அறிவியலும் சோதிடமும்

அறிவியலும் சோதிடமும்
நக்கீரன்
Astrologyplanetsinsolarsystem

நாம் வாழ்கின்ற பூமி, எல்லையில்லாப் பரந்த விண்வெளியில் வலம் வரும் லட்சக்கணக்கான பெரிய நட்சத்திரக் கூட்டங்களில் காணப்படும் சிறிய நட்சத்திரமான சூரியனின் சிறிய பகுதியே. இதில் மனித குலம் மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவும், நம்பிக்கையும் சேர்ந்து அறிவுப்பாதையின் வழிச் செல்லத் தூண்டுகிறது. மூடநம்பிக்கையானது கற்றுணர்ந்தவர்களின் தன்னம்பிக்கையைக் கூட தகர்த்து தடுமாறச் செய்கிறது. தன்னம்பிக்கையில் வாழ முனைவோருக்கு எதிர்நீச்சல் வாழ்வு மிகமிக அவசியமாகிவிட்டது. சோதிடம் என்பது ஜோதி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருவது வான்வெளி ஒளி என்பதாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதோடு சோதிட சாஸ்திர விதிமுறைகளை அறிந்தவராகவும்,. கடவுள் அருளால் தீர்க்க தரிசனம், இயற்கையின் இரகசியங்களை முன்னுணரும் திறன் இருப்பது அவசியம் என விளக்கம் தருவார்கள். இத்தகைய ஆற்றல் பெற்ற சோதிடர்கள் எத்தனை பேர்? ஆனால் வேதனைக்குரியது என்னவெனில் குழந்தை பிறந்து விட்டாலோ, திருமணப் பொருத்தம் என்றாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே ஓடுவது சோதிடரிடம்தான். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால், சரியான ஜாதகம் கணிக்கப்பட முடியவில்லை யென்றால் நான் என்ன செய்ய முடியும், குறித்த நேரம், பிறந்த நேரம் சரியில்லை எனத் சோதிடர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.

சோதிடமும் அறிவியல் சார்ந்ததே எனக்கூறி கற்றோரையும் கவரும் கவர்ச்சிகரமான கருத்துக்கள் கூறுவோர் உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற ஒன்பது கிரகங்களை (கோள்களை) கொண்ட ஜாதகம் கணிக்கப்படுகிறது, சோதிடம் பார்க்கப்படுகிறது என்பர். இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. சூரியனும், சந்திரனும் நேர்பாதையில் வரும் போது இரு பக்கங்களிலும் விழும் நிழல்களே ராகு, கேது என்பதை உணர வேண்டும். அறிவியலில் சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களில் இந்த இரண்டு கோள்கள் ராகு மற்றும் கேதுவும் இடம்பெறவில்லை.உண்மையில் இவை இரண்டும் நிழல் கோள்கள் என அழைக்கபடுகிறது.

நமக்கு எல்லாருக்கும் தெரியும் பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது அதேபோல சந்திரன் பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.சந்திரனுடைய நீள்வட்டப்பாதை பூமியின் நீள்வட்டப்பாதையை இரண்டு இடத்தில் சந்திக்கிறது. சந்திரன் தெற்கிலிருந்து வடக்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும்,வடக்கிலிருந்து தெற்க்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும் சந்திக்கிறது. வடக்கு சந்திப்புக்கு இராகு என்றும்தெற்கு சந்திப்புக்கு கேது என்றும் பெயர். கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திரன் பூமியின் துணைக்கோளாகும்.

இந்த புள்ளிகள்தான் ந்திரகிரகணத்தையும்,சூரியகிரகணத்தையும் ஏற்ப்படுத்துகிறது.இப்படி சூரியகிரகணக்காலத்தில் சூரியனுக்கும்,புமிக்கும் இடையே சந்திரன் வருகிறது.இது நமக்கு சூரியன்மீது நிழல் விழுவது போல தோன்றும்.

Image result for solar system planets

அக்காலத்தில் இந்த நிகழ்வை பாம்பு ஒன்று சூரியனை விழுங்குவது போல சித்தரித்தனர்.இந்த நிகழ்வுக்கு காரணமான ராகுவையும் மற்றும் கேதுவையும் பாம்பாக சித்தரித்தனர்.

சோதிட முறைப்படியே ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டுமானால் அந்த ஜாதகக்காரரின் பிறந்த தேதி, சரியான நேரம் இடம் தேவை. சூரிய உதயத்தை கணக்கிட்டு ஜாதகத்தைக் கணிப்பதால் பிறந்த இடத்தின் நிரைக்கோடு (Longitude)  அகலக்கோடு (Latitude) மிகமிக தேவை. எத்தனை சோதிடர்கள் இதை அறிவார்கள்? அதன்படி கணிக்கிறார்கள்? ஒரே நேரத்தில் மும்பையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கூட ஜாதகத்தில் நிறைய வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. காரணம் சூரிய உதய நேரம். செவ்வாய் தோஷம் எனக்கூறி எத்தனை பெண்களின் வாழ்வைப் பாழடிக்கிறார்கள்.

சூரியன் வடபாகத்தில் மகர இராசியிலிருந்து மிதுன இராசி வரை (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) வலம் வருவதை உத்திரயாணம் எனப்படுகிறது, இது தேவர்களுக்கு பகற் காலம் என்பதும் தென்பாகத்தில் கடக இராசி முதல் தனுசு இராசி வரை (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) தக்ஷ்ணயாணம். இது தேவர்களின் இரவு காலம் என்பதையும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும்? மனிதனுக்கு ஒரு நாளில் வந்து செல்லும் பகல் இரவு, மனிதனின் 365 நாள்கள் தேவர்களுக்கு ஒரு பகல் இரவு ஆகிறது. அந்த தேவர்கள் எங்கே? எனக் கேட்க துடிக்கிறது.

ஒரு இராசிக்கு 9 நட்சத்திரப் பாதங்கள் என்றும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் 3600 க்குள் அடங்கும். அப்படியெனில் இந்தியாவில் வாழும் 100 கோடிக்கு மேலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் 3.7 கோடி பேர் ஒரே நட்சத்திரம். 8.3 கோடி பேர் ஒரே இராசி கொண்டவர்களாக அமைவர். இவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் அமையவேண்டும். இது சாத்தியமா? அல்லது அது போன்று அமைந்துள்ளதா? சிந்திக்கவும்.

இந்தியாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட இராசிகளும், ஆயிரக்கணக்கான உள்பிரிவுகளுக்கும் காரணமானவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும், விட்டு வைக்க வில்லை. 27 நட்சத்திரங்களுக்குள் ஆண் (11) பெண் (13), அலி (3) எனப் பிரித்தனர். கோள்களுக்குள் ஜாதிப் பாகுபாடுகள் கண்டனர். குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் வகுத்தார்கள் சூழ்ச்சியாளர்கள்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களும் அதன் தூரமும், அறிவியல் கூறும் ஆதாரங்களையும் காண்போம். சூரியனிலிருந்து பூமி 14.96 கோடி, புதன் 5.79 கோடி, வெள்ளி 10.82 கோடி செவ்வாய் 22.79 கோடி வியாழன் 77.83 கோடி, சனி 142.7 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

நட்சத்திரங்களின் தொலை குறைந்த பட்சம் 50 ஒளி ஆண்டுகளுக்கு(Light years) மேற்பட்டது. ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். எண்ணிப் பாருங்கள் இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து தான் நமது வாழ்வு கணிக்கப்படுகிறது. அதுவும் யாரால் தனது வாழ்க்கையின் நிலை பற்றியே அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் என்பது தான் வேடிக்கை.

சோதிடர் சொல்வதில் உண்மையிருக்குமானால் தலைவர்களின் மரணம், தீவிரவாதத்தினால் ஏற்படும் அழிவுகளை பற்றியெல்லாம் முன்னரே ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை? சிந்திக்கவும்.

மூடநம்பிக்கைகள் மீண்டும் துளிர் விட வேண்டுமென அரசியல் நோக்கத்திற்காக அடிமை வாழ்வை மீண்டும் கொணர்ந்து ஆதிக்கம் செலுத்திட முனைவதை மக்கள் பகுத்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தூண்டி விடப்படும் மதவெறியால் பலியாகிப் போகாமல் வாழ்க்கையின் எதிர்காலத்தை அறிவியல் துணைகொண்டு வாழப் பழகிட வேண்டும். கல்வியால் தன்னம்பிக்கை மேற்கொள்வோம். மக்கள் தொண்டால் மனித நேயம் பூத்துக் குலுங்கி, ஒற்றுமையுடன் நாட்டை மலர்ச்சியடையச் செய்வோம். அறிவியலால் பயன் பெறுவோம். அறிவியல் சிந்தனை வளர்ப்போம். (தமிழர் நட்புறவு பேரவை, மும்பை தமிழ் டைம்ஸ் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவை).

மும்பை தமிழ் டைம்ஸ் 14-.12.2003.
நூல்: வாழ்வுரிமை விழிப்புணர்வு.

சனிப் பெயர்ச்சியும் அறிவியலும்!

நக்கீரன்

சோதிடர்களது காட்டில் இந்த மாதம் பணம் பெய்யும் மாதம். எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் “சனிப் பெயர்ச்சிப் பலன்கள்” பக்கக்கள் கண்ணைக் கவர்கின்றன. சனி பகவானால் எந்த எந்த இராசிக்காரர்களுக்கு என்ன என்ன பலன் என விலாவாரியாகச் சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள்.

சனிப் பெயர்ச்சியையொட்டி கோயில்களில் சிறப்பு யாகம், கிரக பரிகாரம், அபிசேகங்கள், அருச்சனைகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக சிம்மம், கன்னி, துலாம், கும்பம், மீனம், இடபம், மிதுனம் ஆகிய இராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாம்.

Image result for moon nodes astrology

தமிழக கோயில்களில் அபிசேகத்துக்கு ரூ.500, பரிகார கோமங்களுக்கு ரூ.3,500 கட்டணம் அறவிடப்படும். அதற்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கனடாவிலும் கோயில்களில் சனி பகவானை சாந்தப்படுத்த யாகம் நடைபெறுகிறது!

அண்டவெளியில் தன்பாட்டில் ஞாயிறைச் சுற்றிவரும் சனிக் கோள் கெட்டது செய்யும் அதற்குப் பரிகாரமாக அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் நன்மை பெறலாம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையன்று. எண்ணூறு மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சனிக்கு இங்கு அருச்சனை, அபிசேகம், யாகம் செய்தால் அது அந்தக் கோளைத் திருப்திப் படுத்துமா?

அறிவியல் கண்டுபிடித்த அச்சுயந்திரம், தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சனிப் பெயர்ச்சியை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப் போகிறார்களாம்!
சனி பகவான் பற்றிய புராணக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. சனி ஒரு கோள் என்பதற்குப் பதில் சனி மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பகவான் என்பதுதான் சோதிடர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நளச் சக்கரவர்த்தி, சனீசுவரன் இருவரும் வழிபட்ட ஒரே தலம் திருவாரூர். சிவபெருமானால் ஈசுவரப் பட்டம் வழங்கப் பெற்றவர் சனீசுவர பகவான். சனீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பர். சனீசுவர பகவானை வென்றவர் தசரத மகாராசா தன்னைப் வென்ற தசரதனுக்கு வேண்டும் வரத்தைத் தருவதாக சனீசுவர பகவான் கூற, தசரதன் தனது மூதாதையர்களும் தானும் வழிபாடு செய்த திருவாரூர் வருவோருக்கு துன்பங்கள் தராமல் நன்மையை மட்டுமே செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டார்.

அதன்படி, சனி பகவானும் திருவாரூர் வருவோரைத் தனது கண்டசனி, பாதசனி, அட்டமத்துச் சனி என எந்தக் காலமானாலும் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார்.

அதனால், திருநள்ளாற்றில் வழிபாட்டை முடித்த நளனும் திருவாரூரில் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து, தன்னை இனியும் நவகோள்கள் துன்பப்படுத்தக் கூடாது என வேண்டிக் கொண்டார்.

எனவே தான் “திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே’ என்று கூறப்படுகிறது.

சோதிடர்களிடம் சனிப் பெயர்ச்சி பற்றிய காலத்தையும் நேரத்தையும் கணிப்பதில் கருத்தொற்றுமை இல்லை.

நிகழும் விரோதி ஆண்டு புரட்டாசி மாதம் 10 ஆம் நாள் (26.09.2009) சனிக்கிழமை சுக்ல பட்சத்து அஷ்டமி திதி, நட்சத்திரம் மூலம் நடைபெறும் நாளில், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக சரியாக மதியம் மணி 3.18 க்கு சனி பகவான் சிம்ம இராசியிலிருந்து கன்னி இராசிக்குள் நுழைகிறார் என வாக்கிய பஞ்சாங்கம் சொல்கிறது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் 2009 செப்டம்பர் 9 ஆம் நாள் சனிப் பெயர்ச்சி இடம்பெறுகிறது என்கிறது. இந்த கால வேறுபாட்டுக்கு என்ன காரணம்?

2007 இல் ஏற்பட்ட சனிப் பெயர்ச்சி பற்றியும் இந்த இரண்டு பஞ்சாங்கங்களும் இருவேறு காலத்தைக் குறிப்பிட்டன. திருக்கணிதப்படி யூலை 16 இல் சனிப் பெயர்ச்சி, வாக்கியப் பஞ்சாங்கப்படி ஓகஸ்த் 5 இல் சனிப் பெயர்ச்சி இடம் பெற்றது.

காலத்தை நாம் இரண்டு வழிகளில் அளக்கலாம். ஒன்று ஞாயிறை மையமாகக் (Geocentric)  கொண்டு அளப்பது. மற்றது விண்மீனை (Sidereal)வைத்து (Spica என்ற நட்சத்திர மண்டலத்திற்கு நேர் எதிரே 180 பாகையில் உள்ள புள்ளியை வைத்து) அளப்பது. முன்னது சாயான (Sayana) என்றும் பின்னது நிராயான (Nirayana) என்றும் அழைக்கப்படுகிறது. சாயான என்றால் அசைவது (Tropical Zodiac with precession) என்பது பொருள். நிராயான அசையாதது (Fixed Zodiac without precession) என்று பொருள். (இது பற்றிய மேலதிக தரவுகளை நான் எழுதிய சோதிடப் புரட்டு நூலைப் புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளவும்)

அண்டவெளியில் காணப்படும் விண்மீன்கள், கோள்கள் எல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை நகர்கின்ற வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறுபடுகின்றது. சந்திரன் ஓர் இராசியை 2 1/4 நாளில் கடக்கின்றது. சூரியன் அதே இராசியைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. குருவுக்கு (வியாழன்) ஒரு ஆண்டும் இராகு (Ascending Node)   கேது (Descending Node) இரண்டும் 1 1/2 ஆண்டும் சனிக்கு 2  1/2 ஆண்டும் ஆகின்றன. இராகு கேது கோள்கள் திடப்பொருளால் ஆனவை அல்ல. அவை நிழல்கோள்கள்.

இவ்வண்டம் எல்லை அல்லது முடிவு அற்றது என நியூட்டன் உட்படப் பெரும்பாலான அறிவியலாளர்கள் எண்ணினர். பேரறிஞர் அயின்ஸ்தீன் இவ்வண்டத்தில் நேர்க்கோடு என்பதே கிடையாது எல்லாம் வட்டங்களே என்கிறார்.

இவ்வண்டத்துக்கு எல்லை இருக்கிறது என்று ஏன் கருத முடியாது? அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற வில்லங்கமான கேள்விக்கு விடை கூற வேண்டி வந்துவிடும்! இவ்வண்டத்தின் ஆரம் 36,000,000,000 (336 கோடி கோடி கிமீ) ஆகும்.

அண்டத்தொகுதிக்குள் சூரியன் என்பது ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற கோடிக்கணக்கான வின்மீன்கள் நமது அண்டத் தொகுதிக்குள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை கோள்களின் எண்ணிக்கை 9 எனக் கணக்கிடப்பட்டது. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ என்பனவாம். ஆனால் புளூட்டோ கோள் என்னும் வரையறுக்குள் வராத காரணத்தால் அறிவியலாளர்களால் நீக்கப்பட்டுள்ளது. எனவே மேலே சொன்ன வற்றுள் புளூட்டோ நீங்கலாக 8 கோள்கள் மட்டுமே கோள்கள் என்னும் தகுதியைப் பெற்றுள்ளன. சூரியன் கோள் அல்ல விண்மீன். சந்திரன் கோள் அல்ல துணைக் கோள். அதனால் சோதிடத்தில் 9 கோள்கள் (நவக்கிரகங்கள்) இருக்கின்றன.

வெறும் கண்ணால் வானத்தில் உலா வரும் சூரியனையும் சந்திரனையும் நாம் பார்ப்பது போல சில கோள்களை நம்மால் பார்க்க இயலும். சூரியன் மறைவதற்கு முன்போ அல்லது தோன்றுவதற்கு முன்போ புதன் கோளை நம்மால் பார்க்க இயலும். வெள்ளிக் கோளை மேற்கு அடிமானப் பகுதியில் மாலை விண் மீனாகவும் கிழக்கு அடிமானப் பகுதியில் காலை விண்மீனாகவும் பார்க்கலாம். செவ்வாய் கோளை ஆண்டு முழுவதும் அநேக நேரங்களில் பார்க்கலாம். பூமியிலிருந்து நோக்கும்பொழுது செவ்வாய்க் கோள் வானத்தில் சூரியன் இருக்கும் இடத்திற்கு எதிர் திசையில் இருக்குமானால் அது தெளிவாகத் தெரிகிறது.

வெற்றுக் கண்களால் செவ்வாய் கோளினைப் பார்க்கும் பொழுது .அதனுடைய நிறம் சிவப்பாகத் தோன்றுகிறது. சனிக் கோளினை வெற்றுக் கண்களால் பார்க்கும்போது மஞ்சள் நிறமாகத் தெரியும். 1610 ஆம் ஆண்டில் கலிலியோ தொலைநோக்கியைக் கொண்டு சனிக் கோளை உற்று நோக்கினார். யுரேனஸ் கோளினை தொலை நோக்கியினைக் கொண்டு பார்த்தால் பச்சை நிறமாகத் தெரியும்.

பழங்காலத்தில் வெறும் கண்ணால் வானத்தைப் பார்த்தபொழுது நகர்ந்த கோள்களை தெய்வங்கள் எனக் கிரேக்க மற்றும் உரோமானியர்கள் நம்பினர். அவற்றிற்கு உரோம கடவுள்கள் பெயரையே சூட்டியுள்ளனர். சாதக சோதிடம் அண்மையில் புனையப் பட்டது. எனவே கோள்களின் எண்ணிக்கை 9 என்று கூறியிருக்கிறார்கள்.

சீன சோதிடத்தில் கண்ணுக்குத் தெரிந்த 5 கிரகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்லுகின்றார்கள் ஆனால் அவர்கள் இந்த 5 கிரகங்களும் சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வேறுபட்டது என்று தெரிந்து வைத்திருந்தார்கள். விண்மீன்களைப் பார்த்த மனிதன் தனக்குப் பழக்கப் பட்ட விலங்குகளின் பெயரைக் கொடுத்திருக்கின்றான். சீன சோதிடத்தில் எலி, காளை மாடு, புலி, முயல், முதலை, பாம்பு, குதிரை, குரங்கு, செம்மறி ஆட்டுக் கிடா, சேவல், நாய், பன்றி என்ற 12 விலங்குகள் இராசிகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

சீனாவில், 12 விண்மீன் கூட்டங்களுக்கு எலி, காளை, மாடு, புலி, முயல், முதலை, பாம்பு எனக் கொடுத்திருப்பது போல மேலைச் சோதிடத்தில் (Tropial Zodiac)  நாடுகளில் ; Aries, Gemini, Leo, Libra, Sagittarius and Aquarius, whereas the feminine signs are Taurus, Cancer, Virgo, Scorpio, Capricorn and Pisces  என கிரேக்க – உரோம பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்கள்.

நகரும் கோள்கள் மற்றும் நகராத ஏதோ ஒரு உருவ அமைப்புள்ள விண்மீன் கூட்டங்கள் (Constellations)  இவைதான் இந்திய சோதிடத்தின் (Vedic or Sidereal Zodiac)   அடிப்படை.

இந்திய சோதிடர் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயர் கொடுத்திருக் கின்றார்கள். இதற்கான சில உருவப் படங்களையும்  (Signs) கொடுத்திருக்கின்றனர்.

கோள்கள் சூரியனைச் சுற்றி வருவது அறிவியல். ஆனால் சனிக் கோள் நகர்வதை சனிப் பெயர்ச்சி என்றும் அதனால் தனிப்பட்ட மனிதர்கள் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறார்களே? அது எப்படி? சனிப் பெயர்ச்சி என்னும் புரட்டுக்குக் கூட்டம் சேர்கிறது, படித்தவர்களிடம் இருந்தும் படியாத பாமரர்களிடம் இருந்தும் பரிகாரம் என்னும் பெயரில் சோதிடரும் கோயில் குருக்கள்மாரும் பணம் கறக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் சனி பெயர்ச்சி போலவே குருப் பெயர்ச்சி, இராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி ஆகியவற்றை வைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள. இதன் மூலம் தமிழ்க் குமுகம் ஒரு அறிவுடைய குமுகமாக மாறவிடாது தடுக்கிறார்கள். இதற்கு ஊடகங்கள் துணை போகின்றன. இன்று சுப நேரம், இராகு காலம், யமகண்டம், இராசி பலன், ஆண்டு பலன், போடாத ஏடுகளையே பார்க்க முடியாது.

நோபல் பரிசு பெற்ற வானியலாளர் சோதிடம் என்பது பொய் என அறிவித்த பிறகும் சோதிடம் அறிவியல் எனச் சோதிடர்கள் எழுதிக்கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.

சூரிய மண்டலத்தில் பூத வடிவான வியாழக் (Giant Jupiter)  கோளுக்கு அடுத்தபடி மிகப் பெரிய கிரகம் சனிக் கோள் ஆகும். சனிக் கோளம் புவியிலிருந்து குறைந்தது 720 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. கோள வடிவில் சனி, பூமியை விட சுமார் பத்து மடங்கு பெரியது. ஒரே மட்ட அமைப்பில் ஏகமைய வட்டங்களில் [Concentric Circles]  பல வளையங்களை அணிந்து மிக்க எழிலுடன் இலங்கும் சனிக் கோளுக்கு ஈடு, இணை சூரிய மண்டலத்தில் எந்தக் கோளும் இல்லை.

Image result for saturn planet

                                                                                                                                                                            சனி (Saturn)

சனிக் கோள் உரோமரின் வேளாண்மைத் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. சனிக் கோளே பண்டைக் கால மக்களுக்குத் தெரிந்திருந்த கடைசித் தொலைக் கோளாகும். வியாழனுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கோளும் இதுவே. ஏனைய கோள்களைப் போலவே சனிக் கோள் ஓர் அழகான கோள். சோதிட சாத்திரம் சொல்வது போல் அதன் நிறம் கறுப்பு அல்ல. அதன் நிறம் கறுப்பு என்பதோ, அதன் வாகனம் காக்கை என்பதோ வெறும் மூடநம்பிக்கை. இந்தக் கோளைச் சுற்றிலும் வளையங்கள் காணப்படுகின்றன. இந்த வளையங்களை முதன் முதலில் கலிலியோ கலிலி (Galileo Galilei (1564-1642)  என்ற வானியலாளரே தனது சிறிய தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார்.

ஞாயிறிடம் இருந்து இந்தக் கோள் பெறும் ஒளியும் வெப்பமும் மிகக் குறைவாகும். சனிக் கோள் சூரிய குடும்பத்தில் 798.30 மில்லியன் மைல் தொலைவில் வரிசையில் ஆறாவது கோளாக சுழல்வீதியில் சுற்றி வருகிறது.

        சனிக் கோள்

விட்டம்                                       –  120,660 கிமீ (74,978 மைல்)
மேற்பரப்பு                                 –  வாயு மற்றும் நீர்மம் (Gas and liquid)
ஈர்ப்பு விசை                               –  1.16 (புவி 1)
திணிவு                                        –  95.2 (புவி 1)
வளிமண்டலம்                             –    நீரகம் (hydrogen) 88 விழுக்காடு கீலியம் (helium) 11 விழுக்காடு
வெப்பம்                                       –  288 பாரன்கைட் (-178 செல்சியஸ்)
அச்சின் சாய்வு                             –  26.73 பாகை
தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்       –  10 மணி 40 மணித்துளி, 0 வினாடி (0.436 புவி நாள்)
தன்னைத்தானே சுற்றும் வேகம்                   –  நொடிக்கு 9.87 கிமீ (மணிக்கு 35,500 கிமீ)
ஞாயிறைச் சுற்நி வர எடுக்கும் காலம்         –   9 ஆண்டுகள் 167 நாள்கள் (29.46 புவி ஆண்டுகள்)
ஞாயிறைச் சுற்றும் வேகம்                            –  நொடிக்கு 9.64 கிமீ
புவியில் இருந்து பொதுமேனி தொலைவு      – 1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் மைல்)
உங்கள் எடை (200)                                          –  சனியில் 212.8 கிலோ
நிலாக்கள்                                                         –  31

சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாக்கி நீரகம் திரவமாய்த் தணிவடைகிறது [Condenses into a Liquid]  உட்கருவில் திரவ நீரகம் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக நீரகம் [Metallic Hydrogen]  பாறை ஆகி, மின்கடத்தியாக (Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக (Magnetic field)  இருப்பதற்கு இதுவே காரணம்.

சனியின் நடுவே ஒரு வேளை கடும் பனிக்கரு  உறைந்துபோய் இருக்கலாம்! அல்லது கன மூலகங்கள் (Heavey elements)  பேரழுத்தத்தில் பாறையாகி ஏறக்குறைய  15,000 பாகை C வெப்பம் உண்டாகியிருக்கலாம்! 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சூரிய குடும்பத்தில் பிறந்த வியாழன் சனி இரண்டும் ஈர்ப்பியல் கொந்தளிப்பு [Gravitational Settlement] அடங்கி இன்னும் நிலைப்பாடு [Stability]  பெறவில்லை. அதனால் அண்டத்தின் கருச் சுருக்கம் (Contraction)   வெப்பத்தை மிகுந்து வெளிப்படுத்தி, சனிக்கோள் தான் சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தைவிட மூன்று மடங்கு மிகையாக விண்வெளியில் அனுப்புகிறது!

பூமியில் உள்ள நவீன தொலை நோக்கி மூலம் பார்த்தாலும் சனி மண்டலத்தில் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது. புவிச் சுழல்வீதியில் (Earth’s Orbit) சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியில் (Hubble Space  Telescope] 1990 ஆம் ஆண்டு, முதன் முதலில் சனிக் கோளில் ஒரு மாபெரும் வெண்ணிறத் தளம் (White Spot)  கண்டு பிடிக்கப் பட்டது. பல மில்லியன் மைல் தூரத்தில் சூரிய மண்டலத்தின் வெளிக்கோள்களில் ஒன்றாக, ஆமை வேகத்தில் சுற்றி வரும் சனிக்கோளை, விண்வெளி ஆய்வுக் கலங்கள் (Space Probes)மூலமாகத்தான் அறிய முடியும்.

இது காறும கூறியவற்றால் சனி என்பது ஏனைய கோள்கள் போலவே 798.30 கோடி மைல் தொலைவில் ஞாயிறைச் சுற்றிவருகிற ஒரு கோளாகும். அது ஒரு சடப்பொருள். அங்கு மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று இல்லை. சனிக்கோள் மட்டுமல்ல வேறு எந்தக் கோளிலும் மனிதன் வாழ்வதற்கு வேண்டிய உயிர்க்காற்று, தண்ணீர் இல்லை. கோள்களுக்கும் மனிதனுக்கும் தொடர்பே இல்லை. அப்படியிருக்க இந்த 21 நூற்றாண்டிலும் சனி கெட்ட (நீச கிரகம்) சனி பகவான் பொல்லாதவன் – அவன் கோபத்தைத் தணிக்க எண்ணெய் தேய்த்து முழுக வேண்டும் கோயிலுக்குச் சென்று எள்ளெண்ணை எரிக்க வேண்டும் விரதம் இருக்க வேண்டும் பூசை, அருச்சனை செய்ய வேண்டும் என்று படியாத பாமர மக்கள் மட்டுமின்றி படித்த முட்டாள்களும் நம்புகிறார்கள்.

தமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் எமது குமுகம் மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.

இந்த இடத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை ஊன்றிப் படியுங்கள். படிப்பதோடு நின்று விடாமல் மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள். புது மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பிடியுங்கள்.

புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே!

தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்!

இவற்றை நீக்கி விடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு. எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.

தமிழா! எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. “முந்திய சாஸ்திரம் தான் மெய் பிந்தைய சாத்திரம் பொய்” என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும், உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.

எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்ச்சி. சனீசுவரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பது எல்லாம் சனிக் கோள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் முன்னோரின் மூடநம்பிக்கை ஆகும்.

மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது. (முற்றும்)

பாவ மன்னிப்பு

வீ. இரத்தினம், பெங்களூரு

பவுத்தம், சமணம் போன்ற ஒருசில மதங்களைத் தவிர பெரும்பாலான மதங்கள் கடவுளை ஆதாரமாகக் கொண்ட மதங்களாகும். அந்த மதங்களைத் தோற்றுவித்தவர் கடவுளே எனச் சொன்னாலும், அவற்றை மக்களிடையே பரப்பியவர்களே மனிதர்கள்தான் (மதவாதிகள்) என்று சொன்னால் தவறாக இருக்கமுடியாது. இந்த மனிதர்கள் உண்மையைக் கண்டறிந்து கூறும் முழுமையான அறிவு படைத்தவர்கள் எனக் கொள்ள முடியாது. அதனால், தவறான கருத்துகளும், மூட நம்பிக்கைகளும் கூட மதத்தின் பெயரால் மக்கள்மீது திணிக்கப்பட்ட வரலாறுகள் ஏராளம் உண்டு. அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தோர் கடவுளுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இப்படித் தண்டிக்கப்பட்ட பலரில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வானவியல் அறிஞர் கலீலியோ என்பவரும் ஒருவர்.

இந்தப் பாவத்தைச் செய்தது யார்? அதற்கான பாவ மன்னிப்பு கேட்டது யார்? இந்தக் கேள்விகளுக்கான விடை ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய செய்தியாகும். மத நூல்கள், இந்த உலகைப் படைத்தது கடவுள்தான் என்றே அடித்துச் சொல்கின்றன. இந்த நில உலகம் தட்டையான வடிவமுடையது. கடல்களால் சூழப்பட்டது என்றே மக்கள் கற்பிக்கப்பட்டனர். மதவாதிகள் மத நூல்களிலிருந்து இதற்கான சான்றுகளை அள்ளி வைத்தனர். இதனை நம்புகிறவர்கள் தட்டைப் பூமியர் சங்கம் என்ற அமைப்பையே உருவாக்கினர்.

இந்தக் கருத்தை ஏற்காதவர்கள் இந்த நிலஉலகம் உருண்டை வடிவமுடையது என்றனர். இவர்கள் பூமி உருண்டையர் சங்கம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்துத் தங்கள் கருத்தினை விளக்கமாக எடுத்துரைத்தனர். இவர்களில் எவருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாது.

சூரியனும், சந்திரனும் உருண்டையாக இருப்பதைப் பார்த்த முற்கால மாந்தர்களில் சிலர் உலகமும் ஏன் அவ்வாறு உருண்டையாக இருக்க முடியாது என்று எண்ணி இருக்கக் கூடும். பண்டைக் காலத்திலேயே கிரேக்கர்கள் உலகம் உருண்டையானது என்று சொல்லி வந்துள்ளனர். இருப்பினும், கி.பி. 400_க்குப் பிறகு உலகம் தட்டையானது என்ற எண்ணமே மேலை நாடுகளில் நிலைத்துவிட்டது. இந்தக் கருத்து அடுத்த சில நூற்றாண்டுகள்வரை மாறவில்லை. நமது நாட்டு தசாவதாரக் கதைகளும் உலகம் தட்டையானது; பாயைப் போல் சுருட்டக் கூடியது என்றே சொல்கின்றன.

உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிக்க கடல்வழியாகக் கப்பல் பயணம்செய்து காட்ட விரும்பினர் மேலை நாட்டு மாலுமிகள். ஃபெர்டினாண்ட் மெகல்லன் என்ற போர்ச்சுக்கீசிய மாலுமி வரைபடங்கள், காம்பசு ஆகியவைகளின் துணை கொண்டு கப்பலில் உலகைச் சுற்றி வரக் கிளம்பினார். அய்ந்து கப்பல்களுடன் ஸ்பெயின் நாட்டுக் கடற்கரையிலிருந்து 10 ஆகத்து, 1519 அன்று அவருடைய பயணம் தொடங்கியது. வழியில் நடந்த போரில் 17 ஏப்ரல் 1521 அன்று அவர் கொல்லப்பட்டார். அவருடன் பணிபுரிந்த மாலுமிகள் தொடர்ந்து கப்பல்களை வழிநடத்தி பயணத்தை மேற்கொண்டு வந்தனர். புறப்பட்ட அய்ந்து கப்பல்களில் ஒருகப்பல் மட்டும் 6, செப்டம்பர் 1522 அன்று ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தது. இது உலகம் உருண்டை என்பதை மெய்ப்பித்தது. அதன் பிறகு உலகம் தட்டையானது என்ற கேள்வியை எவரும் எழுப்பவில்லை. இப்போது அப்படிப்பட்ட கேள்விக்கே இடமில்லை. விண்வெளியிலிருந்தும், சந்திரனிலிருந்தும் எடுக்கப்பட்ட படங்கள் உலகம் உருண்டை என்பதை எவ்வித அய்யத்திற்கும் இடமின்றி மிகவும் தெள்ளத் தெளிவாகக் காட்டி வருவதை எவரும் பார்க்க முடியும்.

உலகம் உருண்டை வடிவமுடையதே எனத் தெள்ளத் தெளியத் தெரிந்துகொண்ட பின்னர் சூரியனும், சந்திரனும் உருண்டையானதே எனவும் தெரிந்து கொண்டனர். இவை ஒன்றையொன்று சுற்றி வருவதே இரவு – பகல் மாறி மாறி வருவதற்கான காரணமாக இருக்கமுடியும் என நம்பினர். ஆனால் அறிவியலாளர்கள் சூரியன் நடுவில் உள்ளது; அதைச் சுற்றி உலகமும் மற்ற கோள்களும் சுழன்று வருகின்றன என்றனர். ஆர்யபட்டா என்ற இந்திய வானவியல் அறிஞர் ஏறக் குறைய கி.பி. 500_இல் சூரியனை மய்யமாக வைத்து உலகம் அதைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுதே அவர் உலகம் உருண்டை என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அய்ரோப்பிய அறிஞர்கள் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றி உலகம் மய்யத்தில் உள்ளது என்றனர். இதற்கும் பூமி மய்ய வாதம் என்று பெயர்சூட்டினர். இதனை மறுத்து கி.பி. 1514 இல் நிக்கோலாஸ் கோப்பர்னிகஸ் என்பவர் சூரியன்தான் மய்யமாக உள்ளது என்றார். இதைச் சூரிய மய்ய வாதம் என்றனர். இதைப் பற்றி கோப்பர்னிகஸ் எழுதிய நூல் வெளியாகு முன்பே அவர் கி.பி. 1543 இல் இறந்து போனார்.

இதற்கிடையில் லென்சு உருவாக்கும் நுட்பம் வெகுவாக முன்னேறியது. கலீலியோ ஒரு பெரிய தொலை நோக்கியை அமைத்து வானில் நிகழ்வதைப் பார்த்தார். உலகிற்குச் சந்திரன் ஒருதுணைக் கோளாக இருப்பதைப் போல வியாழன் கோளைச் சுற்றி 14 சந்திரன்கள் (துணைக் கோள்கள்) செல்வதைப் பார்த்தார். அப்போது புதிய தொரு சிந்தனை அவரது மனதில் தோன்றியது. ஒரு கோளைச் சுற்றிச் சில துணைக்கோள்கள் செல்லும்போது ஏன் எல்லாமே பூமியைச் சுற்றுகிறது என நாம் நினைக்க வேண்டும் என்ற கேள்வியை அவர் எழுப்பினர். கோபர்னிக்கசின் சூரிய மய்ய வாதம் சரியாகவே இருக்குமென அவருக்குத் தோன்றியது. மீண்டும் சூரிய மய்ய வாதம் தலை தூக்கியது. கிறித்துவ அமைப்பிற்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது. கடவுள் இந்த உலகைப் படைத்து அதில் மனிதர்களை உலவவிட்டதன் காரணமாக உலகம்தான் அனைத்திற்கும் நடு நாயகமாக இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கருதியது. சூரியனைமய்யமாக வைப்பது கிறித்துவ மதத்திற்கு எதிரானது என்று அவர்கள் நினைத்தனர். அதனால் கலீலியோவின் வாயை மூடவைக்க முடிவு செய்தனர்.

கலீலியோவின் செயல் கடவுளுக்கும் மதத்திற்கும் எதிரானது என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கி.பி. 1633 இல் போப் ஆண்டவர் கலீலியோவின் நூலைத் தடை செய்தார். தான் சொன்னது தவறுதான் என்று ஒப்புக் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பலாம் என்று அவர் அறிவுறுத்தப் பட்டார். அவர் அதற்கு இசைந்ததாகத் தெரியவில்லை. அதனால் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சிறைத்தண்டனை வீட்டுக் காவலாக மாற்றப்பட்டது. கலீலியோ 1642 ஆம் ஆண்டுவரை வீட்டுக் காவலிலேயே இருந்து இறந்து போனார்.

எனினும் இறுதி வெற்றி கலீலியோவிற்கே! அடுத்து வந்த நூற்றாண்டில் சூரியன்தான் மய்யமாக உள்ளது பூமி உள்பட எல்லா கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று அறிஞர்கள் ஒரு மனதாக முடிவிற்கு வந்தனர்.

அறிவியல் அறிஞர்களிடையே சர். அய்சக் நியூட்டன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் 1643 இலிருந்து 1727 வரை வாழ்ந்தார். கோள்களின் ஈர்ப்பு விசை பற்றிய கருத்தை அவர் உருவாக்கினார். ஒரு கனமான பொருள் தான் உருவாக்கியுள்ள ஈர்ப்புப் புலத்தைக் கொண்டு தனக்கு அருகிலுள்ள மற்றொரு பொருளைத் தன்னை நோக்கி இழுக்கிறது என்ற உண்மையை நியூட்டன் கண்டுபிடித்தார். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசையால்தான் சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. இதே காரணத்தினால்தான் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி வரு கின்றன என்று மெய்ப்பித்தார். இவ் வாறாக அறிஞர்கள் பலநூற்றாண்டு காலம் உழைத்து சூரியனை மய்யமாகக் கொண்டுதான் மற்ற கோள்கள் எல்லாம் சுற்றி வருகின்றன என்ற உண்மையை நிலை நாட்டிவிட்டனர்.

பூமி தட்டையானது என்றும், அதை மய்யமாக வைத்துத்தான் சூரியனும் பிற கோள்களும் சுற்றி வருகின்றன என்றும் மதங்கள் கொண்டிருந்த ஆதார மற்ற நம்பிக்கை அறிவியலின் முன் தோற்றுப்போய் மண்டியிட்டு விட்டது.

இது தொடர்பாக, இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுதலாக இருந்த கலீலியோவைப் பற்றி 22 ஜூன் 2010 அன்றைய விடுதலை நாளிதழ் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.

காலம் மாறியது கருத்துகளும் மாற ஆரம்பித்தன. கத்தோலிக்க மக்களின் தலைவரும் வாட்டிகன் நகரின் ஆட்சித் தலைவருமான போப் 360 ஆண்டுகளுக்குப் பிறகு கலீலியோவிற்கு தண்டனை கொடுத்தது தவறு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

வாட்டிகன் நகரில் முக்கியமானவர்களும், நோபல் பரிசு பெற்றவர்களும் நிறைந்திருந்த கூட்டத்தில்தான் பகிரங்கமாக போப் இதனை ஒப்புக் கொண்டார். (31.10.1992)

போப் ஆண்டவர் அவர்களே பாவமன்னிப்பு கேட்டு செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுபோல் இல்லையா? இத்தகு உயர்ந்த பண்பாட்டை நமது தமிழ் நாட்டில் தீண்டாமைக் குற்றம் சாற்றி மண்ணின் மகனாகிய நந்தனை தீயில் எரித்தவர்கள் பின்பற்றுவார்களா? இன்றும் தெய்வத்தின் குரல் தீண்டாமை க்ஷேமகரமானது என்றுதானே ஒலிக்கிறது.


பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல்

Posted on 05 April 2011

பெளதிகவியல், இரசாயனவியல் கணிதம், தொழில்நுட்பம், இலத்திரனியல் போன்ற பல்வேறுபட்ட விஞ்ஞானத் துறைகளுள் மிகவும் பழைமை வாய்ந்தது வானசாஸ்திரம். எமது அயல் நாடான பாரதத்தில் கூட வான சாஸ்திரம் அக்காலகட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு இயம்புகின்றது.

தற்பொழுது அமெரிக்கா சோவியத் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு நிகராக இந்தியாவும் அண்மையில் நிலாவிற்கு சந்திராயன் என்ற பெயருடைய செயற்கைக் கோளை ரொக்கெட் மூலம் ஏவி சாதனை படைத்தது. அம்புலியிலிருநது சந்திராயன் அனுப்பிவைத்த தகவல்களின்படி அங்கு தண்ணீர் உள்ளது என்பது உலக விஞ்ஞானிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பண்டைய காலத்தில் வாழ்ந்த ஆதிவாசிகள் இரவு பகல் அடுத்தடுத்து உண்டாவதையும் வடக்கு தெற்கு துருவப் பிரதேசங்களில் நீங்கலாக ஏனைய கண்டங்களில் சூரியன் இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் பன்னிரெண்டு மணிநேரம் காட்சியளிக்கின்றமையும் கண்டறிந்தனர். வீடு நிர்மாணிப்பதற்கு முக்கிய மூலவஸ்து வாகத் திகழ்கின்ற சீமெந்து கண்டுபிடிக்கப்படாமையினால் இரவில் திறந்த வெளியில் படுத்து உறங்கினார்கள்.

இதனால் புராதன மக்கள் ஆகாயத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற சந்திரன் அடங்கலாக விண்மீன்கள் வானிலிருந்து புவியை நோக்கி மின்னல் வேகத்தில் விழுகின்ற விண்கற்கள் போன்றவற்றினால் தங்களுக்கு ஏற்படுகின்ற நன்மை, தீமைகள் எவை என்பதை நன்கு உணர்ந்துகொண்டனர்.

மேலும் வானத்தில் அபூர்வமாகக் காட்சியளித்த வால்வெள்ளி அவர்களுக்கு பெரும் கிலியை உண்டு பண்ணியது. தூமகேது தோன்றினால் தமக்கோ அல்லது நாட்டிற்கோ கெடுதல் ஏற்பட்டுவிடும் என்று முழுமையாக நம்பினார்கள்.

எனவே ஆகாயத்தில் சூரியனை நீள் வட்டமாகச் சுற்றி வருகின்ற பூமி, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, யுரெனஸ், நெப்டியூன் மற்றும் கிரகங்கள் பட்டியலில் இருந்து சர்வதேச விஞ்ஞானிகளினால் நீக்கப்பட்ட புளுட்டோ என்பனவற்றின் தாற்பரியங்கள் எவை என்பதை நோக்குவோம். அத்துடன் நட்சத்திரங்கள் விண்கற்கள் விண்துகள்கள் போன்றன பற்றியும் சிறிது ஆராய்வோம்.

அதற்கு முன் வான்வெளியில் நாம் காண்கின்ற விண்மீன்கள் கோள்கள் போன்றவற்றின் அசைவு உருவமைப்பு தன்மை ஆகியவற்றின் ஆராய்ச்சியே விண்ணியல் ஆகும் என்றும் கூறலாம். இது ஏனைய அறிவுத்துறைகளை எல்லாம் உள்ளடக்கிய பரந்த துறையாகும்.

கிரேக்க நாட்டு விஞ்ஞானியான அரிஸ்டோட்டில் மற்றும் தொலமி ஆகியோர் புவி தட்டையானது அல்ல முட்டை வடிவானது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தனர்.

மேலும் ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து இரண்டாம் ஆண்டு இத்தாலி நாட்டின் கலிலியோ என்ற விஞ்ஞானி அண்டவெளியை அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் ஆராய்ந்து மூட நம்பிக்கையை பிழையென்று நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் கத்தோலிக்க திருச்சபை அவர் கூறுவது பொய் என்ற அடிப்படையில் சிறைக்கு அனுப்பியது. அதன் பின்னர் இத்துறையை மிகவும் துல்லியமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் இருவர் சூரியனைப் பூமி சுற்றிவரும் பாதை வட்ட வடிவமானது அல்ல நீள்வட்டப் பாதை என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்தனர். ஆயிரத்து எழுநூற்று இருபத்தேழாம் ஆண்டு பிரித்தானிய கணித விஞ்ஞானியான சேர் ஐஸாக் நியூட்டன் ஒரு அப்பிள் மரத்திலிருந்து பழம் கீழ் நோக்கி விழுவதைக் கண்டு பல உண்மைகளைக் கண்டார்.

இதன் அடிப்படையில் இவ்வுலகில் உள்ள பொருட்கள் யாவும் ஒன்றையொன்று கவருகின்றன என்று அறிந்துகொண்டார். அதன் பின்னரே நியூற்றனின் விதி விஞ்ஞானத் துறையினரின் பயன்பாட்டிற்கு அறிமுகமானது. அதன் பின்னர் தோன்றிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் பயனாக மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. சில விண்மீன்களிலிருந்து வெளியேறும் ஒளியானது புவியை வந்தடைய இருபது கோடி வருடங்கள் செல்கின்றன என்பதையும் அந்நட்சத்திரம் நிலைகொண்டுள்ள தொலைவை ஒளி ஆண்டு அலகில் கூறி வைத்தனர்.
அக்காலகட்டத்தில் ரொக்கெட்டோ செயற்கைக் கோளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் வேற்றுக் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி அனைத்தையும் அதிசக்தி உயர்ந்த தொலைநோக்கி மூலம்தான் விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள முடிந்தது. நிலாவின் மேற்பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் மற்றும் சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள ரம்மியமான வளையங்களையும் கண்டு வியந்தனர்.

ஒரு நட்சத்திரத்தை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தொலைநோக்கியினூடாகப் பார்த்தாலும் வெறும் கண்ணால் நோக்குவது போல அது ஒரு ஒளிப்புள்ளியாகவே தென்படும். ஏனெனில் விண்மீன்கள் புவியிலிருந்து கோடிக்கணக்கான ஒளியாண்டு தொலை தூரத்தில் இருப்பதே பிரதான காரணியாகக் கொள்ளலாம். பதினான்கு கோடி எண்பத்து எட்டு இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள சூரியனின் ஒளி பூமியை வந்தடைய சுமார் எட்டு நிமிடங்கள் எடுக்கின்றன. சாதாரண ஒளிக்கதிரை ஓர் அரியத்தின் ஊடாகச் செலுத்தினால் அவ்வொளியில் வானவில்லில் தோன்றும் ஏழு வர்ணங்களையும் வெளிப்படுத்தும் என்பதை விஞ்ஞானிகளான ஐஸாக் நியூற்றன் சி. வி. இராமன் போன்றவர்கள் நிரூபித்துக் காண்பித்தனர்.

இதுவரை காலமும் பூமியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தவாறு ஆராய்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் அண்டவெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் விண்வெளி மையத்தில் இருந்தவாறு வேற்றுக் கிரகங்களின் பல விலைமதிக்க முடியாத தரவுகள் பெறப்படுகின்றன.

இனி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்ற பூமியைப் பற்றி சிறிது ஆராய்வோம்.

பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான வட்டமாக இருப்பதில்லை. இருதுருவங்களில் சிறிது தட்டையாகவும் கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப் பகுதியில் சற்று படுத்தும் இருக்கின்றது. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் பன்னிரண்டாயிருத்து அறுநூற்று எண்பத்து மூன்று கிலோ மீற்றராகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் முந்நூற்று அறுபத்து ஐந்தே கால் நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளொன்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் 4ஸி வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு பகல் உண்டாவதும் சூரியனைச் சுற்றுவதினால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன.

அடுத்து சந்திரனைப் பார்ப்போம். சந்திரன் பூமியின் உப கிரகமாகும். ஜீவராசிகளுக்கு சூரியனைப் போல் சந்திரன் அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால் சந்திரன் இல்லையென்றால் குளிர்ந்த நிலா வெளிச்சத்தை நாம் கண்டுகளிக்க முடியாது.

பூமி சூரியனைச் சுற்றிவருவது போலச் சந்திரனும் புவியைச் சுற்றி வருகின்றது. பூமியில் ஒருவன் ஒரு கல்லை அறுபது மீற்றர் உயரத்திற்கு எறிவானெனின் சந்திரனில் முன்னூற்று அறுபது மீற்றர் தூரத்திற்கு எறிவான். சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியில் உள்ளதைவிட ஆறிலொரு பங்காகும்.

பூமியில் சூரிய வெப்பத்தை வாயுக்கள் ஓரளவு தடுத்து குறைக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாத படியினால் சூரியக் கதிர்கள் விழுகின்ற பகுதியில் வெப்ப நிலை கூடவே காணப்படும். ஏனைய பகுதிகளில் துருவப் பிரதேசங்களில் உள்ள உஷ்ண நிலையைக் கொண்டிருக்கும். தொலை நோக்கி வாயிலாக சந்திரனை உற்று நோக்கினால் அதன் மேற்பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் அவதானிக்கலாம். இதுவே எங்களுக்கு பாட்டி வடை சுடுவது போன்று காட்சியளிக்கின்றது.

சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே அளவு நேரத்தில் அது தன்னைத்தானே சுற்றுகிறது. இதனால் பூமியில் உள்ளோர் நிலாவின் ஒரு பகுதியைத்தான் எப்பொழுதும் காணக்கூடியதாகவுள்ளது.

இனி புதன் பற்றி அறிவோம். இதனை ஆங்கிலத்தில் மெக்கூரி என்று அழைக்கின்றனர். சூரியனுக்கு மிகவும் அண்மையில் நிலைகொண்டுள்ள கிரகம் புதனாகும்.

அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம் நான்காயிரத்து எண்ணூறு கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது.
தன் சூரியனை ஒரு முறை சுற்றிவர எண்பத்தெட்டு நாட்கள் செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலயங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு பகல் மாறி மாறிக் கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்ட நாட்களுக்கு இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன.

புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் நானூறு பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ இருநூற்று எண்பது பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும் போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒரு சிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புது சந்திரணம் என்று அழைக்கின்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்திலுள்ள தொலைநோக்கி வாயிலாக புதனை உற்று நோய்கினால் வளர்பிறை, தேய்பிறை, பூரணை, அமாவாசை நிகழுவதைக் காணலாம். இப்பிரபஞ்சத்தில் நிகழுகின்ற அற்புதங்களை கண்டுகளிக்க உறுதுணை புரிகின்ற தொழில்நுட்ப கருவிகள் நவீன முறையில் கண்டுபிடிக்கப்பட்டே வருகின்றன.

சுக்கிரனை (Venus)ஆராய்வோமாகில் இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் பன்னிரெண்டாயிரத்து முன்னுற்று இருபது கிலோ மிற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர இருநூற்று இருபத்து நான்கு நாட்கள் ஆகின்றது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகத்தான் தோற்றமளிக்கும் இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.

இறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு யூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு யூன் ஆறாம் திகதி நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர்.

எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச் சுக்கிர – சந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம். இக்கிரகத்தைச் சுற்றி வெண்ணிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனில் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.


Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? – S Ramachandran

ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது ”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை ”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு

Image result for thaipongal day

தமிழண்ணல்


இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.

கணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.

சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring  எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர். வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.

மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.

அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசியில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.

இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு – ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.

அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும் அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந்நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

DO PLANETS RULE OUR LIVES?

by John D. Jess

The Chapel of the Air

The question “do planets rule our lives?” is not intended to be facetious. Today a whopping 32 million Americans believe their lives are governed by the position of the stars, according to a 1975 Gallup Poll, quoted in January 23, 1976, Chicago Tribune.

Another interesting discovery was that eight out of ten Americans can name their birth signs whether they believe in astrology or not.

Astrology, as currently practised in the Western world, was organized by the Greek astronomer Ptolemy, incorporating lore dating back to the Babylonians. Other traces of astrological chart making have been unearthed in a wide variety of prehistoric cultures.

Are all charts interpreted the same? Definitely not – no more than all emotional problems are interpreted the same by all branches of psychology. Astrologer Ingrid Williams has said, “Brain waves and planets are both full of electrical energy that needs to be explored scientifically. Scientists should not laugh at astrology, they should explore it” After all, they laughed at Louis Pasteur when he claimed that germs cause disease.”

Well, some of us fail to see any analogy there! Perhaps at this point, we should try to analyze the contributing factors in the widespread following astrology has today.

It is estimated that 1200 out of the 1750 daily newspapers carry an astrological column (1975 statistics). We may safely assume that the percentage is higher today, for astrology is a multi-million dollar industry.

Hundreds of bookstores specialize in astrological and cultist reading material. Thousands upon thousands of college and university students seek astrological guidance in matters of career, marriage, and politics.

Many parents plan the birth of their children so they will be born under a “favorable” astrological sign, despite the fact that the respected journal “Psychology Today” noted not long ago that “It is simply a mistake to imagine that the forces exerted by stars and planets at the moment of birth can in any way shape our futures.”

St. Augustine, who lived 1,600 years ago, gave up astrology when he learned that a wealthy landowner and a slave on his estate had been born exactly at the same time!

Perhaps psychologists who’ve rejected astrology have done so, in part, because in 1939 a group of Britains’s leading astrologists predicted a war would not come. When it did, they predicted it would end in a year!

Now I realize that any derogation of astrology is, to some minds, a very unpopular position. Nevertheless, I intend to outline here some of the reasons I reject the notion that the position of the planets has any bearing on our present or future, some lucky guesses in the past by astrologers not withstanding. It is up to the individual to weigh the arguments pro and con, then make his personal decision on the basis of these controversies.

I see at least six basic flaws in the religion of astrology:

First: Discrepancies are built-in factors. Let me explain. Astronomers admit that the zodiac (the belt containing the paths of the sun, moon, and principal planets) has shifted an entire “house” during the past 2,000 years. This is to say the sun no longer rises at 0 degrees of the constellation Aries; it’s moved to a new location as far as 7 degrees from Pices, which most certainly throws off all astrological computations. They could, of course, compensate for this in their figuring, but they don’t and they haven’t. This makes astrology’s theory untenable.

Second: Something astrologists will not admit is that the SUN, not the earth, is the center of our planetary system. Copernicus debunked that erroneous idea in the l6th century. Moreover, astrology simply hasn’t caught up with the new developments and probably never will, for the concept of a sun- centered solar system deals a knockout blow to astrology.

Third: Astrology works on the premise that “it is difficult, if not impossible, to chart the future of someone born near or above the latitude of 66 degrees. That means, very simply, that people born in, say, Finland or Greenland or Alaska or Northern Canada have no future! (If they depend on astrology). The reason for this is that In these areas it is impossible to calculate precisely what constellation is rising above the horizon, and, of course, without that knowledge astrology cannot function. I guess you would have to say that from an astrologer’s viewpoint, people in these areas of the world were never born!

Fourth: There is the “twin” problem. According to astrological thinking, twins born two minutes apart, their zodiacal sign the same, should be identical, and identically influenced by the same planets and have the same hereditary traits. However, twins born even minutes apart seldom have the same destiny. Why not?

Fifth: There is the Extra Planet Problem. Let me explain. Centuries ago, Mesopotamian priests based their astrological prognostications (which were pagan, by the way) on only those constellations which could be observed by the naked eye. They had no access to uncharted planets as we have today. Since then, additional planets have been discovered such as Uranus, Neptune, and Pluto. Imagine what complications astrologers encountered when these discoveries were made!

It’s interesting to note that many astrologers now conveniently blame the influence of these planets for some of their monumental failures!

Sixth: There is a universal rejection among astrologers of the person of God. Astrology preaches that planets possess a consciousness of their own. This is both pagan and anti-God. Astrology, in its final analysis, teaches that the solar system possesses a superconsciousnes that operates without God. That is, in other words, a pantheistic philosophy in which God’s power permeates everything. Without question, the whole system shouts out its pagan background!

It won’t take long to explain why there is so much interest in astrology today. People now, as never before, are vitally concerned with the future. There is widespread fear and anxiety. There is confusion and fear, and the formal religion fails to provide answers to the questions people are asking.

In Colossians 2:8 Paul wrote,

See to it that no one takes you captive through hollow and deceptive philosophy which depends on human traditions and basic principles of this world rather than on Christ. (NIV)

What a description of astrology!

Astrologers tell us that our destiny is in the stars, that they determine our fate. The Bible says man’s personal decision determines his destiny!

Let me pose ten brief questions for our “starstruck” friends:

  1. Why do only the constellations of the zodiac have an effect on man? There are other constellations and stars of much greater magnitude.
  2. Why haven’t astrologers kept up with astronomy? Every astronomer knows the zodiac which astrologers use has moved one entire sign.
  3. Why doesn’t astrological forecasting find support in statistical studies? Example: a study of 2,000 famous painters and musicians proved this was NOT the case!
  4. Why don’t astrologers recognize the problem of people born without a horoscope?
  5. How does one know which is the right astrology? In the Orient, different symbols are used for the 12 signs and therefore have different meanings.
  6. One researcher made up a completely bogus horoscope and sent it to numerous people. Many wrote back and thanked him for his accuracy!
  7. How do astrologers know what astral influence are good and which are bad?
  8. Why is the hour of birth so important? Why not the hour of conception?
  9. Why don’t two individuals born at the same time and under the same sign have the same destiny?
  10. Why do astrologers claim astrology is a science When it is almost universally rejected by scientists?

I leave you with these questions. You provide your own answers!

J.D.J. RIGHT NOW: Why not put YOUR life in the hands of the One who MADE the stars? Astrology is but one of the many occult practices which originated with the “Father of Lies.”

As you can see, the sidereal zodiac coordinate system is a fixed coordinate system. But the tropical zodiac coordinate system is a relative coordinate system. In ancient time, about 2000 years ago, the tropical zodiac coordinate system matches well with the sidereal zodiac coordinate system.

However, due the precession of Earth’s axis, the tropical year is about 20 minutes and 24 seconds shorter than the sidereal year. This makes the vernal equinox moving backward 1 degree every 71.57 years. But this small difference can be accumulated into a big gap over time. As of year 2007, this gap is about 24 degrees.

This 25-degree difference is about 24 calendar days. This is why sidereal zodiac Aries sign starts on April 14 in 2007, which is 24 days after the tropical zodiac Aries sign start date, March 21.

The following table shows you the dates when Sun enters different zodiac signs in tropical zodiac coordinate and sidereal zodiac coordinate systems:

Aspects do not change in the sidereal system. There is only a difference (ayanamsha) between the zodiacal degrees of the objects. Currently, that’s 24 degrees and 50 minutes using the Fagan/Bradley system, 23 degrees and 57 minutes if using the Lahiri system, and other numbers for a wide range of other systems, although I believe those are the two most common these days. Some ancient systems simply locked the zodiac to the position of fixed stars, such as in Babylonian times…They locked Aldebaran to 15 degrees Taurus, a key point on the fixed cross.

Since aspects don’t change, nor do houses, I generally don’t observe either when working in the sidereal system. I observe these in a normal astrology program. When working in sidereal, I generally use something like The Sky or Starry Nights and look at the real sky. It’s quite interesting to look at the real sky when you were born. You also will see all 13 constellations the ecliptic passes through (the traditional 12 omit Ophiuchus, aka Serpentarius, the Serpent Holder) and you will visually see declinations, stellar conjunctions, etc etc.

One must also remember in the real sky, the constellations are not 30 degrees each, they vary. My thought is one should look at the real sky for what it is, or look at the tropical zodiac which so beautifully articulates the Sun/Earth relationship. For example, the real ecliptic only briefly passes through the narrow, upper part of Scorpius (~6 degrees), yet is passes through a sizable swath (~19 degrees) of Ophiuchus before moving into Sagittarius. Virgo is some ~43 degrees wide, and Aquarius ~23 degrees. To use sidereal positioning without accounting for Ophiuchus nor the varying widths of each actual constellation seems incomplete, a sort of mish-mash of equal length signs (tropical reasoning) with stellar positioning (sidereal logic).


சோதனைமுன் நில்லாத சோதிடம் மூடநம்பிக்கையே!

வெள்ளி, 30 டிசம்பர் 2011 15:29

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கருத்து

சென்னை, டிச.30- சென்னையில் நேற்று பகுத்தறிவு அறிவியலாளர் என்ற தலைப்பில்  நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசியது சிலருக்கு கோபத்தையும், பலருக்கு உற்சாகத்தையும் ஏற் படுத்தியுள்ளது. ஜோதிடமும், செம்பை பொன் னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு என்றும், ஹோமி யோபதி மருத்துவமும் நம்பிக்கையின் அடிப் படையிலானதுதான் என்றும் அவர் பேசியுள்ளார்.

ஆக்கபூர்வமான ஆற்றல், எதிர்மறை ஆற் றல் என்ற சொற்றொடர்களை பல போலி மருத்துவர்கள் கூறுவது வெறும் பிதற்றல் என் றும், அவற்றிற்கு  உண்மையான பொருள் எதுவும் இல்லை என் றும் அவர் கூறினார். ஆனால் அறிவியலோ ஒரு  ஆற்றலைப் பற்றி ஒரு குறிப்பிட்ட விளக் கம் அளிக்கிறது என்று அவர் கூறினார்.

லண்டன் கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.ஆர்.சி. அணுஉயிரியல் சோதனை சாலையில் கட்டுமான ஆய்வுப் பிரிவு இணைத் தலைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன். இவர் தமிழ் நாட்டிலுள்ள சிதம் பரத்தில் பிறந்தவர்.

பாரதிய வித்யா பவனால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவை ஆற்றிய ராம கிருஷ்ணன், ஒரு நல்ல அரசு எவ்வாறு மக்களை அவர்களின் மோசமான உணர்வுகளில் இருந்து பாதுகாக்கிறதோ, அது போலவே நம்மை நமது பாகுபாடு நிறைந்த கண்ணோட்டத்தில் இருந் தும், மூடநம்பிக்கைகளி லிருந்தும் அறிவியல் காப்பாற்றுகிறது. அறிவியல் நடைமுறைகள் மூடநம்பிக்கைகளின் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.

முறை யான சோதனையினால் மெய்ப்பிக்கப்பட முடியாத எந்த ஒரு நடை முறையோ, உயர் குடி மக்களின் விமர்சனமோ மற்றும் நவீன அறிவியல் மீதான கட்டுப்பாடு களோ எந்த அறிவியல் பெயரைக் கொண்டிருந்தாலும், அறிவியல் என்று அவற்றைக் கருத முடியாது. அறையின் வெப்பத் தில் அணுவைப் பிளப் பது என்பது போன்ற ஃப்ளைச்மேன்-பான்ஸ் கருத்துகளும் அதிக அளவு வைட்டமின் – சி புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற லைனிங் பாலிங்சின் கருத்தும் தவறானவை என்று மெய்ப்பிக்கப்பட்டுள் ளதை அவர் எடுத்துக் காட்டாகக் குறிப்பிட் டார்.

சோதனைகள் மூலம் வெற்றி!

புள்ளிவிவரங்கள் வேறுவிதமான முடிவுகளை அளிக்கும்போதும், தவறான மூடநம்பிக்கைகள் தொடர்ந்து நிலவுகின்றன என்று கூறிய அவர், குளிர்ந்த வெப்பநிலையில் அணுவைப் பிளப்பது மற்றும் வைட்டமின் சி – யின் பயன்பாடுகள் பற்றி, நூற்றுக்கணக்கான இணையதளங்களும், செய்திக் கட்டுரைகளும் தொடர்ந்து வெளி வந்துகொண்டுதான் இருக்கின்றன. சோதனையில் வெற்றி பெற்ற மருந்தோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ நோய் குணமாவதற்கு முக்கியமான காரணமாக இருக்க முடியுமேயன்றி, தற்செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வு அல்லது தொடர்பே இல்லாத ஒரு நிகழ்வு காரணமாக இருக்க முடியாது.

எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவம் பரிந்துரைக்கப்படுவது பற்றி குறிப்பிட்ட டாக்டா ராமகிருஷ்ணன் இந்நோய்களுக்கு உண்மையில் பயன்தரும் வேறு மருந்துகள் உள்ளன என்று கூறினார். இது பற்றி முடிவெடுப் பதில் சோதிடம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.  நியாய உணர்வு, ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள விடாமல் மக்களை ஹோமியோபதியும், சோதிடமும் தடுத்து வேறு தவறான பாதையில் செலுத்தி விடுகின்றன.

மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச் சாரம் எப்போதுமே  மிகுந்த அளவிலான கேட்டினை உருவாக்கும் என்று அவர் கூறினார். என்றாலும் தாங்கள் அளிக்கும் மருந்துகளின் பாதிப்பை உயர்த்தும் ஆற்றல் படைத்த ஆலோ சனைகளை மருத்துவர்கள் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

எதனையும் கண்ணை  மூடிக்கொண்டு நம்பி விடாமல், அதனை சோதனை செய்து பார்ப்பது, கருத்தூன்றி ஆய்வு செய்வது, சிறு நிகழ்ச்சிகள் பற்றிய கதைகளை விட சோதனை செய்து பார்ப்பதை நம்புவது ஆகிய கருத்துகளே நவீன அறிவியல் உருவாக்கத்தின் மய்யக் கருத்தாக இருப்பவை என்பதுடன், மிகவும் முக்கியமான வழிகாட்டும் கொள்கையாக இருக்கின்றது  என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.

நம்பிக்கை மோசமானது

16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலம் முதற்கொண்டு அறிவியல் முன்னேற்றத்துக்கு மிகவும் இன்றியமையாத, முக்கியமான சிந்தனை சுதந்திரமின்றி நல்ல அறிவியல் வளர்ச்சி பெற இயலாது. முழு சிந்தனை சுதந்திரம் இன்றி,  தொடர்ந்த காலங்களில் மிகச் சிறந்த அறிவியல் இருப்பதும் இயலாதது என்று அவர் கூறினார்.

ரிபோசோம்ஸ் என்னும் புதிய பாதை படைக்கும்  அவரது புதிய கண்டுபிடிப்புக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு 2009 இல் வழங்கப்பட்டது. கோபர்நிகஸ், கலீலியோ ஆகியோரின் காலங்களில்தான்  அறிவியல்  நவீன தோற்றம் பெற்றது என்று அவர் குறிப்பிட்டார். உற்று அறிவதும், நம்பிக்கையும் மொத்தமாகத் தவறாகிப் போகும்போது, உற்று அறிவதை விட அதிக அளவில் தவறாகிப் போவது நம்பிக்கைதான் என்ற கருத்தை அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

அய்ரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி உணர்வு இக்கருத்துக்கு ஆதரவளிப்பதாக இருந்தது. யார் எவ்வளவு அழகாக சொன்னாலும், அது சோதனையால் மெய்ப்பிக்கப்பட முடியாவிட்டால், அது நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நிலைபெற்றது.

இறுதியில் சோதனையில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்று சமூகங்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல நவீன அறிவியலை உருவாக்கியது.  இந்த உலகின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனமான பவுன்டேஷன் ஆப்ராயல் சொசைடியின்  எவரது சொல்லின்படியும் அல்ல என்ற கொள்கையே நவீன அறிவியலை விளக்குவதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சோதனையில் தோல்வி அடைந்த பிறகும்கூட உலவும் மூடநம்பிக்கை

சோதனையில் தோல்வியடைந்த பிறகும் சில பரவலான மூட நம்பிக்கைகள் தொடர்ந்து சமூகங்களில் நிலவுகின்றன. உண்மையான காரணத்தையும், தற்செயலாக நடைபெறுவதையும் பிரித்துக் காண முடியாத மனிதரின் இயல்பான தன்மைதான் இதன் காரணம். கணிதம், இசை, கலை போன்ற நல்ல விளைவுகளை ஏற்படுத்திய நடைமுறைகளை அங்கீகரிக்க  விரும்பும் மனநிலை,  அத்தகைய நடைமுறைகள் இல்லாத இடங்களிலும் அவை இருப்பது போன்று நம்மை கற்பனை செய்து கொள்ளச் செய்கிறது.

தனது குறைகளைத் திருத்திக் கொண்டு தன்னைத்தானே சரி செய்து கொள்ள இயன்றதுதான் அறிவியல்.  புதிய ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள் வந்த பிறகு, அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை, கொள்கைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

இவ்வாறு தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் அறிவியலின் பண்புதான்,  மற்ற மூடநம்பிக்கை நடைமுறைகளில் இருந்து அதனைப் பிரித்து அடையாளம் காட்டுவதாகும்.  அறிவியலில் தவறு நேர்வது கேடுபயப்பதில்லை; ஆனால் தவறான விளக்கம் அளிப்பது உண்மையிலேயே பெருங்கேடு விளைவிப்பதாகும். (Viduthalai)

About editor 2979 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply