சட்டங்களுக்கு உட்பட்ட குடியுரிமை என்பதே ஒரு அடிமைத்தனம்தானே!

சட்டங்களுக்கு உட்பட்ட குடியுரிமை என்பதே ஒரு அடிமைத்தனம்தானே!

இந்நாட்டில் 1948 முதல் இந்திய வம்சாவளி சமூகம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்கள், 2009ம் இலக்க நாடற்றோருக்கான விசேட திருத்தச் சட்டத்துடன் காலாவதியாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில் இவை நீறுபூத்த நெருப்பாகவே உள்ளன. எதிர்காலத்தில் பதவிக்கு வருவோர், வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராக இச்சட்டங்களைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியமுள்ளது. எனவே இச்சட்டங்களை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளது. இலங்கைப் பிரஜைகள் அனைவருமே இலங்கை குடிகள் என்று பிரகடனப்படுத்தினால் மட்டுமே மலையகத் தமிழ் சமூகம் சமத்துவ சமூகமாக மாற முடியும். எனவே இப்பழைய பிரஜா உரிமை சம்பந்தமான சட்டங்கள் முற்றாக நீக்கப்பட வேண்டும்.  இவ்வாறு தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் மு. சிவலிங்கம்.

இவர் சிறந்த ஒரு படைப்பாளர், சிந்தனையாளர் என அறியப்பட்டிருந்தாலும் இவரது அரசியல் வேர் பலருக்குத் தெரியாது. மலையக மக்கள் முன்னணியை பெ. சந்திரசேகரனுடன் இணைந்து தோற்றுவித்தவர்களில் பாடசாலை ஆசிரியரான சிவலிங்கமும் ஒருவர். தொழிலைக் கைவிட்டு முழுநேர அரசியலுக்கு வருவது, பொலிஸ் தழும்புகள் ஏற்று, மாகாணசபை உறுப்பினராகவும், மத்திய மாகாணசபை உதவித் தலைவராகவும், கட்சியின் செயலாளர் நாயகமாகவும் பணியாற்றியவர். ஒரு சமயத்தில் மலையக மக்கள் முன்னணியில் புல்லுருவிகளும் வியாபாரிகளும் ஊடுருவி மலிந்துபோனதால் அரசியலைக் கைவிட்டு ஒதுங்கியவர் இந்த சிவலிங்கம். பஞ்சம் பிழைக்க வந்த சீமை என்ற மலையக வரலாற்று நாவலை எழுதி புகழும், பரிசுகளும் பெற்றிருக்கும் சிவலிங்கம், இன்றைக்கும் அதே அரசியல் வீரியத்துடன்தான் இருந்து வருகிறார். 


சட்டங்களுக்கு உட்பட்ட குடியுரிமை, திணைக்களத்துக்கு உட்பட்ட ஆள்பதிவும் நீக்கப்பட வேண்டும் என்பது அவரது வாதம். புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை அரசு கோரியபோது தனிநபர் பிரேரணையாக அவர் சமர்ப்பித்த யோசனைகளில் இதை அவர் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழா்கள் தங்களை மலையகத் தமிழா் என்று  தங்களுக்குள்ளேயே வழமைப்படுத்திக் கொண்டாா்களே தவிர, அதை தேசிய இன  அடையாளமாக யாப்பில் பதிவு செய்துகொள்வதற்கு இன்றுவரை எந்தவொரு மலையகக்  கட்சியும் சட்டத்தை நோக்கிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இதுகுறித்த  சிந்தனை எதுவும் இல்லாமல் மலையக அரசியல் தலைமைகள் மற்றும் சமூக நலனில்  அக்கறையுள்ள அமைப்புகள் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

பிரஜா உரிமை தொடர்பான  பழைய சட்டங்கள் தொடர்ந்து இருக்கும்பட்சத்தில் 21 ஆம் நூற்றாண்டிலும் குடியுரிமையற்ற  மக்களாக சட்டத்துக்குட்பட்ட குடியுரிமையுள்ள மக்களாக அடையாளப் படுத்துவது  சர்வதேச ரீதியில் வெட்கமானதும், ஐ.நா. சாசனத்துக்கு எதிரான மனித உரிமை  மீறல் செயல் எனவும் குரல் எழுப்பப்பட முடியும் என்கிறார் மு.சி.

1948 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்கப் பிரஜா உரிமைச் சட்டம், மலையகத்  தமிழரின் குடியுரிமையைப் பறித்தது. 1946 ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழு  தயாரித்த அறிக்கையும் இச்சட்டத்தினால் நிராகரிக்கப்பட்டது. இச்சட்டத்தால்  இந்திய வம்சாவளி தமிழர்கள் நாடற்றவராகினர். இதன் பின்னர் 1949 ஆம் ஆண்டு 48  ஆம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டு  குடியுரிமையை இழந்தவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.  

1949 ஆம் ஆண்டு மூன்றாம் இலக்க இந்திய பாகிஸ்தானியர்  குடியிருப்பாளர் (பிரஜா உரிமை) சட்டம் இயற்றப்பட்டு, அடைப்புக்குறிக்குள்ளே ‘பிரஜா உாிமை’ என குறிப்பிடப்பட்டது, இச்சட்டத்தின்படி நாட்டின்  குடிகளாகவன்றி, குடியிருப்பாளராக இம்மக்கள் கணிக்கப்பட்டனர்.  1964  ஒக்டோபர் 3 ஆம் திகதி உருவாக்கப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தப்படி  5,25000 பேர்  இந்தியாவுக்குச் செல்ல வேண்டுமெனவும், 3,00000 பேருக்கு இலங்கை  குடியுரிமை வழங்கப்படுமெனவும் மிகுதி 15,0000 பர் குறித்து பின்னர்  ஆராயப்படும் என்ற வகையில் சட்டம் ஒப்பந்தமாக உருவாகியது. அன்று 9,75000 பேர்   இந்திய வம்சாவளி மக்களின் குடிசனத்தொகை என கணக்கிட்டிருந்தார்கள். 

1967 ஆம் ஆண்டில் 14 ஆம் இலக்க இலங்கை – இந்திய உடன்படிக்கை  அமுல்படுத்தும் சட்டம் உருவாகியது. இச்சட்டத்துக்கிணங்க 4 இலட்சம் பேர்   இந்தியாவுக்கு விண்ணப்பித்தனர். 1971 ஆம் ஆண்டில் 43 ஆம் இலக்க இலங்கை –  இந்திய அமுல்படுத்தும் ஒப்பந்தம் திருத்தச் சட்டப்படி 7 பேர் இந்தியா  செல்லும்போது 4 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படும் என்ற சட்டம்  செயல்பட்டது. 1974 முதல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தப்படி எஞ்சிய 15,0000 பேரில், 75,000 பேர் இந்தியாவுக்கும் 75,000 பேர் இலங்கைக்கும்  பதிவாக்கப்படும் என சட்டம் பிறப்பித்தது. 

இந்தச் சட்டங்களுக்குப் பின்னர் 1988 ஆம் ஆண்டு 39 ஆம்  இலக்கச் சத்தியக் கடதாசி மூலம் பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்  உருவாக்கப்பட்டது. அதன் பின்னர்  2003 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இந்திய  வம்சாவளியினருக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்டமும் உருவாகியது. பின்னர்  2009  ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு பிரஜா உரிமை  வழங்கல் (திருத்தச்) சட்டமும், 2009 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க நாடற்றோருக்கு  விஷேடத் திருத்தச் சட்டம் என பிரஜா உரிமை சட்டங்கள் முற்றுப்பெற்றன. இச்  சட்டங்கள் அனைத்தும் இன்றுவரை சட்டப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் நீக்கப்படவில்லை. அவை நீறுபூத்த நெருப்பாக  உயிரோடுதான் இருக்கின்றன. 

அரசியலமைப்பின் பிரஜா உரிமை பிரகடனத்தில் ‘பிரஜா உரிமைச்  சட்டத்துக்கிணங்க பதிவு செய்யப்பட்ட பிரஜைகள்’ என்ற பதம் நீக்கப்பட்டு,  அனைத்து மக்களும் ‘வம்சாவளி பிரஜைகள்’ என்ற பதத்துக்குள்ளேயே உள்ளடக்கப்பட  வேண்டும். யாப்பிலிருக்கும் இந்தப் பிரகடனம் பதிவுப் பிரஜை என்ற  சட்டத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பிரஜைகளுக்கு ஒரு ஆறுதல் வசனத்தையும்  குறிப்பிட்டுள்ளது. அதாவது, பதிவு பிரஜைகளுக்கும், வம்சாவளி  பிரஜைகளுக்கும் இடையே எவ்வித வேறுபாடுகளும் கிடையாது என குறிப்பிடுகின்றது.  அப்படியாயின் ஏன் இந்த இரண்டு விதமான பிரஜைகள் அந்தஸ்தை அடையாளப்படுத்த  வேண்டும் என்பது பதிவுப் பிரஜைகளின் கேள்வியாகும்.

1949 ஆம் ஆண்டு 3ஆம்  இலக்க இந்திய – பாகிஸ்தானிய வதிவிட சட்டத்தின்போது, பதிவு  செய்யப்பட்டவர்கள் மட்டுமே பதிவுப் பிரஜைகள் ஆவர்.  அவர்களது வழித்  தோன்றல்கள் பரம்பரை பரம்பரையாக பதிவுப் பிரஜைகளாக இருப்பர்  என எதுவும்  இந்தச் சட்டம் சொல்லவில்லை. ஆகவே இந்த சட்டம் அமுலில் இருக்கும் வரை புதிய  தலைமுறைகளும் பதிவுப் பிரஜைகளாக கணிக்கப்பட வேண்டியிருக்கும் என்பதுடன்  இந்த சட்டம் தொடர்ந்து தேவையா என்பதும் இம்மக்களின் கேள்வியாகும்.  இச்சட்டங்கள் புதிய யாப்பு சீர்திருத்தத்தில் நீக்கப்பட்டு விட்டால் இக்  கேள்விகள் அவசியப்படாது போகும். 

நடைமுறையிலிருக்கும் ‘இந்திய வம்சாவளி ஆள்பதிவுத் திணைக்களம்’  பதம் நீக்கப்படல் வேண்டும்.

இந்திய வம்சாவளி ஆள்பதிவுத் திணைக்கள  ஆணையாளர் பதவியும் நீக்கப்படல் வேண்டும். இந்த திணைக்களத்துக்கும்,  திணைக்கள ஆணையாளருக்கும் உட்பட்டிருக்கும் குடிமக்கள் நேரடியான நாட்டின்  பிரஜைகளாக அல்லாமல், இரண்டாந்தர நிலைக்குள்ளாக்கப்பட்டவர்களாக, திணைக்கள  பிரஜைகளாக, திணைக்கள ஆணையாளருக்குட்பட்ட பிரஜைகளாக இருக்கும் பட்சத்தில்  இவர்களது குடியுரிமையை எப்படி அந்தஸ்து படுத்துவது? எப்படி அடையாளப்  படுத்துவது? என்பதும் இந்திய வம்சாவளி ஆள்பதிவுத் திணைக்களத்துக்குட்பட்ட  பிரஜைகளின் இன்னுமொரு சட்டக் கேள்வியாகும். புதிய யாப்பு சீர்திருத்தத்தில்  இப்படியொரு திணைக்களம் தேவையா என்பது மனித உரிமைக்கான இன்னுமொரு  கேள்வியாகும்.  

எமது தேசிய அடையாளம் ‘மலையகத் தமிழர்’ என்று தேசிய  இனப்பதிவேட்டில் பதிதல் வேண்டும். எங்களை நாட்டிலிருந்து அந்நியப்படுத்தும் ‘இந்தியத் தமிழர்’ அல்லது ‘இந்திய வம்சாவளியினர்’  என்ற அடை மொழிப்பதம்  முற்றாக நீக்கப்படல் வேண்டும் புதிய யாப்பு சீர்திருத்தத்தில் நிலத்துடன்  வாழும் கிராமத்தவர் என்ற கலாச்சாரத்துக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்பட்டு,  பெருந்தோட்ட முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார் மு. சிவலிங்கம்.    

மலையகத் தமிழரின் குளறுபடியான குடிசனத்தொகை புள்ளி விபரம்  (1981 – 2011) மீள்  பரிசீலனை செய்யப்பட்டு ஆள்பதிவு திணைக்கள பதிவேட்டில்  உறுதி செய்தல் வேண்டும். இந்த மக்களின் தேசிய அடையாளம் தளம்பல் நிலையில்  இருப்பதால், இந்தியத் தமிழர் என்றும், இலங்கைத் தமிழர்  என்றும்  குடிசனத்தொகை பதிவேட்டில் பதியப்பட்டுள்ளன. இறுதியாக எடுக்கப்பட்ட  கணக்கெடுப்பின்படி 8 இலட்சத்து, 22 ஆயிரம் பேரே பதிவாக்கப்பட்டுள்ளனர். இது  முற்றிலும் பிழையான கணக்கெடுப்பாகும்.

ஆகவே இந்த நிலைக் கருதி, புதிய  யாப்பு சீர் திருத்தத்தில் இந்த மக்கள் மலையகத் தமிழர் அல்லது இலங்கைத்  தமிழர் என்ற தேசிய அடையாளத்தை பதிவு செய்துகொள்ளல் வேண்டும்.  அல்லாவிடில் உலக சனத்தொகை கணிப்பீட்டில் கூட இந்த மக்களின் உண்மையான  அடையாளம் உள்வாங்கப்படாமல் போகும். 

மலையகத் தமிழர்கள் தங்கள் தேசிய இருப்பை நிலை நிறுத்திக்  கொள்வதற்கு சுய விவசாயத்துக்கான நிலவுடமையாளராகக் காணி உரிமையை, காணி  சீர்திருத்தச் சட்டத்துக்குள் உள்ளடக்கப்படல் வேண்டும். பெருந்தோட்ட மக்கள்  நிலவுரிமையற்று, தோட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமான தொடர் முகாம்  வசிப்பிடங்களில் வாழ்வதால், கிராம மக்களாக அரசினால் அங்கீகரிக்கப்படவில்லை. 

அவர்களின் வாழ்விடம் கிராம மயமாக்கப்படவில்லை. காலணித்துவ ஆட்சியிலிருந்து  இன்று வரை பெருந்தோட்டத்துறை என்று ஒரு நாட்டுக்குள்ளேயே ஒதுக்கி  வைக்கப்பட்டிருக்கும் சமூகப் பிரிவினராக தனிமைப் படுத்தப்பட்டிருப்பதால்,  அவர்கள் உள்ளூராட்சி நிர்வாகத்துக்குள் உள் வாங்கப்பட வில்லை. அரசின் பொது  நிர்வாக நிதி அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக  சுற்றுச் சூழல், உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், தேசிய நீரோட்ட உறவு எல்லாமே  துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே, இந்த மக்களுக்கு பண்ணை விவசாயம்  என்னும் சுயதொழில் வாழ்க்கையில் ஏனைய மக்களைப் போன்று வாழ்வதற்கு அரச   காணி  வழங்கப்படல் வேண்டும். ‘வீடமைப்பு எனும் ஏழு பேர்ச்சஸ் வசிப்பிட  நிலத்திட்டம்’ என்ற ஒரு பாரதூரமான பிழையான வீடமைப்புத் திட்டம்  நிராகரிக்கப்பட வேண்டும். புதிய யாப்பு சீர்திருத்தத்தில் நிலத்துடன்  வாழும் கிராமத்தவர் என்ற கலாச்சாரத்துக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்பட்டு,  பெருந்தோட்ட முறை ஒழிக்கப்படல் வேண்டும். 

http://www.vaaramanjari.lk/2017/02/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply