முருங்கை வகைகள்

முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்

By editor news

September 12, 2017

              ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்து கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த தொடரில் முருங்கை, முள் முருங்கை, தவசி முருங்கை, ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.

          சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் . கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர். முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.

             மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம்.

           முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

          சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது

கார்த்திகை மாசத்துக் கீரையைக் கணவனுக்கு கொடுக்காமல் தின்பாள்’,

‘கார்த்திகை மாசத்துக் கீரையில் நெய் ஒழுகும்’

என முருங்கை குறித்த சொலவடைகள் தென் மாவட்டங்களில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் இலைகள் இருந்தாலும், ஐப்பசிமாதம் பெய்யும் மழையைத் தொடர்ந்து, கார்த்திகை மாதம் மழை பெய்யும் போது, முருங்கையில் புதுத் தளிர்கள் வரும். அத்துளிர்களில், உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள், உலோக உப்புக்கள் ஆகியவை அதிகமாக இருக்கும். மரம் பூக்கத்தொடங்கிவுடன், காரத்தன்மையுடன் இருந்த சத்துப்பொருள்கள் அமிலத்தன்மைக்கு மாறத் தொடங்கும். அதனால் கீரையில் சுவை குறையும். இது அனைத்து கீரைகளுக்கும் பொருந்தும். எந்தகீரையாக இருந்தாலும், அதைப் பூப்பதற்குள் பறித்துச் சமைத்து உண்ண வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள முருங்கை ரகங்கள்

           யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை. ஓராண்டு பயிர்களான இவை குடுமியான் மலை, பெரியகுளம், திண்டுக்கல் விவசாயிகளால் பயிரிடப்பட்டு இருக்கின்றன.

          இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

பயன்கள்

ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

நித்திய கண்டம் பூரண ஆயுசு

என்று நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.
ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .

பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது

காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது

வாழைப் பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது

தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது

இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

முருங்கைக்குக் காமத்தைப் பெருக்கும் சக்தி இருக்கின்றதா என்ற சர்ச்சை உண்டு. இந்த சர்ச்சைக்கு, பின்வரும் அகத்தியரின் குணவாகப் பாடலில் பதில் உண்டு.

’தாளி முருங்கைத் தழை தூதனம் பசலை
வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணில் – ஆளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாம்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்…..’

–அகத்தியர் குணவாகம்

தாளிக்கீரை (ஒருவகைக்கொடி), முருங்கைக்கீரை, தூதுவளை, பசலை, அறுகீரை ஆகியவற்றில், ஏதாவதொரு கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து, சிறிதளவு பசு நெய் சேர்த்து தினமும் காலையில் மட்டும் நாற்பது நாள்கள் உண்டு வந்தால், ஆண்மை பெருகும்.

முருங்கை மரத்தின் பிசினை நிழலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத் தேக்கரண்டியளவு பொடியை, அரைத்தேக்கரண்டி கற்கண்டுப் பொடியுடன் சேர்த்து தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் கழியும் நோய் குணமாகும்.

முருங்கை விதையை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். இந்த முறுங்கை விதை, அநேக லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. முருங்கை விதையைப் பாலில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் செயல்படுதிறன் அதிகரிக்கும்.

முருங்கைப் பிஞ்சுகளைப் பறித்துச் சமைத்து தோலுடன் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணியும்;

20 கிராம் முருங்கைப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து… மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சூப் தயாரித்துக் குடித்து வந்தால், முழங்கால் வலி குறையும். காய்ச்சலுக்குப் பின்வரும் சோர்வுக்கு இது மிகவும் சிறந்த மருந்து.முருங்கையின் வடமொழிப் பெயர் ‘சிக்குரு’. நம் நாட்டிலிருந்து உலர் முருங்கை இலை ஏராளமாக ஏற்றுமதியாகிறது. மேற்கத்திய நாடுகள் பலவற்றில், இரும்புச்சத்துக் குறைபாடு நோய்களுக்கு, ஆங்கில மருந்துகளைப் புறந்தள்ளிவிட்டு முருங்கை இலைப் பொடியைத்தான் பயன்படுத்துகின்றார்கள்.

வைட்டமின்கள் 

முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம் -75.9%

புரதம் -6.7%

கொழுப்பு -1.7%

தாதுக்கள் -2.3%

இழைப்பண்டம் -0.9%

கார்போஹைட்ரேட்கள் -12.5%

தாதுக்கள், வைட்டமின்கள்,

கால்சியம் -440 மி,கி

பாஸ்பரஸ் – 70மி.கி

அயம்– 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

வகைகள்

முள் முருங்கை

              முள் முருங்கை இன்னொரு பெயர்கல்யாண முருங்கை. இது, மூன்று மூன்று கூட்டிலைகளைக் கொண்ட உயரமாக வளரக்கூடிய மரம். வேலிகள், அமைக்கவும் மிலகு வெற்றிலை போன்ற கொடிகளைப் படரவிடவும் முள் முருங்கை பயன்படுகிறது. இது சிறந்த கால் நடைத் தீவனம். இதன் தண்டுப்பகுதிகளில் முட்கள் இருக்கும். மாசி, பங்குனி மாதங்களில் அழகிய சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கும். முருங்கையைப் போன்றே இதன் இலை பூ, விதை, பட்டை ஆகியவை மருந்துக்குப் பயன்படுகின்றன.

          இதன் இலைகளை குறுக அரிந்து தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாது. அடிவயிறும் உடலும் பருத்துக் காணப்படுவார்கள். அதோடு, மாதவிடாய் சமயங்களில் அதிகமான வயிற்றுவலி ஏற்படும். இதனால் குழந்தைபேறு தள்ளிபோகும்.

       இத்தகைய பிரச்சனையுடைய பெண்கள், 5 மில்லி முள் முருங்கை இலைச்சாற்றை இளம் வெந்நீரில் கலந்து காலை, மாலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் 3 மாதங்கள் தொடர்ந்து குடித்துவந்தால், அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும்.

         முள் முருங்கை இலைப்பொடி, பூப்பொடி ஆகியவற்றில் ஏதாவதொன்றை 2 கிராம் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் வெண்ணீர் கலந்து உண்டு வந்தாலும், மேற்குறிப்பிட்ட நோய்கள் குணமாகும்.

         முள் முருங்கை விதைகள் அவரை விதை வடிவில் சற்றுப் பெரியதாக இருக்கும். இந்த விதைகளை தரையில் தேய்த்தால் சூடாகும். கிராமங்களில் குழந்தைகள் இவ்விதையைத் தேய்த்து, உடலில் சூடுவைத்து விளையாடுவார்கள். முள் முருங்கை விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து மேல் தோல் நீக்கி, வெயிலில் காயவைத்து மெல்லிசாகப் பொடித்து, மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொடியில் 500 மில்லி கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட வேண்டும். மறுநாள் காலையில், 5 மில்லி முதல் 10 மில்லி வரை விளக்கெண்ணெய் குடித்தால், பேதியாகி வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். முள் முருங்கைப் பட்டைச் சாறு கொண்டு செய்யப்படும் ‘கல்யாணச்சாரம்’ எனும் மருந்து, வயிறு மற்றும் சிறுகுடல் புண்களைக் குணமாக்கும்.

        முள் முருங்கை இலைகள் மற்றும் பூக்களைப் போலவே உள்ள இன்னொரு மரம் பலாசு. இதை முருக்கு, புரசு என்றும் அழைப்பார்கள். தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் இதன் இலை சற்று வலிமையாகச் சொரசொரப்புடன் இருக்கும். இது காடுகளில் உயரமாக வளரக்கூடிய மரம். இதன் ஈர்க்கு மற்றும் குச்சிகளை யாகம் மற்றும் வேள்விக் குண்டங்களில் பயன் படுத்துவார்கள். இம்மரத்தின் கம்புகளை உடைத்துதான் கிராமங்களில் வீட்டுக்கு வெள்ளையடிக்க மட்டையாகப் பயன்படுத்துவார்கள்.

          இதன் விதைப்பொடி, குடற்புழு நீக்கத்துக்கு நல்ல மருந்து. சித்தமருத்துவத்தில் ‘முருக்கன் விதை மாத்திரை’ எனும் மருந்து உள்ளது. சித்தமருத்துவத்தின் ஆலோசனை பெற்று இம்மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ ஒரு வேளை மட்டும் பயன்படுத்தி வயிற்றைக் கழுவி குடற்கிருமிகளை வெளியேற்றலாம்.

தவசி முருங்கை

         தவசி முருங்கை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் செடி. தண்ணீர் வளம் இருந்தால் இரண்டு அடி உயரம் வரை வளரும். தண்ணீர் வளம் இல்லாத பகுதிகளில் தரையில் படர்ந்து காணப்படும். இதன் பூக்கள் ஊதா நிறமாக இருக்கும். குழந்தை பெற்ற பெண்கள், 30 மில்லி தவசி முருங்கை இலைச் சாறை பனைவெல்லத்துடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 3 நாள்களுக்குச் சாப்பிட்டால், குழந்தைப் பெற்றதன் அழுக்குகள் வெளியேறி கருப்பை விரைவில் சுருங்கும். வயிறு தன்னிலைக்கு திரும்பும். இதைப் பயன்படுத்திதான் நமது பாட்டிமார்கள் வயிறு விழாமல் வாழ்ந்து 16 பிள்ளைகள் வரை பெற்றிருக்கிறார்கள். இதன் இலை, தண்டு ஆகியவற்றை அப்படியே அரைத்து அடிபட்ட வீக்கம், காயம் ஆகியவற்றின் மீது பூசினால் வலி குறைந்து காயம் விரைவில் ஆறும்.

புனல் முருங்கை

           தரைக்காடுகளிலும் மலையடிவாரக் காடுகளிலும் காணப்படும் ஒரு குறுமரம் புனல் முருங்கை. இதை நீர் முருங்கை,புல்லாவாரை என்றும் அழைப்பார்கள். இதில் ஊதா நிறத்தில் அழகிய மலர்கள் காணப்படும். இந்த இலைச்சாறு காதுவலித் தைலத்தில் சேர்க்கப்படுகிறது.

முருங்கை மரத்தின் பயனுள்ள பொருட்களை நாமும் பயன்படுத்துவோம்.

நோய் நொடி இல்லாமல் வாழ்வோம்!!!

நன்றி

முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்

————————————————————————————————————

ஏக்கருக்கு ரூ.3 லட்சம்… பணம் காய்க்கும் பந்தல் சாகுபடி!

வீ கே.ரமேஷ்எம்.விஜயகுமார்

பீர்க்கன் தோட்டத்தில் ராஜசேகரன்

பீர்க்கன் தோட்டத்தில் ராஜசேகரன்

சுவடுகள்

டந்த 14 ஆண்டுகளாகப் பசுமை விகடனுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் முன்னோடி விவசாயிகள் பலர் இருக்கிறார்கள். பசுமை விகடன், ஆரம்பகாலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில் பசுமை விகடன் ஆரம்பகாலங்களில் பதிவு செய்த விவசாயப் பண்ணைகள் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் அதற்குப் பிறகு கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றிப் பேசுகிறது இந்தப் பகுதி.

பந்தல் சாகுபடியில் முன்னோடி விவசாயியாக இருக்கும் ‘கேத்தனூர்’ பழனிச்சாமியின் அனுபவங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். ‘காய்கறிப் போட்டேன்… கவலையை விட்டேன்!’ என்ற தலைப்பில் 2007 மார்ச் 10 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பந்தல் சாகுபடிக்கு மாறினார்கள். அப்படி மாறிய விவசாயிகளில் ஒருவர்தான் சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்துள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன். தனது 5 ஏக்கர் நிலத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவரை இன்றைக்கு நிறைவான வருமானம் பார்க்கும் விவசாயியாக மாற்றி இருக்கிறார் பழனிச்சாமி.

ராஜசேகரனைச் சந்திப்பதற்காக வாழப்பாடியில் உள்ள அவரது தோட்டத்திற்குச் சென்றோம். நம்மை வரவேற்றவர் மகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கினார். ‘‘எனக்கு 36 வயசாகுது. என் மனைவி பேரு கோமதி. எங்களுக்குத் தரணி என்ற மகளும், மகிழன் என்ற மகனும் இருக்காங்க. எங்க அப்பா, அம்மாவோடு கூட்டுக் குடும்பமாகச் கிராமத்துல குடியிருக்கோம். எங்களுக்குப் பூர்விகமா 5 ஏக்கர் நிலம் இருக்குது. அதில் நெல், மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டு வந்தோம். பெருசா வருமானம் கிடைக்கல. வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு.

பேருக்கு விவசாயம் பார்த்துட்டு இருந்தேன். இந்த நிலைமையில, பசுமை விகடன்ல கேத்தனூர் பழனிச்சாமி ஐயாவின் பந்தல் காய்கறி பற்றிய கட்டுரையைப் படிச்சேன். ‘பந்தல் காய்கறி பயிரிட்டால் பணம் பார்க்கலாம்’னு பழனிச்சாமி ஐயா சொல்லி இருந்தாங்க. அவருடைய போன் நெம்பரும் கொடுத்திருந்தாங்க. அதையடுத்து அவரைத் தொடர்புகொண்டு பேசிட்டு, அவர் தோட்டத்துக்குப் போனேன்.

பீர்க்கன் தோட்டத்தில்
பீர்க்கன் தோட்டத்தில்

அவர் மிகப் பிரமாண்டமா இயற்கை முறையில பந்தல் விவசாயம் செஞ்சுட்டு இருந்தார். பந்தல் விவசாயத்தைப் பற்றித் தெளிவா, அதோட நெளிவு சுளிவு எல்லாம் பொறுமையா சொல்லிக்கொடுத்தார் பழனிச்சாமி ஐயா.

பாதை காட்டிய பழனிச்சாமி

பந்தல் சாகுபடியில அவர் எடுக்குற வருமான கணக்கைச் சொன்னதோடு, அதுக்கான ஆதாரங்களையும் காட்டினார். அதுக்கு பிறகு, பந்தல் காய்கறி பயிரிட்டே ஆகணும்னு எனக்கு ஆர்வம் வந்திடுச்சு. ஊருக்கு வந்ததும் பந்தல் அமைக்குற வேலையில இறங்கிட்டேன். பந்தல் அமைச்சதும், பாகல், பீர்க்கன், புடலைச் சாகுபடியை ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல பூச்சி, நோய் தாக்குதல் மாதிரியான சின்னச் சின்னச் சிக்கல் வந்துச்சு. அதுக்கும் போன் மூலமா கேட்டதுக்கு ஐயா ஆலோசனை கொடுத்தாரு. அடுத்த முறை சாகுபடி செய்யும்போது, முதல் ஆண்டு அனுபவம் கைக்கொடுத்துச்சு. அதுக்கு பிறகு, பந்தல் சாகுபடியில எனக்கும் திருப்தியான வருமானம் கிடைக்க ஆரம்பிச்சி, இப்ப வரைக்கும் கிடைச்சுட்டுதான் இருக்கு’’ என்று நீண்ட முன்னுரை கொடுத்தவர் பந்தலுக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

அறுவடையான பீர்க்கன் காய்களுடன்
அறுவடையான பீர்க்கன் காய்களுடன்

சுழற்சி முறை சாகுபடி

பீர்க்கன் அறுவடை முடியும் தறுவாயில் இருந்தது. ‘‘எங்க பகுதியில தண்ணி பற்றாக்குறை இருக்கு. கொஞ்சம் தென்னை மரங்களும் இருக்குறதால வருஷம் முழுக்கப் பந்தல் சாகுபடி செய்ய முடியல. வருஷத்துல 6 முதல் 8 மாசங்கள் வரைக்கும்தான் பந்தல் சாகுபடி இருக்கும். ஆரம்பத்துல ஒரு ஏக்கர்ல ஆரம்பிச்சேன். இப்ப ரெண்டரை ஏக்கர்ல பந்தல் சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். நடவு செய்ததிலிருந்து 50 முதல் 60 நாள்கள்ல மகசூலுக்கு வந்திடும். தொடர்ந்து 180 முதல் 200 நாள்கள் வரைக்கும் காய் பறிக்கலாம். காய் பறிப்பதற்கு முன்பு, ஈரப்பதத்திற்கு ஏற்ப ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடணும்.

ஆனால் காய் பிடித்த பிறகு தினமும் தண்ணீர் விடணும். வருஷம் ஒரு சாகுபடி நிச்சயம். ஒவ்வொரு ஏக்கர்லயும் ஒரு காய் பயிர் செய்வோம். பாகல் ஒரு ஏக்கர், பீர்க்கன் ஒரு ஏக்கர், புடல் அரை ஏக்கர்னு சாகுபடி பண்ணுவோம். அடுத்த தடவை புடல் நட்ட இடத்துல பாகல், பீர்க்கன் நட்ட இடத்துல புடல்னு மாற்றி மாற்றிச் சுழற்சி முறையில சாகுபடி பண்ணுவோம். இந்தத் தடவை பாகல், புடல் அறுவடை முடிஞ்சிடுச்சு. பீர்க்கன் அறுவடை முடியுற தறுவாயில இருக்கு’’ என்றவர் வருமானம் பற்றி சொல்லத் தொடங்கினார்.

“ஒரு ஏக்கர் நிலத்துல பாகல் தனிப்பயிரா சாகுபடி செஞ்சா சராசரியா 20 டன், பீர்க்கன் தனிப்பயிரா சாகுபடி செஞ்சா சராசரியா 15 டன், புடலை தனிப்பயிரா சாகுபடி செஞ்சா சராசரியா 25 டன் மகசூல் கிடைக்கும். பாகல், பீர்க்கன் சராசரியா கிலோ 20 ரூபாய் விலை கிடைக்கும். புடலைக்கு கிலோ 15 ரூபாய் கிடைக்கும். அந்த வகையில ஒரு ஏக்கர்ல பாகல் மூலம் 4,00,000 ரூபாய், புடலை மூலம் 3,75,000 ரூபாய் எடுத்திருக்கேன். இப்போ பீர்க்கன் மூலம் 3,00,000 ரூபாய் வருமானமாக் கிடைக்கும். அதுல ஒரு ஏக்கருக்கு 35,000 முதல் 50,000 ரூபாய் வரை செலவாகும். மீதிப்பணம் முழுக்க லாபம் தான்’’ என்றவர் நிறைவாக,

‘‘நடவு செய்ததிலிருந்து 50 முதல் 60 நாள்கள்ல மகசூலுக்கு வந்திடும். தொடர்ந்து 180 முதல் 200 நாள்கள் வரைக்கும் காய் பறிக்கலாம்.’’


‘‘பந்தல் அமைக்கும் செலவு முதல் முறை மட்டும்தான். பந்தல் 50 ஆண்டுகளைத் தாண்டியும் இருக்கும். பந்தல் மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்திற்குத் தோட்டக்கலைத்துறை மானியம் கிடைக்குது. விவசாயத்துல போதுமான வருமானம் இல்லாமல் இருந்த நான், இன்றைக்கு நிறைவான வருமானம் எடுக்கக்கூடிய விவசாயியாக மாறியிருக்கிறேன். அதற்கு அடிப்படை காரணம் பசுமை விகடன். அதன் மூலம் அறிமுகமான கேத்தனூர் பழனிச்சாமி ஐயா இருவரும்தான். இருவருக்கும் மனமார்ந்த நன்றி’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ராஜசேகரன்,

செல்போன்: 97906 61303.

இப்படித்தான் பந்தல் சாகுபடி!

முதலில் நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். பிறகு 8 அடி உயரமுள்ள கருங்கல்லை வெளிச் சுற்றளவு முழுவதும் பன்னிரண்டரை அடிக்கு ஒரு கல் வீதம், ஒன்றரை அடி ஆழத்தில் நட வேண்டும். உள்ளே நேர் வாக்கிலும், குறுக்கு வாக்கிலும் ஒரு கல் விட்டு ஒரு கல் (25 அடி) நட வேண்டும். பந்தல் கல்லின் மேலே 6 கேஜ், 8 கேஜ், 16 கேஜ் அளவு இரும்புக் கம்பிகளால் பந்தல் அமைக்க வேண்டும். நிலத்தை மினி டிராக்டர் மூலமாக இரண்டு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன்பு ஏக்கருக்கு 10 டிராக்டர் தொழுவுரம் கொட்ட வேண்டும். பிறகு 12 அடி இடைவெளியில் மேல் மேட்டுப்பாத்தி அமைத்துச் சொட்டு நீர்ப் பாசனம் வசதி செய்ய வேண்டும்.

நடவு முறை

பயோ டைனமிக் காலண்டரில் குறிப்பிட்டிருக்கும் தேதியைப் பார்த்து, பாத்தியில் விதைகளை நடவு செய்ய வேண்டும். விதைகள் வரிசையாக அல்லது 5 அடிக்கு ஒரு வட்டக் குழி அமைத்து அதில் இரண்டு அல்லது மூன்று விதைகள் என நடவு செய்யலாம். 5 அடிக்கு ஒரு குழி அமைத்து நடவு செய்வதே சிறந்தது.

பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் பீர்க்கன் காய்கள்
பந்தலில் ஒய்யாரமாகத் தொங்கும் பீர்க்கன் காய்கள்

பாத்தியில் ஒரே ரகக் காய்கறி விதையை மட்டும் நட வேண்டும். அதாவது பாகல் விதை என்றால் பாகல் விதையும், பீர்க்கன் விதை என்றால் பீர்க்கன் விதை மட்டுமே நட வேண்டும். பாகல், பீர்க்கன் எனக் கலந்து நடவு செய்தால் நோய் தாக்குதல் அதிகரிக்கும். நன்றாகப் பழுத்த பழத்திலிருந்து முற்றிய விதைகளை எடுத்து அதைப் பஞ்சகவ்யாவில் நனைத்து 12 மணி நேரம் நிழலில் உலர வைத்த பிறகே நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு சுமார் 400 கிராம் விதைத் தேவைப்படும்.

நடவு செய்த விதைகள் 8 முதல் 10 நாள்களில் முளைத்து வெளியே வரும். பிறகு கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு தலா 10 கிலோ எடுத்து, அதை 200 லிட்டர் தண்ணீரில் இரண்டு நாள்களுக்கு ஊற வைத்தால் பிண்ணாக்குக் கரைசல் தயாராகிவிடும். தயார் செய்த பிண்ணாக்குக் கரைசலை நடவு செய்த 20-ம் நாளில் செடியின் வேர்ப் பகுதியில் ஒரு குழிக்கு அரை லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும். தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒரு முறை பிண்ணாக்குக் கரைசல் கொடுத்தால் செடி ஆரோக்கியமாக வளர்வதோடு விளைச்சலும் அதிகமாகக் கிடைக்கும்.

https://www.vikatan.com/news/agriculture/how-to-cultivate-ridge-gourd

——————————————————————————————————————–

எளிய காய்கறிகளை வளர்த்து நிறையப் பலன் பெறலாம்
முருங்கை

17 நவம்பர், 2020 

  வரலாறு

முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். இதில் “muringa” என்ற பெயர், “முருங்கை” என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும், முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.

ஊட்டச்சத்து

கலோரி – 257
புரத சத்து – 9.8 கிராம்
நார்ச்சத்து உணவு – 1.37 கிராம்
இரும்பு சத்து – 22.2 மில்லி கிராம்
கால்சியம் – 397 மில்லி கிராம்
வைட்டமின் – வைட்டமின் C.

நன்மைகள்

1. முருங்கைக்காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள்கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பலவிதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.

2. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது.

3. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், மாதவிலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

4. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இருவேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.

5. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி, சளி ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.

6. மேலும் முருங்கை இலையை போட்டு மிளகு இரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.

7. குடற்புண், டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.

பக்க விளைவுகள்

1. நீங்கள் பெரிய அளவில் முருங்கை இலைகளை சாப்பிட்டால், வயிறு சரியில்லை, வாயு விரிவடைதல், மற்றும் வயிற்று போக்கு ஏற்படலாம்.

—————————————————————————————————————

பாகல்

18 நவம்பர், 2020  

வரலாறு

பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை தாவர வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.

ஊட்டச்சத்து

கலோரி – 17
புரத சத்து – 0 கிராம்
நார்ச்சத்து – 2.80
கிராம்இரும்பு சத்து – 0.43 மில்லி கிராம்
கால்சியம் – 19 மில்லி கிராம்
சோடியம் – 13 மில்லி கிராம்
பொட்டாசியம் – 602 மில்லி கிராம்
சர்க்கரை – 1 கிராம்
வைட்டமின் – B6, C, A.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நன்மைகள்

இதனை ஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரை உச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன் மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜூஸ், ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.சுவாசக்

கோளாறுகள்

பசுமையான பாகற்காய்கள் ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.கல்லீரலை வலுப்படுத்துதல். தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.நோயெதிர்ப்புச் சக்தி:பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.பருக்கள்:பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.

நீரிழிவு நோய்

டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.மலச்சிக்கல்:பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது.சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை:ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

இதய நோய்:பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது.புற்றுநோய்:புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.எடை குறைதல்:உடலின் வளர்சி மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

பக்க விளைவுகள்

1. தினமும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்

2. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் அதிகமாக தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பாகற்காய் கருப்பையின் செயல்பாட்டை அதிகமாக தூண்டுவதால் குறைப்பிரசவத்தை ஏற்படுத்துகிறது.

பீர்க்கு

17 நவம்பர், 2020 

 வரலாறு

பீர்க்கு பேரினம் எனப்படும் (Luffa) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். இது ஒரு படர்கொடி தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது. மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஊட்டச்சத்து

கலோரி – 56
புரத சத்து – 0 கிராம்
நார்ச்சத்து – 2.9 கிராம்
இரும்பு சத்து – 20 மில்லி கிராம்கால்சியம் – 0 மில்லி கிராம்
சோடியம் – 21 மில்லி கிராம்
பொட்டாசியம் – 453 மில்லி கிராம்
சர்க்கரை – 5 கிராம்

வைட்டமின்

வைட்டமின் B2, C, A.

நன்மைகள்

1. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கைகொடுத்து உதவுகிறது.

2. பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறி யாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

செயல்திறன்மிக்க வேதிப் பொருட்கள்: கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், வைட்டமின் ஏ,சி, கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோஅமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் லினோலிக் அமிலம், ஒலியிக், பால்மிட்டிக், ஸிடியரிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன.முழுத்தாவரமும் மருந்து:இதன் இலை, விதைகள், வேர் என பீர்க்கங்காயின் முழுத்தாவரமும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. கசப்பான மருந்தாகும். விதைகள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், பேதிமருந்து, எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும். இலைகள் பொடிக்கப்பட்டு இரத்தக் கட்டிகளின் மீது தடவப்படும், கண் வலிக்கு இலைகளின் சாறு பயன்படும். வேரானது நீர்க்கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.

நீரிழிவு குணமடையும்

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். பீர்க்கங்காயின் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடு படுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். பின் அந்த நீரை வடி கட்டி அருந்தி வருவதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும்.

பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும். பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. கஷாயம், மாதவிடாய் மற்றும் சிறுநீர்க் கோளாறுகளுக்கு பயன்படும்.

நாள்பட்ட புண்களை குணமாக்கும்:சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல் நோய்க்கு நல்ல மருந்து, மண்ணீரல் பெரிதானதை குணப்படுத்தும். மலை ஜாதியினர் இந்த மருந்தை வலிப்பு நோய், மூச்சுப்பிடிப்பு, புண்கள், சிரங்குகள் ஆகியவற்றில் பயன்படுத்துவர். கனிகள் – கசப்பான நன்மருந்து, பேதி மருந்து, நோயை ஆற்றும், வாந்தி மருந்து.

பக்க விளைவுகள்

1. இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

https://www.facebook.com/113768547212722/posts/115042603751983/


https://www.vikatan.com/news/agriculture/how-to-cultivate-ridge-gourd

—————————————————————————————————————

Canadian Tamil Congress
9 மே, 2020 
இலங்கையின் வட-கிழக்கில் வீட்டுத் தோட்ட முயற்சிகள் பற்றி, அதனை முன்னெடுத்துவரும் அமைப்புக்களில் ஒன்றான வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் (North East Economic Development Centre (NEED)) பணிப்பாளரும், ஒருங்கிணைப்பாளருமான செல்வின் இரெனூஸ் மரியாம்பிள்ளை அவர்களுடன் சிறப்பு நேர்காணல்.
Courtesy – Marumoli.comhttps://marumoli.com/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%95%e0%ae…/
செல்வின் பற்றி..வட-கிழக்கு அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான செல்வின், தேசிய மற்றும், சர்வதேச பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், சமூகவியல், பொருளியல், வணிக நிர்வாகம், அபிவிருத்தி, சமாதானம் மற்றும் முரண் தவிர்ப்பு துறைகளில், கல்வி, தொழில்முறை தொடர்பான பட்டக் கல்வியைப் பெற்றவர். அத்தோடு, அவர் சிறிலங்கா நிர்வாக சேவைக்குத் தெரிவாகி, இரண்டு தசாப்தங்களாகப், பல்வேறு மாகாண அமைச்சுகள், மத்திய அரசின் திணைக்களங்கள், சட்டவாக்க சபைகள் ஆகியவற்றில் பல பதவிகளிலும் நிலைகளிலும் பணி புரிந்தவர். வருகை விரிவுரையாளர், ஆலோசகர், ஆய்வாளர், பணிப்பாளர், செயலாளர் என்னும் பல பாத்திரங்களை வகித்து வருபவர். மோதலுக்குப் பின்னான அபிவிருத்தி, மனிதவள அபிவிருத்தி, இளையோர் மேம்பாடு, தொழில்துறை / தொழில்முனைவு அபிவிருத்தி, பிராந்திய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி ஆகியன அவருக்கு மிகவும் ஆர்வமான துறைகள்.

——————————————————————————————————————-

வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல்

சிறப்பு உரையாடல்

இலங்கையின் வட-கிழக்கில் வீட்டுத் தோட்ட முயற்சிகள் பற்றி, அதனை முன்னெடுத்துவரும் அமைப்புக்களில் ஒன்றான வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் (North East Economic Development Centre (NEED)) பணிப்பாளரும், ஒருங்கிணைப்பாளருமான செல்வின் இரெனூஸ் மரியாம்பிள்ளை அவர்களுடன் சிறப்பு நேர்காணல்.


செல்வின் பற்றி..
வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல் 1
செல்வின் இரென்யூஸ் மரியாம்பிள்ளை

வட-கிழக்கு அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான செல்வின், தேசிய மற்றும், சர்வதேச பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், சமூகவியல், பொருளியல், வணிக நிர்வாகம், அபிவிருத்தி, சமாதானம் மற்றும் முரண் தவிர்ப்பு துறைகளில், கல்வி, தொழில்முறை தொடர்பான பட்டக் கல்வியைப் பெற்றவர். அத்தோடு, அவர் சிறிலங்கா நிர்வாக சேவைக்குத் தெரிவாகி, இரண்டு தசாப்தங்களாகப், பல்வேறு மாகாண அமைச்சுகள், மத்திய அரசின் திணைக்களங்கள், சட்டவாக்க சபைகள் ஆகியவற்றில் பல பதவிகளிலும் நிலைகளிலும் பணி புரிந்தவர். வருகை விரிவுரையாளர், ஆலோசகர், ஆய்வாளர், பணிப்பாளர், செயலாளர் என்னும் பல பாத்திரங்களை வகித்து வருபவர். மோதலுக்குப் பின்னான அபிவிருத்தி, மனிதவள அபிவிருத்தி, இளையோர் மேம்பாடு, தொழில்துறை / தொழில்முனைவு அபிவிருத்தி, பிராந்திய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி ஆகியன அவருக்கு மிகவும் ஆர்வமான துறைகள். 


காலக் குறிப்புகளை ஒழுங்கமைக்க வரலாற்றாசிரியர்கள் பாவித்து வரும் கிறிஸ்து, திருவள்ளுவர் ஆண்டுகளைத் தள்ளிவிட்டு கோ.மு., கோ.பி. என்று கோவிட்டை வைத்துக் கால நிர்ணயம் செய்துகொள்ளும் நிலைவந்தால் ஆச்சரியப்படவேண்டாம். இப்படியான கோ.பி. ஆண்டொன்றில் மனித குலம் தம் சுய உணவுத் தேவைகளுக்காக வீட்டுக்கு வெளியில் காலடி எடுத்துவைக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது. அதற்கான தயாரிப்புகள் உலகெங்கும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. நம்மூரிலும்தான். இது ஒன்றும் புதிதல்ல. தலைக்குமேல் கூரை என்று ஒன்று வந்ததிலிருந்து மனித குலம் கடைப்பிடித்துவந்து பின்னர் மறந்துபோன வீட்டுத் தோட்டம் மீண்டும் உங்கள் கதவுகளைத் தட்டுகிறது.

கோவிட்ட்டுக்குப் பின்னான உலகம் இப்போதுதான் விடிந்திருக்கிறது. தாமே உலகத்தின் மீட்பர்களாக வலம் வந்த மேற்குலகம் ஒரு அரக்கு மாளிகை என கோவிட் வைரஸ் புட்டுக்காட்டிவிட்டது. இதன் பிரமைகளில் சொக்கிப் போயிருந்து நமது கீழுலகம் விழித்துக்கொண்டு விட்டது. தன் கையே தனக்குதவி என்பதை வைரஸ் எங்களுக்கு அறைந்து சொல்லியிருக்கிறது. வயிற்றை நிரப்புவதே எமது வாழ்வின் முதற்பணி. இங்குதான் ஆரம்பிக்கிறது எமது உரையாடல்.


புலம்பெயர் தழிழ்ச்சமூகம் முதலில் தனது கடந்தகாலத்தின் வெறுமையிலிருந்தும் விரக்தியிலிருந்தும் விடுபடவேண்டும். குழுநிலைகளும் முரண்பாடுகளும் ஒரு கட்டத்திற்கு மேல் எவ்வித பயனும் தரப்போவதில்லை என்ற உண்மையின் அடிப்படையில் தாயகமக்களை தந்திரோபாய அடிப்படையில் வலுவூட்டி கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.

அவர்களது ஆர்வம் அனுபவம் அறிவு ஆற்றல் புலம்பெயர்தேசங்களில் பெற்றுள்ள நன்மதிப்பும் செல்வாக்கும் என பலபரிமாணங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட முறைமையில் பங்களிக்க முன்வரவேண்டும்.

செல்வின் இரெனேயுஸ்
1. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் யாது?

கொரோனா தொற்று அபாயத்தினைத் தொடர்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் அல்லது மாற்றமடையப்போகும் உலகந்தழுவிய புதிய பொருளாதார மற்றும் சர்வதேச அரசியல் ஒழுங்கினால் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி, பொருளாதார நெருக்கடி நோய்த்தொற்றின் வீரியம் மிக்க தாக்கம் ஆகியவற்றில் இருந்து ஏற்கனவே யுத்தத்தால் நலிவடைந்து போயுள்ள மக்களை காப்பாற்றுதலும் அவர்களது வலுவான இருப்பினை அவர்கள் வாழுமிடங்களிலேயே உறுதிப்படுத்துதலும்.

2. இதேபோன்ற முன்முனைப்புகள் அரசாங்கத்தாலும் வேறு நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்படுகின்றனவா?

ஆம் இலங்கை அரசினாலும் வீட்டுத்தோட்டம் என்ற திட்டம் தீவடங்கிலும் அரசாங்க திணைக்களங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கில் முன்மொழிந்துள்ள திட்டம் இதிலிருந்து வேறுபட்டது. வடக்கு கிழக்கில் தற்போது பல்வேறு இளைஞர் குழுக்கள் புலம்பெயர் மக்களின் ஊர்ச்சங்கங்கள் உள்ளுர் செயற்பாட்டாளர்கள் ஆகியோராலும் வீட்டுத்தோட்டங்களுக்கான ஆரம்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு விதைகள் சேகரிப்பு விநியோகம் ஆகியவை நடைபெறுகின்றது
நாங்கள் எங்களது வீட்டுத்தோட்ட முன்மொழிவினை மிகவும் வேறுபட்ட கோணத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
அ. பாரம்பரிய உள்ளுர் இனப்பயிர்கள் மற்றும் தாவரங்கள்
ஆ. இயற்கை விவசாய முறைகள்
இ.குடும்ப உழைப்பு
ஈ.ஆரோக்கியமான உணவு.
உ. பேண்தகு உணவுப்பாதுகாப்பு முறைமை
ஊ. கிராமங்களின் கூட்டுமுயற்சி
எ. பயன்படுத்தாத அயல்நிலங்களையும் பயன்படுத்துதல்
ஏ. கிராமங்களுடன் மக்களின் இணைப்பினைப் பலப்படுத்துதல்



3. நீங்கள் இத்திட்டத்தை ஒரு இடத்தில் அல்லது மாவட்டத்தில் முதலில் ஆரம்பித்துவிட்டு பின்பு படிப்படியாக வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்போகின்றீர்களா? (ஒரு மாவட்டமும் தங்களை புறக்கணித்ததாக கருதக்கூடாது)

இல்லை. சமகாலத்தில் வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக் கின்றோம். சிலவேளைகளில் முதல் தரப்பில் ஐந்து மாவட்டங்களில் தலா 200 குடுமபங்களை தெரிவு செய்து ஆரம்பிக்கும் அதேவேளை கிடைக்கும் உதவிகளின் பரிமாணத்தைப்பொறுத்து விடுபட்ட மாவட்டத்திற்கும் புதிய கிராமங்களுக்கும் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
சுமகாலத்தில் திட்டத்தை விரிவாக்கமுடியாமைக்கு இரண்டு சவால்கள் உள்ளன.
அ. கிடைக்கக்கூடிய வள ஆதரவு பற்றி இதுவரை கணிப்பிடமுடியவில்லை.
ஆ. உள்ளுர் இன விதைகளைப்பெருமளவில் விவசாயிகளிடமிருந்து பெறுவதில் காணப்படும் மட்டுப்பாடுகள்

4. எத்தனை பயனாளிகள் அல்லது குடும்பங்களை இலக்கு வைத்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றீர்கள்? திட்டத்தை ஆரம்பிக்க தேவைப்படும் உத்தேச முதலீடு எவ்வளவாக இருக்கும்?

முதற்கட்டமாக மாவட்டத்திற்கு 200 பயனாளிகளை உள்ளடக்கிய இரண்டு கிராமங்கள் வீதம் 10 கிராமங்களில் மொத்தம் 1000 குடும்பங்கள். உத்தேசமாக ஒரு குடும்பத்திற்கு இலங்கை ரூபாவில் 2000.00 தேவைப்படும். இத்தொகையினுள் விதைகள் நாற்றுக்கள் சிறு வீட்டுத்தோட்ட உபகரணங்கள் ஆகியவற்றின் பெறுமதியியுடன் தொடர்ச்சியாக மூன்று மாதத்திற்கு திட்டத்தை கண்காணித்து ஒருங்கிணைக்கப்போகும் இணைப்பாளருக்கான கொடுப்பனவும் உள்ளடங்கும்.

5. வீட்டுத்தோட்டத்தில் ஈடுபட ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் தனக்கென வீட்டுத்தோட்டம் செய்வதற்கான காணித்துண்டினைக்கொண்டிராத பட்சத்தில் எவ்வாறு அந்தக்குடும்பத்தையும் உங்கள் திட்டத்தில் உள்வாங்கப்போகின்றீர்கள்?

தனது குடியிருப்புக்காணியினுள் வீட்டுத்தொட்டத்தை செய்யமுடியாத குடும்பங்கள் விடயத்தில் அவர்கள் குடியிருப்பக்கப் பக்கத்திலுள்ள பயன்படுத்தப்படாத தனியார்காணியினை பெற்று பயன்படுத்துவதற்கு உள்ளுர் நிர்வாக பொறிமுறையின் ஆதரவுடன் முயற்சி எடுக்கப்படும். இல்லையேல் அவர்களது வீட்டின் அமைப்பு காணியின் அளவு ஆகியவற்றைக்கணக்கில் கொண்டு அடுக்குத்தோட்டம், தொங்குதோட்டம் வேலித்தோட்டம் போன்ற மாற்றுத்தெரிவுகள் ஊக்குவிக்கப்படும் : Watch Video

6. இத்திட்டத்தின் நோக்கத்திற்காக சமகாலத்தில் பயன்படுத்தப்படாத காணிகளுக்கு உரிமையாளர்களாக இருக்கும் புலமபெயர் தேசத்தவர் உட்பட அனைவரிடமும் தற்காலிக அடிப்படையிலாவது காணிகளை உணவு உற்பத்திக்காக பயன்படுத்தவதற்கு கோரும் முனைப்புகள் உண்டா?

ஆம் நிச்சயமாக. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் குடியிருக்காத பயன்படுத்தாத காணிகளின் விபரங்களை அரசாங்கம் இராணுவத்தினர் ஊடாக சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
நாங்கள் இத்தகைய நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு விரும்புகின்றோம். புலம்பெயர்குடும்பங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது குடும்பஉறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் ஆகியோருக்கு தங்களது காணிகளை தற்காலிக அடிப்படையில் உணவுப்பயிர்ச்செய்கைக்காக வழங்க முன்வரலாம்.


7. இத்தகைய புலம்பெயர் மக்களின் காணிகளை தற்காலிகமாகப் பெற்று பயன்படுத்தும் திட்டத்தைக்கொண்டுள்ள வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படக்கூடிய திட்டங்கள் தங்களிடம் உண்டா? எவ்வாறு?

ஆர்வமுள்ள பல அமைப்புக்கள் இத்தகைய முயற்சிகளை சிலவருடங்களாக முன்னெடுத்து வருகின்றன. எனினும் வெற்றியின் அளவு குறைவாகவே உள்ளது. சிலநேரங்களில் உள்ளுர் மக்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமலேயே அதிகூடிய பணத்திற்கு ஆசைப்பட்டு வேற்று ஆட்களுக்கு தங்கள் காணிகளை புலம்பெயர் உரிமையாளர்கள் விற்பனை செய்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு இன மத சமுக முரண்பாடுகளும் சமுக அமைதியின்மையும் கூட கடந்தகாலத்தில் தோன்றியுள்ளதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது என கருதுகின்றேன்.

8. தேசத்தில் வளமற்றதும் நீர்ப்பாசன வசதிகளற்றதும் புதர் மண்டிய காடுகளாகவும் காணப்படும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத காணிகள் அதிகளவில் காணப்படும் கிராமங்களுக்கு தங்களது ஆலோசனை எதுவாக இருக்கும்?

உலகத்தில் பயிர் நடமுடியாத நிலம் என்று ஒன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய நிலத்திற்கும் அச்சூழலுக்கும் பொருத்தமான பயிர் எதுவெனக் கண்டுபிடித்து பயிரிடுவதில்தான் எமது வெற்றி தங்கியுள்ளது. சிறிது முயற்சியும் கூடிய ஈடுபாடும் தேவை. Watch Video

9. இவ்விடயத்தில் வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் பாத்திரம் எதுவாக இருக்கும்?

வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் சகல சாத்தியமான வழிகளையும் கண்டறிவதற்காக விரிவானதும் பரந்ததுமான சிந்தனைக்குழாம் ஒன்றினை நட்புரீதியாக கொண்டுள்ளது. அதனூடாக சாத்தியமான வழிகளைக்கண்டறிந்து மக்களுக்கு வழங்கும். எனினும் தற்போதுவரைக்கும் வடக்கு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவத்தின் செயற்படு மூலதனமும் நிதிவளமும் மிகவும் பலவீனமாகவே உள்ளது. அதனைப் பலப்படுத்தும் வாய்ப்பகள் கிடைக்குமாயின் எமது நடுவம் பல பரிமாணங்களில் தந்திரோபாய தலைமைத்துவத்தை வழங்கும்



10. இத்தகைய விடயங்களுக்கு அரசாங்கத்தினது அல்லது வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களது ஆதரவினைப்பெற விரும்புகின்றீர்களா?

ஆம் நிச்சயமாக. வடக்கு கிழக்கு மக்களின் மீளெழுச்சி என்பது இதுவரை உலகில் அறியப்படாத ஒரு முன்னுதாரணமாகவே அமையும். ஒரு நாட்டின் ஒரு பகுதிக்குள் முடக்கப்பட்ட ஒடுக்குமுறை, யுத்தம் பொருளாதார தடை, நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்ட நிறுவனரீதியான வன்முறைகள் ஆகியவற்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலாண்மைகொண்ட ஆட்சியாளர்களின் வெற்றிமமதைக்கு கீழ் ஆளப்படும்போது அம்மக்களின் மீளெழுச்சிக்கான திட்டங்கள் என்பது தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கும்கருவிகளாகவே இருக்கும். சனநாயக வாக்குப்பலத்தால் ஆட்சிமன்றம் உருவாக்கப்படும்போது அவ்வாட்சியில் எண்ணிக்கையில் சிறுதொகையினரான மக்களும் பங்குபற்றவாய்ப்பு வேண்டுமானால் அவர்களது பேரம்பேசும் பலம் அவர்களது சனத்தொகை எண்ணிக்கைக்கும் அப்பால் மாற்றுத்தளங்களில் கட்டியெழுப்பப்படவேண்டும்.

அவர்களது அறிவுசார் பொருளாதாரம், முதலீட்டுவளமும், தொழிலாண்மையும், மொத்த தேசிய உற்பத்தியில் அவர்கள் கொண்டிருக்கக்கூடிய கட்டுப்பாடு, தொழில்நுட்பம் ஆராய்ச்சி போன்ற துறைகளில் காட்டும் தலைமைத்துவம் என்பன அவர்களது சமுகம் சார்ந்த பேரம்பேசும் திறனை அதிகரிக்கும். அதனால் அவர்களும் அந்த நாட்டின சனநாயக அரசியல்கட்டமைப்பில் சம செல்வாக்கு கொண்ட இனக்குழுமமாக ஏனைய இனங்களுக்கு சமமாக மேலெழமுடியும். இத்தகைய ஆளுமை வலுவூட்டல் முயற்சிகளுக்கு பலரின் உதவிகள் தேவை.

11. குழாய்க்கிணறு சூழலுக்கு பாதுகாப்பானதல்ல என கருதுகின்ற நிலையில் வீட்டுத்தோட்டங்களுக்காக குழாய்க்கிணற்றினை கிண்டிப் பயன்படுத்துவதனை ஆதரிப்பீர்களா?

வீட்டுத்தோட்டம் என்பது உற்பத்தி வர்த்தகம் ஆகியவற்றினை இலக்காக கொண்ட விவசாயத்திலிருந்து வேறுபட்டது. வீட்டின் நாளாந்த பாவனைக்குரிய நீரின் இரண்டாம் நிலைப் பயன்பாடே வீட்டுத்தோட்டத்திற்கான நீராகும். எனவே குறைந்தளவு வீட்டுப்பாவனை நீருடன் வீட்டுத்தோட்டங்களை முன்னெடுப்பது சிறப்பானது. வீட்டிற்கு அண்மையில் உள்ள துரவுகள் திறந்த கிணறுகள் ஆகியவற்றின் நீரினையும் சாத்தியமானவிடத்து சேகரிக்கப்பட்ட மழைநீரினை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்.

12. உங்கள் வீட்டுத்தோட்ட முன்னெடுப்பகளில் சிறப்பான அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்காக பொருத்தமான துறைசார் நிபுணர்கள் மற்றும் ஊரில் வாழும் மூத்தோர்களின் அறிவினையும் அனுபவத்தையும் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டா?

ஆம் நிச்சயமாக. இவ் வீட்டுத்தோட்டத் திட்டத்தின் முதன்மை நோக்கம் பேண்தகு தன்மை கொண்ட உணவுப்பாதுகாப்புத்திட்டம். இங்கு பேண்தகு தன்மை என்பது உள்ளுர் இயற்கைச்சூழல் பண்பாடு அறிவும் அனுபவமும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியதே.

13. பழங்கள் மரக்கறிகளுடன் மருத்துவ மூலிகைகளையும் வீட்டுத்தோட்டங்களில் பயிரிட்டால் போசாக்கு சமனிலையான உணவுடன் சிறிது வருமானமும் கிடைக்கலாம். இவ்விடயத்தை எவ்வாறு மக்களுக்கு அறிவூட்டப்போகின்றீர்கள்?

இவ்விடயம் தொடர்பாக இத்துறையில் சிறப்பான அறிவும் அனுபவமும் கொண்டவர்களின் உதவியுடன் ஒரு கைநூல் ஒன்றினைத் தயாரிக்கும் திட்டமும் உண்டு.



14. உங்களுடைய குறுங்கால மற்றும் நீண்டகால திட்டங்கள் யாது?

பட்டினித்தவிர்ப்பு என்பதிலிருந்து குடும்பங்கள் சார்ந்த உணவுப்பாதுகாப்பு என்ற நிலைக்கு நகருவதே இவ்வீட்டுத் திட்டத்தின் குறிக்கோளாகும்.
இதன்தொடர்ச்சியாக உள்ளுரின் விவசாயத்தையும் உற்பத்திகளையும் வலுவூட்டவேண்டியுள்ளது. வடக்கு கிழக்கின் விவசாயிகள் சந்தையின் விலைத்தளம்பல்காளலும் இடைத்தரகர்களின் சுரண்டலினாலும் போதிய களஞ்சியப்படுத்தபபடுத்தல் மற்றும் பதனிடல் வசதிகள் இன்மையாலும் மிகவும் பாதிக்கப்பட்டு களைப்படைந்து விவசாயத்துறையினைவிட்டு வெளியேற விரும்புகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. எனவே வடக்கு கிழக்கு விவசாயத்தினை பெறுமதிசார் விவசாயமாக மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ்மக்களின் கல்வியறிவு வீதம் உயர்நிலையில் காணப்படுவதாக அறிக்கைகள்ட குறிப்பிட்டாலும் தமிழ்மக்களின் பொருளாதாரம் அறிவு சார் பொருளாதாரமாக மாற்றம் பெறவில்லை. அதிகளவு வீதத்திலான பட்டதாரிகளும் கற்றோரும் நிரந்தர மாதாந்ந ஊதியம் தரும் இளைப்பாற்றுச்சம்பளத்துடன் கூடிய அரசாங்க உத்தியோகங்களே தங்கள் வாழ்நாள் தஞ்சமாக அடிமைப்பட்டுள்ளனர்.

இவர்களது உழைப்பினால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியோ வருமானமோ அதிகரிக்கப்படப்போவதில்லை. அவர்களது அறிவுக்கு எந்தவித பேரம்பேசல் பெறுமதியும் கிடைக்கப்போவதில்லை.

தமிழ்மக்களின் அறிவுசார் பொருளாதாரத்தையும் தொழிலாண்மையினையும் மூலதனவாக்கத்தினையும் தொழில்நுட்பதுறையின் தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பி நாம் வாழும் தேசத்தின் தவிர்க்கமுடியாத பலமான தந்திரோபாய காரணிகளாக தமிழ்மக்களை கட்டியெழுப்பவேண்டும்.

வெறுமனே கல்வியும் தொழிற்றினனும் கொண்ட உழைக்கும் படையினரில் ஒருவனாகவோ ஒருத்தியாகவோ அல்லது ஒரு குடும்ப அலகாகவோ இல்லாமல் பலமான சமூகத்தின் திரண்ட சக்தியின் ஒரு கூறாகஇலங்கைத் தீவின் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனையும் பலம் பெறச்செய்யவேண்டும்.

15. உங்கள் முன்மொழிவினை நிறைவேற்றும் திட்டங்களில் முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் உள்ளுர் வளங்களை பயன்படுத்துவதில் புத்தாக்கத்தையும் காட்டும் பங்காளிகளை பாராட்டி ஊக்குவிப்பதற்கு தங்களிடம் சிறப்பான முன்மொழிவுகள் யாதும் உண்டா?

அத்தகைய சிந்தனை உண்டு. பொருத்தமான ஆலோசனைகளும் ஆதரவும் வரவேற்கப்படுகிறது.

16. தங்களது குறுங்கால மற்றும் நீண்டகால திட்டங்களில் புலம்பெயர் தமிழ்ச்சமுகம் எத்தகைய பங்களிப்பினைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

புலம்பெயர் தழிழ்ச்சமூகம் முதலில் தனது கடந்தகாலத்தின் வெறுமையிலிருந்தும் விரக்தியிலிருந்தும் விடுபடவேண்டும். குழுநிலைகளும் முரண்பாடுகளும் ஒரு கட்டத்திற்கு மேல் எவ்வித பயனும் தரப்போவதில்லை என்ற உண்மையின் அடிப்படையில் தாயகமக்களை தந்திரோபாய அடிப்படையில் வலுவூட்டி கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.
அவர்களது ஆர்வம் அனுபவம் அறிவு ஆற்றல் புலம்பெயர்தேசங்களில் பெற்றுள்ள நன்மதிப்பும் செல்வாக்கும் என பலபரிமாணங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட முறைமையில் பங்களிக்க முன்வரவேண்டும்.

“We can’t stop the waves: but we can learn to surf.” -Jon Kabat Zinn

நேர்காணல்: சிவதாசன்

Print Friendly, PDF & Email
PLEASE SHARE THIS CONTENT

https://www.facebook.com/permalink.php?id=109700969127539&story_fbid=2869172439847031

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply