இலங்கையின் ‘ஒரே நாடு ஒரே இனம்’ கொள்கை… தமிழர்களுக்கு அடுத்த பேரிடி!

இலங்கையின் ‘ஒரே நாடு ஒரே இனம்’ கொள்கை… தமிழர்களுக்கு அடுத்த பேரிடி! 

நக்கீரன் பதில்! 

 ஜெ.அன்பரசன்

 செ.விவேகானந்தன்

கருத்தரங்கில் தலைவர்கள்...

Chennai: 

லங்கையில் நடந்த தமிழர்களின் போராட்டம் பற்றியும், அந்தப் போராட்டத்தின் முடிவில் இலங்கை அரசு செய்த முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றியும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஐ.நா. சபையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக விடுதலை வேண்டி இன்னமும் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தாலும், இன்றுவரை தமிழர்களுக்கான நீதியும், வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டுவருகிறது. சிங்கள ராணுவத்தினரின் பிடியில்தான் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிங்களவர்கள் மட்டுமே வாழும் நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்று பிற நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு வருகிறது. அதன் முக்கியச் சாராம்சம்தான் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் ‘இலங்கையின் புதிய அரசியல் யாப்பு’. 

பதில்: தமிழ்நாட்டு  அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், தமிழ் உணர்வாளர்கள் தமிழீழ மக்கள் மீதும் அவர்களது போராட்டம் மீதும் காட்டும் அக்கறைக்கு நாம் நன்றி சொல்ல சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.  போரின் இறுதிக் கட்டத்தில் மூன்று மணித்தியாலம் உண்ணா நோன்பிருந்த கலைஞர் கருணாநிதியை நாம் மறந்து விட்டோம். போர் என்றால் பொதுமக்கள்  சாகத்தான் செய்வார்கள் என்று திருவாய்மலர்ந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவையும் மறந்து  விட்டோம். பொறுத்த தருணத்தில் கைவிட்டுவிட்டு  2011 இல் தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என்பதையிட்டு வடக்கிலும் கிழக்கிலும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். இது கண்கெட்டபின் சூரிய வணக்கம் போல் இருந்தது.

இப்போது ஒரு நியாயமான,  நீதியான, இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய  தீர்வை எட்ட தமிழ்மக்களால் ஒருமுறைக்கு இருமுறை தமிழ்மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட ததேகூ அரசோடு சேர்ந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  இப்போது வெளிவந்துள்ள அறிக்கை அரசியல் யாப்பு சபையின் வழிகாட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப் பட்ட யோசனைகளும் பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை மட்டுமே. இந்த இடைக்கால அறிக்கை பற்றி நாடாளுமன்றம் கடந்த ஒக்தோபர் 30 தொடங்கி 5 நாள்கள் தொடர்ச்சியாக விவாதித்துள்ளது. இனிமேல்தான்  அரசியல் யாப்பை எழுத வேண்டும். அதற்கு முன் மேலும் பல கலந்துரையாடல்கள் இடம்பெற இருக்கிறது.

1972, 1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழர்தரப்பு கலந்து கொள்ளவில்லை. 1972 அன்றைய தமிழ் அரசுக்கட்சி முன்வைத்த இணைப்பாட்சி யோசனைகளை அரசு தரப்பு எற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால் அரச யாப்பு பேரவைல் இருந்து தமிழ் அரசுக் கட்சி வெளியேறியது. ஆனால் இம்முறை தமிழர் தரப்பு (ததேகூ) முழுமையாகப் பங்கு கொள்கிறது. 21 நா.உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் யாப்பு பேரவையின் வழிகாட்டுக் குழுவில் ததேகூ இன் தலைவர் திரு இரா. சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் ம.ஆ. சுமந்திரன் இடம் பெற்றுள்ளார்கள்.

ஒருமித்த தேசம்’ என்று உருவாக்குவதுதான், அதாவது ‘ஒரே நாடு ஒரே இனம்’ என்ற கொள்கைதான் புதிய அரசியல் யாப்பின் நோக்கம். இன்னும் சொல்லப்போனால், இன அழிப்பைச் சட்டபூர்வமாக்கி, மிச்சமிருக்கும் தமிழர்களையும் காவு வாங்கும் திட்டம்தான் இந்தப் புதிய அரசியல் யாப்பு. அதாவது, இனி அங்கு தமிழர்கள், சிங்களவர்கள் என்ற இரு இனங்கள் கிடையாது. ஒட்டுமொத்தமாகச் சிங்களவர்கள் மட்டுமே. இந்த யாப்பின் முக்கியச் சாராம்சம் தமிழர்களின் நிலங்களைச் சிங்கள அரசு எந்தவித காரணமும் இல்லாமல் ராணுவ விவகாரங்களுக்காகக் கையகப்படுத்திக்கொள்ளலாம்.

பதில்: ‘ஒருமித்த தேசம்’ என்று உருவாக்குவதுதான், அதாவது ‘ஒரே நாடு ஒரே இனம்’ என்ற கொள்கைதான் புதிய அரசியல் யாப்பின் நோக்கம் என்பது பிழையான கருத்து. இலங்கை ஒருமித்த நாடு நாடு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்பதே அதன்  பொருள். இவர்கள்  சொல்வதுபோல  ‘ஒரே நாடு ஒரே இனம்’ என்பது அதன் பொருள் அல்ல. 

இனி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பை யோசிக்கக் கூடாது. அனைத்து மக்களையும் ஒரே மதத்தின்கீழ், ஒரே தேசத்தின்கீழ் கொண்டுவருவது. இலங்கை அரசின் இந்தப் புதிய அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கடந்த 18-11-2017 அன்று மேற்கு மாம்பலத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயம், பேராசிரியர் ஜெயராமன், இயக்குநர் கௌதமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை ‘அறிவாயுதம் – தமிழ்த் தேசிய ஆய்விதழ்’ ஏற்பாடு செய்திருந்தது.

பதில்: அனைத்து மக்களையும் ஒரே மதத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. பெரும்பான்மை மக்களின் பவுத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உறுப்புரை 1972 ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் யாப்பிலும் பின்னர் 1978 இல் இயற்றப்பட்ட யாப்பிலும் காணப்படுகிறது. இது புதிதாகக் கொண்டுவரப்படவில்லை. இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே ததேகூ இன் கோரிக்கை. ஆனால் தமிழர்களது தாயக மண்ணில் உள்ள மாகாணங்களுக்கு அதியுச்ச அதிகாரங்கள் தரும்பட்சத்தில் பவுத்தத்திற்கு முதன்மைத் தானம் கொடுக்கப்பதை நாம் எதிர்க்கவில்லை என்பதே எமது நிலைப்பாடு.

தமிழ் மக்கள்

கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய வைகோ, ”ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் இந்த யாப்பு கருத்தரங்கு...கண்டிக்கத்தக்கது. இந்த அரசியல் சட்ட யாப்பு, இலங்கை நாடாளுமன்றத்தின் உள்ளேயே கொளுத்தப்பட வேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதையே சிங்களவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ‘ஒரே மதம்… ஒரே மொழி’ என்ற இந்தச் சட்டம், தமிழர்களை அழித்துவிடும். இந்த யாப்புக்கு இந்திய அரசு துணை நிற்கிறது. இந்திய அரசு தொடர்ச்சியாகத் தமிழர்களுக்குத் துரோகம் செய்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சியைவிடத் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மோடியின் அரசு தமிழர்கள் அனைவரையும் காவு வாங்க துடித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தேசியம் என்று ஒன்று கிடையாது. பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு; அவ்வளவுதான். அது, எப்போது வேண்டுமானாலும் பிரியும்” என்று பொங்கினார்.

பதில்: இப்படிப் பேசுவதுதான் வைகோ அவர்களுக்குரிய வழக்கமான பாணி. இப்படிப் பேசாவிட்டால்தான் எமக்கு வியப்பாக இருக்கும். தமிழினம் மட்டுமல்ல சிங்கள இனமும் ஒரு தேசிய இனம் என்பது ஒப்புக்கொள்ளப்படவில்லை. இந்த இடைக்கால அறிக்கை (சட்டம் அல்ல)  “ஒரே மதம் …..ஒரே இனம்” என்று எங்கேயும் சொல்லவில்லை. தமிழ் ஒரு உத்தியோக மொழியாக 13ஏ சட்டதிருத்தத்தின்  மூலம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. வைகோ எப்போதும் யதார்த்தத்தை விட்டு உணர்ச்சிக்கு முதல் இடம் கொடுப்பவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுபவர். எமது நிலைப்பாட்டை  அண்ணாவின் மொழியில் கூறவதாக இருந்தால் நாம் கத்தியைத் தீட்டுவதற்குப் பதில் புத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறோம். 

உ.தனியரசு, ”ஐ.நா. சபையில் தொடர்ச்சியாக அவ்வளவு அழுத்தம் கொடுத்தபோதும் இன்றுவரை ஒரு சதவிகித நியாயம்கூட கிடைக்கவில்லை. தமிழீழத்தைப் பொறுத்தவரையில் உலகில் ஒரு நாடுகளும் நம்மை ஆதரிக்கவில்லை. தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும். அப்போதுதான், அனைத்துத் தமிழர் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தற்போது இலங்கையின் இந்த யாப்புக்காக எதிர்த்து நிற்போம். அனைவரும் போராடுவோம்” என்றார்.

பதில்: இது யதார்த்தமான பேச்சு. தனித் தமிழீழத்துக்கு உலக நாடுகள் இடையே ஆதரவு இல்லை.

கௌதமன், ”இந்த யாப்பு தமிழர்களுக்கான உரிமையை முற்றிலும் பறித்துவிடும். உலக அரசியலில் தந்திரமாக அனைத்து நாடுகளையும் ஏமாற்றும் வகையிலே இந்த யாப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் நில உரிமையைக் கையகப்படுத்துதலையும், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணையக் கூடாது என்பதையும் இந்த யாப்பு அழுத்தமாகச் சொல்கிறது. அதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரிந்துகிடக்கும் தமிழர்கள் மீண்டும் இணைந்துவிட்டால், தங்களின் உரிமைக்காக மீண்டும் போராடுவார்கள். அதனால்தான் இலங்கை அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றுசேர்வதைத் தடுத்துவருகிறது. படுகொலை செய்தவர் ராஜபக்‌ஷே என்றால், அந்தப் படுகொலையும், தமிழர்கள் மீதான உரிமை மறுப்பையும் மூடிமறைப்பது சிறீசேன. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தனும், சுமந்தனும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல், சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வாங்கியுள்ளார்கள். அவர்களை தமிழர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மீதமுள்ள தமிழர்களையும், தமிழ் நிலங்களையும் காப்பாற்றும் உரிமை நமக்கு இருக்கிறது” என்றார் மிகவும் தெளிவாக.

பதில்: கௌதமன் இடைக்கால அறிக்கையைப் படிக்கவில்லை.  அரசகாணி அனைத்தும் குடியரசுக்கு உரித்தாதல் வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரச காணி  தேசிய நிரலிலும்  மாகாண நிரலிலும் இருக்கும். இது பற்றி ததேகூ வழிகாட்டுக் குழுவில் மேலும் பேசி இறுதித் தீர்வு எட்டப்பட வேண்டும்.  வட மாகாணம் – கிழக்கு மாகாணம் இரண்டையும் இணைப்பது பற்றி மூன்று தெரிவுகள் முன்மொழியப்பட்டுள்ளன.

(அ)  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கும்

(ஆ) இரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் இணையலாம்

(இ) இப்போதுள்ளவாறு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகத் தொடரும்.

கருத்தரங்கில் தலைவர்கள்...

ஜெயராமன் பேசும்போது, ”சிங்கள இனம் ‘ஒருமித்த தேசம்’ என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறது. அந்தத் தீவில் பௌத்த மதமும், சிங்கள மொழியும் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னொரு தேசிய இனமான தமிழர்கள் அங்கு வாழக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மனித உரிமை மீறல், இன அழிப்பைப் பற்றி உலக நாடுகளின் வாயை அடைப்பதற்கு இந்த யாப்பை முன்னெடுக்கிறார்கள். இந்த யாப்புக்கு வழிகாட்டி இந்தியாதான். இந்திய அரசு, இலங்கையில் இருக்கும் தமிழர்களும், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களும் நன்றாக வாழக்கூடாது என்று நினைக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தில் ஆறு, மணல், கனிமவளம் போன்ற இயற்கை வளங்கள் எதுவுமே இருக்காது. தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கியால் சுடுவதற்குத் தாமதமானால், இந்தியப் படையே தமிழக மீனவர்களைச் சுடும்” என்றார்.

பதில்: ஜெயராமன் பேச்சு அவலை நினைத்து உரலை இடித்தவன் கதை போன்று இருக்கிறது.

பெ.மணியரசன் பேசும்போது, ”முதலை வேண்டுமானால், மனிதர்கள்மீது கருணை காட்டலாம். ஆனால், சிங்களவர்கள் ஒருபோதும் தமிழர்கள்மீது கருணை காட்டமாட்டார்கள். இந்திய அரசும் அதுபோலத்தான் தமிழர்களைச் செய்துவருகிறது. பல இனங்கள் இருக்கும் நாட்டில் நாடாளுமன்றம் என்பது ‘ஒடுக்குமுறை கிரீடம்’ அவ்வளவுதான். ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இந்தியர்களை நம்ப வேண்டாம். தமிழர்களை நம்புங்கள்… ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற வேண்டி எண்ணற்ற பேர் இங்கு தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர். தமிழர்கள் எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடியும், குரல்கொடுத்தும் வருவார்கள்” என்றார் நம்பிக்கையுடன்.

பதில்: மணியரசன் எல்லாவற்றையும் பொதுவுடமைக் கண்ணோட்டத்தில்  பேசுபவர். அதில் இருந்து விலகாமல் பேசுகிறார்.

கவிஞர் காசி ஆனந்தன், ”பழைய இலங்கை அரசியலமைப்பையும், புதிய அரசியலமைப்பையும் ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அந்த அரசியலமைப்பைப் பற்றி, தந்தை செல்வாவின் காலத்திலேயே எங்களுக்குத் தெரியும்” என்றார்.

பதில்: காசி ஆனந்தன் தமிழீழத்தோடான தொடர்பை அறுத்துக் கொண்டுவிட்டார். போர்க்காலத்தில் புலிகள் வன்னிக்கு அழைத்தும் அவர் போக மறுத்துவிட்டார்.

வேல்முருகன், ”எங்கள் தமிழர்களுக்கென்று தனிநாடு பிறக்காதா என்ற ஏக்கம் இங்குள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் இருக்கிறது. எப்படிச் சிங்களவர்களால் தமிழர்கள் படும் இன்னல்களுக்கு அளவில்லையோ… அதுபோலத்தான் இந்திய அரசால் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் இன்னல்களுக்கும் அளவில்லை. எங்கள் வாழ்வுரிமை அழிந்துவருகிறது. நாட்டின் ஆட்சியாளர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, பல அரசு உயர் அதிகாரிகளாக தமிழ்நாட்டில் இந்தியர்கள் மட்டுமல்ல… இனி வரும்காலங்களில் வெளிநாட்டினரும் வருவார்கள். அதற்கான வேலையைத்தான் இந்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. நம்மைச் சுற்றி என்ன பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது என்பதையே என் தமிழ்ச் சமூகம் மறந்துகொண்டிருக்கிறது. ‘அறம்’ படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட என் தமிழ்ச் சமூகமே, மக்களுக்காக… நமது உரிமைக்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவரும் பெ.மணியரசன், வைகோ மற்றும் பல போராளிகளை ஞாபகம் வைத்துக்கொள்ளாதது ஏன். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத முதலமைச்சர்களையும், அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். யாரை எங்கே வைப்பது என்று தெரியாத ஓர் ஆட்டுமந்தை கூட்டமாகத்தான் என் தமிழ்ச் சமூகம் இருந்துவருகிறது. அதனால், இந்தக் கூட்டத்துக்குப் பல பிரச்னைகளை மத்திய அரசு தந்துக்கொண்டிருக்கிறது” என்றார் வேதனையுடன்.

பதில்: வேல்முருகன் பேச்சு இந்திய அரசைப் பற்றியதாக இருக்கிறது. இலங்கை – இந்தியா இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

எமது கோரிக்கை பிரிக்க முடியாத இலங்கையில் தமிழர்க்குரிய உள்ள சுயநிர்ணய உரிமையின் கீழ் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பில் (வட – கிழக்கு மாகாணங்கள்) இணைப்பாட்சி கட்டமைப்பில் ஒரு தன்னாட்சி ஆகும். மேலும் இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் விருப்பம் வேறு யதார்த்தம் வேறு. எதுவாக இருந்தாலும் தாயகத்தில் வாழும் மக்களின் ஒப்புதலின்றி எந்தத் தீர்வையும் ததேகூ ஏற்றுக் கொள்ளாது என்பதை தெளிவு படுத்தியுள்ளோம்.

இறுதியாக நாம் சொல்வது என்னவென்றால் முதலில் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட 112 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை எழுத்துக் கூட்டிப் படித்து விட்டு உங்கள் கருத்தை முன்வையுங்கள். (https://www.colombotelegraph.com/index.php/new-constitution-interim-report-of-the-steering-committee-full-texts-in-three-languages/) அரசியல் யாப்பின் வரைவு வரும் போது அதனைப் படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லவும்.

http://www.tamilwin.com/politics/01/165584

கீழ்க்கண்ட  கட்டுரைகள் மற்றும் காணொளிகள் இடைக்கால அறிக்கை பற்றிய விளங்கங்களை தெரிவிக்கிறது.

(1) https://www.colombotelegraph.com/index.php/devolution-rajapaksas-lies/

(2) https://nakkeran.com/index.php/2017/11/20/a-response-to-comments-by-tn-political-leaders/

(3) https://www.youtube.com/watch?v=uzYKKWOAhcs

(4) https://www.colombotelegraph.com/index.php/category/editorial/

(5) https://nakkeran.com/

நக்கீரன்

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply