதாகை அமைத்து – தமிழறிஞரின் தனிப்புகழை ஒளிரவைத்த சாதனை கிளியா விளம்பர நிறுவனத்தின் புகழொளியாகும். மேலும், கிளியா நிறுவனத்தின் நிறுவனர்களான திரு. சுனில் கௌதம், திரு. வேணுகோபால், திரு. தவல் தேசாய், முப்படைத் தளபதிகளைப்போல நிறுவனத்தை மும்மடங்கு வேகத்தில் நடத்தி வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். திரு. வேணுகோபாலின் மகள் பெயர் கிளியா. இதற்கு பொருள் கேட்பதே பல நிறுவனத் தலைவர்களின் வாடிக்கையாகும். நான் சொல்லும் பதில், Clea என்ற பெயரை Clear என்று சொல்லி மகிழ்வேன். இம்மூவரும் என்மீது அன்பும் பரிவும் காட்டியதை நினைந்து மகிழ்கிறேன். அவ்வண்ணமே ஆறு திங்களுக்கு மேல், பம்பாயிலேயே நான் பணியாற்ற வாய்ப்பு நல்கியதையும் எனக்காகவே ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் தங்குவதற்கு வசதி செய்ததையெல்லாம் எண்ணிப் பெருமிதமடைகிறேன். வசந்தகால நிகழ்வுகளையெல்லாம் எண்ணும்பொழுது, என்னுடைய இனிய நண்பராக, குடும்ப உறவாக வடுவூரைச் சேர்ந்த திரு.இராதாகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தூணாகத் திகழ்ந்தார். அவருடைய விழியும் எண்ண வழியும், என்னை பல நேரங்களில் அங்கே ஆற்றுப்படுத்தின. அவர் சொறிந்த அன்பு தாயன்பைப் போன்றது. மராத்திய மண்ணில் மறத்தமிழராய் மிளிரும் அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும்; இன்னும் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பது என் விழைவாகும்.

இதுகாறும் தமிழில் அயல்மொழிச் சொற்கள் புகுந்ததை ஆராய்ந்த நிலையில், கலப்பு நேர்வது இயல்பு என்றும், கலப்பாக வருவது வந்த மொழிக்கு வளர்ச்சியாகவும், சொந்த மொழிக்குத் தளர்ச்சியாகவும் அமையக் கூடாது என்ற கருத்து நாட்டவரால் உணரப்படுகிறது. ‘டிக்கெட்’ என்று பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச்சொல், ஐம்பதாண்டுகட்குப் பின்னர்ச் சில மாவட்டங்களில் ‘சீட்டு’ என்று கூறப்படுகிறது. ‘சீட்டு’ என்பதும் தமிழ்ச் சொல்லன்று, எனினும், ‘டிக்கெட்’ என்ற சொல் வழக்கொழிந்தது. ஞாயிறு, திங்கள் முதலியவை கிழமைகளாகக் கருதப்படும்போது நிலைபேறு பெற்றன. இச்சொற்களே சூரியன், சந்திரன் என்னும் விண்கோள்களைக் குறிப் பிடுகையில் வழக்கிற்கு வருவதில்லை. அயலவர் ஆட்சிக்கு ஆட்பட்டதால், ஆங்கிலச் சொற்களின் வரவு நேர்ந்தது. சீனம், ஜப்பான் முதலிய நாடுகள் அயலவர்க்காட்படாதிருந்ததால், எதனையும் தத்தம் மொழியிலேயே வழங்க வேண்டுமென்ற நிலை உண்டாயிற்று. தமிழ் நாட்டிலும் ஆங்கிலச் சொற்கள் பாமரர் வழக்கில் இடம் பெறும்போது, அதனை அயல்மொழி என்று நாம் எவ்வாறு கருத முடியும் என்று வினவும் பேராசிரியர் தெ.பொ.மீ. ஆங்கிலத்தில் எல்லாக் கலைகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலம் வாழ்கிறது என்கிறோம், எல்லாக் கலைகளும் அம்மொழியில் திளைத்துச் செருக்கிக் கூத்தாடுகின்றன. அம்மொழி கற்றார் அதன் வழியே எல்லாம் அறிதல் கூடும், இக்கலைகள் தோன்றிய நாள் முதல் ஆங்கில மொழி அவற்றைப் பேசி வருவதால், இங்கு ஒரு புதுமையும் இல்லை. ஆனால், தமிழோ? தமிழனைப் பாருங்கள். மிகமிகப் பின்தங்கி விட்டான். அவற்றைக் கற்ற தமிழரும் அவற்றை ஆங்கிலத்திலேயே கற்றனர். தமிழில் பேசச் சொல்லின்றித் தடுமாறுகின்றார். இது, கற்றோர்கள் நிலையே அன்றி மற்றோர்கள் நிலை அன்று. பணியாட்கள் தமிழில் அன்றி வேறு எதனில் பேச முடியும்? ஆங்கிலப் பெயர்களை அப்படியே தங்களால் முடிந்த அளவு ஒலித்த தமிழிலேயே பேசுகிறார்கள். இதனைப் பார்த்து மகிழப் பலருக்குக் கண் இல்லை; கேட்டுக் களிக்கக் காது இல்லை; இது தமிழ் இல்லை என்கின்றனர் தமிழ் அறிஞர்கள் . அவர்கள் விரும்பும் தமிழ் அன்று என்பது உண்மையாகலாம். இருந்தாலும் தமிழே, தமிழே, தமிழேயாம். என்று குறிப்பிடுவது ஆழ்ந்த மொழியியல் முடிவாகும்.

தொடக்கநிலையில் முதுநிலை ஆய்வாக அமைந்த என் முயற்சி, இளம் ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்வுக்கும் உறுதுணையாக அமையும் என்பது திண்ணம். அயல்மொழிச் சொற்கள் தமிழில் கலந்துள்ள நிலைகளை,1. தமிழ், தமிழரைப் பற்றிய பிறநாட்டறிஞர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையிலான பிறமொழிக் கலப்பாய்வு.2. இலக்கியங்களில் காணும் பிறமொழிச் சொற்கள்.3. அரசின் முற்கால ஆணைகளில், கோப்புகளில் காணப்படும் பிறமொழிச் சொற்கள்.4. கல்வெட்டுகளில் காணப்படும் பிறமொழிச் சொற்கள்.5. தமிழ் இதழ்கள், நாளேடுகளில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள்.6. பழந்தமிழ் அகராதிகளில் அயல்மொழிச் சொற்கள்.7. தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் அயல்மொழிச் சொற்கள்8. மக்களிடமிருந்து நேரில் கண்டறியும் பிறமொழிச் சொற்கள். எனப் பலவகைளில் எதிர்காலத்தில் ஆராய நம்மைத் தூண்டும். இவை மட்டுமன்றி, அன்றாட வழக்கில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்களை மக்கள் ஈடுபடும் துறைகள் ஒவ்வொன்றிலும் தனித் தனியே கண்டறியவும், எந்தெந்த நிலைகளில் விரவுகின்றன என்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள இடமுண்டு.
விவிலிய ஈபுரு மொழியில் 8000 சொற்களே இருந்தன. ஆனால் இன்றைய ஈபுருவில் பல இட்சக்கணக்கான சொற்களைக் கொண்டே 17 தொகுதிகள் கொண்ட பேரகராதி வெளியிடப்பட்டதை அறிஞர் மலையமான் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் பெருமிதமும் ஊக்கமும் தமிழ் மக்களிடம் மலர வேண்டும்.
ஒரு நாட்டின் மொழிக் கொள்கையைச் சார்ந்தே அந்நாட்டு மொழி வளர்ச்சி அமையும். ஆட்சி, கல்வி, செய்தித் தொடர்பு, அறிவியல் தொழில் நுணுக்கம் முதலிய துறைகளில் ஒரு மொழியைப் பயன்படுத்தும் முறையில் நாடு முழுவதற்கும் ஒருமைப்பாடு வேண்டும் என்று கருதினால் பன்மொழி வழங்கும் நாட்டில் மாநில மொழிகள் சில மாற்றங்களைப் பெறும். அவற்றின் வளர்ச்சி கூடத் தடைப்படலாம். ஒரு மொழியைத் திணித்தல் சிறுபான்மை மொழிகளைப் புறக்கணித்தல் போன்ற மொழிக் கொள்கைகள் மொழிகளின் உறவைச் சீர்குலைப்பதோடு, சமுதாய வளர்ச்சியையும் பின்னடையச் செய்யும் என்றும் மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
வளரும்…

  • முனைவர் ஔவை ந. அருள்,தொடர்புக்கு dr.n…@gmail.com—-

‘ஆய்வுக்கும் கலைக்கும் ஓய்வில்லை’
முனைவர் ந. அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு================================================= 
ஆங்கில அரசு உருவானதும் பல்வேறு பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளிகளையும் மேனிலைப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்க நினைத்தார்கள். அந்த வகையிலேதான் பல்கலைக்கழகமாக கல்கத்தா பல்கலைக்கழகம், பம்பாய்ப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மூன்றும் முதலில் உருப்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து உருப்பெற்று ஓங்கியதுதான் தில்லிப் பல்கலைக்கழகம். தில்லிப் பல்கலைக்கழகம் பரந்து விரிந்த இடத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பல்கலைக்கழகமாகும். தில்லிப் பல்கலைக்கழகத்தில் பழமை பெரிதும் போற்றப்படுகிறது என்பது போன்ற கருத்தால் பிறகுதான் புதுமை உணர்வை வளர்க்க சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

‘கிளியா’ விளம்பர நிறுவனத்தினுடைய பெருமிதத்தால் நான் திங்களுக்கு இரண்டு முறை தில்லி செல்கிற வாய்ப்பு ஏற்பட்டது. அப்படித் தில்லி செல்கிறபோதுதான் என் மனதில் தில்லிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் அரும்பியது. திரும்பிச் சென்னைக்கு வந்து ஒருவாரம் தங்கியிருந்தபோது, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், துறைத்தலைவர், டாக்டர் சி.பா. அவர்களிடம் தில்லியில் போய் ஆய்வு செய்யலாம் என்பதைச் சொன்னேன். அவர் அதை விரும்பவில்லை என்றாலும், நீ விரும்பினால் சென்று வா என்று தான் ஊக்கமளித்தார். பேராசிரியர் சி.பா., நான் தில்லி சென்றால் தமிழ்நாட்டில் புகழ்பெறுவது அரிது என்றும் கருதினார். அப்போது, திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த பொன் சௌரிராசன் எந்தையாரிடம் அருளைத் தில்லிப் பல்கலைக்கழகத்துக்குப் போய் ஆய்வு செய்யச் சொல்லுங்கள். தில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிற பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் கனிவானவர்; பண்பானவர்; இந்தி தெரிந்தவர். அவரிடம் ஆய்வு செய்யட்டும். நான் கடிதம் வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று சொன்னதை வாய்ப்பாக எடுத்துத் , தில்லிப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தேன்.

தமிழிலக்கியம் பயின்றாலும், ஒப்பிலக்கிய நெறிப்பாட்டில் வளரவேண்டும் என்ற விழைவால், தில்லிக்குச்சென்று ஆய்வுசெய்ய நீ முனைய வேண்டும் என்ற எந்தையாரின் அறிவுரைக்கிணங்கத் தில்லியிலுள்ள சிறந்த பல்கலைக்கழகமான தில்லி பல்கலைக்கழகத்தில், நான் முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்தேன்.
அங்கிருக்கும் ‘Modern Indian Languages and Literary Studies’ என்ற துறையில் முனைவர் பி.பாலசுப்பிரமணியத்திடம் (தோற்றம்:10.07.1933- மறைவு: 07.07.2007) ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். வாராது வந்த மாமணிபோலப் பேராசிரியர் என்மீது தனிப்பரிவு காட்டித் தில்லியில் அவர் தங்கியிருந்த ‘கரோல் பாக்’ வளமனையிலேயே எனக்கும் மாடிப்படிக்கருகிலுள்ள அறை ஒதுக்கி, தில்லியில் பயில்வதற்கு வழிசெய்த பெருந்தகை அவராவார். அவர் அப்பல்கலைக்கழகத்திலேயே 1965 முதல் 1997 வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். மொழிபெயர்ப்புக் கலையில் வல்லமை பெற்ற அவர், தெலுங்கில் இயற்றப்பட்ட கதைகளைத் தமிழிலும், எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற புதினத்தைச் சாகித்திய அகாடெமிக்காக ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்தவர் ஆவார். அறிவியல் நுணுக்கம் வாய்ந்தவர். ‘கலைக்கதிர்’ இதழில் பணியாற்றிய பாங்கும், அவரே தானாக ‘அணுக்கதிர்’ என்ற தனியிதழை நடத்திய பெருமிதமும், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் எவருக்கும் அஞ்சாத துணிவும் வாய்ந்த என் பேராசிரியர் தில்லியின் கடுங்குளிரிலும் வாட்டும் வெயிலிலும் பல கருத்துகளை என்னிடம் தன் இல்லத்திலும், தில்லிப் பல்கலைக்கழகத் துறையிலும், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தில்லிப் பூங்காக்களிலும் என்னிடம் பேசியதை நினைந்து நினைந்து நெகிழ்கிறேன். பேராசிரியருடைய துணைவியார் திருமதி சுகந்தா எனக்கு இன்னொரு தாயாக இருந்து அன்பும் பரிவும் ஊட்டி வளர்த்தார்கள். இன்றைக்கு இருவரும் இல்லையென்றாலும், அவர்களுடைய மக்கட்செல்வங்களில் ஒருவரான திருமதி பானுபூஷண்ராஜ் சென்னையில் மருத்துவராகவும், மற்றொருவரான திரு. இரமேஷ்குமார் தில்லியில் இதழாளராகவும் சீரோடும் சிறப்போடும் பணியாற்றி வருகிறார்கள். முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பான ‘Study on Translations and Adaptations of Shakespeare’s plays in Tamil’ என்பதை ஆங்கிலத்திலேயே மூன்றாண்டுகள் ஆய்ந்து தோய்ந்து பலபேரறிஞர்களையும், பேராசிரியர்களையும், சந்தித்துப் பல செய்திகளை அறிந்து இந்தியாவிலுள்ள தலைசிறந்த நூலகங்கள் (தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை) எல்லாம் நேராகச் சென்று, பல தகவல்களைத் திரட்டி ஆய்வினை நிறைவு செய்தேன். இருமொழிப் பெரும் பேராசிரியர் பழநி. அரங்கசாமி அவர்கள் சேக்ஸ்பியர் நாடகங்களின் மொழியாக்கம் பற்றிய நூல் எனக்கு மூலவழிகாட்டியாக அமைந்தது. இன்றும் அவர் பரிவில் இருந்து வருகிறேன். நான் ஆய்வு மேற்கொண்ட துறையின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நான் என் ஆய்வுச்சுருக்கப் பதிப்பை முழுமையாக வெளியிடும் முன், அங்குள்ள பிற இந்தியமொழிப் பேராசிரியர்கள் மத்தியில், என் ஆய்வின் சிறப்புக் கூறுகளைப் பற்றி ஒரு மணிநேரம் ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும். அங்குள்ள வங்கமொழி, அசாமிய மொழிப் பேராசிரியர்கள் தங்கள் கருத்தை முன்மொழிவார்கள். அக்கூட்டத்தில்தான் நான் முதன்முதலாக ஞானபீட இலக்கிய விருது பெற்ற பத்மஸ்ரீ இந்திரா கோஸ்வாமி அவர்களைச் சந்தித்து அவர்களும் என் தலைப்பை வாழ்த்தியது நினைவிருக்கிறது.
என்னுடைய தந்தையார் சொல்வார்கள், நாம் தமிழர் என்பதில் எவ்வளவு பெருமிதம் கொள்கிறோமோ அதே போல இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டைப் பற்றி எண்ணிப்பார்க்கின்ற வகையில் இந்திய மாநிலங்கள் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு நூறு வரிகளாவது தெளிவான குறிப்புக்களை எழுதவேண்டும் என்று வற்புறுத்துவார்கள். நம்மிடையே பலர் அசாம் செல்ல வாய்ப்பில்லை. பல்வேறு மாநிலங்களுக்குப் பலர் சென்றிருக்க மாட்டார்கள். அதிகமாகத் தெரிந்தவர்கள் கொச்சி, மைசூரு, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, தில்லி என்றுதான் குறிப்பிடுவார்கள். இமாசலப்பிரதேசத்தில், சிம்லாவில் ‘Indian Institute of Advanced Studies’ என்னும் பெரிய ஆய்வு நிறுவனம் இருப்பதும், அங்கே அறிஞர்கள் போய் நூலாராய்ச்சி செய்து வருவதும் உண்டு. மெல்லிய குளிர் காற்று எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் அழகிய மாளிகையை நாம் இப்போது நினைத்தாலும் நமக்கு மனம் பெரிய ஊக்கத்தைத் தரும். எனக்குத் தெரிந்து தாம்பரம் கிறித்தவக் கல்லூரியிலிருந்து பட்டிமண்டபத் திலகம் பேராசிரியர் இராசகோபாலன் அந்த ஆய்வு நிறுவனத்துக்குப்போய் மூன்று மாதங்கள் ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார். அந்த வகையிலேதான் நான் கல்லூரி மாணவனாக இருந்த பொழுதே என்னுடைய நண்பனின் உதவியால் ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியதால் தில்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா போன்ற நகரங்களுக்குப் போய்ச்சென்று நான் பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை வந்த போது அந்த மாநகரங்களையெல்லாம் பார்த்து மகிழ்ந்திருந்ததால் நான் தனியாகப் பேராசிரியர் இராசகோபாலனிடம் தில்லியிலிருந்து சிம்லாவுக்குச் சென்று, அவருடன் மூன்று நாள்கள் தங்கியிருந்து அந்நிறுவனத்தின் நூலகத்தைக் கண்டு வியந்தேன்.

தில்லி பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறையின் பேராசிரியர்களாக முனைவர் ஆறுமுகம், கலைச்செம்மல் முனைவர் சாலை இளந்திரையன், இந்திரா பார்த்தசாரதி, முனைவர் இரவீந்திரன், முனைவர் மாரியப்பன் போன்றோர் பணியாற்றினார்கள். இப்பொழுது இத்துறையைச் சீரும் சிறப்புமாகத் தலைமையேற்று நடத்தி வருபவர் முனைவர் கோவிந்தசாமி இராஜகோபால் ஆவார். அவருக்குத் தக்கதுணையாகப் பேராசிரியர் பிரேமானந்தன், பேராசிரியர் உமாதேவி போன்றோர் திகழ்கின்றனர். 1922 – இல் தொடங்கப்பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் 15 முதல் 20 நூலகங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு சாரநாதன், திருமதி இராஜலட்சுமி இணையரின் மகன் திரு நரசிம்மன் என்கிற கண்ணனுடன் அவர் வாழ்ந்து வருகின்ற ஆழ்வார் திருநகரில் அவருடன் பத்தாம் வகுப்பு இணைந்து படித்தேன். கண்ணன் படித்தது ஆவிச்சி பள்ளியில், நான் படித்த்தோ சென்னை கிறித்தவப் பள்ளியில். அவருடைய தமக்கையார் திருமதி சித்ரா நாராயணன் புகழ்பெற்ற பட்டமன்றப் பேச்சாளர், கவிஞர். அவருடைய வழிகாட்டுதலில் கண்ணனும் நானும் கணக்குப் பாடத்திற்காக அவர் சென்று வந்த கணக்காசிரியரிடம் தனிப்பயிற்சிக்குச் சென்று வந்தேன். நான் முன்னரே சொன்னதுபோல கணக்குப் பாடம் படிப்பதற்காகப் பல திசைகள் சென்றேன். வென்றேனா என்பதுதான் எனக்குள் அவ்வப்போது இன்றுவரை எழுந்துவரும் வினாவாகும். கண்ணன் பழகுதற்கு இனிமையானவர். கணக்குப்பாடம் வருகிறதோ இல்லையோ அவர் என்னைத் தன் அன்பால் மெருகேற்றினார். அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம், கலைஞானி கமலஹாசனைப் பார்ப்பதைப் போலவே இருக்கும். அந்தத் தொடர்பு மீண்டும் நான் தில்லியில் முனைவர் பட்டம் பயிலும்போது அரும்பியது. அவர் அப்பொழுதே தில்லித் தலைமைச் செயலகத்தில் உள்துறையில் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்தவர். முனைவர் வகுப்பிற்கு எனக்கு வகுப்பு மாணவர்களே இல்லை. ஓராசிரியர் பள்ளியில் பயில்வதுபோல முனைவர் பாலசுப்பிரமணியனிடம் தில்லிப் பல்கலைக்கழகத்தில் மிராண்டா இல்லத்தில் பயின்றேன். அவ்வப்பொழுது தில்லியைச் சுற்றிக் காட்டுவதையும், தென்னிந்திய உணவுகளைச் சமைத்துப் பரிமாறுவதையும் கண்ணனின் இயல்பான நற்பண்புகளாகும் .

இந்நிலையில், அறிஞர் தெ.பொ.மீ. குறிப்பிடுவதும் சிந்தனைக்குரியது. “தமிழன் சில நூற்றாண்டுகள் தூங்கிக் கிடந்தான். ஆங்கிலேயன் இவனைத் தூங்கவும் வைத்தான். இப்போதுதான் தமிழன் விழித்தெழுகின்றான். ‘ஆமையும் முயலும் ஓடிய கதை’யாய்த் தோன்றுகின்றது. ஆங்கிலேயன் அனைவரையும் தள்ளி முன்னேறி ஓடியுள்ளான். அவன் ஓடிய வழியில் அவன் அடிச்சுவட்டினைப் பின்பற்றித்தானே நாம் ஓட வேண்டும்? விரைவாக ஓடி வெற்றிபெறவும் வேண்டும். ஆங்கிலத்தில் இருப்பதுபோலத் தமிழிலும் எல்லாக் கருத்துகளும் அழகழகாக, இனிமையாக எல்லோருக்கும் எளிதில் எட்டும்படி குவித்துக்குவித்து வைக்க வேண்டும். அதுவரையில் ஆங்கிலத்தையோ பிறமொழிகளையோ நாம் புறக்கணித்துப் பயனில்லை. தமிழ்மொழி பேராற்றல் படைத்தது. கும்பகருணன் பேராற்றல் படைத்தவன். ஆனால், தூங்கித் தூங்கி ஒன்றுக்கும் உதவாமற் போனான். நாமும் தூங்கக்கூடாது. எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்; விழித்தெழுந்து விரைவாக ஒடித் தொடர வேண்டும். தூங்கினால் ஆமை விழித்தோடினால் முயல், இல்லை, தூங்கினால் பிணம் ஓடினால் பணம், பணம் எங்கும் பாயும். தமிழ் இப்போது விரைந்தோடுகிறது. அதற்கென்ன ஓட்டம்? செலாவணி? தமிழ்மொழி, உண்மையில் முதல் மொழியாக அமையவேண்டும். அப்போது எல்லாம் தமிழாகிவிடும் எங்கும் தமிழாகிவிடும்.” வளர்ச்சியும் விரைவும் இருதடங்களாகக் கொண்டு அயல்மொழிகளையும் அரவணைத்துத் தமிழின் செம்மையைக் காப்பது அரிய பணியாகும்.

மொழி என்பது இனத்தையும் பண்பாட்டையும் குறிப்பதாகக் கருதப்படுவதும், நமது நாட்டில் மொழிவழி மாநிலப் பிரிவுகள் அமைந்திருப்பதால் தேசியம், சார் தேசியம், மாநிலப்பற்று முதலிய கோட்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. மொழி வளர்ச்சி ஒரு நாட்டின் ஒருமையையும், பொதுக் கொள்கையையும் சார்ந்தே அமையும் என்று எதிர் நாளியல் அறிஞர்கள் கருதுகின்றனர். நிறைவாக மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் குறிப்பிட்ட நிலையே தமிழ் மக்களின் உயிர்ப் பண்பாகும்.

கருத்தைப் புலப்படுத்தும் ஒரு கருவியே மொழி என்பது தொடக்கக் கருத்து. இறைவன் நீங்கலாக உலகத்து எப்பொருளும் கருவிகளே. இறைவனைக் கூட நிமித்த காரணன் என்பர். உடம்பும் ஐம்பொறிகளும், ஊர்திகளும் தகவலியங்களும் கருவிகள்தாம். இவற்றின் தூய்மைக்கும் செம்மைக்கும் ஒழுங்குக்கும் எவ்வளவு ஆய்வு நடத்துகின்றோம். உடல் நலத்துக்கென உலகம் எவ்வளவு கோடிகள் செலவழிக்கின்றது. உடல் மாயும் கருவிதானே என்று பேசுவது அறியாமையன்றோ? மொழி என்பது மனிதவுடைமை. பண்டு இன்று நாளை என எக்காலத்துக்கும் இயங்குடைமை, அதனாற்றான் ‘வாழிய செந்தமிழ்’ என்றார் பாரதியார். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசனார்

35 –  ‘தாய்மொழியால்தான் தலைநிமிர முடியும்’

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, எவருமே எதிர்பார்க்காத அளவுக்கு, தொலைத்தொடர்பு வசதி இப்படியெல்லாம் வாய்க்குமா வளருமா என்று எண்ணிப்பார்க்காதபொழுது, நான் பணியாற்றிய ‘கிளியா’ விளம்பர நிறுவனத்தில் ஒருமுறை Morgan Stanley போன்ற மிகப்பெரிய நிதி நிறுவனத் தலைவர்கள் அமெரிக்காவிலிருந்து தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை செய்தியாளர்களுடன் காணொலி வாயிலாகத் தொடர்பாளர் கூட்டத்தை ஒருங்கிணைக்கின்ற வாய்ப்பை நான் பெற்று நடத்தியதில் மகிழ்ந்தேன்.
செப்புக் கம்பிகளை உருவாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் விளம்பரத்தைப் பம்பாய் கிளியா நிறுவனம் வெளியிட்டபோது, உலகத்தின் பல்வேறு நாகரீகங்கள் எப்படியெல்லாம் செப்பு நாணயத்தை வெளியிட்டிருந்தார்கள் என்பதையும், செப்புக் கம்பிகளின் நெடுங்காலத் தொல்வரலாற்று தகவல்களையும், தொடர் விளம்பரங்கள் மூலமாகச் சாசன வரிகளாக ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுக் காட்டியது. அச்சு வடிவங்களை அகழ்ந்தபோது கண்டெடுத்த பழைய ஆவணங்களைக் கடத்தும் கருவியாகச் செப்பு பயன்படுகிற பாங்கினைக் காட்டும் உண்மைகளையும் படிப்படியாகக் காலத்தால் உணரத் தொடங்கினோம். ஒப்பரிய உலோகமான செப்பு நாகரிக உலகத்தின் நரம்பாக இயங்கி வருகிறது என்ற பொருள்பட விளம்பரப்படுத்தினோம்.
வெறும் வெட்டி ஒட்டும் விளம்பரதாரர்களாக இல்லாமல், வரலாற்றை மீளவும் வரைந்து காட்டும் ஆய்வாளர்களாக அமைய வேண்டும் என்றே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பாடமாகப் பயின்றோம்.
கிளியா விளம்பர நிறுவனம், 1995-ஆம் ஆண்டில் சிறந்த சாதனை படைத்துப் பத்தாண்டுகளாக விளம்பரத் துறையில் பணியாற்றியதன் அடையாளமாக அடையாறு பாலத்திற்கு அருகில் ‘1986-1995 Clea alone, ahead. 10 eventful years’ என்ற மிகப்பெரிய விளம்பரத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தோம். இது வெளிவந்த போது நான் சொன்னேன், எழுதப்பட்ட விளம்பரம் செலவல்ல; ஏராளமானவர்களையும் வரவேற்கும் வரவு என்றேன்.
கிளியா நிறுவனத்தின் முன்னால் தலைவராகத் திகழ்ந்த திரு. அனீஷ் பேனட், கிரியா விளம்பர நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டு வந்த ‘Above par’ என்ற வணிக இதழில் விளம்பரங்களை வெளியிடும் போது சமுதாயச் சிந்தனையோடு எழுத்தறிவு, எய்ட்ஸ் நோய், குழந்தைத் தொழிலாளர் கொடுமை, கொத்தடிமை முதலிய பல்வேறு நலவாழ்வு விளம்பரங்களுக்கு நடுப்பக்க முதன்மையை இலவசமாகவே தருகிறேன் என்று கூறினார்கள். கூறியதைப் போலவே செய்தும் காட்டினார்கள். விளம்பர உலகம் இப்படியெல்லாம் முயற்சிசெய்தால், விளம்பரம் என்பது ஒரு செலவல்ல. சமுதாய முற்போக்குக்கு ஒரு நல்வரவாக அமையும்.பஞ்சாப் சிங்கம் திரு அனிசு பானட் சமூக சிந்தனையாளராக மலர்ந்து இன்றைக்கு சிறப்பாக சண்டிகரில் வாழ்ந்து வருகிறார். அவருடைய துணைவியார் திருமதி சாந்தி தமிழ் மகளாக அவர் குடும்பத்திற்கு மகரந்தம் சேர்த்து வருகிறார்.பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்களது இனிய இல்லத்தில் தங்கிப் பேறு பெற்றவன்.அவருடைய தங்கை விமான ஏரணங்கு செல்வி நீரஜாவின் வீர மறைவை முன்னிட்டு நமது தினச்செய்தியில் கட்டுரை வரைந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.——————————————————-நினைப்புகளையும், மனத்தில் பதுங்கியிருக்கும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு அமைந்த வாயிலாக மொழி அமைகிறது. மொழி ஒரு மனிதனை அடையாளங் காட்டுவதோடு, அவருடைய வாழ்வு, வளம் முதலியவற்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒரு மனிதனைப் பிறர் மதிப்பிடவும், முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் மொழி அவனாகவே அமைந்து விடுகிறது. மொழியென்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் உருவான நாள் முதல் பதிந்த பண்பாட்டு சுவடுகளைத் தாங்கியுள்ளது. இதன் மேம்பாட்டிற்காகக் கோடிக்கணக்காகச் செலவிடத் தயங்கக் கூடாது. இந்த நிலையில், வல்லமை உடையவர்கள், வணிகவளம் கொண்டவர்கள், ஏமாற்றத் தெரிந்தவர்கள், பேரறிவுடையவர்கள் என்ற வகையில் மக்கள் இனம் வளர்ந்ததோடு அவரவர்கள் தனித்தனியாகத் தங்கள் நாடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். இடத்தாலும், பரப்பாலும் சிறிய நாட்டைச் சார்ந்தவர்கள் என்றாலும், வல்லமையால் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் வாயிலால் மிகப் பெரிய நாடுகளைக்கூடத் தங்களுக்குக் கீழ் வசப்படுத்திக் கொள்ளவும், தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொள்ளவும் முடிந்தது. ஆங்கில அரசாளுகையின் வரலாறு இப்படித்தான் ஏற்பட்டது. ‘ஆங்கிலத்தின் மூலம் எவரையும் அடிமைப்படுத்த முடியாது’ என்றே கூட ஒரு பழமொழி உண்டு. ஆங்கிலம், அடிப்படையிலேயே அதிகாரக் குருதியோடும் மொழியாக இருக்கிறது என்பார்கள். இதனால், பல நாடுகள் ஒற்றுமையின்மையாலும், காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியை இழந்தாலும், எளிதாக அடிமைப்பட நேர்ந்தது. அடிமைப்பட்டாலும், அறிவு உழைப்பு, முயற்சி இவைகளையெல்லாம் தங்களை அடிமைப்படுத்திய அரசுகளின் மொழி வாயிலாகவே மீண்டும் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. அதனால்தான், ஆங்கில அரசுதான், நம்மை அடிமைப்படுத்தியது என்றாலும், ஆங்கிலக் கல்வியினால் ஏற்பட்ட தெளிவே அடிமைத் தளையை நீக்கிக் கொள்ளவும் நமக்கு உதவியது.
கல்வி, தொழில், நீதிமன்றம், அரசு நடவடிக்கைகள், தகவல் சாதனங்கள் அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆங்கில ஆட்சியில் ஆங்கில மொழி எங்கும் பரவியது. அதுவே சில நிலைகளில் சிக்கலாகவும் நமக்கு அமைந்தது.
ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கல்வி தருவது கடமையென்றாலும் கூட அவன் அயலவனாக இருந்த காரணத்தால் பொதுக்கல்வி தந்தபோது அடித்தளத்து மக்கள் அந்த ஆங்கில மொழிக் கல்வியைப் பெற முடியாமல் பின்தங்கினர்.
மாட்டுத் தோலை அறுத்துப் பழகியவர்களுக்கும், காலணி தைத்தவனும்தான் மருத்துவக் கல்வியை எளிதாகப் புரிந்து கொண்டு வந்திருக்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து கற்களை உடைத்தும், சாலைகளைச் செப்பனிட்டும் பயிரிட்டும் பாடுபட்டவன்தான் காவல் துறைக்கு வந்திருக்க வேண்டும். மரங்களை வெட்டிக் கருவிகளைச் செய்தவனும், இரும்பை உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சியவனும் பொறியாளராக வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? இந்த ‘மொழி மாயை’தான் ஒரு காரணமாயிற்று என்று அறிஞர்கள் பலமுறை கூறிவந்தனர். உயர்ந்த நிலையான அறிவைப் பெறுவது போதாது. சமுதாயம் முழுவதுமே அறிவியல், தொழில் நுணுக்கம் முதலிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக, பெறுபவர்களாக மக்கள் மாறும்போதுதான் பிற நாடுகளோடு நாமும் நிகராக வளர முடியும் என்பதைக் காலத்தின் போக்கில் அறிந்தார்கள்.

நாம் இப்போது எவ்வளவுதான் பழகியதாக இருந்தாலும், அயல் மொழியிலேயே அறிவியல் தொழில் நுணுக்கங்களைக் கற்கின்ற பழக்கம் தொடர்ந்து நீடித்து வருமானால், நமது சமுதாயம் வளர முடியாததாகவே மாறி விடும் என்று மொழியாராய்ச்சியாளர்கள் பேசியதும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். அப்படி ஆங்கிலத்திலேயே இருந்து வந்தால், சிலருடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தேர்ச்சிக்கும் வேண்டுமானால் அது உதவலாம். ஆனால், சமுதாயத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவாது. பள்ளத்தில் விழுந்திருக்கும் எல்லோரும், எழுந்து நிற்கும் ஒட்டுமொத்தமான சமூகமுன்னேற்றம் வந்தால், தமக்கு ஏதேனும் சங்கடம் வருமோ என்று சந்தேகிக்கும் சிலரின் தன்னலப் போக்குகளால், தாய்மொழிகள் தலையெடுக்க முடியாமற் தடுமாறுகின்றன. இந்த நிலையில், நாட்டுக்கு விடுதலை வந்ததும், மாநிலங்கள் மொழிவழியாக அமைந்ததும், கல்வி, ஆட்சி, சட்டம், நீதி, தொழில்வளம், அறிவியல், தகவல் சாதனங்கள் எல்லாம், அந்தந்த மாநில மொழிகளில் மெல்ல வரத் தொடங்கின என்றால், மக்கள் விழிப்புற்று அந்தத் துறைகளில் பங்கேற்கத் தொடங்கினார்கள் என்று பொருள். ரேடியோ, நியூஸ்பேப்பர், ரயில்வே, அன்றாட கருவிகள் எல்லாவற்றையும், அவர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கியதும், பழக்கத்தில் இருந்த ஆங்கில மொழி மெல்ல மெல்ல நீங்கிச் சில நிலைகளில் தாய்மொழி ஆற்றலோடு இப்போது வந்து விட்டது. இப்பொழுது, வானொலி, செய்தித்தாள், தொடரி என்றே சொல்லத் தொடங்கி விட்டோம். கேபினெட் என்பது அமைச்சரவை என்றும், உலகச் செய்திகள் பலவற்றைச் சிற்றூர்களில் அறிந்து கொள்ளவும் பேப்பர் தாள் என்றும், இங்க் மை என்றும் வந்ததால் ஒருபெரிய அதிசயம் நடக்க ஆரம்பித்தது. சான்றாக, தமிழ் மொழியில் மூன்று லட்சம் சொற்கள் என்றால், ஆதிக்கம் கொண்டிருந்த ஆங்கிலம் ஒன்பது லட்சம் சொற்களைக் கொண்டது. மேலும் ஆங்கிலம் தனி ஆளுகைவலிமை பூண்டிருந்த காலத்தில், தமிழ் வாய்மூடிப் பதுங்கியிருந்தது. ஆகவே, ஆங்கிலத்தில் பத்துச் சொற்களுக்குத் தமிழுக்கு ஒரு சொல்லை வைத்துக் கொண்டு ஈடுகட்ட முடியுமா? என்றும் ஐயம் ஏற்படலாம். Plan, Scheme, Project, Model என்று எல்லாவற்றையும் திட்டம் என்று சொல்லி வருகிறோம். அதனால் ஒரு பெரிய குறையில்லை. அட்வெர்டைஸ்மென்டு என்று 1965 வரையில் கூட எழுதிவந்தோம். பிறகுதான் விளம்பரம் என்று சொல்லிப் பார்த்தோம். விளம்புதல் என்றால் நான்கு பேருக்குப் பரவலாக எடுத்துச் சொல்லுதல் என்பது பொருள்.
சுற்றுலா, கூட்டுறவு என்ற சொற்களைப் போல விளம்பரம் என்ற சொல் தமிழுக்கு நல்வரவாயிற்று. ஆங்கிலத்தின் பொருளைவிட அழுத்தமான கனத்தைக் கொண்ட அரிய சொல்லாக இது அமைந்திருக்கிறது. ஒரு மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர், டூரிசத்திற்கு நிகராகச் சுற்றுலா என்றவொரு சொல்லை வேறு எந்த மொழியிலும் தமிழைப் போல் காணவில்லையென்றாராம். ஏனென்றால் ‘யாத்ரா’ என்றுதான் அனைவரும் முதலில் கூறினர். நான்கைந்து பேருக்கு உணவு பரிமாறுவதைக்கூட விளம்பு என்று கூறும் வழக்கமுண்டு. இன்னும் ‘குழம்பை விளம்பு’ என்று சமையற் கூடத்தில் சொல்லும் வழக்கமுண்டு. மேல்நாட்டில் உள்ள பழக்கத்தால் பல்வேறு அறிவுத் துறைகள் அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம், தமிழுக்குக் கொண்டுவரவேண்டியது அரிய முயற்சிதான், ஆனால், செய்யவேண்டிய முதற்பணியாகும்.‘புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை’என்றும்‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்செல்வங்கள் யாவும்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’என்று பாரதியார் நமக்கு வலியுறுத்தியதையும் நாம் கணம் தவறாமல் நினைவிற்கொள்ள வேண்டும்.
வளரும்…

  • முனைவர் ஔவை ந. அருள்,தொடர்புக்கு dr.n…@gmail.com ——–

unread,14 Dec 2020, 02:25:55to மின்தமிழ்36 –  “வளர்க வாழைக்கன்று”
முனைவர் ந. அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு================================================= 
ஒருமுறை ஒரு விளம்பரத்தை நான் தமிழில் இவ்வாறு எழுதியிருந்தேன். அதாவது, முதன்முதலில் தொலைக்காட்சிக்கு வேண்டிய ‘டிஷ் ஆன்டெனா’ சென்னைக்கு வந்தபொழுது, அதை விளம்பரமாக வரைவதற்காகப் பெங்களூரைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சென்னைக்கு வந்திருந்தார்கள். யாரோ சொன்னார்கள் என்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரம் வரைவதற்காகத் தீர்மானித்தார்கள். ‘டிஷ் ஆன்டெனா’ மூலமாகத் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சன் டிவி, ஜெயின் டிவி, ஜீ டிவி, சிஎன்என் டிவி, பிபிசி டிவி இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு இந்த ‘ஆன்டெனா’ உதவுகிறது என்று சொல்வதற்கு ‘The world is at your finger tips’ என்று எழுதியிருந்தார்கள். அதற்கு நான் உடனே தமிழில் சொன்னேன், ‘அமர்ந்தபடியே அகிலத்தைக் காணலாம்’ என்று. கிளியா நிறுவனம் நான் தமிழில் எழுதிய விளம்பரத்தைப் பார்த்த பிறகுதான் பல கேபிள் டிவி அதிபர்கள் நாங்கள் எழுதிக் கொடுத்த நிறுவனத்தை நாடி வந்தார்கள். ஆக அன்று முதல் அந்தப் பெங்களூர் இளைஞர்கள் ஆங்கில விளம்பரமே வேண்டாம். தமிழ் விளம்பரத்தை மட்டுமே பத்து முறைக்கு மேல் வெளியிட்டுத் தங்கள் வணிக வளத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்டார்கள். அதேபோல், மும்பையில் ஓர் ஆய்வு நடந்தது. ஆங்கில விளம்பரத்தைப் படிப்பதை விட, அந்தந்த மாநில மொழி மக்கள் தங்கள் தாய்மொழியில் வெளியாகும் விளம்பரத்தையே ஆர்வமாகப் படித்துக் கவனிக்கிறார்கள் என்பது புலனாகிறது. இன்னும் பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிடும்போது, அவரவர் தாய்மொழியில் விளம்பரம் என்றுதான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குமுதம் இதழ், உலகளவில் எல்லோருக்கும் தெரிந்த இதழாக இருப்பது போலவே, மலையாள மனோரமாவும் உலகளவில் பரவியிருப்பதும் சிறந்த சான்றுகளாகும். மாநில மொழிகளின் சிறப்பை இனிக் குறைத்து மதிப்பிட முடியாது என்பது வெள்ளிடை மலையாயிற்று.
நிதியியல் சார்ந்த நிறுவனமான கிளியா நிறுவனம் 95 – ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற பங்குச்சந்தைச் சரிவின் காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் விளம்பரம் வெளியிட்ட தொகையைக்கூடத் தரத் தடுமாறிக்கொண்டிருந்த தருணம் அது. ஏறக்குறைய விளம்பர நிறுவனமே மூடி விடலாமா? என்கின்ற நிலையில் மேலாளராக இருந்த நான், பல வழிகளில் விளம்பரம் சாராமல் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவாய் தேடிக்கொண்டிருந்த நிலையில் பல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டுச் செல்லலாமா என்ற ஏக்க நிலையில், 22.4.1996 அன்று எங்கள் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர்கள் ஆண்டுதோறும் தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை பெருமிதமாகவே வழங்கி வருகின்ற கிளியா நிறுவனம் இந்த வருடம் சுணக்கம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தி நின்றார்கள். தலைமை அலுவலக இயக்குநர்களுக்கு நுணுக்கமாக நான் கடிதம் எழுத முற்பட்டேன். நான் எழுதுவதெல்லாம் இலக்கியச் சாயல் கொண்டதாகப் பதிய வேண்டும் என்று மனம் எப்போதும் ஏங்கும். அப்பொழுது என் நினைவுக்குக் கவிஞர் வால்ட் விட்மென் வரிகள்தான் வந்தன. கடிதத்தின் இறுதிப்பகுதியில் அப்பாடல் வரிகளை மேற்குறித்திருந்தேன். அப்பாடலின் தமிழாக்கம்:-
விலங்குகளாக மாறி வாழ்ந்துவிடத் துடிக்கிறது மனதுஅவை பெரிதும் அமைதியாகவும் தன்னிறைவானவையாகவும் வாழ்கின்றன இனிதுநீண்ட நெடிய நேரம் உற்று நோக்கினேன் நின்றும்தமது நிலைமைக்காக அவை புழுங்கியது மில்லைப் புலம்பியதுமில்லை என்றும்நள்ளிரவில் விழித்துக் கிடப்பதுமில்லை;பாவங்களுக்காக நொந்து தலையணை நனைப்பதுமில்லைகடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடன்களை வாதித்து என்னைப் படுத்துவது மில்லைவேட்கை நோயால் வெளிறியோடுவ தில்லைஉடமை வெறியால் உளம் பிறழ்தலுமில்லைஒருவர் மற்றொருவர் முன்னோபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தமூதாதையர் முன்னோ எவரும் மண்டியிடுவ தில்லைமதிப்புக்குரியோராக விழையப் பெறுவோருமில்லைமண்ணுலக வாழ்வில் வெறுப்புற்றோரு மில்லை.

இயக்குநர்கள் இதனைப் படித்துவிட்டு உடனே ஏற்றுக்கொண்டு ஊக்கத் தொகையை எவ்விதச் சுணக்கமுமின்றிப் பணியாளர்கள் விரும்பியவாறே வழங்கினர். இலக்கியம் வணிகத்தையும் மெருகேற்றும் என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

தினச்செய்தியில் வாரந்தவறாமல் வெளிவரும் அருந்தமிழ்க் கட்டுரையைப் படித்து மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.கூ.வ.எழிலரசு அவர்கள் எனக்கு அனுப்பிய மதிப்புரை பின்வருமாறு:-

“அறிஞர் எழிலரசு ஆழ்ந்த தமிழறிவும் – அன்பும் – அடக்கமும் பூண்டவர் .புன்னகை மாறாமல் புதியன சொல்வதும் செய்வதும் அவர் இயல்பு. பேராசிரியர் நெஞ்சம் கவர்ந்த தமிழ்த்திறனாளர் .அவரோடு பழகியது நான் பெற்ற பேறு. அப்பா சொல்வார் அவர் எழுத்தும் அழகு. எண்ணமும் அழகு. பெயரும் பெருமையும் ஒன்றாக இணைந்தவர்.
“என் அன்பிற்குரிய இளவல் முனைவர் ந. அருள் அரிதின் முயன்று அழகுற அளித்துவரும் இக்கட்டுரை தொடரினை நான் வாரந்தவறாமல் தினச்செய்தியில் படித்து மகிழ்ந்து வருகிறேன்.
‘மொழி வழக்கு’, ‘ஆங்கிலச் சொற்கள்’, ‘வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருதுச் சொற்கள்’ – எனும் பகுப்பில் அமைந்த இத்தொடர் கட்டுரையில் ஆய்வின் பக்குவம் பளிச்சிடுகிறது.

சொல்லாய்வு, மொழி கலப்பாய்வு – என்பனவற்றின் நோக்கமே சொந்த மொழியின் சொற் செல்வத்தை ஆய்ந்து இழந்தவை போக – இருப்பதை மேலும் இழக்காமல் காத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்துவதுதான். ‘ஒரு மொழியில் உள்ள சமுதாயத்தேவை கருதியும், சமுதாயத் தொடர்பை விரிவாக்கும் காரணங்க ளாலும் ஒரு மொழியில் வேறு சொற்கள் புகுந்து இடம் பெறுவதையே மொழிக்கலப்பு என்கிறோம். மொழி இழப்பு என்பது, மொழிக்கலப்பால் ஒரு மொழி தன்னிடமிருந்த சொற்களைப் பயன் குறைந்ததாக இழந்து நிற்கும் அவல நிலையாகும்’ என்கிறார் ஔவை அருள். ‘மொழியின் தொன்மையைப் போன்றே மொழிக் கலப்பும் தொன்மை வாய்ந்தது போலும்’ என ஆய்ந்துரைப்பதும், ‘சொல் வளமின்றி ஒரு மொழி வறுமையுற்றிருப்பதும், பேச்சு மொழிக்கு உந்தாற்றலான கலந்து பழகும் உணர்ச்சியும், எழுதுவோன் விருப்பமும், போலச் செய்தலும், கடன் வாங்கலும் ஆகிய காரணங்கள் மொழிக் கலப்பை விளைவிக்கின்றன’ – என மொழிக் கலப்பிற்கான காரணங்களை நுண்ணிதின் விளக்கும் பாங்கும் பாராட்டத்தக்கது.

மொழிக்கலப்பு நிகழ்ந்த காலந்தொட்டே, அதை நீக்கவும் நம் முன்னோர்கள் முயன்றனர் என்பதை ஔவை அருள் விளக்கியுரைக்கும் பாங்கு மகிழ்ச்சியூட்டுகிறது. தண்டமிழாசானாகிய ‘சாத்தனார்’, பௌத்தர் கூறும் ‘சத்தியத்தை’ ‘வாய்மை’ எனவும், ‘துவாதச நிதானங்களை’ப் ‘பன்னிரு சார்புகள்’ எனவும், ‘தருமத்தை’ ‘அருளறம்’ எனவும் ‘புத்தத் தன்ம சங்க’த்தை ‘முத்திற மணி’ எனவும், ‘தருமச் சக்கர’த்தை ‘அறக் கதிராழி’ எனவும், ‘சயித்தியத்தை’ப் ‘புலவோன் பள்ளி’ எனவும், ‘ஏது பிரபவ தர்மம்’ என்பதனை ‘ஏதுநிகழ்ச்சி’ எனவும், ‘நிருவாணத்தை’ப் ‘பெரும் பேறு’ எனவும் தமிழாக்கியுள்ளார்’ – எனும் பகுதி இதற்கு ஒரு சான்றாகிறது.
தமிழின் மீது ஆண்டவன் பெயரால் ஆளுமை நிகழ்த்தி ஒரு காலத்தில் ‘மணி பிரவாளமே தமிழ்’ என மயங்க வைத்த வட மொழியின் வல்லாண்மை முதலாக, ஆதிக்க முறையில் அரியணை ஏறி அன்னைத் தமிழில் ஊடுருவி நிலைத்த ஆங்கிலம் வரையில் தமிழில் மொழிக்கலப்பு நிகழ்ந்த வரலாறுகளையும், சொல்லடைவுகளையும் ஆழமாகவும், அழகாகவும் இத்தொடர்கட்டுரையில் வலியுறுத்தி வருவதை நான் பெரிதும் வரவேற்கிறேன்.
ஔவை அருள் தமிழ் மக்கள் வழங்குகின்ற வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழிச் சொற்களை முயன்றாய்ந்து பட்டியல் அளித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறார். காலையில் தொடங்கி, உறங்கப் போகும் நேரம் வரையில் நாம் எத்தனை பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதையும், இவற்றை நீக்கிவிட முயற்சி செய்யாதிருக்கிறோம் என்பதையும் எண்ணும் போது, ‘தமிழன் திருந்தினால்தான் தமிழ் திருந்தும்’ என்றே கூறத் தோன்றுகிறது. ஒவ்வொரு தமிழரும் இயன்றவரையில் பிறமொழிச் சொற்களை நீக்கிப்பேசவும், எழுதவும் முயலுதல் வேண்டும் என்ற உந்தாற்றலை உள்ளீடாகக் கொண்டு உலா வரும் இக்கட்டுரை தொடரை எழுதிவரும் ஔவை அருளை உச்சி மேல் வைத்து மெச்சிப் புகழத் தோன்றுகிறது.
மொழிக்கலப்பு தவிர்க்க முடியாதது தான், எந்த மொழியும் கலப்பின்றி இயங்கவில்லை என்பதும் கண்கூடானதுதான். ஆனால், கற்றவர்கள் அறிந்தே மொழிக்கலப்புக்கு வழி கோலுகின்றனர். கல்லாதவர்களோ தமக்கு வரும் பிறமொழிச் சொற்களையே தம்முடைய தாய் மொழிச் சொல்லென்று பிழையாக உணர்ந்து கொள்கின்றனர், இத்தகைய நிலை தமிழுக்கு மட்டுமன்றி, எந்த மொழியின் வளர்ச்சிக்கும் ஏற்றம் அளிக்காது என்பதை உலக மொழிகள் சிலவற்றிற்கு நேர்ந்த நிலைகள் மெய்ப்பிக்கின்றன. பிரான்சில் வாழ்ந்திருந்த ‘கால்’ இனத்தவர் தம்மொழியைத் துறந்து பிரெஞ்சு மொழியை ஏற்றுக் கொண்டதால், அந்த இனமே அழிந்ததையும், வட இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிடர் தம்மொழியைத் துறந்து, வந்தேறிகளின் மொழியை ஏற்றுக் கொண்டதால், அவர்களின் பண்பாடே மாறிப் போனதையும் மொரீசியசுத் தீவில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தமிழர்கள் தாய்மொழியை மறந்துவிட்டு, ‘கிரியோல்’ என்ற கலப்பு மொழியை ஏற்றுக் கொண்டதால் தங்கள் தமிழறிவையே இழந்ததையும், ‘செக்’ மொழிப்பற்றாளர்கள் உழைப்பால், செருமன் மொழி மேலாண்மை யிலிருந்து விடுபட்டுச் ‘செக்’ நாட்டினர் இன்று தனி இனமாக வாழ்வதையும் ‘மொழிக்கலப்பு’ நமக்களிக்கும் படிப்பினைகளாகவே இங்குக் கருதிப் பார்க்கலாம்.
இவ்வகையில் உலகளாவிய நிலையில் கருதப்பட்டும், ஆய்வு செய்யப்பட்டும் வருகின்ற மொழிக்கலப்பு’ என்ற பொருண்மையைத் தமிழிடை வைத்து நுணுகி ஆய்ந்து வரும் ஔவை அருளின் ஆய்வுத்திறன் போற்றிப் பாராட்டுதற்குரியது. ஔவை அருள் இத்தொடரின் வழி ஆற்றி வரும் அருந்தொண்டால், மொழி ஆய்வு மேற்கொண்ட நம் தமிழறிஞர்கள் வரிசையில் தக்கதோர் இடம் பெற்றுள்ளார் எனில் அது மிகையன்று.
‘வளர்ச்சிக்குரிய உயிருடையதாய் உலகத் தொடர்புப் பாலமாய் மொழியைக் கருதும் இந்நாளில், மாற்றங்களுக்கு உட்படுதலே உயிருணர்ச்சிக்கு அடையாளமாகிறது என்ற நிலையைத் தவிர்க்க இயலாது. எனவே, மொழிக்கலப்பு, இனத்தின் வளர்ச்சி நோக்கி நிகழும்போது ஏற்புடையதாகவும், இனத்தின் குலைவுக்கும் தாழ்ச்சிக்கும், வழி வகுக்கும்போது நீக்கத்தக்கதாகவும் கருதலாம். இப்புதிய அணுகு முறை மொழிவளர்ச்சிக்கு உலக நாடுகள் மேற்கொண்டு காட்டிய நடைமுறையாகும்’ – என மொழிக் கலப்பின் தாங்கு திறனையும் எல்லை கோடிட்டு எச்சரிக்கை செய்கிறார் ஔவை அருள்.
இப்படி வாரந்தோறும் எழுதும் அருள் ஆங்கில மொழிவளர்ச்சி குறித்து என்னிடம் ஒரு கட்செவியைச் சில்லாண்டுகளுக்கு முன் காட்டினார். மேலும் அருந்தமிழக்கு அணிசேர்த்த சங்க இலக்கியங்களின் சாரத்தைப் பிழிந்து அறிமுக அமுதமாக அளிக்க வேண்டும்.”
வளரும்…

37 –  “சங்க இலக்கியச் சாரலிலே”
பங்குச் சந்தை வாயிலாகப் பொதுமக்களிடமிருந்து பங்குகளாக நிதி திரட்டுகின்ற நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடுகின்ற சிறப்பு வாய்ந்த நிறுவனமாகக் கிளியா நிறுவனம் திகழ்ந்தது. சென்னையில் முதன்முதலாக 06.05.1992-ஆம் நாளன்று இரு நிறுவனங்களின் (பென்டாபோர் மென்பொருள் நிறுவனம் மற்றும் எஸ்.ஐ. வீடு கட்டும் நிறுவனம்) பங்கு விளம்பரங்களை வெளியிட்டோம். அன்று முதல் 1997 வரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுக் கருப்பு வெள்ளை, வண்ண விளம்பரங்கள், இந்தியா முழுதும் செய்தியாளர் கூட்டங்கள், பங்கு முகவர்கள் கூட்டங்கள், முதலீட்டாளர் கூட்டங்கள் என்றெல்லாம் பல தரப்பட்ட வழிகளில் விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.

பங்குச் சந்தையில் நிதி திரட்டும் நிறுவனங்கள் அவை திரட்டப்போகும் தொகையில் 6 முதல் 8 சதவீதத்தை விளம்பரத்திற்காகவே ஒதுக்கிச் செலவிடுவார்கள். 1993-94-ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 154 நிறுவனங்கள் மொத்தம் ரூ.21,850 கோடியைப் பங்குவெளியீட்டின் மூலம் திரட்டியிருக்கின்றன. அதாவது, ஏறக்குறைய ரூ.1500 கோடியை இந்நிறுவனங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே செலவளித்திருக்கின்றன.
கடந்த 1990 முதல் 1994 வரையிலான நான்காண்டுகளில் பங்குச் சந்தையில் திரட்டடப்பட்ட நிதியானது, ஏறத்தாழ ஆண்டுதோறும் 98 சதவீதம் உயர்ந்திருப்பதால் பெரும்பாலான விளம்பர நிறுவனங்கள் பங்குநிதி விளம்பரங்கள் மீதுதான் தமது திருப்பார்வையைச் செலுத்திப் பணியாற்றினார்கள்.

குஜராத்தைச் சேர்ந்த திரு.சுனில் கௌதம், கேரளாவைச் சேர்ந்த திரு.வேணுகோபால், 1980-களில் ஒருசேரப் பிரஸ்மேன் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி அங்கிருந்து விலகி, குஜராத்தைச் சேர்ந்த திரு. தவல் தேசாய் உடன் கிளியா நிறுவனத்தைத் தொடங்கினார்கள். திரு. வேணுகோபால் ரிலையன்ஸ் அம்பானியிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய பெருமை பெற்றவர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்க் கிளியா நிறுவனத்தில் தமியராகச் சேர்ந்தவுடன் எனக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. ‘தி இந்து’ பத்திரிகை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையுடைய தலைமைச் செய்தியாளர்களை எஸ்ஸார் நிறுவனத்தின் எஃகுத் தொழிற்சாலையைச் சூரத்திலுள்ள அசீராவிற்குப் பார்வையிடுவதற்காக வருவதற்கு வானூர்திச் சீட்டுக்களை வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பிவைக்குமாறு வேண்டினார். தற்செயலாக ‘தி இந்து’ பத்திரிகை தலைமையாசிரியர் வரமுடியாத சூழலில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலைமைச் செய்தியாளர் திரு. தாமஸ் செல்வதற்கு ஆயத்தம் நடந்தது. உடனே கிளியா வேணுகோபால் என்னை அழைத்து இந்து செய்தியாளருக்குரிய விமானச்சீட்டில் நீ உடன்வா என்று ஆணையிட்டார். ஒன்றும் தெரியாமல் மருட்சியாக இருந்த நான் அசீராவுக்கு உடன் சென்றேன். என்னை அங்கு அரவணைத்து, “இது ஒரு தொடக்கப்புள்ளிதான் நீ இன்னும் பல இடங்களுக்குச் செல்வாய். பல நாடுகள் கண்டு வெல்வாய்” என்று வாழ்த்திய உயர்ந்த உள்ளத்தை நான் என்றும் மறப்பதற்கில்லை. அவருடைய மூத்த பெண் மௌசத்தின் அரங்கேற்றத்தைச் சென்னை மியூசிக் அகாதமியில் நடத்த வேண்டும் என்ற பேரார்வம் அவரிடம் இருந்தது. அதனைப் பேச்சுவாக்கில் தெரிந்துகொண்டு, அதற்குரிய ஆயத்தங்களையெல்லாம் செவ்வனே செய்து, கவியரசியாகத் திகழ்ந்த சௌந்திரா கைலாசம் அம்மையாரின் தலைமையில் நிகழ்ச்சியைப் பாங்குற நடத்த உறுதுணையாக இருந்தேன். ஆங்கிலப் புதினமொன்றில் வரும் பெண்மணியின் பெயர்தான் கிளியா. மிகவும் திறமையும், அறிவுச் சிறப்புமிக்க, சக்திவாய்ந்த, எதையும் நினைத்தவுடன் சிறப்பாகச் செய்து முடிக்கிற குணம் இந்தப் பெண்ணிற்கு உண்டு. பொதுவாக, விளம்பரம் என்பதே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒரு செயல்தானே. பத்தாண்டு நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி, ஒருபக்க விளம்பரம்பரத்தில் நாங்கள் சொல்லிவிடுவது போல, நிறுவனத்தின் அனைத்துக் கொள்கையையும் ஒரே சொல்லில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கிளியா என்ற பெயரை இம் மூவரும் தேர்வு செய்தனர். எஸ்ஸார் குழும நிறுவனத்திற்காக ஒரே நாளில், ஒரே நேரத்தில் 7 வெவ்வேறு இடங்களில் செய்தியாளர்கள் மற்றும் பங்கு முகவர்கள் சந்திப்பை நடத்தியதைக் கிளியா நிறுவனத்தின் பெரிய சாதனையென்றுதான் சொல்ல வேண்டும்.

விளம்பரங்களைத் தயாரிப்பதில் கிளியா நிறுவனத்தின் அணுகுமுறை சற்று வேறுபாடானது. நாங்கள் எப்போதும் தகவல்களுக்கு முதன்மை கொடுப்பதில்லை. தகவல்களை உறுதிப்படுத்தும் பொருண்மைகளுக்குத்தான் முதலிடம் கொடுப்போம். சான்றாக, ஒரு பொருளைப்பற்றி அதிகத் தகவல்களை அளித்துவிட்டு அதைத்தேடி வாடிக்கையாளர்களை அலையவிடுவதைவிட அப்பொருள் சந்தையில் இந்த இடத்தில் இன்ன விலையில் கிடைக்கும் என்று சொல்வதையே நாங்கள் விரும்புவோம். இதுதான் வாடிக்கையாளர்களை நெறியான வழியில் இட்டுச்செல்வதாயிருக்கும். அடிக்கடி எங்கள் இயக்குநர்கள் வலியுறுத்தியதை நினைவுகூர்கிறேன். விளம்பரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசியல் தலைவரின் பொறுப்புணர்ச்சியும், இலக்கியவாணரின் அழகுணர்ச்சியும் இன்றியமையாதது என்பார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டால்தான் மக்களுக்கு எளிதில் போய்ச்சேரும்.

‘சங்கம்’ என்பதற்குக் கூட்டம், சபை, அவை, சங்கு, அழகு, கைவளை, நெற்றி, கணைக்கால், சேனைவகை, இலட்சம்கோடி எனும் பொருள்கள் உண்டு.
‘இலக்கியம்’ என்பதற்குத் தொல்காப்பியத்தில் இடமில்லை. ஒருசொல் தன்மையாகிய இச்சொல்லை, இலக்கு+இயம் எனப்பிரிக்கலாம். ‘இலக்கு’ என்பதற்குக் குறி, குறிப்பொருள், சமயம் எனும் பொருள்கள். ‘இயம்’ என்பதற்கு வாச்சியம், மத்தளம், ஒலி, சொல் எனும் பொருள்கள்.

‘சாரல்’ என்பதற்குப் பக்கமலை, கிட்டுகை, தூவானம் எனும் பொருள்கள். ‘இயம்புதல்’ என்பதற்கு ஒலித்தல், வாச்சியமொலித்தல், சொல்லுதல், துதித்தல் எனும் தொழிற்பெயர்ப் பொருள்கள். மேற்காண் ‘இயம்’ என்பது பெயர்ச்சொல். எனவே, ‘சங்க இலக்கியச் சாரல்’ என்பதற்குச் சங்ககாலத்தில் தோன்றிய இலக்கியங்களின் தூவல்கள் எனம் பொருள் கொள்ளலாம். மழைச்சாரல் என்பது போல, இலக்கியச்சாரல் என்பது பொருந்தும்.
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எனச் சங்கங்கள் மூன்று. முதற்சங்கத்தைத் தலைச்சங்கம் என்பர். முச்சங்க வரலாற்றைக் காண்போம். சங்கங்களை நிறுவியவர் பாண்டியர்.

தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என, இத்தொடக்கத்தார் ஐந்நூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவரால் பாடப்பட்டன எத்தனையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என, இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்பது, அவரைச் சங்கமி இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் ‘அகத்தியம்’ என்ப.

இடைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர் காப்பியனாரும், சிறுபாண்ட ரங்கனாரும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என, இத்தொடக்கத்தார் ஐம்புத்தொன்மதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவராற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என, இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பயமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும் என இவை. அவர், மூவாயிரத்து எழுநுற்றாண்டு சங்கமிருந்தார் என்ப. அவருள் சங்கம் இர்இணினார் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மா என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர், சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரம் என்ப. அக்காலத்துப் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது போலும்.
கடைச்சங்கம் இருந்தால் சிறுமேகாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரானாரும், பெருங் குன்றூர்க் கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என, இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர்அவருள் கவியரங்கேறினார் மூவர் என்ப. அவர், சங்கம் இருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப.
‘இலக்கியம்’ என்னும் சொல், சூளாமணியில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். ‘காமநூலினுக்கு ‘இலக்கியம்’ காட்டிய வளத்தார்’ – (சூளா.455).

எட்டுத்தொகை:சங்க இலக்கியங்களை, தொகையும் பாட்டும் என்ப. அவை எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் என விரிவன. முதலில் எட்டுத்தொகை குறித்த வெண்பா ‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தார் ஏத்துங் கலியோடு அறம்புறமென்றுஇத்தீறத்த எட்டுத் தொகை’
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு எட்டுத்தொகையாகும்.

திணை என்பதற்கு இடம், வீடு, குலம், ஒழுக்கம் என்ற பொருள்கள் உண்டு. எனவே, ‘நற்றிணை’ என்பதை நற்குலம் அல்லது நல்லொழுக்கம் எனலாம்.

நற்றிணை அறிமுகம்:தொகை நூல்களில் முதலிடம் பெறுவது நற்றிணை. ஏழடிச் சிற்றெல்லையும், பதின்மூன்றடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களை உடையது. நானூறு பாடல்களைக் கொண்ட இந்நூலில், 234ஆம் பாடல் கிடைக்கவில்லை. நற்றிணையைத் தொகுத்தவர், யாரெனத் தெரியவில்ல; தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி. பாடிய புலவர் 192.

சாரல் 1: – தூறல் 1:பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லிய கூற்று. கபிலர் பாடிய குறிஞ்சித்திணைப் பாடல். நூலின் முதற்பாடலும் இதுதான்.

நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்என்று என்தோள் பிரிபறி யலரே!தாமரை தண்தாது ஊறி மீமிசைச்சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்புரைய மன்றப் புரையோர் கேண்மைநீரின்று அமையா உலகம் போலத்தம்மின்று அமையா நம்நயந் தருள்நறுநுதல் பசத்த லஞ்சிச்சிறுமை யுறுபவோ செய்பறி யலரே!

சொன்னதைச் செய்வபனே தலைவன்; செய்வதைச் சொல்பவனே தலைவன்; என்றும் மாறாத இனிய மனம் படைத்தவனே! எந்தச் சூழலிலும் தலைவியைப் பிரியமாட்டாதவனே! தாமரை மலரின் குறிர்ச்சி பொருந்திய நறுந்தேன் கொண்டு, மணக்கின்ற சந்தனமரத்தில் அதனைச் சேர்த்தது போன்ற நற்பண்பு உடையவன்! மேலும், நீரில்லாமல் இந்த நீளுலகம் இல்லாதது போலவே, அத்தன்மை உடையவனே தலைவன். அதனால், அவள் பிரிவினை கருதமாட்டாதவனே தலைவன், எனத் தலைவி தோழியிடம் கூறுகின்றாள்.

சாரல்:1-தூறல்:2:பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லிய கூற்று. தேய்புரிப் பழங்கயிற்றனார் பாடியது. இது, அவர்தம் இயற்பெயரன்று; பாடலில் இடம்பெறும் உவமையினால் அமைந்த பெயர்.

‘புறந்தாழ் இருண்ட கூந்தல் போதின்நிறம்பெறும் ஈரிதழ்ப் பொலிந்த வுண்கள்உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்செல்லல் தீர்கம் செல்வா மென்னும்செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல்எய்யா மையோடு இழிவுதலைத் தருமென,உறுதி தூக்காத் தூக்கி யறிவேசிறிதுநனி விரையல் என்னு மாயிடைஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றியதேய்புரிப் பழங்கயிறு போல-வீவது கொல்லென் வருந்திய வுடம்பே! (284)
பொருளீட்டச் சென்றுள்ளான் தலைவன். தலைவியின் பிரிவு, அவனை அலைக்கழிக்கிறது. அன்பு மேலிட, உணர்வு ‘பார்க்கச்செல்’ என்கிறது. கடமை மேலிட, அறிவு ‘பொருளீட்டு’ என்கிறது. இவ்வாறாக உணர்வுக்கும் அறிவுக்கும் நெடும்போராட்டம் நிகழ்கிறது. உணர்வும் ஒரு யானை; அறிவும் ஒரு யானை. இரண்டு வலிமைமிக்க களிறுகள், கயிறிழுக்கும் போட்டி நடத்துகின்றன. கடமை முடியாமல் பார்க்கச் செல்வதால், இழிவுதருமென அறிகிறான். உணர்வோ தலைவியைக் காணாமல் தடுமாறுவதையும் உணர்கிறான். ஒருபுறம் அறிவுப் போராட்டம்; மறுபுறம் உணர்வுப் போராட்டம். தலைவனின் உள்ளமோ, இருதலைக் கொள்ளி எறும்பென ஆயிற்று. உடல் நோகின்றது; உள்ளம் வேகின்றது. இரண்டு யானைகளும் பற்றி இழுப்பதோ, தேய்ந்துபோன- பிய்ந்துபோன மிகப் பழங்கயிறு. இப்பக்கமும் இல்லாமல் அறுந்துபட்டது. அந்தக் கயிற்றைப் போல, அவன் வருந்திய உடம்பானது அழிந்துபடுவதோ என வருந்துகின்றான்.
வளரும்…


கவியரசியார் சௌந்திரா கைலாசம் அம்மையார் என்னை அழைத்துத் தன் இல்லத்திலுள்ள நூலகத்தில் பழைய நூல்களையெல்லாம் சீர்பெற அடுக்கவும், கிழிந்த தாள்களில் உள்ள கவிதைகளை மீளச் செம்மையாக எழுதித் தருவதற்கும் நல்ல தமிழார்வமுள்ள ஓர் இளைஞரை எனக்கு அறிமுகம் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னுடைய எம்.ஏ. வகுப்புத் தோழரான மகாதேவ ராவினை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். காரணம், அவருடைய கையெழுத்து முத்து முத்தாக இருப்பதால் அப்பணியை அவர் செவ்வனே செய்வார் என்ற உறுதியுடன் அழைத்துச் சென்றேன்.

அத்தொடர்பணி தொய்வின்றி நடைபெற்றாலும் ஓரிரு முறை மகாதேவன் சுணக்கம் காட்டினார். நான்தான் அவரை ஆற்றுப்படுத்திப் பொறுமை காத்தால் அகிலத்தை வெல்வாய் என்று கூறினேன்.

அப்பொறுமைக்குப் பரிசாகப் பணி முடிந்தவுடன் குமுதம் இதழின் தலைமை நிருபர் திரு. பால்யூவை அழைத்து இவர் பெயர் மகாதேவன், ஔவை அருளின் வகுப்புத் தோழர். நாளை முதல் இவரைப் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ குமுதம் இதழில் பணியமர்த்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியாவிலேயே இணையற்ற செல்வாக்கையும் செலாவணியையும் பெற்றுள்ள குமுதம் இதழில் மகாதேவனுக்கு நிருபர் பணி கிடைத்தது.  அம்மையாரின் சிறப்பு அளவிடற்கு முடியாது.  எனக்கு இன்னும் பசுமையாக நினைவுள்ளது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த வேளையில் என்னையும் என் தம்பி பரதனையும் அவர்கள் தலைமையில் இந்தியன் ஏர்லைன் வானூர்தியில் சென்னை-மதுரை தொடக்கப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது பெருமையாகும். இதுவே எனக்குத் தொடக்கமான வான்வழிப் பயணமாகும்.

1989-இல் நான் லியோ கிளப்பில் உறுப்பினராக இருந்தபோது பேச்சுப் போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்வது வழக்கம்.  அப்போது, இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த செல்வி வித்யா அற்புதமாகப் பாடும் கலைஞராக இருந்தார். பிறகு, பம்பாயில் கிளியா நிறுவனத்தில் உதவித் துணைத் தலைவராகப் பணிபுரிந்துகொண்டிருந்த வேளையில், என்னிடம் தொலைபேசியில் அழைத்து, பல பேச்சுப் போட்டிகளில் ஈடுபட்டு வரும் நீங்கள் ஏன் மக்கள் தொடர்புக் கலையில் ஈடுபட்டு உங்கள் பேச்சினைப் பணமாக்கக்கூடாது என்று கேட்டார்.

இந்தக் கேள்வி எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்த எம்.ஏ. படிப்பைத் தொடர்ந்து கொண்டே சென்னையிலேயே கிளியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். விளம்பரத் துறைக்கு நான் உள்ளே வரக் காரணமாயிருந்தது செல்வி வித்யா.  மேலும் உந்துசக்தியாய் விளங்கிப் பெருமக்கள் பலரிடம் பழகுவதற்கும் பல செய்தியாளர்களைச் சந்தித்து நண்பர்களாக்கிக் கொள்வதற்கும் பல வெற்றி நிலைகளுக்கு என் வாழ்வை மாற்றியமைத்தவரும் திருமதி வித்யா சீனிவாசன் என்றால் மிகையாகாது.
முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு ஞாயிறு இரவும் பத்தே முக்கால் முதல் பதினைந்து மணித்துளிகளுக்கு ‘மேலும் நாணயம்’ (Few Rupees More) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இரண்டாவது அலைவரிசையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியபோது, முதலாம் நிலைச் சந்தை பற்றியும், இரண்டாம் நிலைச் சந்தை பற்றியும், பரஸ்பர நிதியம் பற்றித் தொடக்க நிலையிலிருந்து நேயர்களுக்கு விளக்கிக் காண்பித்து இத்துறையில் முன்னோடியாய் விளங்கும் பலரை அழைத்து அவர்களைத் தனித்துக் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளையும் பாங்குற நடத்திய என் இனிய நண்பர் பம்பாய்த் தமிழர் திரு.சீனிவாசன் பல ஆர்வலர்களை வென்றார்.
அவ்வரிசையில் என்னை விளம்பர வானில் ஒளிவீச வைத்த கிளியா நிறுவனத்தின் துணைத் தலைவர் செல்வி வித்யாவின் கருத்தையும், சிந்தனையையும் கொள்ளை கொண்டு தன்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அமைத்துக் கொள்வதற்கு இந்நிகழ்ச்சியே விதையூன்றியது.    வித்யாவின் தந்தை திரு சடகோபன் அவர்களின் நல்லாசியில் மிகச் சிறப்பாக வித்யா சீனிவாசனின் திருமணம் நடைபெற்றது. 
குறுந்தொகை அறிமுகம்:-நான்கடிச் சிற்றெல்லை எட்டடி பேரெல்லை கொண்டது நல்ல குறுந்தொகை. ஆனால், 307ஆம் பாடல், 391ஆம் பாடல் ஆகிய இரண்டும் ஒன்பதடிப் பேரெல்லைகளைக் கொண்டவை. இரண்டுமே தலைவி கூற்றுகள்.  401 பாடல்கள் கொண்ட குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ.

சாரல்: 2- தூறல்: 1ஔவையார் பாடல். 23ஆம் பாடல்.‘அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே! இன்னும் பாடுகபாட்டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!’
தலைவியின் தாயை நற்றாயென்பர்; தாயின் தோழியைச் செவிலித்தாயென்பர். கொண்ட காதல் நோயால், தலைவியோ உடல் மெலிவுற்றாள்- நலிவுற்றாள். குறிகேட்கச் செல்கின்றாள் தாய். தோழி, குறி சொல்பவளிடம் தலைவியின் தாய் கேட்குமாறு மலைவளத்தைப் பாடுமாறு சொல்வாள்.  தலைவியின் மெலிவுக்கும், நலிவுக்கும் காரணம் குறிஞ்சித் தலைவனே என்பதைக் குறிப்பாக உணர்த்தச் செய்வாள். இதற்கு ‘அறத்தொடு நிற்றல்’ என்பது பெயர். இந்த ஐந்தடிப் பாடலில், குறிசொல்பவளை மும்முறை விளிப்பதாகவும், பாடலைப் பாடவேண்டி இருமுறை வியங்கோள் வினையாகவும் அமைத்துள்ளமை, எண்ணி மகிழ்தற்குரியது.  மேலும் ஈற்றடி, முன்னரே நன்னெடுங்குன்றம் பாடிய பாடலெனவும் தெரிகின்றது.

சாரல்: 2 – தூறல்: 2இன்னோர் ஐந்தடிப் பாடலையும் காண்போம். இப்பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. முன் சொன்னது போலவே பாடலில் இடம்பெறும் உவமைத் தொடராலேயே அவர் பெயர் அமைந்துள்ளது. ‘செம்புலப் பெயல் நீரார்’ என்பதே அஃது. 40-ஆம் பாடல். 
‘யாயும் ஞாயும் யாரா கியரோ? என்தையு நுந்தையும் எம்முறை கேளிர்? யானும் நீயும் எவ்வழி யறிதும்? செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே!’
இஃது, தலைவன் கூற்றாக அமைந்த பாடல். ‘உன்தாயும் யாரோ? என்தாயும் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவின் முறையினரோ? அவ்வளவு ஏன்? நீயும் நானுமேகூட, எவ்வகையில் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம்? ஆனால், செம்மண் நிலத்தில் பெய்யும் மழைநீர் போல, நம்முடைய அன்புகெழுமிய இரண்டு உள்ளங்களும் ஒன்றுபட்டனவே! என்கின்றான் தலைவன். எங்கோ இருக்கின்ற விண்ணின் மழைத் துளியும், இங்கே இருக்கின்ற மண்ணாகிய நிலமும் இணைந்து நிறம் மாறுவதால், இரண்டறக் கலந்துவிடுகின்றன என்பது, எண்ணி மகிழக்கூடிய ஈடிலா உவமை.
ஐங்குறுநூறு அறிமுகம்:-ஐந்து + குறுமை + நூறு – ஐந்குறுநூறு, திணைக்கு நூறு குறும்பாடல்களாக, ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு குறும்பாடல்களைக் கொண்டது ஐங்குறுநூறு. மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களை உடையது. மருதத்திணையைப் பாடியவர் ஓரம்போகியார்; நெய்தல் திணையைப் பாடியவர் அம்மூவனார்; குறிஞ்சித் திணையைப் பாடியவர் கபிலர்; பாலைத் திணையைப் பாடியவர் ஓதலாந்தையார்; முல்லைத் திணையைப் பாடியவர் பேயனார். இதனைத் தொகுத்தவர், புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்; 

குப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. திணைப்பாடல்கள் ஒவ்வொன்றும், பத்துப்பத்துகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைந்த அகநூல், ‘ஐங்குறுநூறு ஒன்றே!

சாரல்: 3 – தூறல்: 1மருதத்திணையில் இரண்டாம் பத்தாகிய வேழப்பத்தின் 14ஆம் பாடல்- தலைவிகூற்றாக அமைந்தது. ‘வேழம்’ என்பது, நாணல் என்றும் புல்வகை. அதைக் கொறுக்கச்சி, கொறுக்காந்தட்டை என்றும் கூறுவர்.

‘கொடிப்பூ வேழம் தீண்டி யயல வடிகொள் மாஅத்து வண்டளிர் நுடங்கும் அணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யு மின்சா யற்றே!’

தலைமகளின் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினால் உணர்ந்த தோழி, ‘அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைத்து ஆற்றாயாகின்றது என்ன?’ என்றாட்குத் தலைவி, ‘அவன் கொடியனே ஆயினும், அவன் மாப்பு, குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து ஈதலாற் காணெனச் சொல்லியது.

சாரல்: 3 – தூறல்: 2முல்லைத் திணையின் நான்காம் பத்தாகிய புறவணிப் பத்தின் முதற்பாடல் – தோழி கூற்றாக அமைந்தது. சிற்றெல்லையாகிய மூன்றடிப் பாடல். 
‘நன்றே காதல் சென்ற வாறே அணிநிற வரும்பொறை மீமிசை மணிநிற வுருவின தோகையு முடைத்தே!’ ‘பிரிவுடன் பட்டும் ஆற்றயாகின்றது என்ன? என்று வினவிய வழி, ‘அவர் போன சுரம், போகற்கரியது என்று ஆற்றேனாகின்றேன்’ என்ற தலைமகட்கு, ‘வேனிற்காலம் கழிந்தது; கார்ப்பருவத் தோற்றத்திலே பிரிந்தாராகலான், அச்சுரம் நன்று’ எனத்தோழி சொல்லி ஆற்றுவித்தது.

பதிற்றுப்பத்து அறிமுகம்:-பது+இற்று+பத்து – பதிற்றுப்பத்து. பத்து x பத்து-நூறு. இடையிலுள்ள ‘இற்று’ என்பது சாரியை. எனவே, நூறு பாடல்களைக் கொண்டது. பதிற்றுப்பத்து, புறத்திணைநூல். இது, சேரமன்னரை மட்டும் பாடுவது. முதல்பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்காமற் போயின. எட்டுப்பத்துகளையும் எட்டுப்புலவர் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் தெரியவில்லை. எல்லாப் பாடல்களும் பாடாண் திணைப் பாடல்களே. பாடல்கள், ஐந்தடிச் சிற்றெல்லையும், ஐம்பதேழடிப் பேரெல்லையும் கொண்டவை.

சாரல்: 4-தூறல்: 1பரணரின் ஐந்தாம் பத்தாம் பாடல். மன்னனை ‘நீடு வாழ்க! என வாழ்த்துவதாக அமைந்துள்ளது. ‘பேரெழில் வாழ்க்கை’ என்பது பாடலின் தலைப்பு.  துறை – இயன்மொழி வாழ்த்து. 18 அடிகளைக் கொண்டது. எட்டாம் பாடலாக உள்ளது. ‘
பைம்பொன் தாமரை பாணர் சூட்டி! ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி, கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்கு, கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ! ஆண்டுநீர்ப் பெற்ற தாரம், ‘ஈண்டிவர் கொள்ளாப் பாடற்கு எளிதினி னீயும் கல்லா வாய்மைய னிவனெனத் தத்தம் கைவ லிளையர் நேர்கை நிரப்ப, வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை முனைசுடு கனையெரி யெரித்தலின் பெரிதும் இதழ்கவி னழிந்த மாலையொடு சாந்தபுலர் பல்பொறி மார்ப! நின் பெயர்வா ழியரோ- நின்மலப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீம்நீர்விழவின்,பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை, மேவரு சுற்றமோ டுண்டினிது நுகரும், தீம்புன லாய மாடும், காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே!’
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரணர், பலபடப் பாராட்டுகிறார். சேரநாட்டு மக்களின் வாழ்வு, சிறந்திருப்பதாகக் கூறுகிறார். அதனை ‘பேரெழில் வாழ்க்கை என்று போற்றுகிறார்.

பாடற்பொருள்: குட்டுவன், பொற்றாமரைப் பூவினைப் பாணர்க்குச் சூட்டுகிறான். பொன்னரி மாலையை விறலியர்க்குப் பூட்டுகிறான். புகழ்பலவும் பெற்றுள்ளான். கடற்போரில் பெற்ற பொருட்களை, அவன் பிறந்தநாளில் புலவர்தம் பாடல்களுக்குப் பரிசளிப்பதைத் தவிர, வேறொன்றையும் அறியான். பகைவர் நாட்டை வென்று, தீ மூட்டியதால் கரிந்த மாலையினை அணிந்துள்ளான். சந்தனம் பூசிய புலர்ந்த மார்பினன். ஆறுகளில் நீர்விழாச் செய்து, புனலாடியவன். நீர்விழாவையும் வேனிற்காலத்தின் வெம்மையைப் போக்குமாறு நிகழ்த்தியவன். சோலைகளில் பேரழகு வாய்ந்த இல்வாழ்க்கையை விரும்பிச் சுற்றஞ்சூழ உண்டு வாழ்ந்தனர் குடிமக்கள். ‘ பேரெழில் வாழ்க்கையே’ அவர்தம் வாழ்க்கை. ‘உன் புகழானது காஞ்சியாற்றின் பெருந்துறையில் உள்ள மணலைக்காட்டிலும் பலவாக, உன் பெயரும் அதுவாக வாழ்வதாக!’ என்று பாடலை நிறைவு செய்கிறார் பரணர்.

39 –  “தண்ணளி பொழிந்த தாயுள்ளம்!”

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது என் அம்மாவிற்குப் பெறர்கரிய வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு அவர்கள் நான்காண்டுகள் அயன் முகமையில் (Deputation) பணியாற்றுவதற்கு வட ஆப்பிரிக்காவிலுள்ள இலிபியா நாட்டிற்குச் செல்வதற்கு ஆணை கிடைக்கப்பெற்றது. சூலைத் திங்கள் 1979-ஆம் ஆண்டில் தன்னந்தனியாகப் புறப்பட்டு, இலிபியா நாட்டின் இரண்டாம் தலைநகரமாகத் திகழ்ந்த பென்காசியில் அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்துணையாகச் சென்னை மருத்துவக் கல்லூரியில் அவரோடு இணைந்து பயின்ற மருத்துவர் கதீஜாவும் அவருடைய மருகன், மகள் சாகிதாவும் பெருந்துணையாய் இருந்தனர். அவ்வேளையில் நாங்கள் மூன்று சகோதரர்களும் எங்கள் பெரியம்மா (அம்மாவின் தமக்கையார்) திருமதி பரமேசுவரி அம்மையாரின் அரவணைப்பில், நாங்கள் முதன்முதலாகத் தங்கியிருந்த அதே பெசன்டு ரோடு இல்லத்தில் அவர்கள் குடும்பத்துடன் தங்கிப் பயின்றோம். நாள் தவறாமல் குறைந்தது 8 கடிதங்கள் எங்கள் அனைவருக்குமாக அம்மா எழுதியெழுதித் தொடர்ந்து அனுப்பியவண்ணம் இருப்பார்கள். அதற்கும் மேலாக ஒலியிழையில் குரல்பதிவாகப் பல தகவல்களையும், நல்லுரைகளையும் எங்களுக்கு அனுப்பினார்கள். 

எண்ணெய் வளம் கொழிக்கும் இலிபியாவில் மருத்துவப்பணி போற்றத் தகுந்த பணியாகும். அந்நாட்டுக் குடிமக்கள் இவர்களை இரண்டாம் தெய்வமாகவும் போற்றினார்களாம். பெருமழையென்றாலும், பெரும்புயலென்றாலும் மருத்துவர்களுடைய போக்குவரவு வசதியைக் கண்ணும் கருத்துமாகக் காத்து நாள் தவறாமல் மருத்துவமனை வருவதற்கு வழிசெய்து அம்மாவைப் போன்ற மருத்துவர்களுக்கு அரணாக இருந்தார்கள். அங்கிருந்தபோது அம்மா ஒரு பெரிய கனவு கண்டார். ஓரிரு ஆண்டுகளில், எங்கள் மூவரையும் எகிப்திலேயோ, உரோமாபுரியிலேயோ உள்ள உயர்ந்த பள்ளியில் படிக்கவைக்க விழைந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர்களான திரு. மொகிதீன் குடும்பத்தினரைப் பாராட்டிய வண்ணமே இருந்தார்கள். அம்மாவுடைய ஏக்கமெல்லாம் சென்னையிலிருந்து எங்கள் பதில் கடிதங்கள் வந்து சேருவது என்பது, இருபதிலிருந்து முப்பது நாள்களாகும். அவ்வேளைகளில் இந்தியாவுக்குச் செல்கிற மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாகவும் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களெல்லாம் யாதும் அறியாத இளங்கன்றுகளாக இருக்கிறோமே என்ற ஏக்கம்தான் அவர்களைக் கவலைகொள்ள வைத்தது. அவ்வேளைகளில் என் பெரியப்பா பொதுப்பணித் துறைப் பொறிஞர் சுந்தரமூர்த்தி, அவர்களுடைய மகள்கள் திருமதி சுதா நலங்கிள்ளி, (பாஸ்டன் பள்ளியில் ஆங்கில ஆசிரியர்) திருமதி உஷா மதனகோபாலன் (காயிதே மில்லத் அரசுக் கல்லூரி இளம் அறிவியல் கணிதப் பட்ட வகுப்பில் மூன்றாமாண்டு மாணவி) கணக்கு, ஆங்கிலம், அறிவியல் பாடங்களைக் கண்ணும் கருத்துமாய் எங்களைப் படிக்க வைத்ததும், எங்களின் நலங்களைக் கண்காணித்ததும் இலிபியாவிலுள்ள அம்மாவைப் பெரிதும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது.

பெரியம்மா பரமேசுவரிக்குப் புற்றுநோய் வளர்ந்த நிலையில் அல்லலுற்றிருந்த நிலையில் எங்கள் அம்மாவால் இலிபியாவில் இருப்புக்கொள்ள முடியாமல் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பான அயற்பணியை விட்டு, ஆறே திங்களில் பதவியிலிருந்து விலகி, சென்னைக்கு 1980 சனவரியில் திரும்பி வந்தார்கள். அம்மா வந்து ஒரே திங்களில் எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு எங்கள் பெரியம்மா மறைந்து விட்டார்கள். அவ்வேளையில் எங்கள் அப்பாவுக்குச் சென்னையில் வீட்டுப் பணியாளாக முருகேசன் என்ற நல்லிளைஞர் இருந்தார். நாங்கள் வாரஇறுதியில் அண்ணாநகருக்குச் சென்றபோதெல்லாம், எங்களுடன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அவர் மாறியது அண்ணா நகரிலுள்ள பலரை வியப்பில் ஆழ்த்தியது. அவர் எப்பொழுதும், வேட்டி அணிந்துகொண்டு வேகப்பந்து வீசுவதைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கும். அதே வேகப்பந்துக்கு நிகராக மட்டை வீச்சிலும் சிறந்த வீரராகவும் மிளிர்ந்தார். என்னுடைய அண்ணன் கண்ணன் Gaylord Cricket Club, Kingston Cricket Club என்று இரண்டு குழுக்களை அண்ணா நகரில் நடத்திய பெருமைக்குரியவர் ஆவார். அந்நாளைய இ.ஆ.ப. அதிகாரிகளுடைய மகன்கள், இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரன் போன்ற பலர் இந்த அணியில் வந்து விளையாடியவர்கள் ஆவார்கள். மேலும் அந்த அணியில் இடம்பெற்ற நண்பர்களின் பெயர்ப்பட்டியல் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. (எங்கள் இல்லத்திலிருந்து, கண்ணன், அருள், பரதன், முரளி, முருகேசன்; எதிர்வீட்டிலிருந்து இராமதாஸ், அர்ஷத்; பக்கத்து வீடுகளிலிருந்து இராம்கி, மாதவன்; பின்வீட்டிலிருந்து இராமசாமி, ஸ்ரீராம், இராமநாதன், கோபால், பாலு, இரமேஷ்; கிரிக்கெட் நடுவராக இலட்சுமி, அரவிந்து, இரவிசங்கர், இரகு, விஜய், சூரஜ், சேகர், சதீஷ், சிவக்குமார், பிரதீப், ஜான், விஜயதாஸ், விஜயகுமார், சாய்ராம், சூர்யா, இராம்மோகன், சாய் மற்றும் சத்யா) அவ்வப்போது என் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில் வகுப்பில் மாணவர்களாகிய பாடநூலின் பக்கங்களை விரித்து மடித்து அப்பக்கங்களிலுள்ள ஓரிலக்க எண்களைக் கூட்டிப் புக் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாகும். மேற்குறித்த நண்பர்களின் உதவியால், எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள காலிமனைகளைக் கிரிக்கெட் மைதானமாக மாற்றியமைத்து அங்கு மண்டிக்கிடந்த முட்புதர்களையெல்லாம் அகற்றிச் சீர்செய்து காரை உருளைக் குப்பைத் தொட்டிகளை வைத்துப் பந்து வீசும் தளப்பரப்பைச் செம்மைப்படுத்தியதும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொலைக்காட்சியில் கண்ட என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி இம்ரான்கானின் வேகப்பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டியதும் என் நினைவில் இன்னும் பசுமையாகவுள்ளது.

பதிற்றுப்பத்து

சாரல்: 4-தூறல்: 2செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடுகிறார். வாழியாதனின் போர்க்களம், புலால்நாற்றம் வீசுகிறது. காயம்பட்ட களிறுகளும் போர்மறவரும் புண்பட்டிருந்தமையால், அந்நாற்றம் பெருகியது. வள்ளல் பாரியின் நெருங்கிய அறிவார்ந்த நண்பர் கபிலர். ஆதனைக் காணச்சென்ற கபிலர், பாரியின் பெருமையைப் பாடுகிறார். ‘புலாஅம் பாசறை’ என்னும் முதற்பாடல்:
‘பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்வாடை தூக்கும் நாடுகெழு பெருவிரல்,ஓவத் தன்ன வினைபுனை நல்லில்,பாவையன்ன நல்லோள் கணவன்,பொன்னி னன்ன பூவின் சிறியிலைப்புண்கால், உன்னத்துப் பகைவன் எங்கோ!புலர்ந்த சாந்தின் புலரா வீகை,மலர்ந்த மார்பின் மாவண் பாரிமுழவுமண் புலர, இரவலர் இனைய,வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்கவென,இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;ஈத்த திரங்கான்; ஈத்தொறும் மகிழான்;ஈத்தொறும் மாவள் ளியனென நுவலுநின்நல்லிசை தரவந் திசினே- ஒள்வாள்உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,நிலவி னன்ன வெள்வேள் பாடினிமுழவில் போக்கிற வெண்கைவிழவின அன்னநின் கலிமகி ழானே!
பூசியுலர்ந்த சந்தனத்தைத் தன் அகன்ற மார்பிலுடையவன் வள்ளல் பாரி. அவன் மரத்தில் பழுத்த பலாப்பழத்தின் பிளவிலிருந்து ஒழுகும் தேனை, வாடைக்காற்று மெல்லத்தூவும் நாட்டினை உடையவன் அவன். ஓவியப் பாவையின் கணவன். உன்னமரத்திற்குப் பகைவன். அவனுடைய முழவுமண் காய, இரவலர் துன்பமடைய, மீண்டுவாரா விண்ணுலகத்திற்குச் சென்றுவிட்டான். அதனால் நீ எம்மைப் பாதுகாக்க வேண்டி, இரந்து செல்ல நான் இங்கு வரவில்லை. எதையும் மிகையாகக் கூறமாட்டேன். மெய்யொன்றையே பேசுவேன். நீயும் பெருங்கொடையாளனென்று உனது புகழை உலகமக்கள் பேசுவதை அறிந்து, உன்னைக் காண வந்தேன். நிலவொளி போல் ஒளிவீசும் உனது படைக்கலனாகிய வேலினைப் பாடும் விறலி, முழவிசைக்குப் பொருந்தத் தன்கையால் தாளம்போடும் விழாவைப்போல், ஆரவாரம் மிகுந்த உனது இன்பக் களியாட்டத்தின்போது உன்னைக் காணவந்தேன் என்கிறார் கபிலர். தமது பெருமிதத்தையும் நிலைநாட்டுகிறார்.
பரிபாடல்:-பரிபாடல், பரிபாட்டெனவும் வழங்கப்படும். பரிதல்-பற்றுதல். திருமாமலைப் பற்றுதலும், செவ்வேளைப் பற்றுதலுமாகிய நிலைகளில், பாடல்கள் அமைந்துள்ளன. பரிபாடலின் அடிச்சிறுமை 25, அடிப்பெருமை 400 என்பது தொல்காப்பியம் (1418). இதுவரை கிடைத்துள்ள பாடல்கள் 22. திருமால் குறித்து 6, செவ்வேள் குறித்து 8, வையை குறித்து 8.
சாரல்: 5-தூறல்: 1ஒவ்வொன்றும் நெடிய பாடல்கள். எனவே, தேர்ந்தெடுக்கப்பெற்ற இரண்டு பாடல்களின் சிலவரிகளை மட்டுமே காணலாம். முதலில் மூன்றாவது பாடலின் பகுதி. திருமால் குறித்தது. கடுவன் இளவெயினனார் பாடியது. மொத்தமுள்ள 94 அடிகளில், 63 முதல் 72 முடியவுள்ள 10 அடிகள்.
‘தீயினுள் தெறல்நீ! பூவினுள் நாற்றம்நீ!கல்லினுள் மணியும்நீ! சொல்லினுள் வாய்மைநீ!அறத்தினுள் அன்புநீ! மறத்தினுள் மைந்துநீ!வேதத்து மறைநீ! பூதத்து முதலும்நீ!வெஞ்சுடர் ஒளியும்நீ! திங்களுள் அளியும்நீ!அனைத்தும்நீ! அனைத்தினுள் பொருளும்நீ! ஆதலின்,உறையும் உறைவதும் இலையே! உண்மையும்மறவியல் சிறப்பின் மாயமார் அனையை;முதன்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலின்மறவாப் பிறப்பிலை; பிறப்பித்தோ ரிலையே!
படைப்புக் கடவுளாகிய மாலவன், தீயின் பெருவெப்பமாக விளங்குகிறான்; பூவின் நறுமணமாக விளங்குகிறான்; கல்லின் மாணிக்க மணியாக விளங்குகிறான்; சொல்லில் வாய்மை உடையவனாக விளங்குகிறான்; அறத்தில் பெரும்பற்று உடையவனாக விளங்குகிறான்; மறத்தில் பெருவலிமை படைத்தவனாக விளங்குகிறான்; வேதத்துக்கு நாயகனாக விளங்குகிறான்; பஞ்சபூதங்களுக்கும் தலைவனாக விளங்குகிறான்; வெஞ்சுடரின் பேரொளியாக விளங்குகிறான்; திங்களின் தண்ணளி கொண்டவனாக விளங்குகிறான்; அனைத்துமாக விளங்குகிறான்; அனைத்தினுள் இயங்குபவனாக விளங்குகிறான்; ஆதலினால், அவனுக்கு உறைவிடமும் இல்லை; அவன் உறைவதும் இல்லை; உண்மையாகவும், விடுவலாச் சிறப்பின் வியப்புக்குரியவனாகவும் விளங்கு கிறான்; எல்லாமாகவும் விளங்குகிறான்; முதல், இடை, கடைமுறைகளின் பிறப்பிலி யாகவும், பிறப்பித்தோர் இலனாகவும் விளங்குகிறான். இப்படி ஒரு ஈடில்லாத வாழ்த்து அமைய முடியாது.

சாரல்: 5-தூறல்: 2அடுத்ததாகப் பதினான்காவது பாடலின் பகுதி. செவ்வேளாகிய முருகவேளைப் பற்றியது. அவனிடம் பற்று மிகக்கொண்ட கேசவனார் என்னும் புலவர் பாடியது. மொத்தமுள்ள 32 அடிகளில், 18 முதல் 32 அடிகள் முடியப் பதினைந்து அடிகள்.
‘சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே!கறையில் கார்மழை பொங்கி யன்ன,நறையின் நறும்புகை நனியமர்ந் தோயே!அறுமுகத்து ஆறிரு தோளால் வென்றி,நறுமலர் வள்ளி பூநயந் தோயே!கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னைஎழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே!பிறந்த ஞான்றே, நின்னை யுட்கிச்சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே!இருபிறப்பு, இருபெயர், ஈரநெஞ்சத்து,ஒருபெயர், அந்தணர் அறனமர்ந் தோயே!அன்னை யாகலின், அமர்ந்துயாம் நின்னைத்துன்னித் துன்னி வழிபடு வதன்பயம்இன்னு மின்னுமவை யாகுககொன்முதிர் மரபின்நின் புகழினும் பலவே!

தேவருக்குத் தொல்லை கொடுத்துவந்த சூரபத்மனை அழித்த – ஒளிவீசும் வேலாயுதம் தாங்கிய செவ்வேளே! கருக்கொண்ட மேகம், கனமழை பெய்வது போன்ற தூபத்தின் மணப்புகையில் இனிதமர்ந்தவனே! ஆறுமுகங்களுடன், பன்னிரண்டு தோள்களால் வெற்றிவீரனாக விளங்குபவனே! மணமிகு மலராகிய வள்ளியம்மையெனும் பூவை விரும்பியவனே! நட்புக்கொண்டு, சுற்றத்தார் சூழ்ந்திருக்க, உன்னை உயர்த்திப்பாடும் பாட்டினைச் செவிமடுத்துச் சுவைத்து மகிழ்பவனே! நீ தோன்றியபோதே தேவேந்திரன் உள்ளிட்ட தேவரெலாம் மகிழ்ந்தனரே! அசுரரெலாம் அஞ்சிய சீரூடையவனே! இருபிறப்பு, இருபெயர், ஈரநெஞ்சத்து ஒருபெயராம் அறவோராகிய அந்தணர்தம் அறத்தில் விளங்குபவனே! தண்ணளி பொழியும் தாய் போன்றவனாகையால், உள்ளம் ஒருமுகப்பட்டு, ஊனை நெருங்கி நெருங்கி வழிபடுகின்றோம். அந்தத் தன்மையானது, மேன்மேலும் அவ்வாறே தொடர்வதாகட்டும். கணிக்கவியலாத பழமரபின் வழிபட்ட உன் பெருத்த புகழைக்காட்டிலும் அவை பல்கிப் பெருகட்டும்! என்று, கேசவனார் உள்ளம் உருகிப் போற்றுகிறார்.

40 –  “ வாழ்வியல் காட்டிய வளம் ! ”

சென்னையில் வளமனைகளின் வாயில் முகப்பில் நாய்கள் ஜாக்கிரதை ( Beware of Dogs ) என்ற பெயர்ப்பலகை வாடிக்கையாகக் காணலாம். அவ்வண்ணமே எங்கள் அண்ணா நகர் இல்லத்தில் எந்தையார் புதிய தொடராக ‘ விழிப்போடு வருக ’ என்ற பெயர்ப்பலகையை வைத்திருந்தார். இப்பெயர்ப்பலகை அந்நாளில் பல வார இதழ்களில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

1974 முதல் 1998 வரையில் எங்கள் இல்லத்தின் அசைக்க முடியாத அருந்துணையாக நான்கு கால் நண்பராக, வெவ்வேறு காலங்களில், காவல் தெய்வங்களாக, ‘காரி’, ‘டாமி’, ‘சீசர்’, ‘ஜூலி’, ‘அஞ்சலி’ வலம் வந்தது பசுமையாகவுள்ளது. இவை எங்களுடன் பின்னிப்பிணைந்து மிக விழிப்பாக எங்களைக் கண்காணித்ததை மறக்க முடியாதது.
எந்தையார் மீதும், தம்பி பரதன் மீதும், அண்ணன் கண்ணன் மீதும் உச்சந்தலை வரை தொட்டுத் தொட்டு விளையாடுவதும், அவர்களுடைய செவிகளில் உராய்வதும் காணக்கிடைக்காத காட்சிகளாகும். சைவப் பிறவிகளாகிய நாங்கள் எங்கள் நாயகர்களையும் கடுஞ்சைவமாக வளர்த்தது எங்கள் அன்னையாரின் பெரும்பணியாகும். பாலும், தயிரும் உண்டாலும், அணுவளவும் சீற்றங்குறையாமல் எங்கள் பெற்றோர் எப்போதாவது ஒருமுறை எங்களிடம் குறைகாணும்பொழுது தவறிக் கையுயர்த்தினால் சீசரின் வேகத்தால் அவர்கள் அமைதியாவார்கள். எங்களைப் போலவே, கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபாடும், பூப்பந்தாடும்பொழுது அந்த உயரத்திற்கு எட்டித் தாவுவதும், ஊஞ்சலில் எங்களுடன் சரிசமமாக ஏறியமர்ந்து விளையாடுவதும் மறக்க முடியாத காட்சிகளாகும்.

சில நேரங்களில், மதிற்சுவரின் மேல்தான் எங்கள் பேச்சரங்கம் நடைபெறும். அவ்வேளைகளில் சீசரும் மதிற்சுவரில் உடன் அமர்ந்திருக்கும். இக்காட்சியைக் கண்டு, எங்கள் வீட்டுக்கு எதிரிலுள்ள அம்மாவின் பேராசிரியர், டாக்டர் சி.டி. திருஞான சம்பந்தம் அவர்கள் எங்கள் அம்மாவிடம் முறையிட்டாராம். முறையீட்டில் ‘ என்ன தாரா ! இப்படி உன் பிள்ளைகளும், நான்குகால் நண்பரும் மதிற்சுவரில் நிற்பதா ?’ என்று திகைத்துக் கேட்டாராம். அம்மா அடிக்கடி இதை எங்களிடம் சுட்டிக் காட்டுவார்கள்.
வேற்றொரு தருணத்தில், அஞ்சலியைக் காலை நடைக்கு அழைத்துச் சென்றபோது, வேற்றொரு இன நண்பரைப் பார்த்துச் சீற்றங்கொண்டு கைச்சங்கிலியிலிருந்து விடுபட்டு ஓடியபொழுது, விரைந்து வந்த சரக்குந்தில் அடிபட்டு இறந்த காட்சியைக் கண்டு நான் கலங்கி இரண்டு நாள்கள் உணவருந்தாமல் தத்தளித்தேன். எங்கள் இல்லத் தோட்டத்தில் எலுமிச்சை மர நிழலில் அஞ்சலியை மீளாத் துயில்கொள்ள வைத்தோம்.
தீபாவளி வந்தால், நாயகர்கள் நடுங்குவதைக் கண்டதால், அப்போதே, பட்டாசுகள் மீது எங்களுக்குக் கோபம் வந்துவிட்டது. இன்றும்கூடத் தோழர் நெமிலியை வளர்க்க வேண்டும் என்று என் மகள் ஆதிரை அடம் பிடிக்கிறார். என் அண்ணன் மகள் மருத்துவம் பயிலும் தாரா நிகிதா தன் தங்கையாக ‘மெலடி’யை ஆஸ்திரேலியாவில் பதினைந்து ஆண்டுகளாக வளர்க்கிறார்.
என் பெற்றோர்கள் இருவருக்கும் அற்புதமான பழக்கமுண்டு. அவர்களைவிட மூத்தவர்களையும், பதவியில் முதுநிலையில் உள்ளவர்களையும் மதிப்பதையும், அவர்களைவிட இளமையாகவுள்ள நண்பர்களைப் போற்றி வளர்ப்பதையும் கண்டு நான் பெருமிதங் கொள்வதுண்டு.  ஆண்டுத் தொடக்கமான சனவரி 1-ஆம் தேதியன்று, அப்பா முதல்வரையும், அருட்செல்வர் ந. மகாலிங்கம் அவர்களையும் சந்திப்பது போல், அம்மா டாக்டர் திருமதி மரக்காயரைச் சந்திப்பது தவறாத வழக்கமாகும்.
அம்மாவுடன் பணியாற்றிய மருத்துவத் திலகங்கள் எங்கள் மீதும் அன்பு சொறிந்தனர். இவர்களில், இராயப்பேட்டை மருத்துவமனை (1970-1978) டாக்டர் மங்கலம், டாக்டர் சுசீலா, டாக்டர் மெகருன்னிஷா, டாக்டர் பெர்லின் ஜோசப், அம்மாவிடம் பயிற்சியெடுத்த டாக்டர் தியாகராஜன், வசுந்தரா தியாகராஜன், (நங்கநல்லூர் பி.எம். மருத்துவமனை உரிமையாளர்கள்) டாக்டர் கமலக்கண்ணன் (அம்மாவைப் போல இலிபியாவில் பணியாற்றியவர்), டாக்டர் கிருபாகிரி மற்றும் செவிலியர் திருமதி தெரெசா, திருமதி பிளோமினா; ஸ்டான்லி மருத்துவமனை (1980-1981) நண்பராக டாக்டர் சந்திரா, தொழிலக மருத்துவமனையில் (1981-1982) மருத்துவர் தாராபாய்; கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (1982-1987) மருத்துவர் சினேகலதா (என் வகுப்புத் தோழர் தீபக்கின் அம்மா), எழும்பூர் குழந்தைநல மருத்துவமனையில் (1987-1989) டாக்டர் பார்வதி, டாக்டர் நர்மதா, டாக்டர் கே.ஜி. கமலா, மருத்துவர் இராமமூர்த்தி, மதுரை மருத்துவமனையில் (1989-1991) அம்மா முதல்வராக இருந்தபொழுது உதவியாளர் திருமதி இராதா போன்றோரும் மற்றும் குடும்ப நண்பர் ஓமியோபதி மருத்துவர் முருகன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர் ஆவர்.

என் பல்வரிசையை ஒருசீராக அமைப்பதற்குக் கம்பி கட்டிய பல்மருத்துவர் அண்ணா நகரிலுள்ள டாக்டர் பாணிசங்கர், புரசைவாக்கத்தில் டாக்டர் எம்.ஜே. இராமகிருஷ்ணன் (அம்மாவைப் போல இலிபியாவில் பணியாற்றியவர்), இராதாகிருஷ்ணன் சாலையில் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் ஆவர். எனக்குக் கண்ணாடி அணிவதற்காக கண் சிகிச்சை செய்த அண்ணாநகரிலுள்ள டாக்டர் சிவப்பிரகாசம் மயிலையிலுள்ள டாக்டர் பிரேமா அனைவரும் அம்மாவின் நண்பர்களே.

மழலை மருத்துவத்தின் மாத இதழாக மலரும் ‘Indian Academy of Paediatrics’ இதழை அம்மா எழுத்தெண்ணிப் படிப்பது வழக்கமாகும்.
என் மகள் ஆதிரைக்கு குழந்தைநல மருத்துவராகவுள்ள டாக்டர் பிரபாகரனிடம் நான் ஏதாவது மருத்துவக் கேள்வி கேட்டால், “என் பெருமைக்குரிய பேராசிரியராகிய உங்கள் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்” என்பார்.  அவ்வண்ணமே நான் தமிழ்ப் பேராசிரியர்களிடம் இலக்கியத்தில் ஐயம் கேட்டால், “அப்பாவைக் கேட்டுத் தெரிந்துகொள்” என்பார்கள். முதுபெரும் மருத்துவர்களான டாக்டர் சீலா தம்பையா, டாக்டர் சௌமினி, டாக்டர் கனகா, டாக்டர் நம்மாழ்வார், டாக்டர் பாஸ்கர் ராவ், இதய மருத்துவர்களான டாக்டர் சிவராஜ், டாக்டர் லலிதா காமேசுவரன், டாக்டர் சே.நெ. தெய்வநாயகம், டாக்டர் சண்முக சுந்தரம், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன் முதலியோரை எப்போதும் பெருமிதமாக அம்மா பேசுவார்.

மாபெரும் மருத்துவராகிய அம்மாவைப் போலவே மருத்துவர்களாக நாங்களும் வரவேண்டும் என்று நினைத்த எங்கள் குடும்ப உறவினர்கள் பதினெட்டு பேர் மாமருத்துவர்களாக மிளிர்கிறார்கள் என்பதே அம்மாவின் பெருஞ் சாதனையாகும். கலித்தொகை அறிமுகம்:
கற்றறிந்தார் ஏத்தும் கலியென்பது கலித்தொகை. கருத்து வளமிக்க நூல்; காதலைப்பற்றிக் கூறும் நூல்; தமிழர் பண்பாட்டைப்பற்றிப் பேசும் நூல்; அன்பு, பண்பு, முறை, நிறை, பொறை, போற்றுதல், ஆற்றுதல் போன்றவற்றுக்கு விளக்கங்களைத் தருகின்ற நூல்; வலிமைக்கு எளிமையான நூல்; எளிய சொற்களைக் கொண்டு, அரிய நீதிகளைக் கூறும் நூல். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், முதுமொழிக்காஞ்சி தவிர, வெண்பாவில் அமைந்தவை.

எட்டுத்தொகை நூல்கள், ஆசிரியப்பா அல்லது அகவற்பாவில் அமைந்தவை.
சாரல்: 6-தூறல்:1மொத்தமுள்ள 150 பாக்களில், முதலாவதாகத் தோழிகூற்றாக அமைந்துள்ள 133ஆம் பாடல்; சோழன் நல்லுருத்திரன் பாடியது. 19 அடிகளை உடைய பாடலில், 6 முதல் 14 அடி முடியவுள்ள 9 அடிகளை மட்டும் இங்கு காணலாம். திருக்குறள் சார்ந்த நெறிகளையே எடுத்தியம்பும் திறத்தைக் காண்போம்.
‘ஆற்றுத லென்பதொன் லந்தவர்க் குதவுதல்;போற்றுத லென்பது புணர்ந்தாலைப் பிரியாமை;பண்பெனப் படுவது தன்கிளை செறாஅமை;அறிவென படுவது பேதையார் சொல்நோற்றல்;செறிவெனப் படுவது கூறியது மறாஅமை;நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை;முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்; பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்!
ஏதுமற்ற ஏழை எளியவர்க்கு – வறியவர்க்கு வேண்டுவன ஈதல்வேண்டும்; முதலாவதாகப் பசிப்பிணி அகற்றும் மருத்துவராக இருத்தல் வேண்டும்; அடுத்த அடிப்படைத் தேவைகளான உடை வழங்குதல், உறையுள் வழங்குதல் வேண்டும். மொத்தத்தில் உற்றுழியும் உதவுதல் உயர்ந்தநெறி. புணர்ந்தாரை எனில், நட்புச் செய்தாரை என்பது பொருள்.

அவரை ஒருபோதும் பிரிதல் கூடாது. அந்த நட்பும் நுனிக்கரும்பிலிருந்து அடிக்கரும்பைச் சுவைப்பதுபோல்-அதாவது வளர்வதாக இருத்தல் வேண்டும். அதைத்தான் ‘போற்றுதல்’ என்கிறார். பண்பெனப்படுவதும் குணமெனப்படுவதும் ஒன்றுதான். முன்னோர் சென்ற நன்னெறியில் நாமும் நடைபயில்வதே ‘பண்பு’ எனப்படும். அன்பெனப்படுவது தெரிந்தவர்மாட்டுக் கொள்ளும் பற்றுள்ளமாகும். எனவே, உற்றாரும் உறவினருமாகிய அனைவரிடத்திலும் அன்புகொள்ள வேண்டும்.
‘அருளென்னும் அன்பீன் குழவி’ என்பார் திருவள்ளுவர். மேதையர் எனப்படுவோர், பேதையர் பிதற்றும் தகாச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளலாகும். அறிவானது, அற்றம் காக்கும் கருவியில்லையா? ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பதையும் நினைவிற் கொண்டு, வாழ்வதே அறிவுடைமையாகும்.

செறிவென்பது, ‘திண்மை’ எனப்படும். ஒருவர், முன்னர்க் கூறியதை மறக்காமலும், மறைக்காமலும் இருப்பதே ‘செறிவு’ எனப்படும். மறைபொருள் என்பது, ஒன்றைப் பிறர் அறியாமல் பாதுகாத்துக்கொள்வது. இல்லையெனில், வெளிப்பட்டு வேதனைப்படுத்தும், இத்தகைய நிலைப்பாடே ‘நிறை’ எனப்படும். கண்ணோட்டம் என்பது, இரக்கம் எனப்படும். அத்தகு இரக்கம் கொள்ளாமல், உயிரைக் கொல்லுதல் கூடாது. ‘வௌவல்’ என்பதற்குக் கவர்தல் என்பது பொருள்.

எனவே, இரக்கமின்றி அரக்கத்தனமாக எந்த உயிரையும் வௌவுதல் கூடாது. மன்னவன், மக்களை ‘முறை’ செய்து காக்க வேண்டும். ‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப்படும்’ இல்லையா? மனுநீதிச்சோழன், தன் மகனென்றும் பாராமல் வீதிவிடங்களைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றதை ‘முறைசெய்தல்’ எனலாம். ‘முறை’யெனில், ‘நீதி’யென்க! ‘பொறை’ என்பதன் பொருள், பொறுமை என்பதாகும்.
தன்னைப் பிறர் போற்றாமல் தூற்றியபோதும் பொறுத்துக்கொள்ளுதல், ‘பொறை’ எனப்படுவதாகும்.
சாரல்:6-தூறல்:2அடுத்ததாகக் ‘கண்டோர்கூற்று’ என்னும் தலைப்பிலான 9ஆம் பாடல். 24 அடிகளைக் கொண்ட அதிலிருந்து 12ஆம் அடி முதல் 20ஆம் அடி முடியவுள்ள 9 அடிகளைக் கொண்ட பகுதியைக் காண்போம்.
‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்வர்க் கல்லதை,மலையுளே பிறப்பினும், மலைக்கவைதா மென்செயும்?நினையுங்கா லும்மகள் நுமக்குமாங் கனையளே!சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை,நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செயும்?தேருங்கால், நும்மகள் நுமக்குமாங் கனையளே!ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை,யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செயும்?சூழங்கால், நும்மகள் நுமக்குமாங் கனையளே!’
பழங்காலத்தில், ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தனர். திருமணத்திற்குத் தடையென்றால், தலைவன் தலைவியை உடனழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வான். அவ்வாறு ஒருவன் ஒருத்தியை அழைத்துச் சென்றுவிட்டான். அவரைத் தேடிச் செவிலித்தாய் செல்கிறாள். துறவியர் சிலர், எதிர்ப்படுகின்றனர். அவரிடம் அவள், ‘ஓர் இளம் இணையர், இவ்வழியே சென்றாரா?’ என வினவுகிறாள்.
அவரும், ‘அவ்விணையர் சென்றதை யாமும் கண்டோம்; அவர் செய்த செயல்தான் யாதோ? இல்லறம் மேற்கொள்ளத்தானே செல்கின்றனர்? அது நல்லதுதானே?’ என்றனர். இதுதான் ‘கண்டோர் கூற்று’. ‘சந்தனம் மலையில் பிறந்தாலும், மலைக்குப் பயனில்லை; பூசுபவர்க்கே அது பயனாகும். முத்து கடலில் பிறந்தாலும், கடலுக்குப் பயனில்லை; அணிபவர்க்கே அது பயனாகும். இசையோ யாழில் பிறந்தாலும், யாழுக்குப் பயனில்லை; செவிமடுப்பவர்க்கே அது பயனாகும்.

அவற்றைப் போலவே, உம்மகள் பிறந்த இடத்திற்குப் பயன்படுவதைக் காட்டிலும், புகுந்த இடத்திற்குத்தானே பயன்பட முடியும். சிறந்த முடிவைத்தானே தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, துயர்களைக! என்று, கண்டோர் அறிவுறுத்தினர்.
அகநானூறு அறிமுகம்:

‘அகம்’ என்னும் சொல்லுக்கு உள், மார்பு, மனம், ஞானம், பாவம், வீடு, பூமி, மலை, மருதம், அகத்திணை ஆகிய பொருள்கள். இங்கு ‘அகம்’ என்னும் சொல்லுக்கு ‘அகப்பொருள்’ என்பது பொருள். வீட்டு வாழ்க்கை பற்றியது. மனம் பற்றியதாகவும், மனைவாழ்க்கை பற்றியதாகவும் அமைவதெனலாம். பதினெண்கீழ்க்கணக்கில் நாலடி நானூறு போலவும், பழமொழி நானூறு போலவும் எட்டுத்தொகையில் அமைவது ‘அகநானூறு’ எனலாம்.

தமிழ்41 –  “எம்முளும் உளன் ஒரு பொருநன்”

எண்பதுகளின் தொடக்கத்தில் எந்தையார் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் பட்டிமன்றங்களில் நடுவராக உரையாற்றுவதற்கும் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று உரையாற்றி மகிழ்வித்தார்.  செஞ்சி என்றால் அப்பன்ராஜ் (திருவாமூர் சமணத் திருமடத்தின் தலைவராக உள்ளார்),  திருச்சி என்றால் திரு.குணசேகரன் (கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் (ஓய்வு)),  தஞ்சை என்றால் இராஜேந்திரன், மாயவரம் என்றால் அண்ணல் இராஜசேகரன்,  சேலம் என்றால் சண்முகம், நெல்லையென்றால் முருகன், செங்கோட்டை என்றால் ஆசிரியர் ஜனார்தனன்,  தென்காசி என்றால் டாக்டர் பத்மானந்தன்,  நாகர்கோயில் என்றால் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,  கிருஷ்ணகிரி என்றால் தாது,  ஓசூர் என்றால் கிருஷ்ணன்,  மதுரை என்றால் சாந்தகுமார், திருப்பத்தூர் என்றால் திருமதி மணிமொழி,  திண்டிவனம் என்றால் டாக்டர் பாலதண்டாயுதம்,  வடலூர் என்றால் செல்வராஜ், கோவை, திருப்பூர், உதகை, கேரளம் முதலிய அனைத்து இடங்களுக்கும் ஆடிட்டர் தமிழ்ச்செம்மல் லோகநாதன்,  புதுவை என்றால் வழக்கறிஞர் முருகேசன், ஜெயராம் ஓட்டல் திரு. லட்சுமி நாராயணன், ஆனந்த முதலியார், இந்திப் பேராசிரியர் இராமசாமி,  பம்பாய் என்றால் தேவதாஸ்,  பூனா என்றால் கிருஷ்ணசாமி, கல்கத்தா என்றால் மு.சீனிவாசன், நக்கீரன், பெங்களூர் என்றால் நீலகண்டன், மைசூரு என்றால் அரவிந்தன், ஐதராபாத் என்றால் ரெட்டி,  தில்லி என்றால் முனிற்கா இராமகிருஷ்ணன், சுந்தர், இலண்டன் என்றால் ஜோதி, வழக்கறிஞர் சிரி கந்தராஜா, கவிஞர் கருணானந்தராஜா,  ஜெர்மனி என்றால் நித்யா, பிரான்ஸ் என்றால் சிவசண்முகம், பாலகிருஷ்ணன், இரவீந்திரன், இலங்கை என்றால் ஞானசம்பந்தன், மலேசியா என்றால் கோயில் நடராஜா, வானொலி பூபாலன், நல்லகுமார்,  சிங்கை என்றால் திருமதி இந்திரா கிருஷ்ணன்,  மஸ்கட் என்றால் திருமதி சித்ரா நாராயணன்,  அமெரிக்கா என்றால் அரிசோனா இராஜகோபாலன்  என்று ஊர்தோறும் பல நண்பர்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்து அழைத்துப் போவார்கள். இவர்களைப்போன்ற பெறற்கரிய நண்பர்களெல்லாம் தமிழ்தானே ஈட்டித்தந்தது என்று பெருமிதமாக நாளொன்று குறையாமல் அவர்கள் நலம் பேசி மகிழ்வார் எங்கள் அப்பா.
எனக்கு அந்தச் சூழலில் பல நண்பர்களுக்குச் சென்னை வந்தால் எங்கள் அண்ணாநகர் இல்லமான ‘தாரகை’ விருந்தகமாக அமையும். அப்பாவும் அம்மாவும் விருந்து வரக்காத்திருந்த நல் விருந்தினராகத் திகழ்ந்தார்கள்.  எனக்குத் தெரிந்து செஞ்சியிலிருந்து திரு அப்பன்ராஜ் அடிகளாரும், அவர் துணைவியார் திருமதி சுமதியும் அவர்களின் குடும்பச் செல்வங்களும் எங்கள் குடும்ப உறவினர்களாகவே திகழ்ந்தார்கள்.  என்னுடைய தாத்தா உரைவேந்தர் அவர்களின் இறுதிக் காலத்தில் அவருக்கு உற்ற துணையாக, ‘வெள்ளை உடைக் கட்டிளங்காளை’ சீரங்கன் என்ற அப்பாவின் நண்பர் உடனிருந்து பணிவிடை ஆற்றியதை நாங்கள் மறக்கவியலோம். சென்னையில் அவருடன் ஒருமுறை ‘ஒரு தலைக் காதல்’ திரைப்படம் பார்த்த பொழுது திரைப்படத்தை விட அவர் விம்மி விம்மி அழுத காட்சிதான் எனக்குப் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.  ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் தாத்தாவிற்கு பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி விருது வழங்கிய நாள் வரை சீரங்கன் ஒட்டியே இருந்தார். அதற்குப் பிறகு, ஊர் சென்றவர் திரும்பவேயில்லை. என் சிற்றப்பா மருத்துவர்களான மெய்கண்டான், நெடுமாறன் இருவரும் மதுரை, கோவையில் இருந்தபோதும் சீரங்கனைத் தேடியும் காண முடியாது போயிற்று. 
எந்தையார் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இலக்கிய உரையாற்றச் சென்றபோது மலேசிய அமைச்சர் தான்ஸ்ரீ பெருந்தகை சாமிவேலு முதல் தென்னாப்பிரிக்கா வணிக வேந்தர் திரு.முதலி வரை பல நண்பர்களைப் பெற்றார்.  மலேசியத் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய திரு குலசிங்கத்தின் மகள் சுபத்ரா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் பயில வந்தபோது, தில்லியிலிருந்து அவர் மருத்துவக் கல்வி பயில்வதில்த் தடையின்மைச் சான்று பெறவேண்டிய சூழல் இருந்தது.  பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான் அவர்களை அழைத்துக் கொண்டு தில்லிக்குச் சென்று அந்நாளைய செய்தித்துறையின் துணை இயக்குநர் திரு. அமிர்தலிங்கம் (அப்பாவின் நண்பர்) வாயிலாக அச்சான்றிதழைப் பெற்றுத் திரும்பினோம். 

மலேசியாவைச் சார்ந்த குணா என்ற நடனக்கலைஞர் கலாக்ஷேத்ராவில் பயின்றபோது எங்கள் இல்லத்தில்தான் தங்கியிருந்து பயின்றார். அம்மாவின் முயற்சியால் சைவ உணவை விரும்பிச் சாப்பிடும் பழக்கத்திற்கும் ஆளானார். மலேசியாவைச் சார்ந்த ஆனந்தராஜ் என்ற மாணவரும், எங்கள் இல்லத்தில் தங்கிப் பயின்றதையும், சிங்கையிலிருந்து கவிதா தன் பள்ளிப்படிப்பை எங்கள் இல்லத்தில் தங்கிப் பயின்றதையும், தென்னாப்பிரிக்காவிலிருந்து திருமதி மானசா தன்னுடைய நடன அரங்கேற்றத்திற்காகச் சென்னையில் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்ததையும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனோ என்ற மாணவியும் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்ததையும், இலங்கையிலிருந்து இன்னிசைப் பாடகர் சிவபாலன் மற்றும் மருத்துவர் சிலோன் பாலா,  மலேசியத் திருநாட்டின் ஈப்போ நகரத்தின் பண்பாட்டுத் திலகமாகவும், தமிழ்க் களஞ்சியம் தொகுத்த பெருமைக்குரிய கவிக்குயில் கலிய பெருமாள் (எவர் தொலைப்பேசியில் அழைத்தாலும் முதல் குரலாக ‘இன்பமே சூழ்க என்னாளும் வாழ்க’ என்று வாழ்த்துச் சொல்லித்தான் பேசுவார்) போன்றோர் விருந்தினர்களாகத் தங்கிச் சென்றதைவிட  அப்பாவின் நண்பர்களின் மக்கட்செல்வங்களே எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே நாங்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற காலத்தில் ஒருங்கே இருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.
————அகநானூறு…சாரல்:7-தூறல்:1இங்கு ‘வாயில் வேண்டிச்சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது’ என்னும் தோழிகூற்றுப் பாடலைப் பார்ப்போம். அள்ளூர் நன்முல்லையார் பாடிய மருதத்திணைப் பாடல். 46ஆம் பாடல்.‘சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்ஊர்மடி கங்குலில், நோன்தளை பரிந்து,கூர்முள் வேலி கோட்டின் நீக்கி,நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய,அம்தூம்பு வள்ளை மயக்கி, தாமரைவண்டூது பனிமல ராரு மூர!யாரை யோநிற் புலக்கேம் வாருற்று,உறையிருந்து,ஒளிருந் தாழிருங் கூந்தல்,பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,வதுவை யயர்ந்தனை என்ப, அஃதியாம்கூறேம், வாழியர் எந்தை! செறுநர்களிறுடை அருஞ்சமந் ததைய நூறும்ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்பிண்ட நெல்லின் அள்ளூ ரன்னவென்ஒண்டொடி நெகிழிறு நெகிழ்க!                     தலைவன், தலைவியைச் சந்திக்க விரும்புகிறான். தலைவியோ, அவனுடைய பரத்தையர் தொடர்பால் காண விரும்பவில்லை. தோழியைத் துணை செய்யுமாறு கூறுகிறான். அவளோ, அவனுக்கு மாறுபடப் பேசுகிறாள். எருமை, தான் பிணிக்கப்பட்டிருந்த தொழுவத்தைச் சிறுநீராலும் சாணத்தாலும் சேறாக்கிக்கொண்டு, பிணிகயிற்றை அறுத்துக்கொண்டு, பக்கத்து வயல்வேலியையும் விலக்கிக்கொண்டு, வயலுக்குள் செல்கிறது.  வயல்மீன்கள், அஞ்சியோடுகின்றன. எருமை, வள்ளைக்கொடியைச் சிதைக்கிறது. வண்டோ, தாமரையின் தண்ணிய தேனைச் சிதைக்கிறது. மாலை நேரமானதால், தாமரையும் கூம்பிவிட்டது. வண்டு, பூவில் இருக்கிறது. எருமை, அந்தத் தாமரை மலரை உண்ண விரும்புகிறது. ‘எருமையை என்னதான் செய்யவியலும்? நீ வேறொருத்தியை வீட்டிற்கே அழைத்துவந்து, மணந்து கொண்டதாக ஊர் கூறுகின்றது. உன்னையும் என்னதான் செய்யவியலும்? நீ சென்று வரலாம்.’ என்கிறாள்.  அள்ளூர் போன்ற அழகி என் தலைவி எனக்கூறும் பாங்கினை வேறு எம்மொழியிலும் நாம் காண்பதற்கில்லை.  நகரின் அழகை நங்கையின் அழகோடு ஒப்புமை செய்வது வியப்புக்குரியது.

சாரல்:7-தூறல்:2அடுத்ததாக, முல்லைத்திணைக்குரிய பாடல். இடைக்காடனார் பாடியது.  தலைவன் கூற்றாக அமைந்தது. வினைமுற்றிய தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன்னெஞ்சிற்குச் சொல்லியதாகும். 284ஆம் பாடல்.‘சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன,குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்,முடந்தை வரகின் வீங்குழு ளருந்துபு,குடந்தையும் செவிய கோட்பவ ரொடுங்கி,இன்றுயி லெழுந்து துணையொடு போகி,முன்றிற் சிறுநிறை நீர்கண் டுண்ணும்புன்புலந் தழீஇய பொறைமுதற் சிறுகுடி,தினைக்க ளுண்ட தெறிகோல் மறவர்,விசைத்த வில்லர் வேட்டம் போகி, முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்காமர் புறவி னதுவே – காமம்நம்மினுந் ததன்தலை மயங்கியஅம்மா வரிவை யுறைவி னூரே!’சிற்றிலைகளை உடைய நெல்லிமரத்தின் அழகிய காய்போன்ற கண்களைக் கொண்டதாகவும், உடல் முழுவதும் அழகிய மயிரை உடைய சிறுமுயலானது, தலைசாய்ந்த வரகின் முதிர்ந்த தானியத்தைச் சுவைக்க விரும்பவும், வரகினைக் கொள்பவரைக் கண்டு அஞ்சி, உறக்கத்தினின்றும் விழித்துக்கொண்டு, துணையுடன் சென்று, வீட்டின் முற்றத்திலுள்ள சிறிதளவாகவே உள்ள நீரினைக் கண்டு பருகும்.  அத்தகைய காடுசார்ந்த நிலமாகிய கொல்லையில் வாழ்கின்ற சிறுகுடியைச் சேர்ந்த தினைக்கஞ்சி உண்ட சிதறுகோல் உடைய முல்லைநில வேட்டுவர், வில்லேந்தி வேட்டையாடச் சென்று, முல்லைநிலக் கொல்லையில் புல்லரிசி கிண்டும் விருப்புடைய காடு அதுவாகும்.  இன்பத்தை நம்மைவிட மிகக்கொண்டு, மனமயக்கம் கொண்ட தலைவி வாழ்கின்ற இனியவூர் அதுவாகும். எனவே, தலைவியைச் சென்றடைய விரைந்து தேரினைச் செலுத்த வேண்டும் என்பதாம். தலைவன், தனது நெஞ்சுக்கே தான் சொல்லியதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.  முயலின் வடிவம், முல்லைநில வேடுவர், தலைவியின் காதல் இப்பாடலில் வனப்புற வரையப்பட்டுள்ளன.

புறநானூறு அறிமுகம்‘புறம்’ என்னும் சொல்லுக்குப் பக்கம், முதுகு, இறையிலி நிலம், புறத்திணை என்னும் பொருள்கள் உண்டு.  இங்குப் ‘புறம்’ என்பதற்குப் ‘புறப்பொருள்’ என்பதுவே பொருளாகும்.  அக ஒழுகலாறு நீங்கிய அனைத்துமே, புற ஒழுகலாறுகள் எனப்படும்.  பதினென்கீழ்க்கணக்கில் ‘நாலடி நானூறு’ போலவும், ‘பழமொழி நானூறு’ போலவும், எட்டுத்தொகையில் ‘அகநானூறு’ போலவும் அமைவது ‘புறநானூறு’. புறநானூற்றின் அடிச்சிறுமை 3, அடிப்பெருமை 40.  நானூறு பாக்களில், சில பாக்கள் சிதைந்துள்ளன. எல்லாப் பாக்களுமே, ஆசிரியப்பா அல்லது அகவற்பாக்களால் அமைந்தவை. பதினென்கீழ்க்கணக்கு நூல்களில், வெண்பாவின் தாக்கம் இருப்பதுபோல், எட்டுத்தொகை நூல்களில் ஆசிரியப்பாவின் தாக்கம் இருக்கும்.  ஆசிரியப்பாவின் அடிச்சிறுமையே மூன்றுதான், ஆனால், அடிப்பெருமைக்கோர் அளவில்லை. 

இதுவரை நற்றிணை முதலாக அகநானூறு முடிவாக ஏழு தொகைநூல்களிலுமாக ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு பாடல்களாகப் பதினான்கு பாடல்களைப் பார்த்தோம்.  இறுதித் தொகை நூலாகிய புறநானூறோ, வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.  எனவே, எட்டாம் இறுதித் தொகைநூலாகிய புறநானூற்றினின்றும் எட்டுப்பாடல்களே எடுத்துக்கொள்ளலாம்.  புறநானூற்றின் போர்வரிகள் தமிழர் பெருமைக்கு வழங்கிய தங்கப் பதக்கமாகும்.
சாரல்:8-தூறல்:1முதலாவதாகக் கடையெழு வள்ளல்களுள் புகழ்பொலிந்த அதியமான் நெடுமானஞ்சியை அறிவரசியார் ஔவையார் பாடிய பாடல். தானைமறத் துறை, ‘தானைமறம்’ என்பது படைவீரம். தும்பைத்திணை, ‘தும்பை’ என்பது, அதிரப் போர் செய்வது.  87ஆம் பாடல்.‘களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போரெதிர்ந்து,எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்எண்தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த காலன் னோனே!’புலமைப் பெருமாட்டி ஔவையார், கடையெழு வள்ளல்களுள் அதியமான் நெடுமானஞ்சியை எதிர்க்கின்ற பகைவரை எச்சரிக்கிறார்.  எவ்வாறு? ‘பகைவரே! போர்க்களம் புகுவதைத் தவிர்த்து விடுங்கள். போரை எதிர்கொண்டு வெற்றிபெற. எங்களில் ஒரு மாவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு மாதத்தில் ஒரு தேரினைச் செய்யும் தச்சன், ஒரு நாளில் எட்டுத் தேர்களைச் செய்யும் ஆற்றலைப் பெற்றவனானால் எப்படியோ, அப்படிப்பட்ட பெருமுயற்சியால் ஒரு திங்களுக்கு ஒரு சக்கரம் மட்டுமே செய்வதென்பது எத்துணை நுணுக்கப் பெருமிதம் கொண்டதாக அமைக்க முடியும்.  அத்தகைய பேராற்றல் படைத்த மாவீரன் அதியமான நெடுமானஞ்சி!’ என்கிறார்.

42 –  ” சான்றோர் சான்றோர் பால ராப ! ” 
நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வகுப்பாசிரியர்களுடைய பயிற்சியை விடக் கூடுதலாகத் தனியாசிரியர்களை அமர்த்தி எங்கள் பெற்றோர்கள் கண்காணித்ததை எண்ணிப் பெருமையடைகிறேன்.

தொடக்க காலத்திலேயே அதாவது முதல் வகுப்புப் பயிலும்போதே இராயப்பேட்டை பெசன்டு சாலை இல்லத்தில், ஆங்கிலோ – இந்திய மாதரசியான திருமதி ஒகோனா ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிக்கும் ஒலிப்பு முறையைக் கற்றுத் தந்தது இன்றும் என்னுடைய ஆங்கிலச் செழுமைக்கு அடிப்படையாகும்.  கணக்குப் பாடத்திற்காக என்னுடைய மாமா தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளராகத் திகழ்ந்த திரு.ஆனந்தன் அண்ணாநகர் இல்லத்திற்குச் சென்று பயின்றதையும் நான் நினைவு கூர்கிறேன்.
அதேபோல், வேதியியல் பாடத்தை அண்ணாநகர் மேற்கில் திரு புஜங்கா ராவிடமும், திரு வடிவேலுவிடமும், பார்வைத் திறனற்ற சக்கரபாணி நாயுடுவிடம் பயின்றதையும், விலங்கியல் பாடத்திற்கு அம்மாவின் நண்பர் டாக்டர் நர்மதாவின் கணவரான விலங்கியல் பேராசிரியர் இராமசாமி , இந்திக்கு திரு. நாராயணனிடமும், வடமொழிக்கு அவரின் தந்தையார் கேசவ ஐயங்கார், தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவற்றை முதுநிலைப் பேராசிரியர் இரங்கநாதனிடம் பயின்றதையும் நினைவுகூர்கிறேன்.
தமிழையும், கணக்கையும் வீட்டிலேயே வந்து கற்றுத் தந்த திரு குணசேகரன், மொழிபெயர்ப்புத் துறையில் மொழிபெயர்ப்பு அலுவலரான அகமத்துல்லாவிடமும் திரு .பாபுவிடமும் , முதுபெரும் தமிழறிஞரும் – நெடிய தோற்றமும் – வேட்டியும் தோளில் துண்டுமாகப் புலவர் அமிர்தலிங்கனார் காஞ்சியிலிருந்து வாரம் மும்முறை அண்ணாநகர் இல்லத்திலேயே உடன் தங்கியிருந்து செவ்வனே தமிழிலக்கியத்தையும், இலக்கணப் பாடங்களையும் கற்றுத் தந்த உத்தியும்; அவரிடம் ஒருமுறை, “ தந்தையாரைப் போலத் தமிழறிவு பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? ” என்று கேட்ட போது, “அப்பா திரட்டிய நூல்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டாலேயே நீ தமிழறிஞர் ஆகிவிடுவாய் ” என்றார். மேலும் நீதிநெறிப் பாடல்களைச் சொல்லி மனப்பாடம் செய்ய வேண்டுமென்றார். காரணம், அப்பா திரட்டியது அரை இலட்சம் நூல்களுக்கும் மேல் என்பதால் அவர் அவ்வாறு சொன்னார்.
அகர முதலித்துறை முன்னாள் இயக்குநர் முனைவர் மதிவாணன் திருமகனார் பேராசிரியர் அன்பரசனிடம் அறிவியல் பாடங்களையும் கற்றேன்.  மாநிலக் கல்லூரியில் இருந்த பொழுது நண்பர் இரவிசங்கர் வாயிலாக சைதையில் தமிழாசிரியர் தேவராசனிடமும் பயின்றதும் , வகுப்புத்தோழர் ஆண்டவரும் நானும் என் மாமா முனைவர் குமரவேலிடம் பயின்றதும், அமைந்தகரையில் தொல்காப்பிய வகுப்பு பேராசிரியர் இராமசுப்பிரமணியிடமும்,  கல்லூரிப் பேச்சுப் போட்டிகளுக்காக என்னை ஊக்கப்படுத்திப் பல கருத்துக்களை பேசுவதற்க்கு எழுதித்தந்து கம்பராமாயணம் – பெரியபுராணம் தொடர்களை உச்சரிக்கக் கற்றுத்தந்தும் பேசும்பொழுது தொடக்கமாக பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனல் வரிகளை பேசுவதற்கு ஏற்ற வரிகளை அறிமுகம் செய்த பேராசிரியர் அரசேந்திரன் ஆகியோரின் பயிற்றுமுறைகள் மறக்கவொண்ணாப் பயிற்சிக் களங்களாகும் .
கோவையிலிருந்து கல்வியாளர் செந்தில் ஆறுமுகம் சென்னையில் எங்கள் இல்லத்தில் தங்குகிற நேரங்களிலெல்லாம் எங்கள் மூவருக்கும் வாழ்வின் விழுமியங்களை மறவாமல் கற்றுத் தருவார்.  கருநாடக வாய்ப்பாட்டுப் பயிற்சியும், வயலின் கருவியை மீட்டுவதற்கும், புல்லாங்குழல் ஊதுவதற்கும், ஆர்மோனியம் இசைப்பதற்கும் வள்ளியம்மாள் பள்ளியின் இசையாசிரியர் திருமதி கமலாவிடம் பயின்றோம் (எங்களை எல்லாம் விஞ்சி என் அண்ணன் கண்ணன் சிறந்த கருநாடக இசைப் பாடகராக மிளிர்ந்து 1977 ஆம் ஆண்டிலேயே புதிய ஆவடி சாலையில் – பச்சையப்பர் கல்லூரி எதிரில் உள்ள பிரசன்ன வெங்கடேசுவர சோமஸ்கந்த திருக்கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் பெரும் பாடகராகப் போற்றப்பட்டார்).  அப்போது அவர் பாடிய பாடல் கூட ” எனக்கென்ன மனக்கவலை , என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை ” என்பதாகும்.   திருமதி கமலா அண்ணன் கண்ணனை ” கன்னம் கன்னம் ” என்று சொல்லித்தான் பெருமைப்படுத்துவார் .
அதேபோல வாகனம் ஓட்டுவதற்காகத் தலைமைச் செயலக ஓட்டுநர்களான திரு. தனராஜ், (என்னுடைய பதினொன்று – பனிரெண்டாம் வகுப்புக்களின் அறிவியல் பாடங்களின் விளக்கப் படங்களை நுட்பமாக வரைந்து தருபவராவார். அவருடைய மிதிவண்டியை கண்ணுங்கருத்துமாகப் பேணியதை இன்றுவரை நான் மறவேன்.)  திரு. வெங்கடேசன், திரு.பரஞ்சோதியிடம் பல காலநிலைகளில் கற்றதும்,  அதேபோல அப்பாவின் நேர்முக உதவியாளராக இருந்த திரு ஜகன்னாதன் அவர்களும், என்னுடைய நண்பர்களான இரவிசங்கர், இராம்மோகன் போன்றோரும் உடற்பயிற்சிப் பள்ளிக்கு அழைத்துச் சென்று ஊக்கமளித்ததும் மறக்கவியலாது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றுகொண்டிருந்த வேளையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக இந்திரா காந்தியும் இந்திய தேசிய ஒருமைப்பாடும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் பங்கு கொள்ளச் சென்றேன். அங்குப் பேசிய பல நண்பர்களும், காங்கிரசு கொள்கையைச் சார்ந்து பேசியதனால், மாறுபட்ட சிந்தனையாக இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி ஒரு வரலாற்று நோக்கில் நான் பேசிவிட்டு இந்திரா காந்தியைப் பற்றி அதிகம பேசாமல் அவர்கள் நேருவின் திருமகள் என்றும், அவர்கள் வளர்ந்த சூழல், சிறந்த நிலை என்று பாராட்டி அமர்ந்தேன்.
அன்று வேறு சில நண்பர்கள் இந்திராகாந்தி அம்மையாரை வசைபாடிப் பேசினார்கள்.  அன்று மாலையே அந்நாளைய காவல்துறை அதிகாரி திரு. இராதாகிருஷ்ணன் (கிராக்கி, என்ற புனைபெயரில் எழுதிய எழுத்துச்செம்மல் பெருந்தகை) எந்தையாரைத் தொலைபேசியில் அழைத்து அன்று மதியம் நடந்த பேச்சுப்போட்டியில் பேசிய நண்பர்கள் பற்றிச் சொல்ல தங்கள் மகனும் கலந்து கொண்டதாகச் சொல்லி அதற்கு உடனே எந்தையார் அருளுக்கு அதிகம் பேசிப் பழக்கமில்லை,  இப்பொழுது தான் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறான்.  தவறாக அவன் ஒருநாளும் பேசமாட்டான். அன்னை இந்திரா காந்தியைச் சுட்டவர்களை விட்டு விட்டது சரியா என்று வினா எழுப்பியிருப்பான்.  அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தோசை சுடுவதைப் பற்றித்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நகைச்சுவையாக கேட்க காவல்துறைத் தலைவரே சிரித்தாராம் .

நாவன்மையும் – சொல்வன்மையும் ஒன்றுதான். ஒருவர் பேசிப் பலர் கேட்கிறார்கள் என்றால் என்ன பொருள் ?  எதிரே அமர்ந்திருப்பவர்கள் பேசத்தெரியாதவர்கள் என்றா நினைப்பது?  அதனால்தான் ஒருவர் பேசும்போது கீழே உட்கார்ந்திருப்பவர்கள் அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பார்கள் .  

சொல்வன்மை தான் திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்கு பெயராகும்.   ஆக்கமும் , கெடுதலும் அதனால் வரும் .வேட்ப மொழிதல்,  திறனறிந்து சொல்லுக , வெல்லும் சொல்லாகப் பேசுக, நிரந்தினது சொல்லுக ,  சில சொல்லல் தேறுக, கற்றதை உணர்த்த விளக்கிப்பேசுவது  என்றெல்லாம் அழமாகக் கூறுவதை இளைஞர்கள் தெரிந்து பேசவேண்டுமென்று நான் பெரியப்பா என்று பரிவுடன் அழைக்கும் திருக்குறளார் கூறியதைப் பிறகு தான் உணர முடிந்தது .


புறநானூறு…
சாரல்: 8 – தூறல்: 3மூன்றாவதாகவும் கபிலர் பாடிய பாட்டே மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. அவனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனே. முன்பாடலைப் போலவே, பாடாண்திணை மற்றும் இயன்மொழித் துறைப் பாடல்.  124ஆம் பாடல்.
‘நாளன்று போகி, புள்ளிடை தட்ப,பதனன்று புக்கு, திறனன்று மொழியினும்,வறிது பெயர்குந ரல்லர்-நெறிகொளப்பாடாண் றிரங்கு மருவிப்பீடுகெழு மலையற் பாடி யோரே ! ’
‘ குறிஞ்சிக்கோமான் மலையமான் திருமுடிக்காரி. ஆரவாரத்துடன் இழியும் பேரருவிப் பெருமலைக்கு உரியவனும், பெருமிதப் பண்பாளனுமாகிய அவனைப் பாடியோர், அவனைக் காண நாளில்லாத நாளிலும் போகலாம்; வழியில் பறவைச்சகுனம் தடைசெய்யலாம்; பக்குவம் இல்லாத நிலையிலும் சென்று காணலாம்; பேசத் தெரியாமலும் பேசலாம்; எப்படிப்பட்ட எதிர்வினைகளாயினும், வேண்டிச்சென்ற பொருள்களைப் பெறாமல், இரவலர் வறிதே திரும்புபவரல்லர் ’ காரியின் பெருமையை அருமையாகக் காட்டுகிறார்.
சாரல்: 8-தூறல்: 4நான்காவதாக மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. பொதுவியல் திணைப்பாடல். பிற திணைகளில் கூறப்படாச் செய்திகளையும், அவற்றுக்குப் பொதுவாக உள்ள செய்திகளையும் தெரிவிப்பது பொதுவியல். பொருண்மொழிக் காஞ்சித் துறை. வாழ்வின் உன்னத நிலை குறித்தும், நிலையற்ற தன்மை குறித்தும் எடுத்து மொழிவது. 189 ஆம் பாடல்.
‘தெண்கடல் வாளாகம் பொதுமை யின்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே;செல்வத்துப் பயனே ஈதல்;துய்ப்பேமெனினே தப்புந பலவே !’
தெளிந்த கடலால் சூழப்பட்ட உலகத்தைப் பொதுவின்றித் தனியொருவராக வெண்கொற்றக் குடையின்கீழ் ஆண்ட அரசருக்கும், நள்ளிரவிலும் நண்பகலிலும் உறங்காதவனாகிய வேடனுக்கும் – காக்கும் வேந்தன் தொடங்கி விலங்கின் உயிரை நீக்கும் வேடன் வரை அனைவரும் நிகரே !
உண்ணும் உணவின் அளவு நாழியரசிதான்; அதாவது முகத்தலளவையாகிற காற்படி; உடுப்பவை இரண்டுதாம்; அதாவது கீழாடையும் மேலாடையும். பிற அனைத்துமே, இருவர்க்கும் நிகரானவையே. எனவே, செல்வம் பெற்றதன் பயன், இல்லையென்பார்க்கு ஈதலும், ஈதலால் இசைபட வாழ்தலுமே. மாறாகத் தாமே நுகர்வதாயின், அச்செல்வம் அவரிடமிருந்து தப்பிச்செல்லப் பலவழிகள் உள.

சாரல்: 8 – தூறல்: 5ஐந்தாவதாகப் பிசிராந்தையார் பாடியது. முன்பாடலைப் போலவே, பொதுவியல் திணை; பொருண் மொழிக் காஞ்சித்துறை. ‘கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை, கேட்குங்காலம் பலவாலோ ? நரை நமக்கு இல்லையாலோ ? ’ என்ற சான்றோர்க்கு அவர் மொழிந்தது ’.

‘யாண்டுபல வாக நரையில வாகுதல்யாங்கா கியரென வினவுதி ராயின்மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;யான்கண் டனையர ஏன்ளிளையரும்; வேந்தனும்,அல்லவை செய்யான் காக்கும்; அதன்றலைஆன்றவிந் தடங்கிய கொள்கைச்சான்றோர் பலர்யான் வாழு மூரே ! ’

புலவர் ஆந்தையார், ‘ பிசிர் ’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். எனவே, ‘ பிசிராந்தையார் ’ என அழைக்கப் பெற்றார். அவரோ, அகவை நிரம்பியவர் – முதுமை கனிந்தவர். அவரைக் கண்டோரெல்லாம், ‘ இவ்வளவு முதுமையிலும், உமக்கு நரை தோன்றவில்லையே ! யாது காரணம் ? ” என வினவினர். அவர் கூறிய விடைதான் பாடல்.
‘என்னுடைய மனைவி, மாண்புடையவள்; மக்களும் அவரைப் போலவே, அறிவிலும் பண்பிலும் நிறைந்தனர்;  என்னின் இளைஞரும், என் எண்ணப் படியே கடமைகளைச் செய்பவர்; நாடாளும் மன்னனும், அல்லவற்றைச் செய்யாமல் நல்லவற்றையே செய்பவன்; குடிமக்களைக் கண்போல் காப்பவன்; அனைத்துக்கும் மேலாக,  யான் வாழும் ஊரில், கல்வி கேள்விகளில் சிறந்து, பாடறிந்தொழுகும் பண்புடைய சான்றோர் பெருமக்கள் வாழ்கின்றனர்.  எனவே, எனக்குக் கவலையின்மையால், நரை தோன்றவில்லை ’ என்றார்.இப்படி ஓர் அரிய பாடல் நம் நினைவில் நிலைப்பாதாகும் .
சாரல்: 8- தூறல்: 6ஆறாவதாகப் பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணைவிளக்கம் முன் பாடலில். கையறுநிலை என்பது, இறந்தாரை எண்ணிச் செய்வதறியாது இரங்குதலாகும். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமலே அன்பு வயப்பட்டனர். இருவர் தம் நட்பும், உயர்நட்பின் உன்னத அடையாளம்.  218ஆம் பாடல்.

‘ பொன்னுந் துகிரும் முத்தும் மன்னியமாமலை பயந்த காமரு மணியும்,இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்து,அருவிலை நன்கலம் அமைக்குங் காலை,ஒருவழித் தோன்றியாங் குளன்றுஞ் சான்றோர்சான்றோர் பால ராப;சாலார் சாலார் பாலரா குபவே ! ’
பொன்னும் பவளமும் முத்தும் பெருமலையில் விளைத்த அழகிய இரத்தினக்கல்லும், ஒன்றுக்கொன்று தோன்றுமிடங்களால் இடைவெளியிட்ட சேய்மையவாகினும், மாலையாகத் தொடுக்கப்பட்டு, அரிய விலைப்பொருளான அணிகலனாக அமைக்கும்போது, ஒன்றுசேர்ந்து விளங்குவதுபோல், எந்நாளும் சான்றோர் பெருமக்கள், சான்றோர் பெருமக்களையே சார்வர்; சால்பில்லாதவர்,  சால்பிலாதவரிடையே சார்வர்.
சாரல்: 8 – தூறல்: 7ஏழாவதாக ஒல்லையூர் கிழார்மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயில் கீரத்தனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணை துறை விளக்கம் காண , முன் பாடல்களில்.  242ஆம் பாடல்.

‘இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்பாணன் சூடான்; பாடினி யணியாள்;ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்தவல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை,முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே ! ’
இளவயதினரோ, தலையில் சூடிக்கொள்ள மாட்டார்; வளையணிந்த வனிதையரோ, கொடியிலிருந்து கொய்ய மாட்டார்; பாடுந்தொழிலோனாகிய பாணனோ, இசைக்கருவியாகிய நல்ல யாழின் மேல் சூடமாட்டான்; அவன் துணையாகிய பாடினியோ, அணிந்துகொள்ள மாட்டாள். சூடாததும், கொய்யாததும், அணியாததும் எது தெரியுமா ? அதுதான் முல்லைமலர். ஏன் ? என்னவாயிற்று ? வீர மறவரை எல்லாம் பேராற்றலுடன் வெற்றிகொண்ட வெற்றி வேலையுடைய ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மறைந்துவிட்டான்.

இந்தக் கொடுமை உணராமல் ஒல்லையூரில் முல்லையே நீயும் பூத்தனையோ ? சூடாமலும், கொய்யாமலும், அணியாமலும் இருப்பதால், மலர்ந்து தான் என்ன பயன் ? ஒன்றுமில்லை. இவ்வாறாகக் குடவாயில் கீரத்தனார், தமது கையறுநிலையைப் புலப்படுத்துகிறார்.படிக்கும்போதே கண்கள் கலங்குகின்றன .
சாரல்: 8 – தூறல்: 8எட்டாவதாகப் பொன்முடியார் பாடியது, வாகைத்திணை; மூதின் முல்லைத் துறை. வாகை என்பது, வெற்றியைக் குறிக்கும்; மூதின்முல்லை என்பது, முதிர்ந்த , உயர்ந்த பண்பாட்டு ஒழக்கத்தைக் குறிக்கும்.
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;நன்றுனடை நல்கல் வேற்தற்குக் கடனே;ஒளிறுவாள் அருஞ்சம முறுக்கிக்களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே !’
நன்மக்களைப் பெற்றெடுத்துக் கொடுப்பது, தனது தலையாய கடமையெனத் தாயாகவிருந்து பொன்முடியார் கூறுகிறார்; கல்வி, கேள்வி, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்தவனாக உருவாக உதவுதல், தந்தைக்குக் கடமையாகும்; கூரிய வேலினை வடித்துக் கொடுப்பது கொல்லனுக்குக் கடமையாகும்;  ஒளிவீசும் வாளைத் தீட்டிக்கொண்டு, எதிர்வரும் போரில் ஆண் யானையை வீழ்த்திவிட்டுக் களத்தினின்றும் மீண்டுவருவதுமான , மறவனாகிய காளைக்குக் கடமையாகும். அனைவர்க்குமான கடமைகளை வகுத்துக்கூறும் பொன்முடியாரின் புறப்பாடல், எண்ணிப் பெருமையடைலாம் .
வளரும்…

  • முனைவர் ஔவை ந. அருள்,
    தொடர்புக்குdr.n.arul[at]gmail.com—

unread,29 Jan 2021, 00:18:05to மின்தமிழ்43 –  “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!”
முனைவர் ந. அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,தமிழ்நாடு அரசு================================================= 
சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன். பொதுத்தேர்வு நெருங்கி வந்த அந்த நேரத்தில் எங்கள் அண்ணாநகர் இல்லம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாகவே எங்கள் வீடு பொதுவரங்கம் நடப்பது போலத்தான் இயங்கும்.  அப்போது என் தந்தையார் தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மூதறிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் எனப் பல நிலையினரைக் கண்டு அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மேலும் அன்றைய சூழலில் தான் தேசியகவி மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவைப் புரட்சித்தலைவர் அறிவித்திருந்து ஏற்பாடுகள் பல நிலைகளில் எக்களிப்போடு நிகழ்ந்தன. விடுதலைக் கவியரசருக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் விழாக்கோலம் தெரிந்தது. பள்ளி மாணவனாக இருந்த என்னை எழுத்தாளரும், பேச்சாளரும், ஊடகச் சுடருமாக விளங்கும் திருமதி. சுபா வெங்கட் முதன் முறையாக ஸ்ரீராம் இலக்கியக் கழகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.  கோபாலபுரம் மாநகராட்சிப் பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியிலும், கட்டுரைப் போட்டியிலும் பங்கு பெறச் செய்தார். என் அன்னையார் தாரா நடராசன் தனது மருத்துவமனையிலிருந்து இதற்காகவே வந்து நான் பேசுவதைக் கேட்டு மகிழ்ந்து எங்களை உட்லண்ட்சு உந்துவெளி உணவகத்துக்கு அழைத்துச் சென்றதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாக உள்ளது. கேட்டு மகிழ வந்த தாய் என்று படித்திருந்த்தை என் தாய் வடிவில் பார்த்தேன்.
மூதறிஞர்கள் சிலம்புச் செல்வர், பெ.நா.அப்புசாமி, கிருஷ்ணசாமி பாரதியார், அருட்செல்வர் நா.மகாலிங்கம், ஆங்கிலப் பேரறிஞர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார், முதுமுனைவர் டி.என்.ஆர், பேராசிரியர்கள் பி. சுந்தரம், கே.ஜி.சேஷாத்திரி, நாகராஜன், ந.சஞ்சீவி, என்னை வளர்த்த சீ.பா, சர்மா, வழக்கறிஞர் இரவி, சொல்லின் செல்வர் சுகி சிவம், அன்னையாக அரவணைத்த கவியரசியார் திருமதி செளந்தரா கைலாசம், கலைமாமணி விக்கிரமன், கம்பர் கவிநயச் செல்வர் எஸ். நல்ல பெருமாள், பாரதி ஆய்வறிஞர் பெ.சு.மணி, அரு.சங்கர், புலவர் வீரமணி, எனக்கு வழிகாட்டியான பெரும்பேராசிரியர் குடந்தை எஸ்.ஏ. சங்கர நாராயணன், பாரதி காவலர் இராமமூர்த்தி, பாரதி அடிப்பொடி மணி, சிந்தனைப் பேரொளி பாரதி சுராஜ், நாடக வேந்தர் எஸ்.வி. சகஸ்ரநாமம், கோமல் சுவாமிநாதன், இதயம் பேசுகிறது மணியன் முதலிய பெருமக்கள் அவ்வப்போது பேசுவதைக் கேட்டதோடு அவர்கள் அன்போடு முதுகில் தட்டிய பரிவும் இப்போது ஓரளவேனும் ஆளாக்கி உள்ளன.
பாரதியார் நம் தமிழ்ப் பரம்பரையின் மாபெரும் சொத்து, அந்தக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து பாடல்கள் சிலவற்றையாவது எந்த நேரமும் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வை வரிசையாக வந்த பெருமக்கள் ஊட்டினார்கள்.  இந்த ஊக்கம் தான் என்னை வேறு துறைகளுக்குச் செல்லாமல், அப்போது என் அம்மா விரும்பாமலும் கூடத் தமிழ்க் கல்வியை ஆர்வமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். கைத்தட்டல்தான் என்னைக் கம்பம் ஏறவைத்தது என்ற ஆங்கிலத் தொடர் நினைவில் நிற்கிறது.

என் தந்தையாரின் நிழலாகவே எப்போதும் இருந்ததால், எனக்கு தமிழ்வழி காட்டியாகப் புலவர் மாமணி அமிர்தலிங்கனார் பாரதியார் பாடல்களை எப்படிச் சீரிபிரித்துப் படிக்க வேண்டும் என்று எழுத்தெண்ணி வகுப்பாக நடத்திக் காட்டினார்.

அந்நாளில் கவிப்பேரரசு வைரமுத்துவின் “கவிராஜன் கதை” வெளிவந்தது.  வாய் திறந்தால் கவிராஜன் கதையில் வந்த வரிகளையும், தொடர்களையும் மனப்பாடமாகவே மாணவர்கள் சொல்லிப் பெருமிதமுற்றனர். முண்டாசுக் கவிஞர் பாரதியார், எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தார். பாரதியார் வரிகள் இல்லாத மேடை இல்லை, திரைப்படமில்லை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்லை, செய்திகள் இல்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் பாரதியார் அலை வீசிய நேரத்தில், பாரதியாரின் பற்று என்னைச் சிறிதாவது நிமிர்த்தியது. தொடர்ந்து பாரதியாரின் வரிகளைச் சொல்வதிலும் ஆர்வத்தோடு அலைந்தேன்.

மாநிலக் கல்லூரியில் முதலாண்டு தொடங்கி சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வு பயிலும் வரையில் (1985-1991) தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அறநிலையங்களிலும், தனியார் நடத்தும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு, சில பரிசுகளைப் பெறுகிற அளவு பேச்சுத் திறமையை பட்டை தீட்டிக் கொண்டு வந்தேன். அவ்வேளைகளில், கதர் வேட்டியும், கதர்ச் சட்டையும் அணிந்த என் மூத்த நண்பர் வழக்கறிஞர் பால. சீனிவாசன் கரம்பிடித்து, அவரோடு சென்று கோவை சி.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் பேசியதையும் நினைந்து மகிழ்கிறேன்.  அக்கல்லூரியின் பொறியியல் மாணவர் மணிவண்ணன் என்ற நண்பர் எங்கள் மீது பரிவும் அன்பும் கொண்டு நேரம் தவறாமல் சுடச்சுட நல்லுணவும் வழங்கிப் பேச வைத்தார். அப்பொழுது அவரை நோக்கி, “உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பேன்” என்றேன். அதற்கு உடனே, “உப்பி வருகிறவரை நானும் மறவேன்” என்றார்.  வட சென்னையில், ‘விடிவெள்ளி’ என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்கள் பேசவைத்த நாநல நாயகமாக இலக்கியச்சுடர் வழக்கறிஞர் த. இராமலிங்கம் சில ஆண்டுகள் கழித்து ‘நம்பிக்கைதான் வாழ்க்கை’, ‘நம்பிக்கைதான் முன்னேற்றம்’, ‘நம்பிக்கைதான் வரலாறு’, ‘நல்லதையே சொல்வோம், நல்லதையே சேய்வோம்’ என்ற கொள்கை முழக்கத்தோடு ‘தமிழ் இளைஞர் இயக்கம்’ ஒன்றையும் தோற்றுவித்தார். இலக்கியச்சுடரின் பாசறையிலிருந்து சூடானிலுள்ள ஐ.நா. அவையின் உயரலுவலர் வழக்கறிஞர் கண்ணன் (நிறுவனர், முச்சங்கம்), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி இராமலிங்கம் (நிறுவனர், ‘கரும்பு அம்புகள்’), வழக்கறிஞர் செல்வானந்தம், நினைவில் வாழும் திரை இயக்குநர் திருப்பதிசாமி போன்ற நல்லிளைஞர்களை புகழின் உச்சிக்கு வளர்த்து ஒளிர வைத்தார். வழக்கறிஞர் கண்ணன் சிறந்த ஆங்கிலத்திலும், செம்மாந்த தமிழிலும் உரையாற்றும் உரையாளர். ஆற்றலோடு சென்னை உயர்நீதிமன்றம் நடத்தும் Moot Court (மாதிரி நீதிமன்றம்)-இல் பேசுகின்ற அளவிற்கு மாண்புடையவராவார். அவருடைய ஒருங்கிணைப்பில் இராஜாஜி மண்டபத்தில் ஐக்கிய நாட்டு அவையின் பொருண்மைகளை இளங்கலையிலேயே ஆங்கிலத்தில் பேசும் வாய்ப்பினையும் அவர் நல்கினார்.  எனக்குத் தனிப்பட்ட மடல்கள் எழுதுகின்ற அளவிற்கு நான் அவருடன் நெருக்கமாகப் பழகினேன். அக்கடிதங்களில், பேரறிஞர் அண்ணாவின் மேற்கோள்களை சுட்டிக் காட்டி வரைவேன்.  அமெரிக்காவிலிருந்து என் மாமா மருத்துவர் இளமதி, திருமதி சாரா, மகன் சிவனுடன் கண்ணனின் இராயபுரம் இல்லத்தில் விருந்துண்டது மறக்கவொண்ணாதது.  1986-இல் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு பயிலும்போது, அந்நாளைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.அன்பரசு அவர்களின் தலைமையில் சென்னைத் தொலைக்காட்சியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் (தலைப்பு – இளைஞர்கள் முன்னேற்றத்திற்குத் தேவைப்படுவது எதிர்பார்த்து வாழ்வதா? எதுவரினும் ஏற்பதா?) ஆற்றொழுக்காகப் பேசி ‘பூட்டிய இருப்புக் கோட்டையின் கதவு திறந்தது’ என்ற பாவேந்தரின் வரிகளோடு நிறைவு செய்தேன்.  பட்டிமன்றம் ஒளிபரப்பாகிய பின் மாநிலக் கல்லூரியில் பல மாணவ மாணவியருக்கு நான் பெரிதும் அறிமுகமாகிப் பாராட்டுப் பெற்றேன்.  தமிழிலக்கிய மாணவர்கள் பெரும்பாலானோர் வகுப்புக்கு வருவதும், பேராசிரியர்களுடன் அளவளாவுவதோடு சென்று விடுவதுதான் வழக்கமாகவே இருந்தது.

இதில் நான் முழுதும் மாறுபட்டுக் கல்லூரிக்கு வரும்பொழுதே பேருந்துகளை நாடாமல் என் அம்மா வாங்கித் தந்த ஐந்து சக்கர இணைப்புச் சாய்வுந்தில் (Side-car Scooter) வலம் வருவதே கல்லூரிக்குப் புதுமையாக இருந்தது.  கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் பொதுத் தேர்தலுக்கு அவ்வாகனத்தைத்தான் தரச்சொல்லி நண்பர்கள் வற்புறுத்துவார்கள். என் வகுப்புத் தோழர்களைக் காட்டிலும், என்னைவிட மூத்த பெருமக்களுடன் நான் பெரும்பாலும் பழகி வந்தேன். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக இன்றும் நினைவில் உள்ளவர்கள், டாக்டர் தேவநாதன் (தலைவர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்), ஜெயப்பிரகாஷ் (நிறுவனர், அக்னி பொறியியல் கல்லூரி), தாம்சன் (காவல்துறை உயர் அலுவலர்), நகைச்சுவை மாமணி மோகனசுந்தரம் (பட்டிமன்றப் பேச்சாளர்), ஆறுமுகம் (தலைவர், மாணவர் பேரவை), ஆர்.பிரதாப் குமார், (மாநில தகவல் ஆணையர் (ம) பொதுச் செயலாளர், மாணவர் பேரவை), வாஷிங்டன் (பொதுச் செயலாளர், மாணவர் பேரவை), இளங்கோ மணிவண்ணன் (தலைவர், மாணவர் பேரவை), சிங்கை ஜமால், G.வெங்கடேசன், (அரசியல் அறிவியல் மாணவர், கருவூலகத்துறையில் பணியாற்றியவர்), புகழேந்தி (புலவர் புலமைப் பித்தன் மகன்), குகன் (கவிஞர் ஆ.கு. ஆதித்தர் பெயரன்), எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகள் ஆனந்தி, திரு.பூம்பொழிலன் (வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு.இராஜாராமன் மகன்), சன் தொலைக்காட்சி செம்பியன் (திரைத் தயாரிப்பாளர் கோவை செழியன் மகன்), வழக்கறிஞர் சிவக்குமார், ஆங்கில ஆசிரியர் அறிவுச் செல்வன், ஆங்கில ஆசிரியர் கீர்த்தி வாசன், பகுத்தறிவுக் கனல் தமக்கையார் வழக்கறிஞர் அருள்மொழி, திரைப்பட நடிகர் தாமு, இலக்ஷமண் சுருதி, தமிழ்ப் பேராசிரியர் சேக்மீரான், காவல்துறை உயர் அலுவலர் பாண்டியன் (கவிப்பேரரசு தம்பி), தமிழ்ப்பேராசிரியர் டென்சன், திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ், அமெரிக்கா காவேரி கணேஷ், திரைப்பட நடிகர் சந்தானம், புள்ளியியல் துறை சீனிவாசன், நீச்சல்வீரர் கந்தன், சென்னை வானொலி நிலைய பழ. அதியமான், மோகன கிருஷ்ணன் மற்றும் என் மாமன் மகன் முனைவர் வானவன் ஏகாம்பரம் (அமெரிக்காவில் பெரும் புகழோடு அறிவியல் பேராசிரியராக உள்ளார்), அத்தை மகன் முனைவர் கதிரவன் சுப்பிரமணியன் (பொதுப்பணித் துறையில் மூத்த பொறிஞராய் உள்ளார்) மற்றும் என் பெரியம்மா மகன் முரளி சுந்தரமூர்த்தி (விளம்பர வாணராக உள்ளார்).

என்னுடைய தந்தையார் அடிக்கடி சொல்லும் வரிகள் இவைகள். ‘படித்துத் தயாரித்துப் பேசுவது ஒரு கலை. பேசியதை மறக்காமல் சொல்வதும் ஒரு கலை. பேசினேன் என்று சொல்லி நினைத்துப் பேசாமல் வருவதும் ஒரு கலை.’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார். இலயோலா கல்லூரியில் என் நண்பர் இந்திய வருவாய்த் துறையில் உயர் அலுவலராகவுள்ள கென்னடி தலைமையில் ஈழம்- நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பேச்சுப்போட்டியில் எதிர்பாராமல் முதல் பரிசு பெற்றேன்.  கல்லூரிப் போட்டிகளில்தான் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், வழக்கறிஞர்கள் சுமதி, சதீஷ், தமிழ்ப் பேராசிரியர் பர்வீண் சுல்தானா, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக துணைத் தலைவர் குணசீலன், அருணா, கனடா கல்பனா, ஸ்டெர்லைட் சர்வேசன், அபுபெக்கர், சேஷாத்ரி போன்றோர் நண்பர்களாக வாய்த்தனர். அறிவியல் மாணவர்களுக்கு ஆய்வுக்கூடம் எப்படியொரு தனிப்பட்ட பயிற்சியை வளர்க்குமோ, அதுபோலப் பேச்சுப் போட்டிகளும் கட்டுரைப் போட்டிகளும், கவிதைப் போட்டிகளும் தமிழிலக்கிய மாணவர்களுக்கு வளர்ச்சி நோக்கிய அறிவுக்களங்களாகும்.
——புறநானூறு…சாரல்: 8 – தூறல்: 7ஏழாவதாக ஒல்லையூர் கிழார்மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயில் கீரத்தனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணை துறை விளக்கம் காண , முன் பாடல்களில் 242ஆம் பாடல்.     ‘இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;     நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்     பாணன் சூடான்; பாடினி யணியாள்;     ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த     வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை,     முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே ! ’இளவயதினரோ, தலையில் சூடிக்கொள்ள மாட்டார்; வளையணிந்த வனிதையரோ, கொடியிலிருந்து கொய்ய மாட்டார்;  பாடுந்தொழிலோனாகிய பாணனோ, இசைக்கருவியாகிய நல்ல யாழின் மேல் சூடமாட்டான்; அவன் துணையாகிய பாடினியோ, அணிந்துகொள்ள மாட்டாள். சூடாததும், கொய்யாததும், அணியாததும் எது தெரியுமா? அதுதான் முல்லைமலர். ஏன்? என்னவாயிற்று? வீர மறவரை எல்லாம் பேராற்றலுடன் வெற்றிகொண்ட வெற்றி வேலையுடைய ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மறைந்துவிட்டான்.

இந்தக் கொடுமை உணராமல் ஒல்லையூரில் முல்லையே நீயும் பூத்தனையோ? சூடாமலும், கொய்யாமலும், அணியாமலும் இருப்பதால், மலர்ந்து தான் என்ன பயன்? ஒன்றுமில்லை. இவ்வாறாகக் குடவாயில் கீரத்தனார், தமது கையறுநிலையைப் புலப்படுத்துகிறார். படிக்கும்போதே கண்கள் கலங்குகின்றன .
சாரல்: 8 – தூறல்: 8எட்டாவதாகப் பொன்முடியார் பாடியது, வாகைத்திணை; மூதின் முல்லைத் துறை. வாகை என்பது, வெற்றியைக் குறிக்கும்; மூதின்முல்லை என்பது, முதிர்ந்த , உயர்ந்த பண்பாட்டு ஒழக்கத்தைக் குறிக்கும்.     ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;     சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;     வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;     நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;     ஒளிறுவாள் அருஞ்சம முறுக்கிக்     களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!’நன்மக்களைப் பெற்றெடுத்துக் கொடுப்பது, தனது தலையாய கடமையெனத் தாயாகவிருந்து பொன்முடியார் கூறுகிறார்; கல்வி, கேள்வி, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்தவனாக உருவாக உதவுதல், தந்தைக்குக் கடமையாகும்; கூரிய வேலினை வடித்துக் கொடுப்பது கொல்லனுக்குக் கடமையாகும்; ஒளிவீசும் வாளைத் தீட்டிக்கொண்டு, எதிர்வரும் போரில் களிற்று யானையை வீழ்த்திவிட்டுக் களத்தினின்றும் மீண்டு வருவதும் மறவனாகிய காளைக்குக் கடமையாகும். அனைவர்க்குமான கடமைகளை வகுத்துக்கூறும் பொன்முடியாரின் புறப்பாடல், எண்ணி நாளும் பெருமையடைலாம்.வளரும்…

Jan 2021, 15 “முல்லையும் பூத்தியோ”  —- பூத்தனையோ?, பூத்தாயோ? என்று இப்பொழுது உபயோகிக்கிறோம்.

இதைப் பார்த்ததும் எம் வழக்கில் இன்றும் உள்ள சில சொல்லாடல்கள், பேச்சுத் தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒன்று.
இதைப் பா(ர்)த்தியே?கேட்டியே கதையை?
நாம் இன்னும் சங்கத் தமிழில் உரையாடுகிறோம் என்பதில் பெருமை.

சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக காலை முதல் மாலை வரை (9.45-10.30- முதல் பாடவேளை; 10.30-11.15- இரண்டாம் பாடவேளை; 11.15-11.30- இடைவேளை; 11.30-12.15- மூன்றாம் பாடவேளை; 12.15-1.00 – நான்காம் பாடவேளை; 1.00-1.30 – உணவு இடைவேளை; 1.30-1.45 – நன்னெறிப் பாடவகுப்பு; 1.45-2.30 – ஐந்தாம் பாடவேளை; 2.30-3.15 – ஆறாம் பாடவேளை; 3.15-3.20 – இடைவேளை; 3.20-4.05 – ஏழாம் பாடவேளை) காலநிரல்வரிசையில் படைவீரரின் மிடுக்கோடு பயின்றோம். ஒரு பழக்கத்தைத் தொடர்ந்து 21 நாள்கள் கடைப்பிடித்தால் பழக்கம் வழக்கமாகிவிடும் என்பார்கள். 
ஏழாண்டுத் தொடர் பழக்கத்திற்குப் பிறகு, மாநிலக் கல்லூரியில் முதலாண்டு தமிழிலக்கியம் பயிலும்போது பல நிலைகளில் மருட்சியாக இருந்தது. அதனால் வளரிளமையில் சுணக்கம் ஏற்பட்டு வகுப்புகளுக்குத் தாமதமாக வருவதும் மாலையில் இல்லத்திற்கு விரைந்து செல்வதும் ஒரு மரபாக மாறத்தொடங்கியது. இந்த உரிமையைக் கண்டு என் அம்மா மிக வருத்தப்படத் தொடங்கினார்கள்.
 இம்முறைமையை அப்பாவிடம் சுட்டிக் காட்டி, “அருளை மாலையில் நீங்கள் செல்லும் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் பேசுகிற உரைகளையாவது கேட்டுத் தமிழ் படிப்பதற்கு மேலும் தூண்டுதலாக அவனுக்கு அமையும்” என்று வலியுறுத்தினார்கள். அக்கருத்தினை ஏற்றுக்கொண்டு, அவருடைய கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினேன்.

ஒருமுறை, இராயப்பேட்டையிலுள்ள காந்திய அறநிலையத்தில், ‘கலைக் காவலன் கோவலன்’ என்ற தலைப்பில் அப்பா மாலை 5 மணிக்குப் பேச வந்தார். எண்ணிப் பார்த்தால், அவரையும் சேர்த்து மொத்தம் 8 பேர்தான் இருந்தோம். எண்ணிக்கை பெரிதல்ல, வந்தவர்களின் எண்ணங்கள் காவிய மனமுடையன என்று சொல்லி அப்பா பேசிக் கொண்டிருந்தார். ‘விடுதல் அறியா விருப்பினன்’ என்ற தொடரை விளக்கிக் காட்டிப் பேசியது என் நினைவில் மின்னலிடுகிறது. அவருடைய நெருங்கிய நண்பர் நயவுரை நம்பி இடையில் வந்தமர்ந்து உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார். உரை முடிந்தபிறகு அவரை வழியனுப்புவதற்கு அவர் வாகனம் வரை நான் சென்றேன். 
அவர் என்மீது அளப்பரிய அன்பு கொண்டவர். நான் பள்ளிகளில் படிக்கும் பொழுதே, சில வேளைகளில் வகுப்பாசிரியர்கள் மாணவர்களை நல்ல சமுதாயத் திட்டங்களுக்காக இருபது பேரிடமிருந்து நன்கொடை வாங்குவதற்கு விண்ணப்பப்படிவங்கள் அளிப்பது இயல்பாகும். நான் உரிமையாக எதிர்வீடு, பக்கத்துவீடு, அடுத்தவீடு, நண்பர்கள், உறவினர்கள் என்று அந்தப் படிவங்களை நிரப்பிப் பணம் வாங்குவேன். குறைந்தளவு பத்து ரூபாயிலிருந்து, அதிகபட்சம் ஐம்பது ரூபாய் வரைதான் கிடைக்கும். ஆனால், நயவுரை நம்பி மட்டும் ஐநூறு ரூபாய் வழங்குவார். அப்பொழுதே எங்கள் அம்மா அவரிடம் ‘இவ்வளவு பணமா?’ என்று கேட்கும்பொழுது, அவர் சிரித்துக் கொண்டு, “அக்கா, நம் அருள் வகுப்பில் முதலில் வரவில்லையென்றாலும் கவலையில்லை. நன்கொடையிலாவது முதல் மாணவனாக இருக்கட்டுமே” என்று அன்பு பாராட்டுவார்.  அவர் அன்றைக்கு சீருந்தில் ஏறும்போது என்னைப் பார்த்து, “என்ன அருள்? இவ்வளவு மணிநேரத்தை வீணடிக்கிறாயே! நீ என்னுடைய பொறியியல் கல்லூரியிலாவது சேர்ந்திருக்கலாம் அல்லவா? இப்போது வேண்டுமென்றாலும் என்னுடைய பாரத் பொறியியற் கல்லூரியில் சேர்த்து விடுகிறேன்.  எந்தத் துறை விருப்பமோ சொல். சேர்த்து விடுகிறேன்” என்று மிக அன்பாக வலியுறுத்தினார்.“கோவலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இதுவா பருவம்? இதுவா நேரம்?” என்று சொல்லிக் கொண்டே, “How many Man-hours are getting wasted!” என்று திடுக்கிடுமாறு சொல்லிச் சென்றார்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply