பௌத்தமும் தமிழும் 8-11

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்

தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் பல நாளிது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக் காலத்தில் நடை முறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டது. ‘அல்லா உபநிஷத்’ என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இது நிற்க.

பௌத்த மதக் கொள்கைகள் பல இந்து மதத்தில் நின்று நிலவுகின்றனவென்று சொன்னோம். அவை எவை என்பதை இங்கு ஆராய்வோம். இக்காலத்தில் இந்துக்கள் அவை பௌத்தமதக் கொள்கைகள் என்பதை முழுவதும் மறந்துவிட்டார்கள். இந்து மதத்தில் காணப்படும் பௌத்த மதக் கொள்கைகளாவன:

1. புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்டது

இந்து மதம் பௌத்த மதத்தை அழித்துவிட்ட போதிலும், அந்த மதத்தை உண்டாக்கிய புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக்கொண்டுவிட்டது. ஏன் ஒப்புக்கொண்டது? புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பௌத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்!

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவசமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா, அல்லது ஐயனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர், அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர் உள்ளன. இப்பெயர்கள் நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பௌத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றிவிட்டனர். அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றிவிட்டார்கள்.

துடித லோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதி சத்துவர், புத்தராக மாயாதேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பௌத்தமதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றபப்ட்டன. பழைய சைவசமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி 6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவசமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்ட தென்றும் சைவப் பெரியார் உயர் திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டுக் கருதத்தக்கது. (தொடர்புரை 3 காண்க.)

2. பௌத்தச் சிறுதெய்வங்களை இந்துமதம் ஏற்றுக் கொண்டது

மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் பண்டைக்காலத்தில் பௌத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில்களை இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக்கொண்டு, இவைகளுக்குக் காளி, பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப்பெயர்கள் சூட்டிக் கிராமதேவதைகளாக்கிக் கொண்டனர். காஞ்சிபுரத்தில் வீடுபேறடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் பௌத்தரின் தாராதெவியம்மன் கோயில் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். அவ்வாறே, ஆங்காங்குத் திரௌபதையம்மன் ஆலயம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் ஆலயங்கள் எல்லாம் பண்டைக் காலத்தில் தாராதேவியாலயங்களாக இருந்தன என்றும் கூறுவர். (மணிமேகலை, சம்பாபதி முதலிய பௌத்தத் தெய்வங்களைப் பற்றிய தொடர்புரை 4 காண்க.)

3. வேள்வியில் உயிர்கொலை நீக்கியது.

யாகங்களில் ஆடு மாடு முதலியவற்றைக் கொல்வது பெரும்பாவமென்பது பௌத்தமதக் கொள்கை. அதற்கு நேர்மாறாக, யாகங்களில் ஆடு மாடு குதிரை முதலியவற்றைப் பலியிட வேண்டுமென்பது வைதிகப் பிராமண மதக் கொள்கையாக இருந்தது. கடைசியாக, வைதீக பிராமண மதம் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து, பௌத்தமதக் கொள்கையாகிய கொல்லாமையை ஏற்றுக் கொண்டது. அன்றியும், பிராமணர் மாமிசம் உண்டு வந்ததையும் நிறுத்திச் ‘சைவ’ உணவை உண்ணும்படி செய்ததும் பௌத்தமதம் தான். வைதீக மதத்தார் மாமிசம் உண்பதையும் யாகங்களில் உயிர்கொலை செய்வதையும் தடுத்து, அவற்றை நிறுத்தச் செய்த பெருமை பௌத்த மதத்திற்குமட்டுமன்று, ஆருகத மதத்திற்கும் உரியதாகும்.

4. அரசமரத்தைத் தொழுதல்

‘போதி’ என்னும் அரசமரம் பௌத்தர்களுக்குப் புனிதமானது. ஏனென்றால், அரசமரத்தடியில் இருந்து தியானஞ் செய்த போது புத்தருக்கு மெய்யறிவு உண்டாயிற்று. ஆகையால், பௌத்தர்கள் அரச மரத்தைப் புத்தரைப் போலவே போற்றி வணங்குவர். புத்தரைக் கூறும்போது ‘மருள் அறுத்த பெரும் போதி மாதவன்’ என்றும், ‘பவளச் செஞ்சுடர் மரகதப் பாசடை, பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதியந் திருநிழற் புனிதன்’ என்றும் ‘பாசடைப் போதிப் பேரருள வாமன்’ என்றும், ‘ வாடாப் போதி மரகதப் பாசடை மரநிழல் அமர்ந்தோன்’ என்றும், அரசமரத்துடன் அவரைத் தொடர்பு படுத்தியே நூல்கள் கூறுகின்றன. பௌத்தரைப் ‘போதியர்’ (அரசமரத்தை தொழுவோர்) என்று தேவாரம் கூறுகின்றது. சங்ககாலத்திலிருந்த ஒரு பௌத்தப் புலவருக்கு ‘இளம்போதியார்’ என்னும் பெயர் இருந்ததும் ஈண்டு நினைவு கூரற்பாலது. அன்றியும் ‘புத்தர் மேல் பக்திக்குக் காரணமான போதி விருட்சம் நின்னால் (பௌத்தரால்) புத்தனோபாதி (புத்த சம்பந்தமானது) என்று தொழப்பட்டவாறு போல, எனவும் ‘ புத்த பத்தி நிமித்தமாகப் போதிவிருட்சம் தொழுமாறு போல்’ எனவும் வருகின்ற நீலகேசி உரைப்பகுதிகளாலும் பௌத்தர் அரசமரத்தைத் தொழுதுவந்த செய்தி அறியப்படும். இந்துமதம் பௌத்த மதத்தை அழித்துவிட்ட தெனினும், பௌத்தமதக் கொள்கையாகிய அரசமர வணக்கம் ஒழிக்கப்படாமல், இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது. அரசமரத்தை வலம் வந்து வணங்குகின்ற இக்காலத்து இந்துக்கள், இந்த வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பதை அறியார். ஆனால், இவ்வணக்கத்தை உண்டாக்கியது பௌத்தர் என்பது மறுக்க முடியாத உண்மை.

5. மடங்கள் ஏற்படுத்தியது

சைவ, வைணவ, ஸ்மார்த்த மதத்தினர் மடங்களை அமைத்து, அவற்றில் தத்தம் மதத் தலைவர்கள் இருந்து சமயத் தொண்டாற்ற ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இவைகளுக்கு ‘மடம்’ என்றும் ‘சிம்மாசனம்’ என்றும், ‘பீடம்’ என்றும் பெயர்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையங்கள் பௌத்தரின் பள்ளிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. பௌத்த மதத்தின் உயிர் நாடியாயிருந்தது சங்கம். சங்கம் என்பது பௌத்த துறவிகளின் கூட்டம். இந்தத் துறவிகள் ஊர்தோறும் விகாரை அல்லது மடங்களை அமைத்து, அவற்றில் தங்கி நாட்டுமக்களுக்கு மத போதனை செய்து தங்கள் சமயத்தைப் பரவச் செய்து வந்தார்கள். இந்த நிலையங்களை முதல் முதல் உண்டாக்கிய பெருமை புத்த தேவருக்கே உரியது. புத்தர் இந்த நிலையங்களை உண்டாக்குவதற்கு முன்னே, துறவிகளும் சமயத் தலைவர்களும் காடுகள், மரச்சோலைகள் முதலிய இடங்களில் வசித்துவந்தனர். பின்னர், பௌத்த மடங்களைப் பின்பற்றி ஏனைய சமயத்தவரும் மடங்கள் அமைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர்.

6. அத்வைதம் உண்டானது

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கரா சாரியரால் உண்டாக்கப்பட்ட ‘மாயாவாத மதம்’ என்றும், ‘ஏகான்மவாத மதம்’ என்றும் சொல்லப்படுகின்ற ‘அத்வைத மதத்தின்’ அடிப்படையான கொள்கை மகாயான பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிற்சிறந்த ஆன்றோர் கூறுகின்றார்கள். அத்வைத மதத்தை உண்டாக்கிய ஆதி சங்கராசாரியார் பௌத்தகுரு ஒருவரிடம் பயின்ற மாணவர் என்று சிலர் கூறுவர். அங்ஙனம் அன்று சங்கராசாரியாரின் குரு கோவிந்தபாதர் என்றும், கோவிந்தபாதரின் குரு கௌடபாதர் என்னும் பௌத்தர் என்றும் வேறு சிலர் கூறுவர். அன்றியும், பௌத்தமதத்தின் பிரிவுகளான விஞ்ஞானவாத, சூனியவாத மதங்கள் அதிகமாகப் பரவியிருந்த சௌராஷ்டிர தேசத்தில் சங்கரர் கல்வி பயின்றார் என்றும், அங்குப் பயின்றபடியினால்தான் சூனியவாத பௌத்தத்தினின்று மாயாவாதக் கருத்தினைப் பெற்றுக் கொண்டார் என்றும் மற்றுஞ் சிலர் கூறுவர். இவர் எவ்விடத்தில் யாரிடத்தில் கல்வி பயின்றார் என்னும் ஆராய்ச்சியிற் புகவேண்டுவதில்லை. இவர் தமது மாயாவாதக் கொள்கையைப் பௌத்தமதத்தினின்று பெற்றுக்கொண்டார் என்பதுமட்டும் உறுதியே. ஏனென்றால், வைணவ ஆசாரியருள் தலைசிறந்தவரும், ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தவருமான இராமாநுசர், சங்கராசாரியாரின் அத்வைத மதத்தைப் ‘பிரசன்ன பௌத்தம்’ அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மாத்வாசாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் ‘பிரசன்ன பௌத்தம்’ என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்தர காண்டத்திலும் சங்கராசாரியாரின் மாயாவாத மதம் பிரச்சன்ன பௌத்தம் என்றே கூறப்படுகின்றது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.

7. அன்னப்பறவையின் அவதாரம்.

பௌதர்களுக்குரிய புத்தஜாதகக் கதைகள் புத்தருடைய பழம் பிறப்புக்களைக் கூறுகின்றன. அக் கதைகளில் ஹம்சஜாதகமும் ஒன்று. அஃதாவது புத்தர் பெருமான், அன்னப்பறவையாகப் பிறந்து அரசனுக்கும் மக்களுக்கும் அறநெறி உரைத்தார் என்று கூறப்படுகிறது. இக்கதை, ஹம்சஜாதகம், சுல்ல (சிறிய) ஹம்சஜாதகம், மகா (பெரிய) ஹம்சஜாதகம் என்னும் மூன்று கதைகளில் கூறப்படுகிறது. புத்தரைத் திருமாலின் அவதாரமாக ஏற்றுக்கொண்ட வைணவர்கள், இந்த ஹம்ச ஜாதகக் கதையையும் எற்றுக்கொண்டார்கள். அஃதாவது புத்தரைப் போலவே திருமால் அன்னப்பறவையாகப் பிறந்து அறமுரைத்தார் என்று வைணவர்கள் கூறினார்கள்.

திருமங்கை ஆழ்வார் மட்டும் இந்தக் கதையைத் தம் பாசுரங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் ஏனைய ஆழ்வார்கள் இக்கதையைக் கூறவில்லை. திருமங்கை ஆழ்வார் கூறுகிற அன்னப் பறவை அவதாரம் பற்றிய செய்யுட்களாவன,

“துள்ளிமண்ணும் விண்ணோடும்
தோன்றாத இருளாய் மூடியநாள்
அன்னமாகி அருமறைகள்அ

ருளிச்செய்த அமலன்”

(5-பத்து. 1-திரு. 6)

“அன்னமாய் அன்று அக்கருமறை பயந்தான்

அரங்கமா நகர் அமர்ந்தானே.”

(5-பத்து. 7-திரு. 3)

“முன்னுலகங்களேழும் இருள் மண்டியுண்ண

முதலோடு வீடுமறியாது

என்னிதி? வந்தென்ன இமையோர்திகைப்ப

எழில் வேதமின்றி மறைய

பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி

இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ

அன்னமதாயிருந்து அங்கற நூலுரைத்த

அதுநம்மை யாளும் அரசே”

(11-பத்து. 4-திரு. 8)

“மின்னுமாமழை தவழும் மேகவண்ணா

விண்ணவர்தம் பெருமானே! அருளாயென்று

அன்னமாய் முனிவரோடு அமரரேத்த

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை”

(திருநெடுந்தாண்டகம் – 30)

இன்னும் இடங்களில் திருமாலின் ஹம்சஜாதகத்தை திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். விரிவஞ்சி இத்துடன் விடுகிறோம். இதனால், புத்தரைத் திருமாலின் அவதாரமாக வைணவர்கள் எற்றுக்கொண்டது போலவே, புத்தரின் அன்னப்பறவைப் பிறப்பையும் திருமாலின் ஹம்ச அவதாரமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது.

மேலே காட்டிய ஏழு கொள்கைகளும் பௌத்தமதத்தைச் சார்ந்தவை என்பதும் அக் கொள்கைகள் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டன. இதனின்று நாம் அறியக்கிடப்பது யாது? இந்துமதம் பௌத்த மதத்தை அழிந்துவிட்டது; ஆனால் பௌத்தமதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்றளவும் கையாண்டு வருகின்றது என்பதே. பௌத்தமதம் தோல்வியுற்றது; ஆனால், அதன் கொள்கை வெற்றிபெற்றது.

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

9. பௌத்தரும் தமிழும்

வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமண மதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். ‘சிரமணம்’ என்னும் சொல் தமிழில் ‘சமணம்’ என வழங்கும். ‘சமண மதம்’ என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால் ‘சமணம்’ என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்த ஜைன மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக்காலத்தில் வழங்கிவந்தது.

சமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாகத் தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்று குறுகிய எண்ணமுடையவர்கள். பொது மக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதி வைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும் கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதி வைத்துள்ளார்கள்.

பரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மை கொண்டவர்களான பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்து வைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெரும்பாவம் என்பது அவர்களின் கொள்கை. இக் கொள்கையை விளக்கக் கீழ்கண்ட வரலாறுகளே போதுமானவை.

பௌத்தர்களுக்குரிய ‘கல்லவக்க’ என்னும் பாலிமொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது:

பௌத்த மதத்தை சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் பகவன் புத்தரிடம் சென்று, ‘புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற்சென்று போதித்து வருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர் மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக!’ என்றனர். இங்குச் ‘சந்தம்’ என்பது சமஸ்கிருத சுலோகம். சமஸ்கிருத சுலோகத்தில் புத்தரின் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து “நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறிய வேண்டும்.” என்றனர்.

இதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்து வந்தனர்.

ஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த மனப்பான்மையுள்ளவராய், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே தங்கள் நூல்களை எழுதிவந்தார்கள். இதனை சித்தசேன திவாகரர் என்னும் ஜைன முனிவரின் வரலாற்றிலிருந்து நன்கறியலாம். (சித்தசேன திவாகரர் வரலாற்றைச் சமணமும் தமிழும் என்னும் நூலில் காண்க.)

இவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச் செய்யுங் கருத்துடையவரான பௌத்தர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மத நூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த, தொண்டு தமிழர்களால் மறக்கற்பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப் பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி, அவர்களுக்குத் தாய்மொழியை எழுதிப்படிக்கக் கற்பித்து வந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற, ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. ‘பள்ளி’ என்னும் பெயருக்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாட சாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் ‘பள்ளிக்கூடம்’ என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.

இவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ்நாடு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் ‘கணக்காயர்’ என்ற பெயர் சங்க நூல்களில் காணப்படுகின்றது. பின் ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், பௌத்தர்களும் ஜைனர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச் செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.

பௌத்த ஜைன மதத்தார் தாய்மொழியான தேச பாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றி வைத்ததுபோல வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள் மட்டும் படிக்கவேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்றும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

வனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப் பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ்மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணிமேகலை, குண்டலகேசி என்னும் இரண்டையும் பௌத்தரும்; சிலப்பதிகாரம், வளையாபதி, சிந்தாமணி என்னும் மூன்றையும் ஜைனரும் இயற்றினர். அவர்கள் அப் பெருமாட்டிக்கு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உள்ளன.

பௌத்தர் (ஜைனருங்கூட) தமிழ்நாட்டிலே தமிழ்மொழியிலே தமது மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இதுகாறுங் கூறினோம். இதுவன்றியும், பௌத்தர், தமிழ்நாட்டிலே பிராமி எழுத்தைப் பரவச் செய்யக் காரணமாக இருந்தனர் என்பதை விளக்குவோம். பிராமி அல்லது பிராஹ்மி என்று கூறப்படும் எழுத்தைப் புதிதாகக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என க்ஷேமேந்திரர் என்பவர், தாம் இயற்றிய புத்தஜனனம் என்னும் நூலிலே கூறியுள்ளார்.

வர்தமான: குமாரோத

ஸர்வ வித்யா சுபாரக:

லிபிப்ர வீனோ பினவாம்

லிபிங் பிராஹ்மீம் வினிர்மமே

என்று அவர் கூறியுள்ளார். அஃதாவது: சித்தார்த்த குமாரன் (புத்தர்) இளமையில் எல்லாவித வித்தைகளையும் கற்று வளரும்போது, தாமாகவே பிராஹ்மி எழுத்தை உண்டாக்கி நிறுவினார் என்பது இச்செய்யுளின் கருத்தாகும்.

பிராஹ்மி எழுத்தை இந்தியா முழுவதிலும் பரவச் செய்தவர்கள் பௌத்தர் ஆவர். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் சக்கரவர்த்தியாக விளங்கியவரும் பௌத்த மதத்தை மேற்கொண்டதோடு, அம் மதத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவச் செய்தவருமாகிய அசோக சக்கரவர்த்தி தமது ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலெல்லாம் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் பிராமி எழுத்தையே உபயோகித்து இருக்கிறார். காரோஷ்டி என்னும் வேறு எழுத்து இந்தியாவின் வடமேற்கில் அசோகர் காலத்தில் வழங்கி வந்த போதிலும், அவற்றை உபயோகிக்காமல், பிராமி எழுத்தை உபயோகித்ததன் கருத்து அது புத்தர் உண்டாக்கிய எழுத்து என்னும் நம்பிக்கையாக இருக்கலாம். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் பிராமி எழுத்து உபயோகிக்கப்பட்டது என்று கருத வேண்டா. அவர் ஆட்சிக்குட்படாத தமிழ்நாடு, இலங்கைத் தீவுகளிலும், (அசோகர் காலத்திலே) எழுதப்பட்ட சாசனங்களும் பிராமி எழுத்துக்களாக உள்ளன. இவ்விடங்களிலும் இச் சாசனங்கள் எழுதியவர்கள் பௌத்தர்கள் என்பது அறியத்தக்கது. எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியும், அவரால் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பிக்குகளும் பிராமி எழுத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்தார்கள் என்பது அறியப்படுகிறது. அசோக சக்கரவர்த்தி தம் சாசனங்களில் பிராமி எழுத்தை உபயோகித்தபடியால், பிராமி எழுத்துக்கு அசோகர் எழுத்து என்றும் இக்காலத்தில் பெயர் வழங்குகிறார்கள்.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ்நாட்டிலே எழுதப்பட்ட கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாண்டிநாட்டிலே, அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, அரித்தாப்பட்டி, கருங்காலக்குடி, விரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, திருச்சி ஜில்லா கருவூர் தாலுகாவில் உள்ள ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் உள்ள பாண்டவமலை என்று அழைக்கப்படும் குன்றுகளில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் உள்ள பிராமி எழுத்தைப்பற்றி, சென்னை அரசாங்கத்து ஆர்க்கியாலஜி, எபிகிராபி இலாக்காக்களின் அறிக்கைகளில் காணலாம். இச்சாசனங்கள் தமிழ்மொழியில் இருந்தும், எழுத்துக்கள் பிராமி எழுத்தாக உள்ளன. 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் பிராமி எழுதப்பட்டது என்பதற்கு இக் கல்வெட்டுச் சான்றுகள் அல்லாமல் வேறு சான்றும் எதிர்பாரா வண்ணம் கிடைத்திருக்கிறது.

புதுச்சேரிக்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் உள்ள துரிக்கமேடு என்று வழங்கப்படுகிற சிறு கிராமம், 1800 ஆண்டுகளுக்கு முன்னே, (கி.பி. 2 ஆம் நூற்றாண்டில்) தமிழ் நாட்டிலே பேர்போன துறைமுகப்பட்டினமாக இருந்தது. இங்கு உரோமாபுரி நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்து வந்தனர். ஆனால், பேர்போன இந்தத்துறைமுகத்தைப் பற்றிப் புறநானூறு முதலிய சங்கநூல்களில் யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. இவ்விடத்தை அண்மையில் அரசாங்கத்து ஆர்க்கியாலஜி உத்தியோகஸ்தர் அகழ்ந்து பார்த்தபோது, பூமிக்குள்ளிருந்து பல பொருட்களைக் கண்டெடுத்தனர். அப்பொருட்களுடன் உடையுண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அம்மட்பாண்டங்கள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாஷை தமிழாகவும், எழுத்து பிராமி எழுத்தாகவும் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்நாட்டிலே 1800 ஆண்டுகளுக்கு முன்னே, பிராமி எழுத்து வழங்கிவந்த செய்தி, காட்டிலே மலைக்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களினாலும், நாட்டிலே பூமிக்கடியில் கிடைக்கும் மக்கள் வழங்கிய மட்பாண்டங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களினாலும் வலியுறுத்தப்படுகின்றது. பிராமி எழுத்தைத் தமிழ்நாட்டிலே புகுத்தியவர்கள் பௌத்தர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.

தமிழகத்திலே பிராமி எழுத்து வருவதற்கு முன்பு வேறு எழுத்துக்கள் இல்லை என்று கருதவேண்டா. புத்தஜாதகம் எனப்படும் பழையபௌத்த நூலிலே, புத்தர் காலத்துக்கு முன்னரே எழுத்துக்கள் வழங்கிவந்த செய்தி கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயும், பிராமி எழுத்து வருவதற்கு முன்பே ஏதோ ஒருவகை எழுத்து வழங்கி வந்தது. தமிழகத்திலே பிராமி எழுத்து பௌத்தர்களால் புகுத்தப்பட்ட கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பழைய தமிழ் எழுத்து வழக்கொழிந்துவிட்டது. ஆனாலும், புதிய பிராமி எழுத்தில் இல்லாததும் தமிழில் மட்டும் இருந்ததுமான ற, ழ போன்ற எழுத்துக்களை மட்டும் விலக்காமல் பிராமி எழுத்தோடு சேர்த்துப் பண்டைத் தமிழர் வழங்கினார்கள். கடைச்சங்கக் காலத்தில் பிற்பகுதியிலே சங்கப்புலவர்கள் பிராமி எழுத்தையே எழுதியிருக்க வேண்டும். பின்னர், பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து என்னும் ஒருவகை எழுத்து உருவாயிற்று.

தமிழ்நாட்டிலேயிருந்த பௌத்த, ஜைனர்கள், தமது மதத்தைச் சேர்ந்த “தெய்வ” மொழிகளாகிய பாகத மொழிகளையும் (பாலி, சூரசேனி) வழங்கிவந்தார்கள். அவர்கள், தத்தம் சமய நூல்களை எழுதுவதற்குப் பிராமி எழுத்திலிருந்து கிரந்த எழுத்து என்னும் புதுவகை எழுத்தை உண்டாக்கினார்கள். இந்தக் கிரந்த எழுத்தைக் கொண்டு அவர்கள் பாகத (பிராகிருத) நூல்களையும் சமஸ்கிருத நூல்களையும் எழுதிவந்தார்கள். பின்னர் நாளடைவில், சோழநாட்டில், கிரந்த எழுத்திலிருந்து ஒரு வகை தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு இப்போது வழங்கப்படுகிற தமிழ் எழுத்து வழங்கப்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துக்கும் கிரந்த எழுத்து என்பது பெயர். ஆனால், பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் பிராமி எழுத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பழைய வட்டெழுத்தே வழக்கத்தில் இருந்துவந்தது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அந் நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்துக்களை மாற்றிப் புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினார்கள். ராசகேசரிவர்மன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ராசராசனும் (முதல் ராஜராஜன்) அவன் மகன் ராசேந்திரனும் (முதல் ராஜேந்திரன்) பாண்டி நாட்டிலே கிரந்தத் தமிழ் எழுத்தை (இப்போது வழங்கப்படும் தமிழ் எழுத்தை)ப் புதிதாகப் புகுத்தினார்கள் என்று ஆராய்ச்சிவல்லர் கூறுவர். இந்தச் சோழ அரசர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டிநாட்டில் புகுத்தியதற்குச் சான்று என்ன வென்றால், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களாகும். இச் சாசனங்கள், பழைய வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்த சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்தெழுதி ராசராசன் அமைத்தான் என்று கூறுகின்றன.

இவ்வாறு பௌத்தர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட பிராமி எழுத்துச் சில நூற்றாண்டுகள் வழங்கிவந்து, பின்னர் அதிலிருந்து வட்டெழுத்து உண்டாகிச் சில நூற்றாண்டு வழங்கி வந்து, பின்னர், பிராமி எழுத்திலிருந்தே பௌத்த ஜைனர்களால் இன்னொரு வகையாக உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலிருந்து கிரந்தத் தமிழ் எழுத்து உண்டாகி அவ்வெழுத்தே நாளிதுவரை வழங்கப்பட்டு வருகிறது. அசோகர் எழுத்து எனப்படும் பிராமி எழுத்திலிருந்தே நாகரி எழுத்து உண்டாகி இப்போது வடநாட்டில் வழங்கி வருகிறது. சுருங்கக் கூறினால், பிராமி எழுத்திலிருந்தே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய எழுத்துக்கள் உண்டாயின. இதில் சற்றும் ஐயமில்லை. அறிஞர் ஆராய்ந்து கண்டுகொள்க.


பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

9. பௌத்தரும் தமிழும்

வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமண மதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். ‘சிரமணம்’ என்னும் சொல் தமிழில் ‘சமணம்’ என வழங்கும். ‘சமண மதம்’ என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால் ‘சமணம்’ என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்த ஜைன மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக்காலத்தில் வழங்கிவந்தது.

சமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாகத் தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்று குறுகிய எண்ணமுடையவர்கள். பொது மக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதி வைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும் கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதி வைத்துள்ளார்கள்.

பரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மை கொண்டவர்களான பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்து வைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெரும்பாவம் என்பது அவர்களின் கொள்கை. இக் கொள்கையை விளக்கக் கீழ்கண்ட வரலாறுகளே போதுமானவை.

பௌத்தர்களுக்குரிய ‘கல்லவக்க’ என்னும் பாலிமொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது:

பௌத்த மதத்தை சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் பகவன் புத்தரிடம் சென்று, ‘புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற்சென்று போதித்து வருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர் மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக!’ என்றனர். இங்குச் ‘சந்தம்’ என்பது சமஸ்கிருத சுலோகம். சமஸ்கிருத சுலோகத்தில் புத்தரின் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து “நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறிய வேண்டும்.” என்றனர்.

இதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்து வந்தனர்.

ஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த மனப்பான்மையுள்ளவராய், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே தங்கள் நூல்களை எழுதிவந்தார்கள். இதனை சித்தசேன திவாகரர் என்னும் ஜைன முனிவரின் வரலாற்றிலிருந்து நன்கறியலாம். (சித்தசேன திவாகரர் வரலாற்றைச் சமணமும் தமிழும் என்னும் நூலில் காண்க.)

இவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச் செய்யுங் கருத்துடையவரான பௌத்தர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மத நூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த, தொண்டு தமிழர்களால் மறக்கற்பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப் பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி, அவர்களுக்குத் தாய்மொழியை எழுதிப்படிக்கக் கற்பித்து வந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற, ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. ‘பள்ளி’ என்னும் பெயருக்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாட சாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் ‘பள்ளிக்கூடம்’ என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.

இவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ்நாடு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் ‘கணக்காயர்’ என்ற பெயர் சங்க நூல்களில் காணப்படுகின்றது. பின் ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், பௌத்தர்களும் ஜைனர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச் செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.

பௌத்த ஜைன மதத்தார் தாய்மொழியான தேச பாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றி வைத்ததுபோல வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள் மட்டும் படிக்கவேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்றும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

வனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப் பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ்மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணிமேகலை, குண்டலகேசி என்னும் இரண்டையும் பௌத்தரும்; சிலப்பதிகாரம், வளையாபதி, சிந்தாமணி என்னும் மூன்றையும் ஜைனரும் இயற்றினர். அவர்கள் அப் பெருமாட்டிக்கு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உள்ளன.

பௌத்தர் (ஜைனருங்கூட) தமிழ்நாட்டிலே தமிழ்மொழியிலே தமது மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இதுகாறுங் கூறினோம். இதுவன்றியும், பௌத்தர், தமிழ்நாட்டிலே பிராமி எழுத்தைப் பரவச் செய்யக் காரணமாக இருந்தனர் என்பதை விளக்குவோம். பிராமி அல்லது பிராஹ்மி என்று கூறப்படும் எழுத்தைப் புதிதாகக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என க்ஷேமேந்திரர் என்பவர், தாம் இயற்றிய புத்தஜனனம் என்னும் நூலிலே கூறியுள்ளார்.

வர்தமான: குமாரோத
ஸர்வ வித்யா சுபாரக:
லிபிப்ர வீனோ பினவாம்
லிபிங் பிராஹ்மீம் வினிர்மமே

என்று அவர் கூறியுள்ளார். அஃதாவது: சித்தார்த்த குமாரன் (புத்தர்) இளமையில் எல்லாவித வித்தைகளையும் கற்று வளரும்போது, தாமாகவே பிராஹ்மி எழுத்தை உண்டாக்கி நிறுவினார் என்பது இச்செய்யுளின் கருத்தாகும்.

பிராஹ்மி எழுத்தை இந்தியா முழுவதிலும் பரவச் செய்தவர்கள் பௌத்தர் ஆவர். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் சக்கரவர்த்தியாக விளங்கியவரும் பௌத்த மதத்தை மேற்கொண்டதோடு, அம் மதத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவச் செய்தவருமாகிய அசோக சக்கரவர்த்தி தமது ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலெல்லாம் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் பிராமி எழுத்தையே உபயோகித்து இருக்கிறார். காரோஷ்டி என்னும் வேறு எழுத்து இந்தியாவின் வடமேற்கில் அசோகர் காலத்தில் வழங்கி வந்த போதிலும், அவற்றை உபயோகிக்காமல், பிராமி எழுத்தை உபயோகித்ததன் கருத்து அது புத்தர் உண்டாக்கிய எழுத்து என்னும் நம்பிக்கையாக இருக்கலாம். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் பிராமி எழுத்து உபயோகிக்கப்பட்டது என்று கருத வேண்டா. அவர் ஆட்சிக்குட்படாத தமிழ்நாடு, இலங்கைத் தீவுகளிலும், (அசோகர் காலத்திலே) எழுதப்பட்ட சாசனங்களும் பிராமி எழுத்துக்களாக உள்ளன. இவ்விடங்களிலும் இச் சாசனங்கள் எழுதியவர்கள் பௌத்தர்கள் என்பது அறியத்தக்கது. எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியும், அவரால் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பிக்குகளும் பிராமி எழுத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்தார்கள் என்பது அறியப்படுகிறது. அசோக சக்கரவர்த்தி தம் சாசனங்களில் பிராமி எழுத்தை உபயோகித்தபடியால், பிராமி எழுத்துக்கு அசோகர் எழுத்து என்றும் இக்காலத்தில் பெயர் வழங்குகிறார்கள்.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ்நாட்டிலே எழுதப்பட்ட கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாண்டிநாட்டிலே, அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, அரித்தாப்பட்டி, கருங்காலக்குடி, விரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, திருச்சி ஜில்லா கருவூர் தாலுகாவில் உள்ள ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் உள்ள பாண்டவமலை என்று அழைக்கப்படும் குன்றுகளில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் உள்ள பிராமி எழுத்தைப்பற்றி, சென்னை அரசாங்கத்து ஆர்க்கியாலஜி, எபிகிராபி இலாக்காக்களின் அறிக்கைகளில் காணலாம். இச்சாசனங்கள் தமிழ்மொழியில் இருந்தும், எழுத்துக்கள் பிராமி எழுத்தாக உள்ளன. 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் பிராமி எழுதப்பட்டது என்பதற்கு இக் கல்வெட்டுச் சான்றுகள் அல்லாமல் வேறு சான்றும் எதிர்பாரா வண்ணம் கிடைத்திருக்கிறது.

புதுச்சேரிக்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் உள்ள துரிக்கமேடு என்று வழங்கப்படுகிற சிறு கிராமம், 1800 ஆண்டுகளுக்கு முன்னே, (கி.பி. 2 ஆம் நூற்றாண்டில்) தமிழ் நாட்டிலே பேர்போன துறைமுகப்பட்டினமாக இருந்தது. இங்கு உரோமாபுரி நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்து வந்தனர். ஆனால், பேர்போன இந்தத்துறைமுகத்தைப் பற்றிப் புறநானூறு முதலிய சங்கநூல்களில் யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. இவ்விடத்தை அண்மையில் அரசாங்கத்து ஆர்க்கியாலஜி உத்தியோகஸ்தர் அகழ்ந்து பார்த்தபோது, பூமிக்குள்ளிருந்து பல பொருட்களைக் கண்டெடுத்தனர். அப்பொருட்களுடன் உடையுண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அம்மட்பாண்டங்கள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாஷை தமிழாகவும், எழுத்து பிராமி எழுத்தாகவும் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்நாட்டிலே 1800 ஆண்டுகளுக்கு முன்னே, பிராமி எழுத்து வழங்கிவந்த செய்தி, காட்டிலே மலைக்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களினாலும், நாட்டிலே பூமிக்கடியில் கிடைக்கும் மக்கள் வழங்கிய மட்பாண்டங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களினாலும் வலியுறுத்தப்படுகின்றது. பிராமி எழுத்தைத் தமிழ்நாட்டிலே புகுத்தியவர்கள் பௌத்தர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.

தமிழகத்திலே பிராமி எழுத்து வருவதற்கு முன்பு வேறு எழுத்துக்கள் இல்லை என்று கருதவேண்டா. புத்தஜாதகம் எனப்படும் பழையபௌத்த நூலிலே, புத்தர் காலத்துக்கு முன்னரே எழுத்துக்கள் வழங்கிவந்த செய்தி கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயும், பிராமி எழுத்து வருவதற்கு முன்பே ஏதோ ஒருவகை எழுத்து வழங்கி வந்தது. தமிழகத்திலே பிராமி எழுத்து பௌத்தர்களால் புகுத்தப்பட்ட கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பழைய தமிழ் எழுத்து வழக்கொழிந்துவிட்டது. ஆனாலும், புதிய பிராமி எழுத்தில் இல்லாததும் தமிழில் மட்டும் இருந்ததுமான ற, ழ போன்ற எழுத்துக்களை மட்டும் விலக்காமல் பிராமி எழுத்தோடு சேர்த்துப் பண்டைத் தமிழர் வழங்கினார்கள். கடைச்சங்கக் காலத்தில் பிற்பகுதியிலே சங்கப்புலவர்கள் பிராமி எழுத்தையே எழுதியிருக்க வேண்டும். பின்னர், பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து என்னும் ஒருவகை எழுத்து உருவாயிற்று.

தமிழ்நாட்டிலேயிருந்த பௌத்த, ஜைனர்கள், தமது மதத்தைச் சேர்ந்த “தெய்வ” மொழிகளாகிய பாகத மொழிகளையும் (பாலி, சூரசேனி) வழங்கிவந்தார்கள். அவர்கள், தத்தம் சமய நூல்களை எழுதுவதற்குப் பிராமி எழுத்திலிருந்து கிரந்த எழுத்து என்னும் புதுவகை எழுத்தை உண்டாக்கினார்கள். இந்தக் கிரந்த எழுத்தைக் கொண்டு அவர்கள் பாகத (பிராகிருத) நூல்களையும் சமஸ்கிருத நூல்களையும் எழுதிவந்தார்கள். பின்னர் நாளடைவில், சோழநாட்டில், கிரந்த எழுத்திலிருந்து ஒரு வகை தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு இப்போது வழங்கப்படுகிற தமிழ் எழுத்து வழங்கப்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துக்கும் கிரந்த எழுத்து என்பது பெயர். ஆனால், பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் பிராமி எழுத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பழைய வட்டெழுத்தே வழக்கத்தில் இருந்துவந்தது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அந் நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்துக்களை மாற்றிப் புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினார்கள். ராசகேசரிவர்மன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ராசராசனும் (முதல் ராஜராஜன்) அவன் மகன் ராசேந்திரனும் (முதல் ராஜேந்திரன்) பாண்டி நாட்டிலே கிரந்தத் தமிழ் எழுத்தை (இப்போது வழங்கப்படும் தமிழ் எழுத்தை)ப் புதிதாகப் புகுத்தினார்கள் என்று ஆராய்ச்சிவல்லர் கூறுவர். இந்தச் சோழ அரசர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டிநாட்டில் புகுத்தியதற்குச் சான்று என்ன வென்றால், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களாகும். இச் சாசனங்கள், பழைய வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்த சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்தெழுதி ராசராசன் அமைத்தான் என்று கூறுகின்றன.

இவ்வாறு பௌத்தர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட பிராமி எழுத்துச் சில நூற்றாண்டுகள் வழங்கிவந்து, பின்னர் அதிலிருந்து வட்டெழுத்து உண்டாகிச் சில நூற்றாண்டு வழங்கி வந்து, பின்னர், பிராமி எழுத்திலிருந்தே பௌத்த ஜைனர்களால் இன்னொரு வகையாக உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலிருந்து கிரந்தத் தமிழ் எழுத்து உண்டாகி அவ்வெழுத்தே நாளிதுவரை வழங்கப்பட்டு வருகிறது. அசோகர் எழுத்து எனப்படும் பிராமி எழுத்திலிருந்தே நாகரி எழுத்து உண்டாகி இப்போது வடநாட்டில் வழங்கி வருகிறது. சுருங்கக் கூறினால், பிராமி எழுத்திலிருந்தே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய எழுத்துக்கள் உண்டாயின. இதில் சற்றும் ஐயமில்லை. அறிஞர் ஆராய்ந்து கண்டுகொள்க.


 

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)

10. மணிப்பிரவாள உரைநடை

பௌத்த மதமும் ஜைன மதமும் வடநாட்டிலே தோன்றிய மதங்கள். ஆகவே, அந்த வடநாட்டில் வழங்கிய பாகத (பிராகிருத) மொழிகளில் எழுதப்பட்டன. பண்டைக் காலத்திலே, பௌத்த ஜைனர்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை எழுதவில்லை. ஏனென்றால், சமஸ்கிருத மொழி, பொது ஜனங்களால் பேசப்படாத (கற்றவர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காத) பேச்சு வழக்கற்ற மொழியாக இருந்தது. ஆகவே, பொதுமக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய பேச்சுவழக்கில் இருந்த பிராகிருத மொழிகளிலே பௌத்த ஜைனர்கள் தமது மதநூல்களை அக்காலத்தில் எழுதி வைத்தார்கள். பௌத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும் ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூரசேனியையும் தமது ‘தெய்வ’ மொழியாகக் கொண்டு அம்மொழிகளிலே தமது மதநூல்களை எழுதிவைத்த படியினாலே, தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மதநூல்களைப் பயிலவேண்டிய தாயிற்று. அந்தப் பிராகிருத மொழிகளிலே, சமஸ்கிருத மொழியில் உள்ளது போன்று, நான்கு ககரங்களும் நான்கு டகரங்களும், இரண்டு சகரங்களும், இரண்டு ஜகரங்களும் ஷ, க்ஷ, ஸ, ஹ முதலிய எழுத்துக்களும் உள்ள படியினாலே, அவ்வெழுத்துக்கள் இல்லாத தமிழ்மொழியிலே அந்தப் பிராகிருத பாஷைகளை எழுதிப் படிக்க முடியவில்லை. ஆகாவே, பௌத்த ஜைனர்கள் தமது சமயநூல்கள் எழுதப்பட்ட பிராகிருத மொழிகளைத் தமிழருக்குக் கற்பிக்க வேண்டிப் புதிதாக ஒருவகை எழுத்துக்களை உண்டாக்கினார்கள். பிராமி எழுத்துக்களிலிருந்து புதிதாக உண்டாக்கப்பட்ட அவ்வெழுத்துக்களுக்குக் கிரந்த எழுத்து என்பது பெயர். இவ்வாறு பிராகிருத மொழிகள் முதன் முதல் தமிழ்நாட்டிலே பயிலப் படுவதற்குக் காரணமாக இருந்தவர் பௌத்த ஜைனர்களே.

(சமஸ்கிருத மொழி என்று கூறினால், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் ஆரியவேதங்கள் எழுதப்பட்டதும், ஆரியர்கள் பேசியதுமான பழைய மொழி என்று ஒரு தவறான எண்ணம் கற்றவர்கள் இடத்திலும் நிலவிவருகிறது. இது தவறு. ஆரிய வர்த்தம் எனப்படும் பஞ்சாப் சிந்து நதிக்கரைகளில் குடியேறிய ஆரியர் பேசியமொழி சமஸ்கிருதம் அன்று. வேதகாலத்து ஆரியர் பேசிய ஆரியமொழி இறந்து அழிந்து ஒழிந்து போயிற்று. பழைய ஆரியம் அழிந்தொழிந்த பிறகு, சமஸ்கிருதம் எனப்படும் வடமொழி மெல்லமெல்ல உருவடையத் தொடங்கிற்று. பிறகு ஏறத்தாழ கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலே சமஸ்கிருதம் உருவடைந்தது. சமஸ்கிருதத்திலே பழைய ஆரியச் சொற்களும், தொன்றுதொட்டு இந்தியாவில் வழங்கிவந்த பிராகிருத மொழிச் சொற்களும், திராவிட மொழிச் சொற்களும் கலந்துள்ளன. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட சமஸ்கிருதத்துக்குப் புதிதாக இலக்கணமும் அமைக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்னும் பெயரே, இது புதிதாகத் தோன்றிய மொழி என்பதை வலியுறுத்துகிறது. (சமம் + கிருதம் = சமஸ்கிருதம் = நன்றாக, செம்மையாக (perfect or improved) செய்யப்பட்டது என்பது பொருள்.) பிராகிருதம் என்பதற்கு அடிப்படையானது, அநாதியாக உள்ளது என்பது பொருள். சமஸ்கிருத மொழியிலே பல நூற்றுக்கணக்கான திராவிட மொழிச் சொற்களும் கலந்திருப்பதைக் கற்றறிந்த அறிஞர் காட்டியுள்ளார்கள். புதிதாக உண்டாக்கப்பட்ட சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் கலக்கப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்திலே (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே) வட இந்தியாவில் திராவிட மொழிகள் வழங்கிவந்தன. திராவிடச் சொற்களும், பிராகிருதச் சொற்களும் பழைய ஆரியச் சொற்களும் சேர்ந்து புதிதாக அமைந்ததே சமஸ்கிருத பாஷை என்பதும், அதற்கும் பழைய ஆரிய பாஷைக்கும் மாறுபாடுகள் உண்டு என்பதும் அறியற்பாலன. பிராகிருத மொழிகள் முந்தியவை. சமஸ்கிருதம் பின்னால் உண்டானது. சமஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் உண்டாயின என்று சிலர் கருதுவது தவறு. )

(இக்காலத்திலே கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பௌத்த ஜைன மதங்கள் செல்வாக்கிழந்து பிராமண மதம் செல்வாக்கு பெற்ற காலத்திலே, பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ்கிருத மொழிக்கு ஆதிக்கம் ஏற்பட்டது. அப்போது பௌத்தர்களும் (முக்கியமாக மகாயான பௌத்தர்களும்) ஜைனர்களும் தமது மதநூல்களை வடமொழியில் எழுதிவைத்தார்கள்.)

பௌத்தர்களும் ஜைனர்களும் பிராகிருத மொழியைக் கற்றவர்கள் என்பதைத் தேவாரத்தில் திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கூறியுள்ளார்கள்.

“ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்
பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் வெட்குறுபக்கமா
மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணு மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயரன் நிற்கவே” (2)

இதில், சங்கத பங்கதம் என்பது சமஸ்கிருத மொழியை பாகதம் என்பது பிராகிருத மொழியை.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், பௌத்த ஜைனர்கள் பிராகிருத மொழியை ஓதியதை ஏளனம் செய்து காட்டுகிறார். அச்செய்யுள்:

“நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்றிவர் (றியே
குமணமாமலைக் குன்றுபோல் நின்று தங்கள் கூறையொன் றின்
ஞமண ஞாஞண ஞாணஞோணமென் றோதியாரையு நாணிலா
அமணராற் பழிப் புடையரோநமக் கடிகளாகிய அடிகளே.” (9)

சமஸ்கிருத மொழியில் க்ஷகர, ஸகர, ரகரங்கள் அதிகமாகப் பயின்று வருவது போல பிராகிருத மொழிகளிலே ஙகரம், ஞகரம், ணகரம், மகரங்கள் அதிகமாகப் பயின்று வருகின்றன. மாகதி, அர்த்தமாகதி மொழிகளைப் பயின்றவர்கள், அல்லது பயிலக் கேட்டவர்கள் இந்த உண்மையை நன்கறிவார்கள். இதைத்தான் மேலே காட்டிய தேவாரத்தில், சுந்தரமூர்த்திகள் “ஞமண ஞாஞண ஞாணஞோணம்” என்று ஏளனம் செய்து காட்டுகிறார். இதனால், சம்பந்தர், சுந்தரர் காலத்திலும் அதாவது 7 ஆவது 8 ஆவது நூற்றாண்டுகளிலும் பௌத்த ஜைனர் பிராகிருத நூல்களை ஓதிவந்தார்கள் என்பது தெரிகிறது.

இடைக்காலத்தில், பௌத்த ஜைனர்கள், தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் விரவிக் கலந்து மணிப்பிரவாளம் என்னும் புதியதோர் உரை நடையை உண்டாக்கினார்கள். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட பௌத்த ஜைன நூல்கள் இடைக்காலத்திலே பயிலப் பட்டன. பௌத்த மதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்து போய்விட்டபடியினால், பௌத்தச் சார்பானா மணிப்பிரவாள நடை நூல்களும் அழிந்துவிட்டன. ஆனால், பௌத்தர் இயற்றிய வீரசொழியம் என்னும் தமிழ் இலக்கண நூலிலே மணிப்பிரவாள நடை குறிப்பிடப்படுகிறது.

“இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை
நடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின்
இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கிவியன்
தொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே”

என வரும் வீரசோழியம், அலங்காரப்படலச் செய்யுள் 40 காண்க.

ஜைனமதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்துவிடாமல் இப்போது இருக்கிறபடியினாலே அவர்கள் இயற்றிய ஸ்ரீபுராணம் முதலிய மணிப்பிரவாள உரைநடை நூல்கள் இன்னும் வழங்கப் படுகின்றன.

பிற்காலத்திலே, கி. பி 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், வைணவ சமயத்தார், ஆழ்வார்கள் அருளிய தூய செந்தமிழ்ப் பாக்களுக்கு உரையெழுதியபோது, பௌத்தர்களையும் சமணர்களையும் பின்பற்றி, மணிப்பிரவாள நடையில் உரைகளை (வியாக்கியானங்களை) எழுதினார்கள். அவர்கள் எழுதிய மணிப்பிரவாள உரை நூல்கள், படிப்பார் இல்லாமல் இப்போது பயனற்றுக் கிடக்கின்றன. ஏனென்றால், சமஸ்கிருதம் படித்தவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால், அவர்களுக்கு மணிப்பிரவாளம் விளங்குவதில்லை. தமிழ்மொழி படித்தவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியாதாகையினாலே, அவர்களுக்கும் மணிப்பிரவாளம் விளங்குகிறதில்லை. வடமொழி தமிழ்மொழி இரண்டையும் கற்றவர்களோ மிகமிகச் சொற்பமானவர், ஆயிரத்தில் ஒருவராவது இரண்டையும் கற்றவர் உளரோ என்பதே ஐயத்திற்கிடமாயிருக்கிறது. அப்படிப் படித்தவர்களிலும் வைணவப்பற்றுள்ளவர் எத்தனைப்பேர்? இவ்வாறு, நாலாயிரப் பிரபந்தத்தின் மணிப்பிரவாள உரை, இருந்தும் இறந்த நூலாக இருக்கிறது. இது தமிழ் நாட்டிலே மணிப்பிரவாள நடைக்கு இடமில்லை என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக விளங்குகிறது. மணிப்பிரவாள நடை வடமொழி கற்றவருக்கும் விளங்காமல் தமிழ்மொழி கற்றவருக்கும் விளங்காமல், ஒரு புதிய மொழியாக இருக்கிறது. ஆகவே, இப்போது சென்னைப் பல்கலைக்கழத்தார் நாலாயிரப் பிரபந்த மணிப்பிரவாள உரைக்குத் தமிழில் விளக்க உரை எழுதி வெளியிட்டு வருகிறார்கள். மணிப்பிரவாள நடை தமிழ்மொழிக்கு வேண்டாத ஒன்றாகும்.

இதனால், பாகத மொழிகளைத் தமிழ்நாட்டிலே பயிலச் செய்தவர் பௌத்த ஜைனர்கள் என்பதும், அவர்கள் மூலமாகத் தமிழ்மொழியிலே சில பாகதச் சொற்கள் கலந்தன என்பதும், தமிழ் பாகத மொழிகளைக் கற்பதற்காக அவர்கள் கிரந்த எழுத்துக்களை உண்டாக்கினார்கள் என்பதும், இடைக்காலத்திலே, பிராமணீயம் ஆதிக்கம் பெற்று சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பௌத்த ஜைனரும் சமஸ்கிருதத்தில் நூல்களை இயற்றினார்கள் என்பதும், அன்றியும் அவர்கள் மணிப்பிரவாள நடையைத் தமிழில் அமைத்து மணிப்பிரவாள உரைநடை நூல்களை இயற்றினார்கள் என்பதும், இப்போது மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து விட்டதென்பதும் கூறப்பட்டன.

இந்தச் சரித்திர வரலாற்றினை அறியாதவர்கள், தமிழ் மொழி ஆராய்ச்சி செய்கிறபோது, தமிழிலே பிராகிருத மொழிச் சொற்கள் நோக்கக் கலந்திருப்பதை உணராமல், அச் சொற்கள் சமஸ்கிருத மொழி வாயிலாகக் கலந்தன என்று தவறாக முடிவுகட்டுகிறார்கள். முதலில் பௌத்த ஜைனர்கள் வழியாகப் பிராகிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச் சொற்கள் சில பிற்காலத்தில் நுழைந்தன என்னும் சரித்திர உண்மையை மனத்திற்கொண்டு மொழியாராய்ச்சி செய்ய முற்படுவோர் உண்மையைக் காண்பார்கள். இவ்வாறு மொழியாராய்ச்சி செய்வோர், தமிழ்மொழியை நன்கு கற்றிருக்க வேண்டியதோடு பிராகிருத மொழிகளையும் சமஸ்கிருத மொழியையும் கற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உண்மை காண முடியும்.


11. தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்

1. இளம் போதியார்

இவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ்மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி.பி. முதல் இல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றினை என்னும் சங்க இலக்கியத்தில் 72 ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அப்பாடல் இது:

பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணுத்தக் கன்றது காணுங் காலை!
உயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின்நினக்கியான்
0மறைத்தல் யாவது மிகப்பெரி

தழிதக் கன்றால் தானே! கொண்கன்

யான்யாய் அஞ்சுவல்! எனினும் தானே

பிரிதல் சூழான்; மன்னே! இனியே,

கானல் ஆயம் அறியினும், ஆனா

தலர்வ தன்றுகொல் என்னும்! அதனால்

புலர்வது கொல் அவன் நட்(பு) எனா

அஞ்சுவல் தோழிஎன் நெஞ்சந் தானே!

2. அறவண அடிகள்

இவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலினின்றும் அறியக்கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்து வந்தவர். இவர் நாவன்மை படைத்தவர் என்று தோன்றுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். கோவலன் கொலையுண்ட செய்திகேட்டு மாதவி தன் மகள் மணிமேகலையுடன் இவரது பள்ளியையடைந்து இவரிடம் பௌத்த தருமங் கேட்டுப் பஞ்சசீலத்தை மேற்கொண்டாள். சோழமன்னன் இராணி இராசமாதேவி மணிமேகலையைச் சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, அவளைச் சிறைவீடு செய்ய இவர் அரண்மனை சென்றார். இவரது வருகையைக் கண்ட இராசமாதேவி மிகுந்த வணக்கத்தோடு இவரை வரவேற்றாள் என்று கூறப்படுவதினின்றும், அரச குடும்பத்தினராலும் இவர் நன்கு மதிக்கப்பட்டிருந்தவர் என்பது விளங்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்பெருக்குண்டானபோது, இவர் அதனைவிட்டு மாதவியுடன் சேரநாட்டு வஞ்சிமாநகரம் சென்று, கடைநாள் வரையில் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், அங்கு வந்த மணிமேகலைக்குப் பௌத்த தருமத்தை ஐயமறப் போதித்தார். நீண்டநாள் வாழ்ந்திருந்த இவர் காஞ்சிமாநகரத்திலே நிர்வாணம் (வீடுபேறு) பெற்றார். இவரது காலம் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.

இப்போது காஞ்சிபுரத்தில், ‘அறப்பணஞ்சேரி’ என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அஃது ‘அறவணஞ்சேரி’ என்பதன் மரூஉ என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி (சேரி – தெரு) என்று வழங்கப்பட்டதென்றும் கூறுவர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அறப்பணஞ்சேரி தெரு காஞ்சிபுரத்துக் காமாட்சியம்மன் கோயில் சந்நதித் தெருவின் அருகில் உள்ளது.

அறவண அடிகளைப் பிற்காலத்தில் இருந்த தருமபாலர் என்னும் பௌத்தர் என்று கூறுவர் சிலர். தருமபாலர் என்பது அறவண அடிகள் என்பதன் நேர் மொழிபெயர்ப்பு என்று இவர் கருதுவதால், இவ்வாறு கூறுகின்றனர் போலும். அறவண அடிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இதனால் அறவண அடிகள் வேறு; தருமபாலர் வேறு என்பதை அறியலாம்.

அறவண அடிகள் என்பவர் ஒருவர் உண்மையில் இருந்திலர் என்றும், மணிமேகலையில் கூறப்படுபவர் ஒரு கற்பனைப் பெரியார் என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு கூறுவதன் காரணம் யாதெனில், அறவண அடிகள் ஆகாய வழியாகச் சென்றார் என்பதும், மணிமேகலை, மாதவி முதலியவர்களின் பழம்பிறப்பில் இவர் அவர்களைக் கண்டதாக கூறப்படுவதுமே. இவை மானிட ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளாதலின், இவரைக் கற்பனைப் பெரியார் என்பர். இவ்வாறு கருதுவது தவறு என்று தோன்றுகிறது. இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளையறிதல், வேறிடங்களுக்கு வானத்தில் பறந்து செல்லுதல் முதலியவை பௌத்தமதக் கொள்கைப்படி பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்ட இலக்கணங்களாகும். இதனை ‘சித்தி’ என்பர். ‘ரித்தி’ எனினும் ‘சித்தி’ எனினும் ஒக்கும். பௌத்த மதத்தில் மட்டுமன்று: இந்து மதத்திலும் சங்கராச்சாரியார், சம்பந்தர் முதலிய பெரியார்களும் மானிட ஆற்றலுக்கப்பாற்பட்ட தெய்விகச் செயலைச் செய்தவர் என்று கூறப்படுகின்றனர். அது கொண்டு இவர்களையும் கற்பனைப் பெரியார் என்று கருதத்தகுமோ? இவற்றை அவ்வச்சமயச் கொள்கை என்று ஒதுக்கி விடுவோமாயின், அவர்களும் உண்மைப் பெரியாரே என்பது விளங்கும்.

3. மணிமேகலை

யாம் அறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெயர் பெற்ற பௌத்தப் பிக்குணி இவள் ஒருத்தியே. இவளது வரலாறு மணிமேகலை நூலினால் அறியப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வத்திற்சிறந்த கோவலன் என்பவனுக்கும், அவனது காமக் கிழத்தி மாதவி என்பவளுக்கும் பிறந்தவள், மணிமேகலை. இக் குழந்தை செல்வமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயதடைந்த பின்னர், இசைக்கலை நாடகக்கலைகளைக் கற்றுத் தேர்ந்து மங்கைப்பருவம் அடைந்தது. இந் நங்கையின் கட்டழகினையும், இசைக்கலை, நாடகக்கலைகளில் அடைந்துள்ள தேர்ச்சியினையும் கண்டு, சோழ அரசன் மகன் உதயகுமரன் என்பவன் இவள்மேல் காதல் கொண்டான்.

இவ்வாறிருக்க, மணிமேகலையின் தந்தை கோவலன் மதுரைமாநகரம் சென்று, ஆங்குப் பொய்க்குற்றஞ் சாற்றப் பெற்றுக் கொலையுண்டிறந்தான். கோவலன் இறந்த கொடுஞ் செய்தியைக் கேட்டு மாதவி மனம் நொந்து, உலகினை வெறுத்துத் தன் மகள் மணிமேகலையுடன் அறவண அடிகள் என்னும் பௌத்த பிக்ஷு இருந்த பௌத்தப் பள்ளியில் சரணடைந்து, பௌத்த சீலத்தை மேற்கொண்டாள். மணிமேகலையை நாடகக் கணிகை வாழ்க்கையில் புகுத்த அவள் பாட்டி சித்திராபதி என்பவள் கடுமையாக முயன்றாள். ஆயினும், மணிமேகலை அந்த வாழ்க்கையில் புக இசையவில்லை. அரசன் மகன் உதயகுமரனும் அவளைத் தன் காமக்கிழத்தியாக்க முயன்றான். அதற்கும் அவள் உடன்படவில்லை. ஆனாலும், அவன் அவளை விடாமல் அவளிடம் சென்று, அடிக்கடி பிக்குணிக் கோலத்தை விட்டுவிடும்படி வேண்டினான். மணிமேகலை இலங்கையின் வடபால் உள்ள மணிபல்லவம் சென்று, அங்கிருந்த பாதபீடிகையைத் தொழுது, மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் வந்தாள். அதுமுதல் அவள் உலகவறவி என்னும் அம்பலத்தில் சென்று, தான் ஐயமேற்று வந்த உணவை அங்கிருந்த கூனர், குருடர், முடவர் முதலிய எளியவருக்குக் கொடுத்து, அவர்களது பசிப்பிணியை நீக்கி வந்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட சோழமன்னன் மணிமேகலையை அழைத்து, அவளது பொதுநல ஊழியத்தைப் பாராட்டி, அவளுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கக் சென்னான். அவள் சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்ட, அவ்வாறே அரசன் செய்தான்.

காயசண்டிகை என்பவள் ஒருத்தி வடநாட்டினின்றும் காவிரிப்பூம்பட்டினம் வந்து பிச்சையேற்றுண்டு வாழ்ந்து வந்தாள். அவள் மணிமேகலையைப் போன்ற உருவம் உடையவள். இந்தக் காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அவள் கணவன் வடநாட்டிலிருந்து அந் நகரத்திற்கு வந்தான். அப்போது, உலகவறவி என்னும் அம்பலத்தில் மணிமேகலையுடன் உதய குமரன் சொல்லாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு மணிமேகலை, நிலையாமையைக் கூறித் தன்மேல் அவனுக்குள்ள காதலை விட்டு விடும்படி கூறிக்கொண்டிருந்தாள். காயசண்டிகையைத் தேடிக் கொண்டு வந்த அவள் கணவன் மணிமேகலையைக் கண்டு அவள்தான் தன் மனைவியாகிய காயசண்டிகை என்று தவறாகக் கருதி, அவள் இன்னோர் ஆடவனோடு பேசுவதைக் கண்டு பொறானாய், உண்மையை அறிய அங்கு ஒரு மூலையில் பதுங்கியிருந்தான். உதயகுமரன் மணிமேகலையைவிட்டுச் சென்று, இரவு வந்தபோது மீண்டும் அவ்விடம் வந்தான். உருவ ஒற்றுமையினால் தன் மனைவி என்று தவறாகக்கருதியிருந்தவனாதலின், காயசண்டிகையின் கணவன், இரவில் வந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். தன் மனைவி என்று மணிமேகலையைக் கருதியதும், உதய குமரன் அரசன் மகன் என்று அறியாததும் இந்நிகழ்ச்சிக்குக் காரணம்.

தவறுதலால் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைக் பொழுது விடிந்த பின்னர் மக்கள் அறிந்தனர். உலகவறவியில் இருந்த முனிவர்கள் இதனை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் உண்மை அறிந்து மணிமேகலையை நகரமக்கள் துன்புறுத்தா வண்ணம் காவலில் வைத்தான். இராசமா தேவி தன் மகன் இறந்தது மணிமேகலையினால் என்று கருதி, அவளுக்கு ஊறு செய்ய நினைத்து, அவளைக் காவலினின்று தன்னிடம் அழைத்துக் கொண்டு, அவளுக்குப் பற்பல துன்பங்களைச் செய்து பார்த்தாள்; ஒழுக்கவீனமுள்ளவள் என்று அலர் தூற்றவும் முயன்றாள். இவற்றிற்கெல்லாம் மணிமேகலை உட்படாமல் தன் நிலையைக் காத்துக் கொண்டாள். இவளது உண்மை நிலையை அறிந்த பின்னர், இராசமாதேவி தன் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு மணிமேகலையைச் சிறைவிட்டாள்.

பின்னர், மணிமேகலை, தான் அந்நகரில் இருந்தால் அரசகுமாரன் இறப்பதற்குக் காரணமாயிருந்தவள் என்று ஊரார் குறை கூறுவராதலின், அந்நகரத்தில் இருக்க விரும்பாமல், அறவண அடிகள், மாதவி முதலியவர்களிடம் விடைபெற்றுச் சாவகநாடு (ஜாவா தீவு) சென்றாள். சின்னாள் சென்ற பின்னர், அங்கிருந்து சேரநாட்டின் தலைநகரமான வஞ்சிமாநகர் சென்று கன்ணகி கோட்டத்தை வணங்கி, அங்கு வாழ்ந்திருந்த பற்பல சமயத்தவரையுங் கண்டு, அவ்வவர்களின் சமய உண்மைகளை அறிந்தாள். அவற்றால் ஒன்றும் மனம்தேறாமல், கடைசியாகக் காஞ்சி மாநகருக்குச் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம் பௌத்த தரும மெய்ப்பொருளைக் கேட்டு உணர்ந்து, நெடுநாள் நோற்றுக் கடைசியில் ஆவ்வூரிலேயே காலமானாள்.

மணிமேகலைக் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறபடியால் அவள் உண்மையில் வாழ்ந்திருந்தவள் அல்லள், கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்று சில ஆராய்ச்சிக்காரர் மேலோட்டமாக ஆராய்ந்து கூறுகிறார்கள். காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து மணிமேகலை மணிபல்லவத் தீவுக்கு (யாழ்பாணத்துக்கு வடக்கே உள்ள தீவு) ஆகாய வழியே பறந்துபோய்த் திரும்பி வந்தாள் என்றும், பிறகு கிழக்கே வெகு தூரத்திலிருக்கும் சாவக நாட்டுக்கு (கிழக்கந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாவா தீவு) ஆகாய வழியே பறந்து போய் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து மணிபல்லவத்துக்கு வந்தாள் என்றும் பின்னர் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து சேரநாட்டு வஞ்சிமாநகரத்துக்குப் போனாள் என்றும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ஆகவே மணிமேகலை உண்மையில் இருந்தவள் அல்லள் என்றும் அவள் கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்றும் கருதத் தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மை விளங்கும். மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றாள் என்பது வெறுங்கற்பனைதான். ஏன் இப்படிக் கற்பித்தார் என்பதை ஆராயவேண்டும். மணிமேகலைக் காவியம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்.

சங்ககாலத்தில் தமிழ்மகளிர் கடலில் பிராயாணம் செய்யக்கூடாது என்னும் மரபு இருந்தது. அந்த மரபை அக்காலத்துத் தமிழரும் தமிழ்ப்புலவர்களும் கடைப் பிடித்துக் கையாண்டார்கள். அவ்வாறே இலக்கணமும் எழுதி வைத்தார்கள். முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால், பௌத்த மதத்துப் பெண்மணிகளுக்கு இந்தத் தடை இல்லை. பௌத்த மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, கடல் கடந்த நாடுகளுக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தபடியால் அவள் கடலில் கப்பற்பிராயணம் செய்தாள். கடல் யாத்திரை செய்தது பௌத்தமதத்தவருக்கு குற்றம் அன்று. ஆனால், இந்த வரலாற்றைக் காவியமாக எழுதிய சாத்தனார், பௌத்தருக்காக மட்டும் காவியம் எழுதவில்லை. பௌத்தரல்லாத தமிழருக்காகவும் மணிமேகலை காவியத்தை எழுதினார். ஆனால், பௌத்தரல்லாத தமிழருக்கு மகளிர் கடற்பிரயாணம் செய்வது உடன்பாடன்று. அஃது அவர்களுடைய மரபுக்கும் பண்பாட்டுக்கும் மாறுபட்டது. ஆகவே சங்கப் புலவரான சாத்தனார் தம்முடைய காவியத்தில் கற்பனையைப் புகுத்த வேண்டியவரானார். மணிமேகலை கடற்பிரயாணஞ் செய்தாள் என்னும் உண்மையைக் கூறினால் அக்காலத்துத் தமிழுலகம் இந்த நூலை ஏற்காது. ஆகவே அவர்களும் ஏற்கத்தக்க விதத்தில் மணிமேகலை ஆகாயவழியாக அயல் நாடுகளுக்குப் பறந்து சென்றாள் என்று கற்பனை செய்து காவியத்தை முடித்தார். அந்தக் காலத்துத் தமிழரின் பழக்கவழக்கப் பண்பாடுகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்தபடியால் மணிமேகலைக் காவியத்தை அக்காலத்துத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை ஆராய்ந்தவர் மணிமேகலையைக் கற்பனை உருவம் என்று கருதமாட்டார்கள். மணிமேகலை உண்மையில் வாழ்ந்து இருந்த ஒரு பெண்மணி என்றே கொள்வார்கள். இதன் விரிவான ஆராய்ச்சியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள மணிமேகலையின் விண்வழிச் செலவு என்னும் கட்டுரையில் காண்க.

மணிமேகலையின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி.

மணிமேகலை வரலாற்றில் ‘அமுத சுரபி’ என்னும் சிறு பாத்திரத்தினின்று நினைத்தபோதெல்லாம் வேண்டிய அளவு உணவை உண்டாக்கிக் கொடுத்தல், பதுமைகள் பேசுதல், உருவம் மாறுதல் முதலிய சித்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை உண்மை என்று கொள்ளாமல் சமயக் கொள்கை என்று ஒதுக்கிவிடுவர் பகுத்தறிவாளர்.

‘மணிமேகலை’ என்னும் பெயருள்ள பௌத்த தெய்வம் ஒன்று உண்டு. அதன் வரலாற்றினை இந்நூல் இணைப்பில் காண்க.

4. சீத்தலைச் சாத்தனார்

இவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகிறது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் ‘சாத்தன்’ என்று வழங்குகின்றது ‘சீத்தலை’ என்னும் அடைமொழிகொண்டு சீ வழிந்தோடும் புண்ணுடைய தலையார் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக்கொள்ள அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீப்பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர். சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் இவருக்குச் ‘சீத்தலை’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டதென்று கூறுவார் கூற்றுப் பொருத்தமாகத் தோன்றுகிறது. மதுரைமாநகரில் இவர் கூலவாணிகஞ் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர்.

சீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண்டிருந்த ஐயனாரின் பெயராகிய ‘சாத்தன்’ என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை. (‘சாத்தனார்’ என்னும் இந்நூல் இணைப்புக் காண்க.)

‘சாத்தன்’ என்னும் பெயர் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும்பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில் மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நம் சாத்தனாருக்கும் அவ்வாறே ‘சீத்தலை’, ‘மதுரைக் கூலவாணிகர்’ என்னும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தார்; எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவராதல் வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ்நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வந்நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல்நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும். இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில் புகார், மதுரை, வஞ்சி, காஞ்சிபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று செங்குட்டுவனுக்கும், அவன் தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில் தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன், கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான். இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக ‘மணிமேகலை’ என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார்.

மணிமேகலையை இயற்றியது மன்றி, வேறு சில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.

சங்க நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மெற்கண்ட செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவது கொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக் கூடுமன்றோ? ஆனால், ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்குமட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச் சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப்பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காக மட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது எளிய நடையில் அமைக்கப்பட்டது. தமது மதக்கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்குமட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லாமக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது.

இவர் தாம் இயற்றி மணிமேகலையில்,

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” (மணிமேகலை 22-060)

என்று திருக்குறளை மேர்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவராவர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. ‘மணிமேகலை நூலின் காலம்’ என்னும் இணைப்புக் காண்க.

5. சங்கமித்திரர்

இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது சமயக்கொள்கை மகாயான பௌத்தம். இவர் சோழநாட்டில் வாழ்ந்திருந்த காலத்த்தில், இலங்கையில் கோதாபயன் என்றும், மேவாணாபயன் என்றும் பெயருள்ள அரசன் அரசாண்டு வந்தான். இந்த அரசன் கி.பி 302 முதல் 315 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில் இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில், அபடீகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்ஷுக்கள் வைதுல்ய மதத்தை மேற்கொண்டிருந்தபடியால் அவர்களை அரசன் அக்கரைக்கு, அஃதாவது தமிழ்நாட்டில், நாடு கடத்திவிட்டான். இலங்கை மன்னன் ஈனயான (தேரவாத) பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் ஆகையால், அதற்கு மாறான மகாயான பௌத்தமான வைதுல்ய மதத்தை தனது நாட்டில் பரவவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, அப் பிக்ஷுக்களைத் தமிழ்நாட்டிற்குத் துரத்திவிட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்ஷுக்கள் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

இவர்கள் நாடு கடத்தப்பட்டுச் சோழ நாட்டுக்கு வந்த காரணத்தையறிந்த சங்கமித்திரர், தாமும் வைதுல்ய (மகாயான) பௌத்த மதத்தைச் சேர்ந்தவராதலின், தமது மதத்தை இலங்கையில் நாட்டவேண்டும் என்னும் உறுதி கொண்டு இலங்கைக்குச் சென்றார். சென்று வைதுல்ய மதத்தைப் போதித்தார். இதையறிந்த ஈனயான பௌத்த பிக்ஷுக்கள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரையும் ஈனயான பிக்ஷுக்களின் தலைவரான சங்கபாலன் என்பரையும் அழைத்துத் தனது முன்னிலையில் வாது செய்க என்றும், யார் வாதில் வெற்றி பெறுகிறாரோ அவரது மதந்தான் சிறந்தது என்றும் கூறினான். இருவருக்கும் அரசன் அவைக்களத்தில் வாதப்போர் நிகழ்ந்தது. வாதத்தில் தமிழரான சங்கமித்திரரே வெற்றி பெற்றார். இலங்கைவேந்தன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி இவரை ஆதரித்தான். ஆதரித்ததுமட்டும் அன்றித் தமது பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். சங்கமித்திரர், இவ்விருவரில் இளையவனான மகாசேனனிடத்தில் அதிக அன்பு பாராட்டினபடியால், முதல்வனான ஜேட்ட திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இவர், அரசனிடம் பெற்றிருந்த செல்வாக்கைக் கொண்டு வைதுல்ய மதத்தை இலங்கையில் பரப்ப முயற்சி செய்தார்.

இவ்வாறிருக்க மேகவர்ணாபயன் காலஞ்சென்றான். அரசுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 323-33) ஏற்று அரசுகட்டில் ஏறினான். ஏறியவுடன் மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் தம் மாணவனான இவன் ஏற்கெனவே தம்மிடம் பகைமை பாராட்டி வந்தவனாதலின் தம்மையும் கொன்று விடுவானோ என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு வந்துவிட்டார் பிறகு பத்து ஆண்டு வரையில் இலங்கை செல்லவே இல்லை. பத்து ஆண்டு கழித்த பின்னர், ஜேட்டதிஸ்ஸன் இறந்துவிட்டான். அப்போது அரசுரிமையை இவரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனன் (கி.பி. 334-361) மேற்கொண்டான். இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் இலங்கைக்குச் சென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அது முதல் இலங்கையில் தங்கி மீண்டும் தமது வைதுல்ய மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.

மகாவிகாரை என்னும் பௌத்த பள்ளியில் இருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று இவர் அரசனிடம் குற்றம் சாற்றினார். அரசன் இவர் சொல்வதைத் தவறாதவன் ஆகையால், மகாவிகாரையில் வாழும் பிக்ஷுக்களுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிட்டான். இதன் காரணமாக மாகாவிகாரையிலிருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் நகரத்தைவிட்டு இலங்கையின் தென்பகுதிக்குப் போய்விட்டார்கள். போய்விடவே ‘மகாவிகாரைப் பள்ளி உரியவரின்றிக் கிடக்கிறபடியால், அஃது அரசனுக்குரிய பொருளாய் விட்டது’ என்று சங்கமித்திரர் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் அதனை இவரிடத்திலே ஒப்படைத்தான். சங்கமித்திரர் அந்த விகாரையை இடித்து, அப்பொருள்களைக் கொண்டு தமது கொள்கையைச் சேர்ந்த பிக்ஷுக்கள் வாழும் அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இச்செய்கைக்குச் சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி அவனால் அதிகமாக காதலிக்கப்பட்டவள் – இலங்கைத்தீவின் பழைய மதமாகிய ஈனயான பௌத்த மதத்தைப் பின்பற்றி நடப்பவளாதலின், அபயகிரி விகாரையிலிருந்த பிக்ஷுக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்த சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவினாள். அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் மகாவம்சம் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

சங்கமித்திரர் வைதுல்ய மதத்தை நன்கு கற்று, அதன்வழி ஒழுகியதோடு, அந்த மதத்தைச் சிங்களத்தீவிலும் பரவச் செய்ய முயன்றார். பௌத்த மதக்கொள்கைகளை நன்கு அறிந்தவர். இவரது வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர் ஏதேனும் நூல் இயற்றியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருந்தவர்.

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இலங்கை வேந்தன் ஒருவனைச் சைவ சமயத்தில் புகச் செய்தார் என்னும் வரலாறும், சங்கமித்திரர் இலங்கை மன்னனை வைதுல்ய மதத்தில் புகச் செய்த வரலாறும் ஒத்திருத்தலின், சங்கமித்திரர் என்று மகாவம்சம் கூறுவது மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்று திரு. கே. ஜி. சேஷையர் என்பவர் ஒரு திங்கள் வெளியீட்டில் எழுதியிருக்கிறார்; (Tamilian Antiquary Vol I. No. 4 P 54) இவர் கருத்தையே உண்மை எனக் கொண்டு ஸ்மித் என்னும் சரித்திர ஆசிரியரும் எழுதியிருக்கிறார். அவர், இலங்கை வேந்தனை, மாணிக்கவாசகர் சைவசமயத்தில் சேர்த்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரசன் மகாவம்சத்தில் கூறப்பட்ட கோதாபயனாக இருக்ககூடும் என்றும், மகாவம்ச ஆசிரியர் சைவராகிய மாணிக்க வாசகரைப் புத்தபிக்ஷு சங்கமித்திரர் என்று தவறாக எழுதியிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார். இவ்விருவர் கருத்துக்களும் தவறு என்பது எமது கருத்து. ஏனென்றால், மாணிக்கவாசகர் இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனைச் சைவ சமயத்தில் சேர்த்ததாக அவர் வரலாற்றில் காணப்படவில்லை. இலங்கை மன்னன் சிதம்பரத்திற்கு வந்தபோது அவனை மதம் மாற்றியதாக சொல்லப்பட்டிருக்கிறது. சங்கமித்திரரோ நேரே இலங்கைக்குச் சென்று அந்த நாட்டரசனை மதம் மாறச் செய்தார். அன்றியும், சங்கமித்திரர் இலங்கையில் கொல்லப்பட்டிறந்தார். மாணிக்கவாசகரோ சிதம்பரத்தில் சிவகதியடைந்தார். மாணிக்கவாசகர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். சங்கமித்திரர் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இக்காரணங்களினால் சங்கமித்திரரும் மாணிக்கவாசகரும் ஒருவரே என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

6. நாதகுத்தனார்

இப்பெயர் “நாதகுப்தனார்” என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78 ஆம் பாட்டின்) உரையில் ‘புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு’ என்னும் அடியை மேற்கோள்காட்டி, இதனை ‘நாதகுத்தனார் வாக்கு’ என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும். மேற்கோள் காட்டப்பட்ட இப்பகுதி குண்டலகேசிச் செய்யுளிலிருந்து எடுக்கப்பட்டது. அச்செய்யுள் இது:

“எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி
நுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய வுடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ.”

நாதகுத்தனாரை நாகசேனர் என்று கஸ்ஸபதேரர் கூறுகிறார். பௌத்தராகிய கஸ்ஸபதேரர் சோழநாட்டுத் தமிழர். இவர் திரிபிடகங்களில் ஒன்றான விநய பிடகத்துக்குப் பாலிமொழியில் சில உரைநூல்களை எழுதினார். அவ்வுரைகளில் ஒன்று விமதி விநோதனீ என்பது. இந்த நூலில் இவர் குண்டலகேசி நூலாசிரியரின் பெயர் நாகசேனர் என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் குண்டலகேசி என்னும் செய்யுள் நூலை நாகசேனர் என்பவர் பிறமதங்களைக் கண்டிப்பதற்காக எழுதினார் என்று கூறுகிறார். இவர் கூறுகிற பாலிமொழி வாசம் இது:

“புப்பேகிர இம்ஸ்மிம் தமிளரட்டே கொஸி பின்னலத்திகோ
நாகஸேனோ நாம தேரோ குண்டல கேஸி வத்தும் பரவாத
மதன நயதஸ்ஸனத்தம் கப்பரூபேன கரேந்தோ.”

இதனால் நாதகுத்தனாரருக்கு நாகசேனர் என்னும் பெயரும் இருந்தது என்று தெரிகிறது.

நாதகுத்தனாரைப் பற்றிய வரலாறு வேறொன்றும் தெரியவில்லை; ‘குண்டலகேசி’ என்னும் பௌத்தப் பிக்குணி ஒருத்தி, வடநாட்டில் இருந்த ‘ஆவணம்’ என்னும் ஊரில் ‘நாதகுத்தனார்’ என்னும் ஆருகத சமயத்தவரை வாதில் வென்றதாக நீலகேசி உரையினால் தெரிகிறது. ஆருகதராகிய அந்த நாதகுத்தனார் வேறு. குண்டலகேசியின் ஆசிரியரும் பௌத்தருமாகிய இந்த நாதகுத்தனார் வேறு.

நீலகேசி என்னும் ஜைன நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்று கூறப்படுவதால், குண்டலகேசியும் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாதல் வேண்டும். ஏனென்றால், குண்டலகேசியை மறுப்பதற்காகவே நீலகேசி இயற்றப்பட்டதென்பது வரலாறு. ஆகவே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாதகுத்தனாரும்

கி.பி. பத்தம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல் வேண்டும்.

7. ஆசாரிய புத்ததத்த மகாதேரர்

இவர் பௌத்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறார். சோழநாட்டில் பிறந்த தமிழராகிய இவர், கவீரபட்டினம் (காவிரிப்பூம்பட்டினம்), உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலான இடங்களிலும், இலங்கையிலே அநுராதபுரத்தில் இருந்த மகா விகாரையிலும் வசித்திருந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசர் என்னும் சோழ அமைச்சர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது இவர், தம் மாணவராகிய புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி மதுராத்தவிலாசினீ என்னும் நூலை எழுதினார். இந்நூல், சூத்திரபிடகத்தின் 5 ஆவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் 14 ஆவது பிரிவுக்கு உரையாகும். இவ்வுரை நூலைப் புத்தவம்சாட்டகதா என்றும் கூறுவர். மற்றொரு மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை இயற்றினார். இது அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போன்றது. பூதமங்கலம் என்னும் ஊரில், வேணுதாசர் என்பவர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது வினயவினிச்சயம் என்னும் நூலைப் புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். களம்ப (களபர) குலத்தில் பிறந்த அச்சுதவிக்கந்தன் என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் இந்நூலை எழுதியதாக இந்நூலில் இவர் கூறியிருக்கிறார். இலங்கையிலே மகாவிகாரையில் இருந்த மகாதேரர் என்னும் சங்கபாலருடைய வேண்டுகோளின்படி உத்தரவினிச்சயம் என்னும் நூலை இவர் இயற்றினார். ரூபாரூபவிபாகம் என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார். ஜினாலங்காரம் என்னும் நூலையும் இயற்றியதாக கூறுவர். இவர் இயற்றிய வினய வினிச்சயம் என்னும் நூலுக்கு, இலங்கையை அரசாண்ட பராக்கிரமபாகு II (கி.பி 1247-1282) என்னும் அரசன் சிங்களமொழியில் ஓர் உரை எழுதினார். இப்போது அவ்வுரை நூல் கிடைக்கவில்லை.

ஆசாரிய புத்ததத்த மகாதேரர் பாலிமொழியை நன்கு கற்றவர். பாலிமொழியில் உள்ள பௌத்தருடைய வேதமாகிய திரிபிடகம் முதலிய நூல்களைத் துறைபோக ஓதியுணர்ந்தவர். பாலிமொழியிலே இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது நூலுக்குப் பிற்காலத்தில் உரை எழுதிய ஒருவர் இவரைப்பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. “மாதிஸாபி கவி ஹொந்தி, புத்ததத்தே திலங்கதே.” புத்தத்தர் காலஞ்சென்று விட்டபடியால், நாமுங்கூடக் கவிவாணர் என்று கூறிக்கொள்ளலாம் என்பது பொருள்.

இவர் தாம் இயற்றிய நூல்களில், தாம் பிறந்த சோழநாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பூதமங்கலத்தையும் இனிமையான கவிகளால் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

திரிபிடகத்தின் பல பகுதிகளுக்கு உரை எழுதிய புத்தகோஷ மகாசாரியரும், புத்ததத்த தேரரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும், ஒருவரையொருவர் கண்டு உரையாடினார்கள் என்றும், பத்தகோஷரை விட புத்ததத்தர் வயதில் மூத்தவர் என்றும் நூல்கள் கூறுகின்றன.

(புத்ததத்தரைப் பற்றி சில செய்திகளை, சான்றுகள் ஆதாரங்கள் இல்லாமலே தமது மனம் போனவாறு ஒருவர் எழுதியிருக்கிறார் (Buddhadatha by S. Jambunathan 1928). இவர் கூறும் சில செய்திகளாவன: புத்ததத்தர் அச்சுதவிக்கந்த அரசனுக்கு மந்திரியாக இருந்தாராம். இளந்தத்தர் என்று புத்ததத்தருக்குத் தமிழ்நாட்டுப் பௌத்தர் வேறுபெயர் இட்டு வழங்கினார்களாம். உரகபுரம், அஃதாவது இப்போதுள்ள உறையூர், காவிரிக் கரையில் ஒரு துறைமுகப்பட்டினமாக இருந்ததாம். வேங்கிநாட்டு அரசர்களாலும் மிலாநாட்டுச் சிற்றரசராலும் புத்ததத்தர் ஆதரிக்கப்பட்டாராம். இவ்வாறு எல்லாம் இவர், ஆதாரம் காட்டாமல், காரணம் கூறாமல், ஆராய்ச்சித் துறையைச் சிறிதும் பின்பற்றாமல் மனம் போன போக்காக எழுதி வெளுத்துக்கட்டியிருக்கிறார். புறநானூற்றில் கூறப்படுகிற இளந்தத்தன் என்னும் தமிழ் புலவரை மனதில் எண்ணிக்கொண்டு, அதை வெளிப்படையாகக் கூறாமல், அவ்விளந்தத்தரையும் நம் புத்ததத்தரையும் முடிச்சுப் போடுகிறார். இவ்வுரைகளை ஆறிவுடையோர் ஏற்கமாட்டார்.)

இவர் வாழ்ந்திருந்த காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். எப்படி என்றால், புத்தகோஷர் வினய பிடகத்துக்குத் தாம் எழுதிய ஸமந்தபாஸாதிகா என்னும் உரையில், இலங்கையரசன் ஸ்ரீநிவாசனுடைய 20 ஆம் ஆட்சி ஆண்டில் அவ்வுரையைத் தொடங்கி 21 ஆம் ஆண்டில் முடித்ததாகக் கூறுகிறார். மகாவம்சம் என்னும் நூலில், புத்தகோஷர், இலங்கையை யாண்ட மகாநாமன் என்னும் அரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து உரை எழுதினார் என்று கூறப்பட்டுள்ளது. புத்தகோஷர், தாம் எழுதிய தம்மபதாட்டகதா என்னும் உரையில், சிறீகுட்ட என்னும் இலங்கை மன்னன் கட்டிய ஒரு விகாரையில் தங்கியிருந்து அவ்வுரையை எழுதியதாகக் கூறுகிறார். ஸ்ரீநிவாசன், மகாநாமன், சிறீகுட்டன் என்னும் பெயர்கள் ஒரே அரசனைக் குறிக்கின்றன. இந்த அரசன் இலங்கையை, கி.பி. 409 முதல் 430 வரையில் அரசாண்டான். எனவே, இவர் காலத்தில் இருந்த புத்தகோஷரும், புத்தகோஷருக்குச் சற்று வயதில் மூத்தவரான புத்ததத்தரும் இதே காலத்தில் இருந்தவர் ஆவர்.

மேலும், பேர்பெற்ற புத்தகோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும் தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாகக் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமாரகுப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவ ராகையாலும், சோழநாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுதவிக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் குமார குப்தனும் ஒரே காலத்தவராகையாலும், புத்ததத்த தேரரை அச்சுத விக்கந்தன் ஆதரித்தவனாகையாலும், இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஆவர்.

8. கணதாசர்

கணதாசர் என்பது, கண்ண (கிருஷ்ண) தாசர் என்பதன் திரிபு. சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் இவர் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்தார் என்றும், அவ்விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் அபிதம்மாவதாரம், மதுராத்த விலாசினீ (புத்த வம்சம் என்னும் நூலின் உரை) என்னும் நூல்களை இயற்றியதாகவும் ஆசாரிய புத்ததத்தர் கூறுகிறார். இந்தக் கணதாசர் வைணவராக இருக்கவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. பௌத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கு விகாரையைக் கட்டியபடியால் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். பூஜாவலீ என்னும் சிங்கள நூல், இவரை ஆமாத்தியர் (அமைச்சர்) என்று கூறுகிறது. “மிகவும் ஞானமுள்ளவரான புத்ததத்தர் என்னும் பெயரையுடைய அர்த்தகதாசாரியர், வினயவினிச்சயம், புத்தவம் சாட்டகதமா, அபிதம்மாவதாரம் என்னும் பௌத்த தர்ம நூல்களைச் சுமதி என்னும் தேரருடையவும், கணதாசர் என்னும் ஆமாத்தியருடையவும் வேண்டுகோளின்படி எழுதினார்.” என்று அந்நூல் கூறுகிறது. ஆகவே, இவர் சோழ அரசனுடைய மந்திரி என்று தெரிகிறது. களம்ப (களபர) குலத்தைச் சேர்ந்த அச்சுத விக்கநந்தன் என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் தாம் வினய வினிச்சயம் என்னும் நூலை எழுதி முடித்ததாகப் புத்ததத்தர் கூறுகிறபடியினாலே அவ்வரசனுடைய மந்திரியாக இவர் இருந்தார் என்று கருதலாம்.

9. வேணுதாசர்

இது விஷ்ணுதாசர் என்பதன் மரூஉ. இவர் சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில், ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்ததாகவும், அவ் விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் வினயவினிச்சயம் என்னும் நூலை எழுதியதாகவும் அவர் அந்நூலில் கூறுகிறார். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்த வேணுதாசரும், மேலே கூறிய கணதாசரும் ஒருவரே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆசாரிய புத்ததத்தர் இவ்விருவரும் ஒருவரே என்று யாண்டும் கூறவில்லை. ஆகையால் இருவரும் வேறு வேறு ஆட்கள் என்பது எமது கருத்து.

கணதாசர், வேணுதாசர் என்னும் பெயர்கள் ஒருவரையே குறிக்கின்றன என்றும், இந்த விஷ்ணுதாசர், ஸ்கந்தபுராணம் Chap. (XXVI – XXVII) விஷ்ணுகாண்டம், கார்த்திகமாச மகாத்மியத்தில் கூறப்படுகிற விஷ்ணு தாசரே என்றும் பரூவா என்பவர் கூறுகிறார். விஷ்ணு புராணம் 10ஆம் அதிகாரத்தில் கூறப்படுகிற விஷ்ணுதாசர்தான் இந்த வேணுதாசர் என்று ஜம்புநாதன் அவர்கள் கூறுகிறார். இவர்கள் கூற்றையும் எம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அறிஞர்கள் ஆராய்ந்து காண்க.

10. சுமதி, ஜோதிபாலர்

கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்கள். பேர்பெற்ற புத்தகோஷாசாரியர், தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, இவர்களுடன் வசித்திருந்தார். காஞ்சிபுரத்தில் புத்தகோஷர் இவர்களுடன் தங்கியிருந்தபோது, இவர்கள் புத்தகோஷரை இலங்கைக்குச் சென்று அங்குள்ள திரிபிடக உரை நூல்களைப் படிக்கத் தூண்டினார்கள். இதனை,

“ஆயாசிதோ ஸுமதினா தேரேன பத்தந்த ஜோதிபாலேன

காஞ்சிபுராதிஸு மயா புப்பே ஸத்திம் வஸந்தேன”

என்று புத்தகோஷர் தாம் எழுதிய மனோரத பூரணி என்னும் நூலில் கூறுகிறார். இவர்கள் வேண்டுகோளின்படி புத்தகோஷர், ஸாராத்த பகாசினீ, மனோரத பூரணி என்னும் உரைநூல்களை இயற்றினார். இவர்களைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.

11. புத்தமித்திரர்

இவர் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் இருந்தவர். ‘வீரசோழியம்’ என்னும் இலக்கண நூலை இயற்றிய பௌத்தராகிய புத்தமித்திரருக்கு முன்பு இருந்தவர். இவர் மயூரபட்டிணத்தில் (மாயவரம்?) ஒரு பௌத்த விகாரையில் இருந்தபோது, பேர்பெற்ற புத்தகோஷாசாரியர் வந்து இவருடன் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் வேண்டுகோளின்படி திரிபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாயத்திற்குப் புத்தகோஷ ஆசாரியர் பபஞ்சசூடனீ என்னும் உரையை எழுதினார். இவரைப் பற்றி வேறு செய்தி ஒன்றும் தெரியவில்லை.

12. போதி தருமர்

இவர் காஞ்சிபுரத்தை அரசாண்ட ஓர் அரசனுடைய குமாரர். இவர் ‘தியான மார்க்கம்’ என்னும் பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவர். சீன தேசம் சென்று, அங்கு தமது கொள்கையைப் போதித்து வந்தார். இவரது கொள்கை சங்கரரின் அத்வைத மதக் கொள்கையைப் போன்றது. இவர் கி.பி 520 இல் சீன தேசத்துக் காண்டன் பட்டினத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். வேறு சிலர் கி.பி 525 இல் சீன தேசம் சென்றதாகக் கூறுவர். அக்காலத்தில் சீனதேசத்தை ஆண்டுவந்த லியாங் குடும்பத்தைச் சேர்ந்த ஊ-டி (Wu-Ti) என்னும் அரசன் அவைக்களத்தில் இவர் தமது தியான மார்க்கத்தைப் போதித்தார். இந்த அரசன் கி.பி 520 முதல் 549 வரை அரசாண்டவன். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுள்ளவன். பின்னர் இந்த அரசனுக்கும் இவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட, சீனதேசத்தின் வடபகுதியிற் சென்று இவர் தமது கொள்கையைப் பரப்பியதாகக் கூறுவர். இவருக்குப் பிறகு, இவர் போதித்த மதம் சீன தேசத்திலும் ஜப்பான் தேசத்திலும் சிறப்புற்றது. இவரது தியான மார்க்கத்திற்கு ஜப்பானியர் ஸென் (Zen) மதம் என்றும், சீனர் சான் (Ch’an) மதம் என்றும் பெயர் கூறுவர். போதி தருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கின்றனர். இவரைச் சீனர் டா-மொ (Ta-mo) என்பர். இவரது மாணவர் சீனராகிய ஹூய் கெ-ஓ (Hui-K’o) என்பவர். போதி தருமர் சீன தேசத்தில் தமது மதத்தைப் போதித்த பிறகு, ஜப்பான் தேசத்துக்குச் சென்றதாகவும், அங்கு கடோக யாமா (Katoka Tama) என்னும் இடத்தில் ஷோடகு டாய்ஷி (Shotoku Taishi) என்பவர் இவரைக் கண்டு உரையாடியதாகவும் ஜப்பான் தேசத்து வரலாறு கூறுகின்றது. ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருக்குக் கோவில்கள் உண்டு. இந்தக் கோயில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.

13. ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்)

இவரது வரலாற்றைச் சீன யாத்திரிகரான யுவான் சுவாங் என்பவர் தமது யாத்திரைக் குறிப்பில் எழுதியிருக்கிறார். இவர் காஞ்சிபூரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர் என்பர். சிம்மவக்த்ரம் என்பது சீயமங்கலமாக இருக்கக்கூடும். (சீயம் = சிம்மம் சிங்கம்) சீயமங்கலம் என்பது செங்கல்பட்டு ஜில்லா காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், பிராமண குலத்தில் பிறந்து, வைதீக வேத நூல்களைக் கற்ற இவர் தேரவதா பௌத்த மதத்தின் ஒரு பிரிவாகிய வாத்சீபுத்திரி பிரிவைச் சேர்ந்து பௌத்தரானார். பிறகு, இவருக்கும் இவருடைய குருவுக்கும் கொள்கை மாறுபாடு ஏற்பட்டு, குருவைவிட்டுப் பிரிந்து, காஞ்சியிலிருந்து வடநாட்டிற்குச் சென்றார். அங்கே பேர்பெற்ற வசுபந்து என்பவரிடம் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். பின்னர், நளாந்தைப் பல்கலைக்கழகஞ் சென்று பல நாள் தங்கியிருந்து, அங்கும் பல நூல்களைக் கற்றார். தர்க்க நூலில் இவர் நன்கு பயின்றவர். இவர் பற்பல தேசம் சென்று தர்க்கவாதம் செய்து, கடைசியாக மீண்டும் காஞ்சிபுரம் வந்து வாழ்ந்திருந்தார். காஞ்சிபுரம் திரும்புவதற்கு முன்னரே, ஒரிசா தேசத்தில் காலஞ்சென்றார் என்று சிலர் கூறுவர். இவர் பௌத்த மதத்தில் விஞ்ஞான வாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க (அளவை) நூல்களை வடமொழியில் இயற்றியிருக்கின்றார். இவரது மாணவர் சங்கர சுவாமி என்பர். இன்னொரு மாணவர், நளாந்தைப் பல்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக விளங்கிய ஆசாரிய தரும பாலர் (கி.பி. 528-560) என்பவர். இவர் வசுபந்து என்பவரிடம் சில நூல்களைக் கற்றார் என்று கூறப்படுகின்றபடியால், இவர் வசுபந்து காலத்தவராவர். வசுபந்து, கி.பி. 420 முதல் 500 வரை இருந்தவர். சமுத்திர குப்தன் என்னும் அரசனால் ஆதரிக்கப்பட்டவர். அவன் சபையில் காளிதாசருடன் ஒருங்கிருந்தவர். எனவே, அவரின் மாணவராகிய திக்நாகர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வாழ்ந்திருந்தவராதல் வேண்டும்.

14. தருமபால ஆசிரியர் (கி.பி. 528-560)

இவர் பதராதித்த விகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் இருந்த தருமபால ஆசாரியரின் வேறானவர். இவர் காஞ்சிபுரத்து அரசனிடம் மந்திரியாயிருந்த ஒருவரின் மூன்றாவது குமாரர். இவருக்குத் தக்க வயது வந்த காலத்தில் காஞ்சி மன்னன் இவருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தான். ஆனால், இவர் உலகத்தை வெறுத்தவராய், ஒருவருக்குஞ் சொல்லாமல் ஒரு பௌத்த மடத்தையடைந்து துறவு பூண்டு பௌத்த பிக்ஷு ஆனார். பின்னர் பல நாடுகளில் யாத்திரை செய்து தமது கல்வியை மேன்மேலும் வளர்த்துக் கொண்டார். இவர் கல்வியிலும் அறிவிலும் மேம்பட்டவர்.

ஆசாரிய தருமபாலர் தின்னாக (திக்நாக) ரிடத்திலும் சமயக் கல்வி பயின்றார் என்பர்.

இவர் வட நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்தபோது கௌசாம்பி என்னும் இடத்தில் பௌத்தருக்கும் ஏனைய மதத்தாருக்கும் நிகழ்ந்த சமயவாதத்தில் பௌத்தர்களால் எதிர்வாதம் செய்ய முடியாமற்போன நிலையில், இவர் சென்று தனித்து நின்று பௌத்தர் சார்பாக வாது செய்து வெற்றிபெற்றார். அதனோடு அமையாமல், எதிர்வாதம் செய்தவர்களையும் அவைத் தலைவராக வீற்றிருந்த அரசனையும் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதனால் இவர் புகழ் எங்கும் பரவியது. மற்றொருமுறை, நூறு ஈனயான பௌத்தர்களுடன் ஏழுநாள் வரையில் வாது செய்து வெற்றிப்பெற்றுத் தமது மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். மகாயான பௌத்தர்கள் இவரைத் தமது மதத்தை நிலைநிறுத்த வந்த சமயகுரவரெனப் போற்றினார்கள். இவர் பௌத்தமத நூல்களையும் ஏனைய மத நூல்களையும் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினமையால் , அக்காலத்தில் வட இந்தியாவில் பேர்பெற்று விளங்கிய நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவரை ஏற்படுத்தினார்கள். நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி, யாருக்கும் எளிதில் வாய்ப்பதொன்றன்று. துறைபோகக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களுக்குத்தான் அப் பதவி வாய்க்கும். இவருக்கு இத் தலைமைப் பதவி கொடுத்ததிலிருந்து அக்காலத்து மக்கள் இவரை எவ்வளவு உயர்வாக மதித்தனர் என்பது விளங்கும்.

இவருக்குப் பிறகு அப் பல்கலைக் கழகத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய புகழ்படைத்த சீலபத்திரர் என்பவர் இவரிடம் பயின்ற மாணவர்களில் தலைசிறந்தவர். தருமபாலர் நாளாந்தைக் கழகத்தின் தலைமையாசிரியராய் வீற்றிருந்த காலத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிராமணர் அங்குச் சென்று இவரைத் தம்முடன் வாது செய்ய அழைத்தார். இவர் தமது மாணவராகிய சீல பத்திரரை அப் பிராமணருடன் வாது செய்யச் செய்து அவரைக் கடுமையாகத் தோல்வியுறச் செய்தார். அந்தச் சீலபத்திரரிடத்தில் தான் சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் என்பவர் சமஸ்கிருதம் பயின்றார். சீலபத்திரர் கி.பி. 585 முதல் 640 வரையில் தலைமையாசிரியராக நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். இந்தத் தருமபால ஆசாரியர் ஏதேனும் நூல் இயற்றினாரா என்பது தெரியவில்லை. யுவாங் சுவாங் தமது யாத்திரைக் குறிப்பில் தருமபால ஆசாரியரின் வரலாற்றைக் கூறியிருக்கிறார்.

தருமபாலர் இளமையிலேயே, அதாவது தமது 32 ஆவது வயதில் கி.பி. 560 இல் காலமானார். இவருடைய தலைமாணவர் சீலபத்திரர் என்று சொன்னோம். இவரது மற்ற மாணவர்கள்: 1. விசேஷமித்திரர் – இவர் மைத்திரேயர் அருளிச்செய்த ‘யோகசாரபூமி’ என்னும் நூலுக்கு உரை எழுதியவர். 2. ஜின புத்திரர் – இவர் மைத்திரேயர் அருளிச்செய்த ‘போதிசத்வபூமி’ என்னும் நூலுக்கு உரை இயற்றியவர். 3. ஞானசுந்தரர் – இவர் இத்சிங் என்னும் சீனயாத்திரிகர் இந்தியாவுக்கு வந்தபோது (கி.பி. 671 முதல் 695 வரையில்) திலக விகாரையில் வாழ்ந்திருந்தவர்.

இந்தத் தருமபாலரும் மணிமேகலை நூலில் கூறப்படும் அறவண அடிகளும் ஒருவரே எனச் சிலர் கருதுகிறார்கள். ‘அறவண அடிகள்’ என்னும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகத் ‘தருமபாலர்’ என்னும் பெயர் காணப்படுவது கொண்டு இவ்வாறு கருதுகின்றனர் போலும். இந்தக் கருத்துத் தவறானதாகத் தோன்றுகின்றது. ஏனென்றால், அறவண அடிகள் காஞ்சிபுரத்தில் கடைசி நாட்களில் தங்கினதாகக் கூறபட்டபோதிலும், அவர் தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியையும் கடைசி நாட்களையும் வட இந்தியாவில் கழித்தவர். அறவண அடிகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இந்தக் காரணங்களாலும் பிற சான்றுகளாலும் தருமபாலர் வேறு, அறவண அடிகள் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது.

15. ஆசாரிய தருமபாலர்

பாலிமொழியில் இவரைத் தம்மபால ஆசாரியர் என்பர். இவரது ஊரைப்பற்றி, “தம்பரட்டே வஸந்தேன நகரே தஞ்சாநாமகே” என்று கூறப்பட்டிருப்பதால், இவர் தாம்பிரபரணி ஆறு பாய்கிற திருநெல்வேலியில் இருந்த தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இந்தத் தஞ்சையைச் சோழநாட்டுத் தஞ்சாவூர் என்று தவறாகக் கருதுகிறார், திரு. பி.சி.லா அவர்கள். (Geography of Early Buddhism by B.C. Law) என்னை? சோழநாட்டுத் தஞ்சையில் காவேரி ஆறு பாய்கிறதேயன்றித் தாம்பிரபரணி பாயவில்லை. இப்பொழுது சோழநாட்டில் தஞ்சாவூர் இருப்பதுபோல, பண்டைகாலத்தில் பாண்டிய நாட்டிலும் ஒரு தஞ்சாவூர் இருந்தது. அந்தத் தஞ்சாவூரை ஒரு காலத்தில் அரசாண்ட வாணன் என்னும் சிற்றரசன்மேல் பாடப்பட்டதுதான் தஞ்சைவாணன் கோவை என்னும் சிறந்த தமிழ்நூல். ஆகவே, தம்மபால ஆசாரியாரின் ஊர் பாண்டிநாட்டுத் தஞ்சை என்று கொள்வது அமைவுடைத்து.

தருமபால ஆசாரியார், பாலிமொழியையும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். பௌத்தமத உரையாசிரியர்களில் சிறந்தவர். இலங்கையில் அநுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்து, பிடக நூல்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய உரைகளையும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பழைய திராவிட உரைகளையும் கற்று ஆராய்ந்து சூத்திரபிடகத்தின் சில பகுதிகளுக்கு இவர் உரை எழுதியிருக்கிறார். சூத்திர பிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய சூட்டகநிகாய என்னும் பிரிவைச் சேர்ந்த உதான, இதிவுத்தக, விமான வத்து, பேதவத்து, தேரகாதா, தேரிகாதா, சரியாபீடக என்னும் பகுதிகளுக்குப் பரமார்த்ததீபனீ என்னும் உரையை எழுதியிருக்கிறார்.அன்றியும், பரமார்த்த மஞ்ஜூஸா, நெட்டிப கரணாத்தகதா என்னும் நூல்களையும் எழுதியிருக்கிறார். “இதிவுத்தோதான – சரியாபிடக – தேர – தேரீ – விமானவத்து – பேதவத்து – நெத்தியட்டகதாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸீ ஸோச ஆசாரிய தம்மபாலதரோ ஸீஹௌ தீபஸ்ஸ ஸமீபே டமிளாரட்டே படரதித்தமிஹி நிவாஸீத்தா ஸீஹௌதீபே ஏவஸங்கஹேத்வா வத்தபோ,” என்று இவரைப் பற்றிச் சாசன வம்சம் என்னும் நூல் கூறுகிறது. இதன் கருத்து யாதெனில், இதிவுத்தக முதலாக நெத்தியட்டகதா இறுதியாகக் கூறப்பட்ட உரைநூல்களை ஆசாரிய தம்மபாலர் எழுதினார். இந்த ஆசாரிய தம்மபால தேரர் சிங்கள(இலங்கை)த் தீவுக்கு அருகில் தமிழ்நாட்டில் படரதித்த விகாரையில் வசித்தபோது எழுதினார் என்பதாம். இவர் பதினான்கு நூல்களை இயற்றியதாகக் கந்தவம்சம் என்னும் நூல் கூறுகிறது.

இவர் எழுதிய உரைநூல்களில் இறுதியில், அந்நூல்களைப் படராதித்தை விகாரையில் எழுதியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த விகாரை நாகப்பட்டினத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் இருந்து எழுதியதாக அந்நூல் இறுதியில் எழுதியிருக்கிறார்.

அன்றியும், சூத்திரபிடகத்தின் முதல் நான்கு நிகாயங்களுக்குப் புத்தகோஷ ஆசாரியார் எழுதிய உரைகளுக்கு இவர் அத்தகதா என்னும் உரையை எழுதினார். இதனை, “விஸூத்தி மக்கஸ்ஸ மஹாடீகம், தீகநியாயட்டகதாய டீகம், மஜ்ஜிமநிகா யட்டதாய டீகம்,ஸம்யுத்த நிகாயட்ட கதாய டீகம் ஸாதி இமாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸி” என்று சாசனவம்சம் என்னும் நூல் கூறுவது காண்க.

இவர், புத்தகோஷாசாரியர் இருந்த கி.பி 5 ஆவது நூற்றாண்டுக்குப் பிற்காலத்தில் இருந்தவர். ஆனால், எப்பொழுது இருந்தார் என்பதைத் தெரிவிக்க யாதொரு சான்றும் கிடைக்க வில்லை.

15a. மாக்கோதை தம்மபாலர்

இலங்கை அநுராதபுரத்தில் உள்ள ஒரு சாசனம் மாக்கோதை தம்மபாலர் என்பவரைப்பற்றிக் கூறுகிறது. அச் சாசனச் செய்யுள் இது:

“போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்கும்
தீதி லருள்சுரக்கும் சிந்தையான் – ஓதி
வருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை
ஒருதன்ம பால னுளன்.”

இவரைப்பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.

16. புத்தி நந்தி, சாரி புத்தர்

இவ்விருவரும் சோழநாட்டில் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தவர். சைவ சமய ஆசாரியரகிய திருஞான சம்பந்தர் இந்த ஊர் வழியாகச் சங்கு, தாரை முதலான விருதுகளை ஊதி ஆரவாரம் செய்துகொண்டு வந்தபோது, பௌத்தர்கள் அவரைத் தடுத்து, வாதில் வென்ற பின்னரே வெற்றிச் சின்னங்கள் ஊதவேண்டும் என்று சொல்ல, அவரும் அதற்குச் சம்மதித்தார். பிறகு பௌத்தர்கள் புத்த நந்தியைத் தலைவராகக் கொண்டு வாது நிகழ்த்தியபோது, சம்பந்தருடன் இருந்த சம்பந்த சரணாலயர் என்பவர் இயற்றிய மாயையினால் இடிவிழுந்து புத்த நந்தி இறந்தார் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனைக் கண்ட பௌத்தர்கள், ‘மந்திரவாதம் செய்யவேண்டா, சமயவாதம் செய்யுங்கள்,’ என்று சொல்லிச் சாரி புத்தரைத் தலைவராகக் கொண்டு மீண்டும் வந்தார்கள். அவ்வாறே சாரி புத்தருக்கும் சம்பந்தருக்கும் சமய வாதம் நிகழ, அதில் சாரி புத்தர் தோல்வியுற்றார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. (சாரி புத்தர் காண்க.) இவர்களைப்பற்றி வேறு வரலாறு தெரியவில்லை. திருஞானசம்பந்தர் கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தவராதலால், இவர்களும் அந்த நூற்றாண்டிலிருந்தவராவர்.

17. வச்சிரபோதி (கி.பி. 661-730)

இவர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த பொதிகைமலைக்கு அருகில் மலைநாட்டில் இருந்தவர். இவர் தந்தையார் ஓர் அரசனுக்கு மதபோதகராக இருந்தவர். இவர் கி.பி. 661 இல் பிறந்தார். வட இந்தியாவில் இருந்த பேர் பெற்ற நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் 26 வயது வரையில் கல்வி பயின்றார். பின்னர், 689 இல் கபிலவாஸ்து என்னும் நகரம் வரையில் யாத்திரை செய்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார். அக்காலத்தில் தொண்டைமண்டலத்தில் வற்கடம் உண்டாகி மக்கள் வருந்தினர். அந்த நாட்டினை அரசாண்ட நரசிம்ம போத்தவர்மன் என்னும் அரசன் வச்சிரபோதியின் மகிமையைக் கேள்விப்பட்டு, இவரை யணுகி, நாட்டுக்கு நேரிட்டுள்ள வருத்தத்தைப் போக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்ள, இவர் தெய்வத்தைப் போற்றி வேண்ட, மழைபெய்து நாடு செழிப்படைந்தது என்று இவரது வரலாறு கூறுகின்றது.

இவர் தந்திரயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். தந்திரயான மதத்துக்கு ‘வெச்சிரயானம்’, ‘மந்திரயானம்’ என்னும் பெயர்களும் உண்டு. இவரது மாணவர் அமோகவச்சிரர் என்பவர். இவர் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த அபயகிரி விகாரையில் ஆறுதிங்கள் தங்கியிருந்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து சில நாள் தங்கியிருந்தார். பின்னர், தமது தந்திரயான பௌத்த மதத்தைச் சீன தேசத்தில் பரவச் செய்ய எண்ணங்கொண்டு சீனதேசம் செல்ல விரும்பினார். இவர் எண்ணத்தை அறிந்த காஞ்சி அரசன், கடல் யாத்திரையின் துன்பங்களை எடுத்துரைத்துப் போகவேண்டா என்று தடுத்தான். இவர் பிடிவாதமாக இருந்தபடியால், அரசன் இவரது சீனதேசப் பிரயாணத்துக்கு வேண்டும் உதவிகளைச் செய்து கொடுத்தான். ‘மகாப் பிரஜ்ஞ பாரமிதை’ என்னும் பௌத்த நுலின் பிரதி ஒன்றினையும் மற்றும் விலையுயர்ந்த பொருள்களையும் சீன அரசனுக்குக் கையுறையாக வழங்க, ஒரு தூதுவனையும் இவருடன் அரசன் அனுப்பினான்.

வச்சிரபோதி தமது மாணவருடன் புறப்பட்டுச் சென்றார். கப்பல் அடுத்த நாள் இலங்கையை யடைந்தது. ஸ்ரீசைலன் என்னும் இலங்கை அரசன், இவரை வரவேற்றுத் தனது அரண்மனையில் ஒரு திங்கள் வரையில் இருக்கச் செய்தான். பின்னர், மரக்கலமேறிச் சீனநாட்டுக்குச் செல்லும் வழியில், சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீவிஜய தேசத்தில் ஐந்து திங்கள் தங்கினார். மீண்டும் புறப்பட்டு, கி.பி. 720 இல் சீனதேசம் சேர்ந்தார். ஆங்குத் தமது தந்திரயான பௌத்தக் கொள்கைகளைப் போதித்துத் தாந்திரிக பௌத்த நூல்களைச் சீனமொழியில் மொழி பெயர்த்தார். இவர் அந்நாட்டிலே கி.பி. 730 இல் காலமானார்.

18. புத்த மித்திரர்

இவர் புத்த மித்திரனார் என்றும் கூறப்படுவார். இவரது பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம்.

“மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்குந் தொடரஒண் ணாதவன் தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழ்உரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே.”

என்னும் இவர் இயற்றிய வீரசோழியப் பாயிரச் செய்யுள் இதனை வலியுறுத்துகின்றது.

இவர், சோழ நாட்டில், மாலைக்கூற்றத்தில், பொன் பற்றி என்ற ஊரில் சிற்றரசராய் விளங்கியவர். ‘பொன் பற்றி’ என்னும் ஊர் தஞ்சை ஜில்லா புதுக்கோட்டைத் தாலுகாவில் உள்ளது என்பர் சிலாசாசன ஆராய்ச்சியாலர் காலஞ்சென்ற திரு. வெங்கையா அவர்கள். தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கி தாலுகாவில் பொன்பேத்தி என்று இப்போது வழங்குகின்ற ஊர்தான் புத்தமித்திரனாரின் ‘பொன்பற்றி’ என்பர் வித்வான், ராவ்சாகிப். மு, இராகவ அய்யங்கார் அவர்கள்.

புத்த மித்திரர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றியிருக்கிறார். வீரசோழன் அல்லது வீர ராசேந்திரன் என்னும் பெயருள்ள சோழ மன்னன் வேண்டுகோளின்படி இந்நூலை இவர் இயற்றி அவன் பெயரையே இதற்குச் சூட்டினார். இதனை,

‘ஈண்டுநூல் கண்டான் எழில்மாலைக் கூற்றத்துப்
பூண்டபுகழ்ப் பொன்பற்றிக் காவலனே – மூண்டவரை
வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுணை வீரன்றன்
சொல்லின் படியே தொகுத்து’

என்னும் வெண்பாவினாலும்,

‘நாமே வெழுத்துச்சொல் நற்பொருள் யாப்பலங் காரமெனும்
பாமேவு பஞ்ச அதிகார மாம்பரப் பைச்சுருக்கித்
தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் திருப்பெயரால்
பூமேல் உரைப்பன் வடநூல் மரபும் புகன்றுகொண்டே’

என்னும் கலித்துறைச் செய்யுளினாலும் அறியலாம்.

இவரது காலம், இதுவரை ஆதரித்த வீரசோழன் காலமாகும். வீரசோழன் என்பவன் வீரராசேந்திரன் என்னும் பெயருடன் கி.பி 1063 முதல் 1070 வரையில் சோழநாட்டை அரசாண்டவன்; ‘வீரசோள கரிகால சோள ஸ்ரீ வீரராஜேந்திர தேவ ராஜகேசரி வன்ம பெருமானடிகள்’ என்று சாசனத்தில் புகழப்படுபவன்; ‘எல்லா உலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்’ என்று புத்த மித்திரனாரால் வீரசோழியத்தில் புகழப்படுபவன். கிருஷ்ண, துங்கபத்திரை என்னும் இரண்டு ஆறுகள் ஒன்று கூடுகின்ற ‘கூடல் சங்கமம்’ என்னும் இடத்தில் சோமேஸ்வரன் II, விக்கிரமாதித்தன் என்னும் இரண்டு சாளுக்கிய அரசர்கள் அரசுரிமைக்காகச் செய்த போரில், இந்தச் சோழன், விக்கிரமாதித்தன் பக்கம் சேர்ந்து போர் செய்து, சோமேஸ்வரனை முறியடித்து, விக்கிரமாதித்தனை அரசுகட்டில் ஏறச்செய்தான். அன்றியும், அவனுக்குத் தன்மகளை மனஞ்செய்து கொடுத்தான். இவனால் ஆதரிக்கப்பட்ட புத்த மித்திரரும் இவன் காலத்தில், அஃதாவது கி.பி. பதினொன்றாம் நூற்றண்டில் இருந்தவராவர்.

‘அணி’ என்னும் அலங்கார இலக்கணத்தை, தண்டியா சிரியரைப் பின்பற்றிச் சொன்னதாக இவர் தமது வீர சோழியத்தில் கூறுவதால், இவர் தண்டியாசியருக்குப் பிற்பட்டவராதல் வேண்டும்.

சிவபெருமானிடத்தில் அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்று ஒரு கொள்கை சைவர்களுக்குள் உண்டு. புத்தமித்திரனார், பௌத்தத் தெய்வமாகிய அவலோகிதீஸ்வரரிடத்தில் அகத்திய முனிவர் தமிழ் பயின்றதாகக் கூறுகின்றார். இதனை, ‘ஆயுங்குணத்தவலோகிதன்’ என்னும் வீரசோழிய அவையடக்கச் செய்யுளால் அறியலாம். (இணைப்பு காண்க.)

புத்தமித்திரனார் வீரசோழியத்தைத் தவிர வேறு நூல் யாதேனும் செய்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. இவர் இருந்த சோழநாட்டிலேயே இவர் பெயரைக்கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் இருந்ததாகவும், அவர் இலங்கை சென்று அநுராதபுரத்தில் தங்கியிருந்ததாகவும், இலங்கையில் அவருக்குச் ‘சோழதேரர்” என்ற பெயர் வழங்கியதாகவும் பௌத்த நூல்களால் அறிகின்றோம். ஆனால், அந்தப் புத்தமித்திரர் வேறானவர் என்று தெரிகின்றது.

19. பெருந்தேவனார்

‘பெருந்தேவனார்’ என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர், பண்டைக் காலத்தில் இருந்தனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத்திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் பெருந்தேவனார் பௌத்தர். புத்தமித்திரனாரின் மாணவர். புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர். இதனை,

‘தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த

படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின்

தீடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்

கடனாக வேநவின் றான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே’

என்னும் வீரசோழிய உரைப்பாயிரச் செய்யுளால் அறியலாம். வீரசோழிய நூலின் சிறப்பை அதிகப்படுத்துவது இவரது உரையே என்று கூறுவது மிகையாகாது. இவர் எழுதிய உரை தமிழாராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளருக்கும் மிக்க உதவியாக இருக்கிறது.

இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ள புத்தரைப் போற்றும் செய்யுள்களில் பெரும்பான்மையும் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட செய்யுள்களே. (இணைப்பு காண்க.)

இவர் தமது உரையில் நியாய சூடாமணி, புதியா நுட்பம், வச்சத்தொள்ளாயிரம், உதயணன் கதை, கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம் என்னும் நூல்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். அன்றியும் குண்டலகேசி, பாரதவெண்பா, யாப்பருங்கலம் முதலிய நூல்களினின்றும் செய்யுள்களை மேற்கோள்களாக எடுத்தாண்டிருக்கின்றார்.

இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவரது காலம் புத்தமித்திரனாரும் வீரராசேந்திர சோழனும் வாழ்ந்திருந்த கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

20. தீபங்கர தேரர்

இவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர். ஆனதுபற்றிச் ‘சோளிய தீபங்கரர்’ என்று இவர் வழங்கப்படுகின்றார். புத்தப் பிரிய தேரர் என்றும் வேறொரு பெயர் இவருக்கு உண்டு. இவர் இலங்கைக்குச் சென்று, ஆங்கு ஆனந்த வனரதனர் என்னும் தேரரிடம் சமயக் கல்வி பயின்றார். பின்னர், காஞ்சிபுரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார். பாலி மொழியை நன்கு பயின்றவர். அந்த மொழியில் பஜ்ஜமது என்னும் நூலை இயற்றியிருக்கின்றார். புத்தரது உருவ அழகினையும், அவர் உபதேசித்த பௌத்தக் கொள்கை, அவர் அமைத்த பௌத்த சங்கம், இவற்றின் செவ்விகளையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார். இந்நூல் நூற்று நான்கு செய்யுள்களைக் கொண்டது. இவர் இயற்றிய இன்னொரு நூல் ரூப சித்தி என்பது. “பாடரூப சித்தி” என்றும் இதற்குப் பெயர் உண்டு. இது பாலிமொழி இலக்கண நூல். இதற்கு ஓர் உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார் என்று கூறுவர். இவர் இயற்றிய ‘பஜ்ஜமது’ என்னும் நூல் கி.பி. 1100 இல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவர்.

21. அநுருத்தர்

‘அநிருத்தர்’ என்றும் இவருக்குப் பெயர் உண்டு. இவர் மூலசோம விகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தலைவராக இருந்தவர். இவர் பாண்டிய தேசத்தவர் என்று தெரிகின்றது. ‘அயிதம்மாத்த சங்கிரகம்’, ‘பரமார்த்த வினிச்சயம்’, ‘நாமரூபப் பரிச்சேதம்’ என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கின்றார். ‘அபிதம்மாத்த சங்கிரகம்’ இலங்கையிலும், பர்மா தேசத்திலும் உள்ள பௌத்தர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப்பட்டு வருகின்றது.

22. புத்தமித்திரர், மகாகாசபர் (சோழ தேரர்கள்)

இவ்விருவரையும் சோழ தேரர்கள் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. சோழநாட்டவராகிய இவர்கள் இலங்கைக்குச் சென்று ஆங்கு வாழ்ந்து வந்தனர் போலும். இவர்கள் வேண்டுகோளின்படி ;உத்தோதயம்’ , ‘நாமரூபப் பரிச்சேதம்’ என்னும் நூல்கள் இயற்றப்பட்டன. ‘நாமரூபப் பரிச்சேதம்’ இயற்றிய அநிருத்தர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். ஆதலால், இவர்களும் அக்காலத்தவராவர். இவர்களைப் பற்றிய வேறு வரலாறுகள் தெரியவில்லை. இந்தப் புத்தமித்திரர், வீரசோழியம் இயற்றி புத்தமித்திரின் வேறானவர்.

23. ஆனந்த தேரர்? – (1245)

இவர் காஞ்சிபுரத்தில் இருந்தவர். பௌத்தமத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பர்மா தேசத்தவரான சத்தம்ம ஜோதிபாலர் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட சாபதர் என்பவர் இவரை இலங்கையிலிருந்து (பர்மா) அரிமர்த்தனபுரத்துக்கு அழைத்துச் சென்றார் என்று ‘சாசன வம்சம்’ என்னும் நூல் கூறுகின்றது. பர்மா தேசத்தை அரசாண்ட நரபதி ஜயசூரன் என்னும் அரசன் இவருக்கு யானை ஒன்றைப் பரிசாக அளித்தான் என்றும், அந்த யானையை இவர் காஞ்சிபுரத்திலிருந்த தமது உறவினருக்கு அனுப்பினார் என்றும் கல்யாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவர் நமக்குக் கிடைத்த யானையைத் தமது உறவினருக்கு அளித்தார் என்று கூறுகிறபடியால், யானையைக் காப்பாற்றக்கூடிய பெருஞ்செல்வத்தையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகின்றது. இவர் ஐம்பது ஆண்டு பர்மா தேசத்தில் பௌத்தமத குருவாக இருந்து பின்னர்க் கி.பி 1245 இல் காலமானார் என்று கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை.

24. தம்மகீர்த்தீ

இவர் ‘தம்பராட்டா’ என்னும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். (தாமிரவர்ணி பாயும் பாண்டிய நாட்டினைத் தம்பராட்டா என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.) கல்வி அறிவு ஒழுக்கங்களினால் சிறந்தவர். இவரது மேன்மையைக் கேள்வியுற்று, பராக்கிரம பாகு (இரண்டாமவன்) என்னும் இலங்கை மன்னன் இவரைத் தன்னிடம் வணக்கமாக வரவழைத்துக் கொண்டான். அன்றியும், சோழநாட்டிலிருந்த பௌத்தப் பிக்குகளையும் இவன் இலங்கைக்கு வரவழைத்து, ஒரு பெரிய பௌத்த மகாநாடு நடத்தினான். இந்த அரசன் மற்றப் பிக்ஷுக்களைவிட தம்மகீர்த்தீயிடத்தில் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான். தாட்டா வம்சம் என்னும் நூலினை இவர் பாலி மொழியில் இயற்றியதாகக் கூறுவர். இந்த நூலை வேறொருவர் இயற்றியதாகச் சிலர் கூறுகின்றனர். இலங்கையின் வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சம் என்னும் நூல் (மகாசேனன் என்னும் அரசன் காலமுதல் பராக்கிரமபாகு இரண்டாமவன் காலம் வரையில்) இவர் இயற்றியதாகக் கருதப்படுகின்றது. இவரை ஆதரித்த பராக்கிரமபாகு இரண்டாமவன், இலங்கையைக் கி.பி. 1236 முதல் 1268 வரையில் அரசாண்டவன். ஆகையால், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.

25. கவிராசராசர்

இவர் ஒரு பௌத்தப் புலவர். இவர் தமிழ்க்கவி இயற்றுவதில் தேர்ந்தவர் என இவரது பெயரினால் அறியப்படும். இவரது காலம் தெரியவில்லை. ஆயினும், கி.பி. பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்தவராகக் கருதலாம். இவர் இயற்றிய நூலின் பெயர் தெரியவில்லை. ‘வன்பசிக் கடும்புலிக் குடம்பளித் துடம்பின்மேல் வாளெறிந்த வாயினூடு பால்சுரந்து’ என்னும் செய்யுளடியை மேற்கோள் காட்டி, ‘இது கவிராசராசன் வாக்கு’ என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறியிருப்பதிலிருந்து, இப் பெயரையுடைய புலவர் ஒருவர் இருந்தாரென்பது தெரிகின்றது. (377 ஆம் தாழிசை உரை காண்க.)

26. காசப தேரர்

சோழ காசபர் என்றும் வழங்கப்படுகிறார். பாலி மொழியையும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றவர். மோகவிச்சேதனீ, விமதிவிச்சேதனீ, விமதி வினோதனீ, அநாகத வம்சம் என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கிறார். இவர் டமிள (தமிழ்) தேசத்துச் சோழநாட்டவர் என்று கந்தவம்சம், சாசனவம்ச தீபம் என்னும் நூல்கள் கூறுகின்றன. ஆகவே இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது தெரிகின்றது. இவர் இயற்றிய மோக விச்சேதனீ என்னும் நூலிலே, காவிரியாறு பாய்கிற சோழநாட்டில் நாகநகரத்தில் (நாகைப் பட்டினம்?) இருந்த நாகானை விகாரையில் இவர் இருந்ததாக கூறப்படுகிறார். மேலும் அந் நூலிலே, இவர் கீழ்வருமாறு கூறப்படுகிறார்: “முற்காலத்திலே இருந்த மகாபாசபர் என்பவரின் பெயரைச் சூடி அவரைப் போலவே புகழ்பெற்று விளங்குகிறவரும், விசாலமும் அலங்காரமும் உள்ள மதில்களால் சூழப்பட்ட நாகனை விகாரையில் வசிக்கிறவரும், வானத்தில் விளங்கும் வெண்ணிலாப் போன்று ஞானத்தினால் விளங்குபவரும், எல்லாவிதமான சாத்திரங்களையும் சூத்திர, வினய, அபிதம்மம் என்னும் மூன்று பிடக நூல்களையும் துறைபோகக் கற்றவரும், பகைவராகிய யானைகளுக்குச் சிங்கம் போன்றவரும், சீலம் உடையவராய்த் திருப்தி முதலான குணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் தர்மத்தையும் விநயத்தையும் நன்றாகப் போதித்துப் புத்த தர்மத்தை விளங்கச் செய்பவரும் ஆகிய மகாகாசிபதேரர், அபிதம்ம பிடகம் என்னும் பெருங்கடலிலே ஆங்காங்கு நிறைந்திருக்கும் சாரார்த்தம் ஆகிய இரத்தினங்களை எடுத்து ஒன்று சேர்த்துக் கற்போருடைய கழுத்தில் அணியும் மாலை போன்று, ‘மோகவிச்சேதனீ’ என்னும் இரத்தின மாலையை அமைத்துக் கொடுத்தார். இந்த நூல் புகழோடு விளங்கி மக்களுடைய மோகாந்த காரமாகிய இருளை நீக்கி, அவர்களைத் தர்மத்தில் ஒழுகச் செய்து, நன்மை பயந்து நல்ல கதியைத் தந்து உலகத்திலே பௌத்த தர்மம் உள்ளவரையில் நிலைத்திருக்கும்.”

இவருடைய வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை.

27. சாரிபுத்தர்

இவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர் என்பதும், ‘பாடாவதாரம்’ என்னும் பாலிமொழி நூலை இயற்றியவர் என்பதும் ‘கந்த வம்சம்’ (கிரந்த வம்சம்), ‘சாசன வம்சம்’ என்னும் நூல்களினால் தெரிகின்றது. இவரது காலம் வரலாறு முதலியவை ஒன்றும் தெரியவில்லை.

திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் சோழநாட்டில் சாரிபுத்தர் என்னும் ஒரு தேரர் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தார் என்றும், அவருடன் ஞானசம்பந்தர் சமயவாதம் செய்தார் என்றும் பெரியபுராணம் கூறுகின்றது. பெரியபுராணம் கூறுகின்ற சாரிபுத்தரும், கந்தவம்சம் கூறுகின்ற சாரிபுத்தரும் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு சாரிபுத்தர்கள் ஆவர்.

28. புத்தாதித்தியர்

இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு. இவர் சாவகத்தீவின் (ஜாவா) அரசன் ஒருவனைப் புகழ்ந்து சில பாடல்கள் இயற்றியிருக்கின்றார். இவரது காலம், வரலாறு ஒன்றும் தெரியவில்லை.

தமிழ்நாட்டிலே இன்னும் எத்தனையோ தேரர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். புத்தசிகா, ஜோதி பாலர், இராகுல தேரர், பூர்வாசாரியர் இருவர், (இவர்கள் பெயர் தெரியவில்லை.) மகாவஜ்ஜிரபுத்தி, கல்லவஜ்ஜிரபுத்தி, சுல்ல தம்மபாலர் முதலியவர்களைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர்களன்றி, வேறு இருபது பௌத்த ஆசிரியர்களும் காஞ்சிபுரத்தில் நூல்கள் இயற்றியதாகக் ‘கந்த வம்சம்’ (கிரந்த வம்சம்) என்னும் நூல் கூறுகின்றது. இவர்களது வரலாறும் தெரியவில்லை.

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply