3.5 உலக நோக்கில் சமத்துவச் சிந்தனை

3.5 உலக நோக்கில் சமத்துவச் சிந்தனை

மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதில்லை என்ற நிலை உருவாக வேண்டும். சமத்துவம் நிலவ வேண்டுமென்றால் விடுதலை அடையவேண்டும். அதனால்தான் விடுதலைக் கோட்பாட்டை அழுத்தமாகக் கொண்ட பாரதி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிறார். ஏற்றத் தாழ்வு நிறைந்த உலகை மாற்றியமைக்க வேண்டும் என்று வேட்கை கொள்கிறார். உருஷ்யாவின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை. மேலும் ‘ஏழைகளே இல்லாமல் செய்வது உசிதம்’; ஒரு வயிற்று ஜீவனுக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது என்கிறார் பாரதி.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனிஉண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனிஉண்டோ?

(பாரத சமுதாயம், சரணங்கள்-1)

(நோக = வருந்த)

என்று வினவி,

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும்
இந்தியமக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும்
இந்நாட்டு மன்னர்,

(பாரத சமுதாயம், சரணங்கள் – 4)

எனப் பாடுகிறார்.

3.5.1 தனிமனிதச் சமத்துவம்

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்று ஏதுமில்லை; எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் இந்திய நாட்டு மக்கள்; எல்லோரும் சமம்; எல்லோரும் மதிப்புடையவர்கள்; எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள் தாம். ஏனென்றால் விடுதலை பெற்ற மனிதன் யாருக்கும் அடிமையில்லை; யாருடைய ஆளுகையிலும் அவன் இல்லை. ஆளப்படுவோரும் ஆள்வோரும் இல்லையாதலால் எல்லோரும் சமம் என்கிறார்.

உடம்பின் நிறம் அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தது. அதனால் நிற வேறுபாடு மனித வேறுபாட்டுக்கு இடமளிக்கக் கூடாது. இக்கருத்தை ‘முரசு’ கவிதையில்

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமையில்லை
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

(முரசு. 17)

என்பதோடு அமையாமல்

நிகரென்று கொட்டு முரசே! – இந்த
நீணிலம் வாழ்ப ரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே! – பொய்மைச்
சாதி வகுப்பினை எல்லாம்

(முரசு. 18)

(நிகர் = சமம், நீணிலம் = நீள் நிலம்; பரந்த உலகம், தகர் = அழி, போக்கு)

என்றும் கூறுகிறார்.

பொய்யான சாதி, சமய வேறுபாடுகள் தகர்ந்து போனால் எல்லோரும் சமமாக ஆகலாம். இதற்கு எது அடிப்படை? அன்புதான். அன்பு எங்கு வேரோடி வளம் பெறுகிறதோ அங்கு ஏற்றத்தாழ்வுக்கு ஏது இடம்? அதனால் அன்பென்று கூறி முரசு கொட்டுகிறார்.அது எதை முழங்குகிறது? உங்களால் யோசிக்க முடிகிறதா? சிந்தித்துப் பாருங்களேன்! சரி, பாரதி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். மக்கள் அத்தனை பேரும் நிகர் என்று முரசு கொட்ட வேண்டுமாம். சமத்துவத்தை விழையும் பாரதியின் உள்ளம் மேலும்

அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாம்
சிறியாரை மேம்படச் செய்தால் – பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

(முரசு, 28)

என்றும் கூறுகிறார்.

(மேம்பட = உயர்வு அடைய)

இப்படி வாழ்ந்தால் சமத்துவம் எப்படி வராமற் போகும் என்று கேட்கிறார். வாழ்க்கை அப்படி அமைந்தால் தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் என்று கூறுகிறார். எந்த இடத்தில் வேற்றுமை ஏதுமின்றிச் சமத்துவம் நிலவுகிறதோ அங்குத் தெய்வம் வாழும்; அச்செயலை மேற்கொள்வாரைத் தெய்வம் வாழ்த்தும் என்கிறார்.

3.5.2 பொருளாதாரச் சமத்துவம்

சோவியத் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சமத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றைப் பாரதி பெரிதும் பாராட்டினார். அதைப்போல நாமும் அந்நிலை பெற வேண்டுமென்ற ஏக்கத்தை வெளியிடுகிறார் பாரதி.

நாட்டு விடுதலையை மட்டுமன்றி, பொருளாதார ஏற்றத்தாழ்வினின்றும் விடுபட வேண்டும். எல்லோரும் எல்லாம் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர் பாரதி. அதனால் உருஷ்யாவின் புரட்சி பெரும் மகிழ்ச்சியைத் தந்ததோடு எல்லா இடங்களிலும் அது பரவ வேண்டுமென்று ஆசைப்படுகிறார் பாரதி.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகை மாற்றியமைக்க வேண்டுமாயின் பொருளாதாரச் சமத்துவம் நிலவ வேண்டும். இல்லையென்றால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே பெரிய இடைவெளி நேர்ந்து விடும் என்கிறார் பாரதி.

 நவீன ஐரோப்பியச் சித்தாந்தம்

மனித ஜாதி முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி மானிடருக்குள்ளே இயற்கையாலும் மானிடர் தாமாகவே ஏற்படுத்திக் கொண்ட அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்டாலும், இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிக சௌகரியங்களும், பலருக்குக் குறைந்த சௌகரியங்களும், சிலருக்கு மதிப்பும், பலருக்கு அவமதிப்பும் சிலருக்கு லாபங்களும் பலருக்கு நஷ்டங்களும் ஏற்படுத்தியிருப்பது தவறு என்பதும், ஒவ்வொருவரும் சகோதரரைப் போல் பரஸ்பர அன்புடனும் மரியாதையுடனும் வாழ்வதே நியாயம் என்பதும் நவீன ஐரோப்பியச் சித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமான சித்தாந்தமாகும்

என்று பாராட்டும் பாரதியின் உள்ளத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

பொருளாதார ஏற்றத்தாழ்வை அவமானத்துக் குரியதாகக் கருதுகிறார். அதனைத் தகர்த்த, சோஷலிசத்தை உருவாக்கியதற்காக உருஷ்யாவை அவர் பாராட்டுகிறார். செல்வத்தால் பெருகிய ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டுமென்ற கொள்கை ஐரோப்பாவில் மும்முரமாகப் பரவுவதாக உணர்ந்து மகிழ்கிறார்.

 ஏழைகளுக்கு நியாயம்

உலகத்துச் செல்வர் சகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டெடுத்துக் கொண்டு பெரும்பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால் ‘அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?’

என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்கிறார்.

பொருளாளிகள் அன்பையும் சமத்துவ நினைப்பையும் கைக்கொண்டால் உலகத்தில் அழிவுகள் நேராமல் காக்கலாம் என்று எச்சரிக்கிறார்.

பொருளாதாரச் சமத்துவம் கூட வன்முறையால் வருவதை எதிர்க்கிறார்.

3.5.3 ஆண், பெண் சமத்துவம்

ஆண், பெண் சமத்துவத்தைப் பற்றிப் பல்வேறு இடங்களில் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறார் பாரதி.

பெண்ணை அடிமை என்று கருதாதே. ஆத்மாவும் சக்தியும் ஒன்று; ஆணும் பெண்ணும் சமம்’ என்பார். இன்னொரு இடத்தில் ‘ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும் ஆத்ம குணங்களும் உடையோராதலால் பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக் கருதுதல் பிழை’ என்று குறிப்பிடுகிறார்.

இதை உணர்ந்து செயல்படாத மக்களை நோக்கி,

‘ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப்பெரிது’ (பாரதியார் கட்டுரைகள்: 113) என்கிறார். இதற்கென்ன காரணம்? பாரதியே விளக்குகிறார்.

பலம் குறைந்த உயிரைப் பலம் மிகுந்த உயிர் துன்பப்படுத்தலாம் என்ற விதி எல்லா உயிர்களிடத்தும் காணப்படுகிறது. மனிதர்கள் அதை எல்லையில்லாமல் செய்கிறார்கள் என்கிறார்.

மேலும் சமத்துவத்தை வேண்டிப் பெண்களைத் தர்மயுத்தம் தொடங்கும்படிக் கூறுகிறார். “அடிமைப்பட்டு வாழமாட்டோம்; சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம் என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். எல்லா வகையிலும் உனக்கு சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமென்றால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதை பண்ணித் தின்று கொண்டிருப்பேன்” (பாரதியார் கட்டுரைகள் : பக்.258) என்று அறப்போராட்டத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

ஆண், பெண் சமத்துவத்தை மிகவும் வலியுறுத்த என்ன காரணம்?

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில்
ஓங்கி வையம் தழைக்கும்

(புதுமைப்பெண், 3)

(நிகர் = சமம், ஓங்கி = விளங்கி)

என்கிறார்.

ஆண், பெண் சமத்துவம் பற்றி மிளகாய்ப்பழச் சாமியார் என்ற ஒரு கற்பனைப்பாத்திரம் (பாரதியாரின் கதையில் வருவது) கூறுவதுபோல பாரதி கூறுவதும் நம் கவனத்தை ஈர்க்கிறது.

ருஷியாவிலே கொடுங்கோல் சிதறிப் போய் விட்டதாம். ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம்

உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண், பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை; அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை. பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்கிறேன்.

பூமண்டலத்தில் துக்கம் ஆரம்பமாகிறது. ஆணும் பெண்ணும் சமானம். பெண் சக்தி – பெண்ணுக்கு ஆண் தலைகுனிய வேண்டும். பெண்ணை ஆண்அடித்து நசுக்கக் கூடாது. இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்’.

‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் சமானமாகவே கருதப்படுவார்கள். உருஷ்யச் (நாட்டு) சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரிகத்தின் கருத்தை அனுசரித்தல் மிக மிக மிக மிக அவசரம்’.

அவசரம் என்பதற்கு முன் எத்தனை மிக! பாரதி ஏன் இப்படிக் கூறுகிறார்? எண்ணிப் பாருங்களேன்!

http://www.tamilvu.org/courses/degree/c011/c0112/html/c0112235.htm

 


About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply