‘அன்று கருணா இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ ஒரு எதிர்வினை – நக்கீரன்

‘அன்று கருணா இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’  ஒரு எதிர்வினை – நக்கீரன்

‘அன்று கருணா இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற தலைப்பில் இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

இந்த ஒப்பீடு சரியா?  இது அப்துல்  காதருக்கும் அமவாசைக்கும் முடிச்சுப் போடுவது மாதிரி இது இல்லையா? கருணா வி.புலிகள் இயக்கத்தை காட்டிக் கொடுத்தவர். அதிலிருந்து வெளியேறியவர். வெளியேறிய பின்னர் ஆளும் கட்சியில் சேர்ந்து துணை அமைச்சர் பதவி பெற்றவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியினர்,  உரிமைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தார்களா? அதற்கு ஈடாக அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டார்களா?

தமிழ் அரசுக் கட்சி நினைத்திருந்தால் 2015 இல் அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அப்படி நாம்  செய்யவில்லை. காரணம் தஅக இன் அடிப்படை கொள்கைகளில் ஒன்று தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கும்வரை அதன் நா.உறுப்பினர்கள் அமைச்சரவையில் சேரக் கூடாது என்பதாகும். இந்த முடிவு மீன்பிடி அமைச்சர் பதவிக்காக ஜிஜி பொன்னம்பலம் 10 இலக்கம் மலையகத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்த அரசியல் கயமைக்கு எதிராக எடுத்த முடிவு.  எனவே யாரை யாரோடு ஒப்பிடுவது என்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஓர் அறம் வேண்டும்.  பரபரப்புக்காக தலைப்புப் போடுவது சின்னத்தனமாகும். சரி இனி கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பார்ப்போம்.

அன்று கருணா

இன்று கூட்டமைப்பினரா?

வி.தேவராஜ் , மூத்தபத்திரிகையாளர்.

(1) தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளும் தகர்ந்து போவதில்லை. அவை நீறுபூத்த நெருப்பாகவே தமிழ் மக்களின் மனதில்கனண்று கொண்டிருக்கின்றன என்பதற்கு சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல பதிவுகளைக் காணலாம். இந்தப்பதிவுகள் அனைத்துமே ஒருவிடயத்தை அதாவது தமிழ்த்தேசியம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து தெளிவான, உறுதியான செய்தியை திரும்பத் திரும்பக்கூறுகின்றன. அதாவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், குறித்த போராட்ட வடிவங்கள் காலத்துக்காலம் மாறியுள்ளன. போராட்ட வடிவங்கள்மாறின என்பதற்காக அரசியல் அபிலாசைகள் மாறிவிடவில்லை என்பதுதான் உண்மை.

பதில்: இந்தக்  கருத்தோடு ஒத்துப்போகிறோம். ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் அந்தப் போராட்டத்தின் இலக்கை அடைய அறவழியில் தமிழ் அரசுக் கட்சி போராடுகிறது. ஒருமுறை அல்ல இருமுறை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் கோட்பாட்டுக்கு, நிலைப்பாட்டுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். 2010 க்குப் பின்னர் நடந்த தேர்தல்களில் தமிழ்மக்களில் 70 விழுக்காடு  தமிழ் அரசுக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ் அரசுக் கட்சியினர்  நாடாளுமன்றத்துக்கு பின்கதவால் போனவர்கள் அல்லர்.

(2) ஆனால் தமிழ் மக்களின் உள்ளத்தில் கனண்று கொண்டிருக்கின்ற அரசியல் அபிலாசைகளை அழித்துவிட சிங்கள பௌத்த பெருந்தேசியவாதமும்,வெளிநாட்டுச் சக்திகளும் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

பதில்: இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் தமிழ் மக்களே. மூத்த பத்திரிகையாளர் அல்ல. தமிழ் அரசுக் கட்சியினர் ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு இணைப்பாட்சி அரசியல் முறைமையின் கீழ் தமிழர்களது மரபு வழித் தாயகத்தில் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஒரு நிருவாக அலகை கேட்கிறார்கள். இந்த அரசியல் கோரிக்கையையே 2002 இல் ஒஸ்லோ பேச்சு வார்த்தையின் போது வி.புலிகள் முன்வைத்தார்கள். அதனையே அச்சொட்டாக தஅக தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது. அதில் மாற்றம் இல்லை. கட்டுரையாளர் வெளிநாட்டுச் சக்திகள் என யாரைக் குறிப்பிடுகிறார்? அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளை வெளிநாட்டு சக்திகள் எனக் குறிப்பிட்டால் அதனை தஅக மறுக்கவில்லை. தஅக இன் மூலோபாயத்தில் முக்கியமான கூறு பன்னாட்டு சமூகத்தை எம்மோடு எப்போதும் வைத்திருப்பது. அவர்களது ஆதரவுடன் எமது உரிமைகளை வென்றெடுப்பது. தமிழினம் தனித்து நின்று போராடி வெல்ல முடியாது. வி.புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம், இயக்கம் சர்வதேசத்தை பகைத்துக் கொண்டதாகும். முக்கியமாக இந்தியாவை பகைத்துக் கொண்டதைக் குறிப்பிடலாம். மேற்குலக நாடுகளை எமது பக்கத்தில் வைத்திருந்த காரணத்தாலேயே ஐநாமஉரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக காத்திரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐநாமஉரிமைப் பேரவை 2015 இல் நிறைவேற்றிய தீர்மானம் (30)தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் இராசதந்திரத்துக்கு கிடைத்த பெரு வெற்றியாகும். “உந்தத் தீர்மானத்தால் எந்தப் பிரயோசனமும் இல்லை” என்று சொன்னவர்கள் இப்போது அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு  தாமதம் செய்வதாகக் குறைபடுகிறார்கள். குற்றம் சாட்டுகிறார்கள்.

(3) உண்மையில் தமிழ் மக்களிடமிருந்து எழுந்த போராட்ட வடிவங்களைத் தமது கூட்டுச்சதி மூலம் இவர்கள் வெற்றி கொண்டுள்ளனர். இந்தவெற்றிகள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை அழித்துவிட முடியவில்லை என்பது மேற்படி சக்திகளுக்கு நன்கு தெரியும். அதற்கேற்பமேற்படி சக்திகளும் காலத்துக்குக் காலம் தமது தந்திர மூலோபாயங்களையும் செயற்பாடுகளையும் மாற்றி அமைத்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ் மக்களுக்கெதிரான கூட்டுச் சதிகாரர்களின் நயவஞ்சக இராஜதந்திர நகர்வுகளை மேவி மாற்று வழியில் தமிழ் மக்களை வழி நடத்தக் கூடிய சக்தி தமிழ்த் தலைமைத்துவங்களிடையே இல்லை.

பதில்:  மாற்ற வழி என்றால் என்ன வழி? மீண்டும் ஆயுதங்களை கையில் தூக்குவதா? கட்டுரையாளர் தமிழ்மக்களின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்துகிறார். தனக்குத்தான் அரசியல் சாணக்கியம் தெரியும் என்கிறார். தன்னிடம்தான் இனச் சிக்கலைத் தீர்க்கும் மந்திரக் கோல் இருப்பதாக தம்பட்டம் அடிக்கிறார். சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். தமிழ்த் தலைமைத்துவங்களிடையே சக்தி இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்கள் அடுத்த தேர்தலில் தீர்மானிப்பார்கள்.

(4) தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ்த் தலைமைத்துவங்களுக்குள் விதி விலக்காக அமைந்த போதும் இலங்கை மற்றும் வெளிநாட்டுக் கூட்டுச் சதி மூலம் அழிக்கப்பட்டுவிட்டனர்.

தமிழ்மக்களை இந்த அழிவில் இருந்து அதாவது முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் காப்பாற்றுவர் என்றமாயைக்குள் தமிழ் மக்கள் ஆழ்ந்தனர். துப்பாக்கிச் சன்னங்களால் அல்ல வாக்கு வேட்டுக்களால் தமிழ் மக்களுக்கு விடிவு, விமோசனம் கிடைக்கும்;பெற்றுத் தருவோம் என்றும் இவைகளை வென்றெடுக்க நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை வாரித் தாருங்கள் என்ற தேர்தல் பரப்புரைக்குள் வென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நாடாளுமன்றம் நுழைந்தனர்.

ஆனால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரின் நாடாளுமன்றப் பிரவேசம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கானபயணத்தை விரைவுபடுத்துவதாகவோ அல்லது உறுதிப்படுத்துவதாகவோ அமையவில்லை என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பங்காளிகளாக ருப்பவர்களில் ஒரு பகுதியினரின் செயற்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.

பதில்: மீண்டும் கட்டுரையாளர் எமது மக்களின் அரசியல் ஈடுபாட்டை கொச்சைப் படுத்துகிறார். எமது அரசியல் போராட்டம் முடியவில்லை. அது தொடர்கிறது. எமது செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனுடைய வலிமை, இருவர்க்கும் துணையானவரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறோம். எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற பாணியில் தஅக அரசியல் செய்யவில்லை. எமது தலைவர்கள் பதவிக்கு விலை போகாதவர்கள். இந்த உண்மை எமது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. கட்டுரையாளருக்குத்தான் தெரியவில்லை.

(5) 1977இல் அடுத்த தேர்தல் தமிழீழத்தில் என மக்கள் ஆணை கோரி வெற்றி பெற்ற பின் எவ்வாறு தமிழ் மக்கள் கைவிடப்பட்டனரோ அதே போல் இன்றும்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு விடிவு, விமோசனம், சமஷ்டி மூலமான தீர்வு என்றெல்லாம் கூறி நாடாளுமன்றம் புகுந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்களைக் கைவிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களைக் கைவிட்டமை என்பது தற்செயல் நிகழ்வுஅல்ல; கூட்டமைப்பினரின் கையாலாகத்தனம், இயலாமை என்பவற்றின் வெளிப்பாடாகவும் இந்த நிலை உருவாகிவிடவில்லை.

பதில்: இப்படிப் புலம்பினால் எப்படி? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களைக் கைவிட்டு விட்டனர் என்ற முகாரியை பலர் பாடிவிட்டனர். எனவே கட்டுரையாளரின் பல்லவி எதுவும் புதிதல்ல. கூட்டமைப்பினர் கையாலாகாதவர்கள், ஒன்றுக்கும் இயலாதவர்கள் என்றால் கட்டுரையாளர் அரசியலில் குதிக்க வேண்டும். தனது மேதாவித்தனம் மூலம்  எமது மக்களை கரை சேர்க்க வேண்டும். கொழும்பில் குளிர் அறையில் இருந்து கொண்டு எழுதிக் குவிப்பது அல்லது எழுதிக் குவித்தது அரசியல் அல்ல. அரசியல் என்பது ஒரு வித்தியாசமான கலை. எதுவும் முடியும்  சாதிக்கலாம் என்ற கலை.

(6) தமிழீழவிடுதலைப்புலிகளை அழித்துவிட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமென்ற இலங்கைஅரசாங்கத்தினதும் வெளிநாட்டுச் சக்திகளினதும் கூட்டுச் சதியின் தொடர்ச்சியாகவே கூட்டமைப்பினரின் போக்கும், செயற்பாடுகளும்அமைந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஊடகங்களில் புற்றீசல் போல் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்உறுதிப்படுத்துகின்றன. அதாவது கூட்டமைப்பினரில் ஒரு பகுதியினர் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் கூட்டுச்சதியில் பங்களராகச் செயற்பட்டமை குறித்த தகவல்களும் ஊடகங்களில் கசிந்துள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்களே இத்தகைய தகவல்களுக்குச் சொந்தக்காரர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பதில்: இது என்ன புதுக் கதை? அப்படியென்றால் அவர்களை ஏன் வி.புலிகள் விட்டு வைத்தார்கள்? கடைசிவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை வி.புலிகள் தங்களோடுதானே வைத்திருந்தார்கள். “நான் இராணுவத் துறையைக் கவனிக்கிறேன். நீங்கள் அரசியலைக் கவனியுங்கள்” என்றுதானே அவர்களுக்கு தலைவரால் சொல்லப்பட்டது? இப்படியான அம்புலி மாமா கதைகளை அல்லது பாட்டி வடை சுட்ட கதைகளை எழுதுவதற்கு கட்டுரையாளர் வெட்கப்பட வேண்டும். ஒன்றில் கட்டுரையாளருக்கு ஈணத் தெரியவேண்டும் அல்லது நக்கத் தெரிய வேண்டும். இரண்டும்  தெரியவில்லை என்றால்?

(7) 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் பிளவினை ஏற்படுத்துவதில் இலங்கையுடன் இணைந்து சர்வதேச சக்திகள் வெற்றி பெற்றன.

பதில்: வி.புலிகள் பலவீனமானவர்கள் எனக் கட்டுரையாளர் சுட்டிக் காட்டுகிறார்.

(8) இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு பகுதியினர் கூட்டுச்சதிக்கு ஒத்திசைவானவர்களாக, பங்காளராகஇருந்திருக்கின்றனர்.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதுகொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுத் தூதரக உயர்அதிகாரி ஒருவரின் வாசஸ்தலத்தில் விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அந்தவிருந்துபசாரத்தில் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் பங்குபற்றினர். இவர்களில் ஒருவர் ஆங்கிலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளைசரமாரியாக விமர்சித்துப் பேசினார். விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அனைவரது கண்களும் அந்தத் தலைவரை நோக்கித் திரும்பின. அவருடைய உரை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மாத்திரமல்ல விரைவில் அந்த தமிழ்த் தலைவர் கூட்டமைப்பில் இருந்து விலகப்போகிறார்என்ற செய்தியை எனக்கு உணர்த்தியது. நான் எதிர்பார்த்தது போல் குறிப்பிட்ட தமிழ்த் தலைவர் பின்னாளில் கூட்டமைப்புடனான உறவினைத்துண்டித்துக்கொண்டார்.

இவரது உரை முடிந்தவுடன் இன்னொரு ஆச்சரியம் அங்கு நிகழ்ந்தது. கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் விடுதலைப்புலிகள் மீதுவிமர்சனங்களை முன்வைத்தவரைக் கட்டித்தழுவிநீ வெளிப்படையாகப் பேசுகின்றாய். நான் மௌனமாக இருக்கின்றேன்என்று கூறிவிட்டுவிருந்து நடைபெற்ற வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறினார். அவ்வாறு வெளியேறியவர் இன்று வரை கூட்டமைப்பில் முக்கிய தலைவர்களில்ஒருவராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் கூட்டமைப்பில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு 2002 ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்தே இலங்கையுடனான சர்வதேசத்தின் கூட்டுச்சதியில் வெளித்தெரியாத பங்காளர்களாக இருந்து வந்துள்ளனர் என்பது புலனாகின்றது.

பதில்: இது நல்ல கண்டுபிடிப்பு. இதை ஏன் புத்திசாலியான கட்டுரையாளர் வி.புலிகளிடம் சொல்லி அவர்களைக் கவனமாக இருக்குமாறு சொல்லவில்லை? இப்போது போர் முடிந்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி வாந்தியெடுப்பதால் என்ன பலன்?

(9) 2004ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளில் பிளவினை ஏற்படுத்தி கருணாவைப் பிரித்தெடுத்து உலகமே வியந்து நின்ற ஒரு போராட்டஇயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

தற்போது இலங்கையினதும் சர்வதேச சக்திகளினதும் கூட்டுச் சதி ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. தமிழ்த்தேசியத்தை சிதைக்கும்,தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்யும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் முக்கிய பங்காளராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரிவினர் இலங்கையில் சிங்களத்தலைமைத்துவங்களின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இன்றைய நல்லாட்சியின் தலைவர்களுடன்மிகவும் நெருக்கமானவர்கள். அன்று கருணா அம்மான். இன்று கூட்டமைப்பின் ஒரு பகுதியினர்.

2010ஆம் ஆண்டில் அதிவணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு அவர்கள்முள்ளிவாய்க்கால் அழிவைவிட மிக மோசமான முள்ளிவாய்க்கால் அழிவைதமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றனர்என்று குறிப்பிட்டிருந்தார். இந்த முள்ளிவாய்க்கால் அழிவு ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பு, பாதுகாப்பு, தாயக கோட்பாடு, சுயகௌரவம், அரசியல் அபிலாசை அனைத்தையும் கேள்விக் குறியாக்கிவிடும் என்றும் அதிவணக்கத்துக்குரியஅடிகளார் சுட்டிக்காட்டியிருந்தார்.

இன்று அந்த நிகழ்ச்சி நிரலினை நிறைவேற்றுவதில் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் களமிறங்கியுள்ளனர். மக்களின் பிரதிநிதிகள் என்றஅங்கீகாரத்துடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் பயணத்தை ஆரம்பித்துவிட்டனர். தமது நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் மக்களிடையே உள்ள அனைத்துசக்திகளையும் இலங்கையுடனான சர்வதேச கூட்டுச்சக்திகளின் துணையுடன் எதிர்கொள்ளவும் துணிந்துவிட்டனர். இவர்களின் முதலாவது இலக்காகவடமாகாண முதலமைச்சர் உள்ளார்.

இந்தக் கூட்டுச் சதி மூலம் தோற்றுப் போவது தமிழ் மக்களோ அல்லது தமிழ்த் தேசியமோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளோ அல்ல என்பதனை காலம் இவர்களுக்கு நிச்சயம் உணர்த்தும்.

தர்மத்தினை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்இது தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

பதில்: இப்படி கட்டுரையாளர் மட்டுமல்ல கஜேந்திரகுமார், கஜேந்திரன், சுரேஷ் பிறேமச்சந்திரன் , சிவசக்தி ஆனந்தன் போன்றோரும்  மாரடித்து அழுது வருகிறார்கள். ஆனால் மக்கள் தேர்தலில் சரியான தீர்ப்பை எழுதி வருகிறார்கள். மேலும் கட்டுரையாளர் நுனிப்புல் மேய்கிறார். இவர் சொல்லும் சர்வதேச சக்திகளின் உதவியின்றி எமது சிக்கலைத் தீர்க்க முடியாது. முன்னர் குறிப்பிட்டது போல் புலிகளின் தோல்வியில் இருந்து கற்ற கசப்பான பாடம் இது. தேர்தல் எமது தொடக்கமும் முடிவும் அல்ல. அதுவே எல்லாமும் அல்ல.  நாடாளுமன்ற அரசியல் மூலம் இழந்த உரிமைகளை சாணக்கியத்தோடு வினை செய்து மீட்டெடுக்க  இதய சுத்தியோடு பாடுபடுகிறோம். தமிழ்மக்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. இழந்த உரிமைகளை வென்றெடுக்க எண்ணிக்கையில் ஒரு சிறுபான்மை தேசிய இனம் எண்ணிக்கையில் பலம் உள்ள அரசோடு 75 விழுக்காடு இணங்கியும் 25 விழுக்காடு பிணங்கியும் பேசிவருகிறோம். தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்தத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என சம்பந்தன் ஐயா ஒருமுறைக்கு பலமுறை சொல்லியிருக்கிறார். சொல்லி வருகிறார்.

வெண்மை எனப்படுவது யாது? எனின்
ஒண்மை உடையாம் என்னும் செருக்கு
(குறள் 844)

அறியாமை என்று சொல்லப்படுவது யாது என்றால் அது தம்மைத்தாமே “நாம் கூர்ந்த மதியுடையேம்” என்ற மயக்கம்.

(இந்த கட்டுரை இவ்வார கனடா உதயன் பத்திரிகையிலும் பிரசுரமாகும்கனடா உதயன் ஆசிரிய பீடம்)

 

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply