என்றுமுள்ள செந்தமிழ்
சோழர் கால தமிழ் இலக்கிய கல்வி வளர்ச்சி
(21)
பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வடமொழிக் கல்விக்கு மட்டுமே முன்னுரிமை
கொடுக்கப்பட்டதைப் பார்த்தோம். வேத பாடசாலைகளுக்கு மானியம் வழங்கப்பட்டது.
இருந்தும் கிபி 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழநாட்டில் பேரரசாகத் தோற்றம்
பெற்ற சோழர் ஆட்சி தமிழ் இலக்கிய வளர்ச்சி தொடர்ந்தது. தமிழ்மொழி கற்றறிந்த
மன்னர்களும் இருந்தனர்.
சங்க காலத்தில் அகப்பாடல்களும் புறப்பாடல்களும் இயற்றப்பட்டன. சங்கம் மருவிய
காலத்தில் காப்பியங்கள் மலர்ந்தன. அதனைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோற்றம் பெற்றன.
பல்லவர் காலத்தில் பக்தி இலக்கியம் தளைத்தோங்கியது. முதலாம் இராசராசன் ஆட்சிக்
காலத்தில் நாயன்மார்கள் பாடிய தேவார திருவாசகங்கள் நம்பியாண்டார் நம்பியால்
தொகுக்கப்பட்டன.
இன்று மேன்மைகொள் சைவ நீதி தளைக்க உருவாக்கப்பட்ட சைவ ஆதீனங்கள் சில தேவார
திருவாசகங்கள் ஓதப்படுவதை எதிர்க்கின்றன. கோயில் குடமுழுக்கு விழாக்களில் தேவாரம்
திருவாசகம் பாடுவதற்கு தருமபுரம், திருப்பனந்தாள் ஆதினங்கள் உயர்நீதிமன்றம் சென்று
வழக்காடி தடை வாங்கியிருப்பதை இங்கே பதிவு செய்தே ஆகவேண்டும். இது தமிழ்மொழி
பயன்பாட்டுக்கு தமிழர்களே கோடரிக்காம்பாகச் செயல்படுவதைக் காட்டுகிறது.
இந்த இடத்தில் தமிழ்மொழி வளர்ச்சி பற்றிச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம் என
நினைக்கிறேன். தமிழர் ஆட்சி, தமிழ்மொழி வளர்ச்சி தமிழ் இலக்கிய வளர்ச்சி ஒன்றோடு
ஒன்று பின்னிப் பிணைந்து செல்பவை. தமிழ்மக்களை தமிழ்மன்னர்கள் ஆண்டபோது தமிழ்மொழி
வளர்ச்சி கண்டது. தமிழ்மொழி வளர்ச்சி கண்டபோது தமிழ் இலக்கியம் வளர்ச்சி கண்டது.
அப்படி இல்லாத போது அதற்கு எதிர்மாறான விளைவுகள் ஏற்பட்டன.
தமிழ் இலக்கிய வளர்ச்சியை வரலாற்றுக் கண்ணோடு பார்க்கும் ஆசிரியர்கள் அதனை கால
வாரியாகவும் பொருள் வாரியாகவும் அல்லது இரண்டையும் இணைத்து வரையறை செய்வது
வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கால அடிப்படையில் பழங்காலம், இடைக் காலம், பிற்காலம், இக்காலம் எனப் பகுப்பர்.
அல்லது சங்க காலம், சங்கம் மருவிய காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், நோழர்
காலம், நாயக்கர் காலம், அய்ரோப்பியர் காலம், இக்காலம் எனவும் பகுப்பர். சிலபோது
பொருள் அடிப்படையில் சங்க இலக்கிய காலம், நீதி இலக்கிய காலம், பக்தி காலம்,
உரையாசிரியர் காலம், சமய சாத்திரகாலம், சிற்றிலக்கிய காலம் எனப் பகுப்போரும் உண்டு.
தமிழறிஞர் மு.வரதராசன் தாம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற ஆய்வு நூலில்
தமிழ்இலக்கிய வளர்ச்சியை காலவாரியாகவும் பொருள்வாரியாகவும் பின்வருமாறு
வகுத்துள்ளார்.
பழங்காலம்
சங்க இலக்கியம் - கிமு 500 முதல் கிபி 250 வரை அகம் புறம் பற்றிய பாடல்கள்.
நீதி இலக்கியம் - கிபி 150 முதல் கிபி 500 வரை.
திருக்குறள் முதலிய நீதி நூல்கள். கார் நாற்பது போன்ற வெண்பா நூல்கள்.
பழைய காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொளாயிரம் முதலியன.
இடைக்காலம்
பக்தி இலக்கியம் - கிபி 600 முதல் கிபி 900 வரை.
நாயன்மார் ஆழ்வார் பாடல்கள். கலம்பகம் போன்ற பலவகை நூல்கள்.
காப்பிய இலக்கியம் - கிபி 900 முதல் 1500 வரை
சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய சமண பவுத்த நூல்கள்.
இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள்.
சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர், அவ்வையார் முதலியவர்கள்
இயற்றிய நூல்கள். உலா, பரணி, பிள்ளைத் தமிழ்.
உரை நூல்கள் - கிபி 1200 முதல் 1500 வரையில்
இளம்பூரணர், பேராசிரியர் முதலானவர்கள்.
வைணவ விளக்க நூல்கள், சைவ சித்தாந்த சாத்திர நூல்கள்.
சிறு நூல்கள். தனிப்பாடல்கள்.
புராண இலக்கியம் - கிபி 1500 முதல் கிபி 1800 வரை.
புராணங்கள், தலபுராணங்கள். இஸ்லாமிய இலக்கியம். கிறித்துவ தொண்டு, வீரமாமுனிவர்
முதலானவர்கள். உரைநடை வளர்ச்சி.
இக்காலம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு
கிறித்தவ இலக்கியம். இராமலிங்கம் வேதநாயகர் முதலானவர்கள்.
நாவல் வளர்ச்சி கட்டுரை வளர்ச்சி.
இருபதாம் நூற்றாண்டு
பாரதி, பாரதிதாசன், கல்கி, புதுமைப்பித்தன்.
சிறுகதை, நாவல், நாடகம். வாழ்க்கை வரலாறு, கட்டுரை,
ஆராய்ச்சி முதலானவை.
சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி என்ற
அய்ம்பெருங்காப்பியங்கள். முதல் இரண்டு காப்பியங்களும் சங்கம் மருவிய காலத்தவை.
எஞ்சியவை சோழர் காலத்தவை. சமண காப்பியமான வளையாபதி இன்று கிடைக்கவில்லை. அதன்
ஆசிரியர் யார் என்பதும் தெரியவில்லை. இந்த நூலில் உள்ள பாடல்களை உரையாசிரியர்கள்
மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்கள். அந்தவிதத்தில் 72 பாடல்கள் கிடைத்துள்ளன.
உ.வே. சாமிநாதையர் எழுதிய என் சரித்திரம் என்ற நூலில் வளையாபதியைப் பற்றிக்
குறிப்பிடுகிறார். அந்த நூலை திருவாவடுதுறை மடத்து நூலகத்தில் வளையாபதி ஏட்டுச்
சுவடியை தாம் பார்த்ததாகவும் அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் தனக்குப்
பற்று உண்டாகவில்லை என்றும் பிற்காலத்தில் பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனநிலை
உண்டான பிறகு அதனைத் தேடிப் பார்த்தபோது அந்தச் சுவடி மடத்து நூலகத்தில்
காணப்படவில்லை என எழுதியுள்ளார். நல்லூர் ஆறுமுக நாவலர் தான் பதிக்க இருந்த
நூல்பட்டியலில் வளையாபதி காப்பியத்தையும் சேர்த்திருந்தார். வளையாபதி காணாமல்
போனதற்கு அதீத சைவ சமயப்பற்றே காரணமாகும். சைவம் தலையெடுத்த போது சமண, பவுத்த
இலக்கியங்கள் நீருக்கும் நெருப்புக்கும் இரையாகின.
குண்டலகேசியை இயற்றியவர் பெயர் நாதகுத்தனார். குண்டலகேசி ஒரு பவுத்த காப்பியம்.
சீவகசிந்தாமணியைத் திருத்தக்க தேவர் என்ற சமண முனிவர் எழுதினார். சீவகன் எட்டுப்
பெண்களைத் திருமணம் புரிந்த வரலாற்றைக்கூறி அவன் வீடுபேறு அடைந்த கதையைக்
கூறுகிறது.
அய்ம்பெரும் காப்பியங்கள் போல் தமிழில் அய்ஞ்சிறு காப்பியங்கள் உண்டு. உதயணகுமார
காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி போன்ற சமண, பவுத்த
காப்பியங்கள் குறிப்பிடத்தக்கவை. தோளாமொழித்தேவர் 2331 பாடல்களைக் கொண்ட சூளாமணியை
இயற்றினார். மேருமந்திர புராணத்தை வாமனாச்சாரியார் இயற்றினார்.
பிற்காலச் சோழர் காலத்தில் (10 – 13 ஆம் நூற்றாண்டு) பல இலக்கண நூல்கள்
இயற்றப்பட்டன. சமண துறவியான அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை,
யாப்பருங்கலவிருத்தி, நாற்கவிராசநம்பி இயற்றிய நம்பியகப் பொருள், குணவீரபண்டிதரின்
நேமிநாதம் மற்றம் வச்சணந்தி மாலை, அய்யாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை
புத்தமித்திரரின் வீரசோழியம், வடமொழித்தண்டியின் தண்டியலங்காரம்; பவணந்தி முனிவரின்
நன்னூல் ஆகியன இயற்றப்பட்டன. இந்நூல்களுக்கு பெரும்பாலும் தொல்காப்பியமே முதல்
நூலாக விளங்கியது. (வளரும்)
என்றுமுள்ள செந்தமிழ்
பேரறிஞர் அண்ணா
22
பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த
புதையல்கள்.
சேடி இல்லாத இராசகுமாரி
சோடி இல்லாத மாடப்புறா
மோடி செய்யாத வேதாந்தி
உலகிலே இருக்க முடியாது
இந்த உரையாடல் பேரறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தில் இடம் பெற்றவை. பின்னர் அந்த நாடகம் அதே பெயரில் 1948 இல் திரைப்படமாக வெளிவந்தது. திரைப்படத்துக்கும் கதை, உரையாடல் இரண்டையும் அண்ணாவே எழுதியிருந்தார்.
சம்பூர்ண இராமாயணம், அரிச்சந்திரா, சிவகவி போன்ற புராணப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் சாதி வேற்றுமை, மூடநம்பிக்கை போன்றவற்றைச் சாடி வரையப்பட்ட கதை வேலைக்காரி. பெரிய மனிதர், பக்திமான் என்ற போர்வையில் சமுதாயத்தில் இரட்டை வேடம் போட்டுத் திரிபவர்களின் முகமூடியை அண்ணா இந்தத் திரைப்படம் மூலம் கிழித்துக் காட்டினார். வேலைக்காரித் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிச் சாதனை படைத்தது.
வேலைக்காரி நாடகத்தைப் பார்த்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அறிஞர் அண்ணாவை தமிழ்நாட்டின் பேர்நாட் ஷோ என வருணித்து எழுதியிருந்தார். வேலைக்காரித் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திறனாய்வு எழுதிய கல்கி அந்தப் படத்துக்கு அண்ணா எழுதிய உரையாடல்கள் “உறையில் இருந்து உருவிய வாள் போல் மின்னியது” என மனம் திறந்து பாராட்டியிருந்தார். எதுகை மோனையோடு எழுதப்பட்ட உரையாடல் தமிழ் உரைநடைக்கு முன்னர் இல்லாத அழகையும் இனிமையையும் சேர்த்தன.
வேலைக்காரி மட்டுமல்ல அண்ணாவின் படைப்புகளான பார்வதி பி.ஏ.
குமாஸ்தாவின் பெண், இரங்கோன் ராதா, ஓர் இரவு இன்னபிற அவர் எழுதிய தலைசிறந்த படைப்பு
இலக்கியங்கள் ஆகும்.
மராட்டியத்தை ஆண்ட மாவீரன் சிவாஜி சனாதனதர்மக் கொடுமையால் மகுடம் சூட்ட முடியாதபடி
சூழ்ச்சி வலை பின்னப்பட்டதை எடுத்துக்காட்டி ‘விதையாது விளையும் கழனிகளிடம் கவனம்
தேவை’ என எச்சரித்து அண்ணாவே காகப்பட்டராக நடித்தார். சிவாஜி கண்ட இந்துராஜ்யம்
என்ற நாடகம்; காலத்தால் என்றும் அழியாத ஒன்றாகும்.
அண்ணாவின் அடுக்குமொழி மேடைப் பேச்சும் எழுத்தும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு
புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது.
தந்தை பெரியாரின் சீடராகப் பொது வாழ்வைத் தொடங்கிய அண்ணா அவர்கள்,
பெரியாரது சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை தமக்கே உரிய தனிப் பாணியில் பேசியும்
எழுதியும் கற்றோரையும் மற்றோரையும் - குறிப்பாக இளையோரைக் கவர்ந்தார்.
இலக்கியத்தில் அண்ணா எந்தத்துறையையும் விட்டு வைக்கவில்லை. கட்டுரை, கடிதம், கதை,
புதினம், நாடகம், திரைப்படம் என அவர் தொடாத துறை இல்லை எனலாம். அவர் விட்டுவைத்த
துறை கவிதை மட்டுமே!
அண்ணா எழுதிய ஆரியமாயை, அவர் பேசிய ஏ தாழ்ந்த தமிழகமே இரண்டும் கால வெள்ளத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். 1942 ஆம் ஆண்டு அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் என்ற நாடகம் தமிழ் இலக்கிய உலகம் இதுவரை கண்டிராத புதிய படைப்பு! ஒரு புதிய புரட்சி!
‘இரக்கமெனும் ஒரு பொருள் இல்லா அரக்கன்’ என இராவணனைக் கம்பன்
வருணித்த சொற்றொடரை மட்டும் கருப்பொருளாக்கிக் கம்பனைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க
வைத்து, “நான் இரக்கமில்லா அரக்கன் என்றால் - கௌதமரின் மனைவி அகலிகையை, பொய் வேடம்
பூண்டு கற்பழித்த இந்திரனை - நீங்கள் ஏன் இரக்கமில்லா அரக்கன் எனச் சொல்லவில்லை’’
என அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளை இராவணன் மூலம் தொடுத்து நீதி தேவன் பதில்
அளிக்க முடியாமல் மயங்கிய காட்சியை நாடகத்தில் அண்ணா தீட்டியிருந்தார். மக்கள்
மனதில் இன்றும் நிறைந்திருக்கும் ஒப்பரிய படைப்பு இதுவாகும்.
விடுதலை யின் ஆசிரியராக, குடிஅரசின் எழுத்தாளராக, திராவிட நாடு மற்றும் காஞ்சி
இதழ்களின் ஆசிரியராக இருந்து அவர் வடித்த கட்டுரைகள் பெருமிதமானவை!
அண்ணா திராவிடநாடு கிழமை ஏட்டிலும் பின்னர் காஞ்சி ஏட்டிலும் தம்பிக்கு எழுதிய
கடிதங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அந்தக் கடிதங்களின் மொத்த எண்ணிக்கை 290
ஆகும்.
Homeland
மற்றும்
Homerule
ஆங்கில இதழ்களின் மூலம் அண்ணா தம்பிக்கு வரைந்த கடிதங்கள்
மொத்தம் 26 ஆகும். அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களின் மொத்தப் பக்கங்கள் 3000
க்கும் அதிகமாகும்.
டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, நேரு, காந்தி ஆகியோரின் கடிதங்கள் வரலாற்றுப் புகழ்
வாய்ந்தவை. தமிழ் உலகில் கடித இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமைக்கு உரியவர் அண்ணா
ஆவர். ஆங்கில இலக்கிய உலகிற்கு மட்டுமே அறிமுகமான திறனாய்வுத் துறையினை ஒரு புதிய
கோணத்தில் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் அண்ணவேதான். வாழ்க்கையைத்
திறனாய்வுதான் இலக்கியம். மக்களுக்காக எழுதப்படுவதுதான் இலக்கியம். இந்த
இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா!
மகாகவி பாரதியார் எவ்வாறு தமிழ்க் கவிதைக்கு அழகும் இனிமையும் புதுமையும்
சேர்த்தாரோ அதே போல் அண்ணா உரை நடைக்கும் மேடைப் பேச்சுக்கும் அழகும் இனிமையும்
புதுமையும் சேர்த்தார். அவரது மேடைப் பேச்சைக் கேட்க கற்றோரும் மற்றோரும் அலை
அலையாகக் கூடினார்கள்.
அண்ணாவின் அழகான அடுக்குமொழிப் பொன்மொழிகள் புகழ் வாய்ந்தவை ஆகும்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
மணமுண்டு;
தம்பீ! கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு;
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்;
சட்டம் ஒரு இருட்டறை; வக்கீலின் வாதம் அந்த இருட்டைப் போக்கும் விளக்கு
திரௌபதிக்கு துச்சாதனனா சேலை தரமுடியும்?
புள்ளிமான் குட்டிக்கு புலியா பால் தரமுடியும்?
பச்சைக் கிளிக்கு வர்ணம் பூசுவதா?
சேர, சோழ, பாண்டியர் தமிழை வளர்த்தார்கள். புலவர்களும் பண்டிதர்களும் தமிழை
வளர்த்தார்கள்;. சமயங்களும் ஆன்மீக மடங்களும் தமிழை வளர்த்தன. அவர்கள் தமிழை
மக்களிடம் கொண்டு சென்றார்கள்! ஆனால் அண்ணாவோ மக்களைத் தமிழிடம் கொண்டு வந்தார்!
ஆங்கிலமும் வடமொழியும் ஆட்சி செய்த தமிழ் மண்ணில் தமிழ்த் தாய்க்கு மகுடம்
சூட்டியவர் அண்ணா! பண்டிதர்களிடம் சிறைபட்டுக் கிடந்த தமிழை விடுதலை செய்து
பாமரர்களுக்கும் சொந்தமாக்கியவர் அண்ணா!
நமஸ்காரம், அக்ராசனர், சபாநாயகர் என்ற வார்த்தைகளை மாற்றி வணக்கம், தலைவர், பேரவைத்
தலைவர் என்ற தூயதமிழ்ச் சொற்களைச் சலங்கை கட்டி நடமாடவிட்டவர் அண்ணா!
அகநானூறு அறிந்தவர்கள், புறநானூறு படித்தவரகள், கற்றார் போற்றும் கலித்தொகை
கற்றவர்கள், சங்கத் தமிழில் கரைகண்டவர்கள், புலவர்கள், பண்டிதப் பெருமக்கள் இந்தி
தமிழ்நாட்டுக்குள் நுழைந்த போது – அன்னை தமிழுக்கு இடர் வந்த போது - அது குறித்து
கிஞ்சித்தும் கவலைப்படாமல் சுயநலச் சூறாவளியில் சிக்குண்டு மொழியுணர்வை இழந்து
சும்மா இருந்த காலத்தில் அண்ணாவும் அவரது தம்பிமாருமே “எப்பக்கம் வந்திடும் இந்தி?
எத்தனை பட்டாளம் அது கூட்டிவரும்” என ஆர்ப்பரித்து இந்தியை விரட்டி அடித்தார்கள்.
அண்ணா மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தியை அரசமொழியாக ஏற்றுக்கொள்ளாத ஒரே
மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
அண்ணாவின் எழுத்தும் மேடைப் பேச்சும் 1967 ஆம் ஆண்டு அவர் தொடக்கிய திமுக
தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிப்பதில் பெரும்பங்கு வகித்தது.
சுயமரியாதைத் திருமணம் செல்லும்படி சட்டம், சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை தமிழும் ஆங்கிலமும்தான்; அரச அலுவலக மொழிகள், மதச் சார்பற்ற அரசில் எந்த மதக் கடவுளர் படங்களுக்கும் இடமில்லை என்பவை முதல்வர் அண்ணாவின் நடவடிக்கைகள் ஆகும். குறுகிய காலம் ஆட்சிப் பொறுப்பில் அவர் இருந்தாலும் என்றென்றைக்கும் வரலாறாக வானோங்கி நிற்கக் கூடியவை ஆகும்.
இவற்றைவிடப் பெருமை என்னவென்றால்
அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகவும் அதிமுகவும் அண்ணா பெயரைச்
சொல்லியே ஆட்சியை மாறி மாறிப் பிடித்து வருகின்றன!
‘தேமதுரத் தமிழோசை தெருவெல்லாம் முழங்கவேண்டும்’ என்று இனிய கனவு கண்டவர் கவியரசு
பாரதியார். முப்பத்து ஒன்பது வயதுக்குள் தன் பாட்டுத் திறத்தால் தமிழை வையத்தில்
பாலிக்க வைத்தவர்.
பேரறிஞர் அண்ணா என்றுமுள செந்தமிழால் தமிழ் இலக்கிய உலகில் புதுமை செய்தவர்.
புரட்சி செய்தவர். கால வெள்ளத்தால் அழியாத அவரது அற்புதப் படைப்புகள் தமிழ் இலக்கிய
உலகிற்குக் கிடைத்த புதையல்கள். (பேரறிஞர் அண்ணாவின் 100
ஆவது ஆண்டு நினைவாக இக்கட்டுடரை வெளிவருகிறது)
என்றுமுள்ள செந்தமிழ்
(24)
தமிழ்மொழிக்கு இனிமை சேர்த்த பாரதியார்
நக்கீரன்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"
"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"
இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப்
பாடியிருக்கிறார். மேலும் -
"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"
என்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பன்மொழிப் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான
தமிழைத் தமிழ்ப் பண்டிதர்களிடம் கற்றார். காசி பல்கலைக் கழகத்தில் (1898-1902)
இந்தியும் வடமொழியும் கற்றார். ஆங்கில மொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும்
அளவுக்கு அவருக்கு ஆங்கிலம் படித்திருந்தார். தன் கைப்பட இந்து நாளேட்டுக்கு
ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதியிருக்கிறார். பாரதியார் புதுவையில் தலைமறைவு வாழ்க்கை
வாழ்ந்ததால் பிரஞ்சுமொழியும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.
எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து "யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" எனத் தீர்ப்பு வழங்கும் தகைமை அவருக்கு
இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்றும் "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி
வாழியவே!" என்றும் அறுதியிட்டுக் கூறினார்.
பாரதியார் இந்த மண்ணுலகத்தில் 39 (1882-1921) அகவை மட்டுமே வாழ்ந்து மறைந்தவர்.
அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய
கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர்
இவர்களோடு ஒப்பிட்டுப் பேசக் கூடியவர். தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் ஒரு
புதிய நீர்மையையும் சீர்மையையும் உண்டாக்கியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு
புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே
வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ்த் தேசியத்துக்குப் பூபாளம் பாடியவர். அவரது
அழியாத கவிதைகளில் சுவை, நயம், வளம், சொல் யாவும் புதிதாக இருந்தன.
“...............................................பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி னினியாள் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்"
வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும்,
கட்டினையும் இவ்வாறு வருணித்திருப்பான் என்பது அய்யமே!
"காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் -அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போல - நிலாவொளி
முன்பு வரவேணும் - அங்கு
............................................................
பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் -
எங்கள் கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் ........"
தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை
சிறகடித்துப் பறக்கிறது!
தமிழரும் தமிழ்மொழியும் நலிவுற்று தமிழ் படித்தோரை தாழ்வாகப் பார்க்கும் கால
கட்டத்தில் பாரதியார் பிறந்தார்.
கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசு வீழ்ச்சியுற்று இருந்த
இடம் இல்லாது மறைந்து போயிற்று. அதன் பின்னர் 12 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம்
நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ் நாட்டில் பாண்டியர்கள் எழுச்சி பெற்றார்கள்.
அவர்களும் தேவகிரி யாதவர், வாராங்கல்லை ஆண்ட காகாத்தியர், துவாரசமுத்திரத்தில்
இருந்த போசகர் ஆகியரோடு ஓயாது போரில் ஈடுபட்டு தக்கணத்து அரசியலையும் தமிழகத்து
அரசியலையும் நலிவடையச் செய்தனர்.
15 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மாறி மாறி தமிழகத்தை தெலுங்கு நாயக்கர், கன்னடியர்,
தஞ்சை மராட்டியர், நாவாப்புகள், போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர், பிரான்சுக்காரர்,
ஆங்கிலேயர் போன்ற அயலார் ஆண்டனர்.
சோழ, பாண்டியர் ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த பின்னர் கற்றோரும் மற்றோரும் போற்றக் கூடிய
இலக்கியம் ஒன்று கூடப் படைக்கப்படவில்லை.
புலவர்கள் தோன்றவில்லை என்பதல்ல காரணம். ஏராளமான புலவர்கள் இருந்தார்கள். ஆனால்
அவர்கள் படைத்த சிற்றிலக்கியங்களும் தலபுராணங்களும் காலவெள்ளத்தை எதிர்த்து
நீந்திக் கரைசேரவில்லை.
சங்ககாலப் புலவர்கள் விழுமிய கருத்தாளமுள்ள பாடல்களைப் பாடினார்கள். சொல்
அலங்காரத்தைவிட கருத்துக்கு முதன்மை இடம் கொடுத்தார்கள்.
.இடைக்காலப் புலவர்கள் கருத்தைவிட சொல் அலங்காரத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.
சொற்களால் ஆகிய ஆடை அணிகளை அணிவித்து மகிழ்ந்தனர். கருத்தைப் பற்றிய கவலை
அவர்களுக்கு இருக்கவில்லை.
இந்நிலை பாட்டுக்கொரு புலவன் பாரதி தோன்றும் வரை நீடித்தது. இதனை பாரதியாரே
சொல்கிறார்.
கன்னனோடு கொடை போயிற்று! உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று!
தாழ்வுற்று வறுமை மிஞ்சி இருந்த தமிழுக்கு மீண்டும் வாழ்வு தந்தவர் பாரதியார்.
தமிழ்மொழி இருந்த சிறப்பையும் அது தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்த வாழ்வையும்
பின்னர் யாவும் அழிவுற்றதையும் பாரதியார் மனம் நொந்து பாடியிருக்கிறார்.
“இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு
கூறத் தகா தவன் கூறினர் கண்டீர்!
“புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை!
சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினி சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்!
என்றந்த பேரை உரைத்தான் - ஆ!
இந்த வகையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்த்திங்கு சேர்ப்பீர்!
பாரதியார் கனவு கண்டது போல உலகின் எட்டுத்திக்கும் தமிழர்கள் இன்று பரந்து
வாழ்கிறார்கள். ஆனால் கலைச் செல்வங்கள் யாவும் சேர்த்தோமா என்றால் இல்லை என்றே
சொல்ல வேண்டும். பொரும் தேட வேண்டும் என்ற அவா எம்மிடம் மேலோங்கி இருப்பது போல்
மொழி பேணப்பட வேண்டும் என்ற ஆசை எம்மிடம் இல்லை. அதனால்தான் நாம் குடிபுகுந்த
நாடுகளில் மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் மெல்லத் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது.
வழிபாடு வடமொழியில், வழக்காடு மன்றம் ஆங்கிலத்தில், ஆட்சி ஆங்கிலத்தில், இசை
தெலுங்கில் இவ்வாறு இன்றும் தமிழர் வாழ்வில் பிறமொழி மேலாண்மையே தலை தூக்கி
நிற்கிறது.
என்றுமுள்ள செந்தமிழ்
(25)
உலகில் வாழும் மொழிகளில் தமிழ் 15 ஆவது இடத்தில்
தமிழ் மொழி பல நூற்றாண்டுகளாகவே வந்தேறி அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.
பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழினமும் தமிழ்மொழியம் வீழ்ச்சியுற்று
தாழ்வு அடைந்தன. சோழப் பேரரசு, விசய நகர அரசுகளால் கோயில்களில் இருந்து தமிழ்மொழி
வெளியேற்றப்பட்டது. நாயக்கர் ஆட்சியில் தமிழிசை இசைமேடைகளில் இருந்து தெலுங்கு
இசையால் அகற்றப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும்
அரசமொழியாகவும் நடுவர்மற்ற மொழியாகவும் ஏற்றம் பெற்றது. தமிழ்மொழி ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகப் படியாமல் பல்கலைக் கழகம்வரை படித்து பட்டம் பெறலாம்
என்ற நிலையிருக்கிறது. அண்மைக்காலத்தில்தான் தமிழ்மொழி கட்டாய பாடமொழியாக தமிழக
அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழி கற்கை மொழியாக ஆக்கப்படவில்லை.
தமிழ் மொழியைத் தமிழகத்தின் அனைத்து தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள் மற்றும்
உயர்நிலை பள்ளிகளில் ஆங்கில மொழியோடு கட்டாயபாடமாக கற்பிக்கும் சட்டம் (வுயஅடை யேனர
டுநயசniபெ யுஉவஇ 2006) 2006 இல் யூன் மாதம் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு
நிறைவேடப்பட்டது.
இச்சட்டம் தமிழ் மொழியை கற்கை மொழியாக்கவில்லை. தமிழிவழி அனைத்துப் பாடங்களையும்
கற்க வலியுறுத்தவில்லை. இச்சட்டத்தின் படி தமிழகத்தில் இயங்குகிற தனியார் மற்றும்
அரசு தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்
இச்சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. இச்சட்டம் அரசு உதவி பெறாத பாடசாலைகள் மற்றும்
சிறுபான்மையினர் நடத்தும் பாடசாலைகளுக்கும் பொருந்தும்.
2006 - 2007 கல்வி ஆண்டிலிருந்து முதலாம் வகுப்பில் இருந்து படிப்படியாக பத்தாம்
வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம்
கட்டாய மொழிப்பாடங்களாக அமையும். ஆனால் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட
பாடங்கள் வழக்கம் போல ஆங்கிலத்தில் மட்டும் பயிற்றுவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பல்கலைக் கழகத்தில் மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புகள்
ஆங்கிலமொழி மூலமே கற்ப்பிக்கப்படுகின்றன. இதனால் ஆங்கில வழிப் பள்ளிகள் பணச்
செழிப்பில் புருளுகின்றன. தாய்த் தமிழ்ப் பள்ளிகள் கூரை கூட இல்லாது வறுமையில்
மூழ்கிக் கிடக்கின்றன.
கல்வி சிறந்த தமிழ்நாட்டில் ஆட்சியில் ஆங்கிலமும் இந்தியும் கோயில்களில்
சமற்கிருதமும் இசையில் தெலுங்கும் கோலோச்சுகின்றன.
தமிழ் வழக்கறிஞர்கள் தமிழில் வழக்காடும் உரிமை கூட இல்லாதிருக்கின்றனர்.
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று எழுதி வைத்து விட்டு எதிலும் தமிழ் இல்லை என்ற
நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
தமிழில் உயர் கல்வி வழங்குகின்ற உரிமையை இந்திய அரசின் தொழில் நுட்ப ஆணையம்
தடுக்கின்றது. தமிழில் வழக்காடும் உரிமையை உச்ச நீதிமன்றம் தடுக்கிறது. இந்திய
மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றம் என்று தமிழில் பெயர்ப்பலகை வைக்கக் கூட அனுமதி
மறுக்கிறது.
அடிமைத் தமிழக அரசோ அனைத்து அரசு ஆணைகளையும் ஆங்கிலத்தில் பிறப்பிக்கிறது.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை வணிக நிலையங்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில்
மட்டும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. பெயர்களும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே
எழுதப்பட்டுள்ளன. தப்பித்தவறித் தமிழிலும் பெயர்கள் எழுதப்படும் போது அவை சின்ன
எழுத்தில் ஆங்கிலப் பெயருக்குக் கீழே எழுதப்படுகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் பிறமொழிப் பெயர்ப் பலகைகளை அழிக்கும்
போராட்டத்தை தமிழ் உணர்வாளர்கள் நடத்தினர். போராட்டத்தில் இராமதாஸ், திருமாவளவன்,
பழ.நெடுமாறன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கடைகளின் ஆங்கிலப் பெயர்களையும்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளையும் கரி பூசி அழித்தனர்.
இதையடுத்துப் பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாகவும் தடையை மீறிப் போராட்டத்தில்
ஈடுபட்டதாகவும் கூறி இராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும்
காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்
உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பின்னணியில் Ethnologue
என்ற அமைப்பு உலக மொழிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை மனதுக்குச் சற்று ஆறுதல்
அளிக்கிறது. இந்த அமைப்பு 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு மொழியுரிமை
அறிவித்தல்;படி ஒரு மொழியின் வரலாற்றுத் தன்மை, அதன் எல்லை, உடன்பாடு போன்றவையை
அடிப்படையாக வைத்து மொழிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன.
மொழி ஒரு இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் சொல்கிறது. உலகில் இன்று 6,912
மொழிகள் புழக்கத்தில் உள்ளன. இதில் பாதி விரைவில் அழிந்தொழிந்து போகும் பட்டியலில்
இருக்கின்றன. 2,261 மொழிகள் எழுத்துருவைப் பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு
வழக்கில் மாத்திரமே உள்ளன. உலக வழக்கும் இலக்கிய வழக்கும் கொண்ட மொழிகள் 250 அளவில்
இருக்கின்றன.
ஆசியாவில் மட்டும் 2,200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 2,000 மொழிகளும்,
பசுபிக் நிலப்பரப்பில் 1,300 மொழிகளும் அய்ரோப்பாவில் 230 மொழிகளும்
பேசப்படுகின்றன. இந்தோனிசியாவில் ஆகக் கூடுதலாக 694 மொழிகள் உள்ளன. அடுத்ததாக
பப்புவா நியூ கினியில் 673 மொழிகள் காணப்படுகின்றன. இந்தியா நைசீரியாவை (455)
அடுத்து 4 ஆவது இடத்தில் (337) இருக்கிறது.
உலகளவில் இத்தனை மொழிகள் இருப்பதற்கு ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள்
வாழ்வதுதான்.
ஒவ்வொரு மொழிக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி
எனும் மூலமொழியும் அதற்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும்
உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின்
உறைவிடமாகும்.
இந்த நிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் தமிழ்மொழி 15 ஆவது இடத்தை
பெற்றுள்ளது. சிங்களம் 68 ஆவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூத்த மொழி என்ற பெருமையை தமிழ் பெற்றுள்ளது. தமிழ் செம்மொழியாக 2004
ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், தென்னிந்தியா, இலங்கையின்
வடக்கு, கிழக்குப் பகுதி மற்றும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதி என்பவற்றில் தமிழ்
மொழி புழக்கத்தில் உள்ளது. தமிழ் மொழிக்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
போர்ச்சுக்கல், நெதர்லாந்து அய்க்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இதற்கான சான்றுகள்
உள்ளன.
ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக வேற்று இனத்தவர்களது பாதிப்புக்குள்ளான தமிழ் மொழி பல
இடையூறுகளைக் கடந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிடலாம். இருந்தும்
தமிழ் மொழிக்கு கருப்புப் பக்கமும் இருக்கிறது.
செந்தமிழின் தனித்தன்மை மற்றும் அதன் தூய்மை காக்கப்படாது, குறிப்பாக தமிழ்நாட்டு
ஊடகங்களில் பேரளவாகவும் புலம்பெயர் நாடுகளில் சிறிதளவாகவும் காணப்படுகின்றன.
தமிழகத்தில் செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் மொழித்தூய்மை
காக்கப்படுவதில்லை. தமிழோசை நாளிதழ் மக்கள் தொலைக்காட்சி போன்றவை விதி விலக்காக
உள்ளன. பேச்சிலும் எழுத்திலும் ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்கள் தேவைக்கு
அதிகமாகக் கலக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பிற மொழிச் சொற்கள், ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசுவோர்
எழுதுவோர் விழுக்காடு குறைவாகவே காணப்படுகிறது. ஆனால், அகவை வந்தவர்கள் சரி,
குழந்தைகள் சரி ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி நாக்கு ஆங்கிலம்
பேசுகிறார்கள். அதற்குக் காசு கொடுத்துப் பயிற்சியும் பெறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் பேசுபவன் அறிவாளி, தமிழில் மட்டும் பேசத் தெரிந்தவன் அறிவிலி, தமிழில்
மட்டுமே பேசுவேன் என்பவன் தமிழ்வெறியன் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.
கனடாவிலும் இதே நிலைதான்.
தமிழகத்தில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள், கிழமை ஏடுகள் தமிழோடு ஆங்கிலத்தைக்
கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. திரைப்படங்களிலும் தமிங்கிலம்
கலக்கப்படுகிறது.
வயிற்றைத் தமிழ் மண்ணுக்கு வைத்து நெஞ்சை வடமொழிக்கு வைத்துள்ள இரண்டகர்களே
இத்திருப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். (வளரும்)
மொழித் தூய்மை காக்கத் தவறியதால் மலையாளம்
பிறந்தது
26
நக்கீரன்
தமிழ்மொழி நிலைத்து வாழ வேண்டும் என்றால் அதன் தூய்மை காக்கப்பட வேண்டும். மொழித்தூய்மை காக்கத் தவறிய காரணமாகவே தமிழ் கூறும் நல்லுலகம் கடந்த காலங்களில் குறுகி வந்திருக்கிறது.
பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத்
துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
(மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தின் சில
அடிகள்)
பற்பல உயிர்களையும் பற்பல உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் காத்தும்
அழித்தும் எல்லாம் செய்தும் எல்லையில்லா இறைவன் எப்போதும் போல் குறைவின்றி
இருப்பது போல் நீ இருக்கிறாய். எப்படி? கன்னடம், இன்பம் கொடுக்கும் தெலுங்கு,
அழகு மிகும் மலையாளம், துளு என்று நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து
உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு
அழிந்து ஒழிந்து சிதையாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே? அதனை
வியந்து வியந்து என்ன செய்வது என்பதையே மறந்து வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம்.
“இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே?” என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்தாலும் தமிழ் மொழி ‘கன்னித்தன்மையை’ இழந்து நான்கு பிள்ளைகளுக்குத் தாயாகி விட்டதைத்தானே இது காட்டுகிறது?
கன்னடமும் களி தெலுங்கும் பழந்திராவிட மொழியில் இருந்து பிரிந்தவை எனக் கொண்டாலும் மலையாள மொழி நிச்சயமாக தமிழில் இருந்தே ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பின் பிரிந்தது என்பது கல்ட்வெல் போன்ற மொழியறிஞர்களின் துணிவாகும்.
இன்றைய மலையாளமொழி பேசும் நிலப்பரப்பு பண்டைய காலத்தில் சேர நாடாக
விளங்கியது.
சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப்
பற்றிப் புகழ்பெற்ற புலவர்களான பரணர், கபிலர் உட்பட பத்துப் புலவர்கள் பத்துப்
பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப்
பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள்
எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
அய்ம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சேர நாhட்டு இளவரசர் இளங்கோ
அடிகளால் இயற்றப்பட்டது. சிலப்பதிகாரமே தமிழில் எழுதப்பட்ட முதல் காப்பியம் ஆகும்.
சைவ சமய அடியார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் பெரிய புராணம் குறிப்பிடும் 63
நாயன்மார்களில் ஒருவர். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் தமிழிலே
திருவரங்கப் பெருமானைப் பற்றி 31 பாசுரங்கள் பாடியுள்ளார். அவை திருமொழி
என்றழைக்கப்படும்.
இதில் வியப்பு என்னவென்றால் இன்றைய மலையாளிகள் தங்களைச் சேரர் பரம்பரை என்பதையோ மலையாளமொழி தமிழ்மொழியின் கிளை மொழி என்பதையோ ஒப்புக்கொள்வதில்லை.
தமிழ் இலக்கியங்களில் கேரளம் என்பது சேர நாடாகவே குறிக்கப்பட்டது.
தமிழ்மொழி மலையாளமொழியாக மாற்றம் பெற்றதற்கு சமற்கிருத மொழிக் கலப்பே காரணம் ஆகும்.
மலையாளமொழி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் தமிழிலிருந்து வேறுபட்டு ஒரு தனி மொழியாக
உருப்பெற்றது. சேரநாட்டின் ஆட்சி மொழியாகவும் அவை மொழியாகவும் இருந்த தமிழ் பின்னர்
நம்பூதிரிகளின் வரவால் வடமொழி மேலாண்மைக்கு உள்ளாகியது.
அரேபியர்களுடான வணிகம், போர்த்துகீசியர் வரவு ஆகியவற்றால் ரொமானிய மற்றும் செமிட்டிக் மொழியின் தாக்கத்தையும் மலையாளத்தில் காணலாம். அது ஒரு தனி வரலாறு. பின்னர் அதுபற்றி ஆராய்வோம்.
திராவிட மொழிகளின் தொடக்கம் தொடர்பான தெளிவான முடிவு ஏதும் தற்போது இல்லை. இந்தியா முழுவதும் திராவிடர் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்து நதிப் பள்ளத்தாக்கிலிருந்து அழிந்த நாகரிகத்தின் தடயங்கள், நால் வேதங்களில் ஒன்றான 'இருக்கு" வேதத்திற் காணப்படும் திராவிடச் சொற்கள் ஆகியவை சான்றாக உள்ளன.
மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும் பழந்திராவிடம் என்ற ஒரு மொழி வழக்கில் இருந்தது பேச்சு வழக்கில் இருந்த அந்த மொழியிலிருந்து பிரிந்த மொழிகளே திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன.
திராவிட மொழிகள் வட இந்திய திராவிட மொழி, மத்திய இந்திய திராவிட மொழி, தென் இந்திய திராவிட மொழி எனப் பகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இன்று 23 கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
அதற்கும் அதிகமாக சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக நீலகிரி
மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள்
பட்டியலிற் சேர்க்கப்படவில்லை.
தென் இந்தியா முழுவதும் 19 கோடி அளவிலான மக்களால் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன.
இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகளில் ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய
22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே
பேசப்படுகின்றன. பிராகுவி மொழி பூகோள அடிப்படையில் தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள
பலுஸ்திஸ்தான் (கைபபூர் ஹைதரபாத் மாவட்டங்கள்) எட்டு இலட்சம் அளவிலான மக்களாற்
பேசப்படுகிறது. பிற மொழி செல்வாக்கால் பிராகுவி பேசும் மக்கள் தொகை ஆண்டுதோறும்
குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் நீலகிரிப் பக்கம் போவோமானால் அங்கு தமிழ் மொழிக்கு மிகவும் நெருங்கிய
மொழியான இருளம் உட்பட வடுகம் துடவம், குடகம், கோத்தம் என ஐந்து மொழி பேசும்
மக்களைச் சந்திக்கலாம். சற்று விலகிச் சென்றால் 6 ஆவது மொழி ஒன்றைப் பேசும்
மக்களைச் சந்திக்கலாம். அதாவது துளு மொழி பேசம் மக்களையும் சந்திக்கலாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகள்
என்றும் ஏனையவை திருந்தா மொழிகள் என்றும் கல்ட்வெல் வகைப்படுத்தியுள்ளார். எஞ்சியவை
இன்று வடபுலத்தில் வாழும் மக்களால் பேசப்படும் மொழிகளாகும்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளும் மாநில மொழிகள் என்ற
தகைமையைப் பெற்றுள்ளன. எஞ்சிய இலக்கிய வளம் குறைந்த 19 மொழிகளுள் 10 இலட்சம்
மக்களுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகள் கோண்டி, துளு, ஓராவுண் ஆகிய 3 மொழிகள்
மட்டுமே. நான்காவது இடத்தில் 8 இலட்சம் மக்களாற் பேசப்படும் பிராகுவி
வைக்கப்பட்டுள்ளது.
இசைக்குரிய மொழி தெலுங்கு என இருந்தாலும் தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச்
சிறப்பால் தமிழே திராவிட மொழிகளில் முதலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழியாகும்.
இலக்கிய வளத்தை அளவு கோலாகக் கொண்டு பார்த்தால் சமஸ்கிருதம் நீங்கலாக எந்த இந்திய
மொழியும் தமிழுக்கு ஈடாக மாட்டா.
புவியியல் அடிப்படையில் அதிக நாடுகளில் பேசப்படும் திராவிட மொழியும் தமிழ்தான்.
திராவிட என்ற சொல் கூட கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பிராகிருதி, பாளி
ஆகிய மொழிகளில் தமிழைக் குறிக்கும் தாமில, தாவிட, த்ராவிட ஆகிய சொற்களின் சமஸ்கிருத
வடிவமே ஆகும். (வளரும்)